என்னை கவனிப்பவர்கள்

ஏ.ஆர்.ரகுமான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏ.ஆர்.ரகுமான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 ஜூலை, 2020

ஏ.ஆர்.ரகுமான் புலம்பல் சரியா?


அன்புள்ள ரகுமான்!.
      90களில் இளைஞர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்களில் முக்கியமானவர்கள்  இரண்டு பேர். ஒருவர் சச்சின் டெண்டுல்கர். மற்றொருவர் நீங்கள் . நீங்கள் இருவருமே அமைதிக்குப் பெயர் போனவர்கள்  அதுவும் உங்கள் முகம் பேரமைதி கொண்டதாய்த் தெரியும். அளக்கப் பட்ட வார்த்தைகள்தான் உங்கள் உதட்டைக் கடந்திருக்கின்றன.  அநாவசியமாய் ஒரு வார்த்தை கூட உங்கள் நாவில் இருந்து வந்ததில்லை.  
         எனக்குத் தெரிந்து நீங்கள் மனம் திறந்து பேசியதாக நினைவு இல்லை.  ஆனால் சமீபத்தில் நீங்கள் சொன்னதாக வந்த செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது. பாலிவுட்டில் உங்களுக்கு  எதிராக ஒரு குழு வதந்திகளைப் பரப்பி வருவதாகவும், ஹிந்தி சினிமாக்களில்  பணியாற்றும் வாய்ப்புகளை அந்தக்குழு தடுத்து வருவதாகவும் நீங்கள் சொன்னதாக, அறியப்படும் செய்திதான் அது. ஒரு வேளை அதில் உண்மையும் இருக்கலாம். ஆனால் அதற்காக வருத்தப்படும் ஆரம்ப நிலையிலா நீங்கள் இருக்கிறீர்கள்?.  உங்களை உச்சியில் வைத்து அழகு பார்த்ததும் பாலிவுட்தான். உங்களை உலகறியச் செய்ததும் பாலிவுட்தான். அவர்களும் உங்களைத் தென்னவராகப் பார்க்கவில்லை. அவர்களில் ஒருவராகத்தான் உங்களைக் கண்டனர். நீங்களும் வடவராகவே மாறிப் போனீர்கள். இன்றுவரை நீங்கள்தான் இந்தியத் திரைஇசை உலகின்  நம்பர் 1 என்று   கூகுளின்  பக்கங்கள் காட்டுகின்றன. உங்கள் வருத்தமும் ஆதங்கமும் உங்கள் தகுதிக்கு சரியானதுதானா? 
        சின்னச் சின்ன ஆசையில் தொடங்கி இன்றுவரை எத்தனை எத்தனை பாடல்கள்! உற்சாகம், ஆரவாரம், அமைதி, காதல், சோகம், வீரம், பக்தி என உணர்வுக் குவியல்கள் இசைக் கலவையாக உங்கள் வாத்தியங்களில் இருந்து புறப்பட்டு எங்கள் செவிகளை நிறைத்தன
      ’என்மேல் விழுந்த மழைத்துளியே’ போன்ற அமைதியான பாடலாகட்டும், ’முக்காபலா’ போன்ற ஆர்ப்பாட்டமான பாடலாகட்டும், ’ஸ்நேகிதனே! ஸ்நேகிதனே’  என்ற மனதை வருடும் பாடலாகட்டும், உயிரே! உயிரே! என்று உருகிய பாடலாகட்டும் நேற்றைய சிங்கப் பெண்ணே வரை உங்கள் இசையால் மயங்கிக் கிடக்கிறவர்கள் பல பேர். 
       சற்று சிந்தித்துப் பாருங்கள்!  முதல் அடி எடுத்த வைத்த நாளில் இருந்து நீங்கள் பணிபுரிந்தது எல்லாமே மணி ரத்தினங்களோடும் சங்கர்களோடும்தான்.
     அப்போதெல்லாம் தினமணியில் வாராவாரம் அதிகம் விற்பனையாகும் கேசட்டுகளின் பெயர்ப் பட்டியல் இடம் பெறும். அதில் உங்களுக்குத்தான் முதல் இடம்.  17 ஆண்டுகளாக முன்னணியில் இருந்த  தீவிர பக்தர்களைக் கொண்ட  இசைஞானி இளையராஜாவைத் தாண்டி இடம் பிடித்தீர்கள். இந்தியிலும் உங்கள் வெற்றிக் கொடி பறந்தது. வசீகரமான இளமைத் துள்ளல் இசையின் மூலம் இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்டீர்கள்.  ஒரு வருடத்திற்கு இசை அமைக்கும் படங்களின் எண்ணிக்கை  குறைவு என்றாலும் அத்தனை பாடல்களும் ஹிட் அடித்தன. உங்கள் நூதனமான இசை வடிவங்கள் மனதை வருடின.  ஆனால் நானறிந்தவரை சாதரண தயாரிப்பாளர்கள் நெருங்க முடியாத உயரத்தில் இருந்தீர்கள். இன்றுவரையிலும் அப்படித்தான் இருக்கிறீர்கள்
        ஏற்கனவே முன்னனி நடிகர்களும் இயக்குநர்களும் உங்கள் இசைக்காகக் காத்திருந்தார்கள். தொடர்ந்து இளையராஜாவோடு கூட்டணி வைத்தவர்கள் உங்கள் பக்கம் தாவினார்கள்.  பாரதிராஜாவே உங்களிடம் வந்து சேர்ந்தார். ஆனால்  என்னைப் புறக்கணிக்க சதிநடக்கிறது என்று இளையராஜா கூறவில்லை.  உங்கள் கூட்டணி  எப்போதுமே  பிரம்மாண்டக் கூட்டணியாக இருந்தது. படம் வெற்றியடையாவிட்டால் கூட உங்கள் பாடல்கள் வெற்றி பெற்றன. விதம்விதமான  ஒலியிசைகள் முலம் இன்பத் தேன் வந்து பாய்ந்தது எங்கள் காதுகளில்.
    உங்கள் வந்தே மாதரம் ஆல்பம் ஒலிக்காத இடம் உண்டா?. இன்றும் பள்ளி ஆண்டு விழாக்களில்  தாய்மண்ணே வணக்கம். ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது?. இதைவிட வேறென்ன பெருமை வேண்டும்? 
  சிலபடங்களுக்குப் பிறகு காணாமல் போய்விடுவீர்கள் என்றுதான் உங்களைப்பற்றிய  சிலர் ஆரூடம் கூறினார்கள். இளையராஜாவிற்குப் பிறகு யாரும் நீண்ட  காலம் நிலைத்திருக்க மாட்டார்கள் என்றுதான் கருதப்பட்டது. ஆனால் அதனை தவிடு பொடியாக்கி 25 ஆண்டுகளுக்கு மேல்  உச்சத்தில் இருந்தீர்கள்.  இருக்கிறீர்கள். தெற்கில் மட்டுமல்லாது வடக்கிலும் ஆட்சி புரிந்தீர்கள். நாடுகள் கடந்தது உங்கள் இசை. ஹாலிவுட்டிலும் தடம் பதித்து, உலகமே அண்ணாந்து பார்த்த ஆஸ்கார் விருதும் பெற்று,  ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப் படுத்தினீர்கள். ஆஸ்கார் மேடையில் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றே கூறியபோது பெருமிதம் கொள்ளாத தமிழர்கள் இல்லை. அந்த மேடையில் நீங்கள் விருது பெற்ற போது நாங்கள் பெற்றதாகவே .குதூகலித்தோம்; கொண்டாடினோம். 
       தமிழ்நாட்டுக்கு  எப்போதும் ஒரு பெருமை உண்டு.  திரை இசை மேதைகள் இங்கு போல் வேறேங்கும் இல்லை. எம்.எஸ்.வி இளையராஜா, நீங்கள். மூவரும் திரை இசை மும்மூர்த்திகளாக விளங்கி பெருமை சேர்த்தீர்கள். 
  வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக  அதிகம் இசை அமைத்து தரம் குறைத்துக் கொள்ளாமல் குறைவாக இசைத்தாலும்   நிறைவாக நின்றீர்கள். ஆனால் ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்தாலும் சம்பாதிக்க முடியாத செல்வம் உங்களை  அடைந்தது. இசை அறிவு மட்டுமல்ல.  முந்தைய தலைமுறை கலைஞர்களுக்கு அதிகம் இல்லாத   தொழில்நுட்ப அறிவு, காப்புரிமை மேலாண்மை,  இயல்பாகவே உங்களிடம் இருந்தது. அதைவிட அதிகம் பேசிப் பெயரைக் கெடுத்துக்கொள்ளாத புத்திசாலித்தனமும் உங்களிடம் இருந்தது  அமைதி உங்களுக்கு வாய்த்த பலமான ஆயுதம் .   இப்போது அமைதி கலைந்திருப்பது எங்களுக்கு அதிசயம்தான்.
             இளையராஜாவுக்குப் பின் இசையில் என்ன செய்து விடமுடியும் என்று இருந்த நிலையில் ஒரு புதிய பாணியை அறிமுகப்படுத்தி எங்களை உங்கள் பக்கம் ஈர்த்தீர்கள். எம்.எஸ்.வி.,இளையராஜா போல ஒரு ட்ரெண்ட் செட்டராகத் திகழ்ந்தீர்கள். உங்கள் கால்ஷீட் கிடைக்காதவர்கள் உங்கள் பாணியிலேயே இசை அமைக்கும் இசை அமைப்பாளர்களைத் தேடிப் போனார்கள்.      
    நீங்கள் வந்தபின் ஏராளமான பாடகர்களை அறிமுகப்படுத்தினீர்கள். இசையில் உதவிய கலைஞர்களின் பெயர்களையும்  கேசட் அட்டையிலும் சிடியிலும் பதித்து அவர்களுக்கு அங்கீகாரம் தந்தீர்கள்.  உங்கள் இசையில் ஒரு பாடல் பாடுவதற்கு முன்னனிப் பாடகர்களே தவம் கிடந்தார்கள். உங்கள் இசைக்கு ஒரு பாடல் எழுத வாய்ப்பு கிடைக்காதா என்று பாடலாசிரியர்கள் ஏங்கினார்கள்.  சில இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நீங்கள் எட்டாக் கனியாக விளங்கினீர்கள். அத்தனையும் உங்களுக்கு வாய்த்திருக்கிறது
     வயதானவர்களுக்கு  தாங்கள் ஒதுக்கப் படுகிறோம் என்று தோன்றுவது உண்டு. அதே போன்ற மனநிலை உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.    
எத்தனையோ திறமை இருந்தும்  கண்டு கொள்ளப் படாமல் வாய்ப்புக் கிடைக்காமல் அங்கீகாரமும் கிடைக்காமல் போனவர்கள் பலருண்டு. ஆனால் உங்களுக்கு அப்படி அல்ல. தமிழ்த் திரையுலகம் அடையாளம் கண்டது.  இந்தித் திரையுலகும்  கொண்டாடியது. ஹாலிவுட்டும் அரவணைத்தது. 
    மாற்றம் ஒன்றுதான் மாறாதது ,  ஒருகுறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அனைத்திலும் மாற்றம் நடந்து கொண்டிருக்கும். அதுவும்  கலை ரசனையில் நடக்கும் மாற்றம் வேகமானது  ஒன்றுபோய் இன்னொன்று இடம் பிடிக்கும். அதுவும் சில காலத்திற்கே.  அப்படிப்பட்ட மாற்றங்களை விரும்பியதால்தான் உங்களுக்கு  ஒரு மிகப் பெரிய இடம் கிடைத்தது. காலத்திற்கேற்ப நவீனப் படுத்திக் கொள்ளும் திறமை உங்களுக்கு இருந்ததால்தான் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தாக்குப் பிடிக்க முடிந்தது. அதுவே மிகப் பெரிய சாதனை. அதனை இனி வேறு யாராலும் நெருங்க முடியாது.  ஆனால் இன்றைய தலைமுறையின் ரசனை மாற்றம் அதிவேகமானது.  ரசனையின் வாழ்நாள் மிகக் குறுகியது. தயவு தாட்சயணமின்றி தூக்கி எறியத் தயங்கமாட்டார்கள். இவையெல்லாம் உங்களுக்குத் தெரியாததல்ல.
தேசியவிருதுகள் உங்களைப் போல் பெற்றவர் யாருமில்லை. விதம் விதமான விருதுகள் உங்களுக்குப் பெருமை சேர்த்தன; பெருமை அடைந்தன. 
        இத்தனை பெருமைகளைக் கொண்ட நீங்கள்  இந்தியில் எனக்கு வாய்ப்பு  திட்டமிட்டு மறுக்கப் படுகிறது, சதி செய்யப்படுகிறது  என்று வருந்தி  இருப்பதும்  இந்தித் திரை உலகம் உங்களைப் புறக்கணிப்பதாக புகார் கூறுவதும் ஏற்புடையதாகத் தோன்றவில்லை.   தமிழில் கூட உங்களுக்கு வாய்ப்பு  அதிகம் இல்லை. காரணம், நிச்சயம் புறக்கணிப்பாக இருக்க முடியாது.. ஆனால்   இன்னமும்   சாதாரண தமிழ்த் தயாரிப்பாளர்களுக்கு எட்டாத உயரத்தில்தான் இருக்கிறீர்கள். அதைப் பற்றி நீங்கள் கவலைப் படவில்லை. நீங்கள் தமிழ்ப்  பாடகர்களுக்கு வாய்ப்பளித்ததைடை விட வடக்கத்திய தமிழ் தெரியாத பாடகர்களையே அதிகம் ஆதரித்தீர்கள். உங்களுக்காக அவர்களையும் கொண்டாடினோம். நீங்கள் இந்திக்கே அதிக முக்கியத்துவம் அளித்தீர்கள். ஆனால் அப்போதும் நீங்கள் தமிழைப் புறக்கணிப்பதாகக் நாங்கள் கருதவில்லை. 
  நீங்கள் பல பாடகர்களுக்கு வாய்ப்பளித்தீர்கள். அதுபோல தயாரிப்பாளர்கள் பலருக்கு வாய்ப்பளிப்பதாக கருதிக் கொள்ளுங்கள். .  இவ்வளவு சாதனைக்குப் பின் இன்னமும் வாய்ப்பு இல்லை என்று புலம்புவது எங்கள் அபிமான ரகுமானுக்கு அழகல்ல. உங்கள் சாதனைகள் காலம் கடந்து நிற்பவை. உச்சம் தொட்ட இளையராஜா உங்கள் வருகைக்குப் பின் தளர்ந்து போகவில்லை. இன்னமும் இசை அமைத்துக் கொண்டு ரசிகர்  நெஞ்சங்களில் வீற்றிருக்கிறார்.உங்களாலும் அதுபோல் முடியும்.
        தனிக்குடித்தனம் போய் அவ்வப்போது தாய் வீடு வந்து போன பிள்ளை போலத்தான் இருந்தீர்கள்.  இங்கேயும் திறமையான இளம் இயக்குநர்கள்  தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மொத்த பட்ஜெட்  உங்கள் சம்பளத்துக்குக் காணாது. உங்கள் இரும்புக்கோட்டையை தளர்த்தி உங்கள் இசையை அவர்களுக்கும் கொடுங்கள்.               
     இந்தியை விட்டுத் தள்ளுங்கள். அவர்களை நீங்கள் புறக்கணியுங்கள்.  தமிழர்கள் என்றுமே உங்களைக் கொண்டாடு்வார்கள். எங்கள் இசைச் சிங்கம்  ஏ.ஆர் ரகுமானாக எப்போதும் கம்பீரமாக இசைகர்ஜனை புரியுங்கள்

                                                                                                              அன்புடன்
                                                                                           உங்கள் ரசிகர்களில் ஒருவன்.

------------------------------------------------------------------------------------------------------------------------
கொசுறு: 1

ஏ.ஆர்.ரகுமானின் இந்த கருத்து பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பிய நிலையில் சல்மான் கான் படத்திற்கு இசையமைப்பது குறித்து ஏ.ஆர்.ரகுமான் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சில வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது. அதில் ரஹ்மான் ஆவரேஜ் மியூசிக் கம்போசர் என்று ஜோக்காக சொவதுபோல ரகுமானிடமே சரியா என்று கேட்பார். (இதற்கு சல்மானுக்கு கடும் கண்டனங்களை இந்தி ரசிகர்கள் பதிவு செய்தனர்)  ரகுமான் எப்போதும் அமைதிப் புன்னகைபுரிவார்
       மேலும் அந்த வீடியோவில் ரகுமானிடம் சல்மான் கான் எப்போது எனது படங்களுக்கு இசையமைப்பாளர் என்று கேட்பார். ஆனால் ரகுமான் அப்போது அமைதியாக இருப்பார்.  சல்மான்கான் கைகுலுக்க முயற்சிக்கும்போது ரகுமான்  கையை சட்டைப்பாக்கெட்டில் இருந்து எடுக்காமல் பதிலடி கொடுப்பார். பின்னர் செய்தியாளர் ஒருவர் சல்மான் கான் படத்திற்கு எப்போது இசையமைப்பீர்கள் என்று கேள்வி எழுப்புவார். அதற்கு பதிலளிக்கும் ஏ.ஆர்.ரகுமான், “அவர் எனக்கு விருப்பமான படங்களை நடிக்க வேண்டும்“ என்று சிரித்து கொண்டே கூறுவார்.

ARR is unaffordable’

       ....... former Stardust editor-turned-filmmaker Ramkamal Mukherjee, who has made award-winning films like Cakewalk and Season’s Greetings, says that the claim that Oscar winners are being kept out are far from reality.
“The fact is it’s tough for filmmakers to afford Rahman. As a filmmaker, I would love to collaborate with Rahman, but will he work within the budget that our film can afford? Unfortunately, none of the music companies is paying producers for the songs.
The days are gone when the rights of movie songs would fetch lakhs and crores. But now music companies ask us to give it away as a complimentary deal against a marketing spend, which is not even clearly shared with the producers.
-----------------------------------------------------------------------------------------------------------------------------

தொடர்புடைய முந்தைய பழைய பதிவுகள் கீழே
 ஏ.ஆர்.ரஹ்மான் - வாழ்த்துக் கவிதை!
இளையராஜா செய்த தவறு
 

செவ்வாய், 6 ஜனவரி, 2015

திரைஇசையைப் புரட்டிப்போட்ட புயல் ஏ.ஆர்.ரகுமான்



இசைப் புயல் ஏ.ஆர். ரகுமானின் 48 வது பிறந்த நாள்.  ஆஸ்கார் வாங்கியபோதும் அலட்டிக் கொள்ளாத அமைதி நாயகன். இசையில்தான்  புயல்தானே தவிர் பேச்சிலும் நடத்தையிலும் ஆழ்கடல் அமைதி. அவரைப் பற்றிய கட்டுரை ஒன்று எழுத வேண்டும் நினைத்திருந்தேன்.எழுதியும் விட்டேன். இன்று வெளியிடலாம் என்று காத்திருந்தேன். இடையில் வல்லினம் இணைய இதழில் திரு அகிலன் என்பவர் எழுதிய ஏ.ஆர் ரகுமான் பற்றி எழுதிய பழைய  கட்டுரையைப் படித்தேன்.அதைப் படித்ததும் இசை அறிவு இல்லாதவன் நான் எழுதிய  கட்டுரை வெறும் வார்த்தைகளாகத் தெரிந்தது,  அந்த கட்டுரை வல்லினம் இணைய இதழின் அனுமதியுடன் இன்கு வெளியிடப் படுகிறது. இதழின் ஆசிரியர் நவீன் அவர்களுக்கு நன்றி 

மார்ச் 2010 இதழில் வெளியான அந்தக் கட்டுரையை எழுதியவர்  திரு :அகிலன் 
 ( வல்லினம் இதழின் இணைப்பு : http://www.vallinam.com.my/issue15/column4.html
                                      ஏ ஆர் ரஹ்மான் : வெற்றியின் செய்தி

     இன்றோடு சரியாக ஒரு மாதமாக, இரண்டு இசைத்தொகுப்புகள் என்னை தனது கட்டுக்குள் வைத்திருக்கிறது. மாறி மாறி ஒவ்வொரு நாளும் அவைகளைதான் கேட்கிறேன். ஒன்று இளையராஜாவின் ரமணா சரணம் சரணம் தொகுப்பின் பாடல்கள் மற்றது விண்ணைத் தாண்டி வருவாயா. விண்ணைத் தாண்டி வருவாயா, கொஞ்சம் ஸ்பெசல். காரணம் மறக்க முடியாத பழைய காதலை திரும்பவும் உயிர்தெழ செய்திருப்பதால். அந்தப் பாடல்களில் இருந்து மீள முடியாமலும் உள்ளேயே அடக்கிக் கொள்ள முடியாமலும், எனது மெல்லிய உணர்வுகளின் எல்லைவரை ஊடுருவி எனது இருப்பைக் கூட இல்லாமல் செய்ய முயற்சிக்கிறது. காதல் அறிந்தவர்களால் மட்டும்தான் அதை உணரமுடியும். அதிலும் வைரமுத்துவில்லாமல், செயற்கை வரிகள் இல்லாமல் முதல் முறையாக தமிழில் ஏ ஆர் ரஹ்மானின் இசையில் மேட்பூசில்லாத உணர்வுகளை அழகாகவும் ஆழமாகவும் சொல்ல முடிந்த இசைக் கவிதை. 
மொத்த இசைத்தொகுப்பும் காதலிக்குத் தெரியப்படுத்த விரும்பும் ஒரு செய்தி. ஒவ்வொரு பாடலும் வாழ்வின் ஒவ்வொரு தருணம். அவருடைய புகழின் இத்தனை நெருக்குதலுக்குப் பிறகும், நாம் சுவாசிக்க சுத்தமாக அவர் தந்த பிராணவாயு. பாடல்கள் எல்லாமே குளிர் தேசங்களில் கம்பளி ஆடையணிந்த அழகிய காதலி நம்மை அணைத்துக்கொள்ளும் சுகம். 

    ஏ ஆர் ரஹ்மானுக்குப் பிறகான இந்திய இசை, ஒலிவடிவமைப்பில் மிகப் பெரிய புரட்சியை இந்தியாவில் உண்டாக்கியிருக்கிறது. இல்லை யென்றால் இன்றுவரை மிக்ஸிங், மாஸ்திரிங் போன்றவை நமக்கு விளங்கியிருக்காது. அது மட்டுமல்லாமல் மிக்ஸிங், மாஸ்திரிங் கூட இசையமைப்பில் ஒரு அம்சம் என்பதை நிரூபித்து காட்டியது அவர்தான். அதாவது அது இறுதிக்கட்டவேலை என்பதையும் தாண்டி, அது ஒரு கட்டுமானமாக இசையமைப்பில் முக்கியத்துவம் பெற்றது. 

    அவருடைய இசை ஞானம், வாழ்க்கை வரலாறு, இசை தொழில் நுட்ப ஞானம் என்று எல்லோரும் எவ்வளவோ பேசியிருந்தாலும், நான் அவருடன் பழகிய நாட்களில் காலத்தால் அழியாத சில விஷயங்களை நான் கிரகித்து கொண்டிருக்கிறேன். அது இதுவரை பலரும் பேசாதது. காரணம் இது மற்றவர்கள் அறியாததாகக் கூட இருக்கலாம். அவரின் வெற்றி அவருடைய இசைஞானத்திற்கு கிடைத்த வெற்றியென்பதைக் காட்டிலும், வெற்றிக்கான சில அத்தியாவசியக் குணங்களும் கோட்பாடுகளுமாக நாம் என்றென்றும் பேணவேண்டியவைகளுக்கான வெற்றி என்றுதான் தோன்றுகிறது. ஒவ்வொருவரின் வெற்றியும் ஒரு சேதி, இந்த உலகுக்கு, நிகழ்கால, எதிர்கால சமூகத்துக்கு. அதிலும் ஏ ஆர் ரஹ்மானின் வெற்றி, எல்லோருக்கும், முக்கியமாக இளைஞர்களுக்கு, வெற்றிக்கான நமது தேடலில், கனவுகளில், போராட்டங்களில் நமது வழிக்காட்டியாக சில அத்தியாவசிய விஷயங்களை சொல்லும் செய்தி. விரக்தியிலும் நம்பிக்கையின்மையிலும் இருக்கும் நமக்கு பல சமயங்களில் பிறரின் வெற்றி உண்மையான உழைப்புக்கான வெற்றியாகத் தோன்றாமல் போகலாம். 
     ஏ ஆர் ரஹ்மானின் விசயத்தில் அதுவல்ல நிஜம். அதை ஓரளவேணும் நெருக்கத்தில் பார்த்து உணர்ந்து கற்றிருக்கிறேன். என்னுடைய வழியில் அவைகளில் சிலவற்றை வழித்துணையாக ஏற்றுகொண்டிருக்கிறேன் என்பதால் அதை இங்கு பகிர்ந்துக்கொள்ள நினைக்கிறேன்.
     ஏ ஆர் ரஹ்மானின் மிகப் பெரிய சாதனையாகத் தமிழ் திரையிசையில் நான் பார்ப்பது, பாடல்களில் கவித்துவம் இவரால்தான் மீட்டுவரப்பட்டது. வரிகளால் மட்டும் தனித்து எந்தப் பாடலும் நிற்பதே கிடையாது. இசையால் மட்டும் தனித்து எந்தப் பாடலும் நின்றுவிட முடியும். நிகழ்கால நிஜம், இளையராஜா அவர்கள். ஆனால் இசையா வரியா என்று முடிவு செய்யவே முடியாத நிலையில் அந்தப் பாடல்கள் அடையும் உன்னதம், ஏ ஆரின் பாடல்களில் மட்டும்தான் பார்க்க முடியும். அந்த அளவு அவர் தாராளமாகவும், நிபுணத்துவமுடனும், பல்நோக்குப் படைப்பாளியாகவும் செயல்பட்டிருக்கிறார். அதுவரை இத்தகைய பல்நோக்குத் தளத்தில் யாரும் செயல் பட்டதே இல்லை.
மெட்டுக்களில் சில பகுதிகளை வரிகளுக்கேற்ப மாற்றவதும், வரிகள் சிதையா வண்ணம், மெட்டும் மாற்றப்பட முடியாத பட்சத்தில், பாடகர்களை மெனக்கெட வைத்து அந்த வரிகளை வெளிக்கொண்டுவருவதும், அவருடைய இசையை ரசித்தவர்களால் நிச்சயம் நினைவுக்கூற முடியும். அதிலும் அவருடன் பேசிய தருணங்களில் அவருடன் பணியாற்றிய சில பாடலாசிரியர்களின் போலித் தன்மைகளை முற்றிலும் வெறுத்திருக்கிறார். ஆனாலும் திரும்ப திரும்ப அவர்களுடன் பணிபுரிந்திருக்கிறார், பாடகர்களுடனும் கூட. பிற திறமைகளை எந்த மனத்தடையும் இல்லாமல் அங்கீகரித்திருப்பது, ஒரு வெற்றிக்கு தேவையானவற்றை உணர்ந்து அதை எந்த நிபந்தனைகளுமில்லாமல் ஏற்றுக்கொள்வது அவருடைய அடிப்படை இயல்பாய் இருந்திருக்கிறது. அவரிடமிருந்து அவருடைய பட்டறையில் இருந்து வெளியான இசையமைப்பாளர்கள் பலர், அதே சமயம் அவருடன் மீண்டும் வேலை செய்ய அந்த இசையமைப்பாளர்களுக்கு எந்த தயக்கமும் இன்றி வாய்ப்பளித்திருக்கிறார். 

ஏ ஆர் ரஹ்மானை நான் முதன் முதலில் பார்த்தது 2001இல். வார்னரின் சார்பாக இந்தியாவில் நான் சந்தித்த இசையமைப்பாளர்களில் முதல் முதலில் நான் சந்தித்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். ஐந்து வருடங்கள் கழித்து அவர் தொடங்கிய அவருடைய முதல் இசை நிறுவனமான கே எம் மியூஸிகின் (KM MUSIQ) முதல் வெளியீடான வரலாறு (காட்பாதர்) திரையிசையை வெளியிடும் வாய்ப்பு எனது அகி மியூஸிக் நிறுவனத்திற்கு கிடைத்தது. அவரே அழைத்து கொடுத்த வாய்ப்பு. 2001-ஆம் ஆண்டு சந்திப்பிற்குப் பிறகு அவரை நான் நேரில் பார்த்ததே இல்லை. மின்னஞ்சல் தொடர்பு மட்டுமே. எந்த மின்னஞ்சலாக இருந்தாலும் நிச்சயமாக பதில் எதிர்பார்க்கலாம். சில சமயம் ஒரே வரியில் அல்லது வார்த்தையில் இருக்கும். ஆனால் நிச்சயம் பதில் வரும். 


உதாரணத்திற்கு, ‘எனக்கு மகன் பிறந்திருக்கிறான்' என்று, ஆகஸ்ட் 2004 இல் அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். மறுநாள் முபாரக் (வாழ்த்துக்கள்) என்று பதில் வந்தது. இதற்கெல்லாம் அவர் மெனக்கெடமாட்டார், ஒரு வேளை யாராவது அவருடைய வேலையாட்கள் அனுப்பலாம் என்று சந்தேகம் அவ்வப்போது வரும். நவம்பர் 2005இல் அவரை கனடாவில் சந்தித்தப் போது, முதன் முதலில் என்னைப் பார்த்ததும், ‘ஹ்ம்.. வெயிட் போட்டுடீங்க, மகன் எப்படியிருக்கான்’ என்று கேட்டார். நான் கொஞ்சம் அதிர்ச்சியில் பார்த்தபோது அவருக்கு சந்தேகம் வந்து, ‘உங்களுக்கு தானே இடையில் குழந்தை பிறந்துள்ளதாக இ மெயில் அனுப்புனீங்க’ என்றார். அதுவரை அவர்தான் அவருடைய மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்புகிறாரா என்ற சந்தேகம் தீர்ந்தது மட்டுமல்ல அன்று அந்த வாழ்த்து அவரிடம் இருந்து போலி பிம்பங்களுடன் வரவில்லையென்பதும் விளங்கியது. 

அது மட்டுமன்றி, அகி மியூசிக் தொடங்கி நான் வெளியிட்ட இளையராஜாவின் குரு ரமண கீதம், மியூசிக் ஜெர்னி, திருவாசகம் என்று எல்லா குறுந்தட்டுக்களையும் அவருக்கு அனுப்பியிருக்கிறேன். எனது முதல் சந்திப்பின் போது எல்லாவற்றையும் நினைவில் வைத்திருந்து அவைகளின் வரவேற்பையும், விற்பனையும் கேட்டு கேட்டு தெரிந்து கொண்டார். எந்த உள் நோக்கமும் இன்றி, போலியாக பழகத் தெரியாதவர் ஏ ஆர் ரஹ்மான் என்பது எனக்கு விளங்கியது. ஆனால் அதையெல்லாவற்றையும் விட இந்தியில் கொடி நாட்டியப் பிறகும் வெற்றிக்கான வேட்கையும் எல்லையற்ற கனவுகளுடனும் இன்னமும் முதல் தேர்வு மாணவன் போல் ஆர்வமும் பதைபதைப்பும் உள்ள ஒரு உழைப்பாளி. பேச்சியின் இடையே கனடா தொலைக்காட்சியில் பதின்ம வயதில் உள்ளவர்களை அவர்களுக்கு பிடித்த இசையைப் பற்றிக் கேட்டபோது, திடீரென்று என் பக்கம் திரும்பி, ‘இவர்களைதான் (பதின்ம வயதினர்), நமது இசை சென்றடையனும். இவர்கள்தான் இசையின் விற்பனையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருப்பவர்கள், அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லக் கூடியவர்கள்', என்று சொல்லி தீவிர யோசனையில் கொஞ்ச நேரம் மூழ்கிப் போனார். 

நான் அவரை கனடாவில் சந்தித்த போது, ஒரு ஒலிப்பதிவு கூடத்தில் ரங் டீ பசந்தி (Rang De Basanti) மிக்ஸிங் வேலை, இன்னொரு ஒலிப்பதிவு கூடத்தில் மங்கல் பண்டேயின் (Mangal Pandey) இசைப் பதிவு, மற்றொரு ஒலிப் பதிவு கூடத்தில் வாஜி வாஜி சிவாஜி படப் பாடல். இத்தனையும் ஒரே சமயத்தில் அங்கு நடந்ததன் காரணம், லோர்ட் அப் தி ரிங் (Lord Of The Ring) மேடை நிகழ்ச்சியின் இசையமைப்பு வேலை அங்கு நடந்து வந்தது. இவ்வளவையும் நிபுணர்கள் கொண்டு செய்தாலும் அவர் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு கூடமாக மாறி மாறி கவனம் செலுத்தினார். இத்தனைக்கும் நடுவில் காபி வேண்டும் என்றால் அவரே வெளியில் வந்து, காபி இயந்திரத்தில் காபி கலக்கி குடித்தார். இந்தியாவில் இருந்து வந்த அவரது சவுண்ட் இஞ்சினியர் ஆதி, வேலையை தொடர முடியாமல் களைப்பில் உறங்கிவிட்டார். விடியக்காலை நான்கு மணியிருக்கும். அவரை பார்த்து எந்த சலனமும் இல்லாமல் திரும்பவும் ஒலிப்பதிவு கூடம் நுழைந்து வேலையை தொடங்கினார். காலை 6 மணிக்கு அவர் தங்கும் இடத்திற்கு சென்றோம், நட்சத்திர ஹோட்டல் அல்ல, சாதாரண அறை. சாப்பிட்டது ரொம்பவும் சாதாரண இடம். ஹலாலா (Halal) என்று மட்டுமே பார்த்தார்.

சென்னையில் அவரை சந்தித்தபோது, ஏ எம் ஒலிப்பதிவுக் கூடத்தில் வரலாறு இசை வேலைகளில் இருந்தார், அப்போது வாலி அவருக்காக பஞ்சதன் ஒலிப்பதிவுக்கூடத்தில் காத்துக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், தனது அவன்சா காரை தானே எடுத்துக்கொண்டு அவசரமாக வந்து, சில்லென்று ஒரு காதல் படத்தின் பாடலில் தீவிரமானார். இசை வேலையைத் தவிர வேறெதுவும் பெரிதாக எதிர்பார்க்காத எளிமையான மனிதர். எளிமைதான் ஒரு மனிதனை உயர்வுக்கு கொண்டு செல்கிறது என்று எப்பொழுதும் படித்திருக்கிறோம், ஆனால் எது எளிமை என்பதை எனக்கு உணர்த்தியது நவீன யுகத்தின் இளைஞரான அவரை நான் பார்த்த நாட்கள்தான். இன்றைய இளைஞர்களுக்கு எளிமை என்பது இயலாதவனின் அல்லது இல்லாதவனின் வாழ்க்கை முறை என்ற எண்ணங்கள் உண்டு.

அதையெல்லாம்விட ஒரே மாதத்தில் ஐந்து படங்களுக்கு இடைவெளியில்லா உழைப்பு என்னை ஆச்சரியப்பட வைத்தது. இருந்தும் அவர் படங்கள் தாமதமாகிறது என்ற குற்றச்சாட்டுக்கு காரணம் அவருடைய வேலையில் அவர் எதிர்பார்க்கும் Perfection (தமிழில் சொல்லத் தெரியவில்லை - இறுதித் தரம்). நம்முடைய ஆட்டோகிரப் என்பது நமது வேலையில் இருக்கும் தரம்தான், அதுதான் நமது உண்மையான அடையாளம் என்பதை நான் கற்றுக்கொண்டது அங்குதான். வரலாறு படப் பாடலின் இறுதி மாஸ்தரிங் வேலைக்கு மட்டும் அவர் எடுத்துக்கொண்ட நேரம் நாம் பொறுமை இழந்துவிடும் அளவு நீளமானது. போதும் என்ற நிலையில் அந்தப் பாடலின் தரம் இருந்த பொழுதுக்கூட அவர் பொறுமையாக காட்டிய கவனம் எல்லையற்றது. யாரை கேட்டாலும் நமது உயர்வுக்கு உழைப்புதான் அடிப்படைக் காரணம் என்று சொல்வார்கள், நாம் அனுபவிக்காதவரையில் அந்த உண்மையான உழைப்புக்கு அர்த்தம் தெரியப்போவதில்லை. 

இந்தப் perfection பற்றி சொல்லும்போது ஒரு விஷயத்தை கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும். அவர் லண்டனில் CBS Orchestraவுடன் இணைந்து அவருடைய பாடல்களை ஆர்கெஸ்டராவில் பதிவு செய்ததை வெளியிட கேட்டபோது, எந்த தயக்கமும் வெட்கமும் இன்றி அதில் எண்ட் கிரேடிட் மற்றும் சில அரேஞ்மெண்ட் சரியா இல்லை, அகிலன். அதை வெளியீடு செய்தால் தரமிருக்காது என்று நிராகரித்தார். அதாவது அவருடைய வெளியீடு எதையும் ரசிகர்கள் வாங்கும் நிலையில் இருக்கும் போது, தரத்திற்காக அதை நிறுத்தியதோடு அல்லாமல் அதை பத்திரிக்கைகளிலும் பகிரங்கமாக சொன்னார், ‘மேற்கத்திய செவ்வியல் இசையில் நான் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது. அதில் நான் நிறைய தவறுகள் செய்திருக்கிறேன். அதனால் அதை வெளியிடவில்லை’ என்று. இங்கு அவர் தரத்தை பற்றி மட்டும் அக்கறைபடவில்லை, கரையில்லா (இசைப்) புகழை எதிர்பார்த்தது மட்டுமல்ல. எந்த நிலையிலும் அடக்கமும், மேலும் கற்றுக்கொள்ளும் மனப்போக்கும் கொண்டிருந்தார். 

இதையொட்டி வேறொரு சம்பவத்தை நினைவுக்கூர வேண்டும். அவருடைய கஜினி இந்தி இசை வெளியானப் பிறகு, அதன் ஒலிப்பதிவில் குறிப்பாக மாஸ்டிரிங் நிலையில் ஒரு குறைப்பாடு என்னை தொந்தரவு செய்துக்கொண்டேயிருந்தது. என்னால் பாடலின் உள் செல்ல முடியவில்லை. அதை குறை என்று கூறும் தைரியமும், அதை நிரூபிக்கும் ஞானமும் திறனும் எனக்கில்லை என்று தெரியும். ஆனால் ஒரு தேர்ந்த இசை ரசிகனாக (ஆணவமாக சொல்லவில்லை, எனக்கிருக்கும் நம்பிக்கையில் சொல்கிறேன்) இதில் நிச்சயம் குறையிருக்கிறது, அதுவே இந்தப் பாடலை நெருங்க மிகப்பெரிய மனத்தடையையும் (இல்லை செவித்தடையை என்று சொல்லலாமா?) எனக்கு ஏற்படுத்துகிறது என்பதும் எனக்குத் தெரியும். அதிலும் அது மாஸ்டிரிங் நிலையில்தான் நடந்திருக்கிறது என்றும் உணர முடிந்தது. அவரிடம் சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால் இதுநாள் வரை பழகிய காரணத்தால் சொல்ல வேண்டும் என்று ஓர் உந்துதல். அப்படி நான் சொல்லி அது என்னுடைய இசை ரசனையில் உள்ள குறை என்றால், அல்லது அவருடைய ஈகோவை நான் சீண்டிப்பார்ப்பது போல் இருந்தால்...? அது நட்பை முறிக்கலாம். 

பலவாறு யோசனைக்கு பிறகு அதை அவருக்கு தெரியப்படுத்தினேன், மின்னஞ்சல் வாயிலாக. தயங்கியபடியே நான் உணர்ந்த குறைகளை சுட்டிக் காண்பித்தேன். மறுநாளே அவரிடமிருந்து பதில். “வெறுமனே பாடல்கள் நன்றாக இருக்கிறது என்ற புகழ்ச்சிகளைத் தவிர இதுபோன்ற எதிர்வினைகள் தான் எனக்கு வேண்டும். நான் மிகவும் வரவேற்கிறேன் உங்கள் கருத்தை. இப்படியான தவறுகளை எழுத தயங்க வேண்டாம்’, என்று எழுதியதோடு ‘நான், நீங்கள் குறிப்பிட்டிருப்பதை கவனிக்கிறேன்’ என்றும் உற்சாகம் ஊட்டினார். கஜினி படம் வரை வெற்றி அடைந்தவரின் பதில் அல்ல இது. புதிதாக இசைத்துறையில் கால் வைத்திருக்கும் ஒரு பிரபலமில்லாத நபரின் வார்த்தைகள் போல் இருந்தது. அந்த மின்னஞ்சல் என்னால் மறக்க முடியாத தடங்களை விட்டு சென்றது. எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், தவறு இயல்பு என்ற ஆணவமின்மையும், தவறை திருத்திக்கொள்ள முன்வருவதும் சாதாரண விஷயமல்ல. அதிலும் பெரிய விஷயம் என்னைப் போன்று பிரபலமில்லாத, நிபுணத்துவம் அற்ற ஒருவனுக்கு செவி சாய்ப்பது சாதாரண ஒரு குணமல்ல. யாரையும் வயது வரம்பின்றி மதிக்கும் குணம் எல்லோரிடமும் பார்த்துவிட முடியாது. இதே போன்றதொரு அனுபவம் எனக்கு இளையராஜாவிடமும் ஏற்பட்டிருக்கிறது. காலத்தால் அழியாத புகழ் பெறும் எந்த ஒரு மனிதனும் நவீன உலகம் பல சமயங்களில் நமக்கு சொல்லித்தருவது போல் நற்குணங்களுக்கு எதிர்மறையாக இருக்க வாய்ப்பில்லை என்றுதான் நினைக்கிறேன். போலியானவர்கள் யாராலும் இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான் போல் காலத்தால் அழியா புகழை அடைந்திடவே முடியாது. 

இந்த தன்னியல்புகள் மட்டுமல்லாது, நிர்வாகத்திறன் நிரம்பக் கொண்டவர், ஏ ஆர் ரஹ்மான். அவரின் இன்றைய உயரத்திற்கு, அவரது உழைப்பு மட்டுமல்லாது, அவரது நிர்வாகத்திறன் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய ஒரு விஷயம். உழைப்பும் திறமையும் மட்டுமே வெற்றியின் வாசல்களை நெருங்க உதவாது என்பதற்கு அவர் ஒரு சான்று. அவருடைய அலுவகத்திலும், ஒலிப்பதிவு கூடத்திலும் ஒவ்வொரு டிபார்ட்மெண்டும் ஒவ்வொருவர் மேற்பார்வையில் விடப்பட்டிருக்கும். ஒலிப்பதிவு சார்ந்த டிபார்ட்மெண்டுக்கு ஒருவர், இசை கலைஞர்கள் சார்ந்த டிபார்ட்மெண்டுக்கு ஒருவர், பத்திரிக்கை மற்றும் வெளிநபர்கள் தொடர்புக்கு ஒருவர் என்று எல்லாவற்றுக்கும் ஒவ்வொருத்தர் இருப்பார்கள். இசை வெளியீடுகள் பற்றிப் பேச வேண்டும் என்றால் ஒருவர், சட்டம் பேச ஒருவர் என்று அது மிகப்பெரிய நிறுவனம்போல் இருக்கும். அவர்கள் எல்லோருமே அற்புதமான மனிதர்கள். அதிலும் அவரது ஆஸ்தான சவுண்ட் இஞ்சினியர் சிவக்குமார் அற்புதமான நண்பர். அவரது வெளிநாட்டு தொடர்புகளை கவனித்த கணேஷங்கர் இன்னொரு அற்புதமான மனிதர். ஆதி, கார்த்திக், நியோல் இப்படி எல்லோரையும் நான் நினைவு வைத்து குறிப்பிடும் அளவுக்கு அந்த நிர்வாகம் இளைஞர்களால் குஷியாக ஒரு குடும்பம் போல் மேற்பார்வை செய்யப்படுவதுதான். இந்திய சினிமாவில் இசையை ஒரு தனி நிறுவனமாக அவர் சாதித்துக் காட்டியிருப்பது, யாரும் இதுவரை இந்தியாவில் கற்பனை செய்ய முடியாதது. 

சொந்த இணையத் தளம் வைத்திருக்கிறார், facebook இல் அவரே பதில் எழுதுகிறார், நன்றி சொல்கிறார், பேசுகிறார். தன்னை இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தில் எப்படி ப்ரோமோட் செய்துக்கொள்வது என்று தெரிந்த ஒரு தேர்ந்த நிர்வாகி என்று சொல்லலாம். அதுமட்டுமன்றி, இதன் வாயிலாக இடையில்லா தொடர்பை தன் ரசிகர்களுடன் உருவாக்கியிருக்கிறார். ஒரு சாதாரண மனிதன் ஒரு சக நண்பனுடன் உரையாடிக்கொள்வதுப்போல அதை முன்னெடுத்திருக்கிறார். பிரபலத்தில் இருந்து கொண்டு, தன் ரசிகர்களை நெருக்கத்தில் பார்க்கும் போது, நமது குறைகள், நிறைகள் நம்மால் உணரமுடிவது மட்டுமல்லாது, நமக்கான ஒரு தனித்துவமிக்க சந்தையை இன்னும் விரிவுப்படுத்தி அதை உறுதியுடன் பேணுவது உலகத் தரம். இன்றைய தொழில் நுட்ப யுகத்தில் அது மிக எளிதில் சாத்தியமாகக்கூடியது என்றாலும் அதை பலரும் பொருட்படுத்துவது இல்லை. 

எனது ரசிகர்கள் தயவு செய்து கள்ளப் பதிப்புகளை வாங்காதீர்கள் என்று பொது மேடையில் (விருது நிகழ்ச்சியில்) இளையராஜாவுக்கு பிறகு பகீரங்கமாக பேசிய ஒரே இசையமைப்பாளர் இவர் என்று நிச்சயமாக சொல்லலாம் (இளையராஜா அதற்கு முன்னமே ராஜாங்கம் என்ற அவருடைய இணையத்தளத்தின் வாயிலாக அதை செய்திருக்கிறார்). வேறு இசையமைப்பாளர்கள் எவரும் இப்படி பகிரங்க அறிவிப்பை கள்ளப்பதிப்புக்கு எதிராகக் கொடுத்ததில்லை. கள்ளப்பதிப்புக்கு எதிராக ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு ஒரு கலை நிகழ்ச்சியை இலவசமாக மலேசியாவில் நடத்த நான் திட்டமிட்ட போது, இலவசமாக கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்தார், ஏ ஆர் ரஹ்மான். (ஆனால் அதை என்னால் செய்ய முடியாமல் போனது வேறு விஷயம்). தன்னை மட்டும் பிரதானப் படுத்தாமல் தான் சார்ந்திருக்கும் துறைக்கும் அந்தத் துறையில் உள்ளவர்களுக்காகவும் எந்தப் எதிர்பார்ப்பும் இல்லாமல் நல்ல விஷயத்திற்கு உதவ முன்வருவது அவருக்கு பழகிய ஒன்று. இது ஒருவகையில் வியாபார எதிக் (ethic). தன் தொழிலின் மீது, தான் விரும்பும் ஒரு துறையின் மீதுள்ள அன்பின், மக்களின் மீது அல்லது பயனீட்டாளர்கள் மீதான அக்கறையின் காரணமாக, எந்த நிலையிலும் தன்னையும் தான் சார்ந்துள்ள தொழிலையும் அல்லது துறையும் தவறான வழிக்குக் கொண்டு சென்றுவிடக்கூடாது என்று நினைப்பவர்களால் மட்டுமே பேணப்படும் துறை சார்ந்த ஒழுக்க நெறி. அது எல்லா துறையிலும் உண்டு. இசைத்துறைக்கும் உண்டு என்று அவரிடம் நான் தெரிந்துக்கொண்டேன்.

எவ்வளவு உழைப்பும், நிர்வாகத்திறனும் இருந்தாலும், நம்மை பிரகடனப் படுத்துவது மிகவும் அத்தியாவசியமானது என்பது நான் ரொம்பவும் தாமதமாக உணர்ந்தது. அது நம்மை பிரபலப்படுத்தும் முயற்சியோ அல்லது தற்பெருமை தேடிக்கொள்வதோ இல்லை. மாறாக நம்மை துடிப்புடன் செயல்படவும் அடுத்த அடுத்த கட்டத்திற்கு நம்மை தயார் செய்து கொள்ளவும் உதவும் ஒரு மாபெரும் கருவி. அது பல சமயங்களில் நம்மை பற்றி மட்டுமல்லாது நமது நம்பிக்கையையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு செய்தி (MESSAGE). இந்தப் பிரகடனப் படுத்துவது என்பதே பல பக்கங்கள் எழுதக்கூடிய ஒரு விஷயம், அதாவது இசைத்துறையில். அதை வேறொரு சமயம் நான் எழுதுகிறேன்.

இதையெல்லாம் விடவும் என்னுடைய இந்த பயணத்தில் எனக்கு முக்கியமாக இருக்கும் விஷயங்களில் மூன்று அவருடைய அனுபவத்தில் இருந்து அவர் என்னிடம் இறக்கி வைத்தது. அது யாருகெல்லாம் போய் சேர்ந்ததோ தெரியாது, ஆனால் எனக்கு பல மந்திரங்களில் இவைகளும் முக்கியமானதாகிப் போனது. 

முதலாவது...

அவரிடமிருந்து வரலாறு (காட்பாதர்) இசை ஆல்பத்தை வாங்கிய போது, நான் இதில் வெற்றி பெற என்னை வாழ்த்தி அனுப்புங்கள் என்றேன். அதோடு, “நான் இசைத்துறைக்கு வந்த போது, இன்றைக்கு இசை துறையென்பது மடிந்துபோன ஒன்று, நான் முட்டாள்தனமாக இதில் இறங்கியிருக்கிறேன் என்று பார்க்கிறவர்கள் பழகியவர்கள் எல்லோரும் சொல்கிறார்கள், எனக்கே சில சமயம் சந்தேகம் வரும்படி செய்துவிடுகிறார்கள்’ என்றேன். 

கொஞ்சம் சீரியஸானவர், ‘நான் விளம்பரங்களுக்கு இசையமைத்துகொண்டிருந்தபோது என்னையும் இப்படிதான் சொன்னார்கள். இப்படியே காணாமல் போய்விடுவேன்' என்று சிரித்திருக்கிறார்கள். நீயெல்லாம் எங்கே முன்னுக்கு வரமுடியும் என்று பேசியிருக்கிறார்கள். இன்றைக்கு நான் எங்கிருக்கிறேன்? உண்மை, உழைப்பு, நேர்மை. இதுதான், அகிலன். இந்த மூன்றும் இருந்தால் யாருடைய வாழ்த்தும் தேவையில்லை. நாம் முன்னுக்கு வந்திடலாம். எந்த சூழ்நிலையிலும் இந்த மூன்றை மட்டும் கைவிட்டுடாதீங்க. இந்த உண்மை, உழைப்பு, நேர்மையை பல சமயங்களில் படித்தும், கேட்டும், சினிமாவில் பார்த்தும் இருப்பதுதான். ஆனால் தன்னுடைய வாழ்வின் கசப்பான அனுபவங்களின் ஊடாக இன்று அவர் அடைந்திருக்கும் வெற்றிக்கு கொஞ்சமும் யோசிக்காமல் பட்டென்று அவரால் இதை மட்டும்தான் சொல்ல முடிகிறதென்றால், எவ்வளவு ஆழமாகவும் உறுதியாகவும் இதை அவர் நம்ப வேண்டும் என்று அன்று நான் உணர்ந்தேன். ஆழமான, உறுதியான நம்பிக்கையின் வாயிலாக வரும் எந்த வார்த்தையும் உண்மையானதாகவும் சக்தியுள்ளதாகவும் இருக்கும்.

இரண்டாவது...

ஆஸ்காருக்கு முன்பு, 20/1/2009.

‘நான் வாழ்க்கையை போஸிட்டீவாக எடுத்துக்கொள்கிறேன். எவ்வளவு பெரிய மன உளைச்சலுக்கு நாம் ஆளானாலும் அதன் பிறகு சர்வ நிச்சயமாய் ஒரு பெரிய நன்மை நடந்தே தீரும் என்று நம்புகிறேன்.’ மிகப்பெரிய மன உளைச்சலில் நான் இருந்த தருணம் மலேசியாவின் ஸ்டார் ஆங்கில பத்திரிக்கையில் வெளியானது இந்த பேட்டி. அவருடைய இசை ஆஸ்காருக்காக பரிந்துரைக்கப் பட்டதற்காக அவர் சொன்னது. 

மூன்றாவது...

ஆஸ்காருக்கு பின்பு 23/2/2009 

'என் வாழ்க்கை முழுவதும் அன்பையும் வெறுப்பையும் நான் எதிர்கொண்டிருக்கிறேன். நான் அன்பை தேர்ந்தெடுத்தேன்... இங்கு இருக்கிறேன்'. ஆஸ்கார் மேடையில் சொன்னது.

இது திட்டமிட்ட வார்த்தைகள் அல்ல, ஒத்திகைப் பார்த்து வந்ததல்ல என்பது, அவருடன் பழகியவர்களால் மட்டுமே உணர முடியும். இவைகள் அனைத்துமே உண்மையான வெற்றியின், புகழின் திறவுகோல்கள். நம் வாழ்க்கைப் பயணத்தின் வழிகாட்டிகள்.

நன்றி : வல்லினம் http://www.vallinam.com.my/issue15/column4.html

***********************************************************************
தொடர்புடைய பதிவுகள்



************************************************************************************
இக்கட்டுரையை எழுதிய அகிலன் அவர்களை இதுவரை நான் அறிந்ததில்லை.இசைத் தொடர்புடையவர் என்பது மட்டும் கட்டுரையில் இருந்து அறிய முடிந்தது.தேடிப் பார்த்ததில் அவரது வலைப் பக்கம் கிடைத்தது. இளையராஜா பற்றியும் பதிவுகள் எழுதி இருக்கிறார் . 

இணைப்பு:http://meedpu.blogspot.in/




செவ்வாய், 7 மே, 2013

நெஞ்சே எழு!ஏ.ஆர்.ரகுமானின் புது காம்பினேஷன் எப்படி?

  இந்தியத் திரையுலகில் 20 ஆண்டுகளாக யாருமே நெருங்க முடியாத இடத்தில் இருக்கும் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் வெளியிடும்போது திரை இசை ரசிகர்கள் மத்தியில்  ஒரு பரபரப்பு எழுவதுண்டு.   தனுஷ் நடிக்க பரத்பாலா இயக்கிய  மரியான் படத்தின் "நெஞ்சே எழு" பாடல் யூ டியூபில் (YOUTUBE-தமிழ்ல என்ன?) வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. 

  நான் ஒன்றும் பெரிய திரை இசை ரசிகன்  இல்லை என்றாலும் ரசிகர்களின் ஆர்வம் என்னையும் தொற்றிக் கொள்ள யூ டியூபுக்குள் நுழைந்தேன்.

  பாடலை முதல் முறை கேட்கும்போது ஒரு  புதிய கூட்டணியான  ஏ.ஆர்.ரகுமான்-குட்டி ரேவதி கூட்டணி என்னைப் பொருத்தவரை ஏமாற்றத்தையே தந்தது! ரகுமானிடம் சரக்கு குறைந்து வருகிறதோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தத் தவறவில்லை.  

   இப்பாடலின் முதல் வரியான "நெஞ்சே எழு!"( உண்மையில் முதல் வரி அல்ல பல முறை வரும் வரியே! மற்ற வரிகளின் மொத்த எண்ணிக்கை விட இதன் எண்ணிக்கை அதிகம்)  என்றதும் ஏதோ தன்னம்பிக்கைப் பாடல் என்று நினைத்து விட்டேன். இசை அமைப்பு பாடல் வரிகள் எல்லாம் அதை சரி என்று சொல்வது போல்தான் இருந்தது. சில சினிமாக்களுக்கும் அதன் தலைப்புகளுக்கும் பொருத்தம் இருக்காது. தலைப்பின் வரியை எங்கேயாவது ஒரு இடத்தில் திணிப்பார்கள் அது போல இந்தப் பாடலில் காதல் என்ற வார்த்தைதான் இதை காதல் பாடல் என்று நம்பவைக்கிறது. பரத்பாலாவின் படம் என்பதாலோ என்னவோ வந்தே மாதரம் பாடலின் இசையை நினைவு படுத்துகிறது. இதே பாடலை வேறு யாரேனும் இசை அமைத்திருந்தால் தாராளமாகப் பாராட்டலாம். ஆனால் ரகுமானிடம் எதிர் பார்ப்பது அதிகமாக இருப்பதால் பாடல் சாதாரணமாகவே படுகிறது. இப்பாடலில் அவரது பல பாடல்களின் சாயல் காணப்படுகிறது (மத்தவங்க சாயல் இருந்தாதானே தப்பு ) பெரும்பாலும் நல்ல மெட்டுக்குப் பாடல் எழுதப்பட்டால் அப்பாடல் சிறப்பாக அமையும். எழுதப் பட்டபாடலுக்கு மெட்டமைப்பது என்பது மிகக் கடினமானது. அப்படி மெட்டமைத்தாலும் வேறு ஒன்றின் சாயல் தன்னையும் அறியாமல் அமைந்து விடும். அதுவும் புதுக் கவிதைகளை மெட்டுக்குள் கொண்டு வருவது என்பது எவ்வளவு பெரிய இசை அமைப்பாளராக இருந்தாலும் கடினமே. இந்தப் பாடலும் எழுதிய பின்னர் இசை அமைத்துள்ளதாகவே தெரிகிறது. (ஒரு வேளை மெட்டுக்கு எழுதப்பட்டு இருந்தால் ரேவதிக்கு மெட்டுக்கு பாட்டெழுத இன்னும் பயிற்சி தேவையோ?) பல இடங்களில் ரகுமான் பாடல் வரிகளை மெட்டுக்குள் கொண்டுவர சிரமப்பட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. பாடலுக்கான பின்னிசையைவைத்து சமாளித்து விட்டார். தன்னைத் தவிர வேறு யாரும் இந்தப் பாடலை சரியாக பாடுவார்களா என்ற சந்தேகத்தில் தானே பாடி விட்டாரோ? பாடலை ரகுமானின் தீவிர ரசிகர்கள் வெற்றிபெற வைத்து விடுவார்கள் என்றாலும் பாமரர்களை எட்டுமா? படம் வரும் வரை காத்திருப்போம். 

   நீயா நானா போன்ற ஷோக்களில் குட்டி ரேவதியைப் பாத்திருக்கிறேன். நவீன பெண்ணியக் எழுத்தாளரும் கவிஞரான இவர் திரை இசைக்கு இப்போதைக்கு. பொருத்தமற்றவாராகவே தோன்றுகிறார். இந்தக் கவிதை தன்னம்பிக்கையா காதலா என்ற குழப்பத்தில் எழுதியது போல் காட்சி அளிக்கிறது. 

 காணொளியில்  உள்ள காட்சிகள் கவரும் விதத்தில் இருந்தாலும் திரைப்பட பாடல் வரிகளில் காணப்படும் காதல் ஈர்ப்பு குறைவாகவே காணப்படுகிறது, ஒருவேளை கதை தெரிந்தால்தான் அதை உணர முடியுமோ என்னவோ? பார்க்கலாம் . 

"ஆயிரம் சூரியன் சுட்டாலும் கருணையின் வர்ணம் கரைந்தாலும்" என்று தொடங்கும் இந்தப் பாடலில்  நவீனக் கவிஞர் குட்டி ரேவதி வர்ணம் அதர்மம் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.  வண்ணம் என்று எழுதி இருக்கலாம். பாடல் வரிகள் மிக சாதாரணமாகவே உள்ளது. சில வரிகள் தொடர்பின்றி காணப்படுகின்றன. (உதாரணம்: குழந்தை சிரிக்க மறந்தாலும்) முதல் வாய்ப்பை இன்னமும் சரியாகப் பயன்படுத்தி இருக்கலாம்.

  இந்தப் பாடலுக்கு கவிஞரை நிச்சயம் ரகுமான் தேர்வு செய்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். பரத்பாலாவின் சாய்சாகத்தான் இருக்கும். ஒரு வேளை அவரது கவிதைகளால் ஈர்க்கப் பட்டிருக்கலாம். ஆணாதிக்கத்தின் மீதான கோபத்தை வெளிபடுத்தும் இவரது கவிதைகளின் கருத்துகளை வெளிப்படுத்த  ஆணாதிக்க உச்சத்தில் இருக்கும் திரைப்படத்துறை தொடர்ந்து வாய்ப்பளிக்குமா? "திரைப்படச் சுருளை தீக்குச்சிக்கு தின்னக் கொடுப்போம்" என்று சொல்லி விட்டு பின்னர் சமரசம் செய்து கொண்ட வைரமுத்துவைப் போல ஆவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம். 

பாடலின்  காணொளியும் பாடல் வரிகளும்


இதோ  பாடல் வரிகள்

ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வர்ணம் கரைந்தாலும்
வான்வரை அதர்மம் ஆண்டாலும்
மனிதன் அன்பை மறந்தாலும்
வலியால் உள் உயிர் தேய்ந்தாலும்
உன் காதல் அழியாதே....

நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை...

இருவர் வானம் வேறென்றாலும்
உன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும்
பருவங்கள் உருவம் மாறினாலும்
குழந்தை சிரிக்க மறந்தாலும்
இயற்கையில் விதித் தடம் புரண்டாலும்
உன் காதல் அழியாதே...

நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை...

அஞ்சாதே துஞ்சாதே
இனி என்றும் இல்லை வேதனை
புதிதாய் பிறப்பாய் வழியெங்கும்
உன்முன் பூமழை
எந்நாளும் உன் காதல்,
இது வாழும் சத்தியமே
தொலையாதே
எந்த இருளிலும் மறையாதே...

நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை...

ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வர்ணம் கரைந்தாலும்
வலியால் உள் உயிர் தேய்ந்தாலும்
உன் காதல் அழியாதே....
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை...

*************************************************************************************************************


கொசுறு:1
குட்டி ரேவதி வலைப்பூ ஒன்றும் வைத்துள்ளார். இவர் மூன்று கவிதை தொகுப்புகள் எழுதி இருக்கிறார். அவற்றில் ஒன்றின் தலைப்பு ஏடா கூடமாக உள்ளது. இதனால் தான் புறக்கணிக்கப் படுவதாக குற்றம் சாட்டுகிறார்.
கொசுறு 2
யுவன்சங்கர்ராஜா இப்படத்தில் ரகுமானின் இசையில் பாடி இருக்கிறாராம். 
கொசுறு3 
குட்டி ரேவதியின் வலைப்பதிவு முகவரி http://kuttyrevathy.blogspot.in/


**********************************************************************