என்னை கவனிப்பவர்கள்

சனி, 29 செப்டம்பர், 2012

வைரமுத்துவின் விதைச் சோளம்


என்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(?)தெரிந்தவர் என்று கேலிக்கு ஆளானாலும்  அவர் கவிதைக்கு ஒரு ஈர்ப்பு சக்தி உண்டு என்பதை மறுக்க முடியாது.
அவரது கவிதைகளில் எனக்குப் பிடித்த ஒன்று.மண்வாசம் வீசும் அழகான நாட்டுப் புறக் கவிதை இது. விவசாயின் சோக வாழ்க்கை அப்படியே கவிதையில் பிரதிலிப்பதைக் காணலாம்.

             விதைச் சோளம்
 
                     ஆடி முடிஞ்சிரிச்சு
                      ஆவணியும் கழிஞ்சிரிச்சு
                      சொக்கிகொளம்  கோடாங்கி
                      சொன்ன கெடு முடிஞ்சிருச்சு.

                      காடு காஞ்சிரிச்சு
                      கத்தாழை கருகிடிச்சி
                      எலந்த முள்ளெல்லாம்
                      எலையோட உதிஞ்சிருச்சு
.
                      வெக்க பொறுக்காம
                      றெக்க  வெந்த குருவியெல்லாம்
                      வெண்காடு விட்டு
                      வெகுதூரம் போயிடிச்சி.

                      பொட்டு மழை பெய்யலையே
                      புழுதி அடங்கலையே
                      உச்சி நனையலையே
                      உள்காடு உழுகலையே

                      வெதப்புக்கு  விதியிருக்கோ
                      வெறகாக விதி இருக்கோ
                      கட்டி வெச்ச வெங்கலப்ப
                      கண்ணீர்  வடிச்சிருச்சு

                      காத்துல ஈரமில்ல
                      கள்ளியில பாலுமில்ல
                      எறும்பு குளிச்சேற
                      இரு சொட்டுத் தண்ணியில்ல

                      தெய்வமெல்லாம் கும்பிட்டு
                      தெசைஎல்லாம் தெண்டனிட்டு
                      நீட்டிப் படுக்கையிலே
                      நெத்தியில  ஒத்த மழை

                      துட்டுள்ள ஆள  தேடி
                      சொந்தமெல்லாம் வாரதுபோல்
                      சீமைக்குப் போயிருந்த
                      மேகமெல்லாம் திரும்புதையா!

                      வாருமையா வாருமையா
                      வருண பகவானே!
                      தீருமையா   தீருமையா 
                      தென்னாட்டுப் பஞ்சமெல்லாம்

                      ஒத்த ஏறு  நான் உழுக
                      தொத்தப்பசு வச்சுரிக்கேன்
                      இன்னும் ஒரு மாட்டுக்கு
                      எவனப் போய் நான் கேட்பேன்.

                      ஊரெல்லாம் தேடி
                      ஏர்மாடு  இல்லாட்டி
                      இருக்கவே இருக்கா என்
                      இடுப்பொடிஞ்ச பொண்டாட்டி

                      காசு பெருத்தவளே
                      கார வீட்டுக் கருப்பாயி
                      தண்ணிவிட்டு எண்ணயின்னு
                      தாளிக்கத் தெரிஞ்சவளே!

                      சலவைக்குப் போட்டா
                      சாயம் குலையுமின்னு
                      சீல தொவைக்காத
                      சிக்கனத்து மாதரசி

                      கால்மூட்ட வெதச் சோளம்
                      கடனாகத் தந்தவளே
                      கால் மூட்ட கடனுக்கு
                      முழு மூட்ட அளக்கறண்டி 

                      ஊத்துதடி ஊத்துதடி
                      ஊசிமழை ஊத்துதடி
                      சாத்துதடி சாத்துதடி
                      சடசட சடையா சாத்துதடி

                      முந்தா நாள் வந்த மழை
                      மூச்சு முட்டப் பெய்யுதடி
                      தெச ஏதும் தெரியாம
                      தெர  போட்டுக் கொட்டுதடி

                      கூர  ஒழுகுதடி
                      குச்சிவீடு நனையுதடி
                      ஈரம் பரவுதடி
                      ஈரக் கொலை நடுங்குதடி

                      வெள்ளம் சுத்தி நின்னு
                      வீட்ட இழுக்குதடி
                      ஆஸ்தியில சரிபாதி
                      அடிச்சிக்கிட்டுப் போகுதடி 

                      குடிகெடுத்த காத்து வந்து
                      கூர  பிரிக்குதடி
                      மழைத் தண்ணி ஊறி
                      மண்சுவரு சரியுதடி.

                      நாடு நடுங்குதையா
                      நல்லமழை போதுமையா
                      வெத வெதக்க  வேணும்
                      வெயில் கொண்டு வாருமையா.

                      மழையும் வெறிக்க
                      மசமசன்னு வெயிலடிக்க
                      மூலையில வச்சிருந்த
                      மூட்டையைப்  போய் நான் பிரிக்க

                      வெதச் சோளம் நனஞ்சிருச்சே
                      வெட்டியா பூத்திருச்சே
                      மொளைக்காத படிக்கு
                      மொளைகட்டிப் போயிடிச்சே

                      ஏர் புடிக்கும் சாதிக்கு
                      இதேதான் தலையெழுத்தா?
                      விதிமுடிஞ்ச ஆளுக்கே
                      வெவசாயம் எழுதிருக்கா?

                      காஞ்சு கெடக்குதேன்னு
                      கடவுளுக்கு மனு செஞ்சா
                      பேஞ்சுக்  கெடுத் திருச்சே
                      பெருமாளே என்ன  பண்ண?

****************************************************

வியாழன், 27 செப்டம்பர், 2012

பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி?

   

   பதிவுலகில் நுழைந்து பதிவு போட ஆரம்பித்து நாலு பேர் பார்க்க    ஆரம்பித்ததும் நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒவ்வொரு  நாளும் நமது பதிவுகளை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவும் ஆவல் உண்டாகிறது. அதன் தொடர்ச்சியாக  பிறருடைய பதிவுகளின்  பார்வையாளர்கள் பற்றியும் அறிந்து கொள்ள முற்படுகிறோம்.இதை அவரவர் பக்கத்தில் இணைக்கப் பட்டுள்ள விட்ஜெட் மூலம் அறிய முடிகிறது. 
அடுத்த கட்டமாக தரவரிசை தமிழ்மணம் தரவரிசை இண்டி பிளாக், அலெக்சா இவற்றில் நமது தரவரிசை எப்படி உள்ளது என்பதை அறிய விரும்புகிறோம். 
இந்த தர வரிசைகளை பிறருடைய வற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கும் எண்ணம் ஏற்படுவதும் இயல்பானதே. மற்றவர்களோடு நம்மை ஒப்பிடுவது தவறு என்று ஒரு சிலர் கூறினாலும் நம்மை மேம்படுத்திக் கொள்ள ஒப்பீடு உதவும் என்றே நினைக்கிறேன்அலெக்சா மூன்று மாத பார்வையாளர்களின் அடிப்படையில் தரத்தை நிர்ணயிக்கிறது. அலெக்சாவின் இணையத் தரவரிசை பெரும்பாலோரால் ஏற்றுக் கொள்ளப் படுவதாகக் கூறப் படுகிறது. இது சரியில்லை என்று கூறுவோரும் உண்டு.
   நம்முடைய பதிவில் அலெக்சா விட்ஜெட் இணைப்பதின் மூலம். நமது உலக அளவிலான தரத்தை அறிய முடியும்.விட்ஜெட்டை இணைக்காமல் www.alexa.com க்கு சென்று நமது வலை முகவரியை அளித்தால் உலக தர வரிசை மற்றும் இந்தியாவில் மட்டும் நமது நிலையை அறிந்து கொள்ள முடியும்.எந்த தளத்தின் முகவரியையும் இதில் இட்டு தரவரிசை அறியலாம்.
   இவ்வாறு  ஒவ்வொரு முறையும் அலெக்சா தளத்திற்கு சென்று ரேங்கை அறிவது சற்று கடினமாக இருக்கும்.அதை நிவர்த்தி செய்வதற்காகவே அலெக்சா கருவிப் பட்டை (டூல் பார்) இணைத்துக் கொண்டால் நாம் எந்த தளத்திற்கு சென்றாலும் அந்த தளத்தின் அலெக்சா  தரவரிசை அறியலாம் .இதோ இந்தப் படத்தில் எனது தர வரிசை.
   இந்த கருவிப் பட்டையை நான் இணைத்துள்ளதால் வேறொரு வலை தளத்திற்கு செல்லும்போது அந்த வலை தளத்தின் ரேங்க் அங்கு தெரியும். நீங்களும் விருப்பமிருந்தால் கருவிப்பட்டை இணைத்துக் கொள்ளலாம் வழிமுறைகள்  
உங்கள் பிரௌசர் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அல்லது ஃ பையர் ஃபாக்ஸ் ஆக இருக்கவேண்டும்.குரோம் பயன்படுத்துபவர்களுக்குவேறு முறை உள்ளது.
    இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். Firefox பயன்படுத்துபவருக்கும் கிட்டத்தட்ட இதே வழிமுறைகள்தான். 
படி 1
  www.alexa.com க்கு சென்று Toolbar - Install Alexa Toolbar -Run என்று தொடரவும்  
 படி 2 

படி 3

படி4

 படி 5 

படி 6

படி7
    இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை மூடி விட்டு மீண்டும் திறக்கவும் 
கீழக்கண்டது போல் சில விவரங்கள் கேட்கும். இவற்றை பூர்த்தி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. 
 படி8
  இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைத் திறக்கும்போது Tool bar இல்இடம் பெரும்  கூடுதல் பட்டன்களை காண்பிக்கும்.இவற்றில்  தேவை இல்லாத வற்றை அன்செக்  செய்து விடலாம்.

  இனி நாம் செல்லும் அனைத்து தளங்களின் ரேங்க் மேற்புறத்தில் தெரியும்.தற்போது இந்த Toolbar ல் இந்தியாவில் நமது தரவரிசையையும் காண்பிக்கிறது.தேவை இல்லை என்றால்  toolbar ஐ நீக்கி விடலாம்.அல்லது மறைத்து விட்டு வேண்டும்போது தெரிய வைத்துக் கொள்ளலாம்.

   அலெக்சா விட்ஜட் இணைத்தால் நமது தர வரிசை மட்டுமே தெரியும்.மேலும் விட்ஜெட் அப்டேட் ஆக தாமதமாகும்.ஆனால் Toolbar ல் மாற்றங்கள் உடனுக்குடன் தெரியும்.இதை பார்த்து தெரிந்து கொண்டு 
பின்னர் அந்த ரேங்க்  ஓரளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டபின் விட்ஜெட் இணைத்துக் கொள்வது நல்லது.

  அலெக்சா தரவரிசை நமது வலைப்பதிவின் மதிப்பை பார்வையாளர்களின் மத்தியில் கூட்டும்.வலைப்பதிவு எழுதுவதினால் நமக்கு கிடைக்கும் ஒரே இலாபம் பார்வையாளர்களின் அங்கீகாரமே.
நல்ல பதிவுகளை எழுதுவோம்.அனைவரும் அனைத்து தரவரிசையில் முன்னேறுவோம்.
***********************************************************************************
   அலெக்சா தரவரிசைப் படி தற்போது முதல் இடம் பெற்றிருப்பது 
Facebook. கூகிள் இரண்டாது இடத்தில் உள்ளது. இதை கூகுள் ஏற்றுக் கொள்வதில்லை.சிறிது காலத்திற்கு முன்பு google.com தான் முதலிடத்தில் இருந்தது.கூகிளின் பல துணை தளங்கள் முதல் 20 இல் இடம் பெற்றிருக்கின்றன. 
முதல் 20 இடங்கள் எவை எவை என்று பார்ப்போம்.
***************************************************************************
இதை படித்து விட்டீர்களா  

உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன். 

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

மார்ச் 21&செப்டம்பர் 22 அதிசய நாட்கள்!


. (இந்தப் பதிவை இடுவதில் சிறிது தயக்கம் இருந்தது. இதற்கு வரவேற்பு எப்படி இருக்கும் ஐயம் இருந்தாலும் இன்றைய தினத்தில் இந்தப் பதிவு பொருத்தமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.பள்ளி வயதில் இருக்கும் உங்கள் பிள்ளைகள், அல்லது தம்பி தங்கைகளுக்கு சொல்வதற்கு ஏற்றதாக இருக்கும் என்றும் நினைக்கிறேன்.)

    நமக்குள்ள பல பிரச்சனைகளில் சில விஷயங்களை கவனிக்க நேரம் இருப்பதில்லை. பல சுவாரசியமான நிகழ்வுகள் விண்வெளியில்  நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பூமியிலும் இவ்வாறு நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21(சில சமயங்களில் மார்ச் 20) க்கும் செப்டம்பர் 22(சில சமயங்களில் செப் 23) க்கு தனி சிறப்பு உண்டு. இவ்விரு நாட்களிலும் இரவு நேரமும் பகல் நேரமும் சமமாக இருக்கும். மற்ற நாட்களில் பகல் இரவு நேரங்களில் வித்தியாசம் இருக்கும். அதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.

    பூமி தனி அச்சில் 23.5 டிகிரி சாய்வாக சுற்றுகிறது. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்பது நமக்குத் தெரியும்.தன்னைத் தானே சுற்றிக் கொள்வதால்தான் இரவுபகல் ஏற்படுகிறது.என்பதும் நாம் அறிந்ததே! சில காலங்களில் பகல் பொழுது அதிகமாகவும் இரவு பொழுது குறைவாகவும் இருக்கும். சில காலங்களில் இரவுப் பொழுது அதிகமாகவும் பகல் குறைவாகவும் இருக்கும். பூமியின் நீள் வட்டசுற்றுப்பாதை  ஒரு சாலை என்று கொண்டால்  அந்தப் பாதைக்கு நேர்  செங்குத்தாக பூமி தன்னைத்  தானே சுற்றிக் கொள்வதில்லை. சற்று சாய்வாக அதாவது 23.5 டிகிரி சாய்வாக தனது அச்சில் சுற்றுகிறது.

  இதுவே இரவு பகல் நேரங்களில் வித்தியாசம் ஏற்படுவதற்கு காரணம்.பூமியில் கோடைகாலம் குளிர்காலம் போன்ற பருவ காலங்கள் ஏற்படுவதற்கும் இந்த சாய்வே காரணமாக அமைகிறது. வேறு மாதிரி சொல்வதென்றால் பூமி செங்குத்தாக தன்னைத் தானே சுற்றிக் கொண்டால் பருவ காலங்கள் ஏற்படாது. அதாவது பூமியில் ஓரிடத்தில் எந்தவிதமான காலம் இருக்கிறதோ ஆண்டு முழுதும் மாற்றமின்றி அப்படியே இருக்கும்.
இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
பூமி அச்சின் இரு முனைகளையே வட துருவம் தென் துருவம் என்கிறோம்.  ஒரு குறிப்பிட்ட நாளில் மேல்முனை சூரியனை நோக்கி சாய்ந்து இருப்பதாக  வைத்துக்கொள்வோம்.
கீழுள்ள படத்தைப் பாருங்கள்

படம் 1

   ஆறு மாதங்களுக்குப் பின் பூமி பாதி  சுற்று சுற்றி எதிர்புறம் வந்திருக்கும் அப்போது அதன் மேல் முனை  பூமியை நோக்கி இருக்காது.இப்போது  கீழ் முனை பூமியை நோக்கி இருக்கும். அதாவது பூமியின் அச்சு அதே நிலையில் இருக்கிறது.
இதோ  இந்தப் படத்தைப் பாருங்கள்
படம் 2

பூமியின் சுற்றுப் பாதையை ஒரு கம்பியாகவும் பூமியை ஒரு மணியாகவும் வைத்துக் கொள்ளுங்கள் கம்பியில் கோர்த்தபடி மணி சுற்றுவது போல் பூமி சுற்றினால்  கீழுள்ள படத்தில் உள்ளது போல் 6 மாதங்களுக்குப் பிறகும் அதன் வடமுனை எப்போதும் பூமியை நோக்கியே சாய்ந்திருக்கும்.
படம் 3
ஆனால்  இயற்கையில் அவ்வாறு நிகழவில்லை.இப்படி பூமி சுற்றினால் கால மாற்றங்கள் நிகழாது.

   படம் 1 இல் காணப்படும் நிலை ஜூன் 21 அன்று ஏற்படுகிறது. தென் துருவம் சூரியனிடமிருந்து சற்று விலகி இருப்பதைக் காணாலாம் அன்று ஆண்டில் மிக நீண்ட பகலாக இருக்கும். இந்த நாளில் நில நடுக்கோட்டுக்கு மேலுள்ள வட அரைக் கோளத்தில் சூரிய ஒளி  அதிகமாகவும் தென் அரைக்கோளத்தில் குறைவாகவும் விழுகிறது. அன்றிலிருந்து பகல் நேரம் சிறிது சிறிதாக குறைந்து இரவு  நேரம் சிறிது சிறிதாக அதிகரிக்கும். செப் 23 அன்று இரவும் பகலும் சம நிலையை அடைகிறது. 

    இந்த நாட்களில் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர்வதைப் போல் தோற்றமளிக்கும் இதை தட்சணாயணம் என்று கூறுவது வழக்கம். செப் 23 அன்று நில நடுக்கோட்டுக்கு செங்குத்தாக சூரிய ஒழி விழுவதால் வட  அரைக் கோளத்திலும் தென் அரைக் கோளத்திலும் சம அளவு ஒளி விழுகிறது.அதாவது வட துருவமும் தென் துருவமும் சம தொலைவில் உள்ளது. இதனால் இரவும் பகலும் சமமாக உள்ளது. இதே நிலைய மார்ச் 21 அன்றும் ஏற்படுவதால் அன்றும் இரவும் பகலும் சமமாக அமைகிறது.

   இதற்கிடையில் (படம் 2)டிசம்பர் 21(சில சமயங்களில் டிசம்பர் 22) அன்று ஜூன் 21 அன்று உள்ள நிலைக்கு நேர் எதிரான சூழ்நிலயில் பூமி அமைவதால் அன்று மிக நீண்ட இரவாகவும் குறைந்த பகலாகவும் காணப்படும்.அன்றிலிருந்து சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்வது போல் தோற்ற மளிக்கும் இதை உத்தராயணம் என்று கூறுவார்கள்.

   சரி! இவையெல்லாம் விண் வெளியில்  நிகழ்கிறது.நாம் எப்படி இதை அறிவது. நாம் கண்ணால் என்ன மாற்றங்களை பார்க்க முடியும் 

1. இன்று சூரியன் உதிப்பது சரியான கிழக்கு திசையின் மையத்தில்  
2. இன்றிலிருந்து நிழல் வடக்குப்புறம் சாய்வாக விழத் தொடங்கும் 
3 இன்று பகல் பன்னிரண்டு மணிக்கு 90 டிகிரி செங்குத்தாக ஒரு வளைவில்லாத  குச்சியை வைத்தால்(பூமத்திய ரேகைப் பகுதியில்) அதன் நிழல் தரையில் விழாது. தலைக்கு மேல் நேராக சூரியன் இருக்கும்.
4 தமிழகத்தில் நெய்வேலியைத் தவிர இதர இடங்களில் சரியான கிழக்கு  மேற்காகவோ ,வடக்கு தெற்காகவோ  சாலைகள் இல்லை அதனால் திசைகளை அறிவது சில வேளைகளில் கடினமாக உள்ளது. இன்றைய சூரியனை வைத்து  திசைகளின் அமைப்பை  அறிந்து கொள்ளலாம்.
இதோ இந்தப் படங்கள் அதை விளக்கும் என்று நம்புகிறேன்.படத்தில் உள்ள குச்சியின் நிழலை கவனியுங்கள்.

               ஜூன் 21 அன்று           டிசம்பர் 21 அன்று 

                       இன்று செப்டம்பர் 22 அன்று 

  இவை  யாவும் நில நடுக்கோட்டுப் பகுதியில் உள்ளவர்களுக்கு100 சதவீதம் பொருந்தும். மற்ற இடங்களில் நிழலில் மாறுபாடு காணப்படலாம். தமிழகத்தை பொறுத்தவரை நிலநடுக் கோட்டுக்கு வட பகுதியில் அமைந்துள்ளதால் நிழல் சற்று வடக்குப்புறம் சாய்வாக விழும்.ஆனாலும்  இரவு பகல் நேரங்கள் சமமாகவே இருக்கும்.

சுருக்கம்:  1.மார்ச் 21 &செப்டம்பர் 22 சம இரவு பகல் நாட்கள் 
           2. ஜூன் 21 நீண்ட பகல் குறுகிய இரவு 
           3. டிசம்பர் 21 நீண்ட இரவு குறுகிய பகல் 
பதிவு பயனுள்ளதாக இருந்ததா? 
தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்.உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக  இருக்கிறேன்.
 ************************************************************************************************************
தொடர்புடைய பதிவு 


புதன், 19 செப்டம்பர், 2012

பிள்ளையார் படைக்கும் கலைஞர்

                பிள்ளையார் படைக்கும் கலைஞர் 

   நான் பிள்ளையாரின் தீவிர பக்தன் அல்ல.ஆனாலும் சிறுவயதில் இருந்தே எனக்கு பிள்ளையாரை பிடிக்கும். அதற்கு காரணம் என்னவென்று தெரியவிலை. எங்கள் ஊரில் அம்மன் கோவிலும் உண்டு. அம்மன் கோவிலைப் பார்த்தால் பள்ளி செல்லும் வயதில் எனக்கு பயமாக இருக்கும்.ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அம்மன் திருவிழாவில் ஆடு கோழி பலி இடுவார்கள். சாலை ஓரத்தில் கோவில் உள்ளதால் மறுநாள் பள்ளி செல்லும் வழியில் கோவிலுக்கு எதிரே மண் சாலையின் நடுவில் முந்திய நாள் பலியிடப்பட ஆடு கோழிகளின் ரத்தம் மண்ணில் தெரியும். அதைப் பார்க்க பயந்து வேறு பக்கம் பார்த்துக்கொண்டே வேகமாக அதைக் கடந்து சென்று விடுவேன். அதனால் அம்மன் கோவில் மீது  சற்று பயம் உண்டு. மற்ற கடவுளர்களும் நம்மை விட்டு சற்றுவிலகி இருப்பதாகவே படுகிறது.. 

   ஆனால் பிள்ளையார் கோவில் அப்படி இல்லை. நமக்கு சற்று நெருக்கமாக இருப்பதாகவே தோன்றும் . இவரைப் பார்ப்பதற்காக நாம் மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. ஆடம்பரம் ஏது மின்றி அரச மரத்தடியோ தெருக்களின் மூலையோ, சுற்றுசுவரின் ஓரமோ  இவரே நமக்கு காத்திருப்பது போல்தான் தோன்றுகிறது.
பிள்ளையாரின் பலமே அவரது எளிமைதான். பிடித்து வைத்தால் போதும் அதுவே பிள்ளையார்.

பிள்ளையாரை நினைத்த வுடனே எனக்கு என் அம்மா சொல்லிகொடுத்த
 
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா.

என்ற அவ்வையின் செய்யுள் நினைவுக்கு வரும். அவர்  இன்று உயிருடன் இல்லை.என்றாலும் விநாயகர் சதுர்த்தி அதை நினைக்க வைக்கிறது.
   ஔவையார் முருக பக்தர்.எளிய பாடல்கள் தந்த தமிழ்ப் புலவர்.அவர் முருகனிடம் கேட்காமல் பிள்ளியாரிடம் சங்கத் தமிழை கேட்கிறாரே என்று நினைப்பதுண்டு. அதனால் பிள்ளையாரை எனக்கும் பிடித்துவிட்டது.இந்த செய்யுள்தான் நான் தட்டுத் தடுமாறி கவிதை எழுதுவதற்கு காரணமாக அமைந்தது என்று சொல்லலாம். அந்த வகையில் பிள்ளையார் எனக்கு கருணையும் உங்களுக்கு சோதனையும் கொடுத்தார் என்று சொல்லலாம்.

  பத்தாம் வகுப்பு வரை தமிழ்  மீடியத்தில் படித்த நான் பதினோராம் வகுப்பு (+1) ஆங்கில மீடியத்தில் சேர்க்க்கப் பட்டேன் புரிந்து கொள்வதில் அதிக சிரமம் இருந்தது.  ஔவை  இன்று இருந்தால் இந்த செய்யுளை இப்படி எழுதி இருப்பார் என்று என் நண்பனிடம் நாள் சொல்வதுண்டு. 

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு
ஆங்கில  மும்தமி ழும்தா  

    இதை கேள்விப் பட்ட என் தமிழாசிரியர் நறுக்கென்று தலையில் குட்டினார்.
    சிறு வயதில் விநாயகர் சதுர்த்தி வந்தால்  விட்டால் கொண்டாட்டம்தான். காலையில் களிமண் பிள்ளையாரை வாங்கி மனைமீது வைத்து தூக்கிக் கொண்டு  வரும்போது ஒருமகிழ்ச்சி ஏற்படும்.
   அதைவிட  எனது தந்தைக்கு ஒரு பழக்கம் உண்டு பிள்ளையார் குடையை வீட்டில்தான் செய்வார். ஒரு வாரம் முன்னதாகவே மூங்கில் பட்டைகள் வண்ண காகிதங்கள் இவற்றை எல்லாம் வாங்கி வந்து பண்டிகை அன்று காலை குடை செய்ய உட்கார்ந்து விடுவார். ஐந்தாறு குடைகள் செய்து காய்வதற்காக அதை ஜன்னலோரத்தில் குத்தி வைப்பார். பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அவர் முகத்தில் ஒரு மகிழ்ச்சி இருக்கும்.அப்போது அதை நான் உணர்ந்ததில்லை.
  அம்மா சொல்வார், 'காசு கொடுத்தால் இதைவிட அழகான குடைகள் கடையில் கிடைக்கும். இதுக்கு செய்யற செலவைவிட அது குறைவு அதுக்கு ஏன் இவ்வளவு கஷ்டப்படனும்' என்பார்.ஆனாலும் அப்பா கேட்க மாட்டார். யாருடைய பாராட்டையும் அவர் எதிர் பார்த்ததில்லை.
  உடல் நிலை நன்றாக இருக்கும் வரை அவர் குடை செய்ததை விட்டதில்லை.ஒரு படைப்பை தானே உருவாக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. அது மிகச் சாதாரணமானதாக இருந்தாலும் கூட என்பதை இன்று பதிவுலகில் நுழைந்த பின் உணரமுடிகிறது. ஆனால் அதை அவரிடம்  சொல்ல இன்று அவர் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்தான்  இறந்து விட்டார். என்னதான் அழகான வித்தியாசமான குடைகளை கடைகளில் பார்த்தாலும் என் தந்தை செய்த குடைதான் இன்றும் என் நினைவுக்கு வருகிறது.


 விதம் விதமாக கொழுக்கட்டை சுண்டல் பலகாரங்களும் விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு என்றாலும் அதில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை. 

இவரைத் தாண்டிச் செல்லும் ஒரு சிலர் தலையில் லேசாகக் குட்டிக் கொண்டு தோப்புக் கர்ணம் போடுவது போல் செய்து விட்டுச் செல்வது வேடிக்கையாக இருக்கும். ஒரு தவறு செய்தால் தலையில் குட்டி கொள்ளும்  வழக்கம் ஒரு சிலருக்கு இருக்கும்,அதை உண்டாகியது பிள்ளையார்தானே?

 களிமண், அருகம்புல் , எருக்கம்பூ  மாலை,குடை  இவற்றை விற்று ஒரு நாள் பிழைக்க வழி செய்யும் பிள்ளையார் இன்று தெருவுக்கு தெரு பிரம்மாண்டமாக   அமர்ந்து , பக்தர்கள் என்று சொல்லிக்  கொள்பவர்களிடம் மாட்டிக் கொண்டு விழிப்பதை பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது. ஊர் வலத்தின்போது இன்னும் என்ன படாத பாடு படப் போகிறாரோ?
  
 யானை முகத்தை கொண்டதாக இருப்பதால் சிறு பிள்ளையாக இருந்தபோது மனதைக் கவர்ந்த இவர் இன்றும் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்.


 உங்கள் கவனத்திற்கு: இன்று பல தொலைக்காட்சிகள் விநாயகர்  சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளி  பரப்புகிறது. ஒரே ஒரு தொலைக் காட்சி மட்டும் இது போன்ற நாட்களில் விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில்தான் ஒளிபரப்பும் 
*********************************************************************************
இதைப் படிச்சாச்சா?

திங்கள், 17 செப்டம்பர், 2012

தமிழ் மணம் வாசகர் பரிந்துரை சரியா?+கேபிளின் கவிதை விமர்சனம்


இது எனது 150 வது பதிவு
 கடந்த  வாரத்தில் பதிவுகள் தொடர்பாக  மூன்று பதிவுகள் படித்தேன். ஒன்று அதிரடி ஹாஜா வின் "தமிழ்மணமும்,வாசகர் பரிந்துரையும், ஒரு முரணும்". மற்றொன்று ரசீம் கசாலியின்  "இது தமிழ்மணம் பற்றிய அதிரடி ஹாஜா பதிவிற்கு பதிலடி பதிவல்ல." மூன்றாவது மதுமதியின் 'இப்படித் தலைப்பிட்டால்தான் ஹிட்ஸ் கிடைக்குமா?'

  அதிரடி ஹாஜா தனது பதிவில் "வாசகர் பரிந்துரையில்  7 ஓட்டுகளை பெரும் பதிவுகள்  இடம்பெற்றுவருகின்றன....ஆனால் அந்த ஏழு ஓட்டில் நம்முடைய  ஒரு ஓட்டை தவிர  மீதி ஆறு ஓட்டுகள் அதாவது  6 பேர் பரிந்துரைக்கும் பதிவு  எப்படி வாசகர் பரிந்துரையில்  இடம்பெறலாம் மொக்கையான பதிவாக இருந்தாலும் நண்பர்கள் ஒட்டு போட்டுவிடுவதால் வாசகர் பரிந்துறையில் இடம் பெற்று விடுகிறார்கள் இதனால் வாக்கு பெற முடியாத புதிய பதிவர்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்று கூறுகிறார்.

   அவர் சொல்வது உண்மை என்றாலும் பதிவுலகைப் பொருத்தவரை எனக்குத் தெரிந்து நெருங்கிய நண்பர்கள் கலந்து பேசி வலைப்பூக்கள் ஆரம்பித்து தங்களுக்குள் ஓட்டுப் போட்டுக் கொள்வது இல்லை. பதிவுலகில் நுழைந்த பின்னேதான் நண்பர்களாகிறார்கள். . ஒத்த அலைவரிசை உடையவர்கள் இணைந்து கொள்கிறார்கள். பரஸ்பரம் மற்றவர் பதிவுகளுக்கு கருத்திடுவதும் வாக்களிப்பதுமாக இருக்கிறார்கள்.பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு ஒட்டு போட்டது யார் என்று  தெரியாமலிருக்கும். எனக்கு வாக்களித்த ஒரு சிலரை நான் பதிவர் சந்திப்பின்போதுதான் நேரில் பார்த்தேன்.

  ஏழு பேர் மட்டும் வாக்களித்தால் எப்படி வாசகர் பரிந்துரையாகும் என்பது சரி என்றாலும் ஏதாவது ஒரு அளவுகோல் வேண்டுமல்லவா!,அந்த அளவுகோல் ஏழாக நிர்ணயம் செய்திருக்கிறார்கள். தமிழ் 10 இல் பத்து வாக்குகள் பெற்றால்தான் பிரசுரமானவை தலைப்பில் வெளியாகும். அதற்கு கீழ் உள்ளவை காத்திருப்பவை பட்டியலில்தான் இருக்கும்.

  ஏழு வாக்குகள் பெறுவது சாதாரண விஷயம் இல்லையென்றாலும் புதிய பதிவர்களும் கொஞ்சம் முயற்சித்தால் ஏழு வாக்குகள் பெற்றுவிட முடியும்.இன்னும் அதிக வாக்குகளை நிர்ணயித்தால் புதிய பதிவர்களுக்கு மேலும் சிக்கல்தான். இன்னும் குறைத்தால் பரிந்துரைக்கு அர்த்தம் இல்லாமலே போய்விடும்.வாசகர் பரிந்துரை என்பதற்கு பதிலாக வேறு பெயர் வேண்டுமானால் வைக்கலாம்.

  இந்த ஏழு வாக்கு விஷயத்தில்  தமிழ்மணம் கடைபிடிக்கும் நடைமுறை புதியவர்களுக்கு உதவும் வகையில்தான் உள்ளது என்று கருதுகிறேன். ஏனென்றால் இப்பகுதியில் வெளியாகும் பதிவுகள் வாக்குகளின் எண்ணிக்கைப் படி வரிசைப் படுத்தப்படுவதில்லை. ஏழு வாக்குகள் பெற்றதும் உடனே வெளியாகி விடுகிறது.பின்னர் வாக்குகள் பெற்றாலும் முன்னிலைப் படுத்தப்படுவதில்லை. 50 வாக்குகள் பெற்றாலும் பின்னேதான் செல்லும்.அடுத்து 7 வாக்குகள் பெறுவது முதலிடத்தில் வருகிறது.

  அதனால்  புதியவர்கள் (என்னையும் சேர்த்துத்தான் ) பல பதிவுகளைப் படித்து சரியான பின்னூட்டம் இட்டாலே வாக்குகள் கிடைக்க வழி கிடைக்கும்.

  நூறு  நூற்றி ஐம்பது ஹிட்ஸ் கிடைத்தால் வாசகர் பரிந்துரையாக இருக்கவேண்டும் என்று சொல்லும் ஹாஜாவிற்கு கசாலி சொன்னது போல  இவ்வளவு ஹிட்ஸ் பிரபல பதிவர்களுக்கே கிடைக்கும்  புதிய பதிவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இன்னும் அரிதாகும். 

  பிரபல பதிவர்களுக்கு கண்மூடித்தனமாக வாக்குகளும் கம்மென்ட்சும் குவிகின்றன என்பது உண்மைதான்.(உதாரணம்:கேபிளாரின் என்டர் கவிதை. விமர்சனம் இந்தப் பதிவின் இறுதியில் காண்க!)  ஆனால் அந்த நிலையை அடைவதற்கு எவ்வளவு உழைத்திருப்பார்கள் என்பதை உணரவேண்டும்.ஆரம்பத்தில் அவர்கள் இட்ட நல்ல பதிவுகளுக்கு வரவேற்பு குறைவாகவே இருந்திருக்கக் கூடும்.

  .கடந்த அக்டோபரில் தமிழ் மணத்தில் இணைந்த   நான் எனது நிறைய பதிவுகளுக்கு ஏழு ஓட்டுக்கள் பெற்றதில்லை. பெரும்பாலும் எனது வோட்டுக்களை எனக்காக போடுவதில்லை. ஏழு ஓட்டுக்கள் பெற்றால் வாசகர் பரிந்துரையில் இடம் பெறும் என்பதை தாமதமாகத்தான்  தெரிந்து கொண்டேன்.எப்படியோ தட்டுத் தடுமாறி  இன்று தமிழ் மணத்தின் தரவரிசையில் 23 வதாக இருக்கிறேன்.

  ஒரு சினிமாவைப் போலவே பதிவுகளின் ஹிட்டும் கணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. நாம் எதிர் பாராத வகையில் சில பதிவுகள் ஹிட்டாகி விடுகின்றன.என்றாலும் மினிமம் கேரண்டியாக 100 முதல்150 பேர் வரை பார்க்க வைக்க நல்ல பதிவுகளை எழுதினால் மட்டுமே முடியும் என்பதை எனது குறைந்த வலைப்பதிவு அனுபவத்தின் மூலம் அறிய முடிகிறது. சில நேரங்களில் அதிகப் பார்வைகள் பெற்ற பதிவிற்கு குறைவான வாக்குகள் விழுவதும் உண்டு. எனது சமீபத்திய ஒரு  பதிவு மட்டும் இரண்டாயிரம்  பேருக்கு மேல் பார்வை இடப்பட்டது. அதிக கருத்துகளும் கிடைத்தன, ஆனால்  வாக்குகளோ 6 மட்டுமே  கிடைத்தன. இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு எனது கொள்கையை மாற்றிக்கொண்டு ஏழாவது வாக்கை நானே போட்டேன். ஏற்கனவே அதிகம் பேர் பார்த்து விட்டதால் அதற்கு மேல் அதிக பயன் ஒன்றும் விளைய வில்லை. 

  முதலில் நட்புக்காக வாக்களிப்பவர்கள் எப்போதும் தொடர்ந்து எல்லா பதிவுகளுக்கும் வாக்களிப்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது.பதிவுகளின் தரம் மட்டுமே வாக்காளர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும்.

  புதிய பதிவர்களுக்கு தனி பகுதி தொடங்கலாம் என்ற பிரபல பதிவர் கஸாலி சொன்னஆலோசனை ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான் ஆனால அதிலும் சிக்கல் உண்டு, புதிய பதிவர் என்பதை எப்படி வரையறுப்பது பதிவுகளை எண்ணிக்கை வைத்தா? தமிழ் மணத்தில் சேர்ந்ததை வைத்தா? காலத்தை வைத்தா என்ற கேள்வி எழுகிறது. எந்த முறையிலும் அனைவரையும் திருப்திப் படுத்த முடியாது.

   புதிய பதிவர்களை ஊக்குவிக்கும் பணியை எனக்குத் தெரிந்து மூன்று பேர் செய்துவருகிறார்கள்.ஒருவர் "தீதும்  நன்றும் பிறர் தர வாரா" ரமணி, திண்டுக்கல்  தனபாலன்,"வரலாற்றுச் சுவடுகள்" போன்றோர் எந்தப் பதிவாக இருந்தாலும் அதில் சிறப்பு அம்சத்தை தேடிப்  பாராட்டுவதோடு யாராக இருந்தாலும் வாக்களிக்கிறார்கள்,. அவர்களது வாக்குகள் பிறரையும் வாக்களிக்கத் தூண்டுகிறது என்பதில் ஐயமில்லை. அதனால் பல புதியவர்கள் முன்னணிக்கு வருகிறார்கள்.

   ஒவ்வொருவரும் தங்கள் படைப்புகள் அதிகம் பேரால் படிக்கப் பட வேண்டும் என்று எதிர் பார்ப்பது  இயல்புதான். அதற்கு முழுழுக்க தமிழ் மணத்தையே சார்ந்து இருக்காமல் நம்முடைய  பதிவுகளை நம்புவோம், தமிழ்மணத்தை துணையாகக் கொண்டு முன்னணிக்கு வர முயற்சி செய்வோம்.

                 ****************************************************
  மிகவும் பிரபல பதிவர் கேபிள் சங்கரை அறியாதவர்கள் பதிவுலகில் இருக்க மாட்டார்கள். அவரது சமீபத்திய என்டர்  கவிதை ஒன்று 50 வாக்குகள் பெற்று தமிழ்மணத்தில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகையாக இருந்தது. அதை  அவரது பிரபலத்திற்கு கிடைத்த பரிசாக எடுத்துக் கொள்ளலாம். அது மிகச் சுமாரான கவிதை. அதை உறுதிப் படுத்தும் விதமாகவே அதற்கு இடப்பட்ட கருத்துக்கள் தெரிவிக்கின்றன.  இனி கவிதை எழுத வேண்டாம் என்றும் அன்புக் கட்டளைகூட  இட்டுள்ளனர்.ஆனால் கேபிள் அத்தனை கருத்துக்களையும் வெளியிட்டிருந்த நேர்மை பாராட்டுக் குரியது. இதே கவிதை வேறு யாரேனும் எழுதி இருந்தால் பாராட்டுக்கள் கிடைத்திருக்கலாம்.ஆனால் அவர் மீது அதிக எதிர் பார்ப்புகளே விமர்சனங்களுக்கு காரணம் 
குட்டி  விமர்சனம்
கேபிள் ஜி மன்னிப்பாராக!
அந்தக் கவிதை
அடர் மழை
மூடிய கார் கதவுகளுக்குள் 
ஏஸியின் குளிர்
நிர்வாணமாய் கால் அகட்டி
தொங்கும் தந்தூரி சிக்கன்
மழைக்கு ஒதுங்கிய 
முழுக்க நனைந்த வெண்ணுடை 
டைட் ஸ்லீவ் பெண்
யார் கண்ணுக்கும் 
தந்தூரி சிக்கன் தெரியவில்லை.
இந்தக்  கவிதையில் மூடிய கார் கதவுகளுக்குள் ஏஸியின் குளிர்.இது தேவயில்லை என்று கருதுகிறேன். தந்தூரி சிக்கன் இருமுறை வந்துள்ளது.இதையும் தவிர்த்திருக்கலாம்.டைட் ஸ்லீவ் இதுவும் எக்ஸ்ட்ரா பிட்டிங்காகவே தெரிகிறது. முழுக்க நனைந்த வெண்ணுடை பெண் இதுவே போதுமானது.
மாற்றி அமைத்தால் கவிதை எப்படி இருக்கும்.?
             அடர் மழை!
             மழைக்கு ஒதுங்கிய
             முழுக்க நனைந்த
             வெண்ணுடை பெண்!
             யார் கண்ணுக்கும்
             தெரியவில்லை
             நிர்வாணமாய் கால் அகட்டி
             தொங்கும் தந்தூரி சிக்கன்!


இப்படி இருந்திருந்தால் ஒருவேளை கவிதையாகி இருக்குமோ. (இந்தப் பாணி சுஜாதா விடமிருந்து கற்றுக் கொண்டது)  
************************************************************************************** 

வியாழன், 13 செப்டம்பர், 2012

என் விகடனில் "நம் வலைப்பதிவர் சந்திப்பு "


   மிகப் பெரிய பதிவர் திருவிழாவை நடத்தி அதன் பெருமையை நம் வலைப் பதிவுகளில் பேசி வந்தோம். இன்னும் அந்த வரலாற்று பதிவர் சந்திப்பு நிகழ்வு மனதை விட்டு அகலாத நிலையில் இன்னுமொரு இன்ப அதிர்ச்சி.
   நமது 26.08.2012 அன்று நடைபெற்ற வலைப்பதிவர் திருவிழா ஆனந்த விகடனின் காதுகளை எட்டியுள்ளது. 
  ஆம்!  நமது தமிழ் பதிவர் சந்திப்பு பற்றிய செய்தி ஆனந்த விகடன் என் விகடனில் வெளியாகி உள்ளது. நிகழ்வு பற்றிய செய்திகள் விளக்கமாக படங்களுடன் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் இணையத்தில் மட்டுமே காண முடியும் என்று நினைக்கிறேன். அதனால் இன்னும் பதிவர்கள் பலருக்கு எட்டவில்லை என்று கருதுகிறேன். பதிவர்கள் குழுமம் ஈட்ட இருக்கும் வெற்றிகளுக்கு இது முதற் படி என்று கருதுகிறேன். இந்த பதிவர் சந்திப்பு சென்னையில் மிகப் பிரமாதமாக நடைபெறவேண்டும் என்ற விதையை விதைத்த புலவர் ராமானுசம்  அய்யா அவர்களுக்கும் உடனிருந்து உழைத்த அத்துணை நண்பர்களுக்கும் பங்கேற்ற மூத்த, இளைய பதிவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி.

இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் உண்டு. நமது அஞ்சாசிங்கம் செல்வின் இந்த வார வலையோசையில் இடம் பெற்றிருக்கிறார்.அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்  

இதோ என் விகடனில் வெளியான கட்டுரையின் "ஸ்னாப் ஷாட்கள்"


இதோ வெளியான பக்கத்திற்கான இணைப்பு
என் விகடனில் பதிவர்கள் சங்கமம்

கவனிக்க: நண்பர் ஒருவரின் பின்னூட்டம்

                
**********************************

பதிவர் சங்கமத்தில் வாசிக்கப் பட்ட என்னுடைய கவிதை 



பதிவர் சந்திப்பில் -நானும் நானும்

 

26.08.2012 அன்று நடந்த பதிவர் சந்திப்பின்போது நான் ஒரு கவிதை வாசிச்சேங்க. மயிலன் லதானந்த் னு ஒரு சிலரோட கவிதைகளுக்கு முன்னாடி நம்மோட கவிதை எடுபடலன்னாலும் அதுக்காக சும்மா விட்டுட முடிமா? அங்க வந்தவங்க பட்ட கஷ்டத்தை நீங்களும் பட்டுத்தான் ஆகணும்..அதைத்தான் இப்போ படிக்க போறீங்க. சாரி படப்போறீங்க.
தலைப்பை பாத்து தப்பா இருக்குன்னு நினச்சுடாதீங்க.
நான் அப்படின்னா என்னங்க இதயமா? மூளையா?மனசா.பெரிய பெரிய ஞானிகள் அறிஞர்கள் சொல்றது நம்ம மர மண்டைக்கு ஒன்னும் ஏறலீங்க. உன்னை நீ அறிவாய்ன்னு சொன்னாங்க. அதுவும் புரியலீங்க
  கடவுள் பாதி மிருகம் பாதின்னு கமலஹாசன் சொன்னது மாதிரி உள்ளுக்குள்ள ரெண்டு பேர் ஒரே உடம்புல இருக்கிற மாதிரி தெரியுது. ஒருத்தன் நல்லவனா இருக்கான் இன்னொருத்தன் கெட்டவனா இருக்கான். இந்த ரெண்டு பேரும் என்ன படுத்தற பாட்டை கவிதையா பதிவர் சந்திப்பின் போது கவிதையா வாசிச்சேன். ரெண்டு பேருமே நாந்தான் அப்படீன்றதால அதுக்கு நானும் நானும் னு தலைப்பு வச்சேன்.


நானும் நானும்

           என்னுள் இருப்பது இரண்டு ‘நான்’கள்
           என்னையே கேட்டேன் எண்ணிலா ‘ஏன்?’கள்

           நான்
என்பது முரண்பாட் டுருவம்
           நானும்
நானும் எதிரெதிர் துருவம்

           பொய்யைச் சொல்லி உதவியும் செய்வேன்

           மெய்யைச் சொல்லி மாட்டியும் கொள்வேன்

           புதுமை கண்டு போற்றவும் செய்வேன்

           பழமை கண்டும் வியந்தும் போவேன்

           முதிர்ந்த அறிவுடன் கருத்தும் சொல்வேன்

           முட்டாள் தனமாய் நடந்தும் கொள்வேன்

           தெளிந்த கருத்தில் குழப்பம் அடைவேன்

           குழம்பிய நிலையில் தெளிவும் பெறுவேன்

           கண்டதை எழுதி கவிதை என்பேன்

           கவிதை படைத்துக் குப்பை என்பேன்

           சிறுமை கண்டு சீறவும் செய்வேன்

           துரோகம் கண்டு ஒதுங்கியும் செல்வேன்

           வறியவர் கண்டு வாடவும் செய்வேன்

           வறுமை கண்டு ஓடவும் செய்வேன்

           பனியைப் போல உருகியும் விடுவேன்

           பாறை போலே இறுகியும் விடுவேன்

           இயந்திர ஒலியில் இசையை உணர்வேன்

           இசையைக் கூட இரைச்சல் என்பேன்

           காதலை ஒருநாள் கடவுள் என்பேன்

           காமம் என்று மறுநாள் சொல்வேன்

           முற்றும் துறந்திட முயற்சியும் செய்வேன்

           சற்று நேரத்தில் சஞ்சலம் கொள்வேன்

           அடக்கம் நானில் அடங்கி இருக்கும்

           ஆணவம் இன்னொரு நானில் தொனிக்கும்

            நானே வெல்வேன்! நானே தோற்பேன்!

            நானின் தன்மை அறியா தலைவேன்

            எதிரெதிர் 'நான்’கள் என்னுள் உறங்கும்.

            எப்பொழுது எதுவெனத் தெரியா தியங்கும்

            நான்கள் எனக்கு அடங்கு வதில்லை!

            வழிவகை தெரிந்தால் தீருமென் தொல்லை!

            நீங்கள் 'நான்' களை அறிந்தி டுவீரா!.

            தீர்வொன்று இருந்தால் சொல்லிடுவீரா?

 ****************************