என்னை கவனிப்பவர்கள்

புதன், 29 ஜூலை, 2020

ஏ.ஆர்.ரகுமான் புலம்பல் சரியா?


அன்புள்ள ரகுமான்!.
      90களில் இளைஞர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்களில் முக்கியமானவர்கள்  இரண்டு பேர். ஒருவர் சச்சின் டெண்டுல்கர். மற்றொருவர் நீங்கள் . நீங்கள் இருவருமே அமைதிக்குப் பெயர் போனவர்கள்  அதுவும் உங்கள் முகம் பேரமைதி கொண்டதாய்த் தெரியும். அளக்கப் பட்ட வார்த்தைகள்தான் உங்கள் உதட்டைக் கடந்திருக்கின்றன.  அநாவசியமாய் ஒரு வார்த்தை கூட உங்கள் நாவில் இருந்து வந்ததில்லை.  
         எனக்குத் தெரிந்து நீங்கள் மனம் திறந்து பேசியதாக நினைவு இல்லை.  ஆனால் சமீபத்தில் நீங்கள் சொன்னதாக வந்த செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது. பாலிவுட்டில் உங்களுக்கு  எதிராக ஒரு குழு வதந்திகளைப் பரப்பி வருவதாகவும், ஹிந்தி சினிமாக்களில்  பணியாற்றும் வாய்ப்புகளை அந்தக்குழு தடுத்து வருவதாகவும் நீங்கள் சொன்னதாக, அறியப்படும் செய்திதான் அது. ஒரு வேளை அதில் உண்மையும் இருக்கலாம். ஆனால் அதற்காக வருத்தப்படும் ஆரம்ப நிலையிலா நீங்கள் இருக்கிறீர்கள்?.  உங்களை உச்சியில் வைத்து அழகு பார்த்ததும் பாலிவுட்தான். உங்களை உலகறியச் செய்ததும் பாலிவுட்தான். அவர்களும் உங்களைத் தென்னவராகப் பார்க்கவில்லை. அவர்களில் ஒருவராகத்தான் உங்களைக் கண்டனர். நீங்களும் வடவராகவே மாறிப் போனீர்கள். இன்றுவரை நீங்கள்தான் இந்தியத் திரைஇசை உலகின்  நம்பர் 1 என்று   கூகுளின்  பக்கங்கள் காட்டுகின்றன. உங்கள் வருத்தமும் ஆதங்கமும் உங்கள் தகுதிக்கு சரியானதுதானா? 
        சின்னச் சின்ன ஆசையில் தொடங்கி இன்றுவரை எத்தனை எத்தனை பாடல்கள்! உற்சாகம், ஆரவாரம், அமைதி, காதல், சோகம், வீரம், பக்தி என உணர்வுக் குவியல்கள் இசைக் கலவையாக உங்கள் வாத்தியங்களில் இருந்து புறப்பட்டு எங்கள் செவிகளை நிறைத்தன
      ’என்மேல் விழுந்த மழைத்துளியே’ போன்ற அமைதியான பாடலாகட்டும், ’முக்காபலா’ போன்ற ஆர்ப்பாட்டமான பாடலாகட்டும், ’ஸ்நேகிதனே! ஸ்நேகிதனே’  என்ற மனதை வருடும் பாடலாகட்டும், உயிரே! உயிரே! என்று உருகிய பாடலாகட்டும் நேற்றைய சிங்கப் பெண்ணே வரை உங்கள் இசையால் மயங்கிக் கிடக்கிறவர்கள் பல பேர். 
       சற்று சிந்தித்துப் பாருங்கள்!  முதல் அடி எடுத்த வைத்த நாளில் இருந்து நீங்கள் பணிபுரிந்தது எல்லாமே மணி ரத்தினங்களோடும் சங்கர்களோடும்தான்.
     அப்போதெல்லாம் தினமணியில் வாராவாரம் அதிகம் விற்பனையாகும் கேசட்டுகளின் பெயர்ப் பட்டியல் இடம் பெறும். அதில் உங்களுக்குத்தான் முதல் இடம்.  17 ஆண்டுகளாக முன்னணியில் இருந்த  தீவிர பக்தர்களைக் கொண்ட  இசைஞானி இளையராஜாவைத் தாண்டி இடம் பிடித்தீர்கள். இந்தியிலும் உங்கள் வெற்றிக் கொடி பறந்தது. வசீகரமான இளமைத் துள்ளல் இசையின் மூலம் இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்டீர்கள்.  ஒரு வருடத்திற்கு இசை அமைக்கும் படங்களின் எண்ணிக்கை  குறைவு என்றாலும் அத்தனை பாடல்களும் ஹிட் அடித்தன. உங்கள் நூதனமான இசை வடிவங்கள் மனதை வருடின.  ஆனால் நானறிந்தவரை சாதரண தயாரிப்பாளர்கள் நெருங்க முடியாத உயரத்தில் இருந்தீர்கள். இன்றுவரையிலும் அப்படித்தான் இருக்கிறீர்கள்
        ஏற்கனவே முன்னனி நடிகர்களும் இயக்குநர்களும் உங்கள் இசைக்காகக் காத்திருந்தார்கள். தொடர்ந்து இளையராஜாவோடு கூட்டணி வைத்தவர்கள் உங்கள் பக்கம் தாவினார்கள்.  பாரதிராஜாவே உங்களிடம் வந்து சேர்ந்தார். ஆனால்  என்னைப் புறக்கணிக்க சதிநடக்கிறது என்று இளையராஜா கூறவில்லை.  உங்கள் கூட்டணி  எப்போதுமே  பிரம்மாண்டக் கூட்டணியாக இருந்தது. படம் வெற்றியடையாவிட்டால் கூட உங்கள் பாடல்கள் வெற்றி பெற்றன. விதம்விதமான  ஒலியிசைகள் முலம் இன்பத் தேன் வந்து பாய்ந்தது எங்கள் காதுகளில்.
    உங்கள் வந்தே மாதரம் ஆல்பம் ஒலிக்காத இடம் உண்டா?. இன்றும் பள்ளி ஆண்டு விழாக்களில்  தாய்மண்ணே வணக்கம். ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது?. இதைவிட வேறென்ன பெருமை வேண்டும்? 
  சிலபடங்களுக்குப் பிறகு காணாமல் போய்விடுவீர்கள் என்றுதான் உங்களைப்பற்றிய  சிலர் ஆரூடம் கூறினார்கள். இளையராஜாவிற்குப் பிறகு யாரும் நீண்ட  காலம் நிலைத்திருக்க மாட்டார்கள் என்றுதான் கருதப்பட்டது. ஆனால் அதனை தவிடு பொடியாக்கி 25 ஆண்டுகளுக்கு மேல்  உச்சத்தில் இருந்தீர்கள்.  இருக்கிறீர்கள். தெற்கில் மட்டுமல்லாது வடக்கிலும் ஆட்சி புரிந்தீர்கள். நாடுகள் கடந்தது உங்கள் இசை. ஹாலிவுட்டிலும் தடம் பதித்து, உலகமே அண்ணாந்து பார்த்த ஆஸ்கார் விருதும் பெற்று,  ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப் படுத்தினீர்கள். ஆஸ்கார் மேடையில் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றே கூறியபோது பெருமிதம் கொள்ளாத தமிழர்கள் இல்லை. அந்த மேடையில் நீங்கள் விருது பெற்ற போது நாங்கள் பெற்றதாகவே .குதூகலித்தோம்; கொண்டாடினோம். 
       தமிழ்நாட்டுக்கு  எப்போதும் ஒரு பெருமை உண்டு.  திரை இசை மேதைகள் இங்கு போல் வேறேங்கும் இல்லை. எம்.எஸ்.வி இளையராஜா, நீங்கள். மூவரும் திரை இசை மும்மூர்த்திகளாக விளங்கி பெருமை சேர்த்தீர்கள். 
  வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக  அதிகம் இசை அமைத்து தரம் குறைத்துக் கொள்ளாமல் குறைவாக இசைத்தாலும்   நிறைவாக நின்றீர்கள். ஆனால் ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்தாலும் சம்பாதிக்க முடியாத செல்வம் உங்களை  அடைந்தது. இசை அறிவு மட்டுமல்ல.  முந்தைய தலைமுறை கலைஞர்களுக்கு அதிகம் இல்லாத   தொழில்நுட்ப அறிவு, காப்புரிமை மேலாண்மை,  இயல்பாகவே உங்களிடம் இருந்தது. அதைவிட அதிகம் பேசிப் பெயரைக் கெடுத்துக்கொள்ளாத புத்திசாலித்தனமும் உங்களிடம் இருந்தது  அமைதி உங்களுக்கு வாய்த்த பலமான ஆயுதம் .   இப்போது அமைதி கலைந்திருப்பது எங்களுக்கு அதிசயம்தான்.
             இளையராஜாவுக்குப் பின் இசையில் என்ன செய்து விடமுடியும் என்று இருந்த நிலையில் ஒரு புதிய பாணியை அறிமுகப்படுத்தி எங்களை உங்கள் பக்கம் ஈர்த்தீர்கள். எம்.எஸ்.வி.,இளையராஜா போல ஒரு ட்ரெண்ட் செட்டராகத் திகழ்ந்தீர்கள். உங்கள் கால்ஷீட் கிடைக்காதவர்கள் உங்கள் பாணியிலேயே இசை அமைக்கும் இசை அமைப்பாளர்களைத் தேடிப் போனார்கள்.      
    நீங்கள் வந்தபின் ஏராளமான பாடகர்களை அறிமுகப்படுத்தினீர்கள். இசையில் உதவிய கலைஞர்களின் பெயர்களையும்  கேசட் அட்டையிலும் சிடியிலும் பதித்து அவர்களுக்கு அங்கீகாரம் தந்தீர்கள்.  உங்கள் இசையில் ஒரு பாடல் பாடுவதற்கு முன்னனிப் பாடகர்களே தவம் கிடந்தார்கள். உங்கள் இசைக்கு ஒரு பாடல் எழுத வாய்ப்பு கிடைக்காதா என்று பாடலாசிரியர்கள் ஏங்கினார்கள்.  சில இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நீங்கள் எட்டாக் கனியாக விளங்கினீர்கள். அத்தனையும் உங்களுக்கு வாய்த்திருக்கிறது
     வயதானவர்களுக்கு  தாங்கள் ஒதுக்கப் படுகிறோம் என்று தோன்றுவது உண்டு. அதே போன்ற மனநிலை உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.    
எத்தனையோ திறமை இருந்தும்  கண்டு கொள்ளப் படாமல் வாய்ப்புக் கிடைக்காமல் அங்கீகாரமும் கிடைக்காமல் போனவர்கள் பலருண்டு. ஆனால் உங்களுக்கு அப்படி அல்ல. தமிழ்த் திரையுலகம் அடையாளம் கண்டது.  இந்தித் திரையுலகும்  கொண்டாடியது. ஹாலிவுட்டும் அரவணைத்தது. 
    மாற்றம் ஒன்றுதான் மாறாதது ,  ஒருகுறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அனைத்திலும் மாற்றம் நடந்து கொண்டிருக்கும். அதுவும்  கலை ரசனையில் நடக்கும் மாற்றம் வேகமானது  ஒன்றுபோய் இன்னொன்று இடம் பிடிக்கும். அதுவும் சில காலத்திற்கே.  அப்படிப்பட்ட மாற்றங்களை விரும்பியதால்தான் உங்களுக்கு  ஒரு மிகப் பெரிய இடம் கிடைத்தது. காலத்திற்கேற்ப நவீனப் படுத்திக் கொள்ளும் திறமை உங்களுக்கு இருந்ததால்தான் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தாக்குப் பிடிக்க முடிந்தது. அதுவே மிகப் பெரிய சாதனை. அதனை இனி வேறு யாராலும் நெருங்க முடியாது.  ஆனால் இன்றைய தலைமுறையின் ரசனை மாற்றம் அதிவேகமானது.  ரசனையின் வாழ்நாள் மிகக் குறுகியது. தயவு தாட்சயணமின்றி தூக்கி எறியத் தயங்கமாட்டார்கள். இவையெல்லாம் உங்களுக்குத் தெரியாததல்ல.
தேசியவிருதுகள் உங்களைப் போல் பெற்றவர் யாருமில்லை. விதம் விதமான விருதுகள் உங்களுக்குப் பெருமை சேர்த்தன; பெருமை அடைந்தன. 
        இத்தனை பெருமைகளைக் கொண்ட நீங்கள்  இந்தியில் எனக்கு வாய்ப்பு  திட்டமிட்டு மறுக்கப் படுகிறது, சதி செய்யப்படுகிறது  என்று வருந்தி  இருப்பதும்  இந்தித் திரை உலகம் உங்களைப் புறக்கணிப்பதாக புகார் கூறுவதும் ஏற்புடையதாகத் தோன்றவில்லை.   தமிழில் கூட உங்களுக்கு வாய்ப்பு  அதிகம் இல்லை. காரணம், நிச்சயம் புறக்கணிப்பாக இருக்க முடியாது.. ஆனால்   இன்னமும்   சாதாரண தமிழ்த் தயாரிப்பாளர்களுக்கு எட்டாத உயரத்தில்தான் இருக்கிறீர்கள். அதைப் பற்றி நீங்கள் கவலைப் படவில்லை. நீங்கள் தமிழ்ப்  பாடகர்களுக்கு வாய்ப்பளித்ததைடை விட வடக்கத்திய தமிழ் தெரியாத பாடகர்களையே அதிகம் ஆதரித்தீர்கள். உங்களுக்காக அவர்களையும் கொண்டாடினோம். நீங்கள் இந்திக்கே அதிக முக்கியத்துவம் அளித்தீர்கள். ஆனால் அப்போதும் நீங்கள் தமிழைப் புறக்கணிப்பதாகக் நாங்கள் கருதவில்லை. 
  நீங்கள் பல பாடகர்களுக்கு வாய்ப்பளித்தீர்கள். அதுபோல தயாரிப்பாளர்கள் பலருக்கு வாய்ப்பளிப்பதாக கருதிக் கொள்ளுங்கள். .  இவ்வளவு சாதனைக்குப் பின் இன்னமும் வாய்ப்பு இல்லை என்று புலம்புவது எங்கள் அபிமான ரகுமானுக்கு அழகல்ல. உங்கள் சாதனைகள் காலம் கடந்து நிற்பவை. உச்சம் தொட்ட இளையராஜா உங்கள் வருகைக்குப் பின் தளர்ந்து போகவில்லை. இன்னமும் இசை அமைத்துக் கொண்டு ரசிகர்  நெஞ்சங்களில் வீற்றிருக்கிறார்.உங்களாலும் அதுபோல் முடியும்.
        தனிக்குடித்தனம் போய் அவ்வப்போது தாய் வீடு வந்து போன பிள்ளை போலத்தான் இருந்தீர்கள்.  இங்கேயும் திறமையான இளம் இயக்குநர்கள்  தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மொத்த பட்ஜெட்  உங்கள் சம்பளத்துக்குக் காணாது. உங்கள் இரும்புக்கோட்டையை தளர்த்தி உங்கள் இசையை அவர்களுக்கும் கொடுங்கள்.               
     இந்தியை விட்டுத் தள்ளுங்கள். அவர்களை நீங்கள் புறக்கணியுங்கள்.  தமிழர்கள் என்றுமே உங்களைக் கொண்டாடு்வார்கள். எங்கள் இசைச் சிங்கம்  ஏ.ஆர் ரகுமானாக எப்போதும் கம்பீரமாக இசைகர்ஜனை புரியுங்கள்

                                                                                                              அன்புடன்
                                                                                           உங்கள் ரசிகர்களில் ஒருவன்.

------------------------------------------------------------------------------------------------------------------------
கொசுறு: 1

ஏ.ஆர்.ரகுமானின் இந்த கருத்து பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பிய நிலையில் சல்மான் கான் படத்திற்கு இசையமைப்பது குறித்து ஏ.ஆர்.ரகுமான் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சில வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது. அதில் ரஹ்மான் ஆவரேஜ் மியூசிக் கம்போசர் என்று ஜோக்காக சொவதுபோல ரகுமானிடமே சரியா என்று கேட்பார். (இதற்கு சல்மானுக்கு கடும் கண்டனங்களை இந்தி ரசிகர்கள் பதிவு செய்தனர்)  ரகுமான் எப்போதும் அமைதிப் புன்னகைபுரிவார்
       மேலும் அந்த வீடியோவில் ரகுமானிடம் சல்மான் கான் எப்போது எனது படங்களுக்கு இசையமைப்பாளர் என்று கேட்பார். ஆனால் ரகுமான் அப்போது அமைதியாக இருப்பார்.  சல்மான்கான் கைகுலுக்க முயற்சிக்கும்போது ரகுமான்  கையை சட்டைப்பாக்கெட்டில் இருந்து எடுக்காமல் பதிலடி கொடுப்பார். பின்னர் செய்தியாளர் ஒருவர் சல்மான் கான் படத்திற்கு எப்போது இசையமைப்பீர்கள் என்று கேள்வி எழுப்புவார். அதற்கு பதிலளிக்கும் ஏ.ஆர்.ரகுமான், “அவர் எனக்கு விருப்பமான படங்களை நடிக்க வேண்டும்“ என்று சிரித்து கொண்டே கூறுவார்.

ARR is unaffordable’

       ....... former Stardust editor-turned-filmmaker Ramkamal Mukherjee, who has made award-winning films like Cakewalk and Season’s Greetings, says that the claim that Oscar winners are being kept out are far from reality.
“The fact is it’s tough for filmmakers to afford Rahman. As a filmmaker, I would love to collaborate with Rahman, but will he work within the budget that our film can afford? Unfortunately, none of the music companies is paying producers for the songs.
The days are gone when the rights of movie songs would fetch lakhs and crores. But now music companies ask us to give it away as a complimentary deal against a marketing spend, which is not even clearly shared with the producers.
-----------------------------------------------------------------------------------------------------------------------------

தொடர்புடைய முந்தைய பழைய பதிவுகள் கீழே
 ஏ.ஆர்.ரஹ்மான் - வாழ்த்துக் கவிதை!
இளையராஜா செய்த தவறு
 

செவ்வாய், 14 ஜூலை, 2020

காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 5



------------------------------------------------------------------------------------------------------------------------
பகுதி 5
அப்படி யாருடைய படத்தை திறக்க சொல்லிக் கேட்டனர்? 

         தெரிந்து கொள்வதற்கு முன்பு சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். சென்னையின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் ஒரு கிராமம். ஜூலை 15 பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் அதாவது காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. விழாவிற்கு பஞ்சாயத்துத் தலைவரும் ஒன்றியக் கவுன்சிலரும் வந்திருந்தனர். காமராஜர் படம் திறக்கவும் கொடி ஏற்றவும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. படத்தை பஞ்சாயத்து தலைவர் திறக்க, தேசியக் கொடியினை ஏற்ற ஒன்றியக் கவுன்சிலரை அழைத்தார் தலைமை ஆசிரியை அவ்வளவுதான் வந்தது வினை. கோபித்துக் கொண்டு வெளியேறினார் பஞ்சாயத்து தலைவர். எவ்வளவு சமாதானப் படுத்தியும் முடியவில்லை. தன்னை அவமதித்தாக நினைத்தார் பஞ்சாயத்து தலைவர். இத்தனைக்கும் ஒன்றியக் கவுன்சிலரும் இவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள்தான்.(உண்மையில் பஞ்சாயத்து தலைவர் இல்லை. அவரது மனைவிதான் தலைவர். ஆனால் தலைவராக நடந்துகொள்வது இவர்தான்.) 
     இதற்கு ஆறு மாதத்திற்கு முன் பள்ளியில் நடந்த பிரச்சனையைக் கையில் எடுத்தார். பிரச்சனை நடந்தபோது சுமுகமாகத் தீர்த்து வைத்தவரும் இவரே. ஆனால் இப்போது நிலை வேறல்லவா? புகார் மனு பறக்க இரண்டே நாட்களில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். பணிநீக்கம் முடிந்து பணியில் சேர வந்த போது தலைமை ஆசிரியரை மட்டும் பள்ளியில் சேர அனுமதிக்கவில்லை. லோக்கல் தலைவர்களே இப்படி. இதைமனதில் வைத்துக் கொண்டு காமராசர் காலத்திற்குப் போவோம். 
        அழைப்பிதழைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததற்குக் காரணம் பள்ளிக் கல்வி இயக்குநர் திரு நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் திருவுருவப் படத்தை காமராசர் திறந்து வைப்பார் என அச்சடிக்கப் பட்டிருந்தது. 
    தனக்குக் கீழ் பணிபுரியும் ஒரு அதிகாரியின் அதுவும் வயதில் இளையவரின் படத்தை திறக்க முதலமைச்சரை அழைப்பதா என வெகுண்டார் உதவியாளர். காமராசர் நிர்வாகிகளை உள்ளே அனுப்பும்படி கூறினார். அவர்களும் காமராசரைப் பார்த்து அழைபபிதழைக் கொடுத்துவிட்டு சென்றனர். காமராசரின் எண்ணத்தை அறிய இயலாத நிலையில் நெ.துசுவுக்கு தகவல் தெரிவித்தார் உதவியாளர். பதறி அடித்துக் கொண்டு ஓடிவந்தார் நெ.து.சு.. 
         காமராசரைப் பார்த்து ”ஐயா இந்த விவகாரம் எனக்குத் தெரியாது, என்னைக் கேட்காமல் அழைப்பிதழ் அச்சடித்து விட்டார்கள். பணியில் இருப்பவரின் படத்தை திறப்பது மரபல்ல. தாங்கள் அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டாம். படத்திறப்பை ரத்து செய்யச் சொல்லி விடுகிறேன்” என்றார், 
     அமைதியாகத் தலையை ஆட்டிவிட்டு ”ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு சுருக்கமாக முடித்து அனுப்பிவிட்டார். காமராசரின் மன ஓட்டத்தை அறிய முடியாமல் அங்கிருந்து வெளியேறினார் நெ.து.சு
      வேண்டாம் என்று பலர் தடுத்தும் காமராசர் அந்த விழாவில் கலந்து கொண்டு நெ.துசுவின் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.
“என்னைக் கேட்டுத்தான் விழாவிற்கு ஏற்பாடு செய்தனர். வழக்கத்தை மீறி நான் ஒப்புக் கொண்டதற்குக் காரணம் அவர் பணியின்மீது அனைவரும் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். திண்ணைப் பள்ளிக்கூடம்கூட இல்லாத சின்ன கிராமத்தில் பிறந்து படிப்படியாக இந்த நிலையை அடைந்திருக்கிறார்.என்றால் அவர் உழைப்பையும் திறமையையும் மற்றவர் அறிய வேண்டாமா? அவரது படத்தைக் தினமும் மாணவர்கள் பார்க்கும்போது இவரைப் போல படித்து நாமும் உயர வேண்டும் என்ற எண்ணமும் நம்பிக்கையும் வரும். மாணவர்களின் நன்மைக்காகவே படத்தை மகிழ்ச்சியுடன் திறந்து வைக்கிறேன் என்று கூறினார். 
     நான் முன்பு கூறிய சம்பவத்தையும் இந்த சம்பவத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். சாதாரண பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு அகங்காரம் இருந்தது. ஆனால் மாநிலத்தின் முதலமைச்சருக்கோ தன் கீழ் பணிபுரியும் நூற்றுக்கணக்கான அலுவலர்களில் ஒருவரின் உருவப் படத்தை திறந்து வைக்கும் பெருங்குணம் இருந்தது. எப்பேர்ப்பட்ட செயல்! காமராசருக்குப் பின் வந்த தலைவர்களில் யாருக்கேனும் இதுபோன்று செய்திருப்பார்களா? அந்த அலுவலரின் நிலை என்னவாகி இருக்கும். இதுதான் காமராசர். 
    ஏழை மக்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த காமராஜருக்கு துணையாய் அமைந்தது பிரதமர் நேருவின் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புத் திட்டம்.
   மொத்த விழுக்காட்டில் படித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவர்களுக்கான வேலை வாய்ப்பும் குறைவாகவே இருந்தது. பள்ளி இறுதி வகுப்போடு நிறுத்திக் கொண்டு குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளவர்கள் அதிகரித்தனர்.வேலைவாய்ப்பின்மை அதிகரித்தால் சமூக சிக்கல் அதிகரிக்கும் என்பதை உணர்ந்த நேரு வேலையில்லாத படித்தவர்களுக்கு வேலை என்ற அதிரடித் திட்டத்தை உருவாக்கினார். 
          இத்திட்டத்தின்படி ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளி இறுதி வகுப்புவரை படித்து தேர்ச்சி பெற்றவர்களைப் பயன்படுத்தி பள்ளி இல்லா ஊரில் பள்ளிகளைத் தொடங்கி அவர்களுக்கு ஆசிரியர் பணி அளித்து வேலைவாய்ப்பை அதிகரிப்பது. இன்னொரு கூடுதல் லாபம் பள்ளி இல்லாத ஊர்களின் எண்ணிக்கையையும் குறைக்க முடியும் என்று எண்ணினார். இத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சில ஆயிரம் பேர்கள் ஒதுக்கப்பட்டது. இதற்கான செலவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என் அறிவிக்கப்பட்டது. 
        ஏற்கனவே கல்விக்காக என்ன செய்யலாம் என்று துடித்துக் கொண்டிருந்த காமராசர் இவ்வாய்ப்பைத் தவற விடுவாரா? இயக்குநரை முடுக்கி விட்டு அரசியல் பாரபட்சமின்றி எந்த ஊர்களுக்கு மிக அவசியமாக பள்ளிகள் தேவை என்பதைக் கண்டறிந்து எல்லா மாவட்டங்களுக்கும் பயனளிக்கும் வகையில் பள்ளிகள் திறக்க ஆணையிட்டார் 
மகராஜர் காமராஜர் வந்தார்; பள்ளிக்கூடம் வந்தது என மக்கள் வாழ்த்தினர். 
     மேலும் கல்வி நிலை குறித்து ஆராய்ந்து மேம்படுத்த டாக்டர் அழகப்ப செட்டியார் தலைமையில் தொடக்கக்கல்விக் குழு அமைக்கப்பட்டு பல்வேறு ஊர்களுக்குச் சென்று நிலைமையை ஆராய்ந்து கருத்துகளைத் திரட்டியது. அறிஞர்கள்,அலுவலர்கள் பொதுமக்கள் என அனவைரும் தங்கள் ஆலோசனைகளைத் தெரிவித்தனர். 
அக் குழுவில் முக்கியப் பரிந்துரை ஒன்று அதிகமாக விவாதிக்கப் பட்டது. அரசல் புரசலாக வெளியே தெரிந்த அப்பரிந்துரை அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது. 


அது என்ன? 


--------------------------------------------------------------------------------------------------------------


திங்கள், 13 ஜூலை, 2020

காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 4

        

    நீங்கள் நினைத்தது சரிதான். நெதுசு தான் நியமிக்கப் பட்டார்.
ஆனால் டாக்டர் பாலுக்காக பரிந்துரைத்தவர்கள் சொன்ன காரணத்தை காமராசர் மறுத்தார்.
            ”நெ.து.சு  அஞ்சாமல் குலக்கல்விக்கு எதிராக ஆட்சேபணை சொன்னதும் குறிப்பு எழுதியதும் எனக்குத் தெரியும். ஆனால் அரசு வேறுவிதமாக முடிவெடுத்தாலும் அதை செய்ய வேண்டியது அலுவலரின் கடமை. அதைத்தான் அவர் செய்தார்”
     உகந்தவர் இவர் என்பது தனது கருத்தாக இருப்பினும் இவரை நியமியுங்கள் என்று சொல்ல வில்லை. ஊழியர் ஆணையத்தின் கருத்து கோரப்பட்டது. அவ்வாணையம்  நெதுசு வையே பரிந்துரைத்தது. அதன் படி நெதுசு பொதுக் கல்வி இயக்குநரானார்.பணியில் சேர்ந்ததும்  வாழ்த்துப் பெற காமராசரை சந்தித்தார் நெ.துசு.
   அவரிடம் காமராசர்,” மக்கள் முன்னேறனும் என்றால் படிப்பு தேவை. காலம் மாறிக் கொண்டிருக்கிறது 8ம் வகுப்பு வரை படித்தால் போதாது 10ம் வகுப்பு வரையாவது படிக்க வேண்டும். சாதி பார்க்காமல் வருவாய் பார்க்காமல் 10 வகுப்பு  வரை இலவசமாகப் படிக்க திட்டம் தீட்டுங்கள். அதற்கு எல்லா ஊருக்கும் தொடக்கப் பள்ளி இருக்கணும். 3 மைலுக்குள்ள நடுநிலைப் பள்ளி இருக்கணும்.. உயர் நிலைப்பள்ளி  5மைல் தூரத்துக்குள்ள இருக்கணும். இதை மனதில் கொண்டு பள்ளிகளைத் திறக்க  முயற்சி செய்யுங்கள்.பள்ளிக் கூடம் திறந்தால் மட்டும் போதாது. அதற்கேற்ற எண்ணிக்கையில் ஆசிரியர்களும் தேவை. ஆசிரியர்கள் நல்ல நிலையில் இருந்தால்தான் படிப்பும் நல்லா சொல்லிக் கொடுக்க முடியும்  இப்போ ஆசிரியர்களின் சம்பளம் குறைவு. இப்படி இருந்தா ஆசிரியர் வேலைக்கு யாரும் வரமாட்டார்கள். வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை என்பது சரியாகி விடும்.    பெரும்பாலானவங்களுக்கு பென்ஷனும் இல்ல.
         முதலில் எல்லா ஆசிரியர்களுக்கும் பென்ஷன் கிடைக்கறதுக்கு திட்டம் தீட்டி கொண்டு வாங்க . திட்டத்தை சரியான புள்ளி விவரங்களுடன் தீட்டுங்கள். இல்லையென்றால் தலைமைச் செயலகத்தில் உள்ளவர்கள் சிறு தவறு இருந்தாலும் பெரிதாக்கி விடுவார்கள்.” என்றார்.
   கல்வி நிலை முன்னேற்றத்திற்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்டது. இதற்கு முன்பு ராஜாஜி காலத்திலும் பென்ஷன் திட்டம் முயற்சி செய்யப்பட்டது ஆனால் நிறைவேற்ற இயலவில்லை.
     அக்காலத்தில் பள்ளிகள் பல வகையினதாக இருந்தன. அவை மாநகராட்சி/  நகராட்சி நடத்தும் பள்ளிகள் ஊராட்சி நடத்தும் பள்ளிகள் மாவட்டக் குழுக்கள் நடத்தும் பள்ளிகள் (போர்டு ஹை ஸ்கூல் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்), அரசு பள்ளிகள் என வெவ்வேறு நிர்வாகங்கள் மூலம் நடத்தப்பட்டன.
           இதில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் பென்ஷன் ஏற்கனவே அனுமதிக்கப் பட்டிருந்தது,
      காமராசர் சொல்லி விட்டார். பயன் பெறப்போகும் ஆசிரியர்களின் எண்ணிக்கை? எவ்வளவு நிர்ணயம் செய்யலாம்.? எவ்வளவு செலவாகும்? என்பதற்கான விவரங்கள் துல்லியமாக இருக்க வேண்டும். அதற்கான ஆதாரங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும்.     
      இந்நிலையில்  அக்காலத்தில் ஓய்வு பெறும் வயது வரம்பு 55 . அவர்கள் ஒய்விற்குப்பின் எவ்வளவு ஆண்டுகள் ஒய்வூதியம் வழங்க வேண்டி இருக்கும் என்றும் கணக்கீடு செய்யப்பட்டது. ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் இருந்த விவரப்படி சராசரி வயது 63 என்று கண்டறியப்பட்டது. ஒய்வூதியம் அரைப்பகுதி தந்தால் எவ்வளவு? கால்பகுதி தந்தால் எவ்வளவு செலவாகும் எனவும் கணக்கிடப்பட்டு ரகசியமாக அறிக்கை தயார் செய்யப்பட்ட்து.
          நிதிக் குழுவின் ஆய்வுக்கு  திட்ட  அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது . கல்வி அமைச்சர் சி. சுப்ரமணியன், நிதிச்செயலர் வர்கீஸ் அவர்களையும் திட்டத்துக்கான செலவுகளை சரிபார்க்கச் சொன்னார் காமராசர். சிறப்பாக தயாரிக்கப் பட்டுள்ளது ஏற்றுக் கொள்ளத் தக்க வகையில்தான் உள்ளது என்று அவர்கள் கூறினர். திட்டத்தின் கூறுகள்  காமராசர் முன்னிலையில் அனைவருக்கும் விளக்கப்பட்டது
         அவ்வேளையில் திடீரென்று ஒரு குரல் குறுக்கிட்டது,  அலுவலர் ஒருவர் எழுந்தார். மற்றவர்கள் அவரை உட்காரும்படி கூறினர். காமராசர் ”அவர் தன் கருத்தை சொல்லட்டும்” என்று அனுமதித்தார்
“ஆசிரியர்கள் மட்டுமா கஷ்டப்படுகிறார்கள்? கடைநிலை ஊழியர் உள்ளிட்ட பலரும் நலிவடைந்த நிலையில்தான் உள்ளனர். அவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் ”என்றுகேட்க
            இது என்ன அவர்களுக்கான பரிவா? அல்லது திட்டத்துக்கான முட்டுக்கட்டையா என அறியாமல் அனைவரும் திகைத்தனர்.
காமராசர் பொறுமையாக,”நீங்கள் சொல்வது சரிதான், மற்றவர்களும் கேட்கத்தான் செய்வர். நானும் அறிவேன். அவர்களுக்கும் படிப்படியாகக் கொடுப்போம்.” என்றார். திட்டமிட்ட  அலுவலர்கள்கூட கவனிக்கத் தவறியதை காமராசர் கவனித்திருக்கிறார் அதற்குரிய பதில் அவர் மனதில் ஏற்கனவே இருந்ததையும் அறிந்து வியந்தனர்.
   பல கட்ட ஆய்வுக்குப் பின் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் முதல் கட்டமாக ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டது
        01.04.1955 அன்று ஒய்வுதியம் நடைமுறைக்கு வந்தது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தாங்கள் கேட்காத நினைத்துக்கூட பார்க்காத வாழ்நாளில் மறக்க இயலாத அந்த அறிவுப்பு கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
             தன் மனதில் நினைப்பதை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நடைமுறைப் படுத்தாமல் அதனை தான் அறியாதது போல் காட்டி மற்றவர்க்கும் விளங்கவைக்கும் மாண்பு வேறு யாருக்கும் இல்லை.
அடுத்தடுத்த  திட்டங்கள் காமராசர் மனதில் ஊறிக் கொண்டிருந்தது .
           சென்னை வண்ணாரப் பேட்டையில் தியாகராயர் கல்லூரி உள்ளது. அக் கல்லூரி முதல்வர் காமராசரிடம் எங்கள் கல்லூரிக்கு தாங்கள் வந்து ஒருவரின் திருவுருவப் படத்தை திறந்து வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். அதற்கென்ன கட்டாயம் வருகிறேன் நோட்டிஸ் அடித்து எடுத்து வாருங்கள் என்றார் காமராசர் .
நோட்டீசுடன் பள்ளி நிர்வாகிகள் வந்தனர். முன்னதாக அந்த அழைப்பிதழைக் கண்ட காமராசரின் செயலாளர் துணுக்குற்றார்.
        ”என்ன இது யாருடைய படத்தை யார் திறந்து வைப்பது? உங்களுக்கு இங்கிதமே இல்லையா? இதற்கு ஐயா ஒப்புக் கொண்டாரா?” என்று உரத்த குரலில் வினவினார். 
         அப்படி யாருடைய படத்தை திறக்க சொல்லிக் கேட்டனர்?

தொடரும்

காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு பகுதி  5

ஞாயிறு, 12 ஜூலை, 2020

காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 3


பகுதி 3     

       நெது.சு. காமாரஜரைக் காணத் தயங்கியதற்கு காரணமும் இருந்தது. காமராசருக்கு முன் இராஜாஜி முதல் அமைச்சராக இருந்தார். தொடக்கக் கல்வித் திட்டத்தில் மாணவர்களை அதிக அளவில் பள்ளிக்கு வரவழைக்க வேண்டும் என்பது இராஜாஜியின் நோக்கமாக இருந்தது. மாணவர்கள் வருகை குறைவாக இருப்பதற்குக் காரணம் ”முழுநேரமும் பள்ளிக்கு வருவதால் வீட்டு வேலைக்கு பிள்ளைகள் உதவமாட்டார்கள் என்று பெற்றோர் நினைப்பதுதான். அதனால்தான் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் விரும்புவதில்லை என்று ராஜாஜி கருதினார். அதற்காக பள்ளிகளில் அரைநாள் பள்ளியில் படிப்பு, அரைநாள் பெற்றோருடன் வேலை என்று வைத்தால் இச்சிக்கல் தீரும் என்று நம்பினார். ஒரு பாதி மாணவர்கள் காலையிலும் இன்னொரு பாதி மாலையிலும் வரவேண்டும். வரைவுத் திட்டத்தை கொண்டுவாருங்கள் என்று ஆணையிட்டு விட்டார்.
  அப்பணியை நெ.து.சுவிடம் ஒப்படைத்தார் இயக்குநர். நெ.துசு, இத்திட்டம் சரியல்ல குலக்கல்வி பயில மறைமுகமாக ஊக்குவிப்பது போலாகும் எனவும் இதனால் மாணவர் வருகை அதிகரிக்காது எனவும் குறிப்பு அனுப்பினார்.
  இராஜாஜி நெ.து.சுவை அழைத்து இந்தத் திட்டத்தை ஏற்பதில் உங்களுக்கு தயக்கம் இருக்கும் போல் தெரிகிறது அதனால் நான் வேறு தனி அலுவலரை நியமித்துக் கொள்ளட்டுமா?. அவர் திட்டத்தைப் பற்றி ஊர் ஊராகச் சென்று பேசி திட்டத்திற்கு ஆதரவு திரட்டுவார் என்று கூறினார்.
   தான் சொல்லும் பணியை ஒரு அலுவலர் செய்யத் தயங்கினால் கடுமையாக கடிந்து கொள்வதோடு உடனே அவரை மாற்றி விட்டு சொல்வதைக் கேட்கும் ஒருவரை நியமிப்பது அரசியலில் சகஜம். இராஜாஜி அவரையே அழைத்து கண்டிப்போ கடிசொல்லோ கூறாமல் அவரிடமே கருத்து கேட்டார்.

  “வேண்டாம். அரசு திட்டத்தில் உறுதியாக இருப்பின் அதனை நானே செய்கிறேன்” என்று ஒப்புக் கொண்டார். திட்டம் ரகசியமாக தயாரிக்கப்பட்டு அவசரம் அவசரமாக சுற்றறிக்கை வெளியிடப் பட்டது. பலத்த எதிர்ப்பு கிளம்பிய போதும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. காங்கிரசில் இருந்தாலும் காமராசரும் குலக் கல்வியை ஊக்குவிக்கும் இத் திட்டத்தை கடுமையாக எதிர்த்தார். ”இந்தப் பைத்தியக்காரத் திட்டத்தை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை” என்று முழங்கினார் காமராசர்.
    ஆனால் நெ.து.சு வை கூட்டங்களில் பேசி ஆதரவு திரட்டும்படி கேட்டுக் கொண்டார். இராஜாஜி. இதனுடைய சாதகமான அம்சங்களை மட்டும் பேசி சமாளித்தார் நெ.து.சு. இவற்றை காமராஜர் அறிந்திருந்தார்
   எதிர்ப்பு அதிகரித்து பதவி விலக வேண்டிய சூழ்நிலை ராஜாஜிக்கு உருவானது. காமராசர் முதலமைச்சர் ஆனதும் இத்திட்டத்தை கைவிட்டதாக அறிவித்தார். நிம்மதிப் பெருமுச்சு விட்டார் நெ.து.சு.
   தன்னை எதிர்த்து யாரை வேட்பாளராக நிறுத்தினாரோ அவருக்கே அமைச்சர் பதவி அளித்து அழகுபார்த்தார் காமராசர். ஆம்! சி.சுப்ரமணியம் கல்வி அமைச்சரானார். 

   இப்படிப் பலவாறாக சிந்தித்துக்கொண்டு காமராசரை சந்தித்தார் நெ.துசு. "குலக் கல்விமுறைக்கு நீ எப்படி ஒப்புக் கொண்டாய்?. ஏன் பிரச்சாரம் செய்தாய்" என்று கேட்கப் போகிறார் என்று நினைத்தார். ஆனால் அதைப் பற்றி எதுவும் கேட்கவில்லை காமராசர்
   அவர் கேட்டது பள்ளி தொடங்குவதற்கான விதிமுறைகள் பற்றி.. வட சென்னையில் விருதுநகர் நாடார் உறவின் முறையினர் தொடக்கப்பள்ளி நடத்தி வந்தனர். உயர்நிலைப் பள்ளி தொடங்குவதற்காக அனுமதி கோரி காமராஜரை தனிப்பட்ட முறையில் அணுகியுள்ளனர்.
    உயர்நிலைப் பள்ளிகள் தொடங்குவதற்கு கட்டிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருந்தால் 11 ம் வகுப்பு வரை நேரடியாக அனுமதி அளிக்கப் படும். இல்லையெனில் 6,7,8 வகுப்புகளுக்கு மட்டும்
( அப்போதெல்லாம் 6, 7. 8 வகுப்புகள் ஃபர்ஸ்ட் ஃபார்ம், செகண்ட் ஃபார்ம், , தேர்ட் ஃபார்ம் …… என்று அழைக்கப்பட்டது)
”இந்தப் பள்ளிக்கு எப்படி அனுமதி வழங்கப் போகிறீர்கள்?” கேட்டார் காமராசர்.
விதிகளின்படி கட்டிடம் கட்டும் வரை தற்காலிகமாக மூன்று படிவங்கள் மட்டுமே அனுமதி வழங்கமுடியும் தாங்கள் விரும்பினால் அவர்கள் கோரியுள்ள படி 4 படிவங்களுக்கும் அனுமதி வழங்குவதாக இயக்குநர் தெரிவிக்கச் சொன்னார் என்றார் நெ.து.சு.
“அவர்கள் எனக்கு வேண்டியவர்கள்தான். ஆனால் விதிகள் பொதுவானவை. அவர்கள் கட்டுப்பட்டால்தான் மற்றவர்களை கட்டுப்படுத்த முடியும். சரி மூன்று படிவங்களுக்கு மட்டும் அனுமதி அளித்தால் போதும். இயக்குநருக்கு சொல்லி விடுங்கள்” என்று அனுப்பி விட்டார்
   தகவலைக் கேட்ட இயக்குநர், ” விதிமுறைகளை எல்லாம் ஏன் ஒப்பித்தாய். கேட்டபடி அனுமதி கொடுக்கிறோம் என்று சொல்ல வேண்டியதுதானே! என்று நெ.து.சுவைக் கோபித்துக் கொண்டார்

எதிர்பாராவிதமாக மறுநாளே அப்பள்ளியின் செயலாளர் மூன்று படிவங்கள்(6,7,8) வகுப்புகள் மட்டும் கொடுங்கள் என்று கடிதம் கொடுத்தார். அவ்வாறே அனுமதி வழங்கப் பட்டது.

காமராசர்தான் பள்ளிச் செயலாளரிடம் இதுபோல கடிதத்தைக் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். தொலைபேசியில் ஒரு வார்த்தை சொன்னாலே அனுமதி வழங்கத் தயாராக இருந்த போதும் உண்மையை நிலையை அறிந்து விதிகளுக்கு மதிப்பளித்த பெருந்தலைவரின் மாண்பை என்னென்பது!

பி.ஏ.கே பழனிச்சாமி மேல்நிலைப்பள்ளி என்ற பெயரில் தொடக்கப் பள்ளியுடன் இணைந்து இன்றும் வட சென்னையில் சிறப்பாக இயங்கி வருகிறது இப்பள்ளி.

இந்த நேரத்தில் இயக்குநர் பதவி காலியாகும் சூழ்நிலை ஏற்பட்டது, துணை இயக்குநர்கள் எம்.டி.பால் மற்றும் நெ.து.சு இருவரின் பெயரும் பரிசீலனையில் இருந்தது.

பெரியார் உள்ளிட்ட பலர் நெ.து.சு வரவேண்டும் என்று விழைந்தனர். டாக்டர் எம்.டி.பால் அவர்களுக்கும் பலமான பரிந்துரை இருந்தது.

அவர்கள் காமராஜரிடம் சொன்னது இதுதான் ” நெ.து.சு ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை நிறைவேற்ற முயன்றார். அத்திட்டத்தை கூட்டங்களில் ஆதரித்துப் பேசினார். ஆனால் பால் எந்தக் கூட்டத்திலும் பேசியதில்லை எனவே அவரை இயக்குநராக நியமிப்பது நல்லது”
”சரி யோசிப்போம்” என்றார் காமராசர்

காமராசரின் முடிவு என்ன?
யார் வென்றார்கள்?

-----------------------------------------------------------------------------

சனி, 11 ஜூலை, 2020

காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 2


காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு பகுதி-1

காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 2


  நாம் சில இடங்களுக்கு அடிக்கடி  செல்வோம் ஆனால் அந்த இடத்தின் சிறப்பு தெரியாது. அங்கே சில குறிப்புகள் அவற்றை உணர்த்தும். தடம் பதித்தவர்களின் தடயங்கள் இருக்கும். அவற்றை கவனியாமல் சர்வசாதரணமாகக் கடந்து போயிருப்போம். சென்னையில் ஒவ்வொரு பழைய கட்டடத்திலும் ஏதோ ஒரு வரலாறு ஒளிந்துள்ளது. சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தின் அருகில் ஒரு சென்னை பள்ளியைக் காணலாம்  (கார்ப்பபேரஷன் பள்ளிகள்  சென்னைப் பள்ளிகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கார்ப்பரேஷன் பள்ளி என்று கூறுவது தாழ்வாகக் கருதப்படுவதால் இந்த மாற்றம்.) இதில் ஒரு  கல்வி அலுவலகம் உள்ளது. உண்மையில் அது ஒரு பழைய உருது பெண்கள்  தொடக்கப் பள்ளி. இப்போது அந்தப் பள்ளியில் மாணவர்கள் இல்லை. இன்னொரு  தொடக்கப் பள்ளியும் இங்கே இருக்கிறது.
         அந்தக் கட்டிடத்தில் பள்ளி திறக்கப்பட்டபோது  பதிக்கப்பட்ட கல்வெட்டைத்தான் கீழே படத்தில் பார்க்கிறீர்கள்.


    
நான் முதன் முதலில் அங்கு சென்ற போது கவனித்தது   அந்தக் கல்வெட்டைத்தான். 1949 இன் இறுதியில் திறக்கப் பட்டிருந்த அந்த பள்ளியில் கல்வெட்டில் இருந்த இரண்டு பெயர்கள் என்னைக் கவர்ந்தன. அதில் ஒருவருக்கு அப்போது  தெரிந்திருக்காது தனக்கு ஒரு பெருந்தலைவரின் கடமையை- கனவை நிறைவேற்றும் வாய்ப்பு இன்னும் சில ஆண்டுகளில் கிடைக்கப் போகிறது என்று. (இன்னொருவர் பற்றிய தகவல் பதிவின் இறுதியில்)
       இங்கு ஆசிரியர்கள் அடிக்கடி வருவார்கள். அவர்களிடம் நான் கேட்பதுண்டு. இந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள பெயர்களில் யாரைப் பற்றியாவது  நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா என்று.  குறிப்பாக வட்டமிடப் பட்டுள்ளவரின் பெயரைக் காட்டி, படியுங்கள் என்பேன். எந்தவித சலனமும் இன்றி N.D.SUNDARAVADIVELU என்று படிப்பார்கள். ”இவரைப் பற்றி ஏதாவது தெரியுமா”
அப்போ இருந்த  .  ன்னுபோல இருக்கு சார். “ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார்கள்.
          பல ஆண்டுகள் கார்ப்பரேஷன் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களுக்குக் கூட கர்மவீரர் காமராஜரின்  மாபெரும் திட்டத்திற்கு  உறுதுணையாக நின்ற அலுவலரைப் பற்றித் தெரியவில்லை.   தெரிந்து கொள்ளவும் ஆர்வம் இல்லை. இத்தனைக்கும் இவரது கட்டுரைகள் தமிழ்ப்பாடத்தில்கூட இடம் பெற்றிருந்தன.
       இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் நெ.து.சு என்று அன்புடன் அழைக்கப் படும் நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள்தான் காமராசரின் கனவை நனவாக்க பாடுபட்ட அலுவலர் என்று
  கல்வித் துறையில் எத்தனையோ அதிகாரிகள் பணியாற்றி இருந்தாலும் இவரைப் போல தடம் பதித்தவர்கள் அரிது.     அதிகாரிகள் மனம் வைத்தால் ஒரு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தவும் முடியும். இக்காலத்தைப் போல் அல்லாமல் பெரும்பாலான உயர் அதிகாரிகள் சிலர் முழுக்க முழுக்க  அரசின் கைப்பாவையாக செயல்படாமல் குற்றங்குறைகளை துணிச்சலாக எடுத்துக் கூறுபவர்களாகவும் இருந்தனர்.  அரசின் விருப்பப்படி செயல் பட்டாலும் தங்களின் கருத்தையும் பார்வையையும் வெளிப்படுத்தத் தயங்கியதில்லை.  
        ஆனால் அரசனுக்கு கத்கரிக்காய் பிடிக்கும்போது,அது எவ்வளவு அழகு.என்ன சுவை! காய்களில் கத்தரிதான் ராஜா! ஆஹா! அதன் காம்பும் கிரீடம் போல அல்லவா இருக்கிறது என்றும் அரசனுக்கு கத்தரிக்காய் பிடிக்காத போதுசீ!சீ! இது என்ன கத்தரிக்காய் இப்படி இருக்கிறது.  கோமாளிக்கு கொம்பு முளைத்தது போலவே இருக்கிறதே அதன் காம்பு. காரல் சுவை சகிக்க வில்லைஎன்று சொல்லும் அதிகாரிகள் அக்காலத்திலும் இருந்திருக்கிறார்கள்.
      நெ.து.சு  முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். இவர்களில் பலர் சாதிப்பற்று உள்ளவர்களாக இருந்தனர். ஆனால் நெ.து சு சாதி மறுப்பாளராக இருந்தார். இவர் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.  இசைவேளாளர் மரபைச் சேர்ந்த நன்கு படித்த காந்தம்மாள் என்பவரை குடும்பத்தினரின் எதிர்ப்புக் கிடையில் திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்தை தந்தை பெரியார் தலைமை தாங்கி நடத்தினார்.
            பி.டி.ஓ வாக பணியில் சேர்ந்த நெ.துசு. அப்பணியை விட சம்பளம் குறைவான கல்வித் துறைப் பணியையே விரும்பினார்.  தற்போதைய ஆந்திர மாவட்டத்தின் ஒரு பகுதியில் மாவட்டக் கல்வி அலுவலராகக் கல்விப் பணியைத் தொடங்கி (அப்போது அதுவும் சென்னை மாகாணம்)  பின்னர் பல்வேறு இடங்களில் பணியாற்றி சென்னை  மாநகராட்சியில் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். அக்காலக் கட்டத்தில் திறக்கப்பட்ட பள்ளியின் கல்வெட்டுதான்  படத்தில் நீங்கள் பார்த்தது, காமராஜரைப் பற்றி எழுதுவதை விட்டு இவரைப் பற்றி ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கலாம்.
      மதிய உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுதும் விஸ்தரிப்பதற்கு  முன்பே சென்னையில் சில மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவு  வழங்கப் பட்டுக் கொண்டிருந்தது . அதை வெற்றிகரமாக செயல்படுத்தியதில் நெ.து.சுவுக்கு முக்கியப் பங்கு உண்டு. பதவியில் இல்லாத போதுகூட இதை காமராஜர் கவனித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
         விரைவில் கல்வித் துறை துணை இயக்குநர் பதவி அவரை அடைந்தது. அரசியல் சூழ்நிலைகள் காங்கிரசுக்குள் இரண்டு பிரிவு ஏற்படுத்தியது.  ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டது.காமராசர் முதல்  அமைச்சரானார்.
   கொஞ்ச நாட்களில் காமராசர் கல்வித்துறை இயக்குநர் கோவிந்தராஜுலுவை தொலைபேசியில் அழைத்து நெ.து.சுவை  தன்னை சந்திக்கும்படி கூறினார். தானே வருவதாகக் கூறியும் நீங்கள் வேண்டாம் துணை இயக்குநரையே அனுப்புங்கள் என்றார். இயக்குநர் நெ..துசுவிடம் தகவலைத் தெரிவித்து உங்கள் மேல் முதல்வருக்கு கோபம் இருக்கலாம் என்று எச்சரித்து அனுப்பினார்.  இயக்குநரைத் தவிர்த்து முதல்வர் தன்னை ஏன் அழைத்ததன் காரணம் தெரியாமல் தவித்தார். தர்மசங்கடமாகவும்  உணர்ந்தார். அவரது தயக்கத்திற்கு  ஒரு முக்கியக் காரணம் இருந்தது

அது என்ன நாளை பார்க்கலாம்?


---------------------------------------------------------------------------------------------

கொசுறு: கல்வெட்டில் நீங்கள் பார்த்த இன்னொரு முக்கியப் பிரமுகர் ’சர் முகம்மது உஸ்மான்’ சென்னை தி.நகரில் உள்ள புகழ்பெற்ற  உஸ்மான் ரோடு பெயரில் உள்ள உஸ்மான் இவர்தான். சென்னை மாநகராட்சி தலைவராக விளங்கினார். அப்போது மேயர் பதவி இல்லை
------------------------------------------------------------------------------------------------------------

காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு பகுதி-1