என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 27 நவம்பர், 2012

விலகி விடு சச்சின்!




சாதனைகள் பல புரிந்தவர் சச்சின்.இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவர்.பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்பவர்.அவர் ஓய்வெடுக்க வேண்டிய. தருணம் வந்து விட்டது என்பதை அவரது ஆட்டம் உணர்த்துகிறது. அதை உணர்ந்து கொண்டு புகழின் உச்சியில் இருக்கும்போதே ஒய்வு முடிவை அறிவிக்க வேண்டும் என்பது என்  போன்ற ரசிகர்களின் விருப்பம். அதன் விளைவாக எழுந்ததே இந்தக் கவிதை    
சச்சினுக்கு ஒரு வேண்டு கோள்!
                      விலகி விடு  சச்சின்!

                         அன்பு சச்சின்!

                          வாழ்த்தும் வாய்கள்
                          வசை பாடுமுன் வழிவிடு!

                          கடவுள் என்று போற்றுபவர்கள்
                          கண்டபடி  தூற்றுவதற்குள்
                          சத்தமின்றி  விலகி விடு


                          பதாகை காட்டுபவர்
                          பாதுகைகளையும்
                          காட்டத் தாயாராகுமுன்
                          பதுங்கிவிடு

                          பூக்களை தூவுபவர்கள்
                          கற்களை எறிவதற்குள்
                          கழன்றுகொள்!


                          வாய்ப்பு கொடுத்ததற்காக
                          நாட்டுக்கு 
                          நன்றி சொல்லிவிட்டு
                          நகர்ந்து கொள்!

                          யாரும் அடைய முடியாத
                          உயரத்தில் இருக்கிறாய்
                          தடுமாறி விழுவதற்குள்
                          தானாக இறங்கிவிடு!

                          நீ
                          ஆடிச் சாதித்து விட்டாய்! 
                          பிறரையும் 
                          சாதனை செய்ய விடு!
                          அதில் சந்தோஷப்படு!

                          உண்மையில் நீ
                          விளையாட்டை
                          விரும்புகிறாயா?

                          ஒரு சச்சின் போதாது
                          ஓராயிரம் சச்சின்கள்
                          உருவாக நீ கொஞ்சம்
                          உழைத்துப் பார்

                          உனது  சாதனைகளின்போது
                          ஏற்பட்ட சந்தோஷத்தை விட
                          இது உயர்ந்தது
                          என்பதை உணர்வாய்!


                          மக்கள் பிரதிநிதியாய் மட்டும் 
                          சிக்கல் இன்றி செயல்படு!

                          இளைஞர் களுக்கு 
                          ஊக்கம் கொடு!

                          எள்ளி நகையாடுமுன்
                          நல்லதோர் முடிவெடு!


                                            இப்படிக்கு 
                                உன் நன்மையை நாடும் ரசிகர்கள் 


******************************************************************



சனி, 24 நவம்பர், 2012

உங்கள் வலையின் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டுமா?


கற்றுக்  குட்டியின் கணினிக் குறிப்புகள்-பகுதி 2

    புதிதாக வலைப் பதிவு தொடங்குபவர்கள் சிலர் முன்னதாகவே பல விஷயங்களைத் தெரிந்து கொண்டு வருகிறார்கள்.ஏற்கனவே வலைப்பதிவு வைத்திருப்பவர்களில் சிலர் கொஞ்ச  நாட்களாக எழுதி வந்தாலும் ப்ளாக் தொடர்பான பல விஷயங்களை மெதுவாகத் தெரிந்து கொள்கிறார்கள். (என்னைப் போன்றவர்கள்)

    புதிதாக வலைப் பதிவு தொடங்கிய நண்பர் ஒருவர் "என் வலைப் பதிவை தினமும் நிறையப் பேர் பார்க்கிறார்கள்" என்றார். இத்தனைக்கும் எந்த திரட்டிகளில் அவர் இணைக்கவில்லை. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு வேளை பதிவின் தரம் அப்படி இருக்கும் போல இருக்கிறது என்று பார்த்தால் எனது பதிவுகளே பரவாயில்லை போலிருந்தது.வேறு ஒரு செட்டிங்க்ஸ் காக எனது உதவியை நாடினார். அதன் காரணமாக அவரது ப்ளாக்கில் நுழைந்து பார்த்தபோதுதான் தெரிந்தது.Stats-Overview பகுதியில் Dont track own your pageviews என்பதற்கு பதிலாக Track my pageviews செலக்ட் செய்யப் பட்டிருந்தது. அப்படி செய்தால் நாம் நமது பதிவுகளை கிளிக் செய்யும்போது அவையும் பார்வைக் கணக்கில் சேர்ந்துவிடும். ஆனால் நாம் அவற்றை பிறர் பார்த்ததாக நினைத்துக் கொண்டிருப்போம்.
   இதை அவரிடம் சொனபோது "அப்படியா இதை கவனிக்கத் தவறிட்டேனே" என்றார். "அதை மாற்றிவிடட்டுமா என்று கேட்டேன். "வேண்டாம் கொஞ்ச நாள் அப்படியே இருக்கட்டும்  அப்பதான் நிறையப் பேர் பாத்தமாதிரி இருக்கும்" என்றார் 

     என் கருத்துப் படி பார்வையாளர்களின்  சரியான எண்ணிக்கை தெரிந்தால்தான் நமது பதிவுகளை நாம் மதிப்பிட்டுக் கொள்ள முடியும் அதற்கேற்ற வாறு நமது பதிவிடும் விஷயங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்..
  உள்ளவாறு  பிறர் பார்க்கும் எண்ணிக்கை மட்டும் வேண்டுமென்றால். Dont track my pageviews செலக்ட் செய்திருக்க வேண்டும். ப்ளாக்கரின் stats பகுதிக்கு சென்றால் படம் 1 இல் இருப்பது போல  Dont track your own pageviewsதான் கண்ணில் படும்.அதைக் கிளிக் செய்தால்தான் 2 வது படத்தில் இருப்பது போல இரண்டு  Option இருப்பது தெரிய வரும்.

படம் 1


படம்2
இதில் Dont track my pageviews என்பதை செலக்ட் செய்திருக்க வேண்டும்.
இதில்கவனிக்கக் வேண்டிய விஷயம் என்னவெனில் உங்கள் ப்ரௌசரில் குக்கிகள்(Cookies) செயல் படுத்தப் பட்டிருக்கவேண்டும். ஒரு வேலை சில காரணங்களுக்காக குக்கிகள் முடக்கப் பட்டிருந்தால் இது வேலை செய்யாது.
  பல்வேறு பிரவுசர்களை( Mozilla Firefox, Internet explorer, Goggle Chrome போன்றவை) பயன்படுத்துபவராக இருந்தால்  ஒவ்வொரு  ப்ரௌசரிலும் இந்த செட்டிங்ஸ்களை மேற்கொள்ளவேண்டும்.
   மேலும் கணினியை சுத்தப் படுத்த சில ஆண்டி வைரஸ் மென்பொருட்கள், C Cleaner போன்றவை பயன்படுத்தப் படுகிறது. இவை தேவையற்ற கோப்புகள், இணைய இணைப்பின்போது உருவாக்கப் படும் தற்காலிகக் கோப்புகள் போன்றவற்றோடு  குக்கிகளையும் நீக்கி விடும்.  இவை நீக்கப் படுவதால் பயன் படுத்தி முடித்த பின் மீண்டும் செட்டிங்ஸ்களை மாற்ற வேண்டும். இல்லையென்றால் நம் பக்கப் பார்வைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

    ப்ளாக்கர்   வழங்கும் பார்வைக் கணக்குகள் தவிர அதிகம் பேர் பயன்படுத்துவது Histats.com இன் பார்வை விவரங்கள் தான். இதுவும் பிளாக் வைத்திருப்பவர்களின்  சொந்தப் பார்வைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளும். இருந்தாலும் இதில் காட்டப்படும் பக்கப் பார்வைகளின் எண்ணிக்கை பிளாக்கர் காட்டும் பக்கப் பார்வைகளைவிட குறைவாக இருக்கும். இதற்கு காரணம் என்ன?இதில் எப்படி நமது சொந்தப் பக்கப் பார்வைகளை கணக்கில் எடுக்காமல் இருக்கச் செய்வது? இதை எல்லாம் இந்தப் பதிவிலேயே சொல்லலாம் என்றுதான் இருந்தேன். உங்கள் பொறுமையை சோதிக்க விரும்பவில்லை. அடுத்த கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகளில் பார்க்கலாம் 

(உங்கள் வலையின் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகமாக வேண்டுமா? கேட்டுட்டு அதிகமாறதுக்கு வழி சொல்லுவீங்கன்னு பாத்தா குறையறதுக்கு வழி சொல்லறீங்களே. இதை யாரு உங்களை கேட்டது அப்படின்னு யாரோ சொல்றது  கேக்குது..
அதுக்கு பதில் "ஹி ஹி ஹி" 

கொசுறு : குக்கீஸ் என்றால் என்ன?
மைக்ரோ சாப்ட் என்ன சொல்லுதுன்னா
  A Cookie is a small text based file given to you by a visited website that helps identify you to that site. Cookies are used to maintain state information as you navigate different pages on a Web site or return to the Web site at a later time.

குக்கீஸ்  பேரைக் கேட்டு பயப்பட வேண்டாம்னு இப்படி சொல்லுது.
Important: Cookies cannot be used to run code (run programs) or to deliver viruses to your computer.

  (அப்புறமா ஒரு எச்சரிக்கை  என்னோட வலைப்பக்கப் பார்வைகள் கிட்டத்தட்ட அடிச்சி புடிச்சி ஒரு லட்சத்தை தொடப் போகுதுன்னு ப்ளாக்கர்  கணக்கு காட்டுது. இன்னைக்குள்ள அதை தொடலன்னா இன்னைக்கே இன்னொரு பதிவு போட்டுடுவேன். ஜாக்கிரதை)
**************************************************************************************************************

நேரம் இருந்தால் இதையும் படியுங்கள் 
கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்-Font Shortcut-Word 20072007.html

புதன், 21 நவம்பர், 2012

கலைஞரைப் புகழ்ந்த சுஜாதா!

சுஜாதா இப்படி சொல்கிறார்
  "தமிழ்ப் புத்தாண்டை அடுத்து டாக்டர் கலைஞர் அவர்களின் திருக்குறள் உரை நூலின் வெளியீட்டு விழா மேடையில் பல அறிஞர்கள் பேசினார்கள்.ஜி.கே.மூப்பனாரும் கலந்து கொண்ட விழா. மறைமுகமான அரசியல் குறிப்புக்கள் பலவற்றால் பேச்சாளர்கள் பார்வையாளர்களைப் பரவசப்  படுத்தினார்கள் 

  கலைஞர் அடுத்த முதல்வராக வருவது ஏறக் குறைய நிச்சயமாகிவிட்ட நிலையில் இவ்வாறு திகட்டத் திகட்ட புகழ்வது எதிர் பார்க்கக் கூடியதே. இதில் யார் தகுதிக்காகாப் புகழ்கிறார்கள் யார் பதவிக்காக என்று பதம் பிரிக்கும் ஆற்றல் கலைஞருக்கு  குறள் படிப்பதால் நிச்சயம் இருக்கும். 

   கலைஞர் தெய்வம் இறைவன் பற்றிய தன் சொந்தக் கருத்துக்களுக்கு சாமார்த்தியமாக உரை எழுதி இருக்கிறார்.கடவுள் வாழ்த்து வழிபாடு ஆகிறது. தெய்வம் நம்மைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளர் ஆகிறார்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் 
மெய்வருத்தக் கூலி தரும் 
 என்ற குறளுக்கு "கடவுளே! என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும்போது அந்த உழைப்புக்கேற்ற வெற்றியைத் தரும் " என்ற உரை வியப்பும் திகைப்பும் தருகிறது.

   திருக் குறளை ஒழுங்காகப் படித்து அதற்கு மிக நுட்பமான, சில சமயம் நம்மை பிரமிக்க வைக்கும் விளக்கங்கள் சொல்லக் கூடிய ஒருவர் இந்த மாநில முதல்வராக வருவது நம் அதிர்ஷ்டமே. நிச்சயம் குறளை கலைஞர் தனக்கும் வழிகாட்டியாக எடுத்துக் கொள்வார் என்று நம்புவோமாக!

குறளில்  எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடை இருக்கிறது.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து 
அதனை அவன்கண் விடல்
என்ற குறளில் மேனஜ்மென்ட்டின் சாராம்சமே இருக்கிறது.பொருட்பால் முழுவதிலும் ஒருநல்லாட்சிக்கு உண்டான அத்தனை வழி முறைகளும் உள்ளன.
   வள்ளுவர்  தெய்வத்தை நம்பினாரா மறுபிறவியை நம்பினாரா, அவர் ஜைனரா,பெண்களை இழிவாகப் பேசினாரா போன்ற கல்லூரி வளாக ஆராய்ச்சிகளை விட்டு விட்டு நடைமுறை வாழ்வுக்கு அதில் கிடக்கும் அத்தனை ரத்தினங்களையும் பரீட்சை பண்ணிப் பார்க்க ஒரு வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்திருக்கிறது.
அதற்கான நீண்ட ஆயுள் பெறவும் திருக்குறளில் மருந்து உள்ளது.
அற்றது அறிந்து கடைப் பிடித்து மாறல்ல 
துய்க்க துவரப் பசித்து! "
என்று முடித்துள்ளார். 
   இந்தக் கட்டுரையில் கலைஞரின் புலமை மட்டுமல்ல சுஜாதாவின் குறட்புலமையும் பிரமிக்க வைக்கிறது. இக்கட்டுரையில் இறைமாட்சி என்ற அதிகாரத்தில் உள்ள பத்து குறள்களுக்கும்  சுஜாதா கூறியுள்ள உரை நம் கவனத்தை ஈர்க்கிறது.
பதிவின் நீளம்  கருதி அதை நான் சேர்க்கவில்லை.
அநேகமாக இந்தக் கட்டுரை எழுதப் பட்டது 1996 ஆக இருக்கலாம் என்று கருதுகிறேன்.

(சுஜாதாவின் 'நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள் என்ற புத்தகத்தில்' இருந்து)
*************************************************************************************
இதைப் படித்தீர்களா 

திங்கள், 19 நவம்பர், 2012

பாதித்த செய்திகள்! போதித்த விஷயங்கள்!

    பத்திரிகைகளில் பலவிதமான செய்திகளைப் படித்தாலும் சில செய்திகள் மனதில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அப்படிப் பாதித்தவற்றில் இரண்டை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
1.சிறுநீரகங்களை விற்க அனுமதி கோரிய ஆந்திரப் பெண்கள்.
2.தருமபுரி வன்முறை 

 சிறுநீரகங்களை விற்க அனுமதி கோரிய ஆந்திரப் பெண்கள்.

      துபாயில் வேலை செய்யும் ஆந்திராவைச் சேர்ந்த ஆறு பேர் துபாய் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். காரணம்; நேபாளி காவலாளி ஒருவரை கொன்றதாக குற்றம் சாட்டப் பட்டு 24 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப் பட்டுள்ளது. இது நடந்து ஏழு ஆண்டுகள் முடிந்து விட்டது. அவர்களுக்கு எந்த சட்ட உதவியும் கிடைக்கவில்லை.
    துபாய் சட்டப்படி கொலையான நபரின் மனைவி கேட்கும் தொகையை குற்றம் செய்தவர்கள் தர சம்மதித்தால் அவர்களை விடுவிக்கலாம்..இந்த சூழ்நிலையில் நேபாளி காவலாளியின் மனைவியிடம் நடந்த பேச்சுவார்த்தையில்  அந்த ஆறு பேரை பெரிய மன்னிப்பதாகவும் தனக்கு 15 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை  வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

      இதை அறிந்த அந்த ஆறு பேரின் மனைவியும் ஏழ்மை நிலையில் உள்ள தங்களால் அவ்வளவு தொகையை புரட்ட முடியாது என்பதால் தங்கள் கணவன்மார்களைக் காப்பாற்ற தங்களது சிறுநீரகங்களை விற்க அனுமதிக்குமாறு மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் அனுமதி கோரி இருந்தனர்.பலரிடம் கேட்டும் உதவி கிடைக்காததால் இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்று தங்கள் மனுவில் கூறி இருந்தனர். மனுவை விசாரித்த ஆணையம் சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. . நல்லதே நடக்க வேண்டும்.

  இந்தப்  பெண்கள் நவீன சாவித்திரிகளாக என் கண்களுக்கு தெரிகின்றனர்.இவர்களது கணவர்களைப் போன்றவர்கள் வெளிநாடு  செல்லுபோது எந்த சூழ்நிலையிலும்  சுயக் கட்டுப்பாட்டுடன்  நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்தை காப்பாற்ற வெளிநாடு செல்பவர்கள் தங்களை காப்பாற்ற குடும்பம் தவிக்கும் இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி விடக் கூடாது.
*************************************************************************************************************
தருமபுரி வன்முறை 

  சமீபத்தில் தருமபுரி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து கொண்டதை எதிர்த்து வன்முறை நடந்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் மனதை விட்டு அகலவில்லை. மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் தந்தை தற்கொலை செய்து கொள்ள ஆத்திரமுற்ற பெண்ணின் இனத்தவர்  பையன் வசிக்கும் பகுதியில் வீடுகளை தீ வைத்துக் கொளுத்தியும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட  பொருட்களையும் உடைத்தும் சேதப் படுத்தி உள்ளனர் என்ற பத்திரிகைச் செய்தி அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது.  250 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதப்படுத்தப் பட்டுள்ளது.  

  இந்த சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் மற்றும் நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகிய நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், இந்த விவகாரம் மிக ஆபத்தான ஒன்று என்றனர்.  பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ தக்க நடவடிக்கைகள் உடனே எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
  கல்வி,விஞ்ஞான தொழில் நுட்பத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்று பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால்  இவை எதுவும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க உதவவில்லையே என்ற ஆதங்கம் எழத்தான் செய்கிறது. மாறாக இவை சில சமயங்களில்  பேதங்களையும் வன்மங்களையும் வலுப்படுத்தவும் செய்துவிடுவது வேதனைக்குரியது. சாதி இனப் பாகுபாடுகள் நல்லதல்ல என்று கற்ற கல்வி சொன்னாலும் அதை மனம் ஏற்றுக்கொள்வதில்லை என்பது கசப்பான உண்மை. அதற்கு இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டுமோ? அதுவரை இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கவேண்டுமே என்பதே நமது விருப்பம்.

நினைவுக்கு  வந்த கவிதை 

                         யானைக்கு
                         மதம் பிடித்தது!
                         எல்லோரும் 
                         கலைந்து   ஓடினார்கள் 
                         எந்த மதம்
                         என்று பாராமல்!

 ***************************************************************************************



சனி, 17 நவம்பர், 2012

தீபாவளி தொலைக் காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள்


   இந்த தீபாவளி தொலைக் காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள்  அவ்வளவாக என்னைக் கவரவில்லை.
  விளம்பரங்களுக்கு இடையில் நிகழ்ச்சிகள், விளம்பரங்களே பரவாயில்லை என்று சொல்லுமளவுக்கு இருந்தது.
  ஏதாவது ஒரு நிகழ்ச்சியில்  வடிவேலு எங்காவது மக்களுடன் எம்.ஜி.ஆர் பாட்டு பாடிக் கொண்டு கண்ணில் படுவார் எந்த சேனலிலும் கண்ணில் படவில்லை.இம்முறை சந்தானக் காட்டில் மழை.
   தீபாவளி அன்று மின்வெட்டு இல்லாதாதால் கொஞ்ச நேரம் கூட  நிகழ்ச்சிகளில் இருந்து தப்பிக்க முடியவில்லை.ஏதாவது நல்ல நிகழ்ச்சி வாராதா என்று சானலை மாற்றியதுதான் மிச்சம். இந்தப் பட்டிமன்றங்களை சிறிது காலம் தடை செய்தால் நல்லது போல் தோன்றுகிறது.ஒரே முகங்கள் பார்த்துப் பார்த்து போரடிக்கும் நிலைக்கு வந்துவிட்டது. பட்டிமன்றங்கள் என்றால் நகைச்சுவையாகத்தான் இருக்கவேண்டும் என்று எழுதப்படாத சட்டமாகிவிட்டது. கலைஞர் டிவியில் அதுவும் லியோனியின் பட்டிமன்றம் ஏதோ மொக்கை ஜோக்குகள் சொல்லி சிரிக்கவைக்கிறது. அப்புறம் இதற்குப் போய் ஏன்  சிரித்தோம் என்று சிந்திக்கவும் வைக்கிறது.

   பின்னர் ஒளி பரபரப்பான விண்ணைத் தாண்டி வருவாயா ஏற்கனவே பார்த்துவிட்டாலும் பாடல்காட்சிகள் மட்டும்  மீண்டும் பார்க்கத் தூண்டியது. பொதுவாக ஏ.ஆர் ரகுமான் இசை அமைக்கும் படங்களில் இசைதான் ஹீரோ.அதனையும் தாண்டி சிம்பு பேசப்பட்டததற்கு காரணம் கெளதம் மேனன்தான்.

    ஜெயா டிவியில் ஏ.ஆர்  ரகுமானின் பேட்டியில் சிறப்பு ஒன்றுமில்லை  பேட்டி   கண்டவர் டுவிட்டர் புகழ் சின்மயி. ஒருவர் பின் ஒருவராக வந்து ஏ.ஆர் ரகுமான் புகழ் பாடிக் கொண்டிருந்தார்களே  தவிர உருப்படியான தகவல்கள் ஏதும் இல்லை.ரகுமான் பெரும்பாலும் அதிகமாக பேட்டி கொடுக்க மாட்டார். இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி பேட்டியை சுவாரசியமாக ஆக்கி இருக்கலாம். ரகுமான் பேசுவதை புரிந்து கொள்வது சற்று சிரமம்  இருந்தது. அவரது இசையில்  இருக்கும் துல்லியம் பேச்சில் இல்லாதது விநோதம்தான்.
  விஜய் டிவியில் கோபிநாத் நடத்திய துப்பாக்கி படம் பற்றி விஜய் ஏ.ஆர், முருகதாஸ் மற்றும் விஜய் ரசிகர்கள் கலந்து கொண்ட ஷோ ஒளி பரப்பானது. விஜயின் பெர்பாமான்ஸ் பற்றி முருகதாஸ் சொன்னபோது வெளியில் மிக அமைதியாக இருப்பவர் விஜய். ரிசர்வ் டைப்பாக இருக்கும்  விஜய் பெர்பாமன்ஸ் என்று வந்து விட்டால் துள்ளலும் வேகமும் அவரது இயல்பாகி விடுகிறது.உண்மையில் எது பெர்பாமன்ஸ் என்று தெரியவில்லை என்று சொன்னது ரசிக்கும்படி இருந்தது.

ராஜ் டிவியில் வரலாறு திரைப்படம் கொஞ்சம் பார்த்தேன். கொஞ்சம் பழைய படம்தான்  பரத நாட்டிய டான்சராக அஜீத் அசத்தி இருந்தார். நடிப்பில் விஜயை விட ஒரு படி முன்னே இருப்பதாகத் தோன்றியது.

****************************************************************************************************************

தீபாவளியைத் தாண்டியும் இன்னும் பிரதிபா காவேரி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நங்கூரத்திற்காக காத்திருக்கிறதாம். மாளவிகாவின் (அதுவும் கப்பல்தாங்க!)  பிணைப்பில் இருந்து இன்னும் விடுவிக்கப் படமுடியாத நிலையில் இருக்கிறதாம்.

இது யாருடைய கண்ணீர்க் கதை?


புதன், 14 நவம்பர், 2012

குழந்தைகள் தினம்,குட்டீஸ்-சுட்டீஸ்,சன் தொலைக்காட்சி

           குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்
இன்று குழந்தைகள் தினம்.நாம் வாழ்த்துக்களை அனைத்துக் குழந்தைகளுக்கும் தெரிவித்துக் கொள்வோம். குழந்தைகள் தினம் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.நமது முன்னாள் பாரதப் பிரதமர் இந்தியாவின் சிற்பி என்றழைக்கப்படும் ஜவஹர்லால் நேரு அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரது பிறந்த நாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப் படுகிறது என்பது நாம் நாம் அனைவரும் அறிந்தததே!
நம்  நாட்டில் நவம்பர் 14 அன்று கொண்டாடப் பட்டாலும் இங்கிலாந்து நியூசிலாந்து கனடா போன்ற பல நாடுகளில் குழந்தைகள் தினம் நவம்பர் 20 அன்று கொண்டாடப் படுகிறது.காரணம் 1959 ம் ஆண்டு நவம்பர் 20 ஐ.நா சபை கூட்டத்தில்தான் குழந்தைகள் உரிமைகள் பற்றி பிரகடனம் செய்யப் பட்டது. ஆனால் அமெரிக்காவில் குழந்தைகள் தினம் ஜுன் முதல் ஞாயிறு அன்றுதான் கொடாடப் படுகிறது.
   UNICEF (United Nations International Children's Emergency Fund) நிறுவனம் உலக குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க  பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. இந்த திட்டங்களை நிறைவேற்றஅந்தந்த நாடுகளுக்கு  நிதி உதவி செய்து வருகிறது.
இன்று  தமிழகத்தில்  பள்ளிகளில் மட்டும்  குழந்தைகள் தினம் கொண்டாடப் படுகிறது. ஆனால் இன்று குழந்தைகளுக்கு விடுமுறை  தினம் அல்ல
 முந்தைய காலக்கட்டத்தை விட குழந்தைகள் பற்றிய புரிந்துணர்வு சற்று அதிகரித்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். தெரிந்தோ தெரியாமலோ நமது விருப்பு வெறுப்புகள் அபிலாஷைகளை குழந்தைகளிடம் திணிக்க முற்படுகிறோம். குழந்தைகளை புரிந்து கொள்ள முயல்வோம்.

கவிக்கோ அப்துல்  ரகுமானின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது.
                            
                             வளைக்கிறோம்
                             என்று நினைத்து 
                             உடைத்துவிடாதீர்கள்
                             குழந்தைகளை
************************************************************************************
   சன் தொலைக் காட்சியில் சமீபத்தில் குட்டீஸ் சுட்டீஸ் என்ற நிகழ்ச்சி குழந்தைகளுக்காக தொடங்கப் பட்டுள்ளது. ஞாயிறுக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஒளிபரபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை சொல்லுங்கண்ணே சொல்லுங்க புகழ் இமான் அண்ணாச்சி  சுவையாக தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையுடன் வழங்குகிறார்.
   குழந்தைகளிடம் இமான் கேள்விகள் கேட்க  மழலை மொழியில் அழகான உடல் அசைவுகளோடு  அவர்கள் அளிக்கும் பதில்கள் நம்மை கொள்ளை கொள்கின்றன. இமானின் டைமிங் கம்மென்ட்ஸ் குபீர் சிரிப்பை வரவழைக்கின்றன.
    ஒரு  சில பதில்களில் அண்ணாச்சியையே  திணற அடிக்கிறது குழந்தைகளின் பதில்கள். நான் எப்படி இருக்கிறேன் என்று இமான் கேட்ட கேள்விக்கு ரஜினிகாந்த் மாதிரி இருக்கிறீர்கள் என்று சொன்னது ஒரு குழந்தை. இன்னொரு குழந்தையிடம் அதே கேள்வியைக் கேட்டபோது பஞ்சு மிட்டாய் விக்கிறவர் மாதிரி இருக்கீங்க என்று அதிரடி பதில் கிடைத்தது.
’குழல் இனிது; யாழ் இனிது’ என்ப-தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்.

என்ற குறளை மெய்ப்பித்துக் காட்டுகிறது இந்தப் பிஞ்சுகளின் மழலை மொழிகள் சீரியல்களைவிட இந்த நிகழ்ச்சி மனதுக்கு மகழ்ச்சி அளிக்கும்.
 நிகழ்ச்சி பார்க்காதவர்கள்  இந்த வீடியோக்களை கண்டு மகிழலாம்.



 


*************************************************************************************************************
கொசுறு:இதே நிகழ்ச்சி தெலுங்கு ஜெமினி டிவியில் பில்லலு பிலகலு என்ற பெயரில்  ஒளி பரப்பாகிறது.நிகழ்ச்சி வழங்குபவர் பாடகர் மனோ!

செவ்வாய், 13 நவம்பர், 2012

A.R.ரகுமான்-வைரமுத்து-நெஞ்சுக்குள்ளே-கடல் பாடல் வரிகள் விமர்சனம்.


     அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
 மணிரத்தினத்தின் கடல் படத்தில் இடம் பெற்ற வைரத்துவின் நெஞ்சுக்குள்ளே பாடலை மயக்கும் இசையுடன் MTV யில் A.R.ரகுமான் இசைத்துக்  காட்டியது அனைவருக்கும் தெரிந்ததே. அதைப் பற்றிய விமர்சனங்கள் ஏற்கனவே படித்திருப்பீர்கள்.

ஏ.ஆர.ரகுமானின் இசையைப் பொருத்தவரை அவரது பாடல் வரிகள் எளிதில் புரியாவிட்டாலும் இசைக் கட்டமைப்பு மூலம் அனவைரையும் கவர்ந்து விடுவது அவரது சிறப்பு. அந்த வகையில்தான் இந்தப் பாடலும் அமைந்திருக்கிறது. அதைப் பற்றி நான் சொல்லப் போவதில்லை. பாடல் வரிகள் பற்றி பார்க்காலம்.

 இதோ அந்த வைரமுத்துவின் பாடல் வரிகள்

நெஞ்சுக்குள்ள
ஒம்ம  முடிஞ்சிருக்கேன்
இங்கே எத்திசையில்
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

வெள்ள பார்வை வீசிவிட்டார் முன்னாடி
இத  தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி

வண்ண மணியாரம் வலதுகை கடியாரம்
ஆணை புலி எல்லாம் அடக்கும்அதிகாரம்

நீர் போன பின்னும்
நிழல் மட்டும் போகலையே போகலையே
நெஞ்சுக்குழியிலே வந்து விழுந்துருச்சி

அப்ப நிமிந்தவதான் அப்புறமா 
குனியலையே!குனியலையே!
கொடக் கம்பி போல 
மனம் குத்தி நிக்குதையா
                               (நெஞ்சுக்குள்ளே)

பட்சி உறங்கிடிச்சி
பால் தயிரா திரிஞ்சிடிச்சு
ஈச்சி மரத்து மேல
இல கூட தூங்கிடிச்சி

காசநோய்க் காரகளாம்
கண்ணுறங்கும்  வேளையிலே
ஆசநோய் வந்த மக
அர  நிமிஷம் தூங்கலையே
                   (நெஞ்சுக்குள்ளே!)

ஒரு வாய் எறங்க லியே
உள்நாக்கு நனையலையே
ஏழெட்டு  நாளா
எச்சில் விழுங்கலையே

ஏலே இலஞ்சிருக்கி
ஏதும் சொல்ல முடியலையே
ரப்பர் வளைக்கெல்லாம்
சத்தமிட வாயில்லையே!
                        (நெஞ்சுக்குள்ளே)

( சில  வரிகள்  காதில் தெளிவாக விழ வில்லை.நம்ம காது ரிப்பேரோ?)

  இசையின்றி இதைப் படிக்கும்போது ஒரு நாட்டுப்புறக் கவிதை படித்ததுபோல போல இருக்கிறது. இந்தப் படம் நெய்தல் நிலக் காதலை சொல்வது என்று படித்ததாக ஞாபகம். ஆனால் அது தொடர்பான வார்த்தைகள் எதுவும் காணப்படவில்லை.முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் தொடர்பு இல்லாதது போல் தோன்றுகிறது.வண்ண மணியாரம் வலது கை கடிகாரம் என்ற வரிகளில் வண்ண மணியாரம் பொருத்தமாக இல்லை. ஆண்கள் மணியாரம் அணிவார்களா! 
பட்சி உறங்கிடிச்சி! பால் தயிரா திரிஞ்சிடிச்சி இந்த வரிகளெல்லாம் இரவு நெடு நேரம்  ஆகி விட்டது என்ற பொருளில் எழுதப் பட்டுள்ளது. திரிஞ்சிடிச்சி என்பதற்கு பதிலாக மாறிடிச்சு என்று கூட இருக்கலாம். 

நிறைகள் இல்லையா? இருக்கிறது "கொடக் கம்பி போல மனம் குத்தி நிக்குதையா" கொடக் கம்பி ஒருபுதுமையான் உவமை. அதற்கு மேலாக எப்பொழுதும் இருமிக் கொண்டிருக்கும் காச நோயாளிகள் கூட தூங்கிவிட்டார்கள் ஆனால் ஆசை நோயில் அகப்பட்ட நான் தூங்கவில்லை என்று கூறுவது கவிஞரின் பிரத்யேக டச் அந்த வரிகளில் தெரிகிறது. ரப்பர்  வளைக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே! கவிஞர் அசத்தி விட்டார்.
பாடல் வரிகள் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம். என்றாலும் ரகுமானின் இசை  குறைகளை மறைத்துவிட்டது.பாடல் வரிகள் கிராமச் சாயலில் இருந்தாலும் பாடலின் இசையில் வெஸ்டர்ன் தாக்கம் அதிகமாக உள்ளது .

இதோ அந்தப் பாடல் 
பாடியவர்  சக்திஸ்ரீ கோபாலன்


************************************************************************************
இதைப் படிச்சாச்சா?
இது யாருடைய கண்ணீர்க் கதை?


திங்கள், 12 நவம்பர், 2012

இது யாருடைய கண்ணீர்க் கதை?


                     கைவிடப்பட்டவன்

                              என்னை ஏன் 
                              கைவிட்டீர்?

                              நான் முதியவன் 
                              என்பதாலா?

                              கம்பீரமாய்  
                              உலகை வலம் வந்தவன் 
                              நான்

                              இன்று
                              சேற்றில் கால்புதைந்த 
                              யானையாய் 
                              சிக்கிக்  கொண்டிருக்கிறேன்.

                              நீலம்  புயல் 
                              என்னை 
                              நிலைகுலைய வைத்தது!

                              அதைவிட  
                              உங்கள் அலட்சியம்
                              என்னை அவமானப் படுத்தியது 

                              உங்கள்  
                              உயர்வுக்காக அல்லவா 
                              தள்ளாடித் தள்ளாடி 
                              அலைந்தேன்!
                              பாரங்களை சுமந்தேன்!

                              என்னை 
                              கரைசேர்க்க வேண்டிய  
                              என் எஜமானன் 
                              கண்டுகொள்ளாமல் போனான்
                              நான் தவிப்பது தெரிந்தும்!
                              அனாதையாய் நான் நீர்க் காட்டில்!

                              உணவின்றி நீரின்றி 
                              உழன்று கொண்டிருந்தபோது 
                              நீங்கள் உறங்கிக் கொண்டிருந்தீர்கள்!

                              எனது  ஆயுள் முடிந்துவிட்டதாம்!
                              காலம் கடந்தபின்  
                              என்னைக்  
                              காப்பாற்றப் போகிறார்களாம் 
                              அறுவை  சிகிச்சைக்கு 
                              ஆட்களை அழைத்திருக்கிறார்கள்!

                              பிழைப்பேனா?
                              பிரிவேனா?
                              எதுவாயினும் பரவாயில்லை

                              வாழ்க்கை முடிவதற்காக 
                              நான் வருந்தப் போவதில்லை 

                              அதுவரை,
                              என்னைக்காட்சிப் பொருளாக்கி
                              காண வந்தோரே!
                              உங்களையாவது 
                              உற்சாகப் படுத்துகிறேன்.

                              இப்போது கேட்கிறேன்
                              சொல்லுங்கள்! 
                              நான் யார் தெரிகிறதா?
                              இன்னுமா  தெரியவில்லை?

                              பிரதீபா காவேரி!
                              கைவிடப் பட்ட கப்பல் நான்!

                              காவேரி என்றாலே
                              கைவிடத் தான் தோன்றுமோ? 





********************************************************************************************
இதைப் படிச்சாச்சா?
புஷ்பா மாமியின் எச்சரிக்கை 
 

இதை எழுதியது யாரு?கண்டுபிடியுங்க!  
 
கவிதையின் தலைப்பு அழைப்பு! இதை எழுதியவர் வைரமுத்து அதை சரியா கண்டு பிடிச்சு உறுதியா சொன்னவங்க  மோகன் குமார், அரசன்,ரெவரி, உஷாஅன்பரசு, பனிமலர், இவர்களுக்கெல்லாம் சொன்னபடி இட ஒதுக்கீடு பண்ணிட்டேன். சிலர் வைரமுத்துன்னு கணிச்சிருந்தாங்க. அவங்களுக்கும் வாழ்த்துக்கள். படித்த, கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

***************************************************************************************

சனி, 10 நவம்பர், 2012

புஷ்பா மாமியின் எச்சரிக்கை


  புஷ்பா மாமி ஏதோ வேலை காரணமாக வெளியில் சென்றுவிட்டு களைத்து எங்கள் வீட்டைக் கடந்து செல்கையில் என்னைப் பார்த்துவிட்டார். உடனே நீலம் புயல் போல திசை திரும்பி  எங்கள் வீட்டுக்குள் நுழைந்தார்.

  "என்னடா!முரளி பாத்துண்டே இருக்க.உங்கப்பாவோ உங்கம்மாவோ இருந்தா என்ன மாமி எப்படி இருக்கேள்? னு விசாரிப்பா?நீ என்னடான்னா கண்டும்  காணாத மாதிரி இருக்க. அதெல்லாம் பெரியவாளோட போச்சு. "

"அப்படி எல்லாம் இல்ல மாமி!"

"உன் ஆத்துக்ககாரிய மாவு மிஷன்ல பாத்தேன். தீபாவளி வந்துதுடுத்தே. நீ போய் அரச்சுண்டு வரக் கூடாதா!நான் எங்க போய்ட்டு வரேன் தெரியுமா?"

"தெரியாது"

"அது  எப்படிடா எல்லாம் ஒன்வோர்ட்ல யே பதில் சொல்ற! நீ இன்சூரன்ஸ் ஏதாவது போட்டிருக்க யா! இன்சுரன்சே போடக் கூடாது.ஐ.சி.ஐ.சி.ஐ தான் படுத்தறான்ன. நம்ம பணத்த கட்டறதுக்கே LIC காரன் படாத பாடு படுத்தறான். நீ ஏதாவது ஹெல்ப் பண்ணக்கூடாதா!!"

"என்ன ஆச்சு மாமி"

"அட ரெண்டு வார்த்தை பேசிட்டயே" மாமி ஜோக்கடித்துவிட்டு "நீ பேசறதுக்கே யோசிக்கற.ஆனா இன்சூரன்ஸ் ஏஜென்ட்டெல்லாம் பேசியே நம்மை ஏமாத்தி பாலிசியை தலையில கட்டிட்டு போயிடறான்.தெரிஞ்சவா, உறவுக்காரான்னு வந்து கேக்கறப்ப முடியாதுன்னு மூஞ்சில அடிச்சாப்பல சொல்ல முடியல தாட்சன்யத்துக்கு போடவேண்டியதாப் போச்சு. இப்ப அவஸ்தைப் படறேன். ஒரு பாலிசியில ரெண்டு ப்ரீமியம் கட்டாம விட்டுட்டேன். அதையும் சேத்து இப்ப கட்டிடலாம்னு வேளச்சேரி ப்ராஞ்ச்சுக்கு போனா, ட்யூ இருந்தா இங்க கட்ட முடியாது. அந்த பிராஞ்சுக்குத்தான் போகணும் சொல்றான். என்ன கம்ப்யூட்டர் வந்து என்ன பிரயோஜனம்.கட்டரதுக்கே இப்படின்னா திருப்பி குடுக்கறதுக்கு என்னென்ன பண்ணுவானோ. அதுவும் ஏதாவது ஆச்சுன்னா ஒழுங்கா குடுப்பானா? LIC,கவர்ன்மென்ட்டுன்னு நம்பிதான் போடறோம்." மாமி மூச்சு விடாமல் பேசினார்."

"ஆமாம் மாமி,அவங்க ரூல்ஸ் படிதானே நடப்பாங்க!. நெட்ல கூட பழைய ட்யூ எதுவும் இல்லன்னதான் கட்ட முடியும். "

"நீ எப்பவுமே அவங்களைத்தான் சப்போர்ட் பண்ணுவே.!"

"நீங்க  டீட்டெயில்ஸ் குடுங்க நான் வேணும்னா அந்த பிராஞ்சில கேட்டுட்டு வரேன்."

"சரிடாப்பா! ரொம்ப தேங்க்ஸ். நீ ICICI ல ஏதாவது பாலிசி போட்டிருக்கயா!"

"ஆமாம்  மாமி. ஒரு பாலிசி இருக்கு"

"அப்படின்னா நான் சொல்றதைக் கேட்டுக்கோ. எங்காத்து மாமாவுக்கு  தெரிஞ்சு ஒருத்தர் ஏதோ பென்ஷன் பிளான் ன்னு சொல்லி மூணு வருஷம் 10000 ரூபாய் ICICI ல ப்ரீமியம்  கட்டி இருக்கார்.அது ஷேர் சம்பந்தப் பட்டதாம்.  என்னமோ IRD யாமே!?"

"ஆமாம் IRDA ன்னா Insurance Regulatory and Development Authority "

"அங்கிருந்துதான் ஒருத்தன் போன் பண்றேன்னு  பேசினானாம்.பேர், பாலிசி நம்பர்.எவ்வளவு ரூபா கட்டி இருக்கீங்கன்னு கரெக்டா சொல்லிட்டு. இப்ப இந்த பாலிசியோட மார்க்கட் வேல்யூ ரொம்ப குறைவாப் போகுது. நீங்க கட்டின பணத்தில 35% தான் கிடைக்கும்.அதுவும் ஒழுங்கா தரமாட்டான்.IRDA கண்ட்ரோல் ல எல்லா இன்சுரன்சும் இருக்கறதால எங்களுக்கு   கம்ப்ளைன்ட் வந்துக்கிட்டு இருக்கு. நாங்க இப்ப வாங்கி குடுத்துக்கிட்டு இருக்கோம்.நீங்களும் சொன்னீங்கன்னா உங்க பாலிசி அமவுண்டும் வாங்கி  குடுக்கறோம், 600 ரூபா மட்டும் நாங்க சார்ஜ் பண்ணுவோம்.நேர்ல வரவான்னு கேட்டு  பீதியைக் கிளப்பிட்டானாம்."

"அப்புறம்"

"அவரும் பயந்து போய் அடுத்த நாளே லீவு போட்டுட்டு .அங்க போய் இந்த விவரத்த சொல்லாம இப்ப க்ளோஸ் பண்ணா எவ்வளவு வரும்னு கேட்டிருக்கார். கட்டின பணத்தைவிட கூட கொஞ்சம் வரும்னு சொன்னதும் சந்தோஷமா  பாலிசிய சரண்டர் பண்ணிட்டார்.

  அப்புறம்  மெதுவா அவன்கிட்ட போன் விவரத்தை சொல்ல, நல்ல காலம் ஏமாறாம இருந்தீங்களே அதெல்லாம் unauthorised Call. IRDA இலிருந்து நிச்சயமா யாரும் போன் பண்ண மாட்டாங்கன்னு சொன்னானாம். எப்படியெல்லாம் ஏமாத்தறா பாரு. நீயும் ஜாக்கிரதையா இரு. அவனுக்கெல்லாம் எப்படிதான் போன் நம்பர் கிடைக்குதோ தெரியல. இது இல்லாம கண்ட இன்சூரன்ஸ் காரனுங்ககிட்ட இருந்து வேற ஒரே போன் தொல்லையாம். " 

"ஆமாம் மாமி விஷயம் சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.இவ்வளோ விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே.அதுவும் விளக்கமா சொல்றீங்களே! ஆச்சர்யமா இருக்கு."

"நான் அந்தக் காலத்து PUC யாக்கும்.உனக்கு ஒண்ணு தெரியுமா எங்காத்து மாமாவே SSLC தான் ." என்றார் பெருமையாக!

****************************************
 இதைப் படிச்சிருக்கீங்களா?



வெள்ளி, 9 நவம்பர், 2012

இதை எழுதியது யாரு?கண்டுபிடியுங்க!



     கவிதை  ரசிகர்களுக்கு ஒரு சவால்  இந்தக் கவிதை எழுதியது யார்னு சொல்லுங்க பாக்கலாம்? சரியா சொல்றவங்களுக்கு தீபாவளிப் பரிசா  என் இதயத்தில 10 G.B இலவச இடம் வழங்கப் படும்.(Google குடுக்குறதைவிட அதிகங்க) 
(எழுதிய  கவிஞர் மன்னிப்பாராக! பெரிய கவிதையை கொஞ்சம் எடிட் செய்திருக்கிறேன்.)

                                       அழைப்பு 

                             தயவு செய்து 
                             என்னைத் தொல்லை செய்!
                             தயவு  செய்து 
                             என்னைக் கொள்ளையடி!

                             கழுத்தடியில் ஒரு 
                             செல்லக்கடி கடி

                             கூந்தல் கலைத்து 
                             பூக்களை உதிர்த்துவிடு 

                             ஓடிப் பிடித்தென்னை 
                             உருக்குலைத்துப்  போடு 

                             குளித்துவரும்  என்னை 
                             மீண்டும் அழுக்காக்கு 

                             எதிர்பாரா இடத்தில் 
                             என்னைத் தீண்டு 
                             எவ்வளவு இயலுமோ 
                             அவ்வளவு தழுவு 

                             எங்கே என் உயிரென்று 
                             கண்டுபிடி 

                             உன் உதட்டு எச்சிலால்
                             என்  உடல் பூசு 

                             இது ஒன்றும் 
                             ஒருவழிப் பாதையல்ல

                             என் பங்குசெலுத்த 
                             எனக்கும் இடம் கொடு

                             மார்பகப் பள்ளத்தில் 
                             முகம் வைத்து மூச்சு விடு 
                             பூனையின் பாதம் பொருத்தி 
                             பொசுக்கென்று வந்து 
                             புடவை இழு!

                             உன் தீவிரவாதத்தால் 
                             என்னைத் திணற வை 

                             என்னைத் தூண்டிவிட்டு 
                             நித்தமொரு  தடவை 
                             அழவை!

                             வா!வா! 
                             என்னை  வலி செய் 
                             உயிர் பெருகி ஒலிசெய்!

                             உன் நகர்த்தலுக்கு 
                             துடிக்குதென் ஆடை 
                             உன்  நகம் கிழிக்க
                             ஏங்குதென் மார்பு!

                             எங்கே 
                             மீண்டும் ஒருமுறை 
                             முந்தானைக்குள் புகுந்து 
                             முயல் குட்டியாகு!

                             தட்டாதே!
                             தாய் சொல்லைக்கேள்!

                             பத்து மாதம் 
                             என்வயிறு சுமந்த 
                             பிஞ்சுப் பிரபஞ்சமே!


*****************************************************************************************
நேரம் இருந்தால் இதையும்படியுங்கள்

கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்-Font Shortcut-Word 2007 .html