என்னை கவனிப்பவர்கள்

புதன், 28 ஆகஸ்ட், 2013

பதிவர் சந்திப்பு அவசியமா?


   
  என்னதான் கோப்பெரும் சோழன் பிசிராந்தையார் போல முகம்பாரா நட்பை பதிவர்களுக்கிடையே தகவல் தொடர்பு சாதனங்கள் ஏற்படுத்தித் தந்திருந்தாலும் நேரில் பார்த்து பேசி மகிழ்வது போல் ஆகுமா? அதனால் பதிவர் சந்திப்பு அவசியம் என்பது நாள் சொல்லித்தானா தெரிய வேண்டும்? அத்தகைய வாய்ப்பை வழங்குகிறது, தமிழ் வலைப்பதிவர் திருவிழா. 01.09.2013 அன்று சென்னை வடபழனி திரை இசைக் கலைஞர்கள் சங்க அரங்கில் கோலாகலமாக நடக்க இருக்கும் இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

  சிறப்பாக எழுதி பதிவுலகைக் கலக்கி கொண்டிருக்கும் பதிவர்கள் பலரைக் காணப் போகிறோம் என்று நினைக்கும்போதே மனம் மகிழ்ச்சியில் துள்ளத்தான் செய்கிறது. நான் பதிவெழுதத் தொடங்கி ஓராண்டு  கூட நிறைவடையாத நிலையில் கடந்த பதிவர் திருவிழாவில் கலந்து கொண்டேன். அதற்கு முன்னர் நான் அறிந்த மற்றும் அறிந்திராத பல பதிவர்களை நேரில் காண அற்புத வாய்ப்பாக அமைந்தது. அதே போல  இந்த சந்திப்பும் ஒரு மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் என்றே நம்புகிறேன்.  கருத்துகளில் எண்ண ஓட்டங்களில் வேறுபாடுகள் இருந்தாலும், அனவைரும் தமிழ்ப் பதிவர் என்ற நிலையில் ஒன்றுபடுவதே இத் திருவிழாவின் முக்கிய நோக்கம் எனலாம்.

    இது போன்ற விழாவை நடத்துவது என்பது எளிதல்ல. ஆரூர் மூனா செந்தில், மதுமதி, சீனு,அரசன், ஜெயக்குமார் போன்றவர்கள் நேரம் காலம் கருதாது, விழா வெற்றி பெறவேண்டும் என்பதே குறிக்கோளாக ஏற்பாடுகளை முழு மூச்சாக செய்துவருகிறார்கள்.  புலவர் இராமானுசம் ஐயா அவர்கள் தக்க ஆலோசனைகளை வழங்குவதோடு,  இந்தப் பதிவர் சந்திப்பை ஏதோ கூடினோம் பேசினோம் மகிழ்ந்தோம், கலைந்தோம் என்றில்லாமல், ஒரு நல்ல முறையான பதிவு செய்யப்பட்ட அமைப்பாக மாற்றவேண்டும் என்பதை அவ்வப்போது வலியுறுத்தி வந்திருக்கிறார்.  அதற்கான காலம் கைகூடி வருவதாகவே தெரிகிறது.

   இந்த விழாவின் சிறப்பு அம்சங்களில் ஒன்று பதிவர்கள் நூல் வெளியிடுவது. பெரும்பாலும் பதிவர்கள் நூல் வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தோடு பதிவிடுவதில்லை. தம் பதிவுகளில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து பின்னர் சில திருத்தங்கள் செய்தோ செய்யாமலோ அதை புத்தகமாக்குகிறார்கள். பதிவர்களுக்கெல்லாம கிடைக்கக் கூடிய நன்மை என்னவெனில் பதிவெழுதும்போதே பின்னூட்டங்களில் அதற்கு கிடைக்கும் விமர்சனம் மற்றும் வரவேற்பே, பதிவுகள்  நூல் வடிவம் பெற  தூண்டு கோலாக அமையும்.. மேலும் தவறுகளையும் கவனிக்கப்படாத கருத்துப் பிழைகளையும் புத்தக ஆக்கத்திற்கு முன்னர சரி செய்து விடமுடியும். வலையில் பதிவாக வெளியிடப்படாத கருத்தை கொண்டதாக நூல் இருந்தாலும் முன்னரே வலையுலகில் பரிச்சயமாகி இருப்பது  நூலாசிரியருக்கும் நூலுக்கும் கூடுதல் வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

   அந்த வகையில் முன்னிலைப் பதிவரான நண்பர் வீடுதிரும்பல் மோகன் குமாரின் வெற்றிக் கோடு புத்தகம் வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்படுவதில் மிக்க மகிழ்ச்சி.இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளவற்றில் முதல் 10 அத்தியாயங்கள் மட்டுமே வலையில் விளைந்தவை. இன்னும் சில அத்தியாயங்கள் சேர்க்கப் பட்டு வெளியிடப்படவுள்ளதாக மோகன் குமார் தெரிவித்திருக்கிறார். இதன் முதல் பகுதியை மட்டும் வலையில் பின்னோக்கி சென்று படித்தேன். சிறப்பாகவும் சுவாரசியமாகவும் தொடங்கி இருக்கிறார்.  
பொழுது போக்கு அம்சங்கள், நல்ல தகவல்கள்,பயணக் கட்டுரைகள், பேட்டிகள் இவற்றோடு மேலும்   பத்திரிகைக்குரிய பல அம்சங்களுடன் அமைந்துள்ள இவரது "வீடு திரும்பல்" ஏராளமானவர்களை கவர்ந்தது  போலவே  முதல் நூல் வெற்றிக் கோடு நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும். வாழ்த்துக்கள்!

   கடந்த பதிவர் சந்திப்பின் போதுதான் சேட்டைக்காரன் அவர்களை  முதன் முறையாக பார்த்தேன். அவரது வலைப் பக்கத்தையும் நான் அறிந்ததில்லை. தனது சுய அறிமுகத்தின்போது நான் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வருகிறேன். என்றார். அனைவரும்  ஆச்சர்யத்துடன் பார்க்க  பின் சொன்னார். ஆம் நான் கவிதைகள் எழுதுவதில்லை. கவிதை என்று எதையும் எழுதாமலிருப்பதே தொண்டல்லவா என்று பஞ்ச் அடிக்க அரங்கம் அதிர்ந்தது. பின்னர்தான் தெரிந்தது அவர் சிறந்த நகைச்சுவை பதிவர் என்பது. அவரது "மொட்டைத் தலையும் முழங்காலும்" என்ற நூலும் விழாவின்போது வெளியிடப்படுவது  மகிழ்ச்சிக்குரியது.
வாழ்த்துக்கள்! 

   பதிவர் சங்கவி அவர்களின் "இதழில் எழுதிய கவிதைகள்" என்ற நூலும் வெளிவர உள்ளதற்கு பாராட்டுக்கள். சமீபகாலமாகத்தான் அவரது வலைப்பக்கம் செல்கிறேன். சிறப்பாக எழுதுகிறார்.  வாழ்த்துக்கள்

   எனக்கு புதியவரான யாமிதாஷா என்பவரின் "அவன் ஆண் தேவதை" என்ற வித்தியாசமான தலைப்பைக் கொண்ட நூலும் வெளியிடத் தயாராக உள்ளது. அவருக்கும் வாழ்த்துக்கள்.
  இனிவரும் காலங்களில் பதிப்புலகம் தமிழ்ப்பதிவுலகையும் உற்றுநோக்கி நல்ல படைப்புகளை புத்தகமாக வெளியிடும் என்றும் நம்பலாம். 
 அடுத்தடுத்த பதிவர் திருவிழாக்களில்  இன்னும் பல பதிவர்களின்  புத்த வெளியீடுகள் நடைபெறுவதற்கு இது நிச்சயம் முன் முன்னுதாரணமாகத் திகழும் என்று எதிர்பார்க்கலாம்
  (அப்புறம் நம் தமிழ்ப்பதிவர்கள் எதைக் கண்டும் அஞ்சாதவர்கள் என்பதால் சில  பதிவர்கள் தங்கள் தனிப்பட்ட  திறமைகளை வேறு வெளிக்காட்டப்போகிறார்களாம். பயந்த சுபாவம் கொண்டவர்கள் துணையுடன் வரவும். ஹிஹிஹி )

******************************************************************************** 

அனைவரும்  வருக! வருக!

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

எதிர்பார்க்கவே இல்லை-ஆதலினால் காதல் செய்வீர்!

   மன்னிக்கவும் இது சினிமா விமர்சனம் இல்லை.  "திடம் கொண்டு போராடு" சீனு வைத்த காதல் கடிதம் எழுதும் போட்டி நடத்தியதைத்தான் குறிப்பிட்டேன். கடந்த இரண்டு மாதங்களாக ஆதலினால் காதல் செய்வீர் என்று பதிவுலகையே கலக்கிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். பதிவர்கள் அனைவரையும் வயது வித்தியாசமின்றி காதலைப் பற்றி சிந்திக்க வைத்துவிட்டார்.

போட்டியில்  கலந்துகொண்ட ஒவ்வொருவரும் எழுதிய கடிதம் அப்பப்பா. உருகி உருகி காதல் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்தோட,  இள வயதில் காதலிக்கத் தவறியவர்கள் காதலிக்காமல போய்விட்டோமே என்ற ஏக்கத்தை நிச்சயம் அடைந்திருப்பார்கள், காதலித்தவர்கள் தான் காதலித்த காலத்திற்கு பயணம் செய்து வந்திருப்பார்கள், இன்னும் சிலரோ இனிமேலாவது காதலித்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருப்பார்கள்.

இதில் இப்போட்டியில் பரிசு பெற்றதாக அறிவிக்கப் பட்ட 9 கடிதங்களில் 6 கடிதங்களை எழுதியவர்கள் பெண்களே! அதுவும் முதல்  மூன்று பரிசுகளில் நுட்பமாகவும் அழகுடனும்  உணர்வுகளை வெளிப்படுத்துவதில் பெண்களுக்கே முதலிடம் என்பதை இம்முடிவுகள் பறை சாற்றுகின்றன.
(ஜீவன்  சுப்பு மூன்றாம் இடம் பிடித்து ஆண்களின் மானம் காத்தார். நானும் ஹிஷாலியும் ஆறுதல் பெற்றோம்.)
அத்தனை  கடிதங்களையும் படித்துவிட்டு அந்தக் கடிதங்களுக்கு விமர்சனம் எழுதி நான் ரசித்தபடி வரிசைப் படுத்தி பதிவிடவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு கவிதையாகப் படிக்கப் படிக்க முடிவெடுக்க முடியாமல் அந்த எண்ணத்தை கைவிட்டேன்.

எந்தக்  கடிதத்தை படித்தாலும் இந்தக் கவிதைக்கு நிச்சயம் பரிசு கிடைக்கும் இந்தக் கவிதைக்கு நிச்சயம் பரிசு கிடைக்கும் என்றே தோன்றும். நடுவர்களின் பாடு உண்மையில் திண்டாட்டமாகத்தான் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. திடம் கொண்டு போராடித்தான் கவிதைகளை தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்பதை உணர முடிகிறது.


   சீனு மேலே உள்ளவாறு சொன்னபோதும் (என்னை கலாய்க்கிறாரோ என்றுகூட நினைத்தேன், ஐயம் கூட உண்டானது) நான் அவ்வளவாக ஆர்வம் கட்டவில்லை.

போட்டிக் கடிதங்களில் பெரும்பாலானவற்றை படித்து விட்டேன் ஒன்றிரண்டைத் தவிர.கலந்து கொள்ளவேண்டும் நினைத்தாலும் மற்ற கடிதங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் எழுத முடியுமா என்ற ஐயமும் ஏற்பட்டது. அதுவும் இந்தக் கடிதங்களில் இருந்து சற்றாவது மாறுபட்டிருந்தால் மட்டுமே நடுவர்களான  ஜீனியஸ் அப்பாதுரை, பல்துறை வித்தகி ரஞ்சனி நாராயணன், நகைச்சுவை திலகம்  பாலகணேஷ், பாசிடிவ்  ஸ்ரீராம் -இவர்களின் கவனத்தை ஈர்க்கமுடியும். ஜூலை 20 வரை டைம் இருக்கிறதே பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.
 ஒருவேளை போட்டியில் பங்குபெற்றால் அந்த கடிதத்தில் என்னென்ன இருக்கவேண்டும் என்னென்ன இருக்கக் கூடாது என்று நானே வரையறை வைத்துக் கொண்டேன்.
அதில் ராட்சசியே, பிசாசே, போன்ற வார்த்தைகள் இடம் பெறக்கூடாது என்று முடிவு செய்தேன். கடிதத்தில் எந்த இடத்திலும் காதல் என்ற வரத்தை இடம்பெறாமல் இருத்தல் நலம் என்று நினைத்தேன். மனப்பக்குவமும்,புத்திசாலித்தனமும்,வெளிப்படும் வண்ணம் அமையக் கூடாது. சொல்ல வேண்டிய விஷயங்களை இப்படிப் பிரித்துக் கொண்டேன்.
  1. .காதலால் உள்ளத்தில் ஏற்பட்ட மாற்றங்களை சொல்லவேண்டும்
  2. பழைய  நினைவுகளை சொல்லவேண்டும்.
  3. காதலியின்  அழகை கொஞ்சமாவது வர்ணிக்க வேண்டும் 
  4. .காதலிக்காக இயல்பை மாற்றிக்கொன்டதை சொல்லவேண்டும்
  5. காதலியை யாராது ஏதாவது சொன்னால் தாங்கிக்கொள்ள  முடியாதென்பதை சொல்லவேண்டும் 
  6. உனக்காக  என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்பதையும் தெரிவிக்கவேண்டும்.
  7. கொஞ்சம்  நகைச்சுவை இருக்கவேண்டும்.
  8. காதலியைத் தவிர வேறுஎந்தப் பெண்ணையும் பிடிக்காது என்பதையும் உணர்த்த வேண்டும்.
  9. நண்பர்களுடைய நடைமுறைக்கொவ்வாத காதலை சொல்லவேண்டும் 
  10. எதிர்கால கனவை சொல்லவேண்டும் 
  11. வித்தியாசமான வடிவத்தில் சொல்லவேண்டும். 
எப்படியோ  இவற்றை எல்லாம் இணைத்து கடிதம் உருவாக்கி விட்டாலும் திருப்தி ஏற்படாமல் பதிவை வெளியிடாமல் இருந்தேன். திடீரென்று சென்னை தமிழில் எழுதினால் என்ற எண்ணம் உதிக்க, எழுதப் படிக்க தெரிந்தவராக இருந்தால் தூய தமிழில் அல்லவா எழுதுவர் என்ற லாஜிக் உதைக்க எப்படியோ செல்போனில் வாயால் பேசி பதிவு செய்வதுபோல் கவுத்திட்டயே சரோ!- காதல் கடிதம்  எழுதி ஒப்பேற்றினேன்.
போட்டிக்கான கடைசி நாளில் bsnl சதி செய்ய அடுத்த நாள்தான் காலையில்தான் வெளியிட முடிந்தது. போட்டியில் சேர்க்கப் படுமோ படாதோ என்ற ஐயம் இருந்தது. சேர்த்துக் கொண்டதாக தகவல் அறிந்தேன்.
கருத்திட்ட அவர்கள் உண்மைகள் மதுரை தமிழன் அவர் எழுதிய காதல் கடிதத்தை நீக்கி விட்டாவது எனது கடிதத்தை சேர்க்கச் சொல்லி சீனுவிடம் கோரிக்கை விடுத்தபோதே பரிசு பெற்ற மகிழ்ச்சி அப்போதே கிடைத்து விட்டது.  அதுவே போதுமானதாக இருந்தது.
மனமார்ந்த நன்றிகள் மதுரை  தமிழன்
101 ஒட்டு போடுவேன் என்றுசொல்லி வரிவரியாக விமர்சித்த உஷா  அன்பரசுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
ஆறுதல் பரிசு பெற்றதால் ஏற்பட்ட மகிழ்ச்சியை மதுரை தமிழனுக்கும் உஷா அன்பரசுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
படித்து ரசித்து கருத்திட்ட அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றிகள். 
  நகைச்சுவை என்று நினைத்து ஒதுக்கி விடாமல் பரிசீலித்து பரசளித்த நடுவர்கள்  நால்வருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்

இத்தனைக்கும் மேலாக தனி மனிதனாக சிந்தித்து சிறப்பான நடுவர்களை அமர்த்தி பதிவுலகின் படைப்பாற்றலை ஊக்குவித்த சீனுவுக்கு பதிவர்கள் சார்பாக வாழ்த்துக்களையும்  பாராட்டுதல்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது இன்னும் பல போட்டிகள் நடத்தப்பட முன்னுதாரணமாகத் திகழும்
என்பதில் ஐயமில்லை.

போட்டியில் வென்ற  

சுபத்ரா, கோவைமு.சரளா,ஜீவன் சுப்பு, கண்மணி, ஹிஷாலி, தமிழ்செல்வி, சசிகலா, ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

**************************************************************************************************

கவுத்திட்டயே சரோ!- காதல் கடிதம் -

 

திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டி முடிவுகள் 

***********************************************************************************************************


செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

சென்னை எக்ஸ்பிரஸ் -க்கு புக் பண்ணிட்டீங்களா?

பதிவர் திருவிழா
   சென்னை எக்ஸ்ப்ரெஸ் என்றதும் ஷாருக்கான்படம் என்று நினைத்tதிருக்கக் கூடும். மன்னிக்கவும்.  01.09.2013 அன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள பதிவர் விழாவிற்கு வருகை தருவதற்காக  சென்னை எக்ஸ்ப்ரசில் முன்பதிவு செய்துவிட்டீர்களா என்பதைத்தான்  குறிப்பிட்டேன்.  நண்பர்களே!
   வலைப்பூக்கள் எழுதுபவர்கள். முகநூல் நண்பர்கள், டுவிட்டர்கள். கூகுள்+ பதிவர்கள் அனைவரும் கலந்து கொள்ள, ஏன் இதுவரை எழுதாமலிருந்தாலும்  இனி எழுத ஆர்வம உள்ளவர்களும் இனைந்து மகிழ்வதற்காக  சிறப்பான இரண்டாம் ஆண்டு  தமிழ் வலைப் பதிவர்கள் திருவிழா உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. 

   இதற்கான ஏற்பாடுகளை பதிவர்கள் மதுமதி,பட்டிக்காட்டான் பட்டணத்தில் ஜெயகுமார்,ஆரூர் மூனா செந்தில், அரசன், பாலகணேஷ், திடம கொண்டு போராடு சீனு உள்ளிட்ட பலரும் ஒருங்கிணைந்து நேரம் காலம் கருதாது செயல்பட்டுக் கொண்டிருகிறார்கள்.

  இதுவரை வலையில் நட்புகொண்டவர்கள் நேரில் சந்தித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக இந்த பதிவர் திருவிழா ஒரு நாள் முழுக்க  01.09.2013   நடைபெற  அன்று  வடபழனியில் உள்ள Cine Musicians Auditorium தயாராக உள்ளது

  வலையில் மூலமே தொடர்பு கொண்ட முகம் அறியாத . உங்களுக்குப் பிடித்த, ,உங்களைப் பிடித்த, பதிவர்களையும்  கண்டு மகிழ்ந்து களிப்போடு உரையாட சென்னை பதிவர் சந்திப்புக்கு புறப்படுவதற்கான ஆயத்தம் செய்து விட்டீர்களா?
   உங்களை வரவேற்க விழா ஒருங்கிணைப்பாளர்கள் காத்திருக்கிறார்கள். உங்கள் வருகையை கீழ்க்கண்ட பதிவர்களை தொடர்பு கொண்டு உறுதி  செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். வெளியூரில் இருந்து வரும் நண்பர்களுக்கு தேவைப்படின் முன் தினம் தங்குவதற்கான இட வசதி ஏற்பாடு செய்யப் படவும் விழா அன்று உணவு உள்ளிட்ட பிற ஏற்பாடுகளை செய்யவும் உங்கள் வருகையை உறுதி செய்ய பதிவரும் விழா ஒருங்கினைப்பளர்களில் ஒருவரான மதுமதி  9894124021(மதுமதி) என்ற என்ணில் தொடர்புகொள்ளவும். ஏனைய விபரங்களை kavimadhumathi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இத் திருவிழாவின்போது நூல் வெளியிடல் மற்றும் பதிவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இவ்வாண்டு பதிவர்கள் மோகன்குமார், சங்கவி, சேட்டைக்காரன்,   ஆகியோரின் நூல்கள் வெளியிடப்பட உள்ளன.. வேறு யாரேனும் தங்கள் நூல்களை வெளியிட விரும்பினால், மதுமதி அவர்களை தொடர்பு கொள்ளவும்.
     பதிவர்கள்  பாட்டுப் பாடுதல், நாட்டியம் ஆடுதல்,மிமிக்ரி செய்தல்,குழுவாக இணைத்து நடித்தல், போன்ற பல்வேறு திறமைகளை இந்த  நிகழ்வின்போது வெளிப்படுத்தலாம்.இதற்கான  மேலதிக விவரங்களுக்கு மதுமதி அவர்களையே தொடர்பு கொள்ளவும்.
    கடந்த முறை இந்நிகழ்வு நடைபெற "மக்கள் சந்தை" வலைத்தளம் பெருமளவுக்கு உதவி செய்ததால் நிதி சுமை ஏற்படவில்லை. இம்முறை அதற்கான வாய்ப்பு இல்லாததால் பதிவர் திருவிழா சிறப்புற நடைபெற பதிவர்கள் தாங்களே முன்வந்து  தங்களால் இயன்ற தொகையினை அளித்து வருகின்றனர். நீங்களும் உங்களால் இயன்றதை-விரும்பியதை அளித்து உதவலாம். இதற்காக கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாம்
First Name: Raja
Last Name: Sekar
Display Name: RAJA. S
Account Number: 30694397853
Branch Code: 006850
CIF No. : 85462623959
IFS Code : SBIN0006850
MICR Code : 600002047
Branch : SBI Saligramam Branch
Address: 49, Arcot Road, Saligramam , Chennai, City Pin - 600093
Contact :044- 24849775
தொடர்புக்கு
அரசன்(ராஜா) அலைபேசி எண் - 9952967645
நன்கொடையை வங்கியில் செலுத்தியவர்கள் tamilbloggersinfo@gmail.com என்ற முகவரிக்கு தகவல் தெரிவிக்கவும்  அம் மின்னஞ்சலில் இருந்து பணம் பெற்றுக் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை அனுப்பப் படும். வரவு செலவு கணக்கு விவரமும் பின்னர் வெளியிடப்படும். இது தொடர்பாக மேலும் விவரம் வேண்டுவோர் மேற்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

    தமிழ் வலைப் பதிவர்களே வலைப்பதிவர் திருவிழா சிறப்புற திரளாகக் கலந்து கொள்வீர். தங்கள் வருகையை இன்றே உறுதி செய்வீர்.

வருக! வருக! இணையத்தால் இணைப்புக் கொண்டிருந்த நாம் நேரில் சந்தித்து மகிழ்வோம்.

*********************************************************************************************
கொசுறு: ( பதிவர்கள் அனைவரும் அறிந்த ,பதிவுலக மந்திரவாதி, பின்னூட்டப் புயல், திரு திண்டுக்கல் தனபாலனை சந்திக்க நிறையப் பதிவர்கள் ஆவலாக உள்ளதாக செய்திகள் வந்துள்ளன)




செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

யாருமே படிக்காத முதல் பதிவு

எனது முதல் பதிவு அனுபவம்.

     ஏற்கனவே வலைசரம் தமிழ்மணம்  போன்றவற்றில் இதைப் பற்றி எழுதி விட்டாலும் அம்பாளடியாள்  தொடர் பதிவில் இணைத்து விட்டதால் மீண்டும் இதை எழுத வேண்டியதாகி விட்டது. 
     முதல் என்ற சொல்லுக்கு தனி ஈர்ப்பு  உண்டு. முதல் பிறந்தநாள், பள்ளிக்கு போன முதல் நாள்,முதல் ரேங்க் வாங்கிய நாள் ,முதலில் பேசிய மேடை(அதற்கப்புறம் அது தொடரவில்லை என்றாலும்)முதல் திருமண நாள் என்றுபட்டியல் நீண்டு கொண்டே போகும்.
இணைய இணைப்பு பெற்று இரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையிலும் யார் வேண்டுமானும் வலைப்பதிவு தொடங்க முடியும் என்று நினைத்துப் பார்த்ததில்லை. மற்றவர்களின் வலைப பதிவைப் பார்த்து வலையில் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. 
   கவிதைகள் மீது கொஞ்சம் ஆர்வம் உண்டு.ஏற்கனவே சும்மா பொழுதுபோக்காக எழுதிய கவிதைகள்(?)கிட்டத்த நூறு இருந்தது. அவை பல்வேறு சூழல்களில் பள்ளியில் படிக்கும்போதில் இருந்து தொடங்கி அவ்வப்போது எழுதி வைத்தது. அவற்றை ஒரே நோட்டில் எழுதி வைக்க முடிவு செய்தேன். அப்படி எழுதும்போது ஏற்கனவே எழுதியவற்றில் எதை முதலில் எழுதுவது என்பthil எதை முதலில் எழுதுவது என்பர் குழப்பம் ஏற்பட்டது. 
   பள்ளியில் படிக்கும்போது  தமிழ் பாடப் புத்தகத்தில் இடம்பெறும் கடவுள் வாழ்த்துப் பாடல் மிகவும். பிடிக்கும். அவை ஓசை நயம மிக்கதாக அமைந்திருக்கும். மேலும் அவை குறிப்பிட்ட மதக் கடவுளைக் குறிக்காமல்  பொதுவானதாக இருக்கும். அதனால் கடவுள் வாழ்த்தை முதல் பக்கத்தில் எழுதலாம் என்று முடிவு செய்தேன்.

   கடவுள்  வாழ்த்து வெண்பாவில் எழுதவேண்டும் என்ற விபரீத ஆசை துளிர் விட்டது.  காரணம் வெண்பா வடிவத்தின் மீது ஒரு  சிறு வயதில் இருந்தே ஒரு ஒரு ஈர்ப்பு இருந்தது .

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை 
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் -கோலம்செய் 
துங்கக் கரிமுகத்து தூமணியே நீஎனக்கு 
சங்கத்தமிழ் மூன்றும் தா 

    என்ற அவ்வையின் பாடல் சிருவயதில் எனக்கு மிகவும் பிடிக்கும் துவக்க வகுப்புகளில் படித்த வெண்பாக்கள் நெஞ்சில் நிலைத்து நிற்க, பள்ளியில் சொல்லிக் கொடுத்ததை வைத்து துணிந்து கடவுள் வாழ்த்தை எழுதிவிட்டேன்.இவை எல்லாம் நோட்டுப் புத்தகத்தில் இருந்ததே தவிர ஒன்றிரண்டு பேரைத் தவிர வேறு யாரும் அறிந்ததில்லை. வலைப்பூ  தொடங்கியதும் முதல் பதிவாக இதையே பதிந்தேன்.இப்பதிவை ஆரம்பத்தில் யாரும் படிக்கவில்லை என்றாலும் பின்னர் அவ்வப்போது யாரேனும் தெரிந்தோ தெரியாமலோ படிக்கத்தான் செய்தார்கள். சில நூறு பெரியாவது இந்த பதிவு எட்டியதில் மகிழ்ச்சியே

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை 
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் -கோலம்செய் 
துங்கக் கரிமுகத்து தூமணியே நீஎனக்கு 
சங்கத்தமிழ் மூன்றும் தா 

என்ற அவ்வையின் பாடல் சிருவயதில் எனக்கு மிகவும் பிடிக்கும் 

      கற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- கற்றுநான்
      பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும்
      உற்றதுணை நீயென்று நானுரைப்பேன். பேரிறைவா!
     
பற்றியெனைத் தூக்கி விடு. 


     எந்தக் கடவுளையும் குறிப்பிடாமல் பொதுவாக பேரிறைவா என்று விளித்ததில் எனக்கு கொஞ்சம் திருப்தி.



முதல்  பதிவின் இணைப்பு
   அப்படியே, சிவன், திருமால், சரஸ்வதி,மழை,தாய், தந்தை,பசு, நிலா, தமிழ், தலைப்புகளில் தட்டுத்தடுமாறி எழுதி வைத்திருந்தேன்.
வலைப்பூ ஆரம்பித்ததும் இவை அனைத்தையும் சேர்த்து முதல் பதிவாக வெளியிட வேண்டும் என்று நினைத்தேன். உங்கள் நல்ல காலம் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன் .பொதுவான  ஒன்றை மட்டும்  இறைவாழ்த்து என்ற தலைப்பில் பதிவிட்டேன். கொஞ்ச நாளைக்கு அதை நான் மட்டுமே பார்த்தேன். படித்தேன். 

   பின்னர் எது கவிதை , இசை வேந்தன் ஏ.ஆர்.ரகுமான்  என்று பதிவுகள் எழுதினேன். முதல் இரண்டு பதிவுகளுக்கு நீண்ட நாட்கள்  யாரும் கருத்திட வில்லை, பின்னர் முதன்முறையாக ஈழன் என்பவர் இசை வேந்தன் ஏ.ஆர்.ரகுமான்  பதிவிற்கு கருத்திட்டார். அந்தக் கருத்து கொஞ்சம் நம்பிக்கை அளித்தது. இருந்தபோதும் பார்வையாளர் எண்ணிக்கை உயரவில்லை. உயர்த்துவதற்கான வழிமுறைகளையும் அப்போது அறிந்திருக்கவில்லை.


    பின்னர் பதிவிடுவதை நிறுத்திவிட்டு. "எழுத்து" தளத்தில் ஒன்றிரண்டு கவிதைகள் எழுதி வந்தேன். இதற்குள் சில வலைப் பக்கங்கள் அறிமுகமாக , ஓராண்டுக்குப் பிறகு  பதிவெழுதும் ஆசை மீண்டும் துளிர்விட  தொடர்ந்தேன். அடுத்தடுத்து  பதிவுகள் எழுதிய போதும் பார்வையாளர்களை ஈர்க்க முடியவில்லை. தமிழ்மணம்,தமிழ்10 இன்டலி உள்ளிட்ட திரட்டிகளில் இணைத்த பின்பு முன்னேற்றம் ஏற்பட்டது. முன்னணி பதிவர்கள் பலர் என் வலைப் பக்கத்திற்கு வருகை தந்ததோடு கருத்திட்டும் ஆதரவு அளித்தனர். ஆனால் ஒரு சுவாரசியம்  79 வது  பதிவில்தான் ரமணி சாரின் முதல் கருத்து கிடைத்தது பின்னூட்டப் புயல் திண்டுக்கல் தனபாலன் அவர்களை எனது 80 வது பதிவுதான் சந்தித்தது.  அதன் பின்னர் பலரின் தவறாது தொடர்ந்து  ஆதரவு கிடைக்க ஓரளவிற்கு மற்ற பதிவர்களால் அடையாளம் கண்டு கொள்ளப் பட்டேன்.  


    277 பதிவுகள் இதுவரை எழுதி இருக்கிறேன். இந்தப் பதிவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நினைத்து எழுதிய பதிவுகளுக்கு பல்பு வாங்குவதும், சுமாரான பதிவுகள் என்று நினைப்பவை எதிர்பாராமல் ஹிட்(என் லெவலுக்கு) ஆவதும் இன்று வரை தொடர்கிறது.


    குழந்தை தன் முதல் கிறுக்கலை பார்த்து எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடையுமோ அந்த அளவுக்கு மகிழ்ச்சியை வலைப் பதிவில் பதிவு செய்யப்பட எனது அந்த சுமாரான முதல் பதிவு, இன்று வரை கொடுத்தது  என்றால் மிகையாகாது.


*******************************************************************************

இந்த  பதிவை எழுதுமாறு கேட்டுக் கொண்ட அம்பாளடியாள் அவர்களுக்கு என் நன்றிகள் 
இதுவரை  முதல் பதிவைப் பற்றி  எழுதாத அனைவரையும்  எழுதும்படி அழைக்கிறேன்.


****************************************************************************
  

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

பெட்டிக் கடை-2- ஆடி(யோ) மாதம்,வளர்பிறையும் தேய்பிறையும்



    பெட்டிக் கடை  பகுதிக்கு இவ்வளவு ஆதரவுகிடைக்கும் என்று எதிர் பார்க்கவில்லை. நிறையப் பேர் வரவேற்பளித்து கருத்து தெரிவித்தனர்.
மகிழ்ச்சியாக  இருந்தபோதினும் என் மீதான எதிர்பார்ப்பை நல்ல முறையில் நிறைவேற்ற முடியுமா  என்ற ஐயமும் வந்து விட்டது.முயற்சிப்பேன். நன்றி

                         பெட்டிக்கடை 2
வளர்பிறையும் தேய்பிறையும்   
"தீதும் நன்றும் பிறர தர வாரா" பதிவை எழுதி வரும் ரமணி அவர்கள் இன்றைய நாளை நாமே கணிப்போம் என்ற பதிவை எழுதி வருவதை  அறிவீர்கள்.அதில் வளர்பிறை தேய்பிறை அறிவது பற்றி எளிமையாக சொல்லி இருந்தார்.. நம் முன்னோர்களின் கணிப்பு முறை ஆச்சர்யம் அளித்தது.
அதையே விஞ்ஞான முறையில் இப்படி சொல்லலாம்.    
  •  நிலவு எப்போதும்வலப்புறம் இருந்து இடப்புறமாகவே வளரும் அல்லது தேயும்
  • நிலவின் வெளிச்சப் பகுதி D வடிவத்தில் இருந்தால் வளர்பிறை என்றும் C வடிவத்தில் இருந்தால் தேய்பிறை என்றும் அறியலாம்
  • இன்று  இருள் துவங்கும் நேரத்தில் மேற்கில் பாருங்கள். நிலவு D வடிவத்தில் காட்சி அளிப்பதை காணலாம். இப்போது வளர்பிறை  காலம்
  • வளர்பிறையின் தொடக்கத்தை மேற்கு திசையிலும் தேய்பிறையின் தொடக்கத்தை கிழக்கு திசையிலும் காணமுடியும். 
  • இன்னும் விளக்கினால் பெரிய பதிவாகி விடும். 
  • இந்த படம் இதை புரிந்து கொள்ள உதவும் என்று நம்பலாம். 
வளர்பிறையும் தேய்பிறையும் மாறிமாறி வருவதை காணலாம்


********************************************************************************************
ஆடி(யோ)மாதம் 
   ஆடிமாதம் வந்துவிட்டால் அம்மன் கோவில்கள் களைகட்டத் தொடங்கிவிடும். கோவிலை சுற்றி அரை கிலோமீட்டர் தூரத்திற்கு  எல்.ஆர்.ஈஸ்வரியும், வீரமணியும் அம்மன் கோவில்களை பட்டியலிட்டு ஒலி பெருக்கியில்ஒலித்துக் கொண்டிருப்பார்கள். அனுமதிக்கப் பட்ட டெசிபல்களை தாண்டி தொந்தரவாக ஒலித்தாலும், நம்மையும் அறியாமல், சில வரிகளை முணுமுணுக்க செய்யும் பெருமை ஆடி மாதத்திற்கே உண்டு  
    தலைவர்,வார்டு மெம்பர்களின் உபயத்தில் சீரியல் விளக்குகளால் அமைந்த தோற்றத்தில்  அம்மன் அருள் பாலித்துக் கொண்டிருப்பார். அம்மன் திருவிழாக்களை பொருத்தவரை இது சாமான்யர்களின் விழா.  கூழ் ஊற்றுதலும் பொங்கல் வைத்தல் பிற பாரம்பரிய நிகழ்வுகளும் ,உற்சாகமாக நடைபெறுவதை காணமுடியும். விடியும் வரை சாமி ஊர்வலம் நடக்கும். அதுவரை அமைதியாக கழிந்த நாட்களின் மௌனம் கலைந்து  உற்சாகம் உருண்டோடும். 
   சில சங்கடங்கள் இருந்தாலும் இதுபோன்ற கொண்டாட்டங்கள்  மனிதனை குஷிப்படுத்தவே செய்கின்றன.
**************************************************************************************************
 B.S.N.L சேவை
    நான்கு  நாட்களாக இணைய இணைப்பு  இல்லை. புகார் கொடுத்தும் வழக்கம் போல பி.எஸ்.என்.எல் லில் இருந்து சரி செய்ய யாரும் வரவில்லை. மோடத்தில் கோளாறா?லைனில் சிக்கலா தெரியவில்லை. ரம்ஜான் விடுமுறை. ஆதலால் சிக்கல் தீரவில்லை. இன்று(சனிக்கிழமை) மோடத்தின் Configuration சிக்கல் ஏற்பட்டிருக்கலாமோ என்ற ஐயத்தில்  மோடத்தை கழற்றி  Exchange க்கு கொண்டு போனேன். ஒருவர் மாற்றி ஒருவர் வந்து மோடத்தை கணினியில் இணைத்து முறைத்து முறைத்து பார்த்து கொண்டிருந்தனர், பிறகு மோடம் சரி இல்லை மாற்றவேண்டும் என்றனர். Configuration செக் செய்து பாருங்கள் என்றேன். ரீசெட் செய்ய, வேலை செய்யத் தொடங்கியது. அவர்களாக வந்து பார்த்தால் அதிக நாட்கள் எடுத்தக் கொள்ளப்படுகிறது. நாமாக மோடத்தை எடுத்து சென்றால் சரி செய்துகொண்டு வந்து விடலாம் 
  பள்ளம் தோண்டுவதால் இணைப்பு துண்டித்திருந்தால் சரியாகும் வரை பொருத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.இந்த வாரத்தில் என்னை எந்தப் பதிவையும் போடவிடாமல் தடுத்து உங்களை மகிழ்ச்சிப் படுத்திய பி.எஸ்.என்.எல் லுக்கு நன்றி சொல்லுங்கள்.

**********************************************************************************************************
 ஸ்டேட் வங்கி சேவை
  சமீபத்தில் ஸ்டேட் பாங்கின் ஏ.டி.எம் மிற்கு செல்ல நேரிட்டது. உள்ளேயே நமது பாஸ் புக் என்ட்ரியை  நாமே செய்து கொள்வதற்கும் வசதி செய்திருந்தது புதிதாக இருந்தது. இணையப் பணப் பரிமாற்றத்தில் அரசு வங்கிகளில் ஸ்டேட் வங்கியே முன்னிலையில் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதன் BILLER PAYMENTS சேவை எளிதாக இருக்கிறது.பில் வந்ததும் நினைவு படுத்துவதோடு இந்த வசதியின் மூலம் ஒரே கிளிக்கில் டெலிபோன் பில் செலுத்திவிட முடிகிறது.
ஸ்டேட்  வங்கியிடம் இருந்து பி.எஸ்.என்.எல் கற்றுக் கொள்ளட்டும் 
    **************************************************************************************************
தமிழ் 
  தமிழ் இலக்கணக் குறிப்பு ஒன்றை   திரைப்படப் பாடல் ஒன்று விளக்கமாக சொல்லிக் கொடுத்தது அது எந்தப் பாடல்? யார் எழுதியது? எந்தப் படத்தில் இடம் பெற்றது?
தெரிந்து  கொள்ள ஆவலா? அடுத்த  பெட்டிக்கடைக்கு. வருகை தாருங்கள்!
தெரிந்தவர்கள்  எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

*******************************************************************************************

எச்சரிக்கை: பெட்டிக்கடையின் சில அறிவியில் பதிவுகள்  பின்னர் சற்று பெரிய பதிவாக வெளியாக வாய்ப்பு உண்டு 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பெட்டிக்கடை  1 திறக்க கீழுள்ள படத்தை கிளிக்குங்கள் 






ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

நீயா?நானா? குடியைப் பற்றி சரியாக விவாதிக்கப் பட்டதா?

      Beer இல் தொடங்கும்  Tear இல் முடியும் இதுதான் குடிகாரர்கள் வாழ்க்கை. சாதி மதம் இனம் பாரபட்சமின்றி  அடிமையாக்குவதில் மதுவுக்கு இணை ஏதுமில்லை.   கடந்த வாரம் நீயா நானாவில் குடியைப் பற்றியும் குடிகார்களைப் பற்றியும் விவாதிக்கப் பட்டது. மாதுக்களும் மதுப்பழக்கத்திற்கு மெல்ல அடிமையாக்கும் கலாசாரம் தொடங்குவதை அறிய முடிந்தது. இதில் கலந்துகொண்ட பெண்களின் முகங்களில் ஒரு கலக்கம் இருப்பது தெரிந்தது.

   கருத்துத் திலகம்  மனுஷ்யபுத்திரன்  நானும் இரண்டு ஆண்டுகளுக்கு குடித்துக் கொண்டிருந்தேன். வேறு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி அதை மறந்தேன். என்றார். குடிப்பதும் மற்ற பழக்கங்களுக்கு அடிமையாவதும் அவரவர் சொந்த விஷயங்கள் என்றாலும் பிரபலங்கள்  இதுபோன்ற தவறுகளை செய்வது தவறான முன்னுதாரணமாக  ஆகிவிடுகிறது.  புதிதாக தொடங்குபவர்களுக்கு ஏற்படும் லேசான குற்ற உணர்வையும் இது தடுத்து விடுகிறது. ஆனால் அவர் சொன்னதில் ஒரு விஷயம் 'பணி நேரம் போக மீதி நேரங்களை எப்படி செலவழிப்பது என்ற திட்டமிடலோ விழிப்புணர்வோ இல்லாததே குடிப்பழக்கம் போன்றவற்றிற்கு காரணமாக அமைந்து விடுகிறது' என்று சொன்னது  ஓரளவிற்கு ஏற்கத்தக்கதாகவே இருந்தது 

    சுபவீர பாண்டியனோ இவர்களிடம் கேட்ட பழக்கம் இருக்கிறதே தவிர இவர்கள்  யாரும் கெட்டவர்கள் இல்லை.மனைவிக்காக, மக்களுக்காக, குடும்பத்துக்காக குடியை விடுவதை விட தனக்காக குடியை விடுவதுதான் சிறந்தது  என்றது கூறியது ஒரு விதத்தில் சரியே!

     இன்னொரு சிறப்பு விருந்தினர் புகழேந்தி சொன்னது கவனிக்கத் தக்கது. எந்தக் காலத்திலும் மனிதர்கள் தன்னிலை மறக்கும்  நிலையை  விரும்புகிறார்கள். ஒருவர் பக்தியில் தன்னிலை மறக்கிறார், இன்னொருவர் காமத்தில் தன்னிலை இழக்கிறார், பலர் வேறு சிற கேளிக்கைகளில் போதை வஸ்துக்களில் தன்னிலை மறக்கிறார்கள்.  சினிமா பார்ப்பது, எப்போதும் இணையத்தில் இருப்பது இவை கூட தன்னிலை மறக்க விரும்புதலின் அம்சமே என்றார். ஆனால் அதிக பாதிப்பை ஏற்படுத்துவது போதை வஸ்துக்களின் மூலம் தன்னிலை மறத்தலே. இவற்றிலிருந்து எளிதில் விடுபட முடிவதில்லை.

   நிகழ்ச்சியில்  ஒரு பெண்மணி சொன்னது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. எல்லாம் இருந்தும்  ஏதோ இனம் புரியாத அவஸ்தையினால் தன் கணவர் அமைதியின்றி தவிப்பதைக் கண்ட இவர் குடித்தாவது கொஞ்சம் சந்தோஷமாக இருக்கட்டும் என்று குடிக்க சொல்லி வற்புறுத்தியதை  குறிப்பிட்டார். ஆனால் இன்று மதுவுக்கு அடிமையாகக் கிடக்கும் கணவனைப் பார்த்து தான் செய்தது எவ்வளவு தவறு என்று வருத்தப்பட்டுக் கொட்டிருந்தார்.

    நிறுவனத்தைப் பற்றி ஊழியர்களின் கருத்து என்ன என்று அறிவதற்கு இந்த கார்ப்பரேட் மது பார்ட்டி உதவுகிறது என்று சொன்னது சற்று அபத்தமாகத்தான் பட்டது. போலீஸ் கூட குற்றவாளிகளிடம் உண்மையை அறிய இதை  பயன்படுத்த முடியுமே!
ஆனால் பொறுப்புள்ள பதவிகளில் உள்ள ஒரு சிலருக்கு பலவீனமாக இந்த மதுப்பழக்கம் இருப்பதும் அவர்களிடம் மதுவை காட்டி காரியத்தை சாதித்துக் கொள்ள முடியும் என்பதும் கசப்பான உண்மையாகத்தான் இருக்கிறது.

   ருசியோ சுவையோ இல்லதாக சொல்லபடும்  திரவத்திற்கு அடிமையாக இருப்பது எப்படி என்பது ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. கிராமம் நகரம் வேர்பாடின்றி குடிகார்கள் என்ற தனி இனமும அவர்களுக்கென்று தனி உலகமும் நம் சமூகத்துக்குள்ளேயே இருப்பது எவ்வளவு பதிப்புகளை ஏற்படுத்துகிறது. குடிப்பதில் அளவு மீறாதவரை தவறு இல்லை என்று பெண்கள் சமாதானம் சொல்லிக் கொண்டாலும் அவர்கள் படும் இன்னல்களுக்கு அளவு ஏதுமில்லை.

     இந்தக் குடிப் பழக்கத்தினால் என்னை அவர் இழந்து விடுவாரோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது என்று சொன்னார் ஒரு பெண்மணி. எந்த அளவுக்கு அவர் வெறுத்துப் போய் இருக்கிறார் என்பதை அறியமுடிந்தது.ஆனால் அவர் அதை முகத்தில் காட்டவில்லை.

     நிகழ்ச்சி  வெறும் விசாரணையாகவும் பேட்டியாகவும் அமைந்தது போல் தோன்றியதே தவிர, அதன் தாக்கத்தை முழுமையாக நிகழ்ச்சி பதிவு செய்யவில்லை என்றே நினைக்கிறேன். டாஸ்மாக் கடைகள் பற்றிய அப்பிப்ராயங்கள் கேட்கப் படவில்லை. குடியினால் பாதிக்கப்படும் நடுத்தரக் குடும்பங்களைப் பற்றி மட்டுமே பேசப் பட்டது. 

   அன்றாடம்  சம்பாதிப்பதை எல்லாம் குடிப்பதிலே தொலைத்துவிட்டு வீட்டுக்கே ஏதும் தராமல் மனைவியை கொடுமைப் படுத்தும் குடிகர்கர்க் கணவன்களை திருமணம் செய்து கொண்டு பூவிற்று, காய்கறி விற்று   கூலிவேலை செய்து பிழைத்துக்  கொண்டிருக்கும் பெண்களை நிகழ்ச்சியில் பேச வைத்திருக்கலாம். பிள்ளைகளின் கருத்துக்களை கேட்டிருக்கலாம். கல்லூரி மாணவர்களிடத்திலும் இந்தப் பழக்கம் சகஜமாக இருப்பதை சொல்லி பெற்றோர்கள் கவனம் கொள்ள வேண்டியதை கோடிட்டாவது காட்டியிருக்கலாம்.

   சினிமா தொலைக் காட்சி போன்ற ஊடகங்களில் தந்தையும் மகனும் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது சகஜமான காட்சியாக அமைக்கிறார்கள். இதைப் பார்ப்பவர் மத்தியில் இது சாதாரண நிகழ்வுதான் போலிருக்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடும். குடிப்பழக்கம் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று சப் டைட்டில் மட்டும் போடுவதால் இதுவரை ஏதேனும் பயன் விளைந்ததாகத் தெரியவில்லை.

    கல்லூரி மாணவர்களிடத்தில் நிலவி வரும் ஓர் எண்ணம் "பீர் அடிச்சா ஒடம்பு ஏறும் என்பது". பளபளப்பு கூடும்; கன்னங்கள் மெருகேறும், என்று நண்பர்களால் உசுப்பேற்றப்பட, பீரில் ஆல்கஹால் அதிகமா இல்ல; அது குடிச்சா தப்பு கிடையாது ; டாக்டர் கூட பீர் குடிக்க சிபாரிசு பண்ணறாங்க என்று  டாக்டரே  பிரிஸ்க்ரிப்ஷன் எழுதிக் கொடுப்பது போல் பேசிக் கொள்ள, மாணவர்கள் மெல்ல அதன் வலையில் விழுகிறார்கள். "ஒரு பீருக்கே தாங்கமாட்டான் மச்சீ:" என்று கிண்டலடிக்கும் நண்பனுக்கு  தன்னை நிருபிக்க அடுத்த கட்டத்துக்குள் அடி எடுத்து வைத்து தடுமாறி விழுகிறார்கள் ஒருசிலர். புத்தியுள்ளவர்கள் மட்டும் தப்பித்துக் கொள்கிறார்கள்.   நாம சும்மா இருந்தா கூட நண்பர்கள் விடமாட்டேங்கறாங்க என்று நண்பர்கள் மேல் குற்றம் சாட்டுவது பலரின் வழக்கம். எந்த நண்பர்களை சொல்கிறார்களோ அந்த நண்பர்கள் இதே குற்றச்சாட்டை இவர்கள் மேல் வைப்பதை   அறியாமல்'  

   பிரபல பதிவர் ஜோதிஜி அவர்கள் சமீபத்தில் ஒரு திறமையான தொழிலாளியைப் பற்றியும் அவர் குடிப்பழக்கத்தைப் பற்றியும் எழுதி இருந்தார். அந்தத் தொழிலாளி இப்பழக்கத்தினாலேயே இறந்து விட
அவரது மனைவிக்கு செய்தி சொல்லி அனுப்பியபோது "இப்பவாவது செத்தானே!" என்று சொல்லி  கணவனின் உடலைக் காண முதலில் வர மறுத்துவிட்டதாக எழுதி இருந்தார். குடிகாரனுடைய இறப்பு சொந்த மனைவிக்குக் கூட வருத்தத்தை தராது என்பதை குடிகார்கள் உணர்வார்களா?

  அளவுக்கு அதிகமான சகிப்புத் தன்மையே பெண்களின் பலவீனம். அது குடிகாரக் கணவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. ஆரம்பத்தில் கணவன் குடிப்பதை அறிந்து கடும்கோபம் கொள்ளும் மனைவிமார்கள் போகப்போக சகித்துக் கொள்ளவும் அவர்களை அக்கம் பக்கம் அறியாமல் கையாள்வதற்கும் கற்றுக் கொள்கிறார்களே தவிர தீர்வை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

   மருத்துவ ரீதியாக இதற்கு தீர்வுகாண முடியமா என்பதையும்அலசி இருந்தால் நிகழ்ச்சி இன்னும் சிறப்பாகவே அமைந்திருக்கும் 

*******************************************************************
 படித்து  விட்டீர்களா?
பெட்டிக்கடை: சுவாரசியமான தகவல்கள் 

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

பெட்டிக் கடை-திருக்குறளில் இலக்கணப் பிழையா?


பெட்டிக்கடை 
வலை நட்புகளுக்கு வணக்கம். 
   ஒரு சில நேரங்களில் என் மனதில் தோன்றியவற்றை   முழு பதிவாக எழுத நினைப்பேன் ஆனால் அவை போரடிக்கக் கூடும் என்பதால்  குட்டி செய்திகளாக பெட்டிக்கடை என்ற தலைப்பில்  இன்று முதல் எழுதத் தொடங்குகிறேன். ரோட்டோர பெட்டிகடையில் சோப்பு, சீப்பு, ஷாம்பூ, பேனா என்று சிறு சிறு பொருட்கள் கிடைக்கும். 

    மனதில் பட்ட சின்ன சின்ன விஷயங்களை சரக்காகக் கொண்டு   பெட்டிக்கடை யை தொடங்குகிறேன். 
திறப்பு விழாவிற்கு வருக! வருக!

                                                          அன்புடன்         
                                                      டி.என்.முரளிதரன்

****************************************************************************************************
   லியோனி அவர்களின்  குழுவின் முக்கிய பட்டிமன்ற பேச்சாளரான  கவிஞர் முத்து நிலவன் அவர்கள் வளரும் கவிதைகள் என்ற வலைப் பக்கம் வைத்துள்ளார்.பட்டிமன்றங்களில் நகைச்சுவை முகத்தை காட்டும் இவர்  அரசியல்  சமூகம்,கல்வி,இலக்கியம் என்று ஏராளமான கருத்துக்களை தனது வலைப்பூவில்  பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் படித்தது திருக்குறளில் தளைப் பிழையா? புதிய சுவாரசியமான தகவல்கள் 

இன்னொரு பதிவு தமிழில் தேசிய கீதம்

**************************************************************************************************
திகைக்க வைத்த  இன்னொரு  பதிவு சந்தானம்  என்றொரு சண்டாளான். ஆசிரியர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு. வலைப்பூ மலரின் நினைவுகள்

***************************************************************************************************
பெட்ரோல் விலை மீண்டும்உயர்ந்து விட்டதாம். இரு சக்கர வாகனத்தில் இனிமேல் பேருந்தில் போகவேண்டும் என்ற முடுவெடுத்து விட்டு நமது அற்புத பேருந்து சேவையின் காரணமாக முடிவை மாற்றிக் கொண்டு உயர்வை சகித்துக் கொண்டு சராசரி மக்களாக வழக்கம் போல் இருப்போமாக!
**********************************************************************************************
  எங்கள் வீட்டுக்கு சமீபத்தில் ஒரு விருந்தாளி  வந்தார் .வாசலில் உள்ள மல்லிகைக் கொடியை இழுத்து வாயில் போட்டுக் கொண்டார்.. மாம்பழ சீசன் ஆதலால் எங்கள் வீட்டு மாமரத்திலிருந்து விழுந்து கிடந்த மாங்காய் மற்றும் பழங்களை அவருக்கு கொடுக்க அவர் ஆசையோடு தின்ன ஆரம்பித்து விட்டார். இப்போதெல்லாம் தினந்தோறும் அதே நேரத்தில் வந்துவிடுகிறார். மாங்காய் கொடுத்தால்தான் போகிறார். கொடுக்கும் வரை பிடிவாதமாக அங்கேயே நிற்கிறார். மல்லிகைக் கொடியை பிடித்து இழுப்பதில்லை. எனக்கு ஏதாவது கொடுத்து மரியாதையாக புண்ணியம் தேடிக் கொள்ளுங்கள் என்று சொல்வது போல் நடந்து கொள்வார். இதோ அவர் தான் இவர்.


இன்னைக்கு ஆடி வெள்ளிகிழமை! என்னையும் கொஞ்சம் கவனிங்க

இன்னும் சில விருந்தாளிகள் உண்டு. அவர்களில் சிலர் உரிமையாக உள்ளே வந்து அதிரடியாக அச்சுறுத்துபவரும்  உண்டு. அவர்களைப் பற்றி இன்னொரு பதிவில் சொல்லி உங்களையும் அச்சுறுத்த ஆவல்.

*********************************************************************************
 நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போதுதான் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டேன்.சைக்கிள் ஸ்பேர் பார்ட்சில் எனக்கு பிடித்தது Freewheel.
மனிதனின் அசத்தலான கண்டுபிடிப்பு சக்கரம் என்றால். அதன் உட்பிரிவான Freewheel இன்னும் அசத்தல். சைக்கிள் பெடலை ஒருபுறம் அதாவது முன்புறமாக மிதித்தால் மட்டுமே சக்கரங்கள் சுற்றும். எதிர் புறமாக பெடலை சுழற்றினாலும் அதன் சுழற்சி தடைபடாது. இந்த அமைப்புதான் என்னை ஆச்சர்யப் படுத்தும். ப்ரீவீல் வேலை செய்யாத சைக்கிளில் மிதிப்பதை நிறுத்த முடியாது.அப்படி நிறுத்தினால் சைக்கிள் ப்ரேக் பிடித்ததுபோல் தடுமாறும். இதுபோன்ற சமயங்களில் காலை பெடலில் படாமல் தூக்கி வைத்துக்கொண்டு சிலர் செல்வதை பார்க்க முடியும். 
    இதை பற்றி எல்லாம் பள்ளியில் அறிவியல் ஆசிரியர்கள்  சொல்லிக் கொடுக்கிறார்களா? எனக்கு எந்த ஆசிரியரும் சொல்லித் தரவில்லை. உங்களுக்கு?. என்ன செய்வது அவர்களுக்கு சிலபஸ் முடிக்கவேண்டும்.


மிதிவண்டிக்கான   ப்ரீவீலை கண்டறிந்தவர் வில்லியம் வான் ஆண்டன் என்பவர்.ஆண்டு 1869.

************************************************************************************************************

எச்சரிக்கை:பெட்டிக்கடை  தொடர்ந்து நடத்துவதுவது உங்கள் கையில்தான் இருக்கிறது

பெட்டிக்கடை  2  க்கு செல்ல கீழுள்ள கதவை மௌசால் தட்டுங்கள்