என்னை கவனிப்பவர்கள்

புதன், 27 நவம்பர், 2013

கணையாழி படிக்க முடியுமா?


   மின்சார ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடைக்கு முன் நின்று தொங்க விடப்பட்டிருக்கும் தலைப்பு செய்திகளை (வெட்கத்துடன்)ஒன்று விடாமல் படிக்கும் சராசரித் தமிழர்களில் நானும் ஒருவன். ஒன்றிரண்டு வார இதழ்கள் வாங்கினாலும்  புத்தகக் கடைகளில் முன் நிற்கும்போது எனக்கு  எப்போதாவது அந்த ஆசை எழுவதுண்டு. பரபரப்பான தலைப்புகள் புத்தகக் கடையை சுற்றி தொங்கிக் கொண்டிருக்கும்போது அந்த ஆசை மறைந்துபோகும். 

   வேறு ஒன்றுமில்லை.கணையாழி,உயிர்மை போன்ற இதழ்களை ஒருமுறையேனும் வாங்கிப் படிக்க வேண்டும் என்பதே. தீவிர இலக்கியவாதிகள் புரியாதபடி எழுதுபவர்கள் விரும்பும் பத்திரிக்கை அல்லவா அது. நமக்கு பிடிக்குமா? நம் ரசனைக்கு ஒத்துவருமா? கொடுத்த காசுக்கு பலன் இருக்குமா? புத்தகம் வாங்கினால் வீட்டில் உள்ளவர்களும் படிக்க முடியுமா? நமக்குப் பிடித்திருந்தாலும் நம் ஒருவருக்காக வாங்கிப் படிக்கத்தான் வேண்டுமா? என்ற நடுத்தர மனோபாவத்துடன் யோசிப்பதில் பல புத்தகங்கள் வாங்க மனம் வருவதில்லை.

  ஆனால் இம்முறை கணையாழி புத்தகம் வாங்கி விட்டேன்.எப்போதோ சுஜாதாவின் கணையாழியில் கடைசி பக்கங்கள் எழுதி வந்தார் என்பதை கேள்விப் பட்டிருக்கிறேன்.. ஆனால் அவற்றை படித்ததில்லை.
     இப்போதும் "கடைசி பக்கங்கள்" பகுதி இருக்கிறதா என்று முதலில் புரட்டினேன. கடைசி பக்கங்களை இப்போது இந்திரா பார்த்தசாரதி எழுதி வருகிறார். இந்திரா பாரத்தசாரதியையும்  இந்திரா சௌந்தர ராஜனையும் குழப்பிக் கொள்வது வழக்கம். மேட்டிமை எழுத்தும் பாமர எழுத்தும் என்று ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். சுவாரசியமாகவே எழுதப் பட்டிருந்தது.
   நவம்பர்  மாத இதழில் மொத்தம் 11 கவிதைகள் வெளியிடப் பட்டிருந்தன. ஒரு சிலவற்றை தவிர மற்றவை எளிமையாகவே இருந்தன. சில கவிதைகள்ஏற்கனவே படித்தது போல் இருந்தன. அவை  ஹரணி பக்கங்கள் என்ற வலைப்பூவில் பேராசிரியர் திரு ஹரணி அவர்கள் எழுதியவை  என்பதை அறிந்து கொண்டேன். கரந்தை ஜெயக்குமார் அவர்களின் மூலமாக ஹரணி அவர்களை அறிவேன் அவ்வப்போது அவரது வலைப் பக்கம் செல்வது உண்டு . "இறுதி நிலை நோயாளி" பறவைகள் குறைந்து வருவதைப் பற்றி பேசியது.

   செம்மீன் புகழ் தகழி சிவசங்கரன்  பிள்ளை அவர்களின் சுய சரிதையில் இருந்து எடுத்து மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரை தகழியின் இளமைக் காலத்தை குறிப்பிட்டது. ஹோட்டலுக்கு பால் கறந்து கொடுத்து காசு வங்கிக் கொண்டு வருவாராம் தகழி. அந்தக் காசில் கொஞ்சம் எடுத்து வைத்துக்கொள்வாராம். அதை கதை எழுதி அனுப்பவும் பேப்பர் வாங்கவும் பயன்படுத்திக் கொள்வாராம். 

         குப்பன்  சுப்பன் பற்றி சொல்லும் கதைகளுக்கு அவர்களுடைய வாழ்க்கைக்கே உரிய கதைப்பாணியை பின்பற்றவதுதான் நல்லது. அயல்நாட்டுப் பாணி அவசியம் இல்லை என்று தகழி தெரிவிப்பதாக சொல்கிறது கட்டுரை.
ஆ பழனி என்பவர் எழுதிய மரண தண்டனை பற்றிய கட்டுரை புதிய தகவல்களை தருகிறது.பிற்கால சோழர்கள் மரண தண்டனையை புறக்கணித்ததை கல்வெட்டுகள் காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அக்காலத்தில் இயற்றப் பட்ட சுக்கிர நீதி என்ற நூல் கொலை தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறதாம்.திருக்குறளும் மரண தண்டனையை ஆதரிக்க வில்லை என்று ஒருவிளக்கத்தையும் தருகிறார் புலவர்.
இன்னொரு கட்டுரை பகவத் கீதை வெண்பா என்றஅரிய நூலைப்பற்றி விவரிக்கிறது. இதைத் தவிர  தமிழில் பகவத் கீதை செய்யுள் வடிவில் வேறு எதுவும் காணக்கிடைக்கவில்ல என்கிறார் கட்டுரை ஆசிரியர் நரசையா. இவ்வெண்பா நூலை  எழுதிய முத்து ஐயர் என்பவராம்.  மசூலிப் பட்டினத்த்தில் உள்ள ஹிந்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என அறிய முடிகிறது. 

   இடம் பெற்ற நான்கு சிறுகதைகளில் ஒன்றைத் தவிர மற்றவற்றில் பயமுறுத்தும் இலக்கியத் தன்மை இல்லாததால் எளிதில் படிக்கவும் புரிந்து கொள்ளவும் முடிந்தது. "வீட்டில சும்மாதான் இருக்காளா" என்ற சிறுகதை  மிடில் கிளாஸ் மன நிலையை அப்படியே பிரதிபலித்தது. 
மருந்து என்ற சிறுகதை தகழி சொன்னது போல கிராமத்து மனிதர்களை அப்படியே அவர்கள் போக்கிலேயே சொல்வதாக  அமைந்திருந்தது. எனக்கு மிகவும் பிடித்தது.

   இரண்டு நூல் அறிமுகங்கள் இந்த இதழில் செய்யபட்டிருந்தது. வெங்கடேஷ் என்பவர் எழுதிய "இடைவேளை" என்ற புத்தகம் கணினித் துறையில் ஏற்பட்ட திடீர் தொய்வால் வேலை இழந்த ஒருவனைப் பற்றியது. வெங்கட் சாமிநாதன் என்பவரின்  மதிப்புரை நூலை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது உண்மை.

   தற்போது பத்திரிகைகளில் தொடர்கதைகள் அவ்வளவாக இடம் பெறுவதில்லை. கணையாழியிலும் தொடர் ஏதும் இல்லை. எவ்வளவு சுவாரசியமாக இருந்தாலும் தொடர்கதைகளை வாசகர்கள் விரும்புவதில்லை. அவற்றை படிக்கும் அளவுக்கு பொறுமை இருப்பதில்லை என்பதை பத்திரிக்கைகள் உணர்ந்தே இருக்கின்றன. 

     கணையாழியின் எல்லாப் பகுதிகளும் என்னைப் போன்ற சாதாரண வாசகர்கள் படிக்கும் வகையில்தான் அமைந்திருக்கிறது.  மாறுதலுக்காக அவ்வப்போது வாங்கிப் படிக்கலாம் என்று உத்தேசித்திருக்கிறேன். 

******************************************************************************************* 


வியாழன், 21 நவம்பர், 2013

வைரமுத்துவின் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் -ஒரிஜினல் இதுதான்

     அமர்க்களம் என்ற திரைப்படத்தில் ரவுடியாக நடிக்கும் அஜீத் உணர்ச்சி கொந்தளிப்புடன் பாடும் "சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்" என்ற பாடலை கேட்டிருப்பீர்கள்.  பரத்வாஜின் இசையும் வைரமுத்துவின் வார்த்தைகளும்  எஸ்.பி.பி யின் குரலும் நம்மை சில நிமிடங்களுக்கு கட்டிப்போடும். அந்தப் பாடல் உண்மையில் திரைப்படத்திற்காக எழுதப் பட்ட பாடல் அல்ல. வைரமுத்துவின் பெய்யெனப் பெய்யும் மழை என்ற கவிதை தொகுப்பில்" கேள் மனமே கேள்" தலைப்பில்  வெளியான கவிதையே மெட்டுக்கேற்ற சில மாற்றங்களுடன் பாடலாய் வெளிவந்தது. அதன் ஒரிஜினலை படித்திருக்கிறீர்களா ? இக்கவிதை தொகுப்பில் அருமையான கவிதைகள் பல உள்ளன.
    பூதம் ஒன்று நேரில் வந்து  என்னென்ன வரம் வேண்டும் என்று கேட்டால் இப்படிக் கேட்பேன் என்று சொல்கிறார் வைரமுத்து. இதோ அந்த கவிதை வரிகள் .எண்சீர் விருத்தத்தில் அமைந்துள்ள கவிதை அது.மரபுக் கைவிதை எழுதும் திறமை உள்ளவர்கள் திரைப்படப் பாடல் எளிதில் எழுதமுடியும் என்பதற்கு கவிப்பேரரசு ஒரு உதாரணம். மரபுக் கவிதையும் கிட்டத்தட்ட மெட்டுக்கு பாட்டு எழுதுவது போல்தானே!

              சத்தங்கள் இல்லாத தனிமை கேட்பேன்
                 சரஞ்சரமாய் வந்துவிழும் வார்த்தை கேட்பேன்
              ரத்தத்தில் எப்போதும் வேகம் கேட்பேன்
                 ரகசியங்கள் இல்லாத வாழ்க்கை கேட்பேன்
              சுத்தத்தைக் கொண்டாடும் சூழல் கேட்பேன்
                  சுடர்விட்டுப் பொலிகின்ற ஞானம் கேட்பேன்
              யுத்தங்கள் இல்லாத உலகம் கேட்பேன்
                   உலகெங்கும் சம்பங்கு மழையைக் கேட்பேன்


              கண்ணிரண்டில் முதுமையிலும் பார்வை கேட்பேன்
                  கடைசிவரை கேட்கின்ற செவிகள் கேட்பேன்
              பின்னிரவில் விழிக்காத தூக்கம் கேட்பேன்
                  பிழையெல்லாம் மன்னிக்கும் பெருமை கேட்பேன்
              வெண்ணிலவில் நனைகின்ற சாலை கேட்பேன்
                  விண்மீனை மறைக்காத வானம் கேட்பேன்
              மென்காற்று வீசிவரும் இல்லம் கேட்பேன்
                   மின்சாரம் போகாத இரவு கேட்பேன்


              தன்னலங்கள் தீர்ந்துவிடும் இதயம் கேட்பேன்
                   தங்கத்தைச் செங்கல்லாய் காணக் கேட்பேன்
              விண்வெளியில் உள்ளதெல்லாம் அறியக் கேட்பேன்
                  விஞ்ஞானம் பொதுவுடைமை ஆகக் கேட்பேன்
              மண்ணுலகம் கண்ணீரை ஒழிக்கக் கேட்பேன்
                   மனிதஇனம் செவ்வாயில் வசிக்கக் கேட்பேன்
              பொன்னுலகம் பூமியிலே தோன்றக் கேட்பேன்
                   போர்க்களத்தில் பூஞ்செடிகள் பூக்கக் கேட்பேன்


              கோடையிலும் வற்றாத குளங்கள் கேட்பேன்
                   குளத்தோடு கமலப்பூக் கூட்டம் கேட்பேன்
              மேடையிலே தோற்காத வீரம் கேட்பேன்
                   மேதைகளை சந்திக்கும் மேன்மை கேட்பேன்
              வாடையிலும் நடுங்காத தேகம் கேட்பேன்
                   வாவென்றால் ஓடிவரும் கவிதை கேட்பேன்
              பாடையிலே போகையில்என் பாடல் கேட்டால்
                   பட்டென்று விழிக்கின்ற ஆற்றல் கேட்பேன்


              அதிராத குரல்கொண்ட நண்பர் கேட்பேன்
                   அளவோடு பேசுகின்ற பெண்கள் கேட்பேன்
              உதிராத மலர்கொண்ட சோலை கேட்பேன்
                   உயிர்சென்று தடவுகின்ற தென்றல் கேட்பேன்
              முதிராத சிறுமிகளின் முத்தம் கேட்பேன்
                    மோகனத்து வீணைகளின் சத்தம் கேட்பேன்
              பதினாறு வயதுள்ள உள்ளம் கேட்பேன்
                    பறவையோடு பேசுமொரு பாஷை கேட்பேன்


               முப்பதுநாள் காய்கின்ற நிலவைக் கேட்பேன்
                   முற்றத்தில் வந்தாடும் முகிலைக் கேட்பேன்
               எப்போதும் காதலிக்கும் இதயம் கேட்பேன்
                    இருக்கும்வரை வழங்கவரும் செல்வம் கேட்பேன்
               தப்பேதும் நேராத தமிழைக் கேட்பேன்
                    தமிழுக்கே ஆடுகின்ற தலைகள் கேட்பேன்
               இப்போது போலிருக்கும் இளமை கேட்பேன்
                    இருந்தாலும் அறிவுக்கு நரைகள் கேட்பேன்


               வானளந்த தமிழ்த்தாயின் பாலைக் கேட்பேன்
                   வைகைநதி புலவர்களின் மூளை கேட்பேன்
               தேனளந்த தமிழ்ச்சங்க ஓலை கேட்பேன்
                    தென்னாழி தின்றதமிழ்த் தாளைக் கேட்பேன்
               மானமகன் குட்டுவனின் வில்லைக் கேட்பேன்
                   மாமன்னன் பாண்டியனின் வேலைக் கேட்பேன்
               ஞானமகன் வள்ளுவனின் கோலைக் கேட்பேன்
                    ராஜராஜன் வைத்திருந்த வாளைக் கேட்பேன்



 


***********

ஞாயிறு, 17 நவம்பர், 2013

சச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும்

     சச்சினின் 200 வது டெஸ்ட் போட்டி,சச்சின் தன் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒய்வு பெறப்  போகிறார். . மும்பை வான்கடே ஸ்டேடியம் அதிர்ந்து கொண்டிருந்தது. போட்டி தொடங்கிய நேரத்தில் இருந்து ரசிகர்களின் உதடுகள் சச்சின் சச்சின்என்று ஓயாமல் உச்சரித்துக் கொண்டிருந்தது. சச்சின் கோஷம் மைதான வான் வெளியில் நிறைந்திருந்தது. கிரிக்கட் கடவுள் சச்சின் அவதார நோக்கத்தை முடித்துக்கொண்டு கிளம்புவதை பார்க்க பரவசப் பட்டுக் கொண்டிருந்தனர் கிரிக்கெட் பக்தர்கள். அவரை வழியனுப்ப வந்த வி.ஐ.பி.களின் கூட்டம் ரசிகர்களின் கூட்டத்திற்கு இணையாகத் தான் இருந்தது. ஐந்து நாள் நடைபெற வேண்டிய ஆட்டம் மூன்றாவது நாளின் பாதியிலேயே  முடிந்துவிட்டதே என்று ஏங்கியவர்கள் அதிகம்.. சச்சின் சதம் அடிக்காமல் போனாலும் சதத்தை நெருங்கியது ஆறுதலாகவே கொண்டனர். விதம் விதமான பதாகைகள் சச்சின் மீதான அபிமானத்தை பறை சாற்றின. பல நாடுகளை சேர்ந்த முன்னாள் இந்நாள் விளையாட்டு வீரர்கள் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து சச்சினை புகழ் மழையில் நனைத்தனர். உலகின் வேறு எந்த விளையாட்டு வீரருக்கும் இப்படி ஒரு பிரிவுபசார விழா நடந்திருக்காது. இனி நடக்கவும் வாய்ப்பில்லை. உலகெங்கும் இருக்கும் புகழ் பெற்ற வீரர்கள் கூட  நாம் இந்தியாவில் பிறந்திருக்கக் கூடாதா ஏன்ற ஏக்கத்தை ஒரு சில நிமிடங்களுக்காவது  ஏற்படுத்தி இருக்கும் இந்த பிரிவுபசாரம்.இவ்வளவு பேரின் அன்பும் ஆதரவும் இவருக்கு மட்டும் எப்படிக் கிடைத்தது. பலரும் பல விதமாக பட்டியலிட்டுக் காட்டிவிட்டனர். அவரது பெருமைகளை சாதனைகளை. அமைதி அர்ப்பணிப்பு உணர்வு,அளவான(குறைந்த) பேச்சு, திறமை,உழைப்பு, மீண்டெழும் வல்லமை என அவர் வெற்றிக்காரணிகளின் பட்டியலின் நீளம் கொஞ்சம் அதிகம்தான். 

     இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றள்ளது என்பதைக் கூட யாரும் பொருட் படுத்தவில்லை.அனைவரின் கண்களும் அவரது அசைவுகளையே கவனித்துக் கொண்டிருந்தன. பரிசளிப்புவிழாவின் இறுதியில் உணர்ச்சிகரமான உரை நிகழ்த்தினார் சச்சின். அவர் அநேகமாக அதிக நேரம் பேசியது இதுவாகத் தான் இருக்கும்.  "22 யார்டுகளுக்கு இடையிலான எனது கிரிகெட்ட் பயணம் இன்றோடு முடிந்ததை  என்னால் நம்ப முடியவில்லை" என்று உணர்ச்சிப் பெருக்கோடு தொடங்கிய சச்சின், தந்தை தனக்கு கொடுத்த சுதந்திரம்,அன்னையின் கவனம்,தமையனின் தியாகம் , குழந்தைகளின் ஒத்துழைப்பு,நண்பர்கள், பயிற்சியாளர்கள், உறவினர்கள்,சக வீரர்கள், என்று ஒருவரையும் விடாமால் குறிப்பிட்டு நன்றி கூறியது கூட்டத்தினரை நெகிழ வைத்தது. தான் பூச்சியம் அடித்தாலும் சென்சுரி அடித்தாலும் இதுநாள் வரை  ரசிகர்கள் காட்டிய அன்பும் ஆதரவும், சச்சின்! சச்சின்! என்று நீங்கள்(ரசிகர்கள்)  அழைக்கும் குரல்  என் கடைசி மூச்சு வரை என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று தன் நன்றிகளை நெகிழ்ச்சியோடு கூறி முடித்தார்.  மைதானத்தின் மையத்திற்கு சென்று மண்ணை தொட்டு வணங்கினார். கூட்டம் ஆர்பரித்தது. வீரர்கள் அவரை தோளில் தூக்கிக் கொண்டு மைதானத்தை வலம் வந்தனர். இனி சச்சினை மைதானங்களில் காண முடியாது என்றாலும் ரசிகர்களின் மனதில் அவர் என்றும் ஆட்சி செய்வார் என்பதில் ஐயமில்லை.

    சச்சின் விடை  பெற்ற சிறிது நேரத்தில் அந்த செய்தி வெளியானது. ஆம். சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது . விளையாட்டு வீரர்களுக்கு பாரத ரத்னா வழங்கப் படுவது இல்லை. சமீபத்தில்தான்  பாரத ரத்னா விருதுக்கு விளையாட்டு வீர்களுக்கும் வழங்கலாம் என்று விதிகளில் திருத்தம் செய்ப்பட்டது. கடந்த ஆண்டே சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கப் படலாம் என்று எதிர்பார்க்கப் பட்டது.அப்போது ஹாக்கி வீரர் தியான் சந்துக்கும் விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பின்னர் யாருக்கும் பாரத ரத்னா வழங்கப் படவில்லை. அண்ணா அசாரே போன்றவர்கள் கூட சச்சினுக்கு பாரத ரத்னா வழங்க ஆதரவு தெரிவித்தனர். இப்போது பாரதரத்னா சச்சின் மற்றும் விஞ்ஞானி சி.என்.ராவ் இருவருக்கும் வழங்கப் பட உள்ளது. சச்சினுக்கு பாரத ரத்னா வழங்குவதில் அரசியல் உள்ளது என்றாலும் எந்த அரசியல் கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தற்போதைய நிலையில் சச்சினுக்கு எதிரான கருத்தை கூற யாருக்கும் துணிவில்லை. முன்னால் கேப்டன் கங்குலி(பாவம்) மட்டும் விசுவநாதன் ஆனந்துக்கும் பாரத ரத்னா வழங்கவேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

   உயரிய விருதான பாரத ரத்னா விருது சச்சினுக்கு இப்போது தர வேண்டியதில்லை என்றே நானும் நினைத்தேன். அப்படி மிக உயர்ந்த  தியாகம் நாட்டுக்காக செய்தாரா? என்ற சிந்தனையும் ஏற்பட்டது..மேலும் தற்போது எம்பியாக உள்ள சச்சின் பிற்காலத்தில் அமைச்சராகலாம்.  பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் ஏதேனும் நிகழ்வுகள் நடந்தால் கொடுக்கப்பட்ட விருதுக்கு மதிப்பு இருக்குமா? . அதனால் பாரத ரத்னா விருது ஒருவருக்கு வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் உள்ளவர்களுக்கு அல்லது இறந்தபின் விருது வழங்குவதே சிறந்தது என்பதும் என் எண்ணமாக இருந்தது, கடந்த ஆண்டே இது பற்றிய பதிவு ஒன்றை எழுதினேன். நாட்டுக்காகவும் மக்களுக்குக்காகவும் சேவை செய்தவர்களுக்குத்தான் இந்த விருது வழங்க வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தேன்.ஆனால் இலக்கியம்,கலை,அறிவியல் கண்டுபிடிப்புகள் இவற்றிற்கு வழங்கலாம் என்றுவிதிகள் இடமளிக்கின்றன. இப்போது விளையாட்டும் சேர்க்கப் பட்டிருக்கிறது. அவசரப் பட்டு சச்சினுக்கு வழங்கப் பட்டதாக தோன்றினாலும்  அதற்குரியவராக இன்னும் மெருகேற்றிக் கொள்ளும் வல்லமை சச்சினுக்கு உண்டென்பதால் மனமார வாழ்த்துவோம்.சச்சினைப் பொருத்தவரை பல  விருதுகளில் இதுவும் ஒன்று.

நன்றாக கவனித்தால்  விருது முற்றிலும்  பெருமைக்குரியதா என்ற ஐயமும் ஏற்படும். அரசியல் கலந்திருப்பதும் அதற்கு காரணம் இந்தியக் குடியரசின்  முன்னுரிமை வரிசையில் இந்த விருது பெற்றோர்  ஏழாவது இடத்தை பெறுகிறார்கள் 


பாரத ரத்னா சில சுவாரசியங்கள்
  1.  பாரத ரத்னா விருதுடன் பரிசுத் தொகை ஏதும் வழங்கப் படமாட்டாது 
  2.  வேறு சிறப்பு சலுகைகள் ஏதும் கிடையாது 
  3. முதன்முதலில் விருது தொடங்கப் பட்டபோது(1954)  இறந்தவர்களுக்கு விருது வழங்க பரிசீலிக்கப் படவில்லை. பின்னரே இறந்தோர்க்கும் விருது வழங்கலாம் என்று திருத்தம் மேற்கொள்ளப் பட்டது 
  4. காந்தியடிகளுக்கு இந்த விருது வழங்கப் படவில்லை.  (அவருக்கு கொடுப்பதால் என்ன லாபம் என்கிறீர்களா?)
  5. நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு இவ்விருது வழங்கப் பட்டு யாரோ ஒரு பிரகஸ்பதி தொடுத்த வழக்காலும் சட்ட சிக்கல் காரணமாகவும்  பின்னர் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது.
  6. அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று ஜூலை 1977 இல இருந்து ஜனவரி 1980 வரை இவ்விருது தற்காலிகமாக நீக்கப் பட்டது 
  7. இவ்விருதை பெறுபவர்கள் சட்டப்படி இவ்விருதை தன் பெயரின் முன்பாகவோ பின்பாகவோ சேர்க்கக் கூடாது .(உதாரணத்திற்கு பாரத ரத்னா சச்சின் என்று போட்டுக் கொள்ளக் கூடாது) தன் சுய விவரத்தில் வேண்டுமானால் விருது பெற்றதை குறிப்பிடலாம்.
  8. இந்தியாவின் முதல்  கல்வி அமைச்சரான அபுல் கலாம் ஆசாத் அவர்களுக்கு(அவர் அமைச்காராக இருந்த காலத்தில்) பாரத ரத்னா விருது வழங்க அரசு முன் வந்தபோது மறுத்து விட்டார். அவரது இறப்புக்குப் பின் விருது வழங்கப் பட்டது

ஓய்வுக்குப் பின்  திறமை இருந்தும் வசதி இல்லாத கிரிக்கெட் அல்லாத பிற ஆட்டக்காரர்கள், தடகள வீரர்களை கண்டறிந்து இந்திய விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு உதவ சச்சின் வேண்டும், அதுதான் அவர்மீது அன்பு கொண்டுள்ள, கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு செய்யும் கைமாறாக அமையும்.

***************************************************************************************************

கொசுறு:  பாவம் சி என்  ஆர் .ராவ்;  சூரியன் முன் வந்த நட்சத்திரம் போல் ஆனார். பிறிதொரு நேரத்தில் இந்த விருது வழங்கப் பட்டிருந்தால் இவர் பக்கமும் கொஞ்சம் கவனம் திரும்பி இருக்கும்.

*********************************************************************************************
சச்சின்  பற்றி கடந்த ஆண்டு எழுதியது 
சச்சினுக்கு ஒரு கடிதம்.  

வெள்ளி, 15 நவம்பர், 2013

ஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்?

குழந்தைகளின்  மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது?
இரண்டு மாறான உதாரணங்கள்  பார்ப்போம்.

  முதலில் இந்த ஓவியத்தை யார் வரைந்திருப்பார்கள் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா. தெரிந்தவர்களும் இருப்பீர். தெரியாதவர்களும் இருக்கலாம். பாசம் பொங்கும் கண்களுடன் அன்னை  மேரியும் தெய்வீகக் குழந்தை ஏசுவும் தத்ரூபமாக காட்சி அளிக்கும் இந்த ஓவியத்தை பார்த்தால் பாராட்டத் தோன்றாமல் இருக்குமா? ஆனால் பேரைக் கேட்டால் பாராட்ட மனம் வராது.

     சிறு  வயதில் இருந்தே அவனுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்தது. ஓவியப் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும் விரும்பினான். ஆனால் அவன் அப்பாவோ  அவனது திறமையை அறிந்தவராக இல்லை. அவனை பொறியியல் படிக்க வற்புறுத்தினார். சிறிய தவறுகளுக்குக் கூட அவனை கடுமையாக அடித்து துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தெருவில் நிறுத்தி பெல்ட்டால் மகனை அடிப்பது சர்வ சாதாரணமாக இருந்தது. தந்தையின் மீது தீராத வெறுப்பு கொண்டான் அந்த சிறுவன். தந்தை இறந்த பின் அவன் தனது விருப்பத்தை தாயிடம் தெரிவித்தான். ஓவியக் கல்லூரியில் சேர்த்து விட முயன்றார் அவரது தாய். ஆனால் அதிலும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை.இரண்டாவது முறை முயற்சி செய்தும் தோல்வியே கிடைத்தது. (அந்தக் காலத்திலுமா நுழைவுத் தேர்வு) அவனுக்கு ஓவியம் வராது ஆனால் ஓவியத்தை விட Architecture வேண்டுமானால் படிக்கலாம் என்றனர். பிடிக்காத பள்ளிக்கே மீண்டும் செல்ல வேண்டி இருந்தது. இப்படி விருப்பப் பட்டது எதுவும் நடக்காமல் மன சிதைவுக்கு ஆளானான் அந்த சிறுவன். மேலுள்ள அழகான ஓவியத்தை வரைந்தவன்தான் பின்னாளில் இலட்சகணக்கான பேரை கொன்று குவித்தவன். இப்போது தெரிந்திருக்குமே அவன் யாரென்று. ஆம் அவன்தான் அடால்ப் ஹிட்லர். 


தந்தையின் கொடுமை,பள்ளியின் கண்டிப்பு,ஓவியத் தேர்வில் தோல்வி போன்றவை ஹிட்லரை இரக்கமற்ற மனிதனாக மாற்றிஇருக்கக் கூடும்.  ஹிட்லர்கள் தானாக உருவாவதில்லை என்பதற்கு இது ஒரு உதாரணமாகக் கொள்ளலாம் . ஓவியக் கல்லூரியில் இடம் கிடைத்திருந்தால் அவனது வாழ்க்கையே திசை மாறி இருக்கலாம். ஏன் வரலாறே ஒருவேளை மாறி இருக்கலாம்.

  இதற்குநேர்  மாறாக இன்னொரு உதாரணம் பார்க்கலாம். சர்ச்சுக்கு வந்த அந்த சிறுவனின் வயது எட்டு அல்லது  ஒன்பது  வயது இருக்கலாம் ஒருநாள் பாதிரியார் அவனை ஒரு கண்ணாடிக் கோப்பையை எடுத்து வருமாறு கூறுகிறார். கோப்பையை கொண்டு வரும்போது கவனக் குறைவினால் கை தவறி கீழே போட்டு விடுகிறான். அது உடைந்து சிதறி விடுகிறது.பையனுக்கோ பயம் வந்து விட்டது பாதிரியார் தன்னை என்னவெல்லாம் சொல்லி திட்டப் போகிறாரோ?அல்லது அடிப்பாரோ என்று நடுங்குகிறான். கண்ணாடி உடையும் சத்தம் கேட்ட பாதிரியார் திரும்பிப் பார்க்கிறார். அடடா குட்டிப் பையா! கண்ணாடி கோப்பையை கை தவற விட்டு விட்டாயா? உடைந்து விட்டதே? கவனமாக இருக்கவேண்டாமா? காலில் குத்தி விட்டால் ஆபத்தாயிற்றே" என்று சொல்லிக் கொண்டே கண்ணாடித் துண்டுகளை அப்புறப் படுத்த ஆரம்பித்து விட்டார்.

பையனால் இதை நம்ப முடியவில்லை. 'ஃபாதர் ஏன் தன்னை திட்டவில்லை? என்பது அவன் மனத்தில் எழுந்த கேள்வி .நெடு நேரம் அவனுக்கு அது உறுத்தியது. யோசிக்க யோசிக்க அவனுக்கு தெளிவு கிடைத்தது. அவன் தவறு செய்தான்.ஆனால் ஃபாதர் அவனை மன்னித்து விட்டார். தவறு எல்லோரும் செய்வார்கள். பெரியவர்கள் அதை மன்னித்து விடுவார்கள். இதுதான் அவனுக்கு தோன்றிய விடை. இதுதான் பிற்காலத்தில் அந்த சிறுவன் உலகம் வணங்கும் மனிதராக உருவாக காரணமாக அமைந்தது. அவர் பிற்காலத்தில் யாருடைய தவறையும் பொருட்படுத்தியதில்லை. அவரை கொல்ல ஒருவன் முயற்சி செய்தான். ஆனால் அதில் இருந்து நூலிழையில் தப்பி விட்டார். கொலை செய்ய முயன்றவனை கைது செய்து விட்டனர்.ஆனால் அவரோ  தான் மன்னித்ததோடு அவனை மன்னித்து விடுமாறு அரசாங்கத்தையும் கேட்டுக கொண்டார். அதுமட்டுமல்ல சிறைச் சாலைக்கு சென்று அவனை நேரில் சந்தித்து அவன் நன்மைக்காக பிரார்த்தனையும் செய்தார். அவர் யார் என்று கண்டுபிடித்திருப்பீர்கள் அவர்தான் இரண்டாம் போப் ஜான் பால். 


*********************************************************************************
குறிப்பு: குழந்தைகள் தினத்தன்று வெளியிட நினைத்தேன். உடல் நலமின்மையால் இன்றுதான் முடிந்தது
*********************************************************************************
படித்து விட்டீர்களா?
யார் ஏழை?


ஞாயிறு, 10 நவம்பர், 2013

பெட்டிக்கடை.5-இந்தியரைப் பெருமைப் படுத்திய கூகுள்


பெட்டிக்கடை 5


இன்று திரைப்படத் துறையில் பல இளம் இசை அமைப்பாளர்கள் வெற்றிக் கொடி நாட்டி வருவதை காண முடிகிறது. ஏ.ஆர்.ரகுமான்  தன் முதல் படத்திற்கு இசை அமைக்கும்போது அவரது வயது 25. ஆனால் யுவன் சங்கர் ராஜா ஜி.வி பிரகாஷ் போன்றோர் அதை விட இளைய வயதில் இசை அமைக்கும் வாய்ப்பு பெற்றதோடு தங்கள் திறமையையும் நிரூபித்து வருகிறார்கள். இவர்களுக்கெல்லாம்  இசைப் பின்னணி இருந்தது. ஆனால் இசைப் பின்புலம் ஏதுமின்றி, கேள்விஞானம், நிறைய ஆர்வம், இடைவிடாத் தேடல்,தொழில்நுட்ப அறிவு இவற்றைப் பயன்படுத்தியும் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர் சிலர். முதலில்  உதவியாளராகப் பணிபுரிந்து தெரிந்து கொள்ளவேண்டியவற்றை இணையம் என்னும் துரோணாச்சாரியார் மூலம் ஏகலைவர்களாக கற்றுக் கொண்டு விடுகிறார்கள். இணையம் அவர்களுக்கு ஒரு களமாக அமைந்திருக்கிறது. முக நூல் வலைப பூக்கள் ,யூ ட்யூப் முதலியவற்றில் இவர்கள் திறமையை பார்க்க முடிகிறது.  பல சமயங்களில் இவர்களின் திறமை  குடும்பத்தினருக்குக் கூட தாமதமாகத்தான் தெரிய வருகிறது.

 அவர்களில் ஒருவர் கெளதம் .ஒரு புதிய மெட்டை உருவாக்கி  பின்னிசை சேர்த்து  வரிகளற்ற பாடலாக கணினியிலேயே உருவாக்கி பதிவு செய்திருக்கிறார்.  இதற்கு பாடல் எழுதி விட்டால் ஒரு திரைப்படப் பாடல் கிடைத்து விடும். இதை கேட்டு உங்கள் கருத்தை கூறலாம்.  பாடல் வரிகள் தந்தாலும் வரவேற்க தயாராக இருக்கிறார் கெளதம்.  சிறந்த இசை அமைப்பாளராக வளர வாழ்த்துவோம்.


இன்னும்சில படைப்புகளை கேட்க
https://soundcloud.com/gautham
                                      

இந்தியரைப் பெருமைப் படுத்திய கூகுள்

கணித மேதை ராமானுஜத்திற்குப் பிறகு கணிதத்தில் உலக அளவில் புகழ் பெற்றவராத் திகழ்ந்தவர் சகுந்தலா தேவி. மனித கம்ப்யூட்டர் என்று அழைக்கப் படும் இவரது கணித ஆற்றல் அபாரமானது. கடின கணக்கீடுகளை மின்னல் வேகத்தில் சொல்லி அசத்தியவர். எண்கள் இவரிடம் கை கட்டி சேவகம் செய்தன. கணினியை விட வேகமாக செயல்பட்ட இவரது திறமை கண்டு உலகம் வியந்தது. அப்படி என்னதான் இவரது கணித திறமை என்று கேட்கிறார்களா?

உதாரணத்திற்கு ஒன்று. 
 நீங்கள் கணிதத்தில் வர்க்க மூலம் பற்றி அறிந்திருக்கக் கூடும். 5 இன் வர்க்கம் 5 x 5 = 25  25 இன் வர்க்க மூலம் 5 இதை 2 ம்  படி மூலம்  என்றும்  கூறலாம்.4 x 4 x 4  = 64. 64 இன் மூன்றாம் படி மூம் 4 .
இவரை  சோதிக்க டெக்சாசில் உள்ள தெற்கு மெத்தேடிஸ்ட் பல்கலைக் கழக மாணவர்கள் 201 இலக்கங்கள் கொண்ட ஒரு எண்ணைக் கொடுத்து அதற்கு 23ம் படி மூலத்தை கணக்கிடும்படி கூறினர். சரியாக 50 வினாடிகளில் 546,372,891 என்று சரியான விடை கூறி அசத்தினாராம். இதை சரி பார்க்க  Univac 1101 என்ற கணினி பயன்படுத்தப் பட்டது. இதை கணினி கணக்கிட ஒரு நிமிடத்திற்கு மேல் எடுத்துக் கொண்டு விடை சரியானது என்று உறுதிப் படுத்தியது. இதற்கான கணக்கீட்டு நிரல்களில் 13000 கட்டளைகள் பயன்படுத்தப் பட்டதாம் .
இத்தகைய இந்திய மனித கம்யூட்டரை கௌரவிக்கும் வண்ணம் கூகிள் சகுந்தலா தேவியின் பிறந்த நாளான நவம்பர் 4 அன்றுஅவரது படத்தையும் google என்பதை டிஜிட்டல் எண்கள்
 வடிவத்தில் தேடல் பேட்டியின் மேல் லோகோவாக அமைத்தது.
இவை Doodles என்று அழைக்கப் படுகின்றன.
(எச்சரிக்கை: பின்னர் இவரைப் பற்றி விரிவான பதிவை எதிர்பார்க்கலாம்.)

இதே போல் நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி சார் சிவி ராமனுக்கும் நவம்பர் 7 அன்று  கூகுள் சிறப்பு Doodle உருவாக்கி பெருமை சேர்த்தது .

google-doodle-cv-raman.jpg



  மனைவியை இப்படியுமா பழி வாங்குவாங்க ?

 மனைவியை பழிவாங்கனும்னா நீங்க என்ன செய்வீங்க?உங்களால ஒண்ணும் செய்ய முடியாதுன்னு சொல்றீங்க! அப்படித்தானே! இந்த சின்ன வீடியோ வை பாருங்க(முக  நூலில் கிடைச்சது) இதை தயவு செய்து ட்ரை பண்ணி பாக்காதீங்க பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பு இல்ல.





 மாநகராட்சியின் சுராட்சிறுசுறுப்பு 
    என்னதான்  டெங்கு காய்ச்சல் சென்னையில் இல்லை என்று மாநகராட்சி சொன்னாலும் ஆங்காங்கே டெங்குவின் தாக்குதல் இருக்கத்தான் செய்கிறது. எங்கள் பகுதியில் வசிக்கும் நண்பர் ஒருவருக்கு  தொடர்ந்து ஒரு வாரமாக காய்ச்சல். சந்தேகம் வந்து டெஸ்ட் செய்ததில் டெங்கு உறுதிப்படுத்தப்பட்டது. ப்ளேட்லேட்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு நான்கைந்து நாட்கள் சிகிச்சை பெற்றதும் சரியானது. உடனே மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க உடனே ஒரு படை கொசுஎதிர்ப்பு ஆயுதங்களுடன் முற்றுகை இட்டது. சரசரவென வீட்டை சுற்றி மருந்து அடித்தனர். . கிணற்றில் மருந்து தெளித்தனர். சுற்றி கொட்டாங்குச்சி பிளாஸ்டிக், டயர் இன்ன பிறவற்றில் நீர்தேங்கி இருக்கிறதா என்று பார்த்து அவற்றை கசிழ்த்துப் போட்டு சுத்தப் படுத்தி விட்டு சென்றனர். கழிவு நீர்க் கால்வாயில் கொசு மருந்து அடித்தனர். கொசு புகை வண்டி வந்து அப்பகுதியி புகையால் நனைத்து விட்டு சென்றது. சுகாதாரத் துறையில் ஆட்கள் வந்து யாருக்கு எப்படி எங்கிருந்து டெங்கு வந்தது என்று விசாரித்து குறிப்பெடுத்துக் கொண்டு சென்றனர். மாநகராட்சியின் பல்வேறு பணியாளர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அடுத்தடுத்த  நாட்களில் தொடர்ந்து  பலர் கார்ப்பரேஷனில் இருந்து வந்து இப்போது எப்படி இருக்கிறது என்று கேட்டுச்  சென்றனர். மாநகராட்சியின் துரித நடவடிக்கைகள் ஆச்சர்யப் படுத்தியது.  சென்னை மாநகராட்சி தன் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது

பொது மக்களும் தங்கள் பங்குக்கு சுற்றுப் புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள ஒத்துழைக்க வேண்டும். வீடு சுத்தமாக வைத்துக் கொண்டால்  மட்டும் போதாது. தெருவையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.




பஞ்ச் கவிதை 
                                             ஆதங்கம் 
                           
                                    சே!
                                    இந்த  அலைபேசி சேவை
                                    ரொம்ப மோசம்.
                                    பக்கத்து  அறையில் இருக்கும்
                                    மனைவியுடன் கூட
                                    பேச முடியவில்லை!
 

*********************************************************************************
முந்தைய பெட்டிகடை பதிவுகள்
பெட்டிக்கடை - 1-திருக்குறளில் இலக்கணப் பிழையா?
பெட்டிக் கடை-2- ஆடி(யோ) மாதம்,வளர்பிறையும் தேய்பிறையும் 


 ************************************************************************************************