என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?

                  தம்பி!  ஏனிந்தக்
                  கொலைவெறி?

                  நல்லதைத் தானே
                  விதைத்தார்கள்?
                  உன் நெஞ்சில்
                  ஏன்
                  நஞ்சு விளைந்தது?.

                  ஆசிரியர் மாணவனை
                  தண்டித்தது
                  அந்தக் காலம்.
                  மாணவர்கள்
                  ஆசிரியருக்கு தண்டனை
                  தருவதுதான்
                  இன்னும் கேவலம்!

                  உன்னை
                  திருத்த முனைந்தவரை
                  தீர்த்துக்கட்டிவிட்டாயே.!

                  ஆயிரம் முறை
                  மெக்கா போய் வந்தாலும்
                  அகலாது
                  உன்பாவம்!

                  ஆயுள் முழுதும்
                  கங்கையில் மூழ்கிக்
                  கிடந்தாலும் 
                  கரையுமா
                  உனது பாவம்?

                  எந்த
                  திருச்சபையிலாவது
                  உனக்கு
                  பாவ மன்னிப்பு
                  வழங்கப்படுமா?

                  இளமையில் கல்
                  என்றுதானே சொன்னார்கள்!
                  இளமையில் கொல்
                  என்றா கூறினார்கள்?

                  புத்தியோடு
                  வரவேண்டிய நீ
                  கத்தியோடு
                  வந்தாயே?

                  மாணவர்கள்
                  ஆயுதங்களோடு வந்தால்
                  ஆசிரியர்கள்
                  கவசங்களோடுதான்
                  கல்விச்சாலை  வரவேண்டுமா?

                  படிக்க விருப்பம்
                  இல்லையா?
                  பல கலைத்தொழில்கள்
                  கைகொடுக்குமே?
                  நீ ஏன் கொலைத்தொழில்
                  புரிந்தாய்?

                  திட்டியதற்காக
                  கொல்வதென்றால்
                  இந்த உலகில்
                  இன்னும் மிச்சம்
                  இருக்கப்போவது யார்?

                  ஆயிரம் அற நூல்களும்,
                  நீதி நூல்களும்
                  இருந்தென்ன?

                  உன் அகத்தில்
                  அறம் வளர்க்க
                  முடியவில்லையே?

                  நீ உன்
                  ஆசிரிய தெய்வத்தை
                  மட்டுமா கொன்றாய்?

                  உன்னைப்போன்ற 
                  மாணவர்களின் மீது
                  வைத்த நம்பிக்கையையும் 
                  சேர்த்தே அல்லவா 
                  கொன்றுவிட்டாய்!

                  போதும்!
                  இதுவே
                  கடைசியாக இருக்கட்டும்!
                  இது போன்ற
                  சம்பவங்களுக்கு
                  இனியாவது
                  முடிவு பிறக்கட்டும்!
*********************************************************************************************
இதையும் படிக்க 

7 கருத்துகள்:

  1. இது ஒரு அதிர்ச்சியான சம்பவம். இது வருந்தகூடிய சம்பவமும் கூட !!

    பதிலளிநீக்கு
  2. மாணவர்கள்
    ஆயுதங்களோடு வந்தால்
    ஆசிரியர்கள்
    கவசங்களோடுதான்
    கல்விசாலை வரவேண்டுமா?

    பதிலளிநீக்கு
  3. மனதழவில் எத்தனை மானவர்கள் வகுப்பரைகளில் சாகிறார்கள் என்பதை இந்த ஆசிரியர்களும் சிந்திக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  4. வளருகின்ற சமுதாயத்திற்கு இது சாபக்கேடு . பள்ளிப் புத்தகம் தூக்கவேண்டிய பையன் கத்தி தூக்குகின்றான் என்றால் எங்கே போகிறது இந்த சமுதாயம்

    பதிலளிநீக்கு
  5. வளருகின்ற சமுதாயத்திற்கு இது சாபக்கேடு . பள்ளிப் புத்தகம் தூக்கவேண்டிய பையன் கத்தி தூக்குகின்றான் என்றால் எங்கே போகிறது இந்த சமுதாயம்

    பதிலளிநீக்கு
  6. இளமையில் கல்
    என்றுதானே சொன்னார்கள்!
    இளமையில் கொல்
    என்றா கூறினார்கள்?


    அற்புதமான வரிகள்

    பதிலளிநீக்கு
  7. இன்றுதான் -நீங்கள் சொன்ன பிறகுதான்- இந்தக் கவிதையைப் பார்த்தேன். உணர்வுபூர்வமாக எழுதப்பட்ட உண்மையான கவிதை. ஆசிரியர்-மாணவர்-பெற்றோர்-அரசு-கல்வியாளர் எனும் ஐந்து முனையில் வளரவேண்டிய கல்வி, வியாபாரிகள் கையில் சிக்கியதும், வியாபாரத்திற்கான பண்டமானதும் முதல்பலி மாணவர்கள், இரண்டாவது பலி கல்வி. அதன் பின் விளைவு சமூகம் என்பதைப் பெற்றோர்களும் உணரவில்லை. அரசுக்கும் கல்வியாளர்களுக்கும் இதன் அவசியம் புரிந்தும் ஆயிரம் வேலைகளில் இது தள்ளிப்போடும் பட்டியலில் தொடர்கிறது. ஆசிரியர்கள் கையைப் பிசைந்து கொண்டும், கையில கம்போடும், மனசில் காயங்களோடும்... இன்னும் எத்தனை நாள் ... புரியவில்லை.
    உங்களின்,
    “ஆயிரம் அற நூல்களும்,
    நீதி நூல்களும்
    இருந்தென்ன?

    உன் அகத்தில்
    அறம் வளர்க்க
    முடியவில்லையே?“ எனும் வரிகள் ஆழம் மிக்கவை.
    வாழ்த்துகள் அய்யா. நம் பயணம் ஒரே திசையில்தான் என்பதில் எனக்கு மிக்கமகிழ்ச்சி. இணைந்தே தொடர்வோம் அய்யா! நன்றி.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895