என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 30 நவம்பர், 2014

நீயா நானா? படிப்பு வராதது குற்றமா?

    கடந்த வாரம் நீயா நானாவில் படிக்கப் பிடிக்கவில்லை என்று சொல்லும் மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் கலந்து கொண்டனர். படிப்பு வாரதவர்கள் ஒரு பக்கம்; அவர்களை காலையில் படி கடும்பகல் படி, மாலையில் படி , இரவு படி என்று படியாய்  பாடாய் படுத்தும் பெற்றோர் மறுபக்கம்.
   முந்தைய தலைமுறையினரைப் போல் அல்லாமல் இத் தலைமுறைப் பெற்றோர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது வரவேற்கத் தக்கதுதான் என்றாலும் கல்வியை விட்டால் நடுத்தர குடும்பத்தினருக்கு நாதியில்லை. அதிக மதிப்பெண் பெறாவிட்டால் வாழ்க்கையே அவ்வளவுதான்.  என்றெல்லாம் சொல்லி குழந்தைகளை வளர்க்கிறார்கள். அவர்கள் கல்வி என்று குறிப்பிடுவது (நினைத்துக் கொள்வது)  10, +2 வில் அதிக மதிப்பெண் பெற்றுமருத்துவம் மற்றும் இஞ்சினீரிங்கில்  இடம் பிடிப்பது) மட்டுமே.
    படிப்பு எதற்கு? உடல் உழைப்பின்றி சம்பாதிப்பதற்காகவே கல்வி என்ற மனோபாவமே காணப்படுகிறது. நாம் மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்தோம். நம் பிள்ளைகளுக்கு அந்த நிலை வரக் கூடாது எனபது பெற்றோர் உறுதியாய் இருக்கிறார்கள்.  கல்வியில் வெற்றி பெறாதவன் மட்டும்தான் உடலுழைப்பு பணிகளை செய்ய வேண்டும் என்று எண்ணம் உடையவர்களாக இருக்கிறார்கள்.கல்வி அறிவு பெற்றவன் (மதிப்பெண்முறைப்படி)   மற்றவர் களைவிட உயர்ந்தவன். இந்த மனப்பாங்குதான் தங்கள் குழந்தைகளை வருத்தியாவது படிக்க வைத்து விடவேண்டும் என்று முழு மூச்சாக கொண்டு செயல்படுகிறார்கள் . 
  மிக சிறப்பாகப் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும்  என்று நம்புகிறார்கள். அதற்காக தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் குழந்தைகளை தயார் செய்வதே தமது கடமை என்றும் கொள்கிறார்கள்.  அப்படி செய்ய முடியாவிட்டால் தங்கள் கடமையில் இருந்து தவறி விட்டதாக நினைக்கிறார்கள். இதையே நீயா நானா நிகழ்ச்சியும் வெளிபடுத்தியது.
   ஆனால் படித்தவர்களுக்கு லட்சக் கணக்கில் சம்பளம் தந்து வேலை தருகிற பெரும்பாலான முதலாளிகள் படிப்பில் சராசரியாக இருந்தவர்களாகவே வரலாறு கூறுகிறது. எழுதப் படிக்கத் தெரியாத அக்பர்தான்  நிர்வாகத்திறன் மிக்க மன்னனாக விளங்கினார் என்பது யாருக்கும் தெரியாதது அல்ல. 
        மருத்துவமனையில் நர்சின் கையில் இருந்து விடுபட்டு  நேரே நர்சரி பள்ளிக்கு செல்லக் கூடிய சூழல் இன்று உள்ளது. மொத்த வாழ்க்கையில் கிட்டத்தட்ட ஐந்தில்  ஒரு பங்கு பகல் வாழ்க்கை வகுப்பறையில் செலவழிக்கப் படுகிறது. வகுப்பறைக்குள் அத்தனையும் கற்றுவிட முடியும்  என்ற நம்பிக்கை எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. வகுப்பறை தாண்டி கற்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளன.
    படிப்பு வராதவர்களை தண்டசோறு என்று கூறுதல், 'அவன் மட்டும் எப்படி நல்லா படிக்கிறான்' என்று பிற மாணவர்களோடு ஒப்பிடுதல் போன்றவை எல்லாம் நடுத்தர குடும்பங்களில் சகஜம் என்றாலும் அதிக பட்சமாக  "நீ எல்லாம் எதுக்கு இருக்க? செத்துப் போ என்றுகூட  சொல்வார்களா? ஆச்சர்யமாகத் தான் இருந்தது . இல்லை இல்லை அதிர்ச்சியாகவும் இருந்து. அவர்கள் மனதார அதை சொல்லியிருக்க மாட்டார்கள்  என்றாலும் குழந்தைகளின் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை எப்படி உணராமல் போனார்கள்? ஒரு வேளை குழந்தை விபரீத முடிவு எடுத்தால் என்ன ஆவது? (இது போன்று நிகழ்ந்தால் முந்தைய தினம் ஆசிரியர் திட்டினார் அதனால்தான் இப்படி நேர்ந்தது ஆசிரியர்களை மாட்டிவிட்டு விடுவார்கள்)
   ஆசிரியர்கள் சார்பாக பேசிய ஒருவர் இவர்களை படிக்க வைக்க எடுக்கும் முயற்சிகளையும் அதில் ஏற்படும் தோல்விகளையும் தங்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்களையும் விவரித்தார். ஆனால் இவை பெரும்பாலும் அரசு பள்ளி மாணவர்களுக்கே பொருந்தும்.
   முன்பெல்லாம் மாணவனை கண்டிக்க ஆசிரியருக்கு உரிமை இருப்பதாக பெற்றோர் கருதினர். அடித்தால் கூட  பெற்றோர் அதை கண்டு கொள்ள மாட்டார்கள். மாணவர்கள் படித்தாலும் படிக்காவிட்டாலும் ஆசிரியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் இப்போது அப்படி அல்ல. தேர்வு முடிவுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அனால் அப்போது அனைத்து வகை மாணவர்களும் அரசு பள்ளிகளில் இருந்தனர். இப்போது சராசரிக்கும் கீழே உள்ள மாணவர்களை தேர்ச்சி வைப்பதற்கு ஆசிரியர்கள் போராட வேண்டி இருக்கிறது. அப்போது படிக்க வைக்க  சாம,தான,பேத தண்ட முறைகளை கையாள முடியும் . ஆனால் தற்போது முதல் இரண்டு முறைகள் மட்டுமே கையாளவேண்டும் .

சாமம் - இன்சொல் கூறல்சமாதானம் பேசுதல்
தானம் - தானம் கொடுத்து வழிக்கு கொண்டு வருதல்
பேதம் - ஒதுக்கி வைத்தல்மிரட்டல்
தண்டம் - தடியால் அடித்துக் கனிய வைத்தல் தண்டனை கொடுத்தல்

   ஆனால் இவற்றை ஆசிரியர் செய்ய முடிவதில்லையே தவிர பெற்றோர் இந்த நான்கு முறைகளையும் பின்பற்றுகிறார்கள். குறிப்பாக அப்பாக்களை விட அம்மாக்கள் கொடுக்கும் டார்ச்சர் அதிகமாகவே இருப்பதாக தெரிகிறது .இதையே  நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் பேச்சு உறுதிப் படுத்துவதாக அமைந்தது. இவர்கள் பயன்படுத்தும் உத்தி செண்டிமெண்ட் தாக்குதல். அது  இப்படி இருக்கும் 'நாங்கதான் கஷ்டப்பட்டோம்; நீங்க கஷ்டப் படக் கூடாது. மத்தவங்களை விட நாம தாழ்ந்து போய்டக் கூடாது. 'உங்க வயசுல எங்களுக்கெல்லாம் சரியான சாப்பாடு இல்ல, துணி மணி இல்ல, செருப்பு இல்ல, புத்தகம் நோட்டு வாங்கிக் கொடுக்க ஆள் இல்லை . எல்லா வசதியும் செஞ்சும் ஏன்படிக்க மாட்டேங்கறீங்க"
    'படிக்கலைன்ன பிச்சைதான் எடுக்கணும்' 'மாடுதான் மேய்க்கணும்' 'மூட்டைதான் தூக்கணும்' என்றெல்லாம் சொல்வது  அந்த வேலைகளை மட்டும் இழிவு படுத்துவது மட்டும் அன்று. சொல்வது கல்வியை இழிவு படித்துவதாகவே கருதுகிறேன்.
     10 ஆம்வகுப்பில் நானூற்று இருபது மார்க் வாங்கிய பெண்ணை அவர் தந்தை குறைபட்டுக் கொண்டதை என்னவென்பது? அந்தப் பெண்ணுக்கே அது குறைவான மார்க்தான் என்ற எண்ணத்தை ஆழப் பதித்து ஒரு தாழ்வு  மனப்பானமையை அந்தத்  தந்தை உருவாக்கி இருந்தது வேதனைக்குரியது
  இந்த மனநிலையை வளர்த்ததில் பெரும்பங்கு மெட்ரிக் பள்ளிகளையே சாரும். 80 சதவீதத்திற்கு குறைவாக எடுத்தவர்கள் கூட சாரசரிக்கும் கீழே என்றுதான் மதிப்பிடப் படுகிறார்கள். சராசரியாக இருந்தால் பள்ளியை விட்டு அனுப்பி விடுவது வழக்கம். சராசரிக்கு குறைவாக உள்ளவர்களுக்கு அரசு பள்ளிகள்தான் புகலிடம் கொடுக்கின்றன. இதை சிறப்பு விருந்தினர் கவிஞர் வெண்ணிலா குறிப்பிட்டார்.
     ரிசல்ட் அதிகரிக்க வேண்டும் என்ற அழுத்தம்  காரணமாக மெட்ரிக் பள்ளிகள் பின்பற்றும் அதே நடை முறையை அரசு பள்ளிகளும் பின்பற்றுகின்றன. காலை  மாலை சிறப்பு வகுப்புகள் மூலம் அவர்களை மனப்பாடம் செய்யவைக்கும் பணியில் ஈடுபடவைக்கின்றன. திரும்பத் திரும்ம ப்ளூ பிரிண்ட் மாதிரிதேர்வுகள்  மூலம் அனிச்சையாக விடை அளிக்க பயிற்சி அளிக்கப் படுகின்றன. பாடம் என்று ஒன்று இருப்பதே தேர்வுக்காகத்தான். புத்தகத்தை படிக்கத் தேவை இல்லை.புரிந்து கொள்ளத் தேவை இல்லை. கேள்வி பதில்கள் திரும்பத் திரும்ப படிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தப் படுகிறார்கள்.
    இதில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருமே கேள்வி பதில் படிக்க கஷ்டமா இருக்கு பதில் பெரிசா இருக்கு. அந்தக் கேள்வி புரியல. என்றே பேசினர். இதிலிருந்து புரிந்து கொள்ளக் கூடியது ஒன்று மட்டுமே. கேள்வி பதில்தான் படிப்பு என்ற எண்ணமே ஆழமாக விதைக்கப் பட்டுள்ளது. பாடப் புத்தகம் என்று ஒன்று இருப்பதாகவே மாணவர்களுக்கு நினைவில்லை.
   நிகழ்ச்சியில் நான் கவனித்த மற்றொரு முக்கியமான விஷயம் பங்கேற்ற பெற்றோர் ஒருவர் கூட தன் குழந்தைகளுக்கு படிப்பு வராததற்கு காரணம் அவர்கள் படிக்கும் பள்ளி என்றோ கற்பிக்கும் ஆசிரியர் என்றோ கூறவில்லை. தன் குழந்தைகள் படிக்காததற்கு காரணம் தன் குழந்தைகளின் கவனக் குறைவே காரணம் என்று நம்புகிறார்கள். மாணவர்கள் கூட தங்கள் ஆசிரியர் நடத்தும் பாடம் புரியவில்லை என்று குற்றம் சாட்டவில்லை. ஏனெனில் அவர்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகள் புகழ்( அதிக பணம் பறிக்கும்) பெற்ற தனியார் பள்ளிகளாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதே அரசு பள்ளியில் அந்த பிள்ளைகள் படித்திருந்தால் ஆசிரியர் சரியாக சொல்லிக் கொடுக்க வில்லை, பள்ளி சரி இல்லை. என்று சொல்லி இருப்பார்கள். தனியார் பள்ளி நிர்வாகம் உங்கள் குழந்தை படிக்காததற்கு காரணம் நீங்கள்தான் என்று தங்களை திட்டினாலும் ஏன் அடித்தால் கூட பொறுத்துக் கொள்வார்கள் போலிருக்கிறது.

   எழுத்தாளர் இமயம் அவர்கள்  சொன்னது நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்தது. உண்மையில் சாதாரணமாக கற்றவர்களே பெரிய மாற்றங்களுக்கு  காரணங்களாக இருந்திருகிறார்கள். அதனால் அதிகம் படிப்பு வராதவர்கள் கவலைப் பட வேண்டியதில்லை.படிப்பு வராதது குற்றமும் இல்லை. அவர்கள் வாழத் தகுதி அற்றவர்களாக நினைத்துக் கொள்ளத் தேவையும்  இல்லை என்று சொன்னதை பெற்றோர் மனதில் கொள்ளவேண்டும்.
    பதின் பருவத்தில் படிப்பதில் எவ்வளவு கவனச் சிதறல் இருக்கும் என்பதை எடுத்துரைத்தார் உளவியல் மருத்துவர் ஷாலினி. அந்த வயதிற்குரிய இயல்பான சந்தோஷத்தையும் அனுபவித்துக் கொண்டு படிக்கவும்  தன்னை தயார் படுத்திக் கொள்ள முடியும் என்றார். விடியற்காலையில் தூக்கக் கலக்கத்தில் படிப்பதால் பயன் ஏதுமில்லை என்பதை  அழுத்தம் திருத்தமாக ஆய்வின் அடிப்படையில் கூறியது சிந்திக்க வைப்பதாக இருந்து.
    சிறப்பு விருந்தினர் ஞானி குறிப்பிட்டார் 'இன்றைய கல்விமுறை மதிப்பெண் பெறுபவர்களை உருவாக்குகிறதே தவிர தகுதியானவர்களை உருவாக்கவில்லை. அதனால்தான் வளாகத் தேர்வில் தேர்ச்சி பெற முடிவதில்லை' என்று கல்வி முறையை குறை கூறினார்.
    கல்வியாளர்கள் அறிஞர்கள்  வல்லுனர்கள் பலரும் கல்வி முறையை தவறு என்று கூறுகிறார்களே தவிர சரியான முறை என்ன? அதை எப்படி நடைமுறைப் படுத்துவது என்பதை சரியாக யாரும் சொன்னதாகத் தெரியவில்லை.  மாற்று முறை  சரியாக அமையாததால் மதிப்பெண் முறை கோலோச்சுகிறது. ஆனால் மாற்றங்களும் கற்றலை ஆர்வமிக்கதாக ஆக்க பரிசோதனை முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
    அரசு பள்ளிகளில் இன்று பயன்படுத்தடும்  1- 4 வகுப்புகளுக்கு செயல் வழிக்கற்றல் ABL,( Activity Based learning)  5 ம் வகுப்புக்கு SALM, 6- 8 வகுப்புகளுக்கு ALM( Active Learning Methodology) படைப்பாற்றல் கல்வி பயன்படுத்தப் படுகிறது.  CCE (Continuous and Comprehensive Evaluation)என்ற தொடர் மற்றும் முழுமை  மதிப்பீட்டு முறை பின்பற்றப் படுகிறது. உண்மையில் மிக அற்புதமான இந்த முறைகளை  பெற்றோரும் விரும்பவதில்லை. ஆசிரியர்களும் விரும்புவதில்லை.  அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு இவை உதவாது என்று கருதப் படுவதே இதற்குக் காரணம் .
( இம்முறையில் மாணவர்கள் தங்கள் வருகையை தாங்களே குறித்துக் கொள்ளலாம் . அதற்கு சுய வருகைப் பதிவேடு என்று பெயர்.தினந்தோறும் வானிலை எப்படி இருக்கிறது என்பதை காலநிலை அட்டவணை மூலம் குறிப்பிடப்படுகிறது. இன்னும் பல ஆர்வமூட்டும் செயல்பாடுகள் உள்ளன இவற்றைப் பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்.)
   எந்தப் பாடமாயினும் கடினமான பாடங்களை கற்பிக்க ஆசிரியர்களும் முடிந்தவரை பல்வேறு சுவாரசியமான உத்திகளை கையாளவேண்டும்.(உதாரணம்: தனி ஊசல் என்ற பாடத்தை கற்பிக்க நான் பயன்படுத்திய உத்தி

   கல்வி என்பது குழந்தையின் அனைத்து ஆளுமைகளை வளர்ப்பதாக அமைய வேண்டும்.வகுப்பறையில் அடக்கி ஒடுக்கி வைத்து ஆசிரியர் சொல்வதை மட்டும் கேட்டு திருப்பி சொல்வது எழுதுவது கல்வி அல்ல.நல்ல பண்புகளை நல்ல குடிமக்களை உருவாக்குவதே சிறப்பான கல்வி.
  தெளிவாக  சிந்திக்க வைக்கின்ற ஆற்றலையும் சிக்கலான சூழ்நிலையில் திடமான முடிவு எடுக்கக் கூடிய பண்பையும் சமூக மேம்பாடு தனி மனித நடத்தையில் உள்ளது என்பதை உணரவைக்கக் கூடியதாகவும் கல்வி அமைய வேண்டும்.
     அறிவியலும் கணிதமும் கற்றால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும்; பிற பாடங்கள் பட்டம் பெற உதவுமே தவிர வாழ்க்கை வளம் பெற  உதவாது என்ற எண்ணத்தை மாற்றவேண்டிய பொறுப்பு அரசு, சமூகம் இரண்டுக்கும் உள்ளது.
வாழ்க்கைக்கு கல்வி முக்கியம்தான். கல்வி மட்டுமே வாழ்க்கை அல்ல.
ஒரு நல்ல தலைப்பை எடுத்து விவாதித்த நீயா நானாவிற்கு நன்றி. 

******************************************************************************

இந்நிகழ்ச்சி பற்றிய  கவிஞர் மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர் திரு முத்துநிலவன் அவர்களின் பதிவு

*****************************************************************************************
படிப்பு வராத மக்குப் பாப்பாவின் கவிதை படித்து விட்டீர்களா 



**************************************************************************************


வியாழன், 20 நவம்பர், 2014

ஒரு ரூபாய் ஊழியர்-தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்


தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள் 


ஒரு ரூபாய் ஊழியர் 

திருவாரூரிலே ஒரு தாசில்தார் இருந்தார். ஒரு நாள் காலையில், வீட்டில் உட்கார்ந்து கொண்டு  எதையோ படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே சிலர் ஓடி வந்து, 
“ஐயா, ஐயா, எங்கள் கிராமத்துக்குப் பக்கத்தில் இருந்ததே அணை. அதை வெள்ளம் அடித்துக்கொண்டு போய் விட்டது! உடனே வந்து கவனிக்க ஏற்பாடு செய்ய வேணும்” என்று வேண்டினர்.
    இதைக் கேட்டதும் தாசில்தார் ஒரு சேவகனை அழைத்து, “நீ உடனே போய்,அலுவலகத்தில் யாராவது குமாஸ்தா இருந்தால் கையோடு கூட்டிக் கொண்டு வா. உம். சீக்கிரம்” என்று உத்தரவிட்டார்.
      சேவகன் நேராகத் தாசில்தாருடைய அலுவலகத்திற்குச் சென்றான். அப்போது அங்கு முத்துசாமி என்ற ஒரு சிறுவன் மட்டுமே இருந்தான். வேறு யாரும் இல்லை. சேவகன் அவனிடம் செய்தியைச் சொன்னான். சொல்லிவிட்டு, “பெரியவர்கள் யாரும் வரவில்லையா?” என்று கேட்டான்.
     “இல்லை. அதனால் என்ன? நான் வருகிறேன். வா. போகலாம்” என்று கூறித் துணிச்சலோடு தாசில்தாரிடம் வந்தான் முத்துசாமி.

   தாசில்தார் முத்துசாமியை ஏற இறங்க ஒரு முறை பார்த்தார். பிறகு, சேவகனை நோக்கி,

“என்னடா இது, இந்தப் பொடியனை அழைத்து வந்திருக்கிறாயே! வேறு யாரும் இல்லையா?...” என்று சலிப்போடு கூறிவிட்டு, முத்துசாமியைப் பார்த்து, “சரி. சரி. ஏனப்பா,உனக்கு அந்த உடைப்பைப் பற்றி ஏதாவது தெரியுமா?” என்று கேட்டார்.

     “நீங்கள் உத்தரவு கொடுத்தால், உடனேயே நான் அங்கே போய், விவரம் அறிந்து வருகிறேன்” என்றான் முத்துசாமி.

     “சரி, போய் வா” என்று அரை மனத்துடன் அவனை அனுப்பி வைத்தார் தாசில்தார்.

     முத்துசாமி உடைப்பு எடுத்த இடத்திற்குச் சென்று பார்த்துவிட்டுத் திரும்பி வந்தான். வந்தவன் கையில் ஒரு தாள் இருந்தது. அதைத் தாசில்தாரிடம் கொடுத்தான். அதை அவர் உற்றுப் பார்த்தார் 
  அதில், எவ்வளவு தூரம் அணை உடைந்திருக்கிறது. அணையைத் திரும்பக்  கட்டுவதற்கு  என்னென்ன  சாமான்கள்  வேண்டும்.   அந்தச் சாமான்கள் எங்கெங்கே கிடைக்கும். எவ்வளவு நாட்களாகும், எவ்வளவு ரூபாய் செலவாகும் என்ற விவரங்களெல்லாம் இருந்தன.
     தாசில்தார் அதைப் பார்த்து வியப்படைந்தார். ஆனாலும், உடனே அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. தலைமைக் குமாஸ்தாவிடம் அந்தத் தாளைக் கொடுத்து, “இந்தப்பையன் என்னென்னவோ இதில் எழுதிக் கொடுத்திருக்கிறான். நேராகப் போய்ப் பார்த்தால்தான் தெரியும். உடனே நீர் புறப்பட்டுச் சென்று, விவரம் அறிந்து வாரும்”என்றார்.

     தலைமைக் குமாஸ்தா உடைப்பு எடுத்த இடத்திற்குச் சென்றார். நிலைமையை நேரில்அறிந்தார். சிறுவன் முத்துசாமி எழுதிய விவரங்கள் நூற்றுக்கு நூறு சரி என்பதைஉணர்ந்தார். அப்படியே தாசில்தாரிடம் போய்ச் சொன்னார். அதைக் கேட்டு தாசில்தார் ஆச்சர்யம் அடைந்தார். முத்துசாமியை மிகவும் பாராட்டினார்.

     அதே முத்துசாமி தாசில்தாரை மற்றொரு முறை வியப்பிலே ஆழ்த்தினான்.
       ஒருநாள், பெரிய மிராசுதார் ஒருவர் தாசில்தாரிடம் வந்தார். “என்னுடைய நிலங்களுக்கு நான் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? தொகையைச் சொன்னால், உடனே கட்டிவிடுகிறேன்” என்றார்.
     அந்த மிராசுதாருக்கு அந்தத் தாலுகாவில் பல இடங்களில் நிலம் இருந்தது. சுமார் இருபது கிராமங்களில் அவருக்கு நிலம் இருந்ததால் கணக்குகளைப் பார்த்துத்தான் சொல்ல வேண்டும்.
     குமாஸ்தாக்களில் ஒருவரைக் கூப்பிட்டுக் கணக்கைப் பார்க்கச் சொல்லலாம் என்று தாசில்தார் நினைத்தார். அப்போது, அருகிலே சிறுவன் முத்துசாமி நின்று கொண்டிருந்தான்.
 அவனிடம், அந்த மிராசுதாரின் பெயரைச் சொல்லி, “இவருடைய வரிப் பாக்கி எவ்வளவு  என்று கேட்டுவா” என்றார் தாசில்தார்.

     ஆனால், முத்துசாமி யாரிடமும் போய்க் கேட்கவுமில்லை; கணக்குப் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கவுமில்லை. நின்ற இடத்தில் நின்று கொண்டே, ‘இவர் இவ்வளவு கொடுக்கவேண்டும்’ என்று ஏதோ ஒரு தொகையைச் சொன்னான். அதைக் கேட்ட தாசில்தார்,

“என்னடா இது! வாயில் வந்த ஒரு தொகையைச் சொல்கிறாயே! சம்பந்தப்பட்ட கணக்குப் பிள்ளைகளைக் கூப்பிடு. கணக்கைச் சரியாகப் பார்த்துச் சொல்ல வேண்டும்” என்றார்.

     தாசில்தார் விருப்பப்படியே கணக்குப் பிள்ளைகளை அழைத்து வந்தான் முத்துசாமி.அவர்கள் கணக்குப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து, ஒரு காகிதத்தில்  தொகையைக் குறித்துக் கொண்டார்கள். 
பிறகு எல்லாவற்றையும் கூட்டிப் போட்டு, மொத்தத் தொகையைச் சொன்னார்கள். அவர்கள்சொன்ன தொகையும், முத்துசாமி சொன்ன தொகையும், ஒன்றாகவே இருந்தன. தம்படிகூடவித்தியாசமில்லை! இதைக் கண்டு தாசில்தார் மிகுந்த வியப்படைந்தார். அவர் மட்டும் தானா?  மிராசுதாரர், கணக்குப் பிள்ளைகள் எல்லாருமே அளவில்லாத 

ஆச்சரியமடைந்தார்கள்.
     முத்துசாமியிடம் இப்படிப்பட்ட திறமையும், ஞாபக சக்தியும் இருப்பதைக் கண்ட தாசில்தார் வியப்படைந்ததோடு நிற்கவில்லை. அன்றே முத்துசாமியை அழைத்து, 
“முத்துசாமி, இன்று முதல் உன் சம்பளத்தை மூன்று மடங்கு ஆக்கி விட்டேன்” என்று கூறினார்.

மூன்று மடங்கு! என்றால் பிரமித்துப் போய் விடாதீரிகள்  
அந்த மூன்று மடங்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா.மூன்று ரூபாய்தான் .
ஆம் அப்படியானால் அவர் வாங்கிக் கொண்டிருந்த மாத சம்பளம் ஒரு ரூபாய்.
     அன்று ஒரு ரூபாய் சம்பளத்தில் கணக்குப் பிள்ளைக்கு உதவி ஆளாக இருந்த அந்த ஒரு ரூபாய் ஊழியர் யார் தெரியுமா?  பிற்காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே வகித்து வந்த நீதிபதி  பதவியை பெற்ற முதல் இந்தியர் சர். டி. முத்துசாமி அய்யர்தான் அந்த ஒரு ரூபாய் ஊழியர். 
    

நன்றி: குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் பெரியோர் வாழ்விலே  என்ற நூலில் இருந்து 

***********************************************************************

திங்கள், 17 நவம்பர், 2014

நான் மம்மி பீசு!


என்ன இப்படி பண்ணிட்டீங்க கில்லர்ஜி! கேள்வி கேட்டாலே எனக்கு அலர்ஜி . 

நீங்க பத்த வச்ச சர வெடி கரந்தையில வெடிக்க  அவர் புதுக்கோட்டை பக்கம் தூக்கிப் போட முத்துநிலவன் அதை மூங்கில் காத்தோட அதிரடியா அனுப்பி வைக்க அது இங்க புஸ்வாணமா மாறிப் போச்சே ஐயா! நான் என்ன செய்ய?  
இந்தப் பச்ச புள்ள கிட்ட கேள்வி மேல கேள்வி கேட்டா எப்படி பதில் சொல்லும்?  முத்து நிலவன் ஐயா! எனக்கு பாஸ் மார்க் போடணும் சொல்லிட்டேன்.

1.நீ மறுபிறவியில் எங்கு பிறக்கவேண்டும் என்று நினைக்கிறாய்?

      இந்தப் பிறவியில எங்கே பிறந்து எங்கெல்லாம் வளர்ந்தேனோ அந்த இடங்களைத் தவிர வேறு எங்காவது ஓரிடத்தில் பிறக்கணும், அடுத்த பிறவியிலாவது புது இடங்களைப் பார்க்க வேண்டாமா? (முற்பிறவியில எங்க பொறந்தேன்னு உனக்கு தெரியவா போவுதுன்னு புத்திசாலித்தனமா யாராவது கேட்டா எனக்கு கெட்ட கோவம் வரும் ஜாக்கிரதை! 

2.ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால்?

    அடடா! இந்தியாவோட நிலைமை அவ்வளவு மோசமாவா போச்சு?. 
அப்படி இருந்தா அது இந்தியாவோட  தலை எழுத்து. 

3.ஒருவேளை வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்புத் 

தெரிவித்தால்?
எனக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால்அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்  நான் டம்மி பீசு.
எதிர்ப்பு தெரிவித்தால்....கால்ல உழுந்து காரியம் முடிச்சுடுவேன். ஹிஹி நான் மம்மி பீசு 

4.முதியோர்களுக்கு என்று ஏதும் திட்டம் வைத்திருக்கிறாயா?


 முதியவர்களுக்கு மட்டுமில்ல இளைஞர்களுக்கும் சேர்ந்து ஒரு திட்டம். ஆளுக்கொரு வலைப்பூ ஆரம்பிச்சு 2015 நான்காவது வலைப் பதிவர் சந்திப்புக்கு புதுக்கோட்டைக்கு வந்துடணும். ஆமா!

5.அரசியல்வாதிகளுக்கென்று திட்டம் ஏதாவது?

 தேர்தலில் ஜெயித்ததும்  ஆறு மாதம் ராணுவத்தில  கடுமையான பயிற்சி கொடுக்கப் படும். பின்னர் தேர்வும் வைக்கப் படும் பாசானால் மட்டுமே பதவியில் தொடர முடியும்.

6.மதிப்பெண் தவறென்று மேல்நீதிமன்றங்களுக்குப் போனால்..?

  செல்லாது செல்லாது. மதியுடைய பெண்ணை எப்படி தவறுன்னு சொல்ல முடியும் .

7.விஞ்ஞானிகளுக்கென்று ஏதாவது திட்டம்?

விஞ்ஞானிகளுக்கு எதுக்கு திட்டம். அஞ்ஞானிகளுக்குத்தானே  திட்டம் வேணும்.?

8.இதை உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் தொடர்வார்களா?
கட்டாயம் தொடர்வார்கள்.அது எப்படி உறுதியா சொல்றீங்கன்னுதானே கேக்கறீங்க. நான்தான் ஒண்ணும் செய்யலையே. அதையே அவங்க செய்யறதில என்ன  கஷ்டம் இருக்கப் போகுது? ஹிஹிஹிஹி 

9.மற்ற நாடுகளில் இல்லாத புதுமையாக ஏதாவது திட்டம்?


 நான் ஆட்சிக்கு வந்ததும் (என்)மக்கள் ஆசையை நிறைவேத்த அரசாங்க செலவில  மேப் ல இடம் பெறாத ஊர்களுக்கெல்லாம் கூட போய்ப் பாத்து அங்க என்ன என்ன திட்டம் எல்லாம் இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டு அதுக்கப்புறம் அங்க இல்லாத திட்டத்தை உருவாக்கப்படும்னு தெரிவிச்சிக்கிறேன். ஒரு வேளை அதுக்குள்ள அஞ்சு வருசம் ஆயிட்டா புதுமையான திட்டத்தை உருவாக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கணும்னு கேட்டுக்கறேன்.

10.மானிடப் பிறவி தவிர வேறென்ன பிறவி எடுக்க விரும்புகிறாய்?

   இந்தக் கேள்விக்கான பதில் தெரியாததால எங்க வீட்டம்மா கிட்ட கேட்டேன். "நான் அடுத்த பிறவியில என்ன பிறவி எடுக்கணும்னு நினைக்கிற?" 
  "என்னத்தை எடுக்கிறது. இந்தப் பிறவியில உசுரை எடுத்தது போதாதா? மாடாப் பொறந்தா உழைக்கணும் , கழுதையைப் பிறந்தா பொதி சுமக்கனும், நாயாப் பொறந்தா வாலாட்டணும் பேயா பொறந்தா புளிய மரம் தேடனும். அட! திரும்பி பொறக்கும் போதாவது (நல்ல) மனுசனா பொறந்து தொலைங்க" ன்னு சொன்னாங்க பாருங்க....... 

இப்படி என்ன மாட்டிவிட்ட கவிஞர் முத்து நிலவன் ஐயாவை எப்படி பழி வாங்கறதுன்னு யோசிச்சிகிட்டு இருக்கேன்.

பொறுப்பு துறப்பு(Disclaimer); இதைப் படிச்சிட்டு உங்க நிலைமையும் இப்படி ஆயிட்டா நான் பொறுப்பு இல்ல 




*******************************************************************************
முந்தைய பதிவுகள் 



வெள்ளி, 14 நவம்பர், 2014

இது பெரியவர்களுக்கு!

                       


   இன்று குழந்தைகள் தினம்!


   இன்றைய குழந்தைகள் பெற்றோரின் ஆசைகளை திணித்து வைக்கும் மூட்டைகள். பந்தயத்தில் வெல்லத் தயார் செய்யும் பந்தயக் குதிரைகள். விளையாட்டையும் வேடிக்கையையும் இழப்பது கூடத் தெரியாமல் இழந்து கிடக்கும் பிஞ்சுகள். கீ கொடுத்தால் இயங்கும் பொம்மைகள். அளவுக்கு மீறிய பாச வன்முறையால் தன்னொளி தர இயலாத  நிலவுகள்.  

 எதிர்காலத்தை உறுதிப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு அவர்களுடைய நிகழ்காலத்தை நசுக்கிக் கொண்டிருக்கிறோம் 

இதோ ஒரு குழந்தையின் குரல். செவி சாய்த்துப் பார்ப்போம் வாருங்கள் 

நான் மக்குப் பாப்பாவா?

                     மக்குப் பாப்பா நான்தானாம்
                          மறதி அதிகம் கொள்வேனாம்
                     பக்கத்து வீட்டுப் பாப்பாதான்
                           படிப்பில் என்றும் படுஜோராம்

                     எண்பது மார்க்குகள்  போதாதாம் 
                          இன்னும் கொஞ்சம் எடுக்கணுமாம் 
                     முதல் மார்க்  வாங்கத் தெரியாத
                            முட்டாள் குழந்தை நான்தானாம்

                      அம்மா என்று அழைத்தாலே
                             மம்மிக்கு கொஞ்சமும் பிடிக்காது
                      அப்பா என்று கூப்பிட்டால்
                              சாக்லேட் எனக்கு கிடைக்காது

                       எடுத்த இடத்தில் மீண்டும்தான்
                              பொருளை வைக்கத் தெரியாதாம்
                       கொடுத்த பொருட்கள் எல்லாமே
                               உடனே  உடைத்து விடுவேனாம்

                        மண்ணில் ஆட ஆசைதான்
                                மம்மியின் அனுமதி கிடைக்காது
                        கண்ணில் தூசு விழுந்திடுமாம்
                                கைகால் அசுத்தம் ஆகிடுமாம்

                        துணியை வெளுக்க முடியாத
                                அழுக்காய் ஆக்கி வருவேனாம்
                        தனியாய் உண்ணப் பழகலையாம்
                                தவறை திருத்தத் தெரியலையாம்

                         பாட்டி எனக்குக் கதை சொல்வார்
                                 போதும் போய்ப்படி என்பார்கள்
                         போட்டி நாளை நடக்கிறதாம்
                                 பயிற்சி இன்னும் போதாதாம்

                          புத்தகக் காட்சிக்கு சென்றோமே
                                 சுற்றி சுற்றிப் பார்த்தோமே
                          வித்தகக் கதைகள் பல கூறும்
                                   புத்த கங்கள் கண்டேனே

                            எனக்குப் பிடித்த கதை உள்ள
                                  புத்தகம் வாங்கக் கேட்டேனே
                             உனக்கு அறிவு அதனாலே
                                    வளராதென்று சொல்லி விட்டு

                            முன்பு வாங்கிய அகராதி
                                    மூலையில் கிடப்பதை அறியாமல்
                             புத்தம் புதிய அகராதி
                                      வாங்கிக் கொடுத்தார் படித்திடவே

                             அப்பா அம்மாஎன்மேலே
                                     சாட்டும் குற்றங்கள் ஏராளம்
                            இப்போ தெனக்கு   நேரமில்லை
                                   ஞாயிறு சனியில் சொல்கின்றேன்

                            ஊஹூம்! ஊஹூம்! முடியாது
                                  சனியில் கராத்தே கிளாஸ் உண்டு
                            ஞாயிற்றுக் கிழமையும் முடியாது
                                    யோகா வகுப்பு அன்றுண்டு

                             தந்தை தாயின் கனவுகளை 
                                   பொதியாய் நானும் சுமக்கின்றேன்.
                             அந்தப் பொதியை இறக்கியதும் 
                                     மீதம் உள்ளதை சொல்கின்றேன் 

                      ************************************



      குழந்தைகள் தின வாழ்த்துக்கள் 


இதையும் படித்துப் பாருங்கள் 



வியாழன், 13 நவம்பர், 2014

பின்னூட்டத்தில் நம் வலைப்பதிவிற்கு இணைப்பு கொடுப்பது எப்படி?

கற்றுக்குட்டியின் கணினிக் குறிப்புகள்.




       வலைப்பூவோ முகநூலோ ட்விட்டரோ எதுவாக இருப்பினும் நாம் பதிவு செய்தவற்றை நிறையப் பேர் பார்த்தால்தான் மகிழ்ச்சி.என் கடன் பதிவு செய்து கிடப்பதே பார்ப்போர் பார்க்கட்டும் பார்க்காவிட்டால் போகட்டும் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை  என்றும் நான் ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன் என்றும் ஒரு சிலர் சொல்வதுண்டு.  அது ஒப்புக்கு சொல்லப் படுவதே அன்றி வேறில்லை. ஆனால் அவர்களுக்கும் நமது பதிவுகள் படிக்கப் படவில்லையே என்ற ஆதங்கம் இருக்கத் தான் செய்யும் . 

       யாருமே வராத ஓட்டலுக்கு யாருக்காக மாவாட்டுவது? (எவ்வளவு நாள்தான் டீக்கடை உதாரணத்தையே சொல்வது). நாம் இருக்கிறோம் இணையத்தில் எழுதுகிறோம் என்று தெரிவிப்பது புதியவர்களுக்கு அவசியமாகிறது. அதற்கு பல வழிகளை கடைபிடிக்கிறோம். திரட்டிகளில் இணைப்பது .பிறரின் பதிவுகளில் கருத்திடுவது மின்னஞ்சல் அனுப்புவது, முகநூல் ட்விட்டர்களில் இணைப்பு  கொடுப்பது வழக்கத்தில் இருக்கிறது. சிலர் பிறருடைய கருத்துப் பெட்டியில் தன பதிவை படிக்க வருமாறு அழைப்பு விடுப்பதை பார்க்க முடியும்.அப்போது தன பதிவின் url ஐ ( உதாரணம் http://www.tnmurali.com/2014/11/idli-dosai-philosophy.html) காப்பி செய்து பின்னூட்டத்தில் இட்டு வைப்பர். தன பதிவுக்கு வருகை தந்தவரின் வலைபதிவிற்கு செல்ல அந்த முகவரியை தேர்ந்தெடுத்து காப்பிசெய்து அட்ரஸ்பாரில் பேஸ்ட் செய்து என்டர் தட்டினால் அந்தப் பதிவுக்கு சென்று படிக்க முடியும். ஆனால் இவற்றை செய்வதற்கு சோம்பல் பட்டோ அல்லது செய்யத் தெரியாமலோ சிலர் இருக்கக் கூடும். அவர் எளிதாக நமது வலைப்பதிவை அடைய வழி என்ன? பின்னூட்டத்தில் க்ளிக் செய்தால் பதிவை அடையும் வண்ணம் இணைப்பு இருந்தால் நன்றாக இருக்குமல்லவா? அதற்கான வழி ஒன்றை கூறுகிறேன். இது பெரும்பாலோருக்கு தெரிந்ததுதான் என்றாலும் ஒரு சிலருக்காவது பயனுள்ளதாக இருக்கும்
     ஆனால் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும் . இதை தேவைப்படும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட ந(ண்)பர் நமது பதிவைப் படித்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தால் அவருடைய வலைப்பதிவு பின்னூட்டத்தில் இதைப் உபயோகப்படுத்தலாம் . அடிக்கடி இதனை விளம்பரம் போல நாம் இடும் ஒவ்வொரு பதிவுக்கும் இதனைசெய்வதை பெரும்பாலோர் விரும்ப மாட்டார்கள் . எரிச்சல் அடையக் கூடும.அதனால்இடம்பொருள்அறிந்து இதனை பயன்படுத்துதல் சாலச் சிறந்தது 

   இப்போது வழிமுறையை பார்ப்போம். இந்த  குட்டி HTML நிரலை பயன் படுத்தலாம்  

<a href="உங்கள் பதிவின் முகவரி">பதிவின் தலைப்பு</a> 

இதை அப்படியே காப்பி செய்து வைத்துக் கொள்ளுங்கள் 

உதாரணத்திற்கு எனது இட்லியும் தோசை சொல்லும் தத்துவங்கள்  என்ற பதிவுக்கு  இணைப்பு கொடுக்க விரும்புவதாகக் கொள்வோம்.
இதன் url முகவரி 
http://www.tnmurali.com/2014/11/idli-dosai-philosophy.html
பதிவின் தலைப்பு: இட்லியும் தோசை சொல்லும் தத்துவங்கள்  
மேற்கண்ட நிரலில் நீல வண்ணத்தில் உள்ள பதிவின் முகவரிக்கு பதிலாக என்ற இடத்தில் http://www.tnmurali.com/2014/11/idli-dosai-philosophy.html என்பதையும் பச்சை வண்ணத்தில் உள்ள பதிவின் தலைப்பு என்பதற்கு பதிலாக  இட்லியும் தோசை சொல்லும் தத்துவங்கள் என்பதையும் இட வேண்டும் 

பதிவுக்கான இணைப்பு நிரல் இப்படி இருக்கும் 

<a href="http://www.tnmurali.com/2014/11/idli-dosai-philosophy.html">இட்லியும் தோசை சொல்லும் தத்துவங்கள்</a> 

இதை அப்ப்டியே காப்பி செய்து நண்பருடைய பின்னூட்டப் பெட்டியில் பேஸ்ட் செய்து பப்ளிஷ் செய்யுங்கள் . 
இட்லியும் தோசை சொல்லும் தத்துவங்கள் என்ற தலைப்பு மட்டும் இணைப்புடன் கருத்துப் பெட்டியில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம் . நிரலில் உள்ள   மற்ற குறியீடுகள் எழுத்துக்கள் அதில் இடம் பெறாது .இதைக் க்ளிக் செய்து பதிவை  எளிதாக அடையலாம் 

நண்பரின் பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை சொல்லி விட்டு  அது தொடர்பாக உள்ள உங்களது பதிவையும் இணைப்போடும் குறிப்பிடலாம் 
உதாரணமாக "இட்லி தோசை சொல்லும் தத்துவங்கள்" என்ற பதிவுக்கு கீழ்க்கண்டவாறு பின்னுட்டமிட்டிருந்தார் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் .


அவர் தன்னுடைய தோசைப் பதிவின் இணைப்பையும் எனது பதிவின் பின்னூட்டத்தில் தெரிவிக்க விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம் 

கருத்துப் பெட்டியில் கீழ்க்கண்டவாறு 

 நல்ல ஒப்பீடு போங்க! சுவையாய் இருந்து . எங்கள் ப்ளாக்கின் தோசைப் பதிவுகள் படித்தீர்களோமுரளி? <a href="http://engalblog.blogspot.in/2014/08/140804-1.html">தோசையாயணம்</a> 



என்று  டைப் செய்து பப்ளிஷ் செய்தால் 



கருத்து மேலுள்ளவாறு தோன்றும். இதில் இணைப்புப் பகுதியான தோசையாயணம்  மட்டும் மாறுபட்டு  காட்சி அளிக்கும் . அதைக் க்ளிக் செய்தால் அந்தப் பதிவுக்கு நேரடியாக சென்று விடும்.
இதை சோதித்து ப் பார்க்க  எனது இட்லி தோசை தத்துவங்கள்  பக்கத்திற்கு செல்லவும் 

குறிப்பு  



  • இந்த நிரலில் மேற்கோள்குறி <   > / போன்ற குறியீடுகள் விடுபட்டுவிடக் கூடாது.
  • இந்த மாதிரி நிரலை அப்படியே காப்பி செய்து கருத்துப்பெட்டியில் பேஸ்ட் செய்து விட்டு உங்கள் பதிவின் தலைப்பையும் URL ஐயும் அதில் ரீப்ளேஸ் செய்து கொள்ளலாம்.
  • பதிவின் முகவரியை பதிவின் அட்ரஸ் பாரில் இருந்து நிரலில் பேஸ்ட் செய்து கொள்ளலாம் அவ்வாறு செய்யும்போது http:// கூடுதலாக இடம்பெற்றுவிட்டால் இது வேலை செய்யாது.


கொசுறு:
நான் பொதுவாக எனக்கு பின்னூட்டமிட்டவரின் வலைப் பதிவிற்கு செல்ல வேண்டுமென்றால்  பின்னூட்டத்தில் அவர் பெயரை க்ளிக் செய்தால் அவரது PROFILE பக்கத்திற்கு செல்லும் . அதன் வழியாக அவரது வலைப் பக்கத்திற்கு செல்வது என் வழக்கம் . என்னைப் போன்று பலரும் செல்ல கூடும். ஆனால் பல வலைப் பதிவர்கள் கூகிள் +  கம்மென்ட்டுக்கு மாறி இருக்கிறார்கள் . இதனால் அவர்களுடைய பெயரை க்ளிக் செய்தால் அவர்களுடைய கூகிள் + 
பக்கத்திற்க்கு செல்லும் அதில் அவர்கள் பகிர்வு செய்த பிறருடைய பதிவுகளும் இடம் பெற்றிருக்கும். இதில் அவரது சமீபத்திய பதிவை கண்டறிவதில் சற்று இடர்பாடு உள்ளது . எனவே கூகிள்+ அதிகம் பயன்படுத்துபவர்கள் தவிர இதரர் பழைய ப்ளாக்கர் கம்மென்ட்ஸ் செட்டிங்க்சில் இருப்பது நல்லது  என்பது எனது கருத்து 

                                                       **************************

எச்சரிக்கை:  முரளி!ஏதோ மதுரை வலைப் பதிவர் விழாவில் தொழில் நுட்பப் பதிவர்னு சொல்லிட்டாங்க. அதுக்காக  இப்படி எல்லாமா ஜுஜுபி  பதிவ போட்டு படுத்தறது 



********************
இதர கற்றுக் குட்டிப் பதிவுகள் 






  • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி?
  • முன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்...
  • உங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி?
  • உங்கள் வலையின் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டுமா?
  • காபி,பேஸ்ட் செய்யப்பட்டதை அறிவது எப்படி?-பகுதி 2(250 வது பதிவு)
  •  இன்ட்லியால் ஒரு இன்னல்
  • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி? 
  • .காபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது?
  • தமிழ்மணம்,தமிழ் 10 இல் ஒட்டு போட்டவர்களை அறிய முடியுமா?




  • சனி, 8 நவம்பர், 2014

    புதிய தலைமுறையில் என் படைப்பு

    புதிய தலைமுறை 13 நவம்பர் 2014 இதழ்

          வழக்கமாக  வெள்ளிக்கிழமைகளில்  ரயில் நிலைய புத்தகக் கடையில் புதிய தலைமுறை வார இதழ் வாங்கிப் படிப்பது வழக்கம். இந்த வாரம் அவசரமாக ஓடிவந்து ரயிலில் ஏறியதால் வாங்க இயலவில்லை. மாலையிலும் மறந்தநிலையில் நான் வீட்டுக்குள் நுழையும்போது புதிய தலைமுறை  எங்கள் வீட்டுக்குள்  அமர்ந்திருந்தது.சந்தா கட்டி இருப்பேன் அதனால் வந்திருக்கிறது என்று  வீட்டில் நினைத்துக் கொண்டார்கள் ..எனக்குப் புரிந்துவிட்டது..செப்டம்பர் மாதத்தில் கடிதம் எழுதும் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது புதிய தலைமுறை . அந்தப் போட்டியில் நானும் கலந்து கொண்டேன். எனது கடித்ததை தேர்ந்தெடுத்திருப்பார்கள் . அதனால் அனுப்பி இருப்பார்கள் என்று நினைத்தேன். ஆம் அதுவே உண்மையானது ..  எனது கடிதம் பிரசுரமாகி இருப்பதை அறிந்தேன். அதற்காகவே புத்தகத்தை அனுப்பி இருந்தார்கள். பொதுவாக படைப்புகள் பிரசுரமானால் பிரதியை இலவசமாக அனுப்பி வைப்பது மரபு. அதன்படி  புதிய தலைமுறை எனக்கு பிரதியை அனுப்பி வைத்திருந்தது.  இப்போது எல்லா பத்திரிகைகளும்  அப்படி செய்கின்றனவா  என்று தெரியவில்லை. முன்பு குமுதத்தில் எனது கதை இப்படியும் இருக்க முடியுமா?-)  பிரசுரமான போது எனக்கு புத்தகம் அனுப்பப் படவில்லை. ஆனால்  750 ரூபாய் சன்மானமாக அனுப்பி வைத்தது குமுதம் இணையத்தில் எழுதியதன் மூலமே அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது.  இப்போது புதிய தலைமுறையில் எனது படைப்பு வெளியாகி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. முடிந்தால் படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்

    புதிய தலைமுறை 13.11.2014 இதழில் வெளியான  கடிதம் உங்களுக்கு பரிச்சயமானதுதான்."சரோஜாவிலதான் ரோஜா இருக்குடா" என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்தக் கடிதம்
    ஏறகனவே திடம் கொண்டு போராடு சீனு நடத்திய போட்டியில் பரிசு பெற்ற கடித்ததை சில மாற்றங்கள் செய்து அனுப்பி இருந்தேன், அது நிச்சயம் தேர்ந்தெடுக்கப் படும் என்ற நம்பிக்கை இருந்தது/ காரணம் முன்பு அதற்கு நீங்கள் அதற்கு  அளித்த ஆதரவுதான்.

       மூன்று ஆண்டுகளாக வலைப்பூவில் எழுதி வருகிறேன்.சில நேரங்களில் இப்படித் தோன்றும்.நாம் எதற்காக எழுதிக் கொண்டிருக்கிறோம்? இதனால் என்ன நன்மை? இப்படி இணையத்தில் நேரத்தை செலவழிப்பது சரியா? ஒரு வேளை வலைப்பூவில் எழுதவில்லை என்றால் தொலைக்காட்சி பார்ப்பதற்கு அந்த நேரம் செலவிடப் பட்டிருக்கக் கூடும்.

      சிறுவயதில் இருந்து கண்டதையும் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தானும் எழுத வேண்டும் என்ற ஆசை உருவாகி விடுகிறது. சிலருக்கு சரியான களம் அமைந்து விடுகிறது. அல்லது தங்களது விடாமுயற்சியால் அத்தகைய சூழலை உருவாக்கிக் கொள்கிறார்கள். அப்படி வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும் தேடிப்போகாதவர்களுக்கும் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் களமாக வலைப்பூக்கள் உள்ளிட்டவை உதவுகின்றன. பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பிவிட்டு வெளியாகுமா வெளியாகாதா என்று காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இணையத்தில் நம்மை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. நாம் என்ன எழுதினாலும் எப்படி எழுதினாலும் பார்ப்பதற்கு படிப்பதற்கு ஒரு நூறு பேராவது இருக்கிறார்கள்.
     எழுதுபவர்களுக்கு ஒரு பயிற்சிக் களமாக இணையம் அமைந்துள்ளது.தங்கள் ஆற்றலை மேம்படுத்திக் கொள்வதற்கு அது துணைபுரியவும் செய்கிறது 

    இணையத்தில் எழுதுபவர்கள் பெரும்பாலும் போழுதுபோக்குக்காகவே எழுதுகிறார்கள்.  ஓரளவிற்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்கத்தான் செய்கிறது. என்றாலும் முன்னணிப்  பத்தரிகைகளில் நம் படைப்புகள் இடம் பெறும்போது கூடுதல் மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது..

    எனது வலைப்பக்கத்திற்கு வருகை வந்து  ஊக்கப் படுத்திய்வர்களுக்கும் ஆலோசனை தந்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 


    இணையத்தில் பலர் மிக சிறப்பாக எழுதுகிறார்கள்..நீங்களும் உங்கள் படைப்புகளை பத்திரிகைகளுக்கு அனுப்புங்கள். நிச்சயம்.உங்கள் திறமை அறியப்படும் . 
    நன்றியும் வாழ்த்துக்களும் 

    ---------------------------------------------------------------------------------------------------------

    செவ்வாய், 4 நவம்பர், 2014

    இட்லி தோசை சொல்லும் தத்துவங்கள்

       

     தினமும் இட்லி தோசைதானா என்று நாம் சலித்துக் கொள்வதுண்டு. இட்லி தோசையின் அருமை வட இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ   பயணம் செய்யும்போதுதான் தெரியும்.

    இரண்டு ஆண்டுகளுக்கு சன் டிவி சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் அருமையான நிகழ்ச்சி ஒன்று ஒளி பரப்பானது. சினிமா நடிகர் நடிகைகளில் கெக்கேபிக்கே பேட்டிகளும், அழுவாச்சி காவியங்களும் பார்த்து பார்த்து சலிப்படைந்த கண்களுக்கும் மனதுக்கும் விருந்தாக அமைந்தது இந்த நிகழ்ச்சி. ஏன் இது போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் படுவதில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.அதைப் பற்றி பதிவு கூட எழுதி இருந்தேன். பதிவர் சந்திப்பிற்கு மதுரை சென்றிருந்தபோது சாலையோர இட்லிக்கடைகளை பார்த்ததும் இந்தநிகழ்ச்சி  மீண்டும் நினைவுக்கு  வந்து விட்டது.
         இட்லி தோசைகள் தயாரிப்பு விதம் விதமாக   காட்சியாக தெரிய பின்னணியில் சன் டிவி செய்தி வாசிக்கும்   சண்முகத்தின் வசீகரக் குரலில் இட்லி தோசையை வாழ்க்கையோடு ஒப்பிட்டு ஏற்ற இறக்கத்துடன் சொன்னதைக் கேட்டதும் இட்லி தோசையை கண்டுபிடித்த நம் முன்னோரின் சுவை அறிவை  பாராட்டாமல் இருக்க முடியவில்லை . இட்லி தோசை பிடிக்கிறதோ இல்லையோ இந்தப் பதிவு  நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

    இட்லியும்  தோசையும் 
       இட்லி என்பது மௌனம். தோசை என்பது சப்தமும் பேச்சும். இட்லி ஒவ்வொரு விள்ளலிலும் மௌனத்தை வெளிப்படுத்தும்.தோசை ஒவ்வொரு துண்டிலும் மொறுமொறுப்பான சத்தத்தில் பேசும். உறவு என்பது முதலில் மௌனத்தில் தொடங்கி பேச்சில் வளர்வது. பிரிவு என்பது பேச்சில் தொடங்கி மௌனத்தில் முடிவது. உறவு என்பது இட்லியில் தொடங்கி தோசையில் வளர்வது.பிரிவு என்பது தோசையில் தொடங்கி இட்லியில் முடியும் என்பதால்  யாரும் தோசையில் தொடங்கு வதில்லை. உணவு விஷயத்தில் உணர்வுகள் சரியாகவே இயங்கு கின்றன. இட்லியில் தொடங்கித்தான் தோசையில் வளர்கின்றன.உணவு விஷயத்தில் சரியாகச் செயல்படும் உணர்வுகள் உறவு விஷயத்தில் மாறிச் செயல்படும்போது உறவுகள் உடைகின்றன.

       இட்லிக்கு பின் தோசை என்பது இயற்கையின் தொடர் நிகழ்வு. இட்லிகள் பூக்கள். தோசைகள் என்பவை கல்லில் பழுப்பவை. அதிக நேரம் இருவர் மெளனமாக இருக்கும்போது  சிறிது புளிப்பு ஏற்படும். அப்போது சுவையான உரையாடலில்  ஈடுபடுவது சுவையோ சுவை. முதல் நாள் மாவில் இட்லி உற்பத்தியாகும் அது மௌனம்.மறுநாள் சிறிது புளித்தவுடன் தோசைகளை படைப்பதுண்டு.அது பேச்சைப் போன்றது.

       மௌனத்தில் இருந்தே பேச்சு பிறக்கவேண்டும். இட்லியும் தோசையும் இதையே மௌனமாகவும் மொறுமொறுப்பாகவும்  வெளிப் படுத்துகின்றன. மௌனம்  என்பது இட்லியின் வடிவமாக இருப்பதால் இரண்டு நிலைகளை இட்லிகள் எடுக்கத் தேவை இல்லை. அவை ஒரே நிலையில் உருவாகின்றன. இட்லிகள் பிரண்டு படுப்பதில்லை, தோசை என்பது பேச்சின் வடிவமாக இருப்பதால் அது வாயின்  தன்மையை பெற வேண்டி இருக்கிறது.தோசைக் கரண்டிதான் நாவு. சுவையூறும் உமிழ் நீர் போன்றது எண்ணை. நாவு இரண்டு பக்கமும் பேசும். கரண்டி நாவுகள் தோசையை இரண்டு பக்கமும் திருப்பிப் போடும். மௌனத்திடம் நாவுக்கு என்ன வேலை?

       இட்லிக்கும் தோசைக்கும் தொடர்பிருந்தாலும் இட்லிக்கும் தோசைக் கரண்டிக்கும் தொடர்பில்லை. மௌனத்தின் ருசி உமிழ் நீருக்கு அப்பாற்பட்டது என்பதால்  இட்லியின் உருவாக்கத்தில் எண்ணைக்கு பெரிய இடமில்லை. இட்லி குழந்தை; தோசை வளர்ச்சி; தாயின் மடியிலிருந்து  பிரண்டு விழும் குழந்தையைபோல துணியிலிருந்து இட்லி விழுவது அழகின் அடுக்கு .தோசைகள் வளர்பவை. ஹோட்டல்களில் தோசை, கல்லில் ஊற்றப்பட்டு பின்எழுதப்பட்டு பின் சுடப்பட்டு பின் சுருட்டப்பட்டு பின்னும் கட்டுக்குள் அடங்காமல் படைக்கப் படுகின்றன. 

       இட்லிகள் பிறந்த வீட்டின் பெருமையும் புகுந்த வீட்டின் தன்மையும் கொண்ட பெண் போன்றவை. பிறந்த வீட்டின் பெருமை  என்பது வெண்மை நிறம். இட்லியின் வளரச்சியில் இட மாற்றம் உண்டு என்றாலும் நிற மாற்றம் கிடையாது. புகுந்த வீடு என்பது குழிவு ஆனால் இட்லிகளில் குழிவுகள் தெரியாது.அதையும் மேடாக்கிக் காட்டும் மேன்மை பொருந்தியவை இட்லிகள். தோசைகளில் தோசைக்கல்லின் வடிவம் முழுமையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஹோட்டல்களில் சதுரக்கல்லில் வட்ட தோசைகளும் முக்கோணமாக மடிக்கப் பட்ட தோசைகளும் பிறக்கின்றன. வீட்டில்கூட பிற  வடிவத்தை தோசைகள் ஏற்றுக் கொள்வதில்லை. இருந்தாலும் இட்லிக்கு தோசை மீது ஆழ்ந்த பிரியம் உண்டு. ஒன்றில் ஊற்றப்பட்டு அதன் வடிவத்தை ஏற்பதை வார்க்கப்படுதல் என்பார்கள்.உண்மையில் இட்லிகள்தான் வார்க்கப் படுகின்றன என்றாலும் அந்தப் பெயரை தோசைக்கு கொடுப்பதில்தான் இட்லிக்கு சந்தோஷம். 

      குழந்தைகள் இளமைப் பருவத்தை அடைந்தவுடன் பழைய அடையாளங்கள் மறைந்து புதியவை பிறக்கும். புதிய உறவுகள் கூடும். தோசைகள் அப்படிப்பட்டவை. தோசைகள் வண்ணத்தை மாற்றிக் கொள்ளும்; புதியவைகளை சேர்த்துக் கொள்ளும். ரவா தோசை, மசாலா  தோசை, பொடி தோசை வெங்காய ஊத்தப்பம் என பலப்பல வகைகள்; குட்டித் தோசை கல் தோசை என்ற பல வடிவங்கள். அதிலும் இந்த மசாலா தோசைகள் மிகவும் சுவாரசியமானவை. உருளைக் கிழங்குகள் மண்ணுக்குள் விளைபவை. சட்னி தரும் தேங்காய்கள் விண்ணில் தொங்குபவை. மண்ணுக்குள் விளைந்த உருளைக் கிழங்கை வயிற்றுக்குள் வைத்த மசாலா தோசைக்கு விண்ணில் விளைந்த தேங்காய்ச் சட்னி ஏகப் பொருத்தம். 
      குழந்தைகளை தொட்டுப் பார்க்கத் தூண்டுவது எல்லோருக்கும் இயற்கைதானே. இட்லிகளை தொட்டுப் பார்ப்பார்கள்.சமைத்தவரின் விரலைப் பதிவு செய்யும் பழக்கம் சில இட்லிகளுக்கு உண்டு. ஆசை ஆசையாக பார்த்து செய்யப்பட வேண்டியது தோசை. இட்லிகள் பூப்பதை  யாரும் பார்க்க முடியாது. இட்லி மௌனத்தின் ரகசியம். 

       குழந்தைகளில் குட்டிக் குழந்தைகள் இருப்பது மாதிரி. இட்லிகளில் குட்டி இட்லிகள் உண்டு குழந்தைகளுக்கு குளிப்பது பிடிக்கும்தானே? குட்டி இட்லிகளை சாம்பாரில் குளிக்க வைக்க வேண்டும். பாத் டப்பைப் போல இந்தத் தட்டும் குளிப்பதற்கு ஏற்றார்போல குழிவாக இருக்கும். குட்டி இட்லிகளை கைகளால் தொடக் கூடாது. ஸ்பூனால் எடுத்துப் போடவேண்டும். 

      இட்லிக்கும் தோசைக்கும் ஒரு பெரிய ஒற்றுமை இருக்கிறது. ஒன்று பழைய தமிழ்ச் சொல்லையும் மற்றொன்று பழைய கலாசாரத்தையும் நினைவூட்டுகிறது. 'இடு' என்பது இடுதலை குறிக்கிறது. இட்டு மூடி விடுபவை இட்லிகள். கல்லில்தான் ஆதி மனிதர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள். இன்றைக்கு இரும்பிலும் மற்ற உலோகத்திலும் வந்தாலும் அதற்குப் அவற்றிற்குப் பெயரென்னவோ தோசைக் கல்தான். இடு என்பது துன்பத்தையும் குறிக்கும். இடுக்கண் வரும்போது சிரிக்கவேண்டும் என்கிறார் வள்ளுவர். பள்ளங்களில் இடப் படும் மாவு இட்லியாகச் சிரிக்கிறது;பக்குவமடைகிறது. ஒரே மாவுதான் இட்லியாகவும் சிரிக்கிறது; தோசையாகவும் இருக்கிறது; மௌனமாகவும் இருக்கிறது; பேச்சாகவும் இருக்கிறது;. இரண்டுமே தேவைப் படுகிறது வாழ்க்கைக்கு.

     இட்லி தோசை சொன்ன தத்துவங்கள் ரசிக்கும்படி இருந்ததா?