என்னை கவனிப்பவர்கள்

சனி, 8 டிசம்பர், 2018

இளையராஜா செய்த தவறு


    மீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை  அனும்தி பெறாமல் பாடக்கூடாது என்று  மீண்டும் வலியுறுத்தியதோடு தன் இசைக்கான ராயல்டி பெற்றுத் தரும் உரிமையை தென்னிந்திய திரை இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு தந்துள்ளார். பெறப்படும் ராயல்டி தொகையில் 80% தனக்கும் 20% சங்கத்திற்கும் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.
   கடந்த வாரங்களில் பரபரப்பான இந்த விஷயத்தை இப்போது எழுதுவதற்கு காரணம் உண்டு. சில  விவகாரங்களில் அதன் பின்னனி பற்றி யோசிக்காமல் உடனடியாக நமக்கு தோன்றும் கருத்தை வெளிப்படுத்துவோம். சில நாட்களுக்குப்பிறகு அந்த எண்ணm மாறக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. இவ்விவகாரத்தில் உடனடியாக இளையராஜா மீது கோபம் உண்டானது உண்மை , ஆனால் இப்போது அவர் செய்தது முழுமையாக சரி என்று தோன்றாவிட்டாலும் அவர் பக்கம் உள்ள நியாயத்தையும் யோசிக்க வைத்தது,
    ஆணவமாகப் பேசும்போது எரிச்சல்  உண்டாவது போலவே  ஒரு  சிலர் அடக்கமாகப் பேசும்போதும் ஏற்படுகிறது  அவர்களில் சட்டென்று நினைவுக்கு  வருகிறவர்கள் நடிகர் பிரபு,சூர்யா, எஸ்பி.பி. காரணம் இவர்களின் பேச்சில் அளவுக்கு அதிகமான பணிவு காணப்படும். அந்த தன்னடக்கம் இயல்புக்கு மாறானதாகவே எனக்குத் தோன்றும். . இது போன்ற தன்னடக்க பேச்சுக்கள் அவர்களுக்கு ஒரு நல்ல பிம்பத்தை ஏற்படுத்தி வைக்கிறது. ஆனால் சில சமயங்களில் சிறு பிறழ்வு ஏற்படும்போது அதிர்ச்சி அடைந்து அவர்களை தூற்ற ஆரம்பிக்கிறோம். எனது எண்ணம் தவறாகக் கூட இருக்கலாம். குறிப்பாக எஸ்பிபியின் பேச்சு தேன் தடவிய பேச்சு,குரலைப் போலவே பேச்சு அவருக்கு இன்னொரு பலம்.. 
      ஆனால் இளையரஜா சபைக்கேற்றபடி பேசத் தெரியாதவர் என்பதை அவரது பல பேச்சுக்கள் உணர்த்தும், பேசும் கலை அறியாத  அவர் எப்போது பேசினாலும் ஆணவத்துடன் பேசுவதாகவே தோன்றும்.  முன்பு எஸ்.பி.பி விவகாரத்தில் அவர் மீது பரிதாபமும் இளையராஜா மீது கோபமும் ஏற்படும் விதத்தில் உருக்கமான அறிக்கயை வெளியிட்டது எல்லோருக்கும் தெரிந்ததே.   இளையராஜாவின் தீவிர ரசிகர்கள் கூட அவருக்கு ஆதரவாகப் பேசினாலும் இப்படிச் செய்திருக்கக் கூடாது என்றே மனத்திற்குள்  நினைத்திருப்பர்.  இசை  ஞானி. பேச்சும் மௌனமும் முரண்பாடனான நேரங்களில் வெளிப்பட்டு அவரது ரசிகர்களுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கும்.
   ஆனாலும் அவரது இசை ஆளுமை அவரது குறைபாடுகளையும்மீறி வெறித்தனமான ரசிகர்களைக் தந்துள்ளது.

  ஆனால்  ராஜாவின் பக்கம் சட்டப்படியான நியாயம் இருந்தாலும்  மேலோட்டமாக இதனைப் பார்க்கும் பலருக்கும் ராஜவின் கோபம் ஏற்படுவதும் இயல்பானதே.
   இளையராஜா செய்த மிகப் பெரிய தவறு ராயல்டி சார்ந்து நேரிடையாகப் பேசியதுதான். அமைதியாக ராயல்டி பொறுப்பை யாரிடமேனும்  ஓப்படைத்திருக்க வேண்டும். அவர்கள் மூலம் பாடல் பாடுவதற்கான அனுமதி சார்ந்து பேசி இருக்கலாம். இசைப் புயல்  ஏ.ஆர் ரகுமான், ராஜாவுடன் ஒப்பிடும்போது மூன்றில் ஒரு பங்கு அளவுக்குக் கூட இசை அமைத்திருக்க மாட்டார். ஆனால் இளையராஜாவை விட அதிகமாக சம்பாதித்து விட்டார். காரணம் ரகுமான் காப்புரிமையை முதல் படத்தில் இருந்தே சத்தமின்றி மிகத் திறமையாக பயன்படுத்தியதுதான். 
ராயல்டி சார்ந்து தனக்கென நிர்வாக அமைப்பு வைத்திருக்கிறார் ரகுமான். அதுவும்  இந்தியா அமெரிக்க லண்டன், என்று தனித்தனியக தனக்கு மேனேஜ்மெண்ட் சிஸ்டம் உள்ளது என்றும் அவர்கள் அனைத்தையும் கவனித்துக் கொள்வார்கள் என்றும் தனக்கு அது பற்றி தெரியாது என்றும் சில சமயங்களில் மேனேஜ்மெண்ட்கூட நான் சொல்வ்தைக் கேட்காது என்று ரங்கராஜ் பாண்டேவிடம் ஒரு பேட்டியில் கூறுகிறார் ரஹ்மான். அவர் அனாவசியமாக பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளவில்லை. ஆனல் கிடைக்கவேண்டியதை புத்திசாலித் தனமகப் பெற்று வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். 

 இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும்  இதை குறிப்பிட்டுள்ளார். 
இளையராஜா காப்புரிமை சார்ந்து தாமதமாக விழித்துக் கொண்டார் எனலாம். இதில் எம்.எஸ். வி போன்றவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். தங்கள் உரிமை சார்ந்து எம்/.எஸ் வி அறிந்திருப்பாரா என்பது ஐயமே. 
     இளையராஜா உரிமை கோருவது தவறு என ரகுமான் உட்பட எந்த இசை அமைப்பளரும் தெரிவிக்கவில்லை. ரகுமானின் பாடல்களை அனுமதி பெறாமல் ராயல்டி வழங்காமல்தான் பாடுகிறோம் என எந்த பாடகரோ நிகழ்ச்சி அமைப்பாளர்களோ சொல்லவில்லை. ராயல்டி சார்ந்த கேள்வி ஒன்றுக்கு ரகுமான்  அது பற்றி தனக்கு தெரியாது  என்றும் தன் மனைவி அதனைக் கவனித்துக் கொள்கிறார் எனவும் கூறினார். வேறு எந்த பிரபல இசை அமைப்பாளரும் இளையராஜா சொன்னது தவறு. நான் என் பாடல்களை இலவசமாக பாட அனுமதிக்கிறேன் என்று சொல்லவில்லை என்பது குறிப்பிடத் தக்கது

       சரியாகப் புரிந்து கொள்ளாத பலரும்  கல்யான மண்டபம் கோவில் திருவிழாக்கள் போன்றவற்றில் கூட பாடக்கூடாது என கூறி இருப்பதாக  கருதுகிறார்கள். திருமண நிகழ்ச்சிகள், கோவில் நிகழ்ச்சிகள். கல்வி நிலையங்கள் போன்ற இடங்களுக்கு எந்த அனுமதியும் தேவை இல்லை. டிக்கெட் வசூலித்து நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கே இது பொருந்தும். இளையராஜா உரிமை பெற்றுள்ள பாடல்களுக்கு எவற்றிற்கு எவ்வள்வு தொகை கொடுத்து  அனுமதி  பெறவேண்டும் எதற்கு தொகை செலுத்த வேண்டும் என்ற Tariff 




திரைப்படப் பாடலில் யாருக்கு என்ன உரிமைதான் உள்ளது?
  50 % தயாரிப்பாளருக்கும் 30% இசை அமைப்பாலருக்கும் 20% பாடலாசிரியருக்கும் ராயல்டி பெற உரிமை உண்டு என ஏற்கனவே செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இவர்கள் சார்பாக ஒருவர் IPRS  (INDIAN PERFORMING RIGHTS SOCIETY).  இல் இருந்து தொகை பெற்றால் ஒப்பந்த வீதப்படி மற்றவர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும்.  இவர்களும் உறுப்பினர்களாக இருப்பின்IPRS  இப்பணியை செய்து விடும்./  
   IPRS (INDIAN PERMING RIGHTS SOCIETY). என்ற அமைப்பு  இந்திய காப்புரிமை சட்டப்படி இயங்கி தன் உறுப்பினர்களுக்கு  ராயல்டி பெற்றுத் தருகிறது. இதில் படைப்பு உரிமையாளர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.   ராஜா ரகுமான் வைரமுத்து எஸ்பிபி(இசை அமைப்பாளராக) போன்றோர் இந்த அமைப்புடன் செய்து கொண்ட ஒப்பந்துள்ளனர். இவர்களின் பாடல்களை பாட ஒளி பரப்ப செய்ய உரிய கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேன்டும்
கீழே இளையராஜா ,ரகுமானின் ஒப்பந்த பத்திரம். குறிப்பிட்ட கால இடைவெளியில் இதனை புதிப்பித்தலும் வேண்டும்.








    IPRS இல் உறுப்பினராக இருந்த இளையராஜா இப்போது அதனை விட்டு விலகி விட்டார். எனவே இனிமேல் IPRS ராயல்டி தொகை பெற்று வழங்காது. இப்போது உரிமையை தென்னிந்திய திரை இசைக் கலைஞர்கள்  சங்கத்திற்கு ராயல்டி வசூலிக்க உரிமை தந்துள்ளார். ஒப்பந்தப்படி  பெறப்படும் ராயல்டி தொகையில் 80 % ராஜாவிற்கும் 20 % சங்கத்திற்கும் எடுத்துக் கொள்ளலாம். இளையராஜா பாடல் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் இதன் மூலம் கிடைக்கும் தொகை அதிகமாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது ஆனால் இப்பணியை அவர் உரிமை வழங்கியுள்ள சங்கம் செய்வது மிகக் கடினம் என்று சொல்லப்படுகிறது.  இப்பணியையே முழுமையாக செய்து வரும் IPRS போன்ற அமைப்புகளே இசை நிகழ்ச்சிகளை சரிவர கண்காணிக்க இயலாத  நிலையில் திரை இசைக் கலைஞர்கள் சங்கம் எவ்வாறு இப்பணியை மேற்கொள்ளும் என்று கேள்வி எழுப்புகிறார் ஜேம்ஸ் வசந்தன்.
   
எனினும் திரை இசைக் கலைஞர்கள் சங்கம் இதனை வரவேற்றுள்ளது.20% சதவீத தொகை என்பது கணிசமானது இது நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவும் என்று நம்புகிறது

இந்த விமர்சனங்கள் எதனால் எழுந்தன? இசைஞானி அவர் இசைக்குத்தான் ஞானி. ஆனால் நாம் ஞானி என்றால் பற்றற்றவர் என்று புரிந்து கொள்கிறோம். அவருக்கு ஏன் இவ்வளவு பணத்தாசை என்று கருவுகிறோம். அவர் சேவை செய்ய வரவில்லை. இசையில் மேதமை உடையவர் என்பதால் அவர் பணத்தின் மீது பற்றற்றவரக இருக்கவேண்டும் என்பதில் நியாயமில்லை.  சராசரி மனிதர்களின் குணங்கள் அவர்க்கும் உண்டு. தமிழ் திரை இசையின் மகத்தான சாதனையாளர் அற்புதமான பல பாடல்களைத் தந்தவர் என்ற வகையில் மட்டும் அவரைப் பார்ப்போம். இசையை மட்டும் ரசிப்போம்  யாரையும் அளவுக்கதிகமாக கொண்டாடவும் தேவை இல்லை. வெறுக்கவும் தேவை இல்லை.

---------------------------------------------------------------------------------------  
டிஸ்கி:
ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி டிசம்பர் 24 அன்று டொரண்டோ .MTCC இல் ் நடை பெறுகிறது.இசை பிரபலங்கள் கலந்து கொள்ளும்நிகழ்ச்சி. அரஙில் 1000பேருக்கு மேல் இடவசதி உள்ளது.அதற்கான டிக்கெட் விலை கீழே..குறைந்தது 49டாலர் அதிகப்ட்சம் 300டாலர்.மொத்த விற்பனையை கணக்கிட்டுப் பாருங்கள்.ரகுமான் மற்றும் பல பிரபலங்கள் இதில் கலந்து கொள்வதால் இந்த விலை இருக்கலாம்.மற்ற பிரபலங்கள் நடத்தும்போது குறைவாகத் தான் இருக்கும் என்றாலும் கணிசமான தொகை கிடைக்க வாய்ப்பு உண்டு இளையராஜா ஏன் ராயல்டி கேட்கிறார். என்பது புரியலாம்

டிஸ்கி 2:  வைரமுத்து முன்பு ஐ.பி.ஆர்.எஸ் உறுப்பினராக இருந்தார்.
---------------------------------------------------------------

நன்றி
http://copyright.gov.in/Documents/Copyright%20Societies.pdf
https://indiankanoon.org/doc/1636994/
http://copyright.gov.in/documents/handbook.html
http://copyright.gov.in/frmFAQ.aspx
http://copyright.gov.in/Documents/handbook.html
http://www.iprs.org/cms/Membership/AssignmentDeeds.aspx

https://youtu.be/LAiJ2xawe0I
rahman pande interview link
https://www.youtube.com/watch?v=TwD4k1sPo0I