என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

அதிகம் பேர் விரும்பிய கதை "காபி மாதிரிதான் வாழ்க்கை"

எட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதை-3
காபி மாதிரிதான் வாழ்க்கை
     30 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இக் கதையை யூ ட்யூபில் பார்த்து ரசித்திருக்கிறார்கள். இதை எழுதியவர் யார் என்று தெரியாது. இந்த கதை உங்களுக்கு தெரிந்திருக்கலாம்
   தங்கள் துறையில் உயர்ந்த நிலையை எட்டி ஜொலித்து கொண்டிருக்கும் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தங்கள் முன்னாள் பேராசிரியரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர்.  வாழ்க்கையிலும், செய்யும் வேலையிலும் ஏற்படும் மன அழுத்தம் பற்றி பேச்சு திசை திரும்பியது. வாழ்க்கை இயந்திரத் தனமாகவும் அமைதி இன்றியும் மன உளைச்சலைத் தரக் கூடியதாகவும் உள்ளது என ஆதங்கப் பட்டனர்.
  திடீரென்று சமையலறைக்கு சென்ற பேராசிரியர் சிறிது நேரம் கழித்து ஒரு பாத்திரத்தில் நிறைய காபி கொண்டுவந்து வைத்தார். கூடவே காபி குடிப்பதற்காக விதம் விதமான கோப்பைகளையும் கொண்டு வந்தார். அவற்றில் 'வெள்ளி, பீங்கான்', போன்ற விலை உயர்ந்த கோப்பைகள் முதல் 'கண்ணாடி பிளாஸ்டிக், காகிதம்' போன்ற  சாதாரண கோப்பைகள் வரை  பல வகைகள் இருந்தன. 
 
  அனைவரையும் அழைத்து கோப்பைகளை எடுத்துகொண்டு  நீங்களே காபியையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பேராசிரியர் கூற  வந்திருந்தவர்கள் விலை உயர்ந்த கோப்பைகளை முதலில் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். மிக விலை உயர்ந்தவை மற்றும்  அழகான கோப்பைகள் எடுக்கப் பட்டுவிட அடுத்து வந்தவர்களுக்கு சாதாரண கோப்பைகளே கிடைத்தன. மிகச் சாதாரண கோப்பைகள் யாராலும் தேர்ந்தெடுக்கப்பட வில்லை. அனைவரும் தங்களுக்கு கிடைத்த கோப்பையில் காபி எடுத்துக் கொண்டனர்

  இப்போது பேராசிரியர் பேசலானார், "உங்கள் கைகளில் உள்ள கோப்பைகளை பாருங்கள். உங்களுக்கு மிகச் சிறந்தது வேண்டுமென்று விரும்புகிறீர்கள் .கிடைக்காத பட்சத்தில் கிடைத்ததில் சிறந்ததை தேர்ந்தெடுக்கிறீர்கள். அது இயல்புதான் என்றாலும் அவைதான்  மன அழுத்தம், ஏமாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு காரணம். சிந்தித்துப் பாருங்கள். கோப்பை எத்தனை விலை உயர்ந்ததாக இருந்தாலும் அவை  காபியின் தரத்தை மாற்றப் போவதில்லை.விலை குறைந்ததாக இருந்தாலும் காபியின் சுவை குறைந்து விடப் போவதில்லை. உண்மையில் சொல்லப் போனால் சில கோப்பைகளில் உள்ளே என்ன உள்ளது என்பது கூடத் தெரியாது. களைத்துப் போய் இருக்கும் நேரத்தில் நம் தேவை காபிதான். ஆனால் நாமோ கோப்பைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

  அது மட்டுமல்ல. நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்தவர் கையில் என்ன கோப்பை இருக்கிறது என்பதையும் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அடுத்தவரிடம் உள்ளது விலை உயர்ந்தது என்றல் நமக்கு அது கிடைக்கவில்லையே என்ற வருத்தமும், அது சாதரணமானது என்றால் உங்களுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சியும் அடைந்திருப்பீர்கள்.
வாழ்க்கையும் காபி போன்றதுதான். பதவி  பணம் அந்தஸ்து போன்றவை கோப்பைகளாகும். அவை வாழ்க்கைக்கு உதவும்  வெறும் கருவிகளே. அவைகளே வாழ்க்கை ஆகிவிடாது. கோப்பையின் மீது நாம் செலுத்தும் அதீத கவனத்தால் காபியின் சுவையை நாம் அனுபவிக்கத் தவறி விடுகிறோம். கோப்பையை ஒதுக்கி காபியை பாருங்கள்.
  மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் எல்லாவற்றிலும் சிறந்ததை பெற்றிருப்பதில்லை. தாம் பெற்றிருப்பதை சிறந்ததாகக் கருதுகிறார்கள். அதனால் அவர்களை கவலைகளும் அழுத்தங்களும் அதிகமாக நெருங்குவதில்லை. 
"எளிமையாய் வாழுங்கள்!
கருணையுடன் பேசுங்கள் 
எல்லோரையும் நேசியுங்கள்! 
வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும்" என்றார் பேராசிரியர் 
உண்மைதானே!

இதோ இந்தக் கதையின் ஆங்கில வீடியோ

 

****************************************************************************************************************
 இதைப் படிச்சாச்சா?

****************************************************************************************************


வியாழன், 25 ஏப்ரல், 2013

இந்த போஸ்டரை பாருங்க! பாவம் தமிழ்! காப்பாத்துங்க!

   வித்தியாசமான வார்த்தைகளை போட்டு போஸ்டர்கள் ஒட்டி எப்படியாவது தலைமையை கவரவேண்டும்  என்று கட்சிக்காரர்கள் அதீத ஆர்வத்தில் அதில் உள்ள வார்த்தைகளில் பிழைகள் இருக்கிறதா என்று கூட பார்க்காமல் பிரம்மாண்டமான அளவுகளில் ஒட்டிவிடுகிறார்கள். சில நேரங்களில் ஒற்றுப் பிழைகள்,எளிதில் கண்டுபிடிக்க முடியாத எழுத்துப் பிழைகள் வருவதுண்டு. ஆனால் பொருளை சரியாகப் புரிந்து கொள்ளாமல் போடுவதும்  வாசகங்களையே தவறாகப் போடுவதையும் சகஜமாக காண முடிகிறது. . இவர்களிடம் தமிழ் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

  மேலுள்ள சுவரொட்டி சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே நெடு நாட்கள் கண்ணில் பட்டுக் கொண்டிருந்தது. அட்சயப் பாத்திரமே என்பது அர்ச்சயப் பாத்திரமாக மாறி விட்டது. அம்மா கண்ணில் பட்டால் இந்தப் போஸ்டரை அடித்தவருக்கு அர்ச்சனை கிடைக்குமா கட்சிப் பதவி கிடைக்குமா என்று தெரியவில்லை.  

   சில பள்ளிகளில் சில  மாணவர்கள் குடியரசு தினத்தை கொடியரசு தினம் என்று சொல்வார்கள். அன்று பள்ளிகளில் ஊர்த்தலைவர் கொடி ஏற்றுவதால் அன்றைய தினம் கொடியரசு தினம். உண்மையான பொருளைப் புரிந்துகொள்ளாமல்  அவர்களே ஒன்றை இதுதான் சரி என்று நினைத்துக் கொள்வார்கள்.  அது போல குடியரசு தினம் எதற்காகக் கொண்டாடுகிறார்கள் என்று தெரியாத ஊராட்சித் தலைவர்களும் உண்டு. இவர்கள் அனைவரும் தலைமையை பாராட்டி தங்கள் விசுவாசத்தை காட்டவேண்டி இருப்பதால் புதிது புதிதாக சுவரொட்டி வாசகங்களை தேடுகிறார்கள். அதன் விளைவுதான் இது போன்ற சுவரொட்டிகள் .
  இப்படி அர்த்தம் தெரியாமல் சுவரொட்டிகள் ஒட்டி தமிழை கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதே போல் கலைஞர், ஸ்டாலின் அழகிரி ,கனிமொழி பற்றி  அபத்தமாக புகழப்பட்ட சுவரொட்டிகளை காணமுடியும்.எந்த கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

        அது போல முத்தமிழோடு நான்காவது தமிழாக புகழ்ச்சித் தமிழ் இடம் பெற்றுவிட்டது என்று சொல்லலாம் .இந்தப் புகழ்ச்சி அரசியல் வாதிகளைத் தாண்டி அதிகாரிகளுக்கும் பரவி விட்டது.தங்களுக்குக் கீழ் பணிபுரியும் பணியாளர்களும் அலுவலர்களும் தங்களை புகழ்ந்து பேச வேண்டும் என்று எதிர் பார்க்கத் தொடங்கி விட்டார்கள். சிலர் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு புகழ்ந்து தள்ளுகிறார்கள்   என்ன போஸ்டர் மட்டும் ஒட்டுவதில்லை. அவ்வளவுதான்.

      ஆயிரக்கணக்கானோர் படிக்கின்ற சுவரொட்டிகளை தவறில்லாமல் இருக்க  வேண்டும் இல்லையெனில் எப்படிப் பட்டவர்கள் தொண்டர்களாக இருக்கிறார்கள் என்பதை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டிவிடும் என்பதை 'தலைமை'கள் உணருமா?

******************************************************************************************************************

திங்கள், 22 ஏப்ரல், 2013

இதுதான் காதலா?


                    எப்படிச் சொல்வேன்
                    உன்னிடம் 
                    என் காதலை?

                    காகிதத்தில் சொல்ல 
                    கவிதையும் கைவரவில்லை 

                    என் பேனாக்களுக்கு 
                    காதல் கனாக்களை 
                    பதிவு செய்யத் தெரியவில்லை

                    வாய்மொழியில்
                    சொல்லலாம் என்றால் 
                    தாய்மொழி கூட 
                    தயவு செய்யவில்லை 

                    எப்படிச் சொல்வேன் 
                    என் காதலின் ஆழத்தை?
                    இப்படி  வேண்டுமானால் 
                    சொல்கிறேன்.

                    தனிமை அறையில்  
                    என்னை அடைத்துவை!

                    உன்னைத் தவிர 
                    நான் நேசிக்கும்
                    நூல்களைக்கூட 
                    என்னிடமிருந்து பறித்துக்கொள்

                    என் கண்களை கட்டிப் போடு 

                    பருக  கொஞ்சம் 
                    தண்ணீர்கூட தராதே 

                    உணவைக் கூட 
                    விட்டுவைக்காதே


                    அறைக்குள்  உள்ள 
                    அத்தனை காற்றையும் 
                    உறிஞ்சி எடு

                    உன் காதலை மட்டும் 
                    என்னுடன் 
                    விட்டுச்  செல் 

                  செல்லுமுன் அறையையும்
                    திறக்க முடியாது 
                    பூட்டிச் செல் 

                    பின்னர்  
                    எத்தனை நாட்கள் 
                    கழித்து வேண்டுமானாலும் 
                    வந்து  பார் 

                    அப்போதும் நான் 
                    உயிரோடிருப்பேன்!


                   *********************************************

சனி, 20 ஏப்ரல், 2013

கமலஹாசன் பங்கேற்ற நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி!

 
    நான் சாதாரணமானவன் அல்ல சகலகலா  வல்லவன், உலக அறிவு நிரம்பப் பெற்றவன் என்பதை நிருபிக்க  தன் வாழ்க்கை முழுவதும் முயற்சி செய்பவர்கள் உண்டு. அத்தகையவர்களில் ஒருவர்தான் கமலஹாசன் என்பது நான் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. பல துறைகளின் ஈடுபாடுதான் அவரது மிகப் பெரிய பலம்.அதுவே சில சமயங்களில் அவரது பலவீனமாகவும் இருக்கிறது.
   நீங்களும்  வெல்லலாம் ஒரு கோடி  நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டு 50 லட்சம் வென்றதை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அல்லது படித்திருப்பீர்கள். எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்நிகழ்ச்சி நம்மை ஏமாற்றவில்லை .
  திட்டமிட்டு 50 லட்சம் கொடுத்து விளம்பரத்திற்காக கமலை பயன்படுத்தி தனது TRP ரேட்டை அதிகரித்துக் கொள்ளும் முயற்சியில் விஜய் டிவி வெற்றி பெற்றிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். 
   HIV யால் பாதிக்கப் பட்ட சிறுவர்களுக்காக உதவும் பெற்றால்தான் பிள்ளையா அமைப்புக்காக நிதி திரட்டுவதற்காக செய்த பிரச்சாரத்தை நினைவு கூர்ந்து இதில் வெல்லப் போகும் பணத்தில் பாதி இதற்கும் இன்னொரு பாதி புற்று நோயாளிகளுக்கு உதவும் அமைப்பான கேன்கேர் அமைப்புக்கும் தரப் போவதாக சொன்னார்.
   பெரும்பாலான பிரபலங்கள் இது போன்ற நிகழ்ச்சிகளில் கிடைக்கும் பணத்தை நற்பணிகளுக்காக நன்கொடையாகக் கொடுத்தாலும் கமல் கொடுத்ததில் ஒரு உண்மையான அக்கறை இருப்பததாகவே தோன்றியது. பாதிக்கப்பட்ட  பிள்ளைகளுடன் பேசியது பற்றி சொன்னது என் கண்களை கொஞ்சம் ஈரமாக்கியது. இன்றும்  எழும்பூர் மருத்துவமனையில் எயிட்ஸ் நோயாளிகளுக்கு உதவும் விதத்தில் வைக்கப் பட்டுள்ள கமலஹாசனின் விளம்பரத்தை காண முடியும்.

  கௌதமி புற்று நோயால் அவதிப் பட்டவர் என்பது நிறையபேருக்கு தெரிந்திருக்கக் கூடும். அத்தகைய சூழ்நிலையில்  கமல்ஹாசன்  அவருக்கு ஆதரவாக இருந்து நோயை வெல்ல உதவியதை நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் கௌதமி. சமுதாயம் ஏற்றுக் கொண்ட, ஏற்றுக் கொள்ளாத பல விஷயங்களை கமல் துணிந்து செய்திருக்கிறார். COMPANIONSHIP வாழ்க்கையை நம் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அது நல்லதா கெட்டதா என்று விவாதங்கள் தொடர்ந்தாலும், திருமணம் செய்து கொள்ளாமல் சிறப்பாக இணைந்து வாழமுடியும் என்பதை இருவரும் நிருபித்திருக்கிரார்கள் என்பதை மறுப்பதிற்கில்லை. 
   நிகழ்ச்சியில் கமலஹாசன் பேசும்போதெல்லாம் அவரை முகத்தில் பெருமிதமும் காதலும் பொங்க கௌதமி பார்ப்பதும்  அவ்வப்போது ஆதரவாக ஒருவருக்கொருவர் தொட்டுக் கொள்வதும் இயல்பாகவும் அவர்களுடைய அன்பின் ஆழத்தையும்  வெளிப்படுத்தியது.
    புத்திசாலித்தனம்,சமயோசித நகைச்சுவை,அரிய தகவல்கள்,உற்சாகம் பொங்கும் கலாட்டாக்கள்  கட்டிப்பிடிவைத்தியம்,முத்தங்கள் நெகிழ வைக்கும் நிகழ்வுகள் என மூன்று நாட்கள் நேரம் போவதே தெரியாமல் போனது நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி 
  ஒவ்வொரு கேள்விக்கும் கமல் அளித்த விரிவான பதிலை பார்க்கும்போது இக் கேள்வியெல்லாம் அவர்தான் உருவாக்கினாரா  என்ற ஐயம்  எதுவும் எழவில்லை.அவரேதான் தயாரித்தார்  உறுதியாக நம்ப முடிந்தது.

  பக்கிங்காம் கால்வாய் போக்குவரத்துக்கு பயனபடுத்தப்பட்டது என்று கமல் சொன்ன தகவல் வியப்பாகத்தான் இருந்தது. சாப்டற பொருள் முன்னாடி அதுல் வந்துகிட்டு இருந்தது இப்ப சாப்பிட்டதுக்கு அப்புறம் வர்ற பொருள்தான் வந்துக்கிட்டு இருக்குன்னு  தன இயல்பான நகைச்சுவையுடன் சொல்லி சிரிக்க வைத்தார்.
 சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவர் புகழ்ந்து தள்ளும் நபர்கள் பாலசந்தர், நாகேஷ்,சிவாஜி, போன்றவர்கள் கமலின் புகழ்ச்சிக்கு இம்முறையும் தப்பவில்லை.

   பாரதியார்  திருவனந்தபுரம் மிருகக் காட்சி சாலையில் சிங்கத்தின் பிடரியை உலுக்கிக் கொஞ்சியபோது உங்கள் மன நிலை எப்படி இருந்தது என்று பாரதியின் மனைவி செல்லம்மாவை கேட்டார்களாம். அவர்கள் கண்ணைமூடிக் கொண்டு கடவுளிடம் வேண்டிக் கொண்டார்களாம் "அந்த சிங்கத்துக்காவது புத்தியைக் கொடு" என்று சொன்னதாக கமல் சொன்னது சுவாரசியம்.

   சின்னத்  திரை பிரப\லங்கள் தேவதர்ஷனி படவா கோபி உள்ளிட்டவர்கள் கமலஹாசனுடன் பேசியும், பரவசமடைந்தும் கட்டிப்பிடி வைத்தியம் செய்து கொண்டனர். சின்னத் திரை நடிகை பத்மப் ப்ரியா  பேசியது கொஞ்சம் ஓவராகத் தான் இருந்தது. 
   கமலுடைய தேடுதல் வேட்கை நம்மை ஆச்சர்யப் பட வைக்கிறது. கமலஹாசனின் கனவுப் படமான மருத நாயகம் பற்றியும் கமல் சில தகவல்களை சொன்னார்.  மருதநாயகம் என்று ஒருவர் இருந்தார் என்பது நிறையப் பேருக்கு தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அவர் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார் என்றும் அவரை அடக்க ஆன செலவு சதாம் உசேனுக்காக அமெரிக்கா செய்த செலவுகளுக்கு ஈடானது என்ற தகவல் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நாம் படித்த  வரலாறு நமக்கு பல உண்மைகளை தெரிவிக்க மறந்து விட்டதா?அல்லது மறைத்து விட்டதா? 

    மருதநாயகம்  அவரது கனவு திட்டமாகவே இருக்கிறது. முடிந்தால்  பப்ளிக் ஃபண்டிங் மூலம், எடுக்க முயற்சி செய்வேன் என்றார். வெளி நாடுகளில் இந்த முறை யில் படம் எடுக்கிறார்களாம் .DTH க்கு அடுத்து இந்த முயற்சிதான் போலிருக்கிறது. அடுத்த சர்ச்சைக்கு அஸ்திவாரம் தயார்.

   கவிதை சொல்லுங்கள் என்றதும் தயாராகக் காத்திருக்கும் முதல் ரேங்க்  மாணவன்போல ஆர்வத்துடன் கையை அசைத்து ஏற்ற இறக்கத்துடன்  உனர்ச்சியுடன் கவிதை சொல்ல ஆரம்பித்தார். பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு வாழ்பவர்களுக்கு சாட்டையடியாக தாயம்மாளை நாயகியாக்கி அவர் சொன்ன கவிதை ஒரிரு நிமிடம் நம்மை கட்டிப்போட்டது. அவர் வாசித்த கவிதை வரிகள் அவரது  மதிப்பு கூட்டும் வரிகளாக அமைந்திருந்தது. என்ன மனுஷன்யா இவன் என்று பாரதிராஜா போல நம்மையும் வியக்க வைத்தது.
(அவரது  கவிதை படிக்கவும் அதன் காணொளி பார்க்கவும்  இங்கு கிளிக் செய்யவும்)

   அவர் சொன்ன இனொரு விஷயமும் அட! என்று சொல்ல வைத்தது.
நிறைய  மொழிகளில் ஒரு பொருளின் பெயர் அது தயாரிக்கபயன்படும்  மூலப் பொருளின் முதல் எழுத்தை கொண்டு தொடங்குகிறது
உதாரணத்திற்கு எண்ணெயின் முதல் எழுத்து அது தயாரிக்க பயன்படுத்தப் படும் எள் என்ற வார்த்தையின் முதலெழுத்து.
olive-oil
தெலுங்கில் சொல்ல முடிமா என்று ப்ரகாஷ்ராஜ் கேட்க, தெலுங்கு அறிந்த கெளதமியை பார்க்க அவர் விழிக்க கமலே சட்டென்று
நூலு-நூன
நூலு என்றால் எள். நூன என்றால் எண்ணெய் என்று சொல்லி அசத்தினார்.
   சும்மா  இருந்தபோது முடிவெட்டிக் கொள்ள கற்றுக்கொண்டது, டான்ஸ் கற்றுக் கொண்டது என்று இடைவெளியின்றி இந்தா எடுத்துக் கொள் என்று சுவாரசியங்களை அள்ளி வீசினார்.

   ஐம்பது  லட்சம் வென்றதும்  நேரம் முடிந்துவிட்டதால் ஒரு கோடிக்கான கேள்வி கேட்கப் படவில்லை. ஐம்பது லட்சத்திற்கான காசோலை மட்டுமே வழங்கப் பட்டது. இங்கு கிடைக்காவிட்டால் பரவாயில்லை மீதி ஐம்பது இலட்சத்தை இந்த நல்ல விஷயத்திற்கு உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் என்று சொல்லி முடித்தது வித்தியாசமாக இருந்தது. 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(அவரது  நிகழ்ச்சியில் சொன்ன கவிதை படிக்கவும் அதன் காணொளி பார்க்கவும் விரும்பினால்  இங்கு கிளிக் செய்யவும்.)  

காதலின் கழிபொருளாய்
பிறந்த பிள்ளைக்கு 
தாலாட்டு இசைப்பது போல் 
மொய்த்தன ஈக்கூட்டம்

தொப்புள் கொடியறுத்த கசியும் காயமே 
பிள்ளையின் விலாசம் 
தெருவில் வாழ் நாய் ஒன்று

          
          (தொடர்ந்து படிக்க )

************************************************************** 

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

அமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டி 2013


  இரண்டு ஆண்டுகளாக தமிழ் வலைப்பதிவுகளில் வலம் வந்து கொண்டிருக்கிறேன். ஏராளமான கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,சமூக ஆர்வலர்கள் தங்கள் அருமையான படைப்புகளை அளித்து வருகிறார்கள்.நான் பார்க்காத, கவனிக்காத படைப்பாளிகளும் இன்னும் நிறையப் பேர் உண்டு.தினந்தோறும் கல்லூரி மாணவர்கள்,நடுத்தர  வயதினர்,ஒய்வு பெற்றோர் என வயது வித்தியாசமின்றி தினந்தோறும் புதிது புதிதாக வந்து கொண்டிருப்பது இணையத் தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது.

    இதில் பெண்களின் பங்களிப்பு ஆச்சர்யப் படுத்தும் அளவுக்கு உள்ளது. சமூகம் நகைச்சுவை,கவிதை சிறுகதை என்று பலதரப்பட்ட பிரிவுகளில் தரமான பதிவுகள் தந்து அசத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் பிரிவில் மட்டும்தான் பெண்களை அதிக அளவில் காண முடியவில்லை அல்லது என்கண்ணில் படவில்லை.
  இவர்கள்  அளிக்கும் படைப்புகள் பத்திரிகைகளில் வெளியாகும் படைப்புகளைவிட தரமானதாகவும் உள்ளது.

   இவர்களில் பலர் பிரபல பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் இணையத்தில் மட்டுமே  எழுதி வருகிறார்கள். இத்தகைய படைப்பாளிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பல பத்திரிகைகள் தினமலர்,கல்கி போன்ற  பத்திரிகைகள் போட்டிகளை அறிவித்து வருகின்றன.

   தற்போது கல்கி வார இதழ் சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறார்கள் .இதோ அதன் விவரம்

அமரர் கல்கி நினைவு சிறுகதை போட்டி 2013
 முதல் பரிசு      ரூ.10000/-
இரண்டாம்  பரிசு  ரூ.7500/-
மூன்றாம்  பரிசு   ரூ 5000/-

இது  தவிர பிரசுரத்துக்கு தேர்ந்தெடுக்கப் படும் கதைகளுக்கும் பரிசு உண்டு.
சிறுகதைகள்  கல்கி அலுவலகத்துக்கு சேர வேண்டிய கடைசி தேதி 15.06.2013. முடிவுகள் 04.08.2013 இதழி வெளியாகும்

யார் வேண்டுமானாலும் எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால் ஒவ்வொரு சிறுகதையை அனுப்பும்போதும் கல்கி இதழில் வெளியான கூப்பனை கத்தரித்து இணைத்து அனுப்ப வேண்டும்.

பிற விதிமுறைகள்
  1. கல்கியில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் இருப்பது நல்லது .
  2. சொந்தக் கற்பனை என்பதற்கான உறுதிமொழிக் கடிதம் வேண்டும்.அது இல்லாத கதைகள் பரிசீலிக்கப்பட மாட்டா.
  3. அறிமுக எழுத்தாளர்கள் எனில் இதற்கு முன் எந்தப் பத்திரிகையிலும் எழுதியது இல்லை என்றும் போட்டி முடிவு அறிவிக்கும் வரை எழுதுவதில்லை என்ற உறுதிமொழி தரவேண்டும்.
  4. முழு வெள்ளைத் தாளில் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுதவேண்டும் 
  5. தேர்வாகாத கதைகளை திரும்பப் பெற போதிய தபால் தலை ஒட்டப்பட்ட அஞ்சல் உரைகளை இணைக்க வேண்டும் பின்னால் தனியே அனுப்பிப் பயனில்லை.
  6. போட்டிக்கு அனுப்பும் கதையை முடிவுகள் வெளியாகும் வரை வேறு இதழுக்கோ இணைய தளத்துக்கோ வலைப்பதிவுகளுக்கோ போட்டிக்கு அனுப்பவோ வெளியிடவோ கூடாது.
  7. பரிசுக்குரிய கதைகளை நடுவர் குழு பரிசீலித்து தேர்ந்தெடுக்கும். சந்தேகம் எழும் விஷயங்களில் கல்கி ஆசிரியரின் தீர்ப்பே இறுதி 
  8. முடிவு வெளியாகும் வரை எவ்வித கடிதப் போக்குவரத்தோ தொலைபேசி ஈ மெயில் விச்சரிப்புகளோ கூடாது
  9. "அமரர் கல்கி நினைவு சிறுகதை போட்டி 2013" என்று உறை மேல் குறிப்பிட வேண்டும் 
  10. கதைகளை அனுப்ப வேண்டிய முகவரி 
ஆசிரியர் ,
கல்கி,
கல்கி  பில்டிங்க்ஸ்,
47 NP, ஜவஹர்லால் நேரு சாலை,
ஈக்காடுதாங்கல்

சென்னை 32 
***********
 பதிவுலக  தமிழ் படைப்பாளிகளே இந்த போட்டியில் கலந்து கொள்வீர். உங்கள் சிறுகதை எழுதும் திறனை காட்டுங்கள். நம்மில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சி அடைவேன். போட்டியில் பரிசு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை பின்னர் வலைப்பூவில் வெளியிட்டுக் கொள்ளலாம்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

******************************************************************************************

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

பத்தினியின் காலை வெட்டு!


   இன்று தமிழ் புத்தாண்டு. அனவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இன்று ஏதாவது தமிழ் பற்றி ஒரு பதிவு போட்டே ஆகவேண்டும். இல்லாவிட்டால் நீயெல்லாம்  ஒரு தமிழ்ப் பதிவரா என்று தமிழ் கொஞ்சம் கூறும் பதிவுலகம் தூற்றாதா? ( நீ பதிவு போட்டாதான் சந்தேகமே வரும் னு உங்க மனக்குரல் கேக்குது) 

   நான்  கிராமத்தில கொஞ்ச நாள் வேல செஞ்சப்ப அந்த கிராமத்தோட ஒரு.  அவர் பழைய வில்லேஜ் முன்சீப்பா இருந்தவர். அவர்  வீட்டுக்கு பக்கத்தில்தான் நான் தங்கி இருந்தேன். மாலை நேரங்கள்ல அவரோட பேசிக் க்கிட்டிருப்பேன். அவர் அதிகம் படிக்காதவர்.எஸ்.எஸ்.எல்.சி பாஸ் பண்ணாததால அவர வி.ஓ பதவியில இருந்து எடுத்துட்டாங்களாம். அவர் பத்திரம் எழுதுவதிலும் வல்லவர்னு அந்த ஊர்ல சொல்வாங்க. ஆனால் தமிழ் ஆர்வம் நிறைய உடையவர். பழைய தமிழ் புத்தங்கள் எல்லாம் அவருக்கு அத்துபடி. கம்பர் எழுதின கம்ப ராமாயணம் மட்டும்தான் நான் கேள்விப் பட்டிருக்கேன். அவர்  கம்பர் எழுதின சரஸ்வதி அந்தாதி பத்தி சொன்னபோது ஆச்சர்யமா இருந்தது.   கொஞ்சம் வெத்திலை வாங்கி குடுத்தா போதும் ஏராளமான விஷயங்களை சொல்லுவார். சினிமா பாடல்களைப் பத்தியும் பேசுவார் சித்தர் பாடல்களையும் விளக்குவார். 
  அப்படி ஒரு நாள் பேசிக்கிட்டிருந்தபோது தம்பி!.நான் ஒரு செய்யுள் சொல்றேன் அதுக்கு அர்த்தம் சொல்லு பாக்கலாம். எனக்கும் ஆர்வம் உண்டாகி சொல்லுங்க என்றேன்
அவர்  சொன்னார்

முக்காலை கைப்பிடித்து மூவிரண்டு செல்கையிலே 
அக்காலை ஐந்துதலை நாகம் கடித்தால்
பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் 
பத்தினியின் காலை வெட் டித்தேய்

இதுக்கு  அர்த்தம் என்ன தெர்யுமா? சொல்லு என்றார் 
நான் எப்படி விழிப்பது என்றுதெரியாமல் விழித்தேன் ( ஏன்னா ஏற்கனவே  "ஙே" என்று ராஜேந்திரகுமாரும் "ழே" என்று நம்ம பாலகணேஷ் சாரும் முழிச்சிட்டாங்களே)

எனக்கு ஒன்னும் புரியல. "ஒரு புதிர் மாதிரி இருக்கே! நீங்களே சொல்லிடுங்களேன்"என்றேன்
 "இப்பெல்லாம் யாரும் யோசிக்கவே மாட்டேன்கறாங்க. எல்லாம் உடனே சொல்லிடனும்" என்று சொல்லி சிரித்துவிட்டு வார்த்தை வார்த்தையாக விளக்க ஆரம்பித்தார் .

முக்காலை கைபிடித்துன்னா- வயதாகி நடக்க முடியாம  மூணாவது காலாகிய கொம்பை பிடிச்சிக்கிட்டு ன்னு அர்த்தம் 
மூவிரண்டு  செல்கையிலேன்னா  மூவிரண்டு ஆறு அல்லவா? ஆறுன்னா இன்னொரு அர்த்தம் "வழி" போகும்போது 
அக்காலை-அந்த வேளை
ஐந்துதலை  நாகம் கடித்தால் -அதாவது  ஐந்து தலை நாகம் போல  முட்களை உடைய நெருஞ்சி முள் குத்தினால்
பத்துரதன்-  தசரதன், 
புத்திரனின்-அவனோட மகன் ராமனின் 
மித்திரனின் -அவனோட நண்பன் சுக்ரீவன் 
சத்துருவின் -சுக்ரீவனின் பகைவன் வாலியின் 
பத்தினியின்-வாலியின் மனைவி  தாரை 
காலை  வெட்டித் தேய்-தாரை என்ற வாரத்தையில் காலை எடுத்தால் தரை அதாவது தரையில் தேய் .

   மொத்தமா சொல்லனும்னா வயசாகி கொம்பை ஊணி நடந்து போகும்போது நெருஞ்சி முள் காலில் குத்தினா தரையில தேச்சுட்டு போய்க்கிட்டே இருன்னு அர்த்தம் என்றார்.

    கிராமத்தில  நடக்கும்போது நெருஞ்சி முள் கால்ல குத்தறது ஒரு சாதாரண விஷயம். அதை குனிஞ்சி கூட எடுக்க மாட்டாங்க.தரையில் தேச்சுட்டு போய்டுவாங்க அதை எப்படி வித்தியாசமா சொல்லி இருக்காங்க பாத்தியா. ஒரு  விஷயத்தை நாம் சொல்றதுக்கும் புலவர்கள்  சொல்றதுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். இந்த மாதிரி நிறையப் பாடல்கள் தமிழ்ல இருக்கு என்பார். 

  நான்  மாறுதலாகி வந்துவிட்டேன். அவர் பற்றி தகவல் எதுவும் அறிய முடியவில்லை .இந்த  நாளில் அந்தப் பெரியவருக்கு நினைவு கூர்ந்து நன்றி கூர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

**************************************************************************************

சனி, 13 ஏப்ரல், 2013

வடிவேலு இப்படி செய்யலாமா?


    நகைச்சுவையில் தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டு நம் உள்ளங்களை கொள்ளை கொண்டு சிரிக்க வைத்தவர் வைகைப் புயல் வடிவேலு. திரையில் இவரது பேச்சுக்களும் உடல் அசைவுகளும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தன்னையும் அறியாமல் சிரிக்க வைத்துவிடும். பெயரே தெரியாத படமாக இருக்கும் ஆனால் இவர் காமெடி மட்டுமே நினைவில் இருக்கும் படங்கள் பல உண்டு. 
 
  இவரது நகைச்சுவை அடிவாங்குவதை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அதிலும் பல செய்திகள் மறைந்திருப்பதாகவே எனக்குத் தோன்றும் . ஒரு படத்தில் ஒரு குத்து சண்டை வீரரிடம் அடி வாங்கிக் கொண்டு அவரிடம் இருந்து கோப்பையை பறித்து "அடி வாங்கினவன் நான் எனக்குதான் கோப்பை" என்று சொல்வதிலாகட்டும், வெங்கி மங்கி என்று தனக்கு பதிலாக இன்னொருவரை அழுவதற்காக வைத்துக் கொள்வதிலாகட்டும், "ஒரு திரிஷா இல்லைன்னா ஒரு திவ்யா" என்று சொல்வதிலாகட்டும் வாழ்க்கை யதார்த்தங்களை மறைமுகமாக எடுத்துக் காட்டுவதாகத்தான்  எனக்கு தோன்றியது.

  வேறு எந்த நடிகரையும் விட அன்றாட வாழ்வில் இவரது வசனங்களை பயன்படுத்தாதவர் மிகக் குறைவு, "ரொம்ப நல்லவன்டா" "உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிட்டாங்களே!" "அவ்வ்வ்வ்வ்வ்" "எவ்வளோ அடிச்சாலும் தாங்கறாண்டா", "ரொம்ப நல்லவன்டா, "இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வர மாட்டேன்." "பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்", "ஆரம்பிச்சிடாங்கயா ஆரம்பிச்சிட்டாங்க." "ஒரு ஆணியும் புடுங்க வேணாம்", "ரைட்டு". "எவ்வள நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது" இப்படி பல பிரபல நகைச்சுவை வசனங்களுக்கு சொந்தக்காரராக இருந்தாலும் இப்போதைய சூழ்நிலையில் விவேக்கின் வசனமான எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற வசனமே பொருந்துகிறது என்று நினைக்கிறேன்.

   சமீபத்தில் ஆனந்த விகடனில் வடிவேலு வீட்டுக் கல்யாணம் பற்றி செய்தி வெளியாகி இருந்தது. சினிமா பிரபலங்கள் .அரசியல்வாதிகள், திரையுலக நண்பர்கள், ரசிகர்கள் உட்பட  உட்பட யாரையுமே அழைக்காமல் தன் மகளின் திருமணத்தை நடத்தி இருக்கிறார். யாரையும் அழைக்கவில்லையே தவிர எல்லோருக்கும் தகவல் சொல்லி இருக்கிறார். 

  கல்யாணத்துக்கு  வர்றதுக்கு சிரமப் பட்டுக்காதீங்க! நானே புள்ளைகளை உங்க வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வரேன் என்றும் கூறி இருக்கிறார். கட்டாயம் வருவேன் என்று அடம் பிடித்த  ராஜ்கிரண் ஆர்வி.உதயகுமார் ஆகியோரிடம் சூழ்நிலை சரியில்ல புரிஞ்சுக்கோங்கண்ணே என்று சொன்னதாகத் தெரிகிறது. வடிவேலுவின் இந்த நிலை பரிதாபமாகத்தான் இருந்தது.  எல்லோரையும் அழைத்தால் கலைஞரை அழைக்க வேண்டும். ஏற்கனவே ஒதுக்கப்பட்டுக் கிடக்கும் தனக்கு மேலும் அது சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று நினைத்திருப்பார் போலும்.தன்னை திடீரென்று ஓரம் கட்டிய சினிமாத் துறையினர் மீது கோபமாகவும் வருத்தமாகவும் இருக்கலாம். 

  இந்த திருமணத்தை தனது சூழ்நிலையை சரியாக்கிக் கொள்ள வடிவேலு பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். அரசியலில் நிரந்தர எதிரிகளும் யாருமில்லை. அதுபோல கலைஞர்களும் நிரந்தர பகைவர்களாக யாரையும் கருதக் கூடாது. அனைவரையும் அழைத்து நடத்தி இருந்தால் யார் உண்மையாகவும் யார் ஒப்புக்காகவும் நட்புடன் இருந்தார்கள் என்பதை வடிவேலு தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கும்.
 
  தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியவர்கள், இப்போது புறக்கணிப்பது என்பது வருத்தம் தரக் கூடியதுதான். இது பல பிரபலங்களுக்கு ஏற்படக்கூடிய அனுபவம்தான் என்றாலும் திரையுலகம் வடிவேலுவை ஒரேயடியாக  புறக்கணித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு சீரணிக்க முடியாததாகத்தான் இருக்கிறது. வடிவேலு உச்சத்தில் இருந்தபோதும் ஆணவத்துடன் நடந்து கொண்டதாகவோ  தெரியவில்லை. (விஜயகாந்த் விஷயத்தை தவிர. அதுவும் யாரோ உசுப்பி விட்டு ரணகளமாக்கிக் கொண்டதாகத் தான் தெரிகிறது.)

   நகைச்சுவை  நடிகர்கள் ஒருமுறை மார்க்கெட்டை இழந்து விட்டால் மீண்டும் எழுச்சி பெறுவது என்பது திரை உலகில் அதிகம்  இல்லை. ஒருவேளை நாகேஷ் போல குணசித்திர நடிகராக  வேண்டுமானால் இன்னொரு சுற்று வலம் வரலாம். ஆனால் இன்னொரு நடிகர் வடிவேலுவின் இடத்தை  நிரப்பமுடியாது. இன்னொருவர் என்ன அவரே வந்தாலும்   அதே இடத்தை  மீண்டும் அடைவது கடினம். இது திரையுலக நிதர்சனம். வடிவேலு இதற்கு விதிவிலக்காவாரா? பார்ப்போம்.

  யாருக்கு எப்படியோ? எனக்கு வடிவேலு முக்கியமானவர். எனது  ஆரம்ப பதிவுகளில் வடிவேலுவை பாத்திரமாக கற்பனை செய்து நான் எழுதிய நகைச்சுவை(?) பதிவுகள் எனக்கு  ஓரளவுக்கு பதிவுலக பார்வையாளர்களை பெற்று தந்தது. அவருக்கு நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன். (என் கற்பனையில் வடிவேலு)

********************************** 

கொசுறு:உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட திருமணத்தில்  மொய் வாங்கக் கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டாராம் வடிவேலு.

**********************************************************************************
ஏற்கனவே படிக்காதவர்கள் நேரம்  இருந்தால் இவற்றைப் படியுங்கள்
 



புதன், 10 ஏப்ரல், 2013

ஆறடி நிலமும் சொந்தமில்லை!

இந்தப்படம் பதிவில் குறிப்பிட்ட இடம் அல்ல
   அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல்.காரணம் முன்னால் சவ ஊர்வலம் ஒன்று  போய்க்கொண்டிருந்தது.தாரை தப்பட்டைகளும் வெடி முழக்கங்களும் அந்தப் பகுதியை அதிர வைத்துக் கொண்டிருந்தது.இந்த அமர்க்களமும் விசிலும் ஆட்டமும் இருந்ததால் கொஞ்சம் வசதியானவர் இறந்திருக்கக் கூடும். எப்போதோ ஒருகாலத்தில், இறந்து போனவர் ஒருவேளை அதிர்வான ஓசையைக் கேட்டு எழுந்துவிட மாட்டாரா என்ற நம்பிக்கையில் இப்படி ஒலி எழுப்பிப் பார்த்திருப்பார்கள்.அதுவே சடங்காக மாறி இருக்கலாம்.

  மெதுவாக சென்றுகொண்டிருந்த ஊர்வலம் நின்றுவிட்டது. மயானத்தை நெருங்கிவிட்டார்கள் போலும்.ஆனாலும் கூட்டம் கலையவில்லை.நெரிசலும் அதிகமாகியது விசாரித்தபோது மயானத்தில் உள்ளே ஏற்கனவே இறந்து போன ஒருவரின் இறுதி சடங்குகள் நிறைவடையாததால்  இவர்கள் காத்திருக்கிறார்களாம் இரு சடங்குகள் ஒரே சமயத்தில் நடக்க போதுமான இடம் அந்த மயானத்தில் இல்லை.

   இரண்டு  மூன்று கிரவுண்டுகள் அளவே அந்த மயானம் அமைந்துள்ளது இறந்தவர்களை புதைப்பதற்கான .இடுகாடும் அதுவே எரிப்பதற்கான சுடுகாடும் அதுவே! அந்த வழியாக செல்பவர்களுக்கு அங்கு ஒரு  மயானம் இருப்பதை எளிதில் அறிய முடியாது. இதுபோன்ற இறுதி ஊர்வலங்கள் நடக்கும்போதுதான் அங்கு மயானம் இருப்பது தெரியும். சென்னையின் பல புறநகர்ப் பகுதிகளில் நிலை இப்படி இருப்பதை காணமுடிகிறது.

    புறநகர்ப் பகுதிகளில் ஒவ்வொரு சதுர அடியும் விலை மதிப்பு மிக்கவை. அதனால் அரசு நிலங்கள் ஏரிகள்,சுடுகாடுகள், குளங்கள் ஆக்ரமிப்பு செய்யப் படுகின்றன.உள்ளாட்சி அமைப்புகளும் இதைப் பற்றி கவலைப் படுவதில்லை. இந்த ஆக்கிரமிப்புகளும் அவர்களின் ஆதரவுடன்தான் நடை பெறுகின்றன. இதனால் மயானங்களின் பரப்பளவு சுருங்கிவிட்டது. 

"வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடம் ஏது"
”ஆடி அடங்கும் வாழ்க்கையடா!
ஆறடி நிலமே  சொந்தமடா”  

     இவை நிலையாமை தத்துவத்தை நிலைக்கும் வண்ணம் சொன்ன  கண்ணதாசனின்  புகழ்பெற்ற பாடல் வரிகள். ஆனால் . வந்தவரெல்லாம்  சென்றுவிட்டாலும்   அவர்களை புதைக்க போதுமான இடம் பல மயானங்களில் இல்லை.

    உண்மையில் பார்க்கப் போனால்  இது போன்ற மயானங்களில் ஆறடி நிலம் கூட இறந்தவர்க்கு சொந்தமில்லை.  சிறிது  காலத்திற்குள் வேறு ஒருவரும் அந்த இடத்தை பகிர்ந்து கொள்ள வேண்டி இருக்கும். மயானம் குறைந்தது இந்தஅளவுக்கு இருக்க வேண்டும் என்று விதிமுறைகள் இருக்கிறதா என்று தெரியவில்லை. இல்லையெனில் கட்டாயம் வசதிகளை ஏற்படுத்தவும் பராமரிக்கவும் விதிமுறைகளை உருவாக்க வேண்டும். இறந்த பின்னர் நல் முறையில் அடக்கம் செய்யவோ தகனம் செய்யவோ தக்க வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டியது அரசாங்கத்தின் கடமை.இது பற்றி கோரிக்கை விடுக்க பொதுநல சங்கங்களும் அவ்வளவாக முன்வருவதில்லை.

    முன்பெல்லாம் சுடுகாடு பக்கம் செல்லக் கூட பயப்படுவார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. மக்களும் நிலம் வாங்கும் வெறியில் எந்த இடமாக இருந்தாலும் வாங்கி கட்டடம் கட்டி விடுகிறார்கள். குடியிருக்கவும் செய்கிறார்கள். உடல் எரிக்கப்படும் நேரத்தில் மட்டும் ஜன்னலை மூடி வைத்துக் கொள்ள பழகி விட்டார்கள். 
  
    கிராமங்களில் ஒருவர் இறந்து விட்டால் அதன் பாதிப்பு அந்த கிராமம் முழுதும் எதிரொலிக்கும்.இறந்தவரின் உடல் எடுக்கப் படும்வரை அது தொடரும். ஆனால்  நகர்ப்புரங்களில் பக்கத்து வீட்டில் யாரேனும் இறந்தால் கூட தினசரி நடவடிக்கைகளில் எந்த (இயற்கையாக வயது  முதிர்வின் காரனமாக ஏற்படும் மரணம் மட்டும்) பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. 

  நகர்ப்புறங்களில் குடி இருப்புகளுக்கு மத்தியில் இத்தகைய மயானங்களில் உடல் எரிக்கப் படும்போது ஆரம்பத்தில் மூக்கைப் பிடித்துக்கொண்டும் பின்னர் அதைப் பற்றிய எந்த உணர்வு  இன்றி வாழ மக்கள் பழகிக் கொண்டு விட்டார்கள்.

 "என்ன! அவர்கள் உயிரின்றி எரிந்துகொண்டும் புதைந்து கொண்டும் இருகிறார்கள் நாம் உயிருடன் நடமாடிக் கொண்டிருக்கிறோம் அவ்வளவுதான்!" என்ற சிந்தனையுடன் இருக்கிறார்களோ?

******************************************************************************** 

இன்று  தெலுங்கு வருடப் பிறப்பு உகாதிதின வாழ்த்துக்கள்
இதைப் படித்திருக்கிறீர்களா? 
http://tnmurali.blogspot.com/2012/03/blog-post_23.html
தெலுங்கை தாய்மொழியாக உடையவர்கள் தமிழர்களா?  
(கடந்த ஆண்டு நான் எதிர் பார்க்காத அளவுக்கு அதிகம் பேரால் படிக்கப்பட்ட  பதிவுகளில்  ஒன்று) 


செவ்வாய், 9 ஏப்ரல், 2013

கூகுள்ல தேடிப் பாத்து சொல்றேன்! எ. ப .கு. க.

  எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-2

கூகுள்ல தேடிப் பாத்து சொல்றேன்!

  சார்! எனக்கு கூகுள்னா ரொம்ப புடிக்கும்.இன்டர்நெட்டுன்னு சொன்னாலே கூகுள் தானே சார் ஞாபகம் வரும். எனக்கு காலையில கூகிள் மூஞ்சிலதான் முழிக்கணும். தூங்கறதுக்கு முன்னாடி கூகுளுக்கு குட்நைட்  சொல்லணும்.  சின்ன குழந்தைகள் முதல்  பெரியவர்கள் வரை எதைத் தேடறதுக்கும்  அதிகம் யூஸ் பண்றது  கூகுள்தன சார். கூகுளுக்கு நான் அடிமையாயிட்டனாம். என் பிரண்ட்சும் அப்படித் தான் சொல்றாங்க எங்க வீட்லயும் அப்படித்தான் சொல்றாங்க! அதனால என்ன எல்லாரும் கூகுள்தாசன்னு கூப்பிடறாங்க! இப்படிதான் சிலர் முகநூலுக்கு அடிமையா இருக்காங்க. அவங்கள யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறாங்க. 

  கொஞ்சநாளா இப்படித்தான் சார் நடக்குது. இத படிச்சிட்டு சொல்லுங்க நியாயத்தை.

ஆபீஸ் மேனேஜர்: ஜெய்ப்பூர் சென்னையில இருந்து எவ்வளோ தூரம் ?
கூகுள்தாசன்: கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன் சார்!

நண்பன்:  சேதன் பகத் கடைசியா எழுதின புத்தகம் என்னப்பா?
கூகுள்தாசன் : கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன்.

நண்பர்:  அம்மா உணவகம் எக்மோர்ல இருக்கா?
கூகுள்தாசன் :கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன்.

ஊருக்கு போன மனைவி(கைபேசியில்): ஹலோ என் தம்பி குழந்தைக்கு நாமதான் பேர் வைக்கனுமாம் குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்?
கூகுள்தாசன் : கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன்.

மகன்: சயின்ஸ் ப்ராஜெக்ட் ஒண்ணு பண்ணணுமாம்?என்னப்பா பண்றது?
கூகுள்தாசன் :கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன்.
 
தங்கை: பரதேசி படம் எங்க ஓடுது சொல்லு:
கூகுள்தாசன் :கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன்.
 
தாத்தா: திருப்பதில பிரம்மோற்சவம் எப்போ?:
கூகுள்தாசன் : கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன்.
  
அக்கா:தங்கம் விலை இன்னைக்கு என்ன?
கூகுள்தாசன்:கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன்.

பாட்டு கற்றுக்கொள்ளும் மகள்; இந்த பாட்டு என்ன ராகம்?
கூகுள்தாசன்: கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன்.
 
அப்பா: இந்த மருந்து இங்க கிடக்கல/எங்க கிடைக்கும்னு தெரியலையே?
கூகுள்தாசன் :கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன்.
 
அம்மா: ஊருக்கு போன உன் பொண்டாட்டி எப்ப வருவா?
கூகுள்தாசன் : இரும்மா  கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன்.

அம்மாவுடன் சேர்ந்து மற்றவர்களும் முறைக்காறாங்க சார். நான்  செல்போனுடன் பாத்ரூமுக்கு  எஸ்கேப் ஆகி அங்க போய் கூகுள்ல தேட வேண்டியதா இருக்கு சார். நீங்கதான் சார் சரியான தீர்ப்பு சொல்லணும்.


**************************************************************************

இந்தப்  பதிவ போட்டு முடிக்கறதுக்குள்ள மின்னல் வரிகள் கிட்ட  இருந்து ஒரு போன்.

அவர் பேசுவதற்கு முன்பாக நான் "சார் நான் பதிவு போடறதுக்குள்ள தெரிஞ்சுபோச்சா?.போன்லயே பின்னூட்டமா! ரொம்ப தேங்க்ஸ் சார்."

"முரளி! உனக்கே ஓவரா தெரியல! இந்த மாதிரி மொக்க பதிவை போடறத எப்போ நிறுத்தப் போற! அதுக்குத்தான் போன் பண்ணேன்"

 "இருங்க சார்! கூகுள்ல பாத்து சொல்றேன்." ன்னு நான் சொல்ல (கூகுள் இலவச பிளாக்கிங் அனுமதிக்கறவரை தானே)   கடுப்பே ஆகாத ஆகாத பாலகணேஷ் கடுப்பாகி கட்செய்தார் ஃபோனை. 

 ***********************************************************************************
சுட்டதோட சேத்து கொஞ்சம் ஓட்ட வச்சது 
சுட்ட இடம்:google search 
.

***************************************************************************************

எட்டிப்  பார்த்து படித்த குட்டிக் கதை 1


வெள்ளி, 5 ஏப்ரல், 2013

கண்ணகிபோல் இருக்காதீர்!-வைரமுத்து

 வைரமுத்துவைப் பற்றி  நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. வைரமுத்து எழுதிய முதல் கவிதை நூலான "வைகறை மேகங்கள்" முழுவதும் மரபுக் கவிதைகளால் நிரம்பியது. அதில் கண்ணகியைப் பற்றி அவர் எழுதிய கவிதை கருத்தாலும் வார்த்தை சாலங்களாலும் என்னை கவர்ந்தது. மிக நீளமான அந்தக் கவிதையை சுவை கருதி  பாதியாக்கி  சுருக்கித் தந்திருக்கிறேன். (வைரமுத்து மன்னிப்பாராக) உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

 கருப்பு நிலா
 
             கண்ணகியே! தாயே! கருப்பான இரும்பிடையே 
             பொன்னகையே பூவே! புரட்சித் துறவியவன் 
             தீட்டி வைத்த காவியமே! திருமகளே! தேனுக்குள் 
             போட்டுவைத்த பழம்போல் பூந்தமிழர்க் கினிப்பவளே!
             உச்சி குளிர்ந்துவிட உன்னைப் புகழ்ந்துவிட்டேன்.
             நிச்சயமாய் இனிஎன் நினைப்பை சொல்லுகின்றேன்.
             அந்திப்பூ விரிவதுபோல் அறிவை விரித்து வைத்து 
             சிந்தித்தேன் ஆமாம்! சிரிப்புத்தான் வந்ததம்மா!
             உள்ளபடி உன்வாழ்க்கை  உலகுக் குதவாத
             செல்லுபடி ஆகாத சிறுகாசு தானென்பேன்!

             தொட்டு மாலையிட்டோன் தோகையரை கூடியபின் 
             விட்டுப் பிரிந்து வேறு திசை போனாலும் 
             கண்ணீரை தினம்சிந்தி கண்மூடி வாழ்வதுதான் 
             பெண்டிர்க்கு கற்பென்று பேசினால் அக்கற்பே 
             இந்த உலகத்தில் இல்லா தொழியட்டும்
             சந்தையிலே விலைபோகா சரக்காகிப் போகட்டும்.
             கட்டில் சுகம் காண காளையவன் செலும்போதே 
             தட்டிக் கேட்டிருந்தால் தவறி இருப்பானா?
             பெட்டிப் பாம்பாக பேசா திருந்ததுதான் 
             கட்டழகே நீ செய்த கடுங்குற்றம்!முதற்குற்றம்!

             உப்புக் கடல் நோக்கி ஓராறு செல்லுவதும் 
             இப்புவியில் வியப்பில்லை எழில்மகளே! உன்கணவன்
             தப்பான கடல் நோக்கி தாவி செல்லும்போதே 
             அப்பப்பா ஈதென்ன அநியாயம் எனச்  சொல்லி 
             அணையொன்றைக் கட்டி அந்த ஆண்மகனைத் தடுத்திருந்தால்
             திணைவனத்துக் கிளிபோல திருமகளே வாழ்ந்திருப்பாய்
             அறம்பாடி மதுரை அரசன் புகழ்சாடி 
             திறம்பாடும் பூநகரை தீயால் எரித்தாயே!
             அத்திறத்தை சோனாட்டில் அணுவளவு காட்டி நின்றால் 
             சத்தியமாய் வாழ்வில் தளிர்த்து  செழித்திருப்பாய்
             மன்னவனும் மாண்டதனால் மதுரை எரிந்தததனால் 
             உன் கணவன் நிலையாக உன்னிடத்தில் மீண்டானா?
             கயவன் இழிந்த மகன் கண்மூடிப் போனவுடன் 
             மயங்கி விழுந்தாயே மடமகளே! வாழ்நாளில் 
             பொய்யாகிப் போனமகன் புழுதியிலே செத்ததனால் 
             ஐயோ! ஆ! என்றலறி அழுது துடித்தாயே 
             காவியத்தில் உனைக்கண்டு கண்ணீரா நான் வடித்தேன்?
             ஆவி சிலிர்த்தேனா? அல்ல சிரித்துவிட்டேன்.

             மோகக்  கதையதனை முடித்துவிட்டே உன்கணவன்
             வேகமாய் உன்னை நாடி வீடு தேடி வந்தவுடன் 
             "சிந்தை நிலாக் காவலரே!சிலம்பிதனை நாடித்தான் 
             வந்தீரோ?என்றுனது வாய் நிறைய தேன்வழிய 
             சொன்னாயே பாவி! சுவையொழுக சிலம்புதனை
             அன்னவனின் கைமீது அளிக்கத் துணிந்தாயே
             பத்தினியாய் நீயிருந்தும் பயனில்லை! உண்மையிலே 
             பித்தம் பிடித்தவள் நீ பேதை பெரும்பேதை 
             அநியாயக்  காரனுக்கே ஆரத்தி எடுத்தவள் நீ
             கனிஎன்றே எண்ணிக் கருங்கல்லைக் கடித்தவள் நீ 

             பல்லுடைந்து  போனதற்கும் பதறித் தவிப்பதற்கும்
             எள்ளுருண்டை காரணமா? ஏந்திழையே! உன்கணவன் 
             பதமான சுகம் கண்டு பாவிமகள் உனைப்பற்றி 
             முதலிரவில் சொன்னதெல்லாம் மோகமொழி தானென்றே 
             அறியாமல் போனாயே அதுவுந்திரன் பிழையன்றோ?
             பிரிக்காத ஏடுன்னை பிரித்தெங்கோ  போனானே!
             விட்டுப் பிரியாத வேலையினை செய்வதற்கு 
             சுட்டு  விழியாலே சொக்கவைத்து தக்கவைக்க 
             தவறவிட்ட உன்னையந்த தாய்க் குலமா பாராட்டும்?
             கவலைக் காவியம் நீ கண்ணீரால்தான் முடிந்தாய்!

             தாய்க்குலமே! தாய்க்குலமே !தங்க மகன் சொல்லுகின்றேன்.
             வாய்சாலக்  காரனென்று வார்த்தையினைத் தள்ளாதீர்!
             கற்பொன்றில் மட்டும் கண்ணகியைப் போலிருங்கள்!
             மற்றவற்றில் அந்த மடமைகளை மறந்திருங்கள்!
             இப்போதும் அவளைபோல் ஏமாந்து நின்றிருந்தால் 
             முப்போதும் கண்ணீரில் மோன நிலை கொண்டிருந்தால் 
             கடலுள் விழுந்த கடுகாகிப் போவீர்கள்!
             இடருள் சிக்குண்டு எருக்கம்பூ ஆவீர்கள் 
             கருவுடைந்த முட்டைஎன கருகித் தவிப்பீர்கள் 
             வருத்தத்தில் தானுங்கள் வாழ்நாளைக் கழிப்பீர்கள் 

             சீறுகின்ற பெரியீர்! சிந்தையிலே அறப்பாட்டுக் 
             கூறுகின்ற பூமகளை கொஞ்சுதமிழ் அஞ்சுகத்தை 
             நிந்தித்து எழுதவில்லை! நினைவெல்லாம் ஒரு நிலையாய் 
             சிந்தித்தே எழுதியுள்ளேன்! சிந்திக்க வேண்டுகின்றேன்!.


*************************************************************************************
கொசுறு: இந்நூல் வைரமுத்துவின் 17 வயதிற்குள் எழுதப் பட்டு 19 வயதில் வெளியிடப்படதாம்.

இதைப்  படித்து விட்டீர்களா?

நுகர்வோரின் குறைகளை எங்கு முறையிடுவது?
நிலா அது வானத்து மேலே





புதன், 3 ஏப்ரல், 2013

கௌரவக் கொலைகள்-மனம் கனக்கச் செய்த நீயா? நானா?


   சமீபத்தில்தான் காதலை ஏற்பவர்கள் மறுப்பவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் பிரகாஷ் ராஜ் தயாரித்த படமான கௌரவம் படத்தின் விளம்பரத்திற்காக மீண்டும் காதலையும் சாதியையும் கையில் எடுத்துக் கொண்டது 31.03.2013 அன்று நடந்த நீயா நானா? இம்முறை சிறப்பு விருந்தினர்களாக சேரன், பாலாஜி சக்திவேல் பிரகாஷ் ராஜ், ராதா மோகன், வைரமுத்துவின் மகன்  கார்க்கி ஆகியோர் கலந்து கொண்டனர். கௌரவம் படத்தின் ஆடியோ ரிலீசும் இந்நிகழ்ச்சியிலேயே  சற்று வித்தியாசமான முறையில் செய்யப்பட்டது, விளம்பரம்தான்  என்றாலும் நோக்கம் நல்லதாக இருந்தது. இறுதிவரை நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் மனம் கனத்துப் போகாமல் இருக்க முடியாது.

   வெறிகொண்ட முரட்டு வில்லனாக, அரிவாள்,துப்பாக்கி,கம்பு தூக்கி ஆக்ரோஷத்துடன் நடித்து சேர்த்த பணத்தை தோனி,அபியும் நானும், இப்போது கௌரவம் என்று உணர்வுகளை மையமாகக் கொண்டு சமூக சிந்தனையுடன் படங்களை தாயாரிக்கும் பிரகாஷ் ராஜுக்கு ஒரு சல்யூட் செய்யலாம். இந்நிகழ்ச்சி அவரின் இமேஜை  உயர்த்தவே செய்தது.

   கிராமங்களின்  அழகிய முகத்தையே  ரசித்துக் கொண்டிருந்த நாம் அதன் கோரமான சாதி முகத்தை, நிகழ்ச்சி மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியபோது நாம் இப்படிப்படிப்பட்ட சமூகச் சூழலில்தான் இன்னும் இருக்கிறோமே என்று வெட்கப் படவும் வைத்தது. வேதனைப் படவும் வைத்தது. இதில் பங்கேற்றவர்கள்  சொன்ன விஷயங்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்தது.

  இப்படியாவது  காதலிக்கத்தான் வேண்டுமா?என்ற எண்ணம் ஏற்படுவதை தடுக்க முடியவில்ல. பெண்கள் சாதிவெறி குறைவானவர்கள் என்று இதுவரை எண்ணி இருந்தேன்.  ஒரு பெண் தன் காதலுக்கு எதிராக அம்மாவும், சித்தியும் செய்த கொடுமைகளை சொன்னபோது என் எண்ணம் பொய்யாகிப் போனது 

    இதோ இந்த படத்தில் பார்க்கும் இந்த இளம் பெண்ணுக்குத்தான் எத்தனை சோதனைகள். காதலித்தவன் தலித் என்பதால் காதல் மறுக்கப்பட, பொருட்படுத்தாது  உறுதியோடு கைபிடித்தாள்.  அச்சுறுத்தல்கள் தொடர சென்னை வந்தனர் பிழைத்துக் கொள்ள. குழந்தை பிறந்த பின் செலவுகள் அதிகமாக, சமாளிக்க முடியாமல் மீண்டும் சொந்த ஊருக்கே போவது என்ற தவறான முடிவை எடுக்க, அங்கே காத்திருந்த  சாதி வெறியரால்  பறிக்கப் பட்டது  கணவனின் உயிர்.  அந்தப் பெண் கூலி வேலை கூட செய்ய  முடியாமல் ஒதுக்கி வைக்கப் பட்டதை விவரித்தபோது  அந்தப் பெண்ணின் வேதனைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அதற்கும் மேலாக  பிள்ளையின் உயிரையும் எடுத்து விடுவதாக மிரட்டிக் கொண்டிருக்கிறார்களாம். ஏனென்றால் அந்த சிறு பிள்ளை தலித்தின் வாரிசாம்! என்று அந்தப் பெண் சொன்னபோது அவர் முகத்தில் தெரிந்த  சமூகத்தின் மீதான கோபமும், இயலாமையும் நம்மையும் சேர்த்து உலுக்கியது. அல்லல் பட்டு ஆற்றாது அழுத அந்தப் பெண்ணின் கண்ணீர் இன்றே சுட்டுவிடக் கூடாதா அந்தக் கொடியவர்களை என்று தோன்றியது.

   இன்னொரு பெண்ணோ காதலித்து திருமணம் புரிந்த பின் தன்னை விட்டுச் சென்றபின் பிறந்த வீட்டிற்கும் செல்ல முடியாமல் குழந்தையுடன் தனியாகக் போராடிக் கொண்டு சமூக அங்கீகாரத்திற்காக  கணவனுக்காக நம்பிக்கையுடன் காத்திருப்பதை சொன்னது நெஞ்சை உருக்கியது.

   இதுதான் இப்படி என்றால் பார்வைத்திறன் மிகக் குறைவாக உள்ள பெண் தன்னைப் போலவே பார்வை அற்ற வேறு ஜாதிப் பையனை காதலிக்க  அதற்கும் பயங்கர எதிர்ப்பாம்.என்ன கொடுமை இது!  பெற்றோர்களால் அந்தப் பெண்ணுக்கு அதே ஜாதியில் நல்ல துணையை தேடிக் கொடுக்க முடியுமா? ஆனால் உறுதியோடு திருமணம் செய்து கொண்டவர்களை பிரிக்கவும் முயற்சி செய்துள்ளனர்,.பார்வையற்ற அந்தப் பெண்ணை ஏமாற்றி மீண்டும் மனம் மாற்ற முயற்சி செய்துள்ளனர். அனால் அது முடியவில்லை.பார்வை இழந்தவர்களுக்கும்  மாற்றுத் திறனாளிகளுக்கும் உபயோகமாக  இந்த சமுதாயம் ஒன்றும் செய்யாவிட்டாலும் அவர்களாக தேர்ந்துடுத்துகொண்ட வாழ்க்கைக்காவது உபத்திரவம் செய்யாமல் இருக்கக் கூடாதா. உண்மையில் இந்த சமுதாயம்தான் பார்வை இழந்து காட்சி அளிக்கிறது.

இவர்களை பார்வைத் திறன்  குறைந்த ஜோடிகளை   வைத்துத்தான் கௌரவம் படத்தின் பாடல்களை வெளியிட்டார் பிரகாஷ்ராஜ். நெகிழ்ச்சியாக இருந்தது.

   இயக்குனர்  ராதா மோகன் சொன்ன விஷயம் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு சில ஊர்களில் தாழ்த்தப் பட்டவர்கள் ஆண் நாய் வளர்க்கக் கூடாதாம். மேல் ஜாதியினர் மட்டும்தான் ஆண் நாய் வளர்க்கலாம். கீழ்  ஜாதியினரின் ஆண் நாய் மேல் ஜாதியனரின் பெண் நாயோடு சேர்ந்து விடக்கூடாது என்பதே இதற்கு காரணமாம்.அது இன்றும் நடைமுறையில் உள்ளது என்றபோது பார்த்த அத்தனை பேருமே அதிர்ந்துதான்  போயிருப்பர்.

  இயக்குனர் சேரன் பகிர்ந்த பல விஷயங்கள் அவர் மீது மேலும் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியது. சாதி மாறி காதலித்து திருமணம் புரிந்து கொண்ட ஒரு ஜோடியை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பள்ளிகளில் என்ன ஜாதி சொல்லி இருக்கிறீர்கள் என்று கேட்டார். கணவனின் ஜாதியை குறிப்பிட்டதாக சொன்னார். சாதியை மீறி மணம் செய்து கொண்ட நீங்கள் சாதியை குறிப்பிடாமல் இருந்திருக்கலாமே. என்றார். அதற்கு  அவர்கள் கட்டாயம் ஜாதியை குறிப்பிட வேண்டும் என்று பள்ளியில் சொன்னதாக தெரிவித்தார். 

   எனக்கு தெரிந்து பள்ளிகளில் சாதிகள் குறிப்பிடவேண்டிய கட்டாயம் இல்லை. குறிப்பிடாவிட்டால் Forward Community யாக கருதப் படுவார்கள் அவ்வளவே! அரசின் சலுகைகள் வேண்டும் என்பவர் சாதியை குறிப்பிட வேண்டும்.

   சேரன் தன் வாரிசுகளுக்கு பள்ளிகளில் சாதி குறிப்பிடாமல் சேர்த்திருப்பதாக தெரிவித்தது புதிய செய்தியாக இருந்தது. அவ்வாறே பிரகாஷ்ராஜும் செய்துள்ளார். கமல் ஏற்கனேவே இதை பின்பற்றி இருக்கிறார் என்பது நமக்கு தெரிந்ததுதான். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இனங்களில் பொருளாதார ரீதியாக முன்னேறியவர்கள் அதே இனத்தை சேர்ந்த  பிறருமஜாதி குறிப்பிடாமல் 

   எனக்குப் பிடித்த சேரனின் சில படங்களில் ஒன்று  பாண்டவர் பூமி. அந்தப்  படத்தில் வேற்று சாதி பையனுடன் ஓடிப் போகும்  தங்கையின் தலையை அண்ணன் வெட்டி வீசும் காட்சிக்கு கிடைத்த கைதட்டலையும் வரவேற்பையும் கண்டு இந்த அளவிற்கா சாதிவெறி இருக்கும் அதிர்ந்து போனாராம் சேரன். அந்தக் காட்சி வைத்தது தவறோ என்று வருத்தப் பட்டார். அவர்  முகத்தில் தெரிந்த வருத்தம் உண்மையானதுதான்  என்று தோன்றியது. 

  சினிமாத் துறையில் சாதி இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்று சேரனும், இருக்கிறது என்று பிரகாஷ்ராஜும் பதிலளித்தனர். பிராகாஷ்ராஜுக்கும் ஏதோ சொந்த அனுபவம் இது தொடர்பாக இருப்பதாக தோன்றியது.

   இன்னொருவர் சொன்னது இந்திய அரசியல் சட்டம் சாதியை மறுக்கவில்லை சாதிகளுக்குள் பாகுபாடு காட்டக் கூடாது என்றுதான் கூறுகிறது  என்றார். அவரே சொன்னது சாதிகள் கி,மு. விலேயே இருந்தாலும் தீண்டாமை கி.பி. 500 இல்தான் ஏற்பட்டது என்கிறார். அது சரியா  என்று ஆய்வாளர்கள்தான். சொல்ல வேண்டும் 

    வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி சாதிகள் எனக்குப் பிடிக்கும் என்றார். அவரது திருமணமும் காதல் திருமணம்தான்.  தன் காதலியின் சாதி பெற்றோர்கள் கேட்கும் வரை தெரிந்து  கொள்ளவில்லை என்று கூறியது நம்ப முடியவில்லை. ஒருவேளை தன் தாயும் தந்தையும்(வைரமுத்து-பொன்மணி வைரமுத்து) சாதி மாறி திருமணம் செய்து கொண்டிருந்தால் இத்தனை பாடல்கள் கிடைத்திருக்குமா என்ற கேள்வியை எழுப்பினார் மதன் கார்க்கி. அவர் சாதி மாற்றுத் திருமணத்தை ஆதரிக்கிறாரா இல்லையா என்பது தெளிவுபடவில்லை.

   உயர்ந்த சாதியினராக  கருதப்பட்ட  பிராம்மண சமுதாயத்திலும் சாதி மாற்றுத் காதல் திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தீண்டாமை போன்றவற்றில் நம்பிக்கை உடைய இவ்வினத்தில் கூட  கலப்பு திருமணத்தை ஆதரிப்பதில்லையே தவிர கௌரவக் கொலைகள் அளவுக்கு செல்வதில்லை. இன்னும் சொல்லப் போனால் சில காலங்களுக்குப் பிறகு ஒன்றாக சேர்ந்தும் விடுகின்றனர்.

   சினிமா கலைஞர்கள் சமூக அக்கறைகளை சினிமாவில் மட்டும்தான் காட்டுவார்கள்  என்ற பொதுவான கருத்து உண்டு. ஆனால் உண்மையாகவே  அத்தகைய சிந்தனைகள் கொண்டவர்கள் ஒருசிலர் இருக்கின்றனர்   என்ற தோற்றத்தை நீயா நானா ஏற்படுத்தியது.  அது உண்மையாகவே இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

   பல தன்னார்வ அமைப்புகளும் மகளிர் அமைப்புகளும் தீவிரமாக இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும். கல்வி அறிவும் பொருளாதார முன்னேற்றமுமே இத்தைகைய கொடுமைகளை குறைக்க வழி வகுக்கும் என்று நம்புகிறேன்.  அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை எடுக்கட்டும்.சமுதாய உறுப்பினர்களாகிய நாம் அதற்கு உறுதுணையாக இருப்போம்.

************************************************************************************



திங்கள், 1 ஏப்ரல், 2013

நுகர்வோரின் குறைகளை எங்கு முறையிடுவது.?

  

 நுகர்வோர் பற்றிய முந்தைய பதிவு 
  நுகர்வோர் உரிமைகள் கடமைகள் பற்றி எழுதப்பட்ட இவ்விரண்டு பதிவுகளுக்கு அளித்த ஆதரவிற்கு நன்றி. அதன் தொடர்ச்சியாக இன்று நுகர்வோர் குறைபாடுகளை தீர்க்கும் அமைப்புகளைப் பற்றி பார்க்கலாம் இவ்வமைப்புகள் மூன்று அடுக்குகளாக இயங்குகின்றன. 

   இந்திய அளவில் தேசிய நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றம்,(NATIONAL CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION-NCDRC)மாநில அளவில் தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறை தீர்க்கு மன்றம்(STATE CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION-SCDRC), மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம்(DISTRICT CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION-DCDRC) என்ற நிலையில் செயல்படுகின்றன. 

    இது தவிர CONSUMERS ASSOICIATION OF INDIA என்ற அமைப்பு 2001 முதல் சென்னையில் தன்னார்வ நுகர்வோர் அமைப்பாக செயல்பட்டு வருகிறது.பல கருத்தரங்குகள் பயிற்சிகள்,செயலரங்குகள் மூலம் நுகர்வோர் நலனை முன்னிலைப் படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

    கடந்த 12 ஆண்டுகளில் ஏராளமான நுகர்ர்வோர் சம்பத்தப் பட்ட வழக்குகளில் நுகர்வோருக்கு நியாயம் கிடைக்க வழி வகை செய்துள்ளது இவ்வமைப்பு. தினந்தோறும் 10 க்கும் மேற்பட்ட புகார்களை நேரிலும் தொலைபேசியிலும் பெற்று சுமுக அல்லது சட்டபூர்வ தீர்வுகளைப் பெற உதவி இருக்கிறது. 

  நுகர்வோர் என்றென்றும்  பயன்பெறும் வகையில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் உரிமைகள் ஆயுள் பாதுகாப்பு, குழந்தைகள் நலம் நுகர்வோர் வழிகாட்டி , போன்றவை தொடர்பாக ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் நூல்களை வெளியிட்டுள்ளது. நம் நாட்டில் மட்டுமின்றி பன்னாட்டு நுகர்வோரும் பயன் பெரும் வகையில் CONSUMERS INETRNATIONAL அமைப்பில் நிரந்தர உறுப்பினராகவும் தனது பணியை செவ்வனே செய்து வருகிறது.

தமிழ்  நாட்டில் செயல்பட்டு வரும் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்களின் முகவரிகள்

Tamil Nadu State Consumer Disputes Redressal Commission,
Slum Clearance Board Building, II Floor, (Southern Wing), No.212, R.K. Mutt Road, Mylapore,
CHENNAI – 600 004
E-mail : scdrc@tn.nic.in &
tn-sforum@nic.in
States/District Forum Tamil Nadu

Chennai South, DCDRF
No. 212, R.K. Mutt Road, III floor, Mylapore, Chennai –
600 004.
044-24938699

Chennai North, DCDRF
No. 212, R.K. Mutt Road, Ist floor, Mylapore, Chennai –
600 004.
044-24952458

Chengleput DCDRF
Sub-Collector Office Compound, G.S.T. Road, Melamaiyur Village, Chengalpattu
04114-27428832

Coimbatore DCDRF
Collectorate Campus, Coimbatore-641018
0422-2300152

Cuddalore DCDRF
102, Pudupalayam Main Road, Cuddalore-607002
04142-215926

Dindigul DCDRF
D.Nos. 95 & 96, Pensioners’ Street, Near Arya Bhawan, Dindigul-624001
0451-2433055

Erode DCDRF Erode Commercial Complex, Surampatty Naal Road, Erode - 638009.
0424-2250022

Karur, DCDRF Municipal Building, Azad Road, Karur 639 002.
04324-260193

Krishnagiri DCDRF
(clubbed with Salem DCDRF)
Taluk Office Campus, Salem – 636002
0427-2213279

Madurai, DCDRF District Court Campus
Madurai-625001
0452-2533304

Nagapattinam DCDRF
543, Public Office Road, Vellipalayam, Nagapattinam-611001
04365-247668

Nagercoil DCDRF 55, Old No.36/1, Ist floor, President Sivathanu Road, South of S.L.B. Hr.Sec. School, Nagercoil,
04652-229683

Namakkal DCDRF 3/152, Jeeva Complex, Triciiy Main road, Namakkal : 637001.
04286-224716

PERAMBALUR DCDRF
Lakshmi Illam, 345, Rover Nagar, Ist Floor, Ellambalur Road, Perambalur : 621212.
04328-276700

Pudukkottai DCDRF (Clubbed with Dindigul DCDRF)
D.Nos. 95 & 96, Pensioners’ Street, Near Arya Bhawan, Dindigul-624001
0451-2433055

Ramanathapuram DCDRF
Collectorate Complex (Meeting Hall) Ramanathapuram-623501

Salem DCDRF
Taluk Office, Campus Salem : 636002.
0427-2213279

Sivagangai DCDRF
10/25, Thirupathur Road
Sivagangai-630561
04575-241591

Srivilliputhur, DCDRF
Court Hall No. 5, Virudhnagar District Court Complex, Srivilliputhur - 626125
04563-260380

Thanjavur DCDRF
Elango Commercial Complex, Court Road, Needhi Nagar, Thanjavur – 613 002
04362-272507

The Nilgiris DCDRF
NCMS Complex, Udhagamandalam-643001
0423-2451500

Theni DCDRF
1st Floor, Combined Court Building, Lakshipuram, Periakulam Road, Theni-625523
04546-269801

Tiruchirapalli DCDRF
63A, St.Mary’s Complex, Ist floor, Bharathidasan Salai, Tiruchirapalli-62001
0431-2461481

Tirunelveli DCDRF
D.No. 4/993, 2nd Street, Shanthi Nagar, Bel Amrose Colony, Palayamkottai, Tirunelveli : 627002.
0462-2572134

Tiruvallur DCDRF
1-D, C.V. Naidu Salai, 1st Cross Street, Tiruvallur-602001
04116-264823

Tiruvannamalai DCDRF
(Clubbed with Vellore DCDRF)
District Court Campus, Sathuvachari, Vellore – 632009
0416-2254780

Tiruvarur DCDRF
52, Kumara Koil Street
Tiruvarur-610001
04366-224353

Tuticorin DCDRF
2/263, 10th St., Valli Illam, P&T Colony, Tuticorin-628008

Vellore DCDRF
District Court Campus, Sathuvachari, Vellore – 632009
0416-2254780

Villupuram DCDRF
(Clubbed with Chengleput DCDRF)
Sub-Collector Office Compound, G.S.T. Road, Melamaiyur Village, Chengalpattu
04114-27428832

 மேற்கண்ட முகவரிகளில் நாம் வாங்கிய பொருளின் குறைபாடுகளை அல்லது சேவைக குறைபாடுகள் பற்றி புகார் தெரிவிக்கலாம்.

இவ்விதப்  புகார்கள் எப்போது, எப்படி செய்யவேண்டும் என்பதையும்  இவ்வாறு அளிக்கப்பட புகார்களுக்கு இவ்வமைப்புகள் மூலம் பெற்றுள்ள சில தீர்வுகள் இவற்றை இன்னொரு பதிவில் பார்ப்போம்

(தொடரும்) 

**************************************************************************************
இவற்றைப் படித்து விட்டீர்களா?
1.நுகர்வு வெறி  
 2. உண்மையில் நீங்கள் சமூக அக்கறை உள்ளவரா?

தங்கள்  மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்  எதிர்நோக்குகிறேன்.