என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 23 ஜூன், 2022

பிரியா கல்யாணராமன்


 


      நேற்று மாலை முகநூலுக்குள் நுழைந்த எனக்கு  எழுத்தாளர் இந்துமதி அவர்களின்  பதிவு கண்டு அதிர்ச்சி அடைந்தேன். குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாண ராமன் மறைந்து விட்டார் என்ற செய்தியை  உருக்கமாகப் பகிர்ந்து இருந்தார். உண்மையில் நம்ப முடியவில்லை. தொடர்ந்து பிரபலங்கள் அஞ்சலிப் பதிவுகள் எழுத ஆர்மபித்துள்ளனர். பிரபல எழுத்தாளர்களுக்கு அவருடனான தொடர்பு இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் என்னைப் போன்ற அறிமுகமில்லாத ஆட்களின் அன்பைப் பெற்று எளிதானவராகத்தான் இருந்தார்.
 எழுத்தார்வம் கொண்டவர்களுக்கு பத்திரிகைகளில் எழுத வாய்ப்பு கிடைக்காத நிலையில் வலைப்பூக்கள் வரப்பிரசாதமாக அமைந்தது, கதை கவிதை என அனைத்துக்கும் களம் அமைத்துக்கொடுத்து ஒரு  வட்டத்தை உருவாக்கிக் கொடுத்தது.  மனம் போன போக்கில் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் தொலைபேசி அழைப்பிசை ஒலிக்க  ஏதோ அலுவலக அழைப்பாக இருக்கும் என்று நினைக்க நான் பிரியா கல்யாணராமன் பேசுகிறேன். என்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 

    நான்  வலைப்பூவில்  அப்போதுதான் சற்று வித்தியாசமாக(?)  ”என்ன செய்யப் போகிறாய்” என்று ஒரு சிறுகதை எழுதி இருந்தேன். அதைப் படித்துவிட்டுத்தான் எனக்கு கால் செய்திருந்தார்.  அந்தக் சிறுகதையை வலைப்பூவில் இருந்தி நீக்கி விட்டு குமுதத்திற்கு அனுப்புமாறு கூறினார். நானும்  சரி என்றேன்.

 அனுப்பி 3 வாரத்தில் எனது புகைப்படத்துடன் சிறுகதை  பிரசுரித்தார்..750 ரூபாய் சன்மானமும் எனது வங்கிக் கணக்குக்கு வந்து சேர்ந்தது
      . மேலும் என் வலைப்பக்கத்தை எப்போதாவது படிப்பது உண்டு என்று கூறி மேலும்  ஆச்சர்யத்தை கொடுத்தார். நான் அவ்வப்போது  வடிவேலுவை பாத்திரமாக வைத்து புதிர்களை இணைத்து நகைச்சுவைக் கதைகளை எழுதி வந்தேன். அதனை அவரும் அப்போது குமுதத்தில் பணியாற்றிய கோசல்ராமும் ரசித்துப் படித்துவருவதாகக் கூறினார். சினிமாவுக்கு முயற்சி செய்கிறீர்களா என்றும் கேட்டார்.  அப்போதைய பிரபலம் சந்தானத்தை பாத்திரமாக  வைத்து எழுதுங்கள். 4 அத்தியாயங்கள் எழுதி அனுப்புங்கள் ஒரு எண்ணைக் கொடுத்து டிஸ்கஸ் செய்யுங்கள் என்றார். பின்னர் ஏதோ காரணங்களால் அது தடைபட்டுவிட்டது. 
  அதன் பின்னர் சில ஒரு பக்கக்கதைகளை குமுதத்தில் வெளியிட்டார். முதலில் அவரது தனி மின்னஞ்சலுக்குத்தான் கதைகளை அனுப்பி வந்தேன். ஆனாலும் அதனை தொந்தரவாகக் கருதாமல் பிரசுரித்தார். அதன் பின்னர் நானே குமுதம் மின்னஞ்சலுக்கு அனுப்ப ஆரம்பித்தேன். .
  நான் டிபிஐ வளாகத்தில் பணியாற்றிய போது தனது மகளுக்கு +2 பாடப்புத்தகங்கள்  சில வாங்கித்தருமாறு கூறினார். நானும் வாங்கி வைத்திருந்தேன். டிபிஐ வந்தவர் நான் பார்க்கும் முன்பே கதைக்கு அனுப்பிய ஃபோட்டோவை நினைவில் வைத்து என்னைக் கண்டுபிடித்து விட்டார்.. புத்தகங்கள் பெற்றுக் கொண்டு அதற்குரிய பணத்தைக் கொடுத்தார். நான் எவ்வளவோ மறுத்தும் பணத்தை திணித்துவிட்டுத்தான் போனார்.  
     என்னைப் போல எத்தனையோ வாசகர்களை எழுத்தாளர்களாக ஆக்கிய பெருமை அவருக்கு உண்டு. யாராக இருந்தாலும் திறமையை அடையாளம் கண்டு வாய்ப்பளித்தவர் அவர்.
       பல்வேறு கதைகளை எழுதி இருந்தாலும் ஆன்மீகம் அவரை உள்ளிழுத்துக் கொண்டது. அதனையும் அவர் சுவாரசியத்தோடும் வித்தியாசமாகவும் எழுதி வந்தார்.  
       எழுத்தாளர்கள்,பத்திரிகையாளர்கள், மட்டுமல்லாது வாசகர்களின்  அன்பைப் பெற்ற பிரியா கல்யாணராமன் மறைந்தது பேரிழப்பாகும். வார இதழ்கள் செல்வாக்கிழந்த நிலையில் குமுதத்தின் சர்குலேஷன் மட்டும் குறையாமல் இருப்பதற்குக் காரணம் இவரது கடின உழைப்பே.
    என்னைப் போன்ற எளிய வாசகர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  அவரது ஆன்மா சாந்தியடையட்டும். 
அவரது குடும்பத்தார்க்கு இதனை தாங்கிக் கொள்ளும் வல்லமையை இறைவன் அருளட்டும்

செவ்வாய், 10 மே, 2022

குமுதத்தில் கதை-வாத்தியாரை அடித்தவன்

  


வாத்தியாரை அடித்தவன்

(ஒரு பக்கக் கதை)

                                                                ……டி.என்.முரளிதரன்….

              பள்ளியின்  எச்.எம் ரூமில்   ஆசிரியர்கள் அனைவரும் குழுமி இருந்தனர். அதில் ஒருவர் தலைமை ஆசிரியரிடம்சார்நம்ம முத்துசாமி சாரை, அந்தப் பையன் அடிக்க வந்திருக்கான். இன்னிக்கு வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டுவிட்டர்னு இந்த வீடியோதான் வைரலா போயிக்கிட்டிருக்கு.. அவனை சஸ்பெண்ட் பண்ணனும் சார். ரெகார்ட் நோட் ஏன் எழுதலன்னு கேட்ட து தப்பாரிசல்ட் குறைஞ்சா மட்டும் நம்மளைக் கேள்வி மேல கேள்வி கேக்கறாங்க இல்ல. எவனோ ஒரு வாத்தியார் தப்பு செஞ்சா எல்லாருமே அப்படித்தான்னு பரப்பறாங்க இல்ல. இப்படியே விட்டா  சொல்லிக்கொடுக்கற  டீச்சருக்கு என்ன பாதுகாப்பு?” என்று கோபாவேசமாகப் பேச மற்றவர்களும் அதனை ஆமோதித்தனர்.

    அப்போது  முத்துசாமி சாரும் உள்ளே வர,

    “நீங்க சொல்றதும் சரிதான். முத்துசாமி சார்! நீங்க ஒரு புகார் எழுதிக் கொடுங்க, சி.. கிட்ட சொல்லி நடவடிக்கை எடுக்கலாம். சிவியர் பனிஷ்மெண்ட் கொடுத்தாத்தான் ரவுடிப் பசங்க திருந்துவாங்கஎன்றார் எச்.எம்.
       “
வேணாம்  சார்! என்றார் முத்துசாமி

    ”ஏன்? சாதிப் பிரச்சனையாகிடும்னு பயப்படறீங்களா?”

    “இல்ல சார். நான் சின்ன வயசுல  வீட்டுப்பாடம் எழுதலன்னு வாத்தியார் என்ன நல்லா திட்டிட்டார். அதனால நான் அவர் மேல கல்லெடுத்து அடிச்சுட்டு ஓடிட்டேன். இருந்தாலும் அவர் என்னை மன்னிச்சி ஸ்கூல்ல சேத்துக்கிட்டார்.. ஒரளவுக்கு படிச்சு இன்னைக்கு  நல்ல நிலைமையில இருக்கேன். அவர் மன்னிக்கலன்னா ஸ்கூல விட்டு நின்னுருப்பேன். அந்த நிலை அந்தப் பையனுக்கு வராம இருக்கணும்னு  விரும்பறேன். இதோட விட்டுடலாம் சார்.”

என்ற முத்துசாமி சாரை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

செவ்வாய், 3 மே, 2022

இஸ்லாமியப் பண்டிகைகள் ஏன் குறிப்பிட்ட நாளில் வருவதில்லை?

 இஸ்லாமிய நண்பர்களுக்கு இனிய ரமலான் வாழ்த்துகள்.

இஸ்லாமியப் பண்டிகைகள் ஓவ்வொரு வருடமும் குறிப்பிட்ட தேதிகளில் வருவதில்லை என்பதை கவனித்திருப்பீர்கள் . கடந்த வருடம் May 13 அன்று ரமலான் கொண்டாடப் பட்டது. இவ்வாண்டு மே 3.அன்று ரமலான். 1996 இல் ஜனவரியில் கூட ரம்லான் வந்திருக்கிறது. காரணம் வேறொன்றுமில்லை நிலவின் சுழற்சி அடிப்படையில் ஆண்டு கணக்கிடப் படுவதுதான். பூமி சூரியனை சுற்றும் உண்மையை முதலில் மனிதன் அறிந்திருக்கவில்லை. ஆனால் நிலவு பூமியை சுற்றி வருவது அதற்கு முன்னர் அறியப்பட்ட உண்மை. அதன் அடிப்படையில் இஸ்லாமிய காலண்டர் கணக்கிடப்படுகிறது. நிலவு பூமியை ஒரு முறை (360 டிகிரி) சுற்ற 27.3 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. ஆனால் பூமியின் நகர்வு காரணமாக மீண்டும் அதே தோற்ற நிலையினை அடைய 29.5(Side real period) நாட்கள் ஆகின்றன. அதனால்தான் பவுர்ணமியோ அமாவாசையோ ஒவ்வொரு 29.5(Synodic Period) நாட்களுக்கு ஒருமுறை வருகிறது. இது லூனார் மந்த் என்று அழைக்கப் படுகிறது. ஆங்கிலக் காலண்டரை விட ஏறக்குறைய 11 நாட்கள் குறைவு. ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்வதால். .எனவே ஒவ்வொரு வருடமும் இஸ்லாமியப் பண்டிகைகள் முந்தைய வருடத்தைவிட 10 அல்லது 11 நாட்கள் முன்னதாக வருவதைக் காணலாம்.
மனிதர்கள் நிலவின் சுழற்சியை தங்களுடன் பிணைத்துக் கொண்டனர். ஆயிரம் பிறை கண்டவர்கள் என்று வாழ்த்துவது உண்டு. 80வயது நிறைந்தவர்கள் மட்டுமே ஆயிரம் பிறையைக் கண்டிருக்க முடியும். பிறை என்பது மூன்றாம் பிறையைத்தான் குறிக்கும். பொதுவாக அமாவாசை(New Moon) தான் முதற்பிறை , அடுத்த நாள் இரண்டாம் பிறை இதுவும் கண்ணில் படாது. மூன்றாவது நாள்தான் பிறை தென்படும். 29.5 நாள் சுழற்சியால் சில நாட்களில் பிறை தென்படாது. அதாவது இருட்டுவதற்கு முன்பே மேற்கில் மறைந்துவிடும், அதனால்தான் பிறை உறுதியாக தென்படக் கூடிய நாளுக்கு அடுத்த நாள் ரமலான் கொண்டாடப் படுகிறது
அமாவாசைக்கு முந்தைய நாட்களை வளர்பிறை என்றும் அமாவாசைக்கு அடுத்து வரும் நாட்களை தேய்பிறை என்பதும் நமக்குத் தெரிந்ததே பொதுவாக நல்ல காரியங்களுக்கான நாள் குறிப்பவர்கள் வளர்பிறையை தேர்ந்தெடுப்பார்கள். மூன்றாம் பிறையைப் பார்ப்பது சந்திர தரிசனம் என்று அழைக்கப் படுகிறது. இது அரை மணி நேரம்தான் கண்ணில் படும். மூன்றாம் பிறையைப்பார்த்தால் ஞாபக சக்தி கிடைக்கும் என்று சொல்வார்கள். உண்மையில் நினைவாற்றல் இருந்தால்தான் மூன்றாம் பிறையை தவறவிடாமல் பார்க்க முடியும்
மூன்றாம் பிறையைப் பார்ப்பதற்கு அமாவாசைக்கு அடுத்த நாளுக்கு அடுத்த நாளை நினைவில் வைத்திருந்து பார்க்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தை தவறவிட்டால் பார்க்க முடியாது. நான்காம் பிறை எந்த முயற்சியும் இன்றி சட்டென்று கண்ணுக்குத் தெரியும் . அப்போதுதான் நேற்று பார்க்க மறந்துவிட்டோம் என்பது ஞாபகம் வரும்.
அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் சம்பந்தம் உண்டா என்று கேட்கக் கூடாது .பிறையோடு தொடர்பு உடையதால் நிச்சயம் அமாவசைக்கும் அப்துல் காதருக்கும் சம்பந்தம் உண்டு

மீண்டும் இனிய ரமலான் வாழ்த்துகள்

-----டி.என்.முரளிதரன்