என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

உங்கள் படைப்புகளை மின்னூலாக்கலாம் சென்னை முகாமுக்கு வாருங்கள்

       

   எழுத்தாற்றல் தம்மிடம் இருக்கிறது என்று நம்பும் ஒவ்வொருவருக்கும் தங்கள் படைப்புகளை நூல்களாக்க வேண்டும் என்ற கனவு இருக்கும்.முன்பெல்லாம் என்னதான் திறமை இருந்தாலும் தங்கள் எழுத்துக்களை அச்சில் பார்ப்பது எளிதானதாக இருக்கவில்லை. பத்திரிகைகளுக்கு  படைப்புகளை அனுப்பி சோர்ந்து போய் தங்கள் எழுத்துத்  திறமை இருப்பதயே மறந்து போனவர் பலர்.
      இணையத்தின் ஆதிக்கம் தொடங்கியதும் அது பலரையும் தன வசப் படுத்திக் கொண்டது. தகவல் தொடர்பின் பரிமாணங்கள் விரிவடைந்தன. நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள் நான் இருக்கிறேன் என்று கைகுலுக்கி அழைத்தது. படைப்புகளையும் எண்ணங்களையும்  இலவசமாக வெளிப்படுத்த வாய்ப்பு அளித்தன. அச்சுப் பத்திரிகைகள் அளிக்கத் ்தவறிய வாய்ப்பை  இணையம் வழங்கியது.  கதை கவிதை கட்டுரை அரசியல் , நகைச்சுவை என விரும்பிய வண்ணம் தங்கள் படைப்புகளை வெளியிட்டு மகிழ்ந்தனர். வலைப்பூகள், முகநூல், டுவிட்டர் என அவரவர்க்கு ஏற்ற களங்களில் தங்கள் எண்ணங்களை பல்வேறு  வடிவங்களில் கொட்டித்   தீர்த்தனர். ஒரு சிலர்தான்  எழுத்தாளராக ்முடியும் என்ற நிலை மாறி படைப்பாளிகளின் எண்ணிக்கை   எண்ண முடியாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டிருகிறது      பத்திரிகையில்  மட்டுமே எழுதிய பிரபலங்களும்  இணையத்திலும்  இயங்கவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகினர். ஆனாலும் அச்சு வடிவில் தங்கள் படைப்பைக் காண வேண்டும் என்ற ஆவல் காரணமாக பலரும் இணையத்தில் எழுதிய படைப்புகளை நூலாக வெளியிட்டு  மகிழ்ந்தனர்.

    காலத்தின் கட்டாயம் அச்சு நூல்களுக்கு இன்னொரு வடிவமாக     மின்னூல்  உருப் பெற்றது .   ஒரு  அறை முழுதும் நிரப்பக் கூடிய நூல்கள் கையடக்கக் கருவியில்  அடங்கி விடக் கூடிய நிலை உருவானது.   இணையத்தில் இலவசமாகவும் விலைக்கும்    ஏராளமான மின்னூல்கள் கிடைக்கின்றன. மின்னூல் படிப்பதர்கேன்றே கிண்டில் ரீடர் போன்ற சாதனங்களும் வந்துவிட்டன.

  இத்தகைய சூழலில் மின்னூல், படைப்பாளிகள் மற்றும்   வாசகர்கள் தவிர்க்க   இயலாத ஒன்றாக ஆகிவிட்டது .பொழுது போக்குக்காக எழுதி வருவோரும் தங்கள் படைப்புகளை மின்னூலாக்கி இலவசமாகவோ விலைக்கோ வழங்குவதற்கான வாய்ப்புகள் விரவிக் கிடக்கின்றன 

  இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கும் பலருக்கும் தங்கள் படைப்புகளை மின்னூலாக்கிப் பார்க்கும் ஆசை இருக்கக் கூடும் . கொஞ்சம் தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் தங்கள் படைப்புகளை தாங்களாகவே மின்னூலாக்க முடியும் என்றாலும் தொழில் முறையிலான மின்னூல் தரமும் வடிவமைப்பும் படிப்போரைக் கவர்வதாக இருக்கும். 
அத்தகைய ஒரு வாய்ப்பை புஸ்தகா  டிஜிடல்    மீடியா  http://www.pustaka.co.in/  ஏற்படுத்திக் கொடுக்க   முன் வந்துள்ளது.

   சமீபத்தில் புதுக்கோட்டையில் கவிஞர் முத்து நிலவன் அவர்களின் ஒருங்கிணைப்பில் வெற்றிகரமாக மின்னூல் ஆக்க முகாம் நடை பெற்றதை  அறிந்திருப்போம்.  ஏற்கனவே பல அருமையான நூல்களை எழுதியவரான கவிஞர் முத்துநிலவன் அவர்கள் தன்படைப்புகளையும் மின்னூலாக்கி கணித் தமிழ் வளர்ச்சியில் தன்பங்கை முன்னிறுத்தினார் . மேலும் பல கவிஞர்கள் எழுத்தாளர்கள் ,வலைப் பதிவர்கள் தங்கள் படைப்புகளை மின்னூலாக்குவதற்கான ஒப்பந்தம்  பெறப்பட்டது.
     பல்வேறு படைப்பாளிகளின்  வேடந்தாங்கலான  சென்னையிலும் இத்ததகைய மின்னூலாக்க முகாம் நடத்த சென்னையில் உள்ளவர்கள் கூட காட்டாத ஆர்வத்தைக் கவிஞர் முத்துநிலவன் ஐயா அவர்கள் காட்டி அதற்கான ஏற்பாடுகளில் உறுதுணையாய் நிற்கிறார்.அதற்கு அவருக்கு நன்றி  கூற கடமைப் பட்டிருக்கிறோம். நல்லதோர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வோம் 

சென்னையில்   சிறப்பான மின்னூலாக்க முகாம் ஏற்பாடு செய்யப்
பட்டுள்ளது   
 முகாம் நடை பெறும்   இடம் 

ஹோட்டல் ராஜ் பேலஸ் 
12/1 தணிகாசலம் சாலை ,
தி நகர் 
சென்னை 17 

நேரம் : 6.00 PM- 8.30 PM
நாள் ;   25.02.2017

ஆர்வம் உள்ளோர் இம் முகாமில்   கலந்து  கொண்டு தங்கள் படைப்புகளை  மின்நூலாக்கி  உலகெங்கும் உலவச் செய்யலாம். 
              ஏற்கனவே நூல் வெளியிட்டிருப்போர் தங்கள் நூலின் ஒரு பிரதியும் தனது புகைப்படமும் கொண்டு வந்தால் போதுமானது  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . வலைப்பூக்கள், முகநூல் போன்றவற்றில்  எழுதியவர்களும்ட   விரும்பினால்  தங்கள் படைப்புகளின்   மென்பிரதி    மூலம்   மின்னூலாக்கிக் கொள்ளலாம்   . 

மேலும் விவரங்களுக்கு 


கவிஞர் முத்து நிலவன் அவர்களை தொடர்பு கொள்ளவும் 

கைபேசி எண் 9443193293


மின்னஞ்சல் muthunilavanpdk@gmail.com

இத்தகவலை எழுத்தாளர்களுக்கும்  நண்பர்களுக்கும்  தெரிவித்து பயன் பெற வேண்டும்   என கேட்டுக் கொள்கிறேன் 

****************************************************************************************

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

ஏமாந்தது யார்? ஸ்டாலினா?பன்னீரா?

  நேற்று முழுக்க சட்டசபை கூச்சல் குழப்பங்கள்  முழக்கங்கள்   ஒவ்வொரு வீட்டிலும் எதிரொளித்துக்   கொண்டிருந்தது. குழப்பங்களுக்கு மத்தியில் நம்பிக்கை வாக்கெடுப்பு எதிர்கட்சிகளின்றி நடத்தி  எடப்பாடி வெற்றி பெற்று விட்டதாக  சபாநாயகர் அறிவித்து விட்டார்.  அரசியலில் அவ்வளவாக ஆர்வம் இல்லாதவர்களுக்குக் கூட   தற்போதைய பரபரப்பான அரசியல் சூழல் ஆர்வத்தை உண்டாக்கி விட்டது.
         ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை என்று இருப்பவர்களையும் ஈர்த்த பெருமை நமது அரசியல் வாதிகளையே சாரும். சிறுவர் இளைஞர்கள், பெரியவர்கள் இளம் பெண்கள், இல்லத்தரசிகள், நடுத்தர வயதினர்  தாத்தாக்கள் பாட்டிகள் அனைவருமே   செய்தி சேனல்களை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தார்கள். நிமிடத்திற்கு ஒரு செய்தி நாளுக்கொரு அதிரடி. தொலைக் காட்சியை அணைக்க விடவில்ல. தெருவில் நடந்து சென்றால் எல்லா வீடுகளில் இருந்தும் செய்தி சேனல்களின் ஓசையே காதுகளை நிறைத்துக் கொண்டிருந்தது.சீரியல்களை விரும்பிப் பார்ப்பவர்கள் கூட செய்திகளின் விளம்பர இடைவேளைகளில்தான் சீரியல் பார்த்தனர்.
     ஜெயலலிதா மறைவு,சசிகலா பொதுச செயலாளராக தேர்வு, ஓ.பி.எஸ் சின்   திடீர் எழுச்சி , கூவத்தூர்   விடுதி சிறை,அணித்தாவல்கள், சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு, எடப்பாடி தேர்வு, நம்பிக்கை  வாக்கெடுப்பு என்று  தொடர் நாற்காலிச்   சண்டைகள்  பரபரப்புக்கு பஞ்சம் வைக்கவில்லை..தங்கள் சொந்தக் கவலைகலைக் கூட  இரண்டாம் பட்சமாகவே கருதி அரசியல் சூழலை உற்று நோக்கிக்  கொண்டிருந்தனர் மக்கள்.
         ஜெயலலிதா வின் மரணத்தில் தொடங்கிய மக்கள் முனுமுனுப்புகள்  சசிகலா  முதல்வராகும்  முயற்சிகள் எடுக்கத் தொடங்கியதும்அதிகரிக்கத் தொடங்கியது. ஜெயலலிதாவைப் போலவே தன்னை நினைத்துக் கொண்டு அவர்  நடந்து கொண்டது பலருக்கும் எரிச்சலை   ஏற்படுத்தியது. 
தூக்கத்தில் இருந்து விழித்த பன்னீரின் அறிக்கை அவர்  மீதுய் பரிதாபத்தை ஏற்படுத்தியது. அவர்   மீதான குறைகள் மறக்கப் பட்டு ஆதரவு பெருகியது. சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு பன்னீரின் நிலையை வலுவாக்கும் என்று நம்பினர்

    ஜெயலலிதாவின்மீது அபிமானம் கொண்டவர்கள் கூட  அவரும் குற்றவாளிதான் என்று அளிக்கப் பட்ட  தீர்ப்பு   என்பதை  மறந்து அது சசிகலாவுக்கு மட்டுமே வழங்கப் பட்ட தீர்ப்பாகவே கருதி  மகிழ்ந்தனர் . இதன் பின்னர் பன்னீர் பக்கம் அனைவரும் வந்து விடுவர் எதிர்பார்த்தனர் .
        சசிகலாவின் அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைத்தாகிவிட்டது போலத் தோற்றம் உருவானது. ஆனால் நடந்ததோ வேறு. எடப்பாடி நுழைக்கப் பட்டு காட்சி மாறியது.கவர்னர் பெரும்பான்மையை நிருபிக்க அழைத்தார். கடைசி நேரத்தில் ஒருசிலராவது  மனம் மாறுவர் என்று எதிர் பார்க்கப் பட்டது.  நிச்சயம் பெரும்பான்மை நிருபிக்க முடியாத சூழல் ஏற்படும் என்றே கருதினர்.தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினும்  அப்படித்தான் நினைத்தார். சசிகலாவின் ஆதரவாளர்கள் கையில் ஆட்சி போய் விடக் கூடாது என்பதே பெரும்பாலோரின் எண்ணமாக இருந்தது. இதனை தக்கபடி பயன்படுத்திக் கொள்ள அவர் முயற்சி மேற்கொள்ளவில்லை.

  ஸ்டாலினின் மெத்தனம் அவரது அரசியலில் பயிற்சி  தேவை என்பதையே எடுத்துக் காட்டியது. ஒரு சில அறிக்கைகளே போதும் என அவர் நினைத்து விட்டார் நிச்சயம் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி தோற்றுவிடுவார் என்று நம்பினார் ..  .கடைசி நேரத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்  எனக்  கோரியும் பலன் ஏதும் கிடைக்க வில்லை.
     ஒரு வேளை ரகசிய வாக்கெடுப்பு நடத்தி இருந்தாலும எடப்பாடியே ஜெயித்திருப்பார்..என்று தோன்றுகிறது. ஏன் அவநம்பிக்கை கொண்டார்கள் என தெரியவில்லை. எம்.எல்.ஏக்கள் மக்களுக்கு பயப்படுபவர்களாக இருந்திருந்தால் தங்கள் எண்ணத்தை எப்படியும் வெளிப்படுத்தி இருக்க முடியும். கூவத்தூர் சிறை எல்லாம் ஒரு சாக்கே. வாக்களிப்பிலும் அதை வெளிப்படுத்த முடியும். அவர்களின் நோக்கம் தெளிவானது. பதவியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். இதற்கு முழுக்க முழுக்க சசிகலாவை குற்றம் சாட்டுவதில் .அர்த்தமில்லை. அடைத்து வைத்ததில் வேண்டுமானால் அதிருப்தி இருக்கலாமே தவிர சசிகலாவை ஆதரிப்பதில் அவர்களுக்கு எந்தவித குற்ற உணர்வும் இல்லை. உண்மையில் சசிகலா இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை.அவர்கள் புத்திசாலிகள். மக்கள்தான் ஏமாளிகள்.சில இலவசங்களும் ஒட்டுக்கு நோட்டும் போதுமானது என்ற எண்ணத்தை உருவாக்கியது மக்களே.  ஒரு வேளை நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றிருந்தால்  சசிகலாவின் கட்டாயத்தால்  தான் வாக்களித்தோம் என்று சொல்லி தப்பித்து கொள்ள முடியும். 

  பன்னீர் இன்னும் சில எம்.எல்.ஏக்களாவது தங்கள் பக்கம் வருவார்கள் என்று நம்பினார். ஊடகங்கள்   அப்படிப்பட்ட பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது. மக்களின் ஆதரவும் அவர் பக்கம் இருந்தது காரணம் சசிகலா குடும்பத்தினர் மீது உண்டான வெறுப்பே. இவ்வெறுப்பினை  அறியாதவர்களாக  எம்.எல்.ஏக்கள்  இருப்பார்கள் என்று கருதுவதற்கு இடமில்லை. ஆனாலும் அவர்கள் நிலை பணம் பதவியை தக்கவைப்பதிலதான்     இருந்தது என்பது ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகிவிட்டது . எம்.பிக்கள் ஒரு சிலர் வந்தார்களே தவிர எம்.எல் ஏக்கள் வரவில்லை  வந்தவர்களில் சிலர் நாம் பன்னீர் பக்கம் வந்தது தவறோ என்று தங்கள் நிலையை மாற்றிக் கொண்டாலும் ஆச்சர்யப் படுவதிற்கில்லை. ஒரு வேளை பன்னீரே அப்படி நினைக்காமல் இருந்தால் சரி

    பழம் நழவி பன்னீர் கையில் கிடைக்காது  எப்படியும் பன்னீர் சசிகலா சண்டையில்  தனக்கு தானாகவே ஆதாயம் கிடைக்கும் என்று நினைத்து ஏமாந்தார் .ஸ்டாலின்.   இதில் நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை . அவர்களாகவே பிளவு பட்டு நிற்பார்கள் என்று வாளாவிருந்து விட்டார் . பன்னீருக்கு தங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற எண்ணத்தை  ஸ்டாலின் ஏற்படுத்தி இருந்தால் கூட இன்னு சில எம்.எல்.ஏக்கள் வந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கக் கூடும். துரைமுருகன் அந்தக் காரியத்தை செய்தார்.ஆனால் ஸ்டாலின் அதனை தவற விட்டு விட்டார் என்றும் சொல்லலாம்..
     எதிர்க் கட்சியே இல்லாமல்  நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து விட்டது. 
சபாநாயகர் ஒரு தலைப் பட்சமாக நடந்து கொண்டாலும்  திமுகவினர் சட்டபையில் நடந்து கொண்ட முறை அக் கட்சியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்த  தவறி விட்டது.  ஒரு வேளை இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாமல் போனாலும் மீண்டும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப் பட்டாலும் இதே முடிவுதான் கிடைக்கப் போகிறது. 122 எம்.எல்.ஏக்களில் ஒரு சிலருக்கு மனசாட்சி உறுத்தி இருக்கலாம் அவர்கள் கூட நாம் வாக்களிக்கப் போவது சசிகலாவுக்கு இல்லையே எடப்பாடிக்குத்தானே  என்றே தங்கள் மனச்சாட்சிக்கு பதில் சொல்லி இருப்பார்கள்  

   மொத்தத்தில்  அதிகம்  ஏமாந்தது பன்னீரா ஸ்டாலினா என்று   பட்டிமன்றம் நடத்தினால்  இருவரையும் விட அதிகம் ஏமாந்தது மக்கள்தான் என்று தீர்ப்பு சொல்ல வேண்டி இருக்கும்.



************************************



எச்சரிக்கை :  இந்த ஆண்டில்   எழுதும் முதல் பதிவு  அலுவல் மற்றும் அலுவலகப் பணிகள் காரணமாக வலைப் பதிவு எழுத இயலாமல் போனது. இனி மாதம் மூன்று பதிவுகளாவது எழுத உத்தேசம்.