என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

இப்படியும் இருக்க முடியுமா?-வித்தியாசமான கதை



இந்தக் கதையை  சற்று வித்தியாசமாக ( அதை நாங்கள் சொல்லவேண்டும் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது) சொல்ல முயற்சித்திருக்கிறேன்.

என்ன செய்யப் போகிறாய்?

   வழக்கம் போல மின்சார ரயிலில் ஏகப்பட்ட கூட்டம். ரயிலின் ஒவ்வொரு பெட்டியின்  வாசல்களும் மனித தேன்கூடுகள் போல காட்சி அளித்தது. தேன்கூட்டை துளைத்து   உள்ளே நுழைந்தாயிற்று . அரைமணி நேரப் பயணம் என்றாலும் கசக்கிப் போட்டுவிடும். இந்த அரைமணி நேரம் இரண்டு மணிநேரம் ஆவதுபோல எரிச்சலை ஏற்படுத்தும். சாய்ந்து நெளிந்து கைப்பிடியை பிடித்துக் கொண்டேன். இந்த அவஸ்தையை எப்படி தாங்கப்போகிறோமோ என்று நினைத்துக் கொண்டிருக்கும்  வேளையில் அருகில் சீட்டில் உட்கார்ந்திருந்த ஒருவர் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். நான் இருந்த நிலையில் புத்தகத்தை படிக்க முடிந்தது. அது  அவதியிலும் கொஞ்சம் ஆறுதல் அளித்தது. அவருடன் சேர்ந்து நானும் படிக்க ஆரம்பித்தேன்

" .........வண்டி மூன்று  மணிநேரம் தாமதமாக ரயில் நிலையத்தை அடைந்தது. மதன், கோவிந்த் இருவரும் ரயிலை விட்டு கீழே இறங்கியபோது  நள்ளிரவைத் தாண்டிவிட்டது.அவர்கள் அங்கிருந்து கிட்டத்தட்ட 5கி.மீ தூரத்தில் உள்ள அவர்கள் இருப்பிடத்துக்கு செல்ல வேண்டும். நேரம் ஆகிவிட்டதால் பேருந்து இல்லை. ஆட்டோ, சைக்கிள் ரிக்.ஷாவில்தான் போகவேண்டும்.  ஆட்டோவில் போய் விடலாம் என்று முடிவு எடுத்தனர். ஆட்டோ நின்று கொண்டிருந்த இடத்தை அடைந்தனர்.அப்போது ரிக்ஷாக்காரர் ஒருவர் ஓடிவந்து, "ஐயா எனது வண்டியில் ஏறுங்கள்" என்றார். ஆட்டோக்காரர்கள் thangalஅவரை  விரட்டினர். அவரைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. சவாரிக்கு எவ்வளவு என்று கேட்டனர். அவர் சொன்ன தொகை குறைவாக இருந்ததால் ரிக்.ஷாவில் செல்ல சம்மதித்தனர். அவர்கள் ஏறி உட்கார   ரிக்.ஷா நகர்ந்தது....

  அடுத்த ஸ்டேஷன் வந்தவிட்டது . இன்னும் ஒரு கூட்டம் ஏறி முட்டித்  தள்ளியது.  "எவ்வளோ இடம் இருக்கு உள்ளே போங்க சார்" என்று என்னை தள்ளினர். நான் நகர்த்தப்பட இப்போது படிக்க முடியவில்லை.
   நல்ல வேளை புத்தகம் வைத்துக் கொண்டிருந்தவரோ புத்தகத்தை திறந்து வைத்தபடியே  தூங்கிக் கொண்டிருந்தார். நான் எனக்கு  முன்னால் இருந்தவர்களை எப்படியோ பின்னே போக வழி விட்டு மீண்டும் அதே இடத்தில் வந்து நின்றுகொண்டு விட்ட இடத்தில்  இருந்து படிக்க தொடங்கினேன் 
 
  .......அது குளிர்காலமாதலால்  கடுங்குளிர் வாட்டி எடுத்தது . சூடாக டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து  ஏதாவது டீக்கடையில் நிறுத்த சொன்னார்கள்.  கடைகள் மூடி இருந்தன, ஓரிடத்தில் திறந்திருந்த டீக்கடை வாசலில் நிறுத்தினார் . மதனும் கோவிந்தும் ரிக்.ஷாவில் இருந்து இறங்கி , " நீயும் வா டீ சாப்பிடலாம்" என்று ரிக்.ஷாக்கரரையும் அழைத்துவிட்டு டீக்கடைக்குள் நுழைந்து மூன்று டீ போடும்படி சொன்னார் மதன். இருவரும் டீ குடிக்க ஆரம்பித்தனர் ஆனால் ரிக்.ஷாக்காரர் வரவில்லை .......

   நான் சுவாரசியமாக படித்துக் கொண்டிருந்தேன். அவர் இன்னும் தூங்கி விழுந்து கொண்டிருந்தார். அவ்வப்போது தலை மறைத்தாலும் நான் கஷ்டப்பட்டு அந்தப் பக்கத்தை படித்துவிட்டேன்.  தூக்கத்தில் இருந்ததால் அவர் அடுத்த பக்கத்தை புரட்டவில்லை.  நான் இறங்கும் வரை எழுந்திருக்க மாட்டாரோ ஏமாற்றமடைந்தேன். அப்போது அவரது பாக்கேட்டிலிருந்து கர்ச்சீஃப் கீழே விழுந்தது. நான்அவரை எழுப்புவதற்கு அதைபயன்படுத்திக்கொண்டு  கர்ச்சீஃப் கீழேவிழுந்தை சொன்னேன். தூக்கத்திலிருந்து விழித்த அவர் எனக்கு நன்றி சொல்லிவிட்டு நான் எதிர்பார்த்தது போலவே அடுத்த பக்கத்தை திருப்பினார்

.......ஒரு வேளை காதில் விழவில்லையோ என்று நினைத்து வெளியே வந்து மீண்டும் அழைத்தார். ரிக்ஷாக்காரரோ மவுனமாக தலை அசைத்து டீ வேண்டாமென மறுத்து விட்டார். "சரி விடுப்பா இவனுங்க எல்லாம் சாயந்திரம் ஆனா தண்ணிதான் போடுவானுங்க. டீ எல்லாம் சாப்பிட மாட்டானுங்க என்றார் மதன்  கிண்டலாக
டீ குடித்தபின் மீண்டும் ரிக்.ஷாவில் பயணத்தை தொடர்ந்தனர்  . கோவிந்த் கோபத்துடன் கேட்டார் " என்னப்பா! எங்களுடன் சேர்ந்து டீ அருந்த மாட்டாயா! , எங்களை மேட்டுக் குடி என்று நினைத்து விட்டாயா. அல்லது உன்னுடன் சேர்ந்து டீ சாப்பிட எங்களுக்கு தகுதி இல்லையா"

மிதிப்பதை நிறுத்திவிட்டு திரும்பி இருவரையும் பார்த்தார் ரிக்ஷாக்காரர்.....

   அதற்குள் ஏதோ ஒரு கால் வர மொபைலை எடுத்து பேச ஆரம்பித்தார் புத்தகம் வைத்திருந்தார்  அதே நேரத்தில் இன்னொரு கையால் அனிச்சையாக  படிக்கும் பக்கத்தில் ஒரு விரலை வைத்துகொண்டே புத்தகத்தை மூடினார். எப்போது பேசி முடித்து புத்தகத்தை திறப்பார். என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். படிக்கும் சுவாரசியத்தில் கொஞ்ச நேரமாக மறந்திருந்த அசௌகிரியங்கள் மீண்டும் தெரிய ஆரம்பித்தன. நல்ல வேளையாக பேச்சை சீக்கிரம் முடித்துவிட்டு புத்தகத்தை திறந்தார். நானும் விட்டுப் போன சுவாரசியத்துடன் தொடர்ந்தேன்

......அவர் கண்கள் கலங்கி, கண்ணீர் வந்து கொண்டிருந்ததுஅந்த இருட்டிலும் தெரிந்தது .
"ஐயா. என்னை மன்னியுங்கள். தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள் . இன்று மதியம்  என் மகன் இறந்துவிட்டான் . அவன் ஈம சடங்குகளுக்கு பணம் தேவை. போதுமான பணம் என்னிடத்தில் இல்லை. அந்த தொகையை சம்பாதிக்கும்வரை நான் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்துவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். அதனால்தான் உங்கள் அழைப்பை ஏற்க முடியவில்லை" என்று தயங்கி தயங்கி சொன்னார்
வாயடைத்துப் போயினர் மதனும் கோவிந்தும். அதிர்ச்சியும் வியப்பும் அவர்களை ஆட்கொண்டது .
இறங்கும் இடம் வந்ததும் ஒரு முழு நோட்டை எடுத்துக் கொடுத்தனர். அவர் கேட்ட தொகையை விட கூடுதலாகஅதில் இருந்தது. " மிச்சம் வேண்டாம் அப்படியே வைத்துக் கொள்" என்றனர்.
ரிக்.ஷாக்காரரோ மறுப்பு தெரிவித்து  மீதித் தொகையை கட்டாயப் படுத்தி திருப்பிக் கொடுத்து விட்டு. மீண்டும் ரயில் நிலையத்தை நோக்கி ரிக்.ஷாவை செலுத்தினார்....

   கதையில் வரும் ரிக்.ஷாக்காரர் மேல்  எனக்கும் பரிதாபமும் அவர் சூழலை நினைத்து வருத்தமும் அவரது நேர்மையைக் கண்டு ஆச்சரயமும் என்னை ஆக்ரமித்துக் கொண்டிருந்த  வேளையில் சட்டென்று வெளியே பார்க்க அப்போதுதான் தெரிந்தது. நான் இறங்க வேண்டிய நிலையம் கடந்து விட்டது என்பது.  வேறு வழியில்லை அடுத்த ஸ்டேஷனில் இறங்கித்தான் திரும்ப வேண்டும். கதை இன்னும் இருக்கிறதா என்று பார்க்க ஒரு பத்தி இருந்தது. இறங்குவதற்குள் அதையும் படித்துவிடலாம் என்று தொடர்ந்தேன்.


 ......இந்த சம்பவம் நடந்து பல வருடங்கள் இருக்கலாம். இதை பத்திரிகையாளனான என்னிடம் விவரித்தனர் மதனும் கோவிந்தும் ஆனால் இன்னும்  இருவர் மனதிலும் அந்த சம்பவத்தின் தாக்கம் இருப்பதாக கூறினர். அந்த ரிக்.ஷாக்கரரின் முகம் அவ்வப்போது நினைவுக்கு வந்து தங்கள் மனதை உறுத்துவதாக வருந்தினர். "உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி இருக்க இடமின்றி வறுமையில் வாடும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீ என்ன செய்திருக்கிறாய்" என்று அந்த முகம் கேட்பது போல் தோன்றுகிறது. அதே கேள்வி எனக்கும் தோன்ற முதலில் இதை பத்திரிகையில் வெளியிடுகிறேன்.இவரைப் போன்றவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை இதைப் படிப்பவர்கள் தெரிந்துகொள்ளட்டும். நாமும் என்னசெய்யலாம் என்பதை முடிவெடுக்கலாம் என்றேன் நான்" 

    கதை என்னவோ முடிந்துவிட்டது. ஆனால் அதன் பாதிப்பு மனதில் தொடர்ந்தது. கீழே அந்த பத்திரிகையாளரின் பெயர் போட்டிருந்தது. அதை படிக்குமுன் அடுத்த ஸ்டேஷன் வந்து விட்டதால் படிக்க முடியவில்லை. யோசித்துக் கொண்டே இறங்கி எதிர்ப்புறம் வரும் ரயிலை பிடித்து நான் இறங்க வேண்டிய எழும்பூர் நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன். அந்தக் கதையை நினைத்துக் கொண்டே வெளியே வர ஆட்டோவில் மூட்டை முடிச்சுகளுடன் ஒரு குடும்பம் இறங்கியது.
  அப்போது ஒரு வயதானவர் ஒருவர் ஓடி வந்து நான் பிளாட்பார்முக்கு லக்கேஜுகளை எடுத்து செல்கிறேன் என்று சொல்ல அதற்குள் போர்ட்டர்கள் சிலர் ஒடிவந்து அவரை விரட்டி அனுப்பிவிட்டனர். அவர் முகம் வாடிநிற்க நான் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன் 
  தலை லேசாக வலிக்க ஒரு டீ குடித்தால் தேவலை போல் இருந்தது.எதிரிலேயே டீக்கடை இருந்தது .
டீக்கடை வாசலில்  கிழிந்த ஆடையுடன்  சிறுமி ஒருத்தி நின்றிருந்தாள்.  பசியோடு இருப்பதை அவள் முகம் காட்டிக் கொடுத்தது 
'டீ குடிக்கிறயா' என்று கேட்டுவிட்டு  அந்தப் பெண்ணுக்கு டீயும் பண்ணும் கொடுக்க சொன்னேன். 
"வேணாம். எங்க தாத்தா  திட்டுவாரு . இப்ப வந்து எனக்கு வாங்கி தருவாரு" என்று மறுத்து விட்டாள்  
"உங்க தாத்தா  எங்கே?" என்றேன்
"அதோ" 
சிறுமி கை காட்டிய திசையில் பார்த்தேன். அவள் சுட்டிக் காட்டியது சற்று முன்பு போர்ட்டர்களால் விரட்டப்பட்ட அந்தப் பெரியவரை.

*********************************************************************************

கொசுறு : 
  1.  இதில்  மூன்று கதைகள் உள்ளன . மொத்தமாக ஒரு கதையாக ரசிக்க முடியும் .
  2. ஊதா நிறத்தில் எழுதப்பட்டவை மட்டும் படித்தால்கூட ஒரு தனி கதையாகக் கொள்ள முடியும். 
  3. கருப்பு வண்ணத்தில் உள்ளவற்றை படித்தாலும் தனி கதையாக இருக்கும்.
  4. எப்போதோ படித்த பழைய செய்தியை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.


**************************************************************************** 


இதைப் படிச்சிட்டீங்களா?  
எ.பா.ப.கு. க.  விவேகானந்தரின் கண் திறந்த தேவ தாசி-
எட்டிப் பார்த்து படித்த குட்டிக் கதை-படிச்சா ஷாக் ஆயிடுவீங்க! எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-2 கூகுள்ல தேடிப் பாத்து சொல்றேன்! 

எட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதை-3 காபி மாதிரிதான் வாழ்க்கை எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-4யாரோ உங்களை பாக்கறாங்க! 
எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை 6 இதுவல்லவா வெற்றி!
நீங்கள் ஏழையா?பணக்காரரா
கம்பனை காக்க வைத்த கவிஞன்

 

35 கருத்துகள்:

  1. புதுமையான 3 in1கதையை படித்து மகிழ்ந்தேன் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. அட...! Two in One...! இல்லை இல்லை 3 in 1...!

    பெரியவரின் (வர்களின்) நிலை வருத்தப்படும்படி இருந்தாலும், அவர்(கள்) குணத்தால் உயர்ந்து விட்டார்(கள்)...

    முடிவில் சிறுமியும் அப்படியே...!

    முதல் ஐந்து வயது வரை வளர்க்கும் விதம், பின் வளரும் விதம் பொறுத்து தான் எல்லாமே...

    பாராட்டுக்கள்... இது போல் தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஐயா
    அற்புதமான, மனதை நெகிழ வைத்த சம்பவங்கள் கதையாகி கண்ணீரைக் கசிய வைக்கிறது. ஒரே நேரத்தில் மூன்று கதைகள் வித்தியாசமாக மிளிர்கிறது. மூன்று கதைகளும் தொடர்பு உடையதாக வடிவமைத்த தங்கள் திறமைக்கு வணக்க்கங்கள். பகிர்வுக்கு நன்றீங்க ஐயா..

    பதிலளிநீக்கு
  4. என்னதான் மூன்றில் ஒவ்வொன்று என்று நினைத்தாலும் நடு நடுவே கருப்பு வண்ணத்தில் எழுதப் பட்ட கதை சுவாரசியத்தை குறைக்கிறது என்று சொன்னால் கோபம் கொள்ள மாட்டீர்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா,இதில் கோபப் பட ஒன்றுமில்லை. தங்களுக்கு என்ன தோன்றியதோ எப்படி உணர்ந்தீர்களோ அதை சொல்லி இருக்கிறீர்கள். ஒரு மாறுதலுக்குத்தான் இதை எழுதினேன். என்னை திருத்திக் கொள்ள இது உதவும்

      நீக்கு
  5. வித்தியாசமான டூ இன் ஒன் கதை. இரண்டிலும் வெளிப்படும் தன்மானம் எனக்கு மிகப் பிடித்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. இதுவரை படித்திராத புதுமையான நடையில் சிறு கதை (கள்)....அருமை

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    முரளி(அண்ணா)

    கதையை படித்தபோது மனதை நெகிழவைத்து....மிக நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள்...வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
  8. புதிய முறையில் நன்றாக இருந்தது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  9. நல்ல வித்தியாசமான முயற்சி! சிறப்பாக இருந்தது! சேர்த்து படிக்கும் போது ஒரு சிறந்த கதையாக அமைந்தது! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. கதையும் நிஜ வாழ்க்கையும் ஒரே சமையத்தில்...அனுபவித்து. எழுதி இருக்கீங்க, நன்றி முரளி.

    பதிலளிநீக்கு
  11. 3-in-1 கதை(கள்). உண்மையாவே அருமையான முயற்சி. சுஜாதா கூட இதுபோல இரண்டு வெவ்வேறு காலத்தில் நடக்கும் கதைகள் சொல்லிக்கொண்டே வந்து கிளைமாக்ஸ் இல் தற்கால இளைஞன் வரலாற்று காலத்திற்கு செல்வது போல் ஒரு fiction எழுதியிருப்பார். எப்படி இத்தனை அலுவலுக்கு நடுவில் இப்படியெல்லாம் சிந்திக்கமுடிகிறதோ?! அருமை சார்!!

    பதிலளிநீக்கு
  12. ரெண்டு கதைதானே எனக்குத் தெரியுது? ஆனா... ரெண்டுமே ஒரு கரு தான்! அந்த ரெண்டும் வெவ்வேறு தளம் அவ்வளவுதான். ஆனால் ரெண்டையும் கலந்துகட்டி நீங்கள் கட்டிய முறை அழகு முரளி அய்யா. இயக்குநர் கே.பாலச்சந்தரின் பல படக்கதைகள் இரண்டு கிளைகளாக ஓடி ஒரு முடிவில் நிற்கும் வித்தியாசம் வித்தியாசமாச் சிந்திக்கிறீங்களேய்யா... ராகுல்ஜியின் “வால்காவிலிருந்து கங்கை வரை” 22சிறுகதைகள், தொடர்ச்சியாகப் படித்தால் ஒரு நாவல் வரும். அறிவியலை டிப்படையாகக் கொண்டது, மனித குல வரலாறு... அப்படி ஒரு நூல் தமிழ் மொழி பெயர்ப்பில் விற்பனையில் வரலாறு படைத்தது! அருமை! தொடருங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  13. அற்புதமான கதை(கள்)
    அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  14. பிச்சை, உதவி எல்லாம் வாங்கி நிலையை சமாளித்தால், கஷ்டம் வரும்போதெல்லாம் பிச்சை போடுபவர்கள், உதவியாளர்கள் எல்லாம் வந்து நிக்க மாட்டாங்க. கதையில் வரும் பாத்திரங்கள் அதை உணர்ந்தவர்கள் போலும்! கதைகளிலாவது ஓரளவுக்கு தன்மானமுள்ள எழைகளான இவர்கள் வாழ்கிறார்களே என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி!

    ஏழைச் சிறுமியென்ன? நாம் அனைவருமே பிச்சைக்காரகள்தாம், உதவி வாங்குபவர்கள்தாம்!

    என்ன எடுக்கும் பிச்சை, வாங்கும் உதவி எல்லாம் கொஞ்சம் உயர்தரமானது அவ்ளோதான்.

    எழுத்தாளரின் மனிதாபிமானம் கதைகளில் தெரிகிறது, முரளி! :)

    பதிலளிநீக்கு
  15. கதைக்குள் கதைக்குள் கதை அருமை ஐயா
    வித்தியாசமான முயற்சி
    வென்று விட்டீர்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  16. புதிமையான முயற்சி! 2 இன் ஒன்னை இணைத்துக் கொண்டு சென்ற விதம் மிக நன்றாக இருக்கிறது! நடையும் அருமை! மேலும் இது போன்ற முயற்சிகளைத் தொடருங்கள்! வாழ்த்துக்கள்! கதையின் கரு இரண்டிலுமே மனதைத் தொட்டதைச் சொல்லியே ஆகவேண்டும்!

    பதிலளிநீக்கு
  17. கதைக்குள் ஒரு கதை. நல்ல முயற்சி முரளி. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  18. நல்ல சிந்தனை.
    நல்ல கதைகள்.... வாழ்த்துக்கள் மூங்கில் காற்று.

    பதிலளிநீக்கு
  19. வித்தியாசமான சுவாரஸ்யமான
    அருமையான முயற்சி
    அதுவும் மிகச் சிறந்த கருத்துடன் இருந்தது
    கூடுதல் சிறப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  20. கற்பனை என்றாலும் கதைரசம் மிகுந்தது!

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895