என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

கண்ணகிபோல் இருக்காதீர்!-வைரமுத்து

 வைரமுத்துவைப் பற்றி  நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. வைரமுத்து எழுதிய முதல் கவிதை நூலான "வைகறை மேகங்கள்" முழுவதும் மரபுக் கவிதைகளால் நிரம்பியது. அதில் கண்ணகியைப் பற்றி அவர் எழுதிய கவிதை கருத்தாலும் வார்த்தை சாலங்களாலும் என்னை கவர்ந்தது. மிக நீளமான அந்தக் கவிதையை சுவை கருதி  பாதியாக்கி  சுருக்கித் தந்திருக்கிறேன். (வைரமுத்து மன்னிப்பாராக) உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

 கருப்பு நிலா
 
             கண்ணகியே! தாயே! கருப்பான இரும்பிடையே 
             பொன்னகையே பூவே! புரட்சித் துறவியவன் 
             தீட்டி வைத்த காவியமே! திருமகளே! தேனுக்குள் 
             போட்டுவைத்த பழம்போல் பூந்தமிழர்க் கினிப்பவளே!
             உச்சி குளிர்ந்துவிட உன்னைப் புகழ்ந்துவிட்டேன்.
             நிச்சயமாய் இனிஎன் நினைப்பை சொல்லுகின்றேன்.
             அந்திப்பூ விரிவதுபோல் அறிவை விரித்து வைத்து 
             சிந்தித்தேன் ஆமாம்! சிரிப்புத்தான் வந்ததம்மா!
             உள்ளபடி உன்வாழ்க்கை  உலகுக் குதவாத
             செல்லுபடி ஆகாத சிறுகாசு தானென்பேன்!

             தொட்டு மாலையிட்டோன் தோகையரை கூடியபின் 
             விட்டுப் பிரிந்து வேறு திசை போனாலும் 
             கண்ணீரை தினம்சிந்தி கண்மூடி வாழ்வதுதான் 
             பெண்டிர்க்கு கற்பென்று பேசினால் அக்கற்பே 
             இந்த உலகத்தில் இல்லா தொழியட்டும்
             சந்தையிலே விலைபோகா சரக்காகிப் போகட்டும்.
             கட்டில் சுகம் காண காளையவன் செலும்போதே 
             தட்டிக் கேட்டிருந்தால் தவறி இருப்பானா?
             பெட்டிப் பாம்பாக பேசா திருந்ததுதான் 
             கட்டழகே நீ செய்த கடுங்குற்றம்!முதற்குற்றம்!

             உப்புக் கடல் நோக்கி ஓராறு செல்லுவதும் 
             இப்புவியில் வியப்பில்லை எழில்மகளே! உன்கணவன்
             தப்பான கடல் நோக்கி தாவி செல்லும்போதே 
             அப்பப்பா ஈதென்ன அநியாயம் எனச்  சொல்லி 
             அணையொன்றைக் கட்டி அந்த ஆண்மகனைத் தடுத்திருந்தால்
             திணைவனத்துக் கிளிபோல திருமகளே வாழ்ந்திருப்பாய்
             அறம்பாடி மதுரை அரசன் புகழ்சாடி 
             திறம்பாடும் பூநகரை தீயால் எரித்தாயே!
             அத்திறத்தை சோனாட்டில் அணுவளவு காட்டி நின்றால் 
             சத்தியமாய் வாழ்வில் தளிர்த்து  செழித்திருப்பாய்
             மன்னவனும் மாண்டதனால் மதுரை எரிந்தததனால் 
             உன் கணவன் நிலையாக உன்னிடத்தில் மீண்டானா?
             கயவன் இழிந்த மகன் கண்மூடிப் போனவுடன் 
             மயங்கி விழுந்தாயே மடமகளே! வாழ்நாளில் 
             பொய்யாகிப் போனமகன் புழுதியிலே செத்ததனால் 
             ஐயோ! ஆ! என்றலறி அழுது துடித்தாயே 
             காவியத்தில் உனைக்கண்டு கண்ணீரா நான் வடித்தேன்?
             ஆவி சிலிர்த்தேனா? அல்ல சிரித்துவிட்டேன்.

             மோகக்  கதையதனை முடித்துவிட்டே உன்கணவன்
             வேகமாய் உன்னை நாடி வீடு தேடி வந்தவுடன் 
             "சிந்தை நிலாக் காவலரே!சிலம்பிதனை நாடித்தான் 
             வந்தீரோ?என்றுனது வாய் நிறைய தேன்வழிய 
             சொன்னாயே பாவி! சுவையொழுக சிலம்புதனை
             அன்னவனின் கைமீது அளிக்கத் துணிந்தாயே
             பத்தினியாய் நீயிருந்தும் பயனில்லை! உண்மையிலே 
             பித்தம் பிடித்தவள் நீ பேதை பெரும்பேதை 
             அநியாயக்  காரனுக்கே ஆரத்தி எடுத்தவள் நீ
             கனிஎன்றே எண்ணிக் கருங்கல்லைக் கடித்தவள் நீ 

             பல்லுடைந்து  போனதற்கும் பதறித் தவிப்பதற்கும்
             எள்ளுருண்டை காரணமா? ஏந்திழையே! உன்கணவன் 
             பதமான சுகம் கண்டு பாவிமகள் உனைப்பற்றி 
             முதலிரவில் சொன்னதெல்லாம் மோகமொழி தானென்றே 
             அறியாமல் போனாயே அதுவுந்திரன் பிழையன்றோ?
             பிரிக்காத ஏடுன்னை பிரித்தெங்கோ  போனானே!
             விட்டுப் பிரியாத வேலையினை செய்வதற்கு 
             சுட்டு  விழியாலே சொக்கவைத்து தக்கவைக்க 
             தவறவிட்ட உன்னையந்த தாய்க் குலமா பாராட்டும்?
             கவலைக் காவியம் நீ கண்ணீரால்தான் முடிந்தாய்!

             தாய்க்குலமே! தாய்க்குலமே !தங்க மகன் சொல்லுகின்றேன்.
             வாய்சாலக்  காரனென்று வார்த்தையினைத் தள்ளாதீர்!
             கற்பொன்றில் மட்டும் கண்ணகியைப் போலிருங்கள்!
             மற்றவற்றில் அந்த மடமைகளை மறந்திருங்கள்!
             இப்போதும் அவளைபோல் ஏமாந்து நின்றிருந்தால் 
             முப்போதும் கண்ணீரில் மோன நிலை கொண்டிருந்தால் 
             கடலுள் விழுந்த கடுகாகிப் போவீர்கள்!
             இடருள் சிக்குண்டு எருக்கம்பூ ஆவீர்கள் 
             கருவுடைந்த முட்டைஎன கருகித் தவிப்பீர்கள் 
             வருத்தத்தில் தானுங்கள் வாழ்நாளைக் கழிப்பீர்கள் 

             சீறுகின்ற பெரியீர்! சிந்தையிலே அறப்பாட்டுக் 
             கூறுகின்ற பூமகளை கொஞ்சுதமிழ் அஞ்சுகத்தை 
             நிந்தித்து எழுதவில்லை! நினைவெல்லாம் ஒரு நிலையாய் 
             சிந்தித்தே எழுதியுள்ளேன்! சிந்திக்க வேண்டுகின்றேன்!.


*************************************************************************************
கொசுறு: இந்நூல் வைரமுத்துவின் 17 வயதிற்குள் எழுதப் பட்டு 19 வயதில் வெளியிடப்படதாம்.

இதைப்  படித்து விட்டீர்களா?

நுகர்வோரின் குறைகளை எங்கு முறையிடுவது?
நிலா அது வானத்து மேலே





35 கருத்துகள்:

  1. Nice work by Vairamuthu..Thanks Mr.Murali for the rework...pls keep it up.
    Ramesh.S

    பதிலளிநீக்கு
  2. வைகறை மேகங்கள் படித்திருக்கிறேன்.. மீண்டும் ரசித்து படித்தேன். வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் தொடர் மிக அருமை.. அதன் கதா பாத்திரங்கள் கருத்தமாயி,சின்னப்பாண்டி, எமிலி அப்படியே மனதிற்குள் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். மூன்றாம் உலகபோர் விமர்சனத்திற்கு கூட அதிலுள்ள வரிகளை தகுந்த அனுமதியில்லாமல் பயன்படுத்த கூடாது என்ற எச்சரிக்கையால் அதை பற்றி பகிர முடியவில்லை. நேரம் கிடைத்தால் மூன்றாம் உலகப்போரை முடித்து விடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் அனுப்பிய மூன்றாம் உலகப் போரை படித்து வருகிறேன்.விரைவில் விமர்சனம் எழுதலாம் என்று இருக்கிறேன்.

      நீக்கு
  3. கவிப் பேரரசின் அருமையான கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. பாதியே இவ்வளவு நீளமா?

    அப்பாவின் மறைவை ஒட்டி அவர் சமீபத்தில் எழுதியிருந்த கட்டுரையில் தான் தந்தையைப் பற்றி ஒப்பாரிப் பாடல் போல ஒன்றும் எழுதியதில்லை என்பது உரைத்ததாக எழுதியிருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இதற்கு மேல் குறைத்தால் கவிதையின் சாரம் குறைந்துவிடும் என்று நினைத்தேன். இன்னும் இதே அளவுக்கு உள்ளது.

      நீக்கு
  5. //கற்பொன்றில் மட்டும் கண்ணகியைப் போலிருங்கள்!
    மற்றவற்றில் அந்த மடமைகளை மறந்திடுங்கள்//

    இந்த உயிர்நாடி வரிகளைத் தாங்கிய கவிப்பேரரசுவின் கவிதையைச் சுருக்கித் தந்தது இக்காலப் பெண்களுக்குப் பயன் தருவதாய் அமையும்.

    பாராட்டுகள் முரளி.

    பதிலளிநீக்கு
  6. இப்பொழுதுதான் முதல் முறையாக படிக்கிறேன் . ஒரு முற்போக்கான கருத்தை எவ்வளவு அழகாக கவியாக்கி இருக்கிறார் . நன்றி

    // கருப்பான இரும்பிடையே // அப்டினா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருப்பான ஆனால் உறுதியான இடையை உடையவளே என்றதால் கொள்ளவேண்டும்.
      அல்லது கருப்பு நிறமுள்ள இரும்புகளுக்கு இடையே உள்ள பொன்னகை போன்றவளே என்றும் வைத்துக் கொள்ளலாம்.

      நீக்கு
  7. வைர வரிகளை பதிவாகிப் தந்தமைக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  8. காலத்தோடு கருத்தும் மாறுவது இயல்பே! கண்ணகி காலத்துக் கரு அப்படி!

    பதிலளிநீக்கு
  9. வைரமுத்து அவர்கள எழுதிய இந்த கவிதையை இப்போது தான் படிக்கிறேன்.
    கவிதை பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. மரபுக் கவிதையின் அடித்தளம் வலிமையாக இருந்ததால் தான் அவரால் புதுக் கவிதையிலும் திரைக்கவிதையிலும் வெற்றி பெற முடிந்தது என்று தெளிவாகிறது.

    பதிலளிநீக்கு
  11. கவிதையை ரசித்து படித்தேன்

    பதிலளிநீக்கு
  12. காலத்திற்கேற்று படைக்கப்பட்டது சிலப்பதிகாரம்.
    மட்டுமின்றி அனைத்துச் சங்கத் தமிழ் நுர்ல்களிலும்
    இக்காலத்திற்குப் பொருந்தாத கருத்தக்கள் தான் உள்ளன.

    அக்காலத்தின் தமிழரின் மரபை
    அழுத்திச் சொல்லியவர் இளங்கோவடிகள்.

    இக்காலத்தில் உள்ளோர், முன்னாளில் தமிழர் வாழ்ந்த
    வாழ்வு முறைகளை அறியும் பொக்கிஷமாகத் தான்
    சங்க இலக்கிய நுர்ல்களைக் கொள்ள வேண்டும்.
    அதில் உள்ள தமிழ்ச்சுவையை அறிய வேண்டும்.

    பொதுவாகவே மக்கள் எப்படியெல்லாம்
    வாழக்கூடாது என்பதற்கு மகாபாரதமும்,
    எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்பதற்கு
    இராமயணமும் படிக்க வேண்டும் என்பார்கள்.
    ஆனால் அதிலும் சில பாத்திரக் கருத்துக்களை
    ஏற்றுக் கொள்ள முடியாது.

    கவிப்பேரரசு சொன்ன கருத்தும் இதுதான்.

    கற்பொன்றில் மட்டும் கண்ணகியைப் போலிருங்கள்!
    மற்றவற்றில் அந்த மடமைகளை மறந்திருங்கள்! என்பது.

    சிலர் பழைமையை விட்டுக்கொடுக்காமல்
    கெட்டியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருப்பது
    மட்டுமல்லாமல் இலக்கியத்தைச் சுட்டிக் காட்டிப் பேசுவார்கள்.
    அப்படிப் பட்டவர்களுக்காக அழகாக எழுதி இருக்கிறார்.

    அவரின் கொள்கைப் பிடிப்புள்ள கவிதையைப் பகிர்ந்தமைக்கு
    மிக்க நன்றி மூங்கில் காற்று.

    பதிலளிநீக்கு
  13. வைரமுத்துவிடம் பாராட்ட நிறைய விசயங்கள் உள்ளது.

    பதிலளிநீக்கு
  14. மிக நல்ல பகிர்வை பகிர்ந்தீர்கள் நன்றி நன்றி நன்றி
    வைரமுத்துவின் கவிதைகள் எப்போதும் நம் சிந்தனையை ஆக்ரமிப்பவை அதிலும் இந்த கவிதையில் அவர் எடுத்துகொண்ட கருத்தும் சொல்லாடலும் அற்புதம் எனது வெகுநாள் கோபத்தை கூறிய கவிதையாய் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  15. இப்போதும் அவளைபோல் ஏமாந்து நின்றிருந்தால்
    முப்போதும் கண்ணீரில் மோன நிலை கொண்டிருந்தால்
    கடலுள் விழுந்த கடுகாகிப் போவீர்கள்!


    கவிதை பகிர்வுக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  16. கவியரசரின் தனது வைர வரிகளால், கண்ணகிக்கு பாரதியின் புதுமைப் பெண் தெரிகிறார். அய்யா கண்ணகி பற்றி ஒரு தகவல். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் , கரந்தைப் புலவர் கல்லூரியிலே பணியாற்றிய பேராசிரியர் சி.கோவிந்தராசனார் என்பவர், ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு, பூம்புகாரில்இருந்து, கண்ணகி சென்ற பாதையின் வழியாகவே பயணம் செய்து, ஆய்வை மேற்கொண்டு, மதுரை வரை சென்று, பின் சேரன் செங்குட்டுவன் , கண்ணகிக்கு எழுப்பிய கோவிலைக் கண்டு பிடித்து. உலகிற்கு தெரியப் படுத்தினார்.
    இப் பணிக்காக, சில மாதங்களுக்கு முன்னர் குடியரசுத் தலைவரின் விருதினையும் பெற்றுள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவரை அறியாத புது தகவல். இவ்வரிய பணியை செய்த அன்னாருக்கு வாழ்த்துக்கள்

      நீக்கு
  17. கண்ணகி என்பவள் இளங்கோவடிகளால் எழுதப்பட்ட ஒரு காப்பிய நாயகி என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.அக்காப்பியத்தில் உள்ள பாத்திரங்க்கள் கற்பனையானவைதான் ஆனால் அதில் சொல்லப்பட்ட காலமும் புவியியல் சார்ந்த தகவல்களூம் உண்மை ஆகையால்மட்டுமே கண்ணகி நிஜத்தில் வாழ்ந்தவர் போல் கொள்வது ஏற்புடையது அல்ல. அப்படியாகின்

    "பேராசிரியர் சி.கோவிந்தராசனார் என்பவர், ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு, பூம்புகாரில்இருந்து, கண்ணகி சென்ற பாதையின் வழியாகவே பயணம் செய்து, ஆய்வை மேற்கொண்டு, மதுரை வரை சென்று, பின் சேரன் செங்குட்டுவன் , கண்ணகிக்கு எழுப்பிய கோவிலைக் கண்டு பிடித்து. உலகிற்கு தெரியப் படுத்தினார்." என்பது கண்ணகி உண்மையில் வாழ்ந்தார் என்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறதே இது சரியா?

    பாலகுமாரனின் இரண்டாவது சூரியன் படித்ததும் அதில் வரும் கதாபாத்திரங்களை சென்னை வாரன் சாலையில் தேடி அலைந்திருக்கிறோம் (காரணம் அவர் விவரித்திருக்கும் இடங்களின் உண்மைத்தன்மை அத்தகையது) ஆனால் அது அபத்தம் என்பது பின்னாளில் உணர்ந்துகோண்டோம். அவ்வாரே கண்ணாகியும் ஒரு கற்பனை பாத்திரம்தான் அதை உணரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  18. கண்ணகியைப் புகழ்ந்தொரைக் கேள்வி பட்டுள்ளேன்... கண்ணகியையே கேள்வி கேட்டு விட்டாரே... அதிலும் கேட்ட அத்தனை கேள்விகளும் நியாயமானது.. பால்ய பருவத்திலே இப்படி ஒரு கவி எழுதி இருப்பது வியப்பு

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895