என்னை கவனிப்பவர்கள்

விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 பிப்ரவரி, 2015

வலைப்பக்கத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் 2015 Live Score காட்டும் Gadget சேர்க்க


   உலகக் கோப்பை கிரிக்கெட் தொடங்கி விட்டது .நேற்று இந்தியா பாக்கிஸ்தான் போட்டி பரபரப்பாக நடந்து முடிந்தது.விராத் கோலி, சுரேஷ் ரைனாவின் அதிரடியில் ஸ்கோர் 300 ஐ எட்டியது என்றாலும்  320ஐ தாண்டும் என்று எதிர்பார்த்த வேளையில் சடசடவென்று 8 விக்கெட்  வீழ்ந்துவிட்டது .
பாகிஸ்தானின் திறமையான ஆட்டக்காரர்கள் இருந்தும் வழக்கம் போல் சொதப்பினர். அனுபவமில்லா வீரர்கள் அதிகம் இடம் பெற்றிருந்தனர். சாஹித் அஃப்ரிடி மிஸ்பா இருவரும் மட்டுமே எனக்கு தெரிந்த வீரர்களாக இருந்தனர். அஃப்ரிடி தாத்தா இன்னும் இரண்டு மூன்று உலகக் கோப்பைகள் ஆடுவார் போலிருக்கிறது . ஏழடி உயரம் உள்ள முகமது இர்பான் அசுர வேகத்தில் பந்து வீசினாலும் வாசிம் அக்ரம் போல இந்திய வீரர்களை அச்சுறுத்த முடியவில்லை , பீல்டிங்கில் இந்தியாவை விட பின் தங்கியே உள்ளனர்.
பவுலிங்கில் இந்தியா வீக் என்றாலும் அதிக ஸ்கோர் இருந்ததால் வெற்றி பெற முடிந்தது. இப்படியே தொடர்ந்தால் மகிழ்ச்சி
அது கிடக்கட்டும். மேட்ச் நடந்து கொண்டிருக்கும்போது லைவாக ஸ்கோர் அறிய இணையத்தில் ஏராளமான வழி முறைகள் உள்ளன. உங்கள் வலைப் பதிவிலேயே லைவாக ஸ்கோர் தெரிவிக்கும்  விட்ஜெட் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? .உங்கள் பதிவுகளை படிக்க வரும் கிரிக்கெட் ரசிகர்கள்  நடந்து  கொண்டிருக்கும் மேட்ச்சின் Ball by ball  லைவ் ஸ்கோர் அறிய இலவச விட்ஜெட்கள் கிடைக்கின்றன.
இணைக்கும் வழிமுறை யை கூறுகின்றேன். விரும்பினால் இணைத்துக் கொள்ளுங்கள் www.cricwaves.com என்ற இணைய தளம் விதம் விதமான விட்ஜெட்களை வழங்குகின்றன. அவற்றில் ஒன்றை இணைக்கும் முறை  கீழே தந்திருக்கிறேன்
கீழ்க் கண்ட நிரலை காப்பி செய்து கொள்ளுங்கள்
<script type="text/javascript"> app="www.cricwaves.com"; mo="f1_kzd"; nt="flash"; mats =""; tor =""; Width='302px'; Height='252px'; wi ="w"; co ="flash"; ad="1"; </script><script type="text/javascript" src="http://www.cricwaves.com/cricket/widgets/script/scoreWidgets.js"></script>
 1. உங்கள் வலைப்பூவின் பிளாக்கர் கணக்கில் நுழைந்து
Lay Out ஐ க்ளிக் செய்து   Add a Gadget சொடுக்கவும்

2. தொடர்ந்து படத்தில் உள்ளவாறு HTML/JavaScript ஐ தேர்ந்தெடுக்கவும்


3.காப்பி செய்த நிரலை படத்தில் உள்ளபடி பேஸ்ட் செய்யவும்


4. சேவ் கொடுத்து வெளியேறுங்கள்.

இப்போது  விட்ஜெட் வலது புறத்தில் உள்ளது போல் தோற்றமளிக்கும் நடந்து கொண்டிருக்கும் கிரிக்கெட் போட்டிகளின் ஸ்கோர் அதில் உடனுக்குடன் தெரிவதைப் பார்க்கலாம்.
இதேபோல  உலகக் கோப்பை போட்டியில் ஒவ்வொரு நாடும் பெற்ற புள்ளிக் கணக்கையும் காட்டும் விட்ஜெட் உள்ளது வேண்டுமெனில் அதனையும் இணைத்துக் கொள்ளலாம்


*****************************************************************

நன்றி www.cricwaves.com

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

கிரிக்கெட் ஆபத்தான விளையாட்டா?


    பத்து நாட்களுக்கு முன்னதாக  நடந்த சோக நிகழ்வுகளில் ஒன்று இளம் ஆஸ்திரேலிய கிரிக்கட் வீரர் பிலிப் ஹ்யூசின் மரணம். உள்ளூர் போட்டி ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிரணி வீரர் வீசிய பவுன்சர் பந்து விக்கெட்டை பறித்திருந்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடலாம். உயிரை அல்லவா பறித்தது. பந்து அசுர  வேகத்தில் தலையில் தாக்கியதில் மயங்கி சரிந்தார் ஹ்யூஸ். அடிபட்ட வேகத்தில் நரம்புகள் சில துண்டிக்கப் பட்டதால் கோமா நிலையை அடைந்தார் ஹ்யூஸ். தீவிர சிகிச்சை அளித்தும் அவர் பிழைக்க முடியவில்லை. விக்கெட்டை வீழ்த்தாத கிரிக்கெட் பந்து உயிரை வீழ்த்தி விட்டது.  எவ்வளவுதான் பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொண்டாலும் காயங்கள் ஏற்படத்தான் செய்கின்றன. .ஏற்கனவே ராமன் லம்பா என்ற கிரிக்கெட் வீரர் இதே போல் பந்து தாக்கி மரணம் அடைந்தார்.அவர் பீல்ட் செய்து கொண்டிருந்தபோது அந்த துயர சம்பவம் நடந்தது இன்னும் சிலருக்கும் இது போன்றவிபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.
    பெரும்பாலும் விபத்துகள் உள்ளூர் போட்டிகளில்தான் அதிகமாக நடக்கின்றன கிரிக்கெட் முரட்டுத் தனமான விளையாட்டு அல்ல என்று கருதப்படுகிறது. சோம்பேறிகளின் விளையாட்டு என்று கூறப்பட்டாலும் தற்போதைய கிரிக்கெட் வியபாரத்தில் களத்தில் ஆக்ரோஷம் திணிக்கப்பட்டுள்ளது கவலைக்குரியது.  

இந்தப் பதிவில் நான் சொல்லப்போவது  எனது அனுபவம் பற்றியே

     பிலிப் ஹ்யூசின் மரணம்  எனக்கு என் பள்ளி வயது  கிரிக்கெட் விபத்தை நினைவுபடுத்தி விட்டது. அப்போது அதை நான் மிக சாதாரணமாகவே எடுத்துக்க் கொண்டேன். அப்போதெல்லாம்  சென்னையின்  புறநகர்ப் பகுதியான மடிப்பாக்கத்தில் காலி இடங்கள் அதிகமாக இருக்கும் அவையெல்லாம் எங்களுக்கு சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானங்கள். அடிக்கடி மைதனங்கள் மாறிக் கொண்டே இருக்கும். காரணம் அந்த இடங்களில் புதிதாக வீடுகள் முளைத்துக் கொண்டிருக்கும்.
   ரப்பர் பந்தில் விளையாடுவது கௌரவக் குறைவு என்று கருதியதால் கார்க் பாலில்தான் விளையாட ஆரம்பித்தோம். எங்கள் அணியின் ஒபனிங் பேட்ஸ்மேன்  நான்தான். ( ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூதானே சர்க்கரை?) கல் போன்று இருக்கும் கார்க்பால் வேகமாக வீசப் படும்போது கை கால்களில் அதிகமாக அடிபடும். க்ளவுஸ், பேட் அப்டமேன் கார்டு பற்றி எல்லாம்  பற்றியெல்லாம் நினைத்துக் கூடப் பாரத்திதில்லை. சில சமயங்களில் விரல்கள் வீங்கிக் கொள்ளும்.நகங்கள் பிய்ந்து போகும். முட்டி பெயர்ந்து போகும். இருந்தாலும் ஆடிக் கொண்டேதான் இருப்போம். படக்கூடாத  இடத்தில் பட்டால் என்னாவது என்ற கவலை துளியும் இல்லை. நான் முதல் பந்தில் தொடங்கி நீண்ட நேரம் விளையாடுவேன். எல்.பி.டபிள்யூ இல்லை என்பதால் விக்கெட் விழாமல் இருக்க காலில் வாங்கிக் கொள்ளக் கூட தயங்க மாட்டேன். எத்தனை காயங்கள்? அவை எல்லாம் ஒரு பொருட்டே இல்லை .

     என்னதான் கார்க் பாலில் ஆடினாலும் கிரிக்கெட் பாலில் விளையாட வேண்டும் என்ற ஆசை உடனே நிறைவேறவில்லை. பொருளாதார வசதியும் மேம்பட பிறகு கார்க் பாலில் இருந்து கிரிக்கெட் பாலுக்கு மாறினோம். நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு புதிய கிரிக்கெட் டீம் உருவாக்கினோம்.ஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு முதன் முதலாக பேட், Pad, Glouse  வாங்கினோம். எங்கள் கிரிக்கெட் டீமின் பெயர்  வித்தியாசமானது. ஆம் அக்னிபுத்ரா கிரிக்கெட் க்ளப் ( எங்கேயோ கேள்விப் பட்ட மாதிரி இருக்கிறதா?). இதில் பாதி பேர்தான் கிரிக்கெட் ஆடத் தெரிந்தவர்கள். மீதிப்பேர் சும்மா பதினோரு கணக்குக் காகத்தான். இவர்கள் செய்யும் அட்டகாசங்களுக்கும்  அளவே இல்லை. சுவாரசியத்திற்கும் பஞ்சம் இல்லை. சென்னை 28 படத்தில் வரும் டீம் போலத்தான் அக்னிபுத்ராவும்.

   பாதுகாப்பு என்றாலும் பழக்கம் இல்லாததால் கிளவுசைத் தவிர பேட் கட்டிகொள்வது, கார்டு வைத்ததுக் கொண்டு  ஆடுவது கஷ்டமாக இருந்தது. பெரும்பாலும் அவற்றை பயிற்சியின்போது (சின்சியாரான முறையான பயிற்சி என்று நினைத்து விடக் கூடாது)  தவிர்த்து விடுவோம். மேட்சுகளின்போது மட்டும் அவற்றை பயன்படுத்துவோம்.
   கிரிக்கெட் பால் வாங்கி விட்டோமே தவிர ப்ராக்டீஸ் செய்வதற்கு கிர்க்கெட் பால் கட்டுப்படியாக வில்லை. எங்கள் மைதானங்கள் முன்பு விளைநிலங்களாக இருந்தவை எனவே ஆங்காங்கு மேடு பள்ளங்களும், வேலிகாத்தான் செடிகளும் நிறைந்து  கரடு முரடாகவே இருக்கும். பிட்ச் இருக்கும் இடம் மட்டும் ஒரளவிற்கு சமப் படுத்தி வைத்திருப்போம். பேட்ஸ்மேன் அடிக்கும் பந்துகளை தடுப்பது என்பது சாதரணமானதல்ல.  மேடு பள்ளங்களில்  பட்டு திடீரென்று எகிறி நம்மை ஏமாற்றி விட்டு தாண்டிச் சென்று விடும். காயங்கள் ஏற்படுத்தும்.  வெறும் தரையில்   விளையாடும்போது கிரிக்கெட் பந்து  முப்பது ஓவர்களுக்குள் பல்லிளித்து விடும். பந்தின் ஷைனிங் மறைந்து சொரசொரப்பாக ஆகிவடும். தையல்கள் பிரிந்து விடும். முட்டை வடிவமாக மாறிவிடும். எவ்வளவு வேகமாக பந்து வீசினாலும் , அடித்தாலும்  மெதுவாகவே செல்லும். அதனால் மேட் இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்தோம்.

    டீமின் பணக்கார நண்பன் ஒருவன் தன் வீட்டுக்குத் தெரியாமல் மேட் வாங்கிக் கொடுத்தான். மேட் என்பது கார்பெட் போல நீளமாக இருக்கும். இரண்டு விக்கெட்டுகளுக்கு இடையில்  மட்டும் விரிக்கப்படும். மேட்டில் இரண்டு வகை உண்டு. புல் மேட், ஹாஃப் மேட்.  பாதியளவுக்கு இருக்கும் .  ஹாஃப் மேட்தான் எங்களிடம் இருந்து. மேட்டை சரியாக இழுத்து பிடித்து தளர்வின்றி ஆணி வைத்து அடிப்போம் . அது ஒரு கலை. மேட்டில் ஆடினால்  கிரிக்கெட் பந்து கொஞ்சம் அதிகமாக உழைக்கும் . சற்று சமதன்மையற்ற  பிட்சில் இதன் பயன் அதிகம். 
கட்டாந்தரையில் விளையாடுவதை விட மேட்டில் விளையாடுவது கொஞ்சம் கடினம். சாதாரணமாக மெதுவாக  பந்து வீசினாலும் மேட்டில் பட்டதும்  பந்தின் வேகம் அதிகமாகும். தரையில் ஆடும்போது இடுப்பளவுக்கு மேல் பந்து எழும்பாது. ஆனால் மேட்டில் பந்து பெரும்பாலும் மார்பளவுக்குத் தான் வரும். பவுன்சர்களும் நிறைய வீசப்படும் .ஸ்விங் அதிகமாக இருக்கும். 
    TNCA போட்டிகளில் First Division போட்டிகள் மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகள் தவிர இதர போட்டிகளில் மேட் பயன்படுத்தியே ஆடப்படுகிறது. 
   எங்கள் பகுதியில் உள்ள டீம்களுடன் மேட்ச் போடுவது வழக்கம். 
அப்படித்தான்  டீம் ஒன்றுடன்  16 ஓவர் கொண்ட மேட்ச் ஒன்றை ஆடிக் கொண்டிருந்தோம். எங்கள் மேட்டைத் தான் பயன்படுத்தினோம்.அந்தந்த டீம் கொண்டு வரும் புதிய பந்தையே வீச வேண்டும். அவர்கள் முதலில் பேட் செய்து நூறு ரன்களை கடந்து விட்டார்கள். வெற்றி இலக்கு ஒரு ஓவருக்கு ஆறு ரன்களுக்கு மேல் இருந்தது .

அடுத்து நாங்கள்  பேட் செய்ய களத்தில் இறங்கினோம். நின்னு ஆடனும் மச்சி, விக்கெட் விழாம பாத்துக்கணும் என்று ஆலோசனைகள் வழங்க  வழக்கம் போல நானும் இடது கை பேட்ஸ் மேன் ஆன நண்பனும் நானும் இன்னிங்க்ஸ் துவக்கினோம். நண்பன் அதிரடியாக ஆடக் கூடியவன்.  நீண்ட தூரம் ஓடி வந்து வீசப்பட்ட முதல் பந்தை நண்பன் எதிர் கொள்ள. அந்தப் பந்து  பைஸ் சென்றதால் மூன்று ரன்கள் கிடைக்க நான் பேட் செய்ய தொடங்கினேன்.  புல் டாஸ் பந்து அப்படியே ஸ்கொயர் லெக் திசையில் திருப்பி விட 4 ரன்கள் கிடைத்தது. நான் அடித்து ஆடுபவன் அல்லை.. இலகுவான பந்துகள் வரும் வரை காத்திருப்பது என்வழக்கம். பிளேஸ் செய்து ரன் எடுப்பது என் பாணி.

  அடுத்த பந்து தலைக்குமேலே நேராக வீசப்பட எங்கயோ சென்றதால்  கூடுதல் ரன்கள் கிடைத்தது . முதல் ஓவரில் மேட்டில் ஒரு பந்து கூட படவில்லை. அடுத்தடுத்த  ஓவர்களில் அவர்கள் செய்த தவறுகளாலும் சம தன்மையற்ற அவுட் பீல்ட் காரணமாகவும் ஏராளமான ரன்கள் கிடைத்கன. 7 ஓவர்களுக்குள் வெற்றி தேவைப்படும் ரன்களில் பாதிக்கும் மேல் கிடைத்து விட்டது என்றாலும் நண்பன் திடீரென தன் விக்கெட்டை பறி கொடுத்தான். 16 ஓவர் வரை நின்றாலே வெற்றி கிடைத்து விடும் என்ற நிலையில் அடுத்து வந்த பேட்ஸ்மனும் அவுட் ஆக எதிரணியினர் எகிறிக் குதித்தனர். நான்கு விக்கெட்டுகள் இழந்து விட்டன.  கொஞ்சம் நிலைத்து ஆடவேண்டிய சூழலில்தான் நான் எதிர்பாராத ஒன்று நடந்தது. 

   பொதுவாக நம் நாட்டில் டர்பில் விளையாடும்போது பந்து  அதிகம் எழும்பாது. உருண்டு சென்று கூட விக்கெட்டை வீழ்த்திவிடும். அதனால்  நான் குனிந்து கவனமாக ஆட முயற்சி செய்வேன். எனது விக்கெட்டை வீழ்த்திவிட வேண்டும் என்று குறியாக இருந்தனர். பல்வேறு முறைகளை கையாண்டு பார்த்தனர். எவ்வளவு வேகமாக வீசினாலும் முன் சென்று தடுத்து ஆடினேன். ஆக்ரோஷத்துடன் வீசப்பட்ட  அடுத்த பந்து வெளியே போய் விடும் என்றுதான் நினைத்தேன். ஆனால் எதிர்பாராவிதமாக மேட்டில் பட்ட வந்து சீறிக் கொண்டு என்னைநோக்கி  திரும்பியது சட்டென்று டிபென்ஸ் செய்ய நான் முயல   பேட்டின் கைப்பிடியின் முனையில்  பட்டு வேகமாக தெறித்து இடது புருவத்தின் அருகில் நெற்றியில் பலமாக தாக்கியது. டப் என்று ஏதோ உடையும் சத்தம் போல் கேட்க, அனைவரும் பயந்து என்னை நோக்கி ஓடி வந்தனர். அடிபட்டதை உணர்ந்தேனே சட்டென்று தவிர ஒன்றும் புரியவில்லை .  ஹாஃப் க்ளோசில் நின்று கொண்டிருந்த பீல்டர் ரத்தம் ரத்தம் என்று கத்த  அப்போதுதான் ரத்தம் சளசள வென்று சொட்டிக் கொண்டிருப்பதை கவனித்தேன். எனது வெள்ளை சட்டை ரத்தத்தில் நனைந்து நிறம் மாறிக் கொண்டிருந்தது.  நண்பர்கள் ஓடிவந்தனர். முகம் முழுவதும் ரத்தம் பரவி இருந்ததால் எங்கு அடிபட்டது என்பதை அறியாமல் முகத்தில் கர்சீப் வைத்து அழுத்தினர். கண்ணில அடிபட்டுடிச்சி போல இருக்குடா என்று ஒருவன் சொன்னதும்  அதுவரை அவ்வளவு சீரியசாக உணராத எனக்கு லேசாக அச்சம் ஏற்படத்தொடங்கியது .  இடது கண்ணை மூடிக் கொண்டேன். இரு நண்பர்கள் மற்றும் என்னை சைக்கிளில் உட்கார வைத்துக் கொண்டு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள 24  மணிநேர மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். முகத்தில் ரத்தத்தைப் பார்த்ததும் அடி தடி கேசாக  இருக்குமோ என்று பயந்து சிகிச்சை செய்ய சிறிது தயக்கம் காட்டினர், பின்னர் எடுத்து சொன்னதும்  டாக்டர் , என் முகத்தை துடைத்து காயம் பட்டிருக்கும் இடத்தை பார்த்து அதிர்ந்தார். ஒன்றரை இன்ச் நீளத்திற்கு பிளந்து கொண்டு ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது என்றும்  மூன்றாவது கண் போல உள்ளது தெரிவித்தார். உடனடியாக தையல் போடவேண்டும் என்றார்.  ஒவ்வொரு தையலுக்கும் இவ்வளவு ருபாய் என்று சொல்லி விட்டு ஏழு தையல் போட்டுவிட்டு  தலையை சுற்றி ஒரு கட்டு போட்டுவிட்டார். நண்பர்கள் தங்கள் கையில் இருந்த பணத்தை சிகிச்சைக்கு செலவழித்தனர். நான் மயங்காமல் இருந்தது கண்டு ஆச்சர்யம் தெரிவித்தார் டாக்டர் 

   அதுவரை ஆட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. சிகிச்சை பற்றிய தகவல் தெரிவிக்க ஆபத்து ஒன்றுமில்லை என்றதும் ஆட்டத்தை தொடர்ந்தனர். என்னை வீட்டில் விட்டுவிடுவதாக சொன்னார்கள். அப்போது வீட்டில் யாரும் இல்லை ஊருக்கு சென்றிருந்தனர் என்பதால் நான் வீட்டுக்கு போக விரும்பவில்லை. மைதானத்துக்கு சென்று மரத்தடியில் உட்கார்ந்து மேட்ச்சை பார்த்துக் கொண்டிருந்தேன். வெற்றி பெற 4  ரன்களே தேவை என்ற நிலையில் எட்டாவது விக்கெட் வீழ்ந்தது. நான் ஏற்கனவே ஹர்ட் ரிடையர் ஆகி இருந்ததால் 9 வது விக்கெட் வீழ்த்தி விட்டால் அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள். அந்த விக்கெட்டுக்கு ஆடிக் கொண்டிருந்தவர்கள் ஒப்புக்கு சப்பான் ப்ளேயர்கள். யாரவது அவுட் ஆகி விட்டால் நான் போய் ஆடுகிறேன் என்றேன் கேப்டனிடம். வாயில் வந்தபடி எல்லாம் திட்டினான். அமைதியானேன். அந்த வேலை ஏதுமின்றி ஒய்டும்  நோ பாலுமாக அவர்களே ரன் கொடுக்க வெற்றி பெற்றோம்.
   வீட்டில் உள்ள அனைவரும் ஊருக்கு சென்றிருந்ததால் காயம்பட்ட தகவல்  தெரியாது. அக்கம் பக்கத்தவரிடமும் சொல்ல வேண்டாம் என்று நண்பர்களிடம் கேட்டுக் கொண்டேன், அடுத்த இரண்டு நாட்கள் வலியும் காய்ச்சலும் இருந்தது. எப்படியோ நானே சமாளித்துக் கொண்டேன். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கேட்டபோது மாடிப்படியில் இருந்து  இறங்கும்போது ஸ்லிப் ஆகி விட்டதால் கைப்பிடி சுவற்றின் கூர் முனை குத்தி விட்டது. லேசான காயம்தான் என்று சொல்லி இருந்தேன். அதையே அனைவரும் வந்தபிறகும் சொன்னேன். தையலைப்  பார்த்து பயந்து போனாலும் நான் சொன்னதை அவர்கள் நம்பினார்கள் (நம்பியதாக நான் நினைத்துக் கொண்டேன்) இன்று வரை வீட்டில் யாருக்கும் தெரியாது . 
அதனால் உண்டான  தழும்பு என் நெற்றிப் பகுதியில் இன்னமும் மறையாமல் உள்ளது . மனதிலோ உடலிலோ உண்டாகும் காயங்களின் தழும்புகள் தானே  வாழ்க்கையின் அடையாளங்கள்?

    பிலிப் ஹ்யூசுக்கு நேர்ந்த துயரம் இதனை நினைவு படுத்தி விட்டது.இப்போது சிந்தித்துப் பார்த்தால் எவ்வளவு அசட்டுத் தனமாக நடந்து கொண்டிருக்கிறோம் என்று புரிகிறது.  கொஞ்சம் கூட அச்சம் இல்லாமல் எப்படி இருந்தோம் என்பதை நினைத்தால் ஆச்சர்யமாகத் தான் இருந்தது. சில காயங்களின் விளைவுகள் சில மாதங்கள் கழித்துக் கூட தெரிவதுண்டு. அதிர்ஷ்ட வசமாக அப்படி ஏதும் நடக்க வில்லை . என்றாலும் அப்போதே பெற்றோரிடம் சொல்லி இருக்க வேண்டும். அப்படி சொல்லாதது இன்று வரை உறுத்திக் கொண்டிருக்கிறது.  இனிமேலும் சொல்ல முடியாது . இருவரும் இப்போது இல்லை.

   இப்போதெல்லாம் டென்னிஸ் பந்தில்தான் விளையாடுகிறார்கள் அதனால் அபாயம் அவ்வளவாக இல்லை. விளையாட்டை ஊக்குவிக்கும் பெற்றோர் எல்லா உபகரணங்களும் வாங்கித் தந்து விடுவார்கள். ஆனால் விளையாடவே அனுப்பாத பெற்றோரும் உண்டு.  எவ்வளவு நேரம் எந்த விளையாட்டு விளையாடினாலும் கண்டு கொள்ளாதவர்களும்  உண்டு.  விளையாட அனுமதிக்கும் பெற்றோர் சிலருக்கு   என்ன விளையாட்டு பையன் விளையாடுகிறான் என்பது கூட தெரியாது. குழந்தைகளை சுதந்திரமாக விளையாட  விடுவதில் தவறில்லை. ஆனாலும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். கொஞ்சம் அக்கறை செலுத்தி கவனத்துடன் விளையாடும்படி சொல்லவேண்டும்.குறிப்பாக அடி ஏதும் பட்டாலும் மறைக்காமல் வீட்டில் சொல்லிவிட  வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். 
சில விளையாட்டுக்களைப்  போல கிரிக்கெட் ஆபத்தான விளையாட்டு அல்ல என்றாலும் அவ்வப்போது விபத்துகள் நடப்பதால் எச்சரிக்கையுடன் விளையாடுவது நல்லது 


**************************************************************************

எச்சரிக்கை:( அக்னிபுத்ரா கிரிக்கெட் டீமின் அலம்பல்கள்  என்று ஒரு சிறிய தொடர் பதிவு எழுத ஆசை உண்டு.  )
*****************************************************************************

கிரிக்கட் பற்றிய பிற பதிவுகள்


ஞாயிறு, 1 ஜூன், 2014

ஐ.பி.எல் பார்ப்பவரா நீங்கள்?


    கிரிக்கெட்டில் ஆர்வம் உடையவன் நான். ஓரளவுக்கு நன்றாக விளையாடவும் செய்வேன். அக்னிபுத்ரா கிரிக்கெட் க்ளப்.  இதுதான் எங்கள் கிரிக்கெட் டீமின் பெயர்.சென்னை 28 திரைப்படம் போல  சுவாரசியங்கள் எங்கள் டீமில் உண்டு.அவற்றை வைத்து தொடராக எழுதி உங்களைப் படுத்தவும் எதிர்கால திட்டம் உண்டு(இப்போதைக்கு இல்லை )  பள்ளி விட்டு வந்ததும் எங்கள் பகுதியில் உள்ள குளத்திற்கு வந்து விடுவோம். அதுதான் எங்கள் கிரிக்கெட் மைதானம் . காலைக் கடன் மாலைக் கடன் கழிப்பவர்கள்தான்  எங்கள் ரசிகர்கள்(?). ஹோம் பிச்சான அந்த மைதானத்தில் செஞ்சுரி அடித்த அனுபவமும் உண்டு. 

    நாங்கள் விளையாடும்போது விக்கெட் கீப்பருக்குப் பின்னால் பந்து சென்றால் அதைஎடுத்துப் போட்டுக் கொண்டிருப்பான்   ஒரு சிறுவன். விளையாட்டில் இல்லாத அந்த சிறுவன்  வேறு யாருமல்ல பிரபல பதிவரும், புதிய தலைமுறை பத்திரிகை துணை எடிட்டருமான யுவ கிருஷ்ணாதான் அவர். எனது வலைப்பூவில் அவர்  இட்ட  பின்னூட்டத்தின் மூலம்அவர் சொல்லித்தான் இந்த விஷயம் எனக்கே தெரிந்தது. பின்னர் இருவரும் நண்பர் வீடு திரும்பல் மோகன்குமாரோடு ஒரு பள்ளி விழாவில் சந்தித்தோம்,அவரது சகோதரர் பாலாஜி என் நெருகிய நண்பர் மற்றும் உடன் படித்தவர் 

    அருகருகே வசிப்பவர்கள்- நண்பர்களைக்கூட வலைப்பூ/முகநூல்  மூலமே சந்தித்துக் கொள்வது காலத்தின் கோலம் .

       நான் சொல்ல வந்த விஷயம் இது அல்ல. டெஸ்ட் மேட்ச்,ஒன்டே மேட்ச் எதுவாயினும் புள்ளி  விவரங்களை வைத்துக்கொண்டு விவாதித்துக் கொண்டு சண்டை போட்டுக்கொண்டு  கண்கொட்டாமல் பார்த்ததுண்டு. ஆனால் இப்போதெல்லாம்  ஐ.பி.எல் மேட்சுகளைக் கூட முழுமையாகப் பார்ப்பதில்லை.முதல் ஐ.பி.எல் இல் இருந்த ஆர்வம் இப்போது இல்லை. கிரிக்கெட் சூதாட்டமாகவும் வியாபாரமாகவும் மாறிப் போனதும் ஒருகாரணமாக இருக்கலாம். இப்போதெல்லாம் ஸ்கோர் தெரிந்து கொள்வதோடு சரி. அதுவும் இந்த முறை பல்வேறு சூழ்நிலை காரணமாக ஒரு ஐ.பி.எல் கூட முழுமையாக பார்க்கவில்லை. முதல் ஐபிஎல்லில் இருந்த ஆறாம் இன்று படிப்படியாக குறைந்து விட்டது என்று பலரும் கூறுகின்றனர்.

   எவ்வளவுதான் கிரிக்கெட்  விளையாட்டு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் விளையாட்டை ரசிப்பவர்கள் குறையவில்லை. மற்ற விளையாட்டுகளை விட கிரிக்கெட்டுக்கு மட்டும் எப்படி  மவுசு ஏற்பட்டது?.
(அதனை விவரிக்க ஒரு தனி பதிவு பின்னர் எழுதப்படும்.)

    ஐ.பி. எல் இறுதிப் போட்டி  இன்று நடைபெறுகிறது. தெருக்களில் மாணவர்கள் இளைஞர்கள் பைனல் பற்றியும் நேற்று சேவக்கின் சதம் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள் . இறுதிப் போட்டியை முழுவதுமாக பார்க்க முடிகிறதா என்று சோதனை செய்ய வேண்டும்.

   போகட்டும். ஒரு ஐ.பி.எல் ரசிகர் குறள் எழுதினால் எப்படி இருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை. சும்மா ஜாலிக்காக ......  படித்ததும் மறந்து விடவும்.


1.          தேவையா  ஐ.பி.எல் என்பார் சிலபேர்கள் 
             சொல்வதை  தள்ளி  விடு.

2.          இளமைக்கே ஐ.பி.எல் என்றிருக்க வேண்டாம்
             தலை'மை' அடித்தாவது செல் 

3.          ஆண்டியும்  வந்திடுவார்  காண்பதற்கு ஐ.பி.எல்
             தூண்டும் கிரிக்கெட் வெறி

4.          ஒன்றும் இரண்டும் ஓடாதே  எப்போதும் 
             நான்கும் ஆறும்  அடி.

5.           தடுப்பாட்டம் வேண்டாம் தம்பிகளே-அப்போது 
             கடுப்பாகி வீசுவார் கல்

6.           கேட்ச்கள் விடுதல் அழகல்ல அதனாலே
              மேட்ச்வெற்றி கைவிட்டுப் போம்.

7.           ஒருரன் ஒரு பந்து விக்கெட்டால் ஆட்டம்
              விறுவிறுப்பு கூடுமே பார்.

8.           ஏளனமாய் நினைக்காதே எதிரணியை அவ்வணியின்
              ஏப்பையும் எட்டுவார் இலக்கு.

9.           ஆட்டம் போரடிக்கும் நேரமுண்டு தப்பாது 
              அழகியர்  ஆட்டம் ரசி.

10.          சூதாடும் புக்கியிடம் சிக்காதே உன்வாழ்வு 
               சூனியமாய் ஆகிவிடும் சிந்தி.

**************************************************************************

பழைய கிரிக்கெட் பதிவுகள் 



    சச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும் 

    வியாழன், 27 மார்ச், 2014

    புதிர் உங்களுக்கு பிடிக்குமா? இவர் உயிர்பிழைக்க வழி இருக்கா?


       போன வாரத்தில ஒரு கவிதைய புதிர் மாதிரி எழுதி இருந்தேன்.நம் பதிவுலகப் பெருமக்கள் முதல் பத்தியிலேயே கண்டுபிடிச்சி எனக்கு பல்பு கொடுத்தாலும் கேள்விக்குறியில விடையை மறைத்து வச்சிருந்ததை வரவேற்றதில் மகிழ்ச்சி
    அதனால் இந்த தடவை கொஞ்சம் கடினமான புதிர் ஒண்ணை சொல்லி குழப்பலாம் என்ற நோக்கத்தோட வந்திருக்கேன்.(இது போய் கஷ்டமா என்று கேட்கப்படாது). புதிர்னா சில பேருக்கு லட்டு மாதிரி அதனால் உங்களுக்காக ஒரு லட்டு புதிர்.

    புதிர்:
     அரசனும் மந்திரியும் நகர்வலம் சென்று கொண்டிருந்தனர் . வழியில் அரசரைக் கண்டதும் அனைவரும் வணங்கி வணக்கம் தெரிவித்தனர். அந்த இடமே பரபரப்பாக இருந்தது. அரசர் வந்ததை  கவனிக்காமல் ஒரு பெரியவர் மட்டும்  தன் வீட்டு வாசலில் ஏதோதோ கருவிகளை வைத்து படம் வரைந்தும் தனக்கு தானே பேசிக் கொண்டும்  இருந்தார். இதனைக் கண்ட அரசர் தன்னை மதிக்காமல் ஒருவன் அவன் பாட்டுக்கு ஏதோ செய்து  கொண்டிருக்கிறானே என்று கோபம் கொண்டார். அவனை அழைத்து வர பணித்தார். அரசரின் ஆணையை அவரிடம் தெரிவித்தனர் . அவரோ "என் வேலையை முடித்து விட்டு வருவதாக சொல்'  என்று சொல்லிவிட்டு மீண்டும் மும்மரமாக முன்பு செய்து கொண்டிருந்ததை தொடர்ந்தார் . இதனால் கோபம் கொண்ட அரசர் அவரை கைது செய்து சிறையில் அடைக்க சொல்லி விட்டார். மந்திரி முதலானோர் அரசரிடம் மன்னிப்பு கேட்குமாறு அவரை வற்புறுத்தினர் . அவர் மறுத்து விட்டார். அதனால் மேலும் கோபம் கொண்ட மன்னன் அவரைக் கொன்று விடுங்கள் ஆணையிட்டான்.

    விசாரித்ததில் அவர் அதிகம் அறியப் படாத ஒரு மேதை என்றும் கணிதம் அறிவியல் வானவியல் இவற்றில் வல்லவர்  என்றும் மந்திரிக்கு தெரிய வந்தது  அதனால் அவர் இறப்பதை மந்திரி விரும்பவில்லை. அரசரிடம் அவரது திறமை பற்றி சொன்னார். அரசரோ தன் முடிவை மாற்றிக் கொள்ளமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார்

    பலரும் வற்புறுத்தவே "சரி அவர் உயிர் தப்பிக்க ஒரு வாய்ப்பு தருகிறேன். அவர் பெரிய அறிவாளி என்று கூறுகிறீர்களே நாளை சபையில்  ஒரு புதிர் போட்டி வைக்கிறேன் .அதில் வென்றால் அந்தக் கிழவன் உயிர் பிழைத்துக் கொள்வார் ."

    மந்திரி மகிழ்ந்தார் அந்தப் பெரியவர்  புதிருக்கு விடை கண்டு பிடித்துவிடுவார் என்று நினைத்தார். போட்டி என்ன என்று அரசரிடம் கேட்டார் மந்திரி, நாளை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு மந்திரிக்கும் தெரியாமல் சில ரகசிய உத்தரவுகளை பிறப்பித்தார் .

    மறுநாள் சபை கூடியது . பெரியவர் அழைத்து வரப்பட்டார்
    ஒரு தட்டில் 12 லட்டுகள் கொண்டு வந்து வைக்கப் பட்டன. கூடவே தராசு ஒன்றும் கொண்டு வரப்பட்டது

    மன்னன் கூற ஆரம்பித்தான், "கிழவரே! உன்னை பெரிய அறிவாளி  என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உன் அறிவு உன்னைக் காப்பதற்கு பயன்படாது  என்பதை நிரூபிக்கிறேன் .முடிந்தால் அறிவைப் பயன்படுத்தி போட்டியில் வென்று உயர் பிழைப்பாய்.

    இதோ இந்த தட்டில் 12  லட்டுகள் உள்ளன . அவற்றில் 11 லட்டுகள் சம எடை உள்ளவை. அது மட்டுமல்ல 11 லட்டுகளிலும் கடுமையான விஷம் கலக்கப் பட்டுள்ளது. பார்ப்பதற்கு ஒரே அளவில் இருந்தாலும் ஒரே ஒரு லட்டு மட்டும்  எடையில்  கொஞ்சம் வித்தியாசம் கொண்டது. விஷம் இல்லாதது. மேலும் அது மற்ற லட்டுகளை விட எடை குறைவானதா அல்லது அதிகமானதா என்பதும் தெரியாது. இவற்றில் 1 லட்டை கட்டாயம் நீ சாப்பிட்டே ஆக வேண்டும். விஷமற்றது எது என்பதை கண்டறிந்து உண்டால் உயிர் வாழலாம். 
    லட்டுகளை எடை போட  இந்த தராசை பயன்படுத்திக் கொள். ஆனால் ஒரு நிபந்தனை.  3 முறை மட்டுமே எடை போடவேண்டும்.  நீ பிழைக்க அதிர்ஷ்டம் உதவுகிறதா? அறிவு உதவுகிறதா அல்லது இரண்டும் உனைக் கைவிடுகிறதா என்று பார்ப்போம். இதோ இந்த சேவகன் 1000 எண்ணும் வரை அவகாசம் தருகிறேன். ம்  தொடங்கட்டும் போட்டி " 

    சேவகன்  1, 2  எண்ண  ஆரம்பித்தான்  "
    பெரியவர் புன்னைத்துக் கொண்டே யோசிக்க தொடங்கினார் .
    புதிரைக் கேட்ட அனைவரும்  திகைத்து நின்றனர். அமைச்சர் நம்பிக்கை இழந்தார். பெரியவர் நல்ல லட்டை கண்டறிந்தாரா? அதற்கு உறுதியான வாய்ப்பு இருக்கிறதா? அல்லது விஷ லட்டை உண்டு இறந்து போயிருப்பாரா?
    நீங்களும் சொல்லலாம்.

    விடை அறிய  கிளிக்கவும் 

    விஷ லட்டு எது? கடினப் புதிர்-விடை

    *********************************************************************************
     இதெல்லாம் படிச்சிருக்கீங்களா?
    1. புதிர்! உங்களுக்கு தெரிஞ்சா விடை சொல்லுங்க !
    2. உண்மையூர் பொய்யூர் புதிருக்கு விடை
    3. பத்தினியின் காலை வெட்டு!
    4. புதிர் கணக்கு! வடிவேலுக்கு உதவுங்கள்!
    5. புதிர்! உங்களுக்கு தெரிஞ்சா விடை சொல்லுங்க !
    6. மைனஸ் x மைனஸ் = ப்ளஸ். எப்படி?
    7. வேலை தேடும் வடிவேலு - பகுதி 1
    8. வேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை
    9. வடிவேலுக்கு வேலை கிடைத்ததா? பகுதி 3 
    10. பெட்டிக்கடை- 3  யாருக்கு வெற்றி- புதிர் 
    11. ஊஞ்சல்  புதிருக்கான விடை 


    ஞாயிறு, 17 நவம்பர், 2013

    சச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும்

         சச்சினின் 200 வது டெஸ்ட் போட்டி,சச்சின் தன் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒய்வு பெறப்  போகிறார். . மும்பை வான்கடே ஸ்டேடியம் அதிர்ந்து கொண்டிருந்தது. போட்டி தொடங்கிய நேரத்தில் இருந்து ரசிகர்களின் உதடுகள் சச்சின் சச்சின்என்று ஓயாமல் உச்சரித்துக் கொண்டிருந்தது. சச்சின் கோஷம் மைதான வான் வெளியில் நிறைந்திருந்தது. கிரிக்கட் கடவுள் சச்சின் அவதார நோக்கத்தை முடித்துக்கொண்டு கிளம்புவதை பார்க்க பரவசப் பட்டுக் கொண்டிருந்தனர் கிரிக்கெட் பக்தர்கள். அவரை வழியனுப்ப வந்த வி.ஐ.பி.களின் கூட்டம் ரசிகர்களின் கூட்டத்திற்கு இணையாகத் தான் இருந்தது. ஐந்து நாள் நடைபெற வேண்டிய ஆட்டம் மூன்றாவது நாளின் பாதியிலேயே  முடிந்துவிட்டதே என்று ஏங்கியவர்கள் அதிகம்.. சச்சின் சதம் அடிக்காமல் போனாலும் சதத்தை நெருங்கியது ஆறுதலாகவே கொண்டனர். விதம் விதமான பதாகைகள் சச்சின் மீதான அபிமானத்தை பறை சாற்றின. பல நாடுகளை சேர்ந்த முன்னாள் இந்நாள் விளையாட்டு வீரர்கள் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து சச்சினை புகழ் மழையில் நனைத்தனர். உலகின் வேறு எந்த விளையாட்டு வீரருக்கும் இப்படி ஒரு பிரிவுபசார விழா நடந்திருக்காது. இனி நடக்கவும் வாய்ப்பில்லை. உலகெங்கும் இருக்கும் புகழ் பெற்ற வீரர்கள் கூட  நாம் இந்தியாவில் பிறந்திருக்கக் கூடாதா ஏன்ற ஏக்கத்தை ஒரு சில நிமிடங்களுக்காவது  ஏற்படுத்தி இருக்கும் இந்த பிரிவுபசாரம்.இவ்வளவு பேரின் அன்பும் ஆதரவும் இவருக்கு மட்டும் எப்படிக் கிடைத்தது. பலரும் பல விதமாக பட்டியலிட்டுக் காட்டிவிட்டனர். அவரது பெருமைகளை சாதனைகளை. அமைதி அர்ப்பணிப்பு உணர்வு,அளவான(குறைந்த) பேச்சு, திறமை,உழைப்பு, மீண்டெழும் வல்லமை என அவர் வெற்றிக்காரணிகளின் பட்டியலின் நீளம் கொஞ்சம் அதிகம்தான். 

         இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றள்ளது என்பதைக் கூட யாரும் பொருட் படுத்தவில்லை.அனைவரின் கண்களும் அவரது அசைவுகளையே கவனித்துக் கொண்டிருந்தன. பரிசளிப்புவிழாவின் இறுதியில் உணர்ச்சிகரமான உரை நிகழ்த்தினார் சச்சின். அவர் அநேகமாக அதிக நேரம் பேசியது இதுவாகத் தான் இருக்கும்.  "22 யார்டுகளுக்கு இடையிலான எனது கிரிகெட்ட் பயணம் இன்றோடு முடிந்ததை  என்னால் நம்ப முடியவில்லை" என்று உணர்ச்சிப் பெருக்கோடு தொடங்கிய சச்சின், தந்தை தனக்கு கொடுத்த சுதந்திரம்,அன்னையின் கவனம்,தமையனின் தியாகம் , குழந்தைகளின் ஒத்துழைப்பு,நண்பர்கள், பயிற்சியாளர்கள், உறவினர்கள்,சக வீரர்கள், என்று ஒருவரையும் விடாமால் குறிப்பிட்டு நன்றி கூறியது கூட்டத்தினரை நெகிழ வைத்தது. தான் பூச்சியம் அடித்தாலும் சென்சுரி அடித்தாலும் இதுநாள் வரை  ரசிகர்கள் காட்டிய அன்பும் ஆதரவும், சச்சின்! சச்சின்! என்று நீங்கள்(ரசிகர்கள்)  அழைக்கும் குரல்  என் கடைசி மூச்சு வரை என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று தன் நன்றிகளை நெகிழ்ச்சியோடு கூறி முடித்தார்.  மைதானத்தின் மையத்திற்கு சென்று மண்ணை தொட்டு வணங்கினார். கூட்டம் ஆர்பரித்தது. வீரர்கள் அவரை தோளில் தூக்கிக் கொண்டு மைதானத்தை வலம் வந்தனர். இனி சச்சினை மைதானங்களில் காண முடியாது என்றாலும் ரசிகர்களின் மனதில் அவர் என்றும் ஆட்சி செய்வார் என்பதில் ஐயமில்லை.

        சச்சின் விடை  பெற்ற சிறிது நேரத்தில் அந்த செய்தி வெளியானது. ஆம். சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது . விளையாட்டு வீரர்களுக்கு பாரத ரத்னா வழங்கப் படுவது இல்லை. சமீபத்தில்தான்  பாரத ரத்னா விருதுக்கு விளையாட்டு வீர்களுக்கும் வழங்கலாம் என்று விதிகளில் திருத்தம் செய்ப்பட்டது. கடந்த ஆண்டே சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கப் படலாம் என்று எதிர்பார்க்கப் பட்டது.அப்போது ஹாக்கி வீரர் தியான் சந்துக்கும் விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பின்னர் யாருக்கும் பாரத ரத்னா வழங்கப் படவில்லை. அண்ணா அசாரே போன்றவர்கள் கூட சச்சினுக்கு பாரத ரத்னா வழங்க ஆதரவு தெரிவித்தனர். இப்போது பாரதரத்னா சச்சின் மற்றும் விஞ்ஞானி சி.என்.ராவ் இருவருக்கும் வழங்கப் பட உள்ளது. சச்சினுக்கு பாரத ரத்னா வழங்குவதில் அரசியல் உள்ளது என்றாலும் எந்த அரசியல் கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தற்போதைய நிலையில் சச்சினுக்கு எதிரான கருத்தை கூற யாருக்கும் துணிவில்லை. முன்னால் கேப்டன் கங்குலி(பாவம்) மட்டும் விசுவநாதன் ஆனந்துக்கும் பாரத ரத்னா வழங்கவேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

       உயரிய விருதான பாரத ரத்னா விருது சச்சினுக்கு இப்போது தர வேண்டியதில்லை என்றே நானும் நினைத்தேன். அப்படி மிக உயர்ந்த  தியாகம் நாட்டுக்காக செய்தாரா? என்ற சிந்தனையும் ஏற்பட்டது..மேலும் தற்போது எம்பியாக உள்ள சச்சின் பிற்காலத்தில் அமைச்சராகலாம்.  பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் ஏதேனும் நிகழ்வுகள் நடந்தால் கொடுக்கப்பட்ட விருதுக்கு மதிப்பு இருக்குமா? . அதனால் பாரத ரத்னா விருது ஒருவருக்கு வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் உள்ளவர்களுக்கு அல்லது இறந்தபின் விருது வழங்குவதே சிறந்தது என்பதும் என் எண்ணமாக இருந்தது, கடந்த ஆண்டே இது பற்றிய பதிவு ஒன்றை எழுதினேன். நாட்டுக்காகவும் மக்களுக்குக்காகவும் சேவை செய்தவர்களுக்குத்தான் இந்த விருது வழங்க வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தேன்.ஆனால் இலக்கியம்,கலை,அறிவியல் கண்டுபிடிப்புகள் இவற்றிற்கு வழங்கலாம் என்றுவிதிகள் இடமளிக்கின்றன. இப்போது விளையாட்டும் சேர்க்கப் பட்டிருக்கிறது. அவசரப் பட்டு சச்சினுக்கு வழங்கப் பட்டதாக தோன்றினாலும்  அதற்குரியவராக இன்னும் மெருகேற்றிக் கொள்ளும் வல்லமை சச்சினுக்கு உண்டென்பதால் மனமார வாழ்த்துவோம்.சச்சினைப் பொருத்தவரை பல  விருதுகளில் இதுவும் ஒன்று.

    நன்றாக கவனித்தால்  விருது முற்றிலும்  பெருமைக்குரியதா என்ற ஐயமும் ஏற்படும். அரசியல் கலந்திருப்பதும் அதற்கு காரணம் இந்தியக் குடியரசின்  முன்னுரிமை வரிசையில் இந்த விருது பெற்றோர்  ஏழாவது இடத்தை பெறுகிறார்கள் 


    பாரத ரத்னா சில சுவாரசியங்கள்
    1.  பாரத ரத்னா விருதுடன் பரிசுத் தொகை ஏதும் வழங்கப் படமாட்டாது 
    2.  வேறு சிறப்பு சலுகைகள் ஏதும் கிடையாது 
    3. முதன்முதலில் விருது தொடங்கப் பட்டபோது(1954)  இறந்தவர்களுக்கு விருது வழங்க பரிசீலிக்கப் படவில்லை. பின்னரே இறந்தோர்க்கும் விருது வழங்கலாம் என்று திருத்தம் மேற்கொள்ளப் பட்டது 
    4. காந்தியடிகளுக்கு இந்த விருது வழங்கப் படவில்லை.  (அவருக்கு கொடுப்பதால் என்ன லாபம் என்கிறீர்களா?)
    5. நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு இவ்விருது வழங்கப் பட்டு யாரோ ஒரு பிரகஸ்பதி தொடுத்த வழக்காலும் சட்ட சிக்கல் காரணமாகவும்  பின்னர் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது.
    6. அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று ஜூலை 1977 இல இருந்து ஜனவரி 1980 வரை இவ்விருது தற்காலிகமாக நீக்கப் பட்டது 
    7. இவ்விருதை பெறுபவர்கள் சட்டப்படி இவ்விருதை தன் பெயரின் முன்பாகவோ பின்பாகவோ சேர்க்கக் கூடாது .(உதாரணத்திற்கு பாரத ரத்னா சச்சின் என்று போட்டுக் கொள்ளக் கூடாது) தன் சுய விவரத்தில் வேண்டுமானால் விருது பெற்றதை குறிப்பிடலாம்.
    8. இந்தியாவின் முதல்  கல்வி அமைச்சரான அபுல் கலாம் ஆசாத் அவர்களுக்கு(அவர் அமைச்காராக இருந்த காலத்தில்) பாரத ரத்னா விருது வழங்க அரசு முன் வந்தபோது மறுத்து விட்டார். அவரது இறப்புக்குப் பின் விருது வழங்கப் பட்டது

    ஓய்வுக்குப் பின்  திறமை இருந்தும் வசதி இல்லாத கிரிக்கெட் அல்லாத பிற ஆட்டக்காரர்கள், தடகள வீரர்களை கண்டறிந்து இந்திய விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு உதவ சச்சின் வேண்டும், அதுதான் அவர்மீது அன்பு கொண்டுள்ள, கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு செய்யும் கைமாறாக அமையும்.

    ***************************************************************************************************

    கொசுறு:  பாவம் சி என்  ஆர் .ராவ்;  சூரியன் முன் வந்த நட்சத்திரம் போல் ஆனார். பிறிதொரு நேரத்தில் இந்த விருது வழங்கப் பட்டிருந்தால் இவர் பக்கமும் கொஞ்சம் கவனம் திரும்பி இருக்கும்.

    *********************************************************************************************
    சச்சின்  பற்றி கடந்த ஆண்டு எழுதியது 
    சச்சினுக்கு ஒரு கடிதம்.  

    ஞாயிறு, 23 டிசம்பர், 2012

    சச்சின் ஒய்வு சரியா?என்ன செய்ய வேண்டும்?

        இந்தியக் கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், ஒரு நாள் போட்டிகளில் மட்டும்  ஒய்வு பெறுவதை அறிவித்துவிட்டார். நான் கூட கடந்த மாதத்தில் விலகி விடு சச்சின் என்று கடுமையான கவிதை எழுதி இருந்தேன். ஆனால் அவர் ஒய்வு முடிவை இவ்வளவு சீக்கிரம் எடுப்பார் என்று நான் நினைக்கவில்லை. லட்சக்கணக்கான சச்சின் ரசிகர்களில் நானும் ஒருவன்.அவர் புகழுடன் இருக்கும்போதே ஒய்வு பெற வேண்டும்; கிரிக்கெட் போர்டால் வெளியே அனுப்பும் நிலைக்கு வந்து விடக் கூடாது என்பதே என்போன்றவர்களின் எண்ணமாக இருந்தது. இந்திய அணியின் தோல்விக்கு அவர் காரணமாக பேசப்படுவாரோ  என்ற அச்சமே  ரசிகர்கள் அவரது ஓய்வை விரும்பியதற்கு காரணம். 

      ஒரு பக்கம் அவரது ஓய்வை வற்புறுத்தினாலும் இன்னொருபக்கம் இன்னும் ஒரு சதம் அடித்தபின் ஓய்வை அறிவித்திருக்கக் கூடாதா என்ற ஆதங்கம் இப்போது ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அவர் எடுத்த முடிவு சரியானதுதான் என்றாலும் ஒன்று,டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் இரண்டிலும் ஒய்வு பெற்றிருக்க வேண்டும். அல்லது டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டும் ஒய்வு பெற்றிருக்கவேண்டும். சமீப காலங்களில் ஒரு நாள் போட்டிகளைவிட டெஸ்ட் போட்டிகளில்தான் அவரது ஆட்டம் அதிகமாக ஏமாற்றமளிக்கும் விதத்தில் அமைந்திருந்தது. டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது மிகக் கடினமான ஒன்று. ஒரு நாள் போட்டிகளில் அனுபவத்தை பயன்படுத்தி கணிசமான ஓட்டங்கள் எடுத்து விட முடியும்.

       புகழ்பெற்ற வீரர்கள் ஒரு தொடரின் தொடக்கத்திலேயே இந்த தொடரோடு நான் ஒய்வு பெறப் போகிறேன் என்று அறிவிப்பது வழக்கம். அவர் கடைசியாக விளையாடிய ஒரு நாள் தொடரின்போதே ஒய்வு முடிவை அறிவித்திருந்தால் அவரை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஆரவாரத்துடன் வழி அனுப்பி வைத்திருப்பார்கள். மறக்க முடியாத நிகழ்வாக அது அமைந்திருக்கும். 

        டெஸ்ட் போட்டியிலும் அவரால் நீண்ட நாள் விளையாட முடியும் என்று தோன்றவில்லை. அதிலாவது அவர் தொடக்கத்திலேயே ஒய்வு முடிவை அறிவிக்க வேண்டும்.
       
           எப்படி இருப்பினும் அவரது சாதனைகள் தற்போதைக்கு யாராலும் எட்ட முடியாததாக இருக்கிறது என்பது நமக்குப் பெருமைதான். இன்றுவரை பிளாஸ்டிக் பேட்டைக் கொண்டு விளையாடும் பிஞ்சுக் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவருக்கும் சச்சின்தான் கனவு நாயகனாக விளங்குகிறார் என்பதில் ஐயமில்லை. பெயரும் புகழும் பணமும் விருதுகளும் அவரைப்போல வேறு வீரர்கள் சம்பாதித்திருக்க முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக எல்லா நாட்டவரும் போற்றும் உயர்குணம் உடையவராகவே களத்தில் இருந்திருக்கிறார். இளம் வீரர்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டியது ஏராளமாக உள்ளது.

         இந்த ஒய்வோடு விளையாட்டுக்கான அவரது பணி முடிந்து விட்டது என்று நான் கருதவில்லை. ஒரு ராஜ்யசபா எம்.பி. யாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் அவர் பொறுப்புடன் செய்யவேண்டிய செயல்கள் பல உள்ளன.
       கிரிக்கெட் மட்டுமல்லாது பிற விளையாட்டுக்களின் வளர்ச்சிக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவேண்டும். கூச்சல், குழப்பம் அமளி இவைதான் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நடைபெறும் நிகழ்வுகளாக உள்ளன. இவற்றிற்கிடையே மென்மையாகப் பேசும் சச்சின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.தன் பதவிக் காலத்திற்குள் வாய்ப்பற்றுக் கிடக்கும் கிராமப்புற  இளைஞர்களும் விளையாட்டில் சாதிக்க வாய்ப்பும் கிடைக்கும் வகையில் ஏதாவது செய்யவேண்டும். செய்வாரா?

       அல்லது வழக்கமான எம்.பி.க்கள் போல சம்பளம் மற்றும் சலுகைகளை பெற்றுக்கொண்டு ஐந்து ஆண்டுகளை கழித்து விட்டு செல்வாரா?
     
    பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.    *******************************************************

    சச்சின்  தொடர்பான பிற பதிவுகள்