என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

நான் ரொம்ப நல்லவன் சார்!

 சார்! என்ன எல்லாரும் ரொம்ப நல்லவன்னு சொல்றாங்க. அப்படித்தான் எல்லார் கிட்டயும் பேர் வாங்கி இருக்கேன். அதுல என்ன கஷ்டம்னு கேக்கறீங்களா!நல்லவனா இருக்கறது எவ்வளவு கஷ்டம்னு உங்களுக்கு தெரியாது.
  எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே நான் ரொம்ப நல்லவன் சார். சின்னவயசுல இருந்தே என்னை அப்படி வளத்துட்டாங்க. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. எங்கம்மா ஒரு நாள் ஹால்ல அரிசியை முறத்தில வச்சுட்டு துணி துவைக்க போய்ட்டாங்க. போறதுக்கு முன்னாடி "நீ ரொம்ப சமத்தாம். ரொம்ப ரொம்ப நல்ல பையனாம். . அரிசிய இறைக்காம  விளையாடனும்"னு சொல்லிட்டு போனாங்க. அம்மா நல்லவன்னு சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது,  ஆனா அரிசிய கையில எடுத்து ஹால் பூரா இறைச்சு  விளையாடனும்னு ஆசையா இருந்தது.  என்ன பண்றது என்ன நல்லவன்னு சொல்லிட்டாங்களே! என் ஆசைய அடக்கிக்கிட்டேன்.

  எங்கப்பாவோட  பிரண்டு ஒரு நாள் வந்தார் . ஒரு பொம்மைய வாங்கி எனக்கு பிரசன்ட் பண்ணார். அந்த பொம்ம எனக்கு பிடிக்கவே இல்லை. கீழ போட்டு உடைக்கலாம்னு நினைச்சேன். அப்பா அவர் எங்கப்பாகிட்ட சொன்னாரு "உங்க பையன் ரொம்ப நல்ல பையன்னு என் வைப் அடிக்கடி சொல்வா! என் பையன் இருக்கானே ரொம்ப மோசம் எந்த பொருளை கொடுத்தாலும் உடனே உடைச்சிடுவான்"
  அவர் அப்படி சொன்னதும் நான் என்ன சார் பண்ண முடியும்? பொம்மைய தூக்கி போட்டு உடைக்கும் ஆசைய தூக்கி போட்டுட்டேன். புத்தகத்தை கிழிக்கனும் தண்ணியகொட்டணும், குளிக்கறதுக்கு அடம் பிடிக்கணும், ஓ ன்னு கத்தணும் இப்படி எல்லாம் செய்யணும்னுதான் நினைப்பேன்... ஊஹூம்

   எனக்கு ஒரு தங்கை உண்டு  சார். அவளை நைசா கிள்ளனும், முதுகில ஓங்கி அறையனும். அவ அழறத பாத்து சிரிக்கணும் நினைப்பேன். எங்க சார் அதெல்லாம் முடிஞ்சுது.? அக்கம் பக்கத்து வீட்டில இருக்கறவங்க எல்லாம் அவங்க பசங்க ஒருத்தருக்கொருத்தர் சண்டை போடறதா எங்க அம்மாக்கிட்ட சொல்வாங்க. உங்க பசங்க பரவாயில்லையே ஒத்துமையா இருக்காங்களேன்னு பாராட்டுவாங்க. அதுக்காகவே சண்டை போடறதில்லை சார்.

  வீட்டிலதான் இப்படின்னா ஸ்கூல்லயும் அப்படித்தான்.  நல்லவன்னா என்ன நெத்தியில எழுதி ஒட்டியா வச்சுருக்கும்? எங்க மிஸ்கூட அப்படித்தான் சொல்வாங்க. ஒருநாள் கிளாஸ்ல எல்லோருக்கும் டிக்டேஷன் குடுத்தாங்க. அதுல சிலதுல்லாம் எனக்கு தெரியல. சரி முன்னாடி இருக்கவன பாத்து எழுத எட்டிப் பாக்கலாம்னு நினச்சேன்.  இன்னொரு பையன் அவனுக்கு முன்னாடி இருந்த பையனை பாத்து எழுதிக்கிட்டிருந்தான், அதை பாத்துட்ட மிஸ் அவன் காதை திருகி அவன் கிட்ட என்னைக் கையா நீட்டி  காமிச்சி, "அவனை  பாரு! அவனுக்கு தெரியலன்னாகூட காப்பி அடிக்க மாட்டான். அவன மாதிரி நல்ல பையனா இருக்கணும்" னு  சொன்னதுக்கப்புறம் காப்பி அடிக்க மனசு வரல சார் எனக்கு 

   பெரியவங்க இருக்கட்டும் என்கூட படிக்கிற  பிரண்ட்சுங்க கிட்ட கூட எனக்கு நல்ல பேருதான் சார். நாங்கெல்லாம் கிரிக்கெட் மேட்ச் விளையாடுவோம். எதிர் டீம் பசங்ககூட என்ன நேர்மைய பாராட்டுவாங்க சார். பேட்ல லேசா பட்டு கேட்ச் புடிப்பாங்க. அது அவங்களுக்கே தெரியாது.  அவுட் கொடுக்காமலே நானே வெளிய போய்டுவேன். இந்த மாதிரி மேட்சுல பேட்டிங் டீம்ல ஒருத்தர அம்பயரா நிப்பாங்க. யாரா இருந்தாலும் ரன் அவுட், ஸ்டம்பிங் அவுட் ஒத்தக்க மாட்டாங்க. நான் மட்டும் கரெக்டா அவுட் குடுத்த்துடுவேன். ஆப்பனன்ட் டீம்காரங்க நான்தான் அம்பயரா இருக்கணும்னு ஒத்தக்கால்ல நிப்பாங்கன்னா பாத்துக்கோங்களேன்.

  காலேஜ் போற காலம் வந்துச்சு சார். என்கூட படிக்கிற பசங்க எல்லாம் ஜாலியா பொண்ணுங்க கூட அரட்டை அடிப்பாங்க கிண்டல் பண்ணி விளையாடுவானுங்க.  லேடீஸ் காலேஜ் வாசல்ல சைட் அடிக்க போவாங்க. நான் ரொம்ப நல்லவனாம் என்னை கூப்பிட்டுக்கிட்டு போக மாட்டாங்க. எனக்கும் ஆசையாத்தான் இருக்கும் ஆனா என்னால அவங்கள மாதிரி என்னால இருக்க  முடியாது.
   அடிக்கடி கட் அடிச்சிட்டு பரங்கி மலை ஜோதியில சினிமா பாப்பானுங்க. அடுத்த நாள் அந்த சினிமாவைப் பத்தி பொண்ணுங்களோட பேசிக்கிட்டிருப்பாங்க. நான் பக்கத்தில போகும்போது நிறுத்திட்டு வேற மேட்டர் பேச ஆரம்பிச்சுடுவாங்க. ஆனாலும் இந்த பொண்ணுங்க ரொம்ப மோசம் சார். எங்கிட்ட பேசும்போது மட்டும் பாடத்தைபத்தி மட்டும்தான் பேசுவாங்க. நான் ரொம்ப நல்லவனாம் கன்னாபின்னான்னு பேச மாட்டேனாம். எப்படி இருக்கு பாருங்க சார். காலேஜ் லைப் இப்படியே முடிஞ்சு போச்சு .

   அப்புறம் வேலை கிடைச்சது. அங்கயும் இதே கதைதான். நான் திறமையானவனாம் ரொம்ப பொறுமைமையானவனாம். என்கூடவேலை செய்யறவங்களும் அப்படித்தான் சொன்னாங்க.
சாருக்கு மட்டும் எப்படி கோவம் வராம இருக்குன்னு கேப்பாங்க. அப்புறம் எனக்கு எப்படி சார் கோவம் வரும்?

   கல்யாணமாச்சு  சார் எனக்கு. மாமியார் வீட்டில எனக்கு ரொம்ப நல்ல பேரு. ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளுவாங்க. . என்ன சார் பண்றது. நல்லவனா இருந்துதானே ஆகணும் அப்புறம் என்மனைவிக்கும் என்மேல நல்ல அபிப்ராயம்னா பாத்துக்கோங்களேன்.நம்ப முடியல இல்ல? நம்பறதெல்லாம் நடக்காததும்,நம்பாததெல்லாம் நடக்கறதும்தனே வாழ்க்கை !
   ஒரு நாள் நான் கம்ப்யூட்டர்ல ஒக்காந்து ஏதோ பண்ணிக்கிட்டிருந்தேன். என் மனைவியும் அவங்க பிரண்டும் ஹால்ல பேசிக்கிட்டிருந்தாங்க. "எங்க வீட்டுக்காரர் மாதிரி நல்லவர ரேராத்தான் பாக்க  முடியும். எனக்கு வீட்டு வேலையில ரொம்ப ஹெல்ப் பண்ணுவார். லீவு நாள்ல டீ ல்லாம் போட்டு கொடுப்பார்" னு என் மனைவி சொன்னது என் காதில விழுந்தது.

  அப்புறம் என்ன நடந்திருக்கும்னு  நீங்க நினைக்கிறது சரிதான் சார். ஆமாம் நான் எப்படி சும்மா இருக்க முடியும். உடனே கிச்சனுக்குள்ள நுழைஞ்சு ரெண்டு பேருக்கும் டீ போட்டு எடுத்துட்டுப் போய் குடுத்தேன். 

    இப்படியே காலம் போய்க்கிட்டிருந்தது. ஒரு நாள் ஆபீசில் இருந்து வீட்டுக்கு திரும்பினதும் டேபிள்ல  5 வது படிக்கிற என் பையனோட ரேங்க் கார்டு பாத்தேன். மார்க்கெல்லாம் குறைவா இருந்தது. எனக்கு கோவமா வந்தது. ரெண்டு சாத்து சாத்தனும்.  கையெழுத்து போடக்கூடாதுன்னு முடிவு பண்ணேன். எங்க பையனைக் காணோமேன்னு தேடினேன். வெளிய ரோட்ல அவன் ப்ரெண்டு கூட பேசிக்கிட்டிருந்தான் அவன் என்பையனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்  "டேய்! எங்கப்பாகிட்ட  ரேங்க் கார்டு இன்னும் காட்டலடா. நான் வாங்கி இருக்கிற ரேங்க்குக்கு என்ன செம அடி அடிப்பாருடா? உங்க அப்பா அடிப்பாரா" ன்னு கேட்டான். என் பையன்சொன்னான், "எங்கப்பா ரொம்ப நல்லவரு அடிக்க மாட்டாருன்னு.
அதை  என் காதில கேட்டுட்டனே சார். அப்புறம் எப்படி நான் அடிக்க முடியும்? இன்னும் எவ்வளவோ இருக்கு சார் . எதை சொல்றது எதை விடறது.

   என்ன உசுப்பேத்தி உசுப்பேத்தியே நல்லவனாக்கிட்டாங்க சார். வேற வழியில்ல இனிவாழ் நாள் முழுசும் நல்லவனா இருக்கவே முடிவு செஞ்சிட்டேன்.  என்ன சார் சொல்லறீங்க?.

******************************************************************************************
 குறிப்பு: இதில் வரும் நான் நானில்லைங்க. முற்றிலும் கற்பனைதான். நான் பொய் சொல்ல மாட்டேன்னு உங்களுக்கே தெரியும். ரொம்ப நல்லவங்க . ஹிஹிஹி 

*******************************************************************************
படித்து  விட்டீர்களா?
******************************************************************************************************

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

புத்தகம் படிப்பவர்கள்தான் அறிவாளிகளா?

   
  புத்தகம் படிப்பவர்கள் சிலர் தங்களை அறிவாளிகள் என்று நினைத்துக் கொள்வது உண்டு. படிப்பவர்களுக்கே இப்படி என்றால் எழுதுபவர்கள் பற்றிக் கேட்க வேண்டாம். புத்தகம் படிப்பதும்  அதிக தகவல்களை தெரிந்துவைத்துக் கொள்வதுதான் சிறந்து அல்ல. புத்தகம் வாசிப்பது மட்டும்தான்  அறிவாளிகளின் அடையாளம் என்று சொல்ல முடியாது. வாசிக்கும் வழக்கம் இல்லாதவர்களை குறைத்து மதிப்பிடவும் கூடாது.

    உண்மையில் அறிவாளிகள் புத்தகத்தை படிப்பதற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். புத்திசாலிகள் அதை தூங்குவதற்கும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்

   மிகப் பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இப்படித்தான் சொல்கிறார்கள். இப்போது புத்தகம் வாங்கும் எண்ணமும்  படிக்கும்  பழக்கம் குறைந்துவிட்டது என்று. அவர்களே  இப்போது கண்டவனெல்லாம் பல் துலக்குவது முதல் பாத்ரூம் போவதுவரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.. புகழ் பெற்ற படைப்பாளர்கள் எல்லாம் படிப்பவர்கள் எண்ணிக்கை கூட வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர படைப்பவர் எண்ணிக்கை அதிகரிப்பதை விரும்புவதில்லை

   எல்லோருக்குமே  புத்தக வாசிப்பு பிடிக்கும் என்று கூற முடியாது. பள்ளிகளில் ஆண்டு விழாக்களில் புத்தக வாசிப்பை வளர்க்கிறோம் என்ற பெயரில்  பரிசு பெற்றவர்கள் அனைவருக்கும் புத்தகம் பரிசாக வழங்குவதை பார்த்திருக்கிறேன்.அதுவும் வழங்கப்படும் புத்தகங்கள் சுவையான கதைகளாக இல்லாமல் அறிவுரை சொல்பவையாகவே இருக்கும்.  அந்தப் புத்தகங்கள் படிக்கப் படாமலேயே அலமாரிகளில் அமைதியாக உறங்கிக்  கிடக்கும். அடுத்த சில ஆண்டுகளில் இடத்தை அடைத்துக் கொள்கிறது என்று சொல்லி பழைய பேப்பர்காரனிடம் தஞ்சம் அடைவதுண்டு. என்னைப் பொருத்தவரை விரும்பினால் தவிர புத்தகம் பரிசாக வழங்குவதை தவிர்க்க வேண்டும்.புத்தகங்கள் அறிவை வளர்க்கும் புத்தகங்கள் என்ற ரீதியிலேயே வழங்கப்படுகிறது. ஆனால் படிக்கப் படாமல் பயனற்றுக் கிடப்பதால் புத்தகங்கள் என்றாலே பயனற்றவை என்ற எண்ணம் சிறு வயதிலேயே ஏற்பட வாய்ப்பு உண்டு.

   தொடக்கத்தில் பொழுதுபோக்குக்காகத்தான்  புத்தக வாசிப்பு தொடங்குகிறது. என்றாலும் பின்னர் வாசிப்புக் களம் விரிவடைகிறது. சிறுவயதில் சிறுவர் கதைகளில் ஆரம்பித்து பின்னர் கவிதை நாவல், சிறுகதைகளில் ஆர்வம் ஏற்பட்டு வரலாறு அரசியல் சமூகம் சார்ந்த கட்டுரைகள் என்று வாசிப்புப் பயணம் தொடர்கிறது.  கவிதைகள் மீதான காதல் ஒரு காலகட்டத்தில் மனதை ஆக்கிரமிக்கிறது.  ஜனரஞ்சகமான எழுத்தை ரசிக்கும் வாசகர்களில் ஒரு பகுதியினர்  பின்னர் அதையும் தாண்டி எழுத்தில் வேறு பரிமாணங்களை எதிர்பார்க்கிறார்கள்..அதைத்தான் இலக்கியம் என்றும் கருதுகிறார்கள். அத்தகைய   படைப்புகளை இயற்றுபவனே சிறந்தவன் என்ற எண்ணத்தையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். .அதன் விளைவு வாசகனை படைப்பாளியாகத் தூண்டுகிறது. உண்மையில் யார் உயர்ந்தவர்கள்? வாசகர்களா? எழுத்தாளர்களா? என்றால் வாசகர்கள் என்று உறுதிபடக் கூற முடியும். வாசகன் எழுத்தாளனை நிராகரிக்க முடியும். எழுத்தாளன் வாசகனை நிராகரிக்க முடியாது.

  முன்பெல்லாம் வாசகன் எழுத்தாளனாக மாறுவதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்யவேண்டும். பத்திரிகைகளுக்கு  அனுப்பப்படும் படைப்புகள்  நிராகரிக்கப்படும்போது அவன் எழுத்தாள ஆசை தகர்ந்து போகிறது. பிரசுரத்தை பார்க்காத எழுத்து பிரசவத்தை பார்க்காத தாயைப் போல ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

   ஆனால் இன்று  அத்தனை பேருக்கும்  இணையம் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. வாசகனாகவே வாழ்நாள் முழுதும் வாழவேண்டிய அவசியம் இப்போது இல்லை. தனக்கு தோன்றியதை எழுதலாம். எழுதியதற்குத் தக்கவாறு வரவேற்பும் அங்கீகாரமும்  கிடைக்கிறது.  வாசகர் வட்டம் உருவாகிறது. இதை புளியங்கொம்பாய் பிடித்துக் கொண்டு உயரத்தை தொடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை  ஒரு மாற்றத்தின் அறிகுறியாகக் கொள்ள முடியும்.அதை மெய்ப்பிக்கும் வகையில் பல பத்திரிகைகளும் வலையில் இருந்து எடுத்து  சில பக்கங்களை நிரப்புகின்றன.

  வலைப் பதிவுகளில் எண்ணங்களைப் பகிரலாம். காராசாரமாக விமர்சிக்கலாம். விரிவாக விவாதிக்கலாம். எத்தகைய எழுத்தாளரின் கருத்துக்களுக்கும் எதிர் வாதம் செய்யலாம். எத்தகைய பிரபலமாக இருந்தாலும் வாசகனுக்கு அஞ்சவேண்டிய நிலையை இணையம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. முன்பு போல வாசகனை ஏமாற்ற முடியாது.
   இணையத்தில் எழுதும் பலரும் ஒரு கட்டத்தில் தனது எழுத்துக்களை  புத்தக வடிவில் பார்க்கவே விரும்புகிறார்கள். தமிழ் இணையப் பயன்பாடு அதிகரித்திருக்கிறது என்றாலும் அதைப் பயன்படுத்தாதவர் எண்ணிக்கை (கணினியும் இணைய இணைப்பு இருந்தும்) அதை விட அதிகம். அவர்களை அடைவதற்கு புத்தகமே ஒரு சிறந்த வாகனம் என்று கருதி இணைய எழுத்தாளர்கள் புத்தகம் வெளியிட விரும்புகிறார்கள். இணையப் பிரபலம் அவர்களுக்கு கை கொடுக்கிறது.

  இணைய எழுத்தாளர்களுக்கு  புத்தகக் கண்காட்சி ஒரு வரப்பிரசாதம்தான்.  புத்தகக் கண்காட்சியில் எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை இணைய எழுத்தாளர்களின் புத்தகங்களை அதிகமாகக் காண முடிந்தது. வாங்கிய புத்தகங்களில் படித்த விஷயங்கள் பதிவுகளாவதும் பதிவுகள்  மீண்டும் புத்தகங்களாவதும் நீர் ஆவியாகி மீண்டும் மழையாக பொழிவது போல ஒரு சுழற்சி என்பதை சமீப புத்தகக் கண்காட்சியில் காண முடிந்தது.  அதுவும் இவ்வருடக் கண்காட்சியில் இணைய எழுத்தளர்களின் புத்தங்களின் விற்பனை குறிப்பிடத்தக்க இருப்பதாக சொல்கிறார்கள். சமீப காலமாக தினம் ஒரு பதிவு எழுதி வரும் "நிசப்தம்" வலைப்பூ  வா. மணிகண்டன் தனது புத்தகம் 800 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கிறார். இவை மற்ற வலைப்பதிவு எழுத்தாளர்களுக்கு உற்சாகமூட்டும் விஷயம்  என்றாலும் புத்தகக்  கண்காட்சியில் இலட்சக்கணக்கான புத்தகங்கள் குவிந்துவைத்திருப்பதை பார்த்தால் இந்தக் கடலில் நமது பெருங்காய மணம் உணரப்பபடுமா என்ற  ஐயம் ஏற்பட்டு புத்தகம் வெளியிடும் ஆசையே போய் விடும் என்பதும் உண்மை. பல்லாயிரம் படைப்புகள் சுவைப்பாரற்றுக் கிடப்பதையும் காண முடிகிறது
  புத்தகக் கண்காட்சிகள் புத்தகங்கள் மீதான தற்காலிக மோகத்தை ஏற்படுத்துகின்றன. அந்த மோகத்தை சில பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் புத்திசாலித் தனமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவற்றில் இணைய எழுத்தாளர்களும் அடங்குவர்.
பலரும் ஒப்புக் கொண்ட விஷயம் கடந்த முறை வாங்கிய  புத்தகங்களையே இன்னும் படிக்கவில்லை என்று. அதற்கு காரணம் தேர்ந்தெடுத்த புத்தகங்களே.  பலரும் படிக்க முயற்சி செய்திருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை. வெறும் சுவாரசியமான புத்தகங்களை வாசிப்பது உயர்தர வாசகனுக்கு உகந்தது அல்ல என்று நினைத்து தரமான எழுத்துக்கள் என்று நம்பும் புத்தகங்களை வாங்குவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும்

     புத்தகம் வாங்கிப் படித்துதான் தனது உலக  அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும் அல்லது பொழுது போக்க வேண்டும் என்ற சூழல் இப்போது இல்லை. தகவல் தொடர்பு சாதனங்கள்  போகிற போக்கில் தகவல்களை மனதில் பதியவைத்து சென்று விடுகிறது. கைபேசிகளும் கணினியும் புத்தகங்களின் இடத்தை  கொஞ்சம்  அபகரித்துக் கொண்டிருக்கின்றன. கைபேசி நம்மிடம் ஒட்டுண்ணியாகவும் நாம் கைபேசியின் சாருண்ணியாகவும் வாழும் சூழலை ஏற்படுத்தி விட்டது தொழில்நுட்ப மாற்றங்கள்.  இனி வரும் காலங்களில்  சமுதாய மாற்றங்களில் புத்தகங்களின் பங்கு குறைவாகவே இருக்கும். புத்தங்கங்களால் மட்டும்தான் தான்  மொழியையும் பண்பாட்டையும் காக்கமுடியும் என்பதிலும் மாற்றுக்கருத்துடையவர்கள் உண்டு. எத்தனையோ நூற்றாண்டுகளாக படித்தறியாத மக்களை சார்ந்தும் கடந்தும்தான் மொழியும் இலக்கியங்களும் வளமை பெற்றிருக்கின்றன. புத்தகங்களின் ஆளுமை எவ்வளவு காலத்திற்கு தொடரும் என்பதை காலமே முடிவு செய்யும். ஆனால் புத்தக வாசிப்பு ஒரு சிலருக்காவது மகிழ்ச்சி தரக்கூடியாக எப்போதும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

*********************************************************************************************************

கொசுறு: இம்முறை  புத்தகக் கண்காட்சியில் 6 புத்தகங்கள் மட்டுமே வாங்கினேன். அதுவே பட்ஜெட்டை தாண்டி விட்டது. இத்தனைக்கும் திடம் கொண்டு போராடு சீனு நடத்திய காதல் கடிதப் போட்டியில்( படிக்காதவர்கள் படிக்கலாம் ( என்னைக் கவுத்திட்டயே சரோ) பரிசாகக் கிடைத்த டிஸ்கவரி பேலசின் பரிசுக் கூப்பன் இன்னும் பயன்படுத்தப் படாமல் இருந்தது. கிட்டத்தட்ட  5 மாதங்கள்  ஆகிவிட்டதால் டிஸ்கவரி பேலஸ் வேடியப்பனிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பின் புத்தகம் வாங்க உபயோகப் படுத்திக் கொண்டேன். பலரும் புத்தகக் கண்காட்சி பற்றி எழுதிவிட்டாதால் இத்துடன் நிறுத்திக் கொள்வதே உசிதம் 
நன்றி !

******************************************************************************************
படித்து விட்டீர்களா?
கந்தா என்கிற கந்தசாமி