என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 30 ஜூன், 2014

இப்படியும் சிலர்!

   இந்தப் படங்களோட தலைப்பு PRIORITIES. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றுக்கு   முக்கியத்துவம் தருவார்கள். இந்தப் படங்களில் உள்ளவர்கள் எதற்கு முன்னுரிமை தருகிறார்கள் என்று பாருங்கள். நகைச் சுவையாக இருந்தாலும் சிந்திக்க வேண்டிய விஷயம் மாதிரியும் இருக்கிறது. முக நூல் பக்கம் உலவுபவர்களுக்கு இது பழசு .  இருந்தாலும்  இன்னொரு முறை ரசிக்கலாம் .

முன்னுரிமை 








-----------------------------------------------------------------------



புதன், 25 ஜூன், 2014

பத்துக் கேள்விகள்! வெத்துபதில்கள்!

   
   
   மதுரைத் தமிழன் தொடங்கி வைத்த தொடர் பதிவு விளையாட்டு சுவாரசியமாக சென்றுகொண்டிருபதை அறிய முடிகிறது . என்னையும் பதில் சொல்ல அழைத்திருந்தார். நேற்றுதான் பார்த்தேன். மதுரைத் தமிழன் முத்துநிலவன் இருவரின் பதில்களைத் தவிர மற்றவர்கள் எழுதியதை இன்னும் படிக்கவில்லை. காரணம் அவர்கள் சொன்ன பதில்களின் சாயல் வந்து விடக் கூடாது என்பதற்காக . நாளை மற்றவர்களின் பதில்களையும் படித்து விடுவேன். 

      பதில் சொல்வதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. பாஸ் மார்க் வாங்கற அளவுக்கு ஈசியா கேள்வியை செட் பண்ண மாதிரி தெரிந்தாலும் உண்மையில் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனாலும் கேள்விகளுக்கு பதில் சொல்றது நம்மையும் ஒருத்தர் பேட்டி எடுத்தது மாதிரி  சந்தோஷமாத்தான் இருக்கு.  மதுரைத் தமிழனுக்கு நன்றி 

1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
  
   மற்றவர்களுக்கு சொல்லாமல் மனதுக்குள் மட்டும். ஏன்னா நூறு வயசு ஆனதுக்கு அப்புறமும் போகாம இன்னமும் உசுரை வாங்கரானேன்னு  நினைப்பாங்களே


2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

    எப்படி பேசினாலும் நம்மையே  குற்றவாளியாக மாற்றிக் காட்டும் பெண்களின் புத்திசாலித்தனத்தை .


3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?


   நரசிம்மராவிடம் கேட்டிருக்க வேண்டிய கேள்வி. அவர் இல்லை என்பதால் கேள்வியை மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைக்கிறேன். 


4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?


    கரண்ட் பில் குறையும் என்று திருப்திப் பட்டுக் கொள்வேன்.


5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன? 


 என் தந்தை என்ன சொன்னாரோ அதைத்தான் சொல்வேன்.( அவர் என்ன சொன்னாருன்னுதானே கேக்கறீங்க அவர்தான் ஒன்னும் சொல்லலையே  )


6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்? 


விவசாயிகள் பிரச்சனையை . அவர்கள் பிரச்சனை தீரவில்லை என்றால் நமக்கு பூவா பிரச்சனையாகி விடுமே.
   
    

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?


என்னை எதிரியாக நினைப்பவரிடம். அவர் ஆலோசனையை கேட்டு அதன் படி நடக்காமல் இருக்கலாம் அல்லவா. 


8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?


  சிரிப்பேன்.ரசிப்பேன்.பின்னர் ஏன் அப்படி சொன்னார் என்று யோசிப்பேன்.


9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?( வாழ்வின் நிறைவுப் பகுதியில் இருப்பவர்களாகக் கொள்க) 

   வருத்தமாக இருக்கிறது. இனி உங்கள் வீட்டுக்கு வந்தால் காபி கிடைக்காதே என்று. (நகைச்சுவையை எதிர்பார்த்து கேட்கப் பட்டதாக கொண்டதால் இந்த பதில்) 

உண்மையான பதில் :மனைவியுடன் வாழ்ந்த இனிமையான நாட்களை அவ்வப்போது நினைத்துக் கொள்ளுங்கள். தேவைகளை எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளப் பழகுங்கள். கணிசமான சேமிப்பை கையிருப்பை வைத்துக் கொள்ளுங்கள். 



10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?


     யாரையாவது (பேச்சுத்) துணைக்கு  அழைப்பேன். புத்தகம் படிப்பேன். இருக்கவே இருக்கிறது இணையம் துணையாக.

*******************************************************************

இதுவரை இந்த 10 கேள்வி பதில் தொடர்பதிவில் சிக்காதவர்கள் யாராக இருந்தாலும்  தொடரும்படி கேட்டுக் கொள்கிறேன்.



திங்கள், 16 ஜூன், 2014

நீயா?நானா?திருநங்கைகளும் பொதுமக்களும் -

சிறப்பாக பேசிய சுதா 
 நான் தினந்தோறும் அலுவலகம் செல்ல மின்சார ரயிலைத்தான் பயன்படுத்துகிறேன்.  ரயிலில் திருநங்கைகள் நடமாடுவதைக் காண முடியும். அதற்கு முன்னர் அவர்களைப் பற்றி அவ்வளவாக சிந்தித்ததில்லை. இவர்கள் எங்கு தங்குவார்கள்?  இவர்கள் எல்லோருமே இப்படித்தான் இரந்து வாழும் சூழ் நிலையில் இருக்கிறார்களா? சமுதாயத்தில்  இவர்களை நாம் ஏன் ஏளனமாகப் பார்க்கிறோம். ?ஆண்கள் பெண்கள் என்று தனித்தனியான  வசதிகளில் கழிவறை வசதி உட்பட பிற வசதிககள் இவர்களுக்கு  கிடைக்கிறதா?  என்ற கேள்விகள் எனக்கு இவர்களைப் பார்க்கும்போதெல்லாம் எழுவது உண்டு.
   இவற்றில் சிலவற்றிற்கான விடைகள் எனக்கு கடந்த வார(08.07.14) நீயா நானாவில் கிடைத்தது.

    விளம்பரத்திற்காகவோ அல்லது வியாபாரத்திற்காவோ இந்த நீயா நானா நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி இருந்தாலும் அதைபார்த்தவர் நெஞ்சில் சின்ன மாற்றத்தை ஏற்படுத்தி இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றே  நினைக்கிறேன். மாற்றுத் திறனாளிகளை விட அரவாணிகளின் எண்ணிக்கை  மிகக் குறைவு.  அவர்களின் நியாயமான உரிமைகள் பற்றியோ தேவைகள் பற்றியோ யாரும் கவலைப்படுவதில்லை. தமிழ் சினிமாக்களில் அதிகம் கேலி செய்யப்படுபவர்களில் திருநங்கைகளுக்கு  இடம் உண்டு.. வடிவேலுவின் "அவனா நீ" என்ற வசனம் மிகப் பிரபலம்..அவர்களை ஏளனமாக பார்த்தே பழக்கப் பட்டவர்களாக நாமும் நமது சமுதாயமும் இருக்கிறது.

     அவர்கள் மிரட்டிக் காசு பறிப்பதையும் பாலியல் தொழில் செய்வதையும் பலரும் குறை கூறுவது வழக்கம். அவர்களை ஒட்டு மொத்தமாக விலக்கி வைத்ததே இதற்கு காரணம் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருநங்கைகள் சொன்னதில் உண்மை இருந்தது. திருநங்கைக்குவீ டு வாடகைவிட்ட ஒருவர் ," அவர்களை  இந்த சமுதாயம் ஒதுக்கி வைத்திருகிறது அல்லவா அதற்கு தண்டனையாக காசு கொடுங்கள் என்று அவர்கள் கேட்பது நியாம்தான்" என்றார். அதுவும் உண்மைதானே!

   திருநங்கைகளுக்கு வாடகை வீடு கிடைப்பது எவ்வளவு கடினம் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. "குடிசைப் பகுதிகளை  சேர்ந்தவர்கள்தான் எங்களுக்கு வாடைக்கு இடம் கொடுக்கிறார்கள். அவர்களில் ஒருவராக மதிக்கிறார்கள் மத்திய தரப்பினரோ அல்லது   உயர் தரப்பினரோ எங்களை மனிதர்களாகக் கூட நினைப்பதில்லை என்று மூத்த திருநங்கை ஒருவர் கூறியது  சமுதாயத்தை ஓங்கி அறைந்தது போல் இருந்தது. உண்மையில் வசதியுள்ள உயர் பின்னணயில் உள்ள குடும்பத்தில் பிறந்திருந்தாலும் திருநங்கையாய் இருந்தால் பிரிந்து வந்து இவர்களுடன்தான் வசிக்கிறார்கள்.இங்கே சாதி வேறுபாடு இல்லை என்றார் எழுத்தாளர் மாரி செல்வராஜ் 

   இவர்கள் பெண்ணாக வாழவே பிரியப் படுபவர்கள். பிறப்பால் ஆண்களாய் இருந்தாலும் பெண்மை உணர்வுகள் இவர்களை ஆட்கொள்ள அதை வெல்ல இயலாமல் சமுதாயத்தின் ஏளனத்தையும் பொருட்படுத்தாது தன்னைப் போன்றவர்களோடு இணைந்து ஆண்களாய் இருப்பதற்கான உடல் அடையாளங்களை  இழப்பதற்கு  முடிவு செய்து அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். அதை ஒருதிருநங்கை விவரித்த விதம் உண்மையில் உருக்கமானது. நிகழ்ச்சியில்திருநங்கை சுதா பிறப்பால் பெண்ணாகப் பிறந்தவர்களுடைய பெண்மை உணர்வுகளுக்கு எங்கள் உணர்வுகள் கொஞ்சமும் குறைந்தது அல்ல என்பதை உணர்த்தவே பிரயத்தனப் படுகிறார்கள்.என்பதை தெளிவாகவும் நகைச்சுவையாகவும் எடுத்துக் கூறினார்.

    தங்களை திருநங்கை என்று அடையாளம் அறியாமல் ஒரு பெண் என்றே நினைத்து  தன்  பக்கத்தில்  ஒரு பெண் அமர்ந்தால் .மிகுந்த மகிழ்ச்சி அடைவோம் என்றும் பேசினால் இன்னும் அதிக மகிழ்ச்சி அடைவோம் என்றும் ஒரு ஆண் தங்களை பெண் என்று நினைத்து விட்டால் அந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை  என்றும் குறிப்பிட்டது அவர்களது உணர்வுகளை விளக்கி விட்டது . இந்த சமுதாயம் தங்களை பெண் என்றுதான் நம்பவேண்டும் நினைக்கவேண்டும் நடத்த வேண்டும் என்பதே அவர்கள் முக்கிய எதிர்பார்ப்பு.முதலில் பெற்றோர் அவர்களைப் புரிந்து கொள்ளவேண்டும். இத்தகைய மன உணர்வுகளுடன் பிறந்தது அவர்களுடைய தவறு அல்ல.


   மாற்றுத் திறனாளிகளைக் கூட பெற்றோரும் குடும்ப உறுப்பினர்கள் வெறுப்பதில்லை.ஆனால் இவர்கள் தங்கள் குடும்பத்தவர்களாலேயே வெறுக்கப் படுகிறார்கள் என்பது வேதனை..  திரு நங்கைகள் தங்கள் குடும்பத்துடன் வசிப்பது அபூர்வம். இப்போது மாற்றம் வந்திருகிறது. சில  திருநங்கைகள் தன் குடும்பத்தினருடன் வசித்து வந்ததை நிகழ்ச்சியில் அறிய முடிந்தது. உண்மையில் சமுதாயத்தில் இதுஒரு சிறிய முன்னேற்றம் என்றுதான் கூற வேண்டும்.
  இதில் கலந்து  கொண்ட திருநங்கைகள் படித்தவர்கள். ஒரளவிற்கு நல்ல நிலையில் இருப்பதாக தெரிகிறது. இவர்களின் அறிவிலும்  ஆற்றலிலும் மற்றவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தினார்கள்.ஆனால் பலர் மிக மோசமான நிலையில்தான் இருக்கிறார்கள்.  அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் அமையவேண்டும் 

   சமீபத்தில் இவர்களை மூன்றாவது  பாலினமாக அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதி மன்றம் .பாலின அடிப்படையில் பாகுபாடுகள்  காட்டப்படுவதை உரிமைகள் மறுக்கப்படுவதையும் ஏற்க முடியாது என்று கூறிய நீதிமன்றம் அவர்களை இதர பிற்பட்டவர் பிரிவில் சேர்த்து சலுகைகள் வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது . பிரச்சனைகளை கவனிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டு அவர்களின் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தீர்வுகளை அமுல்படுத்த வேண்டும் என்றும் நீதி மன்றம் கூறியுள்ளது ..
என்னதான் சட்டம் இயற்றப்பட்டாலும் சமூக ரீதியான அங்கீகாரமே இவர்களை மகிழ்விக்கும்வாழ்க்கையை இடையூறின்றி நடத்த வழி வகுக்கும்.
கல்வி உரிமை சட்டத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் பிரிவில் இவர்களும் இணைக்கப் பட்டுள்ளார்கள். இதன் மூலம் தனியார் பள்ளிகளில் சேர்வதற்கு இந்தப் பிரிவில் வாய்ப்பு அளிக்க வழிவகை செய்யப்படுள்ளது.  உண்மையில் இவர்களே தங்களை  அடையாளம் கண்டு கொள்வதே பதின்ம வயதின் பிற்பகுதியில்தான்.இந்த சூழ்நிலையில் இவை எப்படி இவர்களுக்கு உதவும் என்பது தெரியவில்லை.
     ஏற்கனவே அரவாணிகள் நல வாரியம் ஒன்று இருப்பதாக ஞாபகம். அது என்ன செய்தது அல்லது செய்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை..
   தற்போது சென்னை மாநகராட்சி இவர்களுக்கென காப்பகங்கள் அமைக்க இருப்பதாக ஒரு செய்தியை படித்தேன். அவை  ஓரளவிற்கு இவர்களுக்கு உதவக் கூடும்.

   பெற்றோர்களுக்கும் சமுதயத்திற்கும் இவர்களை எப்படி கையாள்வது என்ற விழிப்புணர்வை  அரசுதான் ஏற்படுத்த வேண்டும்.. மருத்துவ ரீதியான ஆலோசனைகளும்  பாதுகாப்பும் வழங்க முன் வரவேண்டும்
இவற்றைப் பற்றியும் நீயா நானாவில் விவாதித்திருந்தால் நிகழ்ச்சி இன்னும் பயனுடையதாக இருந்திருக்கும் .

***************************************************************************
திருநங்கைகளின் பரிதாப நிலை ஏற்படுத்திய பாதிப்பில் விளைந்த என்னுடைய கவிதை .
              
               நாங்கள் யார்?  

                    நாங்கள் யார்?
                    எங்களுக்கே ஐயமுண்டு!

                    நாங்கள் 

                    பாலினம் அறியாத 
                    படைப்புப் பழுதுகள்!

                    வேராய் மாற முடியாத 
                    வெற்று விழுதுகள்! 

                    ஆணாய்ப் பிறந்தாலும்

                    பெண்மை உணர்வுகளால்
                    பேதப்  பட்டுப்போனவர்கள்!

                    பெற்ற அன்னையும்
                    வெறுத்ததொதுக்கும் 
                    பெரும்பாவம் செய்தவர்கள்! 

                    அலிகள் என்று 
                    உங்களால் கேலி செய்யப்படும் 
                    கேள்விக் குறிகள்!

                    கடுங்குரலும் கடுமுடியும் 
                    காட்டிக் கொடுக்க 
                    கழிப்பறைக்குள் கூட 
                    அனுமதிக்கப்படாத 
                    அருவெறுப்பு பிண்டங்கள்

                    எங்களுக்கும்  ஆசைதான்!  
                    கூடப் பிறந்தவர்களுடன் கூடி வாழ,
                    அன்னையின்  மடியில் 
                    அழுதபடி தலை சாய்க்க, 
                    தங்கையின்  பூப்பெய்தலில்
                    பூரிப்படைய, 
                    அண்ணனின் திருமணத்திற்கு 
                    அலங்காரமாய்ச் செல்ல!

                    என்ன செய்ய?
                    தெருவோரம்  நின்றால்கூட 
                    துரத்தப்படும் 
                    தெருநங்கைகளான  
                    திருநங்கைகள் ஆகிவிட்டோமே! 
                    

                    கடவுளாய் இருந்தால் 
                    கை கூப்பி தொழுகிறீர்கள்!
                    மனிதராய்ப் பிறந்தால் 
                    கைகொட்டி சிரிக்கிறீர்கள்! 

                    ஆனாலும் 
                    நீங்களெல்லாம்  பெருந்தன்மை 
                    கொண்டவர்கள்தான்! 
                    ஒரிலக்க எண்களில் 
                    மிகப்பெரியதை எங்களுக்கே 
                    சொந்தமாக்கி இருக்கிறீர்களே! 

*******************************************

தொடர்புடைய கவிதை 
காகிதப் பூக்கள்
 .

ஞாயிறு, 8 ஜூன், 2014

இறைவனைத்தான் கேட்கின்றேன்!

 
           
ஜூனோ எங்கள் வீட்டில் வளர்ந்த செல்ல நாய். நீங்கள் படத்தில்  லேப்டாப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே அது ஜுனோதான். (பின்னணியில் உள்ள கட்டில் மற்றும் அறை மட்டும் நான் சேர்த்தது) எங்கிருந்தோ வந்தாலும் மனதோடு தங்கி விட்டது.தொடக்கத்தில் ஜுனோவை வளர்ப்பதில் ஆர்வம் இல்லாவிட்டாலும் மெள்ள மெள்ள எங்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டு விட்டது. முந்தைய இரவு வரை நன்றாக இருந்த ஜூனோ அடுத்த நாள் இறந்து போகும் என்று கனவிலும் நினைக்கவில்லை. நாக்குநீலமாகி இறந்து போன ஜூனோவின் இறப்பில் ஒரு மர்மம் இருந்தது.அந்த மர்மம் ஏற்படுத்திய பாட்டைத்தான் செல்ல நாயின் இறப்பு ஒரு மாதம் பரபரப்பு என்ற தொடர் பதிவாக எழுதினேன்   . அந்தப் பதிவிற்கு கிடைத்த வரவேற்பே  நான் இரண்டரை ஆண்டுகளாக  தொடர்ந்து பதிவுகள் எழுதக் காரணமாக இருந்தது.
    ஜூனோ இவ்வுலகத்தை பிரிந்தும்  மூன்று ஆண்டுகள் ஆகி விட்டன. அது புதைக்கப் பட்ட இடத்தில் பல செடிகள் முளைத்து மடிந்து  போய் விட்டது.ஆனால் இன்றும் அதன் நினைவுகள் மனதில் செடிகளாய் முளைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஜுனோவைப் பற்றி பேசாமல் இருக்க முடிவதில்லை.
   ஜுனோவிற்காக ஒரு இரங்கல் கவிதை எழுதினேன். ஜூனோவின் குறும்புகள்  அதன் பக்கம் திரும்ப வைத்தது. அதன் விளையாட்டுக்கள் எங்களை வலைபோட்டு இழுத்தன. இந்தக் கவிதையை நான் முனைந்து  எழுதவில்லை ; புனைந்தும் எழுதவில்லை. உணர்வுகளில் நனைந்துதான் எழுதினேன்.


                          சாவெனும் வடிவம் கொண்டு 
                                சடுதியில்  காலன் வந்து  
                          தாவென   உந்தன் உயிரை 
                               தட்டியே பறித்துச் சென்றான் 
                          போவென அவனைச் சொல்ல 
                                பூமியில் யாரும் இல்லை      
                          ஓ வென அலறி நின்றோம்        
                                ஜூனோ உன் பிரிவால் நாங்கள்

                           மடிமேல் அமர்ந்துகொள்வாய் 
                                   மையமாய்  வந்து நிற்பாய் 
                           படிமேல் ஏறிச் செல்ல 
                                  பக்குவமாய் காலை வைப்பாய்
                           அடிமேல் அடிதான்  என்று 
                                  அழுத்திச் சொன்னால் போதும் 
                           படிதாண்டிச்  செல்ல நீயும் 
                                      பயந்தது போலே நிற்பாய் 


                           காகத்தைப் பாரத்தால் உடனே 
                                  கத்தி அதைத் துரத்திடுவாய் 
                           தேகத்தை விதம் விதமாய்
                                    வளைத்து நீ உறங்கிடுவாய் 
                           சோகத்தை விதைத்துவிட்டு 
                                 சொல்லாமல் கொள் ளாமல் 
                           மேகத்தில் உதித் தெழுந்த 
                                    மின்னலாய் ஏன் மறைந்தாய் ?

                           உரத்த குரலில் எங்கள் பேச்சு 
                                  சண்டையாய்த் தெரியும் உனக்கு 
                           சிரத்தை ஆட்டி ஆட்டி 
                                 தடுத்திட ஓடி வருவாய் 
                           பெருத்த  குரலைக் கொண்டு 
                                பேரொலியும் எழுப்பிடுவாய் 
                           வெறுத்த மனங்களையும் 
                                    வெற்றிகொள் வாயே ஜூனோ 

                           எம்பிக் குதித் திடுவாய் 
                                  எட்டி நீ பார்த்திடுவாய் 
                           கம்பிமேல் ஏறிச் செல்வாய்
                                  கண்டதை கடித் திடுவாய்
                           தும்பி பிடித்து வருவாய் 
                                  துணிகளை கிழித்து விடுவாய் 
                            நம்பித்தான் ஏமாந் தோமே
                                  நல்லபடி இருப்பாய் என


                            அழகிய பொம்மை போலே 
                                  அனைவரையும் கவர்ந் திழுப்பாய் 
                            பழகிய நண்பன் போலே 
                                   பக்கத்தில் படுத் திருப்பாய் 
                            மெழுகெனவே உருக வைப்பாய் 
                                     மென்மேலும் குறும்பு செய்வாய் 
                             அழுகையே நிற்க வில்லை 
                                     ஐயோ ! நான் என்ன சொல்ல 

                             இரவில் உறங்குமுன்னே 
                                    இல்லத்துள் தானே இருந்தாய்?
                             அரவம் தாக்கி உந்தன் 
                                    ஆருயிர் போன தென்ன?
                             அரவம் கேட்கவில்லை 
                                    அறியாமல் இருந்து விட்டோம் 
                             உருவம் குலை  யாமல் நீ
                                     உறங்குவது போல் கிடந்தாய்  

                             தென்பட்ட இடமெல்லாம்நீயே
                                    திரிந்தலைந்த  இடமன்றோ
                             கண்பட்டுப் போகு மென்று 
                                   கனவிலும் நினைக் கவில்லை 
                             மென்பட்டு மேனி இன்று 
                                     மண்மூடும் காட்சி கண்டு 
                              புண்பட்டுப் போனதம்மா நெஞ்சம் 
                                        புலம்பியதை நிறுத்தவில்லை

                              கூவி நான் அழைக் கின்றேன்
                                     குதித்து நீ வரு வாயா?
                              தாவிவந் தமர்ந்து மடியில் 
                                      கொஞ்சத்தான் சொல்வாயா?
                              ஆவி பிரித்தெடுத்து உன்னை 
                                       அழைத்துப் போனதந்த விதியா?
                              பாவி இறைவன் அவன் 
                                        பாதகம் செய்தது சரியா? 

                              கண்ணயர்ந்த பின்பு கூட 
                                     கனவினிலும் நீயே வந்தாய் 
                              மன்னுயிர்கள் கோடி இங்கு 
                                     மகிழ்வாய் வாழ்ந்திருக்க 
                              உன்னுயிர் வாழ்வதற்கா 
                                       உலகத்தில் இடம் இல்லை?
                              எண்ணியே நான் பார்க்கின்றேன் 
                                     இறைவனைத்தான் கேட்கின்றேன்  


*********************************************************************************** 

 உண்மை சம்பவம் 

செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு