என்னை கவனிப்பவர்கள்

புதன், 2 அக்டோபர், 2019

காந்தி மகாத்மாவானது எப்படி ?

      

      தென் ஆப்பிரிக்காவில் இந்தியர் குடியிருந்த பகுதிகளை ஜோகஸ்ன்ஸ்பர்க் நகரசபை கையகப்படுத்திக்  கொண்டது. சொற்ப அளவில் நஷ்டஈடும்  தர சம்மதித்தது . சிலர் நஷ்ட ஈடு பெற சம்மதிக்காது வழக்கு  தொடுத்தனர். காந்திதான் அவர்களுக்கு சட்ட ஆலோசகராக இருந்தார். தாராளமாக பணம் செலவழிக்கவும் தயாராக இருந்தனர். காந்தி இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக   பயன்படுத்திக் கொண்டிருந்தால்  ஏராளமாக பணம் சம்பாதித்திருக்கலாம் ஆனால் காந்தி அதனை சற்றும் விரும்பவில்லை . அவர்களிடம் வழக்கு வெற்றி பெற்றால் நீதி மன்றம் என்ன செலவுத் தொகை தீர்ப்பாக சொல்கிறதோ அதனைக் கொடுத்தால் போதும். ஒருவேளை தோற்று விட்டால் ஒரு வழக்கிற்கு 10 பவுன் கட்டணம் கொடுத்துவிடுங்கள் என்கிறார். இந்தக் கட்டணத்தில் ஏழைகளுக்கு வைத்திய சாலையோ  அல்லது வேறு உதவி ஸ்தாபனமோ அமைக்கப் போகிறேன் என்றும் கூறினார். அதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். 70 வழக்குகளில் ஒன்று  மட்டுமே தோல்வி அடைந்தது .
      இந்தியர் குடியிருந்த  இடங்களை நகரசபை வாங்கிக்  கொண்டதுமே அவ் விடத்திலிருந்து     இந்தியர் அகற்றப்பட்டு  விடவில்லை. அவர்களை   அப்புறப் படுத்துவதற்கு முன்னால் அவர்களுக்கு ஏற்றதான  புது இடங்களைத் தேட வேண்டியிருந்தது. நகரசபை இதைச் சுலபத்தில் செய்யவில்லை  அதனால்    இந்தியர்கள் கஷ்டப்பட வேண்டியதாயிற்று. முன்னால் இருந்ததைவிட   அவர்கள் நிலைமை இப்போது மிகவும் மோசமானதாக இருந்தது அவர்களுடைய சுற்றுப் புறங்களெல்லாம்   முன்னால் இருந்ததைவிட அதிக அசுத்தமாயின. இந்த நிலையில் கறுப்புப் பிளேக் நோய் பரவ ஆரம்பித்தது. இது உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு அபாயமானது 
       ஜோகன்ஸ்பர்க்கில் இருந்த தங்க சுரங்கத்தில் பணியாற்றிய 23 இந்தியர்களுக்கு பிளேக் தொற்றிக் கொண்டது . கடுமையாக பாதிக்கப்பட்ட இவர்கள் இந்தியக் குடியிருப்புக்கு திரும்பினர். காந்தியின் நண்பர் மதன்ஜித் இவர்களை பார்த்துப் பதறினார் , மற்றவர்களுக்கும் இந்நோய் பரவிவிடக்கூடாது என்பதற்காக காலியாக இருந்த ஒருவீட்டின் பூட்டை உடைத்து  23 பேரையும் அங்கு கொண்டு சேர்த்தார். உடனடியாக வந்து உதவ வேண்டும் என்று காந்திக்கு வேண்டுகோள் விடுத்தார், காந்தி உடனடியாக  சைக்கிளில் அங்கு வந்து சேர்ந்தார்.  பூட்டை  உடைத்தது குற்றமாகக் கருதப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதால் காந்திஜி நகர சபைக்கு எந்த சூழ்நிலையில் பூட்டு உடைக்கப்பட்டது  என்பதை விளக்கிக்  கடிதம் எழுதி பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். 
     இருவர் மட்டுமே நோயாளிகளுக்கு உதவ முடிந்த நிலையில்  டாக்டர் வில்லியம் காட்ஃ ப்ரே  என்பவர் உதவிக்கு வந்து சேர்ந்தார். ஆனால் மூன்று பேர் மட்டும் பிளேக் தாக்கிய  23 பேரை கவனிப்பது கடினமாக இருந்தது. உள்ளம் தூய்மையாக இருந்தால் உதவி நிசசயம் கிட்டும் என்று  காந்தி நம்பினார். அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை. கல்யாண்தாஸ், மாணிக்கலால், குணவந்தராய் உள்ளிட்ட நான்கு பேர்  பணிவிடை செய்ய முனவந்தனர். அவர்களுக்கு நோய் தொற்றி விடுமோ என்று காந்தி அஞ்சி நோயாளிகளுக்கு அருகில் இருந்து பணிவிடை செய்யும் பணியை  அளிப்பதை தவிர்த்து சுற்றுப்புறப் பணிகளை அவர்களுக்கு வழங்கினார்.    டாக்டர் காட்ஃபிரே வின் ஆலோசனையுடன்  காந்தி,மதன்ஜித் மூவரும் நோயாளிகளுக்கு அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர்.  மருந்து கொடுப்பது, அவர்களின் தேவைகளை கவனிப்பது ,படுக்கையை சுத்தமாக வைத்திருப்பது அவர்களை உற்சாகமாக  இருக்குமாறும் பார்த்துக் கொண்டனர். சுயநலமற்ற மனிதர்களின் சேவையால் 23  பே ரும் பிழைத்துக் கொண்டனர்.  
     காலியாக இருந்த வீட்டை எடுத்து கொண்டு நோயாளிகளை கவனித்துக் கொண்டதற்கு காந்திக்கு நன்றி  தெரிவித்து கடிதம் எழுதியது ஜோகன்ஸ்பர்க் நகர சபை .மேலும் பிளேக் நோயால்  பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவும் விதமாக  ஒரு கிடங்கை  நகரசபை காந்தியிடம் ஒப்படைத்தது. ஆனா அக்கிடங்கோ அசுத்தம் நிறைந்ததாகக்  காணப்பட்டது. காந்தியடிகள்  நண்பர்கள் உதவியுடன்  படுக்கை வசதிகளும் நோயாளிகளை பராமரிக்கும் இடமாக  அதனை கஷ்டப்பட்டு மாற்றி அமைத்தார் .  டாக்டர் காட்ஃபிரேவே இங்கும்  மருத்துவ  சிகிச்சைகளைக்கு உதவினார். நோய்த்தொற்றை தவிர்க்க  நோயாளிகள் மட்டுமல்லாது கவனித்துக் கொள்பவர்களும் கொஞ்சம் பிராந்தி அருந்த பரிந்துரைத்தார். காந்தியடிகள் அதனை விரும்பவில்லை. எனினும் அவரவர் விருப்பத்திற்கு விட்டு விட்டார். நோயாளிகளில் மூன்று பேர் மட்டும் பிராந்தி அருந்த  ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களுக்கு டாக்டரின் அனுமதியுடன் மண் சிகிச்சை அளித்தார் காந்தி. அந்த மூவரில் இருவர் பிழைத்துக் கொண்டனர். பிற நோயாளிகள் பலரும் இறந்தது கண்டு காந்தி வருந்தினார்.
   பின்னர் நகர நிர்வாகம் நடவடிக்கை எடுக்க காந்தி அப்பணியில் இருந்து  விடுவிக்கப் பட்டார். பிளேக் நோயாளிகளுக்கு பணிவிடை செய்த காலத்தில்  தன்னால் பிறருக்கு  நோய் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் காந்தி  தம்மை சந்திக்க வருபவர்களைத்  தவிர்த்தார். 
     பிளேக் நோயாளிகளுக்கு  சேவை செய்தது மட்டுமல்லாது இதனை  சரியான முறையில் கையாளாத  நகர நிர்வாகத்தை கண்டித்து தொடர்ந்து பத்திரிக்கையில்  கட்டுரைகள் எழுதினார் .    காந்தியின் செல்வாக்கு அதிகரித்தது. தென்  ஆப்பிரிக்காவில் நடந்த ஒவ்வொரு நிகழ்வும் காந்தியின் நேர்மை, சுயநலமின்மை, நெஞ்சுரம், பொது சேவை குணம், தன்னுடைய கொள்கை மாற்றிக் கொள்ளாத தன்மை ஆகியவற்றை   வெளிப்படுத்துவதாக   அமைந்ததைக் காணலாம்.   மெல்ல மெல்ல ஒரு மகாத்மாவை உருவாக்கிய  பெருமை தென் ஆப்பிரிக்காவையே சாரும் . 

---------------------------------------------------------------------------------------



காந்தியைப் பற்றிய பிற பதிவுகள்


1.தற்கொலைக்கு முயன்ற காந்தி
2. காந்தியைப் பற்றி சுஜாதா
3.நீதிபதியின் கேள்வி-மிஸ்டர் காந்தி! இது மோசடி வேலை .
4.வக்கீல் தொழில் பொய்யர்களின் தொழிலா? தெரிந்த வரலாறு...
5.அகிம்சை அண்ணல் சுடப்பட்டபோது
6.சர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா?சசித...
7.கோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி
8.காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்-
9.காந்தி தேசத் தந்தை இல்லையா?
10.எழுதியது யார்? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
11. தெரிந்த வரலாறு! தெரியாத சம்பவங்கள்!
12.அதிசய வக்கீல் காந்தி
13.காந்தி செய்தது சரியா? பாவம் கஸ்துரி பாய்