என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 29 அக்டோபர், 2018

மதிமாறனுக்காக தோசை-இட்லி புதிய தத்துவங்கள்


மதிமாறன் சார்! 
    வைரமுத்து சின்மயி விவகாரம் பரபரப்பு இழந்து உங்கள் தோசைப் பேச்சு  தற்போது சமூக வலை தளங்களின் பேசு பொருளாக ஆகி விட்டது.  உங்கள் பேச்சு கேலிப் பொருளாக மாறும் என்று நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டீர்கள். உங்கள் பேச்சு வெறுப்புணர்வின் வெளிப்பாடாகவே அமைந்திருந்தது.  மீம்ஸ்களின் நாயகனாக இன்று மாறி இருக்கிறீர்கள் இதுவும்  ஒரு விளம்பரம்தான் 
     சில ஆண்டுகளுக்கு சன் டிவி சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் அருமையான நிகழ்ச்சி ஒன்று ஒளி பரப்பானது. 
     இட்லி தோசைகள் தயாரிப்பு விதம் விதமாக   காட்சியாக தெரிய பின்னணியில் சன் டிவி செய்தி வாசிக்கும்   சண்முகத்தின் வசீகரக் குரலில் இட்லி தோசையை வாழ்க்கையோடு ஒப்பிட்டுக் கூறிய நிகழ்ச்சியை பாத்தேன்.  அதனை அப்படியே இங்கு விவரித்திருக்கிறேன்.

     உங்கள் தோசை  இட்லி  சாதிய தத்துவத்திற்கும்  இந்த இட்லி தோசை தத்துவத்திற்கும் உள்ள வித்தியாசத்தை படித்துப் பாருங்கள்.  ஏற்கனவே இப்பதிவை நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதி இருந்தேன். உங்களுக்காக மீண்டும் இன்று. 

இட்லியும்  தோசையும் 

   இட்லி என்பது மௌனம். தோசை என்பது சப்தமும் பேச்சும். இட்லி ஒவ்வொரு விள்ளலிலும் மௌனத்தை வெளிப்படுத்தும்.தோசை ஒவ்வொரு துண்டிலும் மொறுமொறுப்பான சத்தத்தில் பேசும். உறவு என்பது முதலில் மௌனத்தில் தொடங்கி பேச்சில் வளர்வது. பிரிவு என்பது பேச்சில் தொடங்கி மௌனத்தில் முடிவது. உறவு என்பது இட்லியில் தொடங்கி தோசையில் வளர்வது. பிரிவு என்பது தோசையில் தொடங்கி இட்லியில் முடியும் என்பதால்  யாரும் தோசையில் தொடங்கு வதில்லை. உணவு விஷயத்தில் உணர்வுகள் சரியாகவே இயங்கு கின்றன. இட்லியில் தொடங்கித்தான் தோசையில் வளர்கின்றன.உணவு விஷயத்தில் சரியாகச் செயல்படும் உணர்வுகள் உறவு விஷயத்தில் மாறிச் செயல்படும்போது உறவுகள் உடைகின்றன.

   இட்லிக்கு பின் தோசை என்பது இயற்கையின் தொடர் நிகழ்வு. இட்லிகள் பூக்கள். தோசைகள் என்பவை கல்லில் பழுப்பவை. அதிக நேரம் இருவர் மெளனமாக இருக்கும்போது  சிறிது புளிப்பு ஏற்படும். அப்போது சுவையான உரையாடலில்  ஈடுபடுவது சுவையோ சுவை. முதல் நாள் மாவில் இட்லி உற்பத்தியாகும் அது மௌனம்.மறுநாள் சிறிது புளித்தவுடன் தோசைகளை படைப்பதுண்டு.அது பேச்சைப் போன்றது.

   மௌனத்தில் இருந்தே பேச்சு பிறக்கவேண்டும். இட்லியும் தோசையும் இதையே மௌனமாகவும் மொறுமொறுப்பாகவும்  வெளிப் படுத்துகின்றன. மௌனம்  என்பது இட்லியின் வடிவமாக இருப்பதால் இரண்டு நிலைகளை இட்லிகள் எடுக்கத் தேவை இல்லை. அவை ஒரே நிலையில் உருவாகின்றன. இட்லிகள் பிரண்டு படுப்பதில்லை, தோசை என்பது பேச்சின் வடிவமாக இருப்பதால் அது வாயின்  தன்மையை பெற வேண்டி இருக்கிறது.தோசைக் கரண்டிதான் நாவு. சுவையூறும் உமிழ் நீர் போன்றது எண்ணை. நாவு இரண்டு பக்கமும் பேசும். கரண்டி நாவுகள் தோசையை இரண்டு பக்கமும் திருப்பிப் போடும். மௌனத்திடம் நாவுக்கு என்ன வேலை?

   இட்லிக்கும் தோசைக்கும் தொடர்பிருந்தாலும் இட்லிக்கும் தோசைக் கரண்டிக்கும் தொடர்பில்லை. மௌனத்தின் ருசி உமிழ் நீருக்கு அப்பாற்பட்டது என்பதால்  இட்லியின் உருவாக்கத்தில் எண்ணைக்கு பெரிய இடமில்லை. இட்லி குழந்தை; தோசை வளர்ச்சி; தாயின் மடியிலிருந்து  பிரண்டு விழும் குழந்தையைபோல துணியிலிருந்து இட்லி விழுவது அழகின் அடுக்கு .தோசைகள் வளர்பவை. ஹோட்டல்களில் தோசை, கல்லில் ஊற்றப்பட்டு பின்எழுதப்பட்டு பின் சுடப்பட்டு பின் சுருட்டப்பட்டு பின்னும் கட்டுக்குள் அடங்காமல் படைக்கப் படுகின்றன. 

   இட்லிகள் பிறந்த வீட்டின் பெருமையும் புகுந்த வீட்டின் தன்மையும் கொண்ட பெண் போன்றவை. பிறந்த வீட்டின் பெருமை  என்பது வெண்மை நிறம். இட்லியின் வளரச்சியில் இட மாற்றம் உண்டு என்றாலும் நிற மாற்றம் கிடையாது. புகுந்த வீடு என்பது குழிவு ஆனால் இட்லிகளில் குழிவுகள் தெரியாது.அதையும் மேடாக்கிக் காட்டும் மேன்மை பொருந்தியவை இட்லிகள். தோசைகளில் தோசைக்கல்லின் வடிவம் முழுமையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஹோட்டல்களில் சதுரக்கல்லில் வட்ட தோசைகளும் முக்கோணமாக மடிக்கப் பட்ட தோசைகளும் பிறக்கின்றன. வீட்டில்கூட பிற  வடிவத்தை தோசைகள் ஏற்றுக் கொள்வதில்லை. இருந்தாலும் இட்லிக்கு தோசை மீது ஆழ்ந்த பிரியம் உண்டு. ஒன்றில் ஊற்றப்பட்டு அதன் வடிவத்தை ஏற்பதை வார்க்கப்படுதல் என்பார்கள்.உண்மையில் இட்லிகள்தான் வார்க்கப் படுகின்றன என்றாலும் அந்தப் பெயரை தோசைக்கு கொடுப்பதில்தான் இட்லிக்கு சந்தோஷம். 

  குழந்தைகள் இளமைப் பருவத்தை அடைந்தவுடன் பழைய அடையாளங்கள் மறைந்து புதியவை பிறக்கும். புதிய உறவுகள் கூடும். தோசைகள் அப்படிப்பட்டவை. தோசைகள் வண்ணத்தை மாற்றிக் கொள்ளும்; புதியவைகளை சேர்த்துக் கொள்ளும். ரவா தோசை, மசாலா  தோசை, பொடி தோசை வெங்காய ஊத்தப்பம் என பலப்பல வகைகள்; குட்டித் தோசை கல் தோசை என்ற பல வடிவங்கள். அதிலும் இந்த மசாலா தோசைகள் மிகவும் சுவாரசியமானவை. உருளைக் கிழங்குகள் மண்ணுக்குள் விளைபவை. சட்னி தரும் தேங்காய்கள் விண்ணில் தொங்குபவை. மண்ணுக்குள் விளைந்த உருளைக் கிழங்கை வயிற்றுக்குள் வைத்த மசாலா தோசைக்கு விண்ணில் விளைந்த தேங்காய்ச் சட்னி ஏகப் பொருத்தம். 
  குழந்தைகளை தொட்டுப் பார்க்கத் தூண்டுவது எல்லோருக்கும் இயற்கைதானே. இட்லிகளை தொட்டுப் பார்ப்பார்கள்.சமைத்தவரின் விரலைப் பதிவு செய்யும் பழக்கம் சில இட்லிகளுக்கு உண்டு. ஆசை ஆசையாக பார்த்து செய்யப்பட வேண்டியது தோசை. இட்லிகள் பூப்பதை  யாரும் பார்க்க முடியாது. இட்லி மௌனத்தின் ரகசியம். 

   குழந்தைகளில் குட்டிக் குழந்தைகள் இருப்பது மாதிரி. இட்லிகளில் குட்டி இட்லிகள் உண்டு குழந்தைகளுக்கு குளிப்பது பிடிக்கும்தானே? குட்டி இட்லிகளை சாம்பாரில் குளிக்க வைக்க வேண்டும். பாத் டப்பைப் போல இந்தத் தட்டும் குளிப்பதற்கு ஏற்றார்போல குழிவாக இருக்கும். குட்டி இட்லிகளை கைகளால் தொடக் கூடாது. ஸ்பூனால் எடுத்துப் போடவேண்டும். 

  இட்லிக்கும் தோசைக்கும் ஒரு பெரிய ஒற்றுமை இருக்கிறது. ஒன்று பழைய தமிழ்ச் சொல்லையும் மற்றொன்று பழைய கலாசாரத்தையும் நினைவூட்டுகிறது. 'இடு' என்பது இடுதலை குறிக்கிறது. இட்டு மூடி விடுபவை இட்லிகள். கல்லில்தான் ஆதி மனிதர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள். இன்றைக்கு இரும்பிலும் மற்ற உலோகத்திலும் வந்தாலும் அதற்குப் அவற்றிற்குப் பெயரென்னவோ தோசைக் கல்தான். இடு என்பது துன்பத்தையும் குறிக்கும். இடுக்கண் வரும்போது சிரிக்கவேண்டும் என்கிறார் வள்ளுவர். பள்ளங்களில் இடப் படும் மாவு இட்லியாகச் சிரிக்கிறது;பக்குவமடைகிறது. ஒரே மாவுதான் இட்லியாகவும் சிரிக்கிறது; தோசையாகவும் இருக்கிறது; மௌனமாகவும் இருக்கிறது; பேச்சாகவும் இருக்கிறது;. இரண்டுமே தேவைப் படுகிறது வாழ்க்கைக்கு.

இதையெல்லாம் விட்டுட்டு  தோசைக்கும் இட்லிக்கும் சாதி சாயம் பூசியது நியாயம்தானா?

செவ்வாய், 16 அக்டோபர், 2018

96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo

   
 வைரமுத்து நான் மதித்து வந்த ஒரு கவிஞர்.  அற்புதமான சொல்லாற்றல் உடையவர். திரைப் பாடல்களுக்கும் கவிதை உணர்வைத் தந்தவர். அவருடைய பல கவிதைகளை நான் என் வலைப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.  அவரது கவிநயம் கண்டு வியந்திருக்கிறேன்.
       
       திரை உலக பிரபலங்கள் பெரும்பாலும் அரசியல் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள். .ஆனால் ஜெயலலிதா கோலோச்சியபோது கூட கலைஞருடனான நெருக்கத்தை அவர் விடவில்லை வைரமுத்து. எனினும் அவர் அவ்வப்போது மோடியையும் புகழ்ந்து பேசவும்  தயங்கியதில்லை. அவர் புகழுக்கும்  விருதுகளுக்கும் ஆசைப் படுபவர்.அதை எப்படியாவது வாங்கும் திறமை படைத்தவர் என்பது பரவலாக அறியப்பட்ட ஒன்று. ஆனால் பாலியல் புகாருக்கு ஆளாவார் என்பது எதிர் பாராத ஒன்று

       #MeToo tag  மூலம் இந்தியா முழுதும் பல பிரபலங்களின் பாலியல் தொல்லைகள் அம்பலப் படுத்தப் பட்டு வருகின்றன. அதிகாரம் செல்வாக்கு பணபலம் இவற்றால்  தவறுகள் யாருக்கும் தெரியாது என்று இருமாப்புடன் இருந்தவர்களுக்கு வில்லனாய் வந்தது #MeToo.  தமிழ்நாட்டில் இந்த இயக்கத்தில் முதலில் சிக்கிக் கொண்டார் வைரமுத்து .அவரைப் பற்றி சின்மயி பாலியல் தொல்லை குற்றச்சாட்டு கூறியுள்ளது . தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில்  விவாதப் பொருளாக மாறியுள்ளது. பெரும்பாலான பெண்கள் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆண்களைப் பொறுத்தவரை பிஜேபி யினர் மற்றும் ஆண்டாள் பற்றிய வைரமுத்துவின் கருத்தின்மீது கோபம் கொண்டவர் மட்டுமே இவ்விஷயம் சார்ந்து வைரமுத்துவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.  

     இனம் சார்ந்த நோக்கில் ஆண்களில் பலர் சின்மயின்மீது குற்றம் சுமத்தவும் தவறவில்லை.  நீ என்ன யோக்கியமா என்ற தொனியில் ஆபாசமான வசை பாடல்களை காணமுடிகிறது. பெரியாரிய வாதிகள் . பலர் இன்று அமைதி காக்கின்றனர்.  . இதற்கு சின்மயியும் ஒரு காரணம். ஏற்கனவே  தன்னை பார்ப்பனர் என முன்னிலைப் படுத்திக் கொண்டதில் பார்ப்பனர் அல்லாதவரின் ஆதரவை இழந்தார்.. . இதனால் ஆண்டாளுக்கு ஆதரவான பார்ப்பன சதி என்று கூறிவிடவும் முடியவில்லை. காரணம் பார்ப்பனர் சிலரும்  #MeToo இல் சுட்டிக் காட்டப்பட்டனர். ஆனால் அவர்கள் வைரமுத்துவைப் போல் புகழ் பெற்றவர்கள் அல்ல என்பதால் கவன ஈர்ப்பு பெறவில்லை. என்மீது வழக்கு தொடருங்கள் நான் நல்லவனா கெட்டவனா என்பதை நீதி மன்றம் முடிவு செய்யட்டும் என்று பதிலுரைத்துள்ளார் வைரமுத்து. ஆனாலும் இன்று வரை புகார்கள் தொடர்கின்றன.

     ஒரு சிலர் பெட்ரோல் விலை உயர்வு, ரபேல் விவகாரம் போன்றவற்றை மறப்பதற்காக திட்டமிடப்பட்டு பரப்பப் படுகிறது என்கின்றனர். ( அப்படி எல்லாம் கஷ்டப் படவே தேவை இல்லை. எப்படி இருந்தாலும் ரெண்டு நாள்ல நாமளே மறந்துடுவோம்.)

       இதனை ஏன் சின்மயி அப்போதே சொல்லவில்லை என்ற கேள்வி எழுகிறது. நடைமுறை  வாழ்க்கையில் சில விஷயங்கள் சில ஆண்டுகளுக்குப் பின்னரே சுட்டிக் காட்டப்பட்டு பிரச்சனை தொடங்கப் படுகிறது.  ..  மனைவி திடீரென்று ஒரு நாள் கணவனிடம் முதன் முதல்ல உங்க அம்மா என்ன பண்ணாங்க தெரியுமா என்று மாமியார் தொல்லைகளை கோபத்துடன் கூறுவார். இத அப்பவே சொல்ல வேண்டியதுதானே என்றால்,  ’அப்ப எங்க சொல்ல விட்டீங்க?’ என்று தொடங்கி நீங்க செஞ்சதை சொல்லவா என தொடர்வதும் நடைமுறை!
ஆண்கள் தங்கள் திரும்ணத்திற்கு முந்தைய காதலையோ அல்லது அந்தரங்க சம்பவங்களையோ தன் நண்பர்களிடம் கூச்ச மின்றி குற்ற உணர்வின்றி பகிர்ந்து கொள்ள் முடியும். ஆனால் எல்லா பெண்களும் தங்கள் நெருங்கிய தோழிகளிடம் கூட பகிர்ந்து கொளவார்களா என்பது ஐயமே

        வைரமுத்து சபலம் அடைந்திருக்கலாம். நெறி பிறழ்ந்திருக்கலாம்.தன் செல்வாக்கை பயன்படுத்தி இருக்கலாம் ஆனால் காமக் கொடூரன் அளவுக்கு சித்தரிப்பது சற்று அதிகமோ என்றே தோன்றியது. ஆனால் வைரமுத்துவின் மீது புதுப்புது புகாராக முளைத்துக் கொண்டிருப்பது அவர் மீதான நம்பிக்கையை குலைத்துவிட்டது.  பிரபலங்கள் இதனை பாடமாகக் கொள்வது நல்லது
.
   #MeToo  வில் பெண்கள் தைரியமாக தங்கள் அனுபவத்தை  பகிர்கிறார்கள். ஆனால் 96 படத்தை பார்த்து விட்டு ஆண்கள் ( நான் இன்னும் பார்க்கவில்லை) உருகி உருகி தங்கள்  பழைய காதலை முகநூலில்  பகிர்ந்தார்கள்.  அவர்கள் அனைவ்ரும் ஆண்களே. ஆனால் இதில் ஒரு பெண்கூட தன் காதலை  பகிர்ந்ததாகத் தெரியவில்லை.  முந்தைய தலைமுறை ஆண்களின் மனதை அறிந்தவர்கள் பெண்கள். . அதனால் இதுபோன்ற விஷயங்களை பகிர்ந்து சிக்கலை உருவாக்கிக் கொள்ள விரும்புவது இல்லை.

 ஒருபக்கம் #MeToo ஆண்களின் (பெரும்பாலும் வயதானவர்கள்) இன்னொரு பக்கத்தை வக்கிரங்களை   அடையாளம் காட்டுவது போலவே அடுத்த தலைமுறை ஆண்களின்  மனமாற்றத்தையும் (பெருந்தன்மையை?)  வெளிக்காட்டுகிறது என்று கூறலாம் கணவனிடம் தன் சிறுவயதில் நடந்த #MeToo சம்பவங்களை தைரியமாக பகிர்ந்து விட முடியாது. அதை கணவன் சரியாகப் புரிந்து கொள்வானா என்பது ஐயமே.ஆனால்  அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் ஆண்களுக்கு இப்போது வந்திருக்கிறது என்பதை சம்பவங்கள் உணர்த்துகின்றன. ஆனாலும்  தன் மனைவியின் கடந்த கால அந்தரங்க சம்பவங்கள் வெளியில் தெரிவதை எந்தக் கணவனும் விரும்பமாட்டான் என்பது நிதர்சனம். ஆனால்  தற்போது தைரியமாக சொல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சிலர் ஆதரவு அளிக்கிறார்கள். அதனால் பலரும் உசுப்பிவிடப் பட்டது போல் தங்களுக்கு நேர்ந்ததை கொஞ்சம் மிகைப்படுத்தியும்  தைரியமாக சொல்கின்றனர்..

 #MeToo வால் சில நன்மைகள் விளைந்தாலும் சில குறைகளும் உண்டு.  பெண்கள் ஒரு வித கழிவிரக்கத்தை தங்கள்மீதே ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு. இயல்பாக நடந்தவற்றைக் கூட பாலியல் சார்ந்ததாக இருந்திருக்குமோ என்ற எண்ணத் தோன்றும்.. இதைப்  பற்றி பேசும் பெண்கள் எல்லாம் இது உங்கள் வீட்டில் நடக்கலாம். பக்கத்து  வீட்டில் நடக்கலாம் என்று கூறுவதை காணலாம். இதனால்  தினந்தோறும் இப்படித்தான் நடக்கிறதோ என்ற மாயை உருவாக்கி விடும் அபாயம் உள்ளது. #MeToo வைக் காண்போர் நமக்கு   10 வயது இருக்குபோது தாய்மாமா என்னை இடுப்பைப் பிடித்து தூக்கி மடியில் உட்காரவைத்துக் கொண்டு கன்னத்தை கிள்ளி கொஞ்சினாரே அது கூட பாலியல் வன்முறையாக இருக்குமோ என்று ஆராயத் தொடங்கினாலும் ஆச்சர்யப் படுவத்ற்கில்லை.

     பொது வாழ்வில் உள்ளவர்கள் பிரபலங்களின் முகத்தை தோலுரித்துக் காட்டப் படுவதால் இனி தவறுகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதன் மூலம் எந்த பிரபலத்தின் மீதும் சேற்றை வாரி இறைத்து விடமுடியும். அதனால் பெண்கள் உண்மை எனும் பட்சத்தில் மட்டும் பகிர வேண்டும்.  ஆனால் நடைமுறை வாழ்வில் வீடுகளில் அலுவலகங்களில் இத் தொல்லைகளை அனுபவித்தவர்களுக்கு இதனால் அதிகப் பயன் ஏதுமில்லை/ இன்னும் சில நாட்களில் #MeToo மறக்கப் பட்டுவிடும்.  


செவ்வாய், 2 அக்டோபர், 2018

அதிசய வக்கீல் காந்தி

        
      
உலகத்திற்கே அகிம்சைப் போராட்டத்தை கற்றுத் தந்தவர் காந்தி
      வக்கீலாக வாழ்க்கையைத் தொடங்கிய மகாத்மாவின் வாழ்க்கை பல்வேறு திருப்பு முனைகளைக் கொண்டது. சொல்லுக்கும் செயலுக்கும் ஒரு நூலிழை வேறுபாடும் இன்றி வாழ்ந்து காட்டியவர்.
        பள்ளிப் பாடங்களில் காந்தியைப் பற்றி ஆசிரியர்கள் சரியாக கற்பித்ததாக நினைவில்லை. பெரும்பாலான தமிழாசிரியர்கள் காந்திக்கு எதிரான மனநிலையையே கொண்டிருந்ததாகவே கருதுகிறேன். அதனால் பள்ளி வயதில் காந்தி தாக்கம் ஏதும் ஏற்படுத்தவில்லை. ஆனால் பிற்காலத்தில் அவரைப் பற்றிய தகவல்களை படித்தறிந்தபோது ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சத்திய சோதனை படித்ததும் காந்தியின் மீதான உயர் எண்ணம் வலுப்பட்டது. காந்தி மீதான விமர்சனங்களும், எதிர்மறைக் கருத்துகளும் கேலிகளும் எந்த விதத்திலும் என் கருத்தில் மாற்றம் விளைவிக்கவில்லை. மகாத்மாவில் 150 வது பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
      பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியா வந்த பின் காந்தி வக்கீல் தொழிலில் ஈடுபட்டார்.  லண்டன் சென்று படிப்பதற்கு ஆதரவு கொடுத்து செலவுகளுக்கும் உதவிய காந்தியின் மூத்த சகோதரர் லட்சுமிதாஸ் காந்திக்கு, காந்தியின் மீது பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது. காந்தி வக்கீல் தொழிலில் பிரகாசித்து பொருளீட்டுவார் என்று நம்பினார். ஆனால் காந்தி முதல் வழக்கிலேயே சொதப்பினார். வாதாடுவதற்கு எழுந்து நின்றார். நாக் குழறியது . கட்சியின் கொள்கை என்ன என்று ரஜினியை பத்திரிகையாளர் கேட்ட போது தலைசுற்றியதாகக் கூறினாரே அது போல காந்திக்கும் தலை சுற்றியது. அவரால் வாதிட முடியவில்லை குறுக்கு விசாரணை செய்ய முடியாமல் தடுமாறினார். இந்த வழக்கில் வாதாட இயலாது என கூறி பெற்ற முன் பணத் தொகையை திருப்பிக் கொடுத்து விட்டார். சரிவர வக்கீல் பணியை செய்ய இயலாததற்கு வெட்கப்பட்டார் காந்தி.
   இந்த நிலையில் போர்பந்தரின் உள்ள ஒரு மிகப் பெரிய வியாபாரக் கம்பெனியினர் லட்சுமிதாஸ் காந்திக்கு ஒரு கடிதம் எழுதினர்,” எங்கள் கம்பெனி தென் ஆப்ரிக்காவிலும் வியாபாரம் செய்து வருகிறது. எங்களுக்கு பவுன் 40000 வர வேண்டி இருக்கிறது அதற்கான வழக்கு தென் ஆப்ரிக்காவில் நடந்து கொண்டிருக்கிறது . பெரிய வக்கீல்களையும் பாரிஸ்டர்களையும் அமர்த்தி இருக்கிறோம். வக்கீல்களுக்கு விஷயங்களை எடுத்துக் கூற உங்கள் தம்பியை அங்கு அனுப்பி வைக்க வேண்டும் எங்களை விட அவரால் தகவல்களை சிறப்பாக எடுத்துக் கூற முடியும் என்று நம்புகிறோம்” என்று காந்தியை அனுப்பக் கோரினர். 
     கோர்ட்டில் ஆஜராகாமல் வக்கீல்களுக்கு மட்டும் எடுத்துக் கூறும் வேலையாக இருந்தால் மட்டும் நல்லது என்று நினைத்தார்.
வேலை கடினமாக இராது என்றும் வக்கீல்களுக்கு தகவல்களை விளக்கும் நேரம் போக மற்ற நேரத்தில் எங்கள் வியாபாரத்தின் கடித விவகாரங்களை கையாண்டால் போதும் என்றும் 105 பவுன் சம்பளம் என்றும் போய் வர் கப்பலில் முதல் வகுப்புக் கட்டணம் வழங்கவும் சம்மதம் தெரிவித்தனர்.. தன் குடும்ப செலவுக்கு போதுமான தொகை தர இயலவில்லையே என்ற வருத்ததில் இருந்த காந்திக்கு இது மகிழ்ச்சியைத் தந்தது.
பாரிஸ்டராக அல்ல. அப்துல்லா கம்பெனியின் ஊழியராக நினைத்தே தென்னாப்ரிக்காவுக்கு புறப்பட்டார் காந்தி. பல நாட்கள் பயணத்திற்குப் பிறகு நேட்டால் துறைமுகத்தை அடைய அங்கேஅப்துல்லா அவரை வரவேற்றார். 
         மிகப் பெரிய வர்த்தகராக இருந்தாலும் இந்தியர்களுக்கு அங்கே உரிய மரியாதை இல்லை என்பதை தென்னாப்ரிக்காவில் கால் வைத்ததுமே காந்தி உணர்ந்தார் இது மிகப் பெரிய வருத்தத்தை தந்தது. அப்துல்லா சேத் துக்கு எழுதப் படிக்கத் தெரியாது. என்றாலும் விஷய ஞானமும் புத்திசாலித்தனமும் உடையவர் என்பதை அறிந்தார் காந்தி 
      டர்பன் நீதி மன்றத்திற்கு தலைப்பாகை அணிந்திருந்த காந்தியை அழைத்துச் சென்று அங்குள்ளவர்களுக்கு அறிமுகப் படுத்தினார் அப்துல்லா சேத். வக்கீல்களுக்கு அருகில் அமர்ந்திருந்த காந்தியையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தார் ஒரு மேஜிஸ்ட்ரேட்.. தலைப்பாகை அவர் கண்ணை உறுத்தியது. காந்தியை தலைப்பாகையை எடுக்கும்படி கோபத்துடன் கூறினார். காந்தி மறுத்து விட்டார். மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். காந்தி. காந்தியின் முதல் போராட்டம் இப்படித்தான் தொடங்கியது.
    அங்கு முஸ்லீம்கள் மட்டும் தலைப்பாகை அணிய அனுமதி உண்டு முஸ்லீம்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்லாமல் தங்களை அரேபியர்கள் என்று சொல்லிக் கொள்வதால் இந்த அனுமதி அவர்களுக்கு கிடைத்திருந்தாது
     இதனை காந்தி விடுவதாக இல்லை பத்திரிகைகளுக்கு தலைப்பாகை விவகாரம் பற்றி எழுதினார் காந்தி . நீதிமன்றத்தில் தான் தலைப்பாகை அணிந்தது நியாயம் என்று வாதாடினார் . இது சார்ந்து பத்திரிகைகள் பலத்த விவாதம் நடத்தியது. காந்தியை வேண்டாத விருந்தாளி என வர்ணித்தன . பைத்தியக்காரத்தனமான துணிச்சல் என்று சிலர் கண்டித்தனர். ஒரு சிலர் ஆதரவும் அளித்தனர். இதனால் காந்தி பிரபலம் அடையத் தொடங்கினார். முதல் வழக்கில் தோற்றாலும் முதல் போராட்டத்தில் வெற்றி பெற்றார். ஆம். தென் ஆப்ரிக்காவில் இருந்தவரை தலைப் பாகை அணிவதை கைவிடவில்லை. காந்தியின் உறுதி பாராட்டப் பட்டது. 
      வழக்கு தொடர்பாக அப்துல்லா சேத் தனக்கு பதிலாக காந்தியை பிரிட்டோரியா செல்லக் கோரினார். வழக்கு விவரங்களை சேத்தின் குமாஸ்தா விளக்கினார். வழக்கு முழுக்க கணக்கு விவகாரமாக இருந்தது. காந்திக்கு தலையும் புரிய வில்லை காலும் புரியவில்லை கணக்கு வைக்கும் முறையைஅறியாமல் இவ்வழக்கில் ஈடுபடுவது கடினம் என்று எண்ணினார். குமாஸ்தா பி. நோட்டு என்ற வார்த்தையை அடிக்கடி பயன் படுத்தினார். அது என்னவென்றே காந்திக்கு தெரிந்திருக்கவில்லை. பாரிஸ்டர் பட்டம் ஒரு ஏட்டு சுரைக்காய் என்பதை பல அனுபவங்கள் காந்திக்கு உணர்த்தின.. வெட்கத்தை விட்டு குமாஸ்தாவி\டம் கேட்டு பி. நோட் என்றால் பிராமிசரி நோட்டு என்று அறிந்தார். பின்னர் கணக்கு வைத்தல் சம்பந்தமான புத்தகம் ஒன்றைப் படித்து ஓரளவு தெளிவும் பெற்றார் காந்தி -
     பிரிட்டோரியாவுக்கு புறப்பட்டார் காந்தி இந்தப் பயணத்தில்தான் புகழ்பெற்ற திருப்புமுனை சம்பவங்கள் நடைபெற்றன இதனை ஏற்கனவே எழுதி விட்டதால் தவிர்த்து விட்டு பிரிட்டோரியாவில் நடந்ததைப் பார்ப்போம்
பிரிட்டோரியாவில்தான் வழக்கு சம்பந்தமான அறிவும் மக்கள் பணி பற்றிய தெளிவும் தனக்கு கிடைத்ததாக காந்தி கூறுகிறார். 
        அப்துல்லா சேத்தின் வழக்கு எளிய வழக்கல்ல சிக்கலான வழக்கு என்பதை காந்தி உணர்ந்தார். சிக்கலான கணக்குப் பதிவுகள். இருபுறமும் அலசப் பட வேண்டி இருந்தது. தன் கட்சிக்காரரான அப்துல்லாவின் பக்கம் நியாயம் இருந்தது. ஆனால் வழக்கு எப்போது முடியும் என்று சொல்வதற்கில்லை வழக்கு தொடர்ந்து நடந்தால் இருவருக்குமே எழுந்திருக்க முடியாத நஷ்டம் ஏற்படும் என்பதை திட்டவட்டமாக அறிந்தார் காந்தி. எதிரியான தயாப் சேத், அப்துல்லாவுக்கு உறவினரே என்பதை அறிந்த காந்தி சமரசம் செய்து கொள்ள பரிந்துரைத்தார். அரைகுறை மனதுடன் சம்மதித்தார் அப்துல்லா. காந்தி தயா சேத்தை சந்தித்து சமரசத்திற்கான அவசியத்தை வலியுறுத்தினார், இருவரும் நம்பத்தகுந்த ஒரு மத்தியஸ்தர் மூலமாக வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதன் மூலம் 37000 பவுன் தயா சேத், அப்துல்லாவுக்கு செலுத்த ஒப்புக்கொண்டார். ஆனால் அவ்வளவு தொகையை ஒரே தவணையில் செலுத்தினால் அவர் திவால் ஆகி விடுவார் என்ப்தை காந்தி உணர்ந்தார். ஆனால் தயாசேத்தோ ஓரே தவணையில் செலுத்துவதே கவுரவமாகக் கருதினார். தவணை முறையில் பெற்றுக் கொள்ள அப்துல்லாவும் சம்மதித்தார். இரு பெரும் வியாபாரிகளின் பிரச்சனை முடிவுக்கு வந்ததில் தென்னாப்ரிக்க இந்தியர்கள் மகிழ்ந்தனர்.
பிளவுபட்ட இரு கட்சிக்காரர்களை ஒன்று சேர்ப்பதே ஒரு நல்ல வக்கீலின் கடமை என்று கருதினார் காந்தி. 
  தான் வக்கீல் தொழில் நடத்திய 20 ஆண்டுகளில் நூற்றுக் கணக்கான வழக்குகளில் தனிப்பட்ட முறையில் சமரசம் செய்து வைத்ததில்தான் நான் அதிக ஆனந்தம் அடைந்தேன் என்று கூறிய காந்தி அதிசய வக்கீல்தானே!

---------------------


காந்தியைப் பற்றிய பிற பதிவுகள்


1.தற்கொலைக்கு முயன்ற காந்தி
2. காந்தியைப் பற்றி சுஜாதா
3.நீதிபதியின் கேள்வி-மிஸ்டர் காந்தி! இது மோசடி வேலை .
4.வக்கீல் தொழில் பொய்யர்களின் தொழிலா? தெரிந்த வரலாறு...
5.அகிம்சை அண்ணல் சுடப்பட்டபோது
6.சர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா?சசித...
7.கோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி
8.காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்-
9.காந்தி தேசத் தந்தை இல்லையா?
10.எழுதியது யார்? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
12. தெரிந்த வரலாறு! தெரியாத சம்பவங்கள்!