என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 30 ஜனவரி, 2014

அகிம்சை அண்ணல் சுடப்பட்டபோது

  காந்தியின்மீது தீவிர பற்றுக் கொண்டவர் வெங்கடாசலபதி.மதுரை டி.கல்லுப் பட்டியில் காந்திநிகேதன் என்ற ஆசிரமத்தை நிறுவி சேவை செய்து வந்தார் .இன்றும் காந்தியின் அறிவுரைப் படி கிராம வளர்ச்சிக்காக பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்து வந்தது காந்தி நிகேதன்.

   இந்த ஊருக்கு காந்தி ஒருமுறை வந்திருந்தார். அவரை காந்தி நிகேதனுக்கு அழைத்து சென்றனர். ஆசிரமத்தில் அனைத்து இனத்தை சேர்ந்த சிறுவர்களும் ஒன்றாக தங்கி இருந்ததைக் கண்ட காந்தி பெரிதும் மகிழ்ந்தார் . அப்போது ஆசிரம நிர்வாகிகள் காந்திஜிக்கு ஒரு கிண்ணத்தில்  கொஞ்சம் தேன் கொடுத்தனர். அது மாணவர்களால் தயாரிக்கப்பட்ட தேன் என்றும் கூறினர். மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்ட அண்ணல் அதை  கொஞ்சம் ஸ்பூனில் எடுத்து அருந்துவதற்காக வாய்க்கருகே கொண்டு சென்றார். ஏதோ நினைவு வந்தவராக நிர்வாகிகளிடம் ,"இந்த தேனை எப்போதாவது இந்த சிறுவர்கள் சுவைத்திருக்கிறார்களா" என்று கேட்டார் நிர்வாகிகள் ஒருவரை பார்த்துக்கொண்டு மௌனம் சாதித்தனர். அந்த சிறுவர்கள்  தேனை பருகியதே இல்லை என்பதை புரிந்து கொண்டார். உடனே தேன்கிண்ணத்தையும் ஸ்பூனை யும் கீழே வைத்துவிட்டு எழுந்தார்.
நிர்வாகிகளிடம்" ஒரு பொருளை உற்பத்தி செய்தவனுக்கு அப்பொருளின் மீது இல்லாத உரிமை அடுத்தவனுக்கு கிடையாது " என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றார் அண்ணல். காந்தியின் நினைவு நாளான இன்று  எங்கோ படித்த இந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது.
    இந்த  நாளில்தானே அகிம்சை அண்ணல் மதவெறிக்கு பலியானார்.  30.01.1948 மாலை ஐந்து மணி கடந்துவிட்டது பிரார்த்தனை செய்ய இந்துக்கள் முஸ்லீம்கள்,சீக்கியர்கள் என்று சர்வ மதத்தினரும் காத்திருந்தனர். பாபுஜி இன்னும் வரவில்லை. ஏன் இன்னும் காந்தி வரவில்லை. அண்ணல் நேரந் தவறாமையை கடைபிடிப்பவர் ஆயிற்றே. உள்ளே ஏதேனும் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறதோ என்று மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். படேலுடன் பேசிக் கொண்டிருந்த காந்தி நேரமாகி விட்டதை உணர்ந்து அவசரமாக பிரார்த்தனைக்காக எழுந்தார்.
   காலந்தவறாமையை கடைபிடிக்காதவர்களுக்கு கடுந்தண்டனை உண்டு என்று சிரித்துக்கொண்டே காந்தி சொன்னதைக் கேட்ட அருகில்  இருந்தவர்கள் ஒரு கணம் திகைத்தனர். மகாத்மா பிரார்த்தனை மேடை நோக்கி நடந்தார். அவரை தாங்கிப் பிடித்துக்கொண்டு ஆபா, மனு இருவரும் உடன் வந்தனர்.
     பிரார்த்தனைக்  கூடத்துக்கு முன்பாக காந்தி மக்களை கரம் கூப்பி வணங்க மக்களும் அமைதியாக அண்ணலை வணங்கினர். அப்போது அனைவரையும் விலக்கிக் கொண்டு அண்ணலின் எதிரே வந்தான் கொடுமனம் கொண்ட  கோட்சே. காந்தியை  நோக்கி கைகூப்பி வணங்கினான். மகாத்மாவும் நிகழப்  போகும் ஆபத்தை அறியாமல் அவருக்கே உரிய புன்னகையுடன் பதிலுக்கு வணங்க, காலில்விழுவது போல விழுந்து எழுந்த கோட்சே மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவர் முன் நீட்டி அந்த அநியாயத்தை செய்தான்.
   ஹே! ராம்! என்று சொல்லிக் கொண்டே சுருண்டு விழுந்தார் மகாத்மா. கூடவே விழுந்த அகிம்சை இன்று வரை எழுந்திருக்க வில்லை. ஒரு சில வினாடிகளுக்குள் நடந்த முடிந்த துயரத்தை தடுக்க முடியவில்லையே புலம்பித் திகைத்தனர் அருகில் இருந்தவர்கள்.
    காந்தியடிகள் கொலை நிகழ்வை படிக்கும்போதும் கேட்கும்போதும் சினிமா தொலைக்காட்சிகளில் பார்க்கும்போதும் தமிழாசிரியர் கற்பித்த மெய்ப்பொருள் நாயனார் புராணத்தின் இந்த பாடல்கள் என் நினைவுக்கு வரும்.ஆயுதத்தை ஓலை சுவடிக்குள் மறைத்துவைத்துக் கொண்டு மெய்பொருள் நாயனாரை வணங்குவது போல் நடித்துக் கொன்ற முத்தநாதனின் கதை என்கண்முன் விரியும்

                       மெய்யெலாம் நீறு பூசி
                             வேணிகள் முடித்துக் கட்டிக்
                       கையினில் படைக ரந்த
                            புத்தகக் கவளி ஏந்தி
                       மைபொதி விளக்கே என்ன
                            மனத்தின்உள் கறுப்பு வைத்துப்
                        பொய்த்தவ வேடம் கொண்டு
                             புகுந்தனன் முத்த நாதன்
 
                        கைத்தலத்து இருந்த வஞ்சக்
                              கவளிகை மடிமேல் வைத்துப்
                        புத்தகம் அவிழ்ப்பான் போன்று     
                            புரிந்துஅவர் வணங்கும் போதில்
                         பத்திரம் வாங்கித் தான்முன்
                               நினைந்தஅப் பரிசே செய்ய
                          மெய்த்தவ வேட மேமெய்ப்
                                பொருள்எனத் தொழுது வென்றார் 

  நினைத்ததை  முடித்த கோட்சே பிடிபட்டான். இந்நிகழ்வுக்கு சில நாட்களுக்கு முன்பாக நடந்த கொலை முயற்சியில் ஈடுப்பட்டு மாட்டிக் கொண்ட மதன்லால் என்பவனையும் அண்ணல் மன்னிக்கவே விரும்பினார். ஒருவருடன் கருத்து வேறுபாடு கொள்பவர்கள் குற்றவாளிகள் அல்ல என்பதை அவன் உணர்ந்து கொள்வான் என்று உரைத்த அண்ணலின் மனதை என்னென்பது?
  நேருவும் , படேலும் கதறி அழுதனர். அன்று வானொலியில் தழுதழுத்த குரலோடு உருக்கமான ஒரு உரை ஆற்றினார் நேரு. உலகையே கலங்க வைத்து விட்டது அந்த உத்தமரின் மரணம் .

 காந்திக்கு  நான்கு மகன்கள் உண்டு. காந்தியின் மீது கசப்புணர்வும் கடும் கருத்துவேறுபாடும் கொண்ட மூத்த மகன் ஹரிலால் காந்தி, காந்தியை விட்டு பிரிந்தே வாழ்ந்தார்.குடிப்பழக்கம் உட்பட பல்வேறு தீய பழக்கங்களுக்கு அடிமையான இவரை அண்ணலின் இறுதி சடங்கின் போதும் சுய நினைவின்றியே கிடந்தாராம்.  இன்னொரு மகனான ராமதாஸ் காந்தி, காந்தியின் சிதைக்கு தீ மூட்டினார். பின்னாளில் கோட்சேவுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்று கோரிய பெருமணம் படைத்தவராக இருந்தார் ராமதாஸ் காந்தி.
 
   அகிம்சை  போராட்டத்தின்மூலம் ஆங்கிலேயர்க்கு பெரும் தலைவலியாக இருந்த காந்தியை அவர்கள் கூட கொல்ல முயலவில்லை . ஆனால் விடுதலை பெற்று ஆறுமாதங்கள் கூட அவரை காப்பாற்ற முடியவில்லையே என்று உலகமே எள்ளி நகையாடியது போல் இருந்தது.
    காந்தியின்  கொள்கைகளுடன் ஒத்துப் போகாதவர்கள் இருக்கலாம். ஆனால் அவர் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்று என்பதை  யாரால் மறுக்க முடியும்?

******************************************************************************************** 
(படித்தது,கேட்டதன் அடிப்படையில் எழுதப்பட்டது இந்தப் பதிவு  )

தொடர்புடைய பதிவு  
காந்தி தேசத் தந்தை இல்லையா?

செவ்வாய், 21 ஜனவரி, 2014

கந்தா என்கிற கந்தசாமி


என் தேன் கூட்டின் சில தேனீக்கள்  
- 1 கந்தா என்கிற கந்தசாமி


   என் பிள்ளைப் பிராயத்தின் சில பக்கங்களை ஆக்ரமித்துக் கொண்டவன் கந்தா என்கிற கந்தசாமி. அவன் எனது நன்பன்(எழுத்துப் பிழை அல்ல).  என்னைவிட இரண்டு வயது பெரியவன்.அவனுடன் சுற்றிக் கொண்டிருக்கும்போது நேரம் போவதே தெரியாது. அவன் நண்பன் மட்டுமல்ல. எனக்கு அவன்தான் ஹீரோ. அவன் ஒரு சகலகலா வல்லவன். விளையாட்டுகளில் அவனை யாரும் மிஞ்ச முடியாது. அவன் ஒவ்வொரு செயலும் எனக்கு பிரமிப்பாக இருக்கும். பள்ளி நேரம் போக மீதி நேரத்தில் அவன் வீட்டில்தான் தவமாய்க் கிடப்பேன். ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக ஏதாவது செய்து என்னை அசத்திக் கொண்டிருப்பான்.

    நாங்கள்  இருவரும் அரை டிராயர் போட்ட ராமலக்ஷ்மணர்கள் போல் இணை பிரியாது கிராமத்து வீதிகளை வலம், இடம் என்று சுற்றி வந்து கொண்டிருப்போம். இருவரும் சேர்ந்து ஓசியில் அம்புலிமாமா படிப்போம். அதில் ராமாயணம் தொடராக வந்து  கொண்டிருந்தது. அதன் பாதிப்பில் வில் செய்து அதை வைத்து பூவரசு இலையை துளைக்கும்படி அம்பு விடுவோம். அணுவை துளைத்து ஏழு கடலை அம்பு தாண்டி சென்றது போன்ற மகிழ்ச்சி கொள்வோம். வில்லை தோளில் மாட்டிகொண்டும் கூர்மையாக சீவப்பட்ட அம்புகளை முதுகில் கட்டி வைத்துக் கொண்டு விளையாடுவது எங்களுக்கு பிடித்தமான ஒன்று.. அவன் வில்லும் அம்பும் அழகாக இருக்கும். பச்சை சவுக்கு குச்சியில் கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டு மேல்தோலை உரித்துவிடுவான்.தோலின் நிறமும் வெள்ளை நிறமும் கலந்து வண்ணமிட்டது போல் அழகாக காட்சி அளிக்கும். அதை வளைத்து வில்செய்வான். அவன் வல்வில் கந்தசாமியாக என் கண்ணுக்கு தெரிவான்.

    கந்தா அப்படி ஒன்றும் வசதியானவன் அல்ல. அவனுக்குஅம்மா மட்டுமே. அண்ணன் அக்கா உண்டு என்றாலும். அவன் கட்டற்ற சுதந்திரம் உடைய கன்றுக் குட்டியாய் திரிந்தான். உலகிலேயே அவன்தான் திறமைசாலி என்று எண்ணுவேன். அவன் ஒவ்வொரு செயலும் என்னை அப்போது ஆச்சர்யப் படவைத்தது 

   பேட்டரியில் குட்டி பல்பை எரிய வைத்து வித்தை கட்டுவான். ஒயரை பல்பு பேட்டரியுடன்  இணைக்க தாரை பயன்படுத்துவான். ஏற முடியாத எல்லா மரங்களிலும் ஏறிக் காட்டுவான். சைக்கிளை கைகளை விட்டு விட்டு ஒட்டுவான்.சைக்கிள் பஞ்சர் அவனே ஒட்டுவான். பாம்புகளை கொன்று வாலைப் பிடித்து சுற்றி எங்கள் மேல் வீசுவதுபோல் பயமுறுத்துவான். ஒத்தையா இரட்டையா, பல்லாங்குழி,கல்லாங்காய் போன்ற விளையாட்டுக்களிலும் பெண்களையும் போண்டி ஆக்கிவிடுவான். 

    விதம் விதமான தீப்பெட்டி அட்டைகள் சிகரட் பெட்டி அட்டைகளை கந்தா சேகரித்து வைத்திருப்பான். அவையெல்லாம் அவன் விளையாட்டில் ஜெயித்தவை. நாங்கள் கஷ்டப்பட்டு சேகரித்தவைகளை அவனிடம் இழந்து விடுவோம். 

   மண் தரையில் வட்டம் போட்டு  அதனுள் தன்னிடம் உள்ள அட்டைகளை வைக்க வேண்டும். மண்போட்டு மூடிவிட்டு . கொஞ்சம் தொலைவில் இருந்து தட்டையான கல்லை வட்டத்தை நோக்கி எறிய வேண்டும். யாருடைய கல் வட்டத்துக்கு மிக ஆருகில் இருக்கிறதோ அவர்கள் முதலில் கல்லை எடுத்து வேகமாக அட்டைகள் மூடப்பட்ட மண்மீது வேகமாக வீச வேண்டும். மண் கலைந்து வட்டத்திற்கு வெளியே வரும் அட்டைகளை வீசியவர் எடுத்துக் கொள்ளலாம். மிஞ்சி வட்டத்திற்குள் இருப்பவையே மற்றவர்களுக்கு கிடைக்கும். பெரும்பாலும் முதல் வீச்சிலேயே அத்தனையும் அடித்துக் கொண்டு சென்றுவிடுவான் கந்தா.

  கோலி விளையாட்டிலும் அப்படித்தான். குழி ஆட்டமாக இருந்தால் நம் முட்டியை தேய வைத்து விடுவான். கோலி விளையாட்டில் இன்னொரு வகையான  பேந்தா விலும் அவன் அணியே வெற்றி பெறும். ஒருவேளை தோற்று விட்டால் அடுத்த ஆட்டத்தில் அவன் காண்பிக்கும் ஆக்ரோஷம்  பலருடைய கோலிகளை உடைத்துவிடும். அப்போதுதான் அவனுக்கு திருப்தி.

   பம்பரம் விடுவது ஒரு கலை அதில் கை தேர்ந்தவன் கந்தா. .பம்பரம் விடுதலில் மூன்று வகை உண்டு. சாதாராண மாக விடுதல் , சொடுக்குவதுபோல் விடுதல், தேங்காய் உடைப்பது போல் ஓங்கி எறிதல். கடைசி முறையில் பம்பரம் மிகவேகமாக சுழலும் மண்ணில் பள்ளத்தை உண்டாக்கும். ஆனால் இவ்வாறு பம்பரம் விடுவது மிகக் கடினம். நிறையப் பேருக்கு பம்பரம் சுற்றாமல் உருண்டு ஓடிவிடும். ஆனால் கந்தாவுக்கு இது மிகவும் எளிது. சாட்டையை லாவகமாக  சுற்றி ஆணியை லேசாக முத்தமிட்டு பலம் கொண்ட மட்டும் ஓங்கி வீச பம்பரம் பூமியைவிட வேகமாக சுற்றுவது போல் இருக்கும். அதை அப்படியே லாவகமாக கையில் ஏந்தி சுற்றவைப்பான் . இந்த பம்பர விளையாட்டில்தான் அப்பீட் என்று ஒன்று உண்டு. அவற்றை எல்லாம் விளக்க ஒரு பதிவு போதாது.
   கில்லி விளையாட்டிலும் அவன் கில்லிதான். மற்றவர்கள் முழு பலமும் பிரயோகித்து நீண்ட தூரம் அடித்து பெரும் புள்ளிகளை  டபுள்ஸ் டிரிபில்ஸ் என்று அடித்து கஷ்டமில்லாமல் ஜெயித்து விடுவான்.எத்தனை முறை தோற்றாலும் மீண்டும் அவனிடம்தான் விளையாட ஆர்வம் கொள்வேன்.
    பள்ளியில் ஆண்டுவிழாவிற்காக கட்டபொம்மன் நாடகம் நடத்த ஆசிரியர்கள் முடிவு செய்தனர். கந்தாதான் கட்ட பொம்மன். மற்ற பாத்திரங்களுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்துவிட்டனர். அன்று நான் ஏதோ காரணத்திற்காக பள்ளி செல்லாததால் அந்த நாடகத்தில் இல்லை. நமக்கு நடிக்க வாய்ப்பிலையே என்று ஒத்திகையை ஏக்கத்தோடு  பார்ப்பேன். என்னுடைய தந்தைதான் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் என்றாலும் நாடகத்தில் சேர்த்துக் கொள்ளும்படி தந்தையிடம் நான் கேட்கவில்லை. சேவகன் பத்திரத்தில் ஒரு பையன் சரியாக வசனம் பேசாததால் கந்தா அவனை எடுத்து விட்டு என்னை சேர்த்துக் கொள்ள சிபாரிசு செய்தான்.எனக்கான வசனம் மிகக் குறைவு என்ற போதிலும் கட்டபொம்மன் உட்பட அனைத்து பாத்திரங்களின் வசனங்களும் எனக்கு மனப்பாடம். ஆனால் ஏதோ காரணத்துக்காக ஆண்டுவிழாவே நடக்காமல் போனதால் ஏமாற்றம் அடைந்தோம்.

அடுத்த ஆண்டுஅவன் ஒன்பதாம் வகுப்பு படிக்க பக்கத்து ஊர் உயர் நிலைப் பள்ளிக்கு சென்றுவிட நாங்களும்  எனது அண்ணணின் மேற்படிப்புக்காக  சென்னைக்கு இடம் பெயர வேண்டி இருந்தது.என் தந்தையின் வேலை மட்டும் அங்கேதான். விடுமுறை நாட்களில் சென்னைக்கு வருவார் .அப்போது கந்தாவைப் பற்றி கேட்பேன். ஓராண்டு சென்னை வாசம் நிறைவடைய கோடை விடுமுறையில்  ஊருக்கு சென்றேன். சாப்பிடக் கூட இல்லை கந்தா வீட்டுக்கு ஓடினேன்.

    கந்தா இன்னும் அரசனாகத்தான் இருந்தான். ஆனால் இப்போது அவன் ராஜாங்கம் மாறி இருந்தது.  அவனது அவையில் நான் புதியவனாய் உணர்ந்தேன். அவனுக்கு அப்படித் தோன்றியதா தெரியவில்லை.  இப்போதும் பல விளையாட்டுக்கள் விளையாடினோம். பலவற்றில் கந்தா என்னிடம் தோற்றுப் போனான். அவன் அதை பெரிதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை . எனக்கு ஏமாற்றமாக இருந்தது. எனது ஹீரோ என்னிடம் தோற்பதை நானே விரும்பவில்லை. பல ஆட்டங்களை பாதியில் நானே கலைத்துவிட்டேன்.

    உயர்நிலைப் பள்ளையின் பாதிப்பு அவன் பேச்சில் தெரிந்தது. அவனது ஆசிரியர் வகுப்பில் பேசியதை எல்லாம் சொல்லிக் காட்டினான். அதில் சமகால அரசியலும் இருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் அவன் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தேன்.
  ஒரு சில நாட்களே அங்கிருக்க முடிந்தது. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் ஊருக்குப் போக வேண்டிய சந்தர்ப்பம் வந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.

   இப்போது கந்தா அரை டிராயரில் இருந்து லுங்கிக்கு மாறி இருந்தான். இளமை அவன் முகத்தில் மீசை வரைய ஆரம்பித்திருந்தது. குரலின் மென்மை மாறி இருந்தது. நான் பார்த்த பத்து நிமிடத்தில் 10 தடவைக்குமேல் கண்ணாடியின் முன் நின்று தலை வாரிக் கொண்டே இருந்தான். முகத்தில் இருந்த பவுடரின் வாசனை  புதிதாக இருப்பதாக என் மூக்கு உணர்த்தியது. 
   என்னைப் பார்த்து புன்னகைத்துவிட்டு நான் அவசர வேலையா வெளிய போறேன் . அப்புறம் பாக்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பினான். "சரி போய்ட்டுவா நான் இங்கயே இருக்கேன்" என்று சொல்லிக் கொண்டே மூலையில் இருந்த மர பீரோவின் மேல் லேசாகத் தெரிந்த ஒரு புத்தகத்தை எடுக்க முனைந்தேன். நான் எடுக்கு முன் தாவி வந்து அதை எடுத்த கந்தா "இதையும் எடுத்துப் போகவேண்டும்" என்று கூறிக்கொண்டே பான்ட் பாக்கெட்டில் புத்தகத்தை சொருகிக் கொண்டு  பறந்தான். 
அந்தப் புத்தகம் என்னவாக இருக்கும் என்று அப்போது புரியவில்லை.

அவன் அம்மாவும் அக்காவும் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவன் இப்போதெல்லாம் ஒரு புதிய நண்பனுடன் சுற்றிக் கொண்டிருப்பதாகவும். இரவு வெகு நேரம் கழித்து வீடு திரும்புவதாகவும் வருத்தப் பட்டனர் .கந்தாவின் அம்மா என்னை சாப்பிடச் சொலி வற்புறுத்தியபோதும் வேண்டாம் என்று மறுத்துவிட்டு ஏமாற்றத்துடன் புறப்பட்டேன் .
    அதற்குப் பின் இன்றுவரை கந்தாவை பார்க்கவில்லை. ஏதாவது கல்யாணம் அல்லது விசேஷங்களில் கூட அவனை பார்க்க முடியவில்லை. அதன் பின் படிப்பு வேலை என்று நாட்கள் ராக்கெட் வேகத்தில் நகர்ந்தாலும்  கந்தா என் நினைவின் ஒரு மூலையில் சத்தம் போடாமல் ஒளிந்து கொண்டுதான் இருந்தான். எப்போதாவது தெருக்களில் பம்பரம்.பட்டம் விடும் சிறுவர்கள் கண்ணில் படும்போது  ஒளிந்திருக்கும் கந்தா வெளியே வந்து போவான்

    விசாரித்ததில் கந்தா யாரோ ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு வேறு ஊரில்  இருப்பதாக தெரியவந்தது. முகநூல், ட்விட்டரில் கந்தசாமி என்ற பெயர் கண்ணில் பட்டால் அவனாக இருக்குமோ என்று ப்ரோபைல் படங்களை அசட்டுத்தனமாக உற்றுப் பார்ப்பதுண்டு. கொஞ்சம் முயற்சி  செய்தால் கந்தாவின் தொலைபேசி எண், முகவரியை கண்டுபிடித்து விடலாம். ஆனால் நான் முயற்சிக்க வில்லை. இனி சந்திக்க வேண்டும் என்று விதித்திருந்தால் அந்த சந்திப்பு யதேச்சையாக நிகழட்டும்.  அதுவரை என் மனத்திரையில் விழுந்த கந்தாவின் மாயபிம்பம் அப்படியே நிலைக்கட்டும் .
    கந்தா எனும் தேனீ  எனது தேன்கூட்டில் சேகரித்து வைத்த தேனின் சுவை இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது அவ்வப்போது ருசித்துப் பார்க்க..
( இன்னும் மொய்க்கும் சில தேனீக்கள்)
********************************************************************************


  

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

சிறப்பு நீயா நானா?தமிழர்களின் அடையாளங்கள் மறைந்து வருகிறதா?

    மாட்டுப் பொங்கல் அன்று நீயா? நானா? ஒரு சிறப்பு நிகழ்ச்சியை விஜய் டிவி ஒளி பரப்பியது. தமிழர்களின் அடையாளங்கள் இன்றும் இருக்கிறதா மறைந்து வருகிறதா என்பது தலைப்பு. சென்னையில் வசிக்கும் இளைஞர் இளைஞிகளைக் கொண்டு நிகழ்ச்சி நடத்தப் பட்டாலும் ஓரளவிற்கு ஒட்டு மொத்த தமிழர்களின் பிரதிபலிப்பாகவே அமைந்தது என்று கொள்ளலாம். சிறப்பு விருந்தினர்கள் நீயா நானாவில் அடிக்கடி வந்து போய்க்கொண்டிருப்பவர்கள இந்த நிகழ்ச்சியிலும்  சாரு, மோகன்,சன்ஷைன் இளங்கோ கல்லானை.

    தாத்தா பாட்டியின் பெயர்கள் கேட்டு தொடங்கப் பட்டது நிகழ்ச்சி. நல்ல காலம் பலரும் தாய் வழி தந்தைவழி தத்தா பாட்டியின் பெயர்களை சரியாகவே சொன்னார்கள். அப்பாவழி தாத்தாவின் பெயர் ஒரு பெண்ணுக்கு தெரியவில்லை. (தற்காலத்தில் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய் வழி உறவையே முன்னிலைப் படுத்துவதும், முக்கியத்துவம் கொடுப்பதும் இதற்கு ஒரு காரணமாக என்று நண்பர் ஒருவர் சொன்னார். குழந்தைகளிடம் தந்தை வழி உறவினர்களைப் பற்றி தவறான அபிப்ராயத்தை  ஒரு சில அம்மாக்கள் விதைக்கின்றனாராம். குட்டீஸ் சுட்டீஸ் பாருங்க தெரியும் என்றார். )
தாத்தா பாட்டிகளின் பெயர்களை பேரன் பேத்திகளுக்கு வைக்கும் வழக்கமும் இன்று வெகுவாக குறைந்து விட்டது. கலந்து கொண்ட பெண்களின் பெயர்களின் ஒரே ஒரே ஒரு பெண்ணுக்கு  மட்டுமே பாட்டியின் பெயர் வைக்கப் பட்டிருந்தது. தற்போது குழந்தைகளுக்கு  தமிழ்ப் பெயர் வைக்கும் பழக்கமே குறைந்து வருவதைப் பற்றியும் பேசி இருக்கலாம்.

    பள்ளியில் தமிழ்படிப்பது பற்றிய கேள்வி எழுந்தது. செகண்ட் லாங்வேஜாக எதை படிக்கிறீர்கள் என்று கேட்டபோது பெரும்பாலானவர்கள் தமிழையே தேர்ந்தெடுத்திருந்தது ஆறுதல் அளிப்பதாக இருந்தது. ஒன்றிரண்டு பேர் ஹிந்தி,பிரெஞ்ச் போன்ற மொழிகளை தேர்ந்தெடுத்திருந்தனர்.

    உண்மையில் தமிழக கல்வி திட்டத்தில் செகண்ட் லாங்வேஜ் என்பது ஆங்கிலம்தான். First language ல்தான் அரசால் அங்கீகரிக்கப் பட்ட மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க வாய்ப்பு உண்டு. முதல் மொழி ஆங்கிலம்தான் என்று நினைத்து, அனைவரும் அறியாமலே பேசினர்.

   தமிழ்நாடு அரசு கல்வி திட்டத்தில் வழக்கமாக Part I. தமிழ் மற்றும் பிற மொழிகள் Part II ஆங்கிலம்தான் வேறு மொழி தேர்ந்தெடுக்க வாய்ப்பு இல்லை. ஆங்கில வழிக் கல்வி என்பதால் முதல் மொழி ஆங்கிலம் என்று தவறான புரிதல் காணப்படுகிறது. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இது போன்ற மனநிலையை வளர்த்திருக்கின்றன. கோபிநாத் இதை அறியாதது ஆச்சர்யமே.


   ஹிந்தியை எடுத்துப் படித்த ஒரு பெண்ணிடம் நிகழ்ச்சி பற்றி வாழ்த்து சொல்லும்படி கேட்க அந்தப் பெண் தடுமாறினார்.மதிப்பெண்களுக்காக பிற மொழி எடுப்பவர்களை, அது அந்த மொழியையும் ஏமாற்றும் செயல் என்று  கோபிநாத் கண்டித்தது ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

 பள்ளியில் பாடப் புத்தகத்தில் படித்த திருக்குறளை தவிர வேறு குறட்பாக்களை அறியாதவர்களாகவே பலரும் இருந்தனர்..அவர்கள் மட்டுமல்ல நம்முடைய நிலையும் அதுதான்.. எளிதில் மனப்பாடம் செய்யக் கூடியதாகவும் முழு மதிப்பெண்கள் கிடைக்கும் என்பதாலும் திருக்குறள் இந்த அளவுக்காவது தெரிந்து வைத்துக் கொள்ளப் பட்டிருக்கிறது..(12ம் வகுப்புவரை ஒவொரு வகுப்பிலும் 50 திருக்குறளாவது மனப் பாடப் பகுதியாக வைத்து விடலாம்) 

  பாரதி பாடல்களைப் பற்றிக் கேட்டபோது இன்னும் மோசம்.எத்தனையோ திரைப்படங்களில் பாரதியின் பாடல்கள் இடம் பெற்றிருந்தபோதிலும் அவற்றை நினைவு கூற முடியாமல் தடுமாறியது ஏமாற்றம் அளித்தது 

    உணவு முறையில் நகர்ப் பகுதிகளில் கூட இட்லி தோசை சாப்பிடும் பழக்கமே இன்னும் இருப்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது என்பதை கோபி குறிப்பிட்டபோது சாரு நிவேதிதா நமது பார்பரிய உணவான கம்பு,கேழ்வரகு,திணை வகைகளை நாம் மறந்து விட்டோம் என்றார்.

   மேலும் சாரு  இன்றைய தலைமுறையினர் இலக்கியம் படிப்பது இல்லை  என்று ஆதங்கப் பட்டார். ஒரு மொழியின்  அடையாளமே இலக்கியம்தான். அதை இன்றைய தலை முறையினர் விரும்பவதில்லை. சினிமா, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் தமிழர்களின் அடையாளங்களை தொலைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று பெரும்பாலான  அறிவு ஜீவிகளைப் ( என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களைப்) போல குற்றம் சாட்டினார். எவ்வளவு புகழ்பெற்ற எழுத்தாளர்களாக  இருந்தாலும் எந்த பதிப்பகமாக இருந்தாலும் 2000 பிரதிகளுக்கு மேல் விற்பதில்லையாம் (பாவம் அவர் கவலை அவருக்கு).இலக்கியம் படிக்காதவர்களை என்னதான் பட்டங்கள் பெற்றிருந்தாலும் Illiterate என்று தன் வழக்கமான பாணியில் தாக்கினார்.

    சிறப்பு அழைப்பாளர் இளங்கோ தமிழர் அடையாளங்கள் முற்றிலுமாக அழிந்து விடவில்லை என்றார். மராத்தி போன்ற மொழிகள் தங்கள் எழுத்துருக்களைக் கூட இழந்து விட்டன. ( அப்படி தமிழும் தன் எழுத்துருவை  இழப்பதற்கான வழிமுறைய தமிழ் ஹிந்துவில்  நமது ஜெ.மோ குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது) ஆனால் தமிழ் பல்வேறு தாக்குதல்களையும் இன்று வரை சமாளித்து நிலைத்திருப்பது உண்மையில் தமிழ் மொழியின் சிறப்பே!

  தொன்மை வாய்ந்த இலக்கியங்கள் உள்ளதாக கூறப்படும் லத்தின் வடமொழி போன்றவை செம்மையான இலக்கியங்களைப் பெற்றிருந்தும் பேச்சு மொழியாக நிலைக்க முடியவில்லை என்பது உண்மைதானே! பிற மதங்களை பரப்புவதற்கு தமிழையே பயன்படுத்த வேண்டிய சூழல் இருந்ததற்கு காரணம் தமிழரின் மொழி அடையாளமே என்பது அவரது வாதம்
சிறப்பு அழைப்பாளர் சன்ஷைன்(அது என்ன பேரோ?) முன்னுக்குப் பின் முரணாக ஏதோ உளறிக் கொட்டியது பரிதாபமாக இருந்தது.

   சிறப்புவிருந்தினர் மோகன் சொன்னதுஉண்மையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. பொதுவாக இலக்கியம்  படிப்பவர்கள் அல்லது படைப்பவர்கள் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களை ஏளனமாகப் பார்ப்பதும் தாங்கள்தான் மொழியை, அதன் செழுமையை, அடையாளங்களை காப்பாற்றி வருவது போல நினைத்துக் கொள்வதும் தவறானது என்று குறிப்பிட்டார்.பெரும்பான்மையோர் விரும்பும் சினிமாவை தகாத ஒன்றாகக்  கருதுவதும் இவர்களின் குணமாக அமைந்திருக்கிறது.
உண்மைதான்! இலக்கிய  பெருந்தகைகள் சினிமாவை (அது அசட்டுத் தனமாக இருந்தாலும்)முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டிய அவசியம் இல்லை.எழுத்திலக்கியங்களை படித்தறியாத சினிமாவை ரசிக்கும் பாமர மக்களை சார்ந்தும் மொழி இன அடையாளங்கள் அமையும் என்பது உணரப்படவேண்டியதே!

   எழுத்திலக்கியம் மட்டுமே மொழியை, ஒரு இனத்தின் அடையாளங்களை  வாழ வைத்துவிடாது. வாசிக்கும் பழக்கம் இல்லாத இன்னும் சொல்லப்போனால் வாசிக்கத் தெரியாத ஏராளமானோர் இருந்திருக்கிறார்கள். இன்னும் இருக்கவும் செய்கிறார்கள். அவர்களும் உண்மையில் மொழி இன சிறப்புக்களுக்கு காரணமாக  இருந்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. 

  விளையாட்டுக்கள், பழக்க வழக்கங்கள், உணவு முறைகள் ஆடைகள் இவை எப்போது தொடர்ந்து பல காலங்களுக்கு ஒரு இனத்திற்கு அடையாளமாக அமைவது இல்லை. காலத்திற்கேற்ற அவ்வப்போது இவற்றில் மாறுதல் வருவது இயல்பானதே. 
  ஆனாலும் முற்றிலுமாக தமிழன் தன் அடையாளங்களை இழந்து விடமாட்டான் என்றே நம்புகிறேன்.
நிகழ்ச்சி உணர்த்தியதும் இதுவாகவே இருக்கவேண்டும் என்றே கருதுகிறேன்.

**********************************************************************************************
கொசுறு: சிறப்பு விருந்தினர் மோகனின் தாய்மொழி தெலுங்கு. பன்னிரண்டு வயதில் தமிழ்நாட்டுக்கு வந்தாராம்.   நான்கு ஆண்டுகள் தமிழ் கற்கமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தாராம். அதன் பின்னர் தமிழின் பால் ஈர்க்கப்பட்டு தமிழ் கற்று எழுத்தாளராகவும் திகழ்கிறார். தன் ஆழமான சிந்தனைகள்  தமிழில்தான் தோன்றுவதாகவும் அதுதான் தமிழின் வலிமை என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மகிழ்ச்சியாக  இருந்தது.

************************************************************************************************************