என்னை கவனிப்பவர்கள்

சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 25 மார்ச், 2018

சீதை ராமனை மன்னித்தாளா?

 

    எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் தன் வலைப் பக்கத்திற்காக    ஒரு சீதை ராமனை மன்னித்தாளா?  தலைப்பில்  கதை எழுதக் கேட்டிருந்தார். எழுதி அனுப்பினேன். அக்கதை அவர் வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்டது. ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.   இன்று ஸ்ரீராம நவமி என்பதாலும் கூடுதலாக ஒரு பதிவாக இருக்கட்டும்  என்ற வகையிலும் என் வலைப் பக்கத்தில்  வெளியிடுகிறேன். ஸ்ரீராம் மன்னிப்பாராக!


சீதை ராமனை மன்னித்தாளா ?

      பட்டாபிஷேகம் முடிந்தது.அயோத்தி ஆனந்தத்தில் மூழ்கிக் திளைத்துக் கொண்டிருந்தது. .முடிசூட்டிகொண்ட ஸ்ரீராமபிரானுக்கு  பக்கத்தில்  சீதா பிராட்டியும்  அயோத்தி அரியணையில்  அமர்ந்த காட்சியைக் கண்ட அயோத்தி மக்கள் பரவச நிலையில் கிடந்தனர்  குறையிலா அழகு கொண்ட இருவரும் எவ்வளவு பொருத்தம் என்று ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர். தேவர்களைப் போல கண்ணை இமைக்காத சக்தி இருக்கக் கூடாதா என்று ஏங்கினர்..'ஜெய் ஸ்ரீராம்' என்ற கோஷம் விண்ணை நிறைத்தது.  சீதாப்பிராட்டியின் சௌந்தர  ரூபம் விவாகத்தின் போது இருந்ததை விடப் பல மடங்கு அதிகரித்துக் காணப்பட்டது. அட! அந்த ராவணன் மயங்கியதில் தவறு ஏதுமில்லை என்றே பேசிக் கொண்டனர்.
   ரிஷிகள், ஆன்றோர் சான்றோர் சக தேசத்து மன்னர்கள்  வந்து  வாழ்த்திக் கொண்டிருந்தனர்.  அனைவரும்  மனமின்றிக்  கலைந்து சென்றனர் 
       அடுத்த நாள்  காலை அரண்மனை  நந்தவனத்தில்   வாயு மைந்தன்  மண்டியிட்டுக் கண்மூடி  நேற்றைய பட்டாபிஷேகக் காட்சியை  கண்ணாரக் கண்டு கொண்டிருந்தான். அவனது திருவாய் ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தது .எந்த ருசிரா இராமா ஏமி ருசிரா ராமா என்று மனம் ஸ்லாகித்துக் கொண்டிருந்தது 

"ஆஞ்ச நேயா!" குரல் கேட்டு கண் திறந்தான் ஹனுமான்
எதிரே லட்சுமணன் நின்று கொண்டிருந்தான்.

" தாங்களா  என்னை அழைத்தீர்கள்?. தங்கள் திருமுகத்தில் ஏதோ குழப்பம் உள்ளதாக தெரிகிறதே. "

"ஆம் மாருதி. மனம் சஞ்சலமாக உள்ளது. என் சஞ்சலம் நீக்க இருவரால் மட்டுமே முடியும். ஒருவர்  சீதாப் பிராட்டியார். இன்னொருவர் நீ  சீதம்மையிடம் கேட்க என் தன்மானம் இடம் தரவில்லை .அப்படிக் கேட்பது எனது அண்ணாவுக்கு அவப் பெயராகி விடுமோ என்றும் அஞ்சினேன். அதனால் சொல்லின் செல்வனே! உன்னிடம் வந்தேன். "

    "என் நெஞ்சில் குடியிருக்கும் எம்பெருமானின் சாயலை ஒத்தவரே!தங்களின் ஐயத்தை நான் எப்படித் தீர்க்க முடியும். நான் சாதாரண ராமதாசன் தானே! என்னால் செய்ய முடிந்தது ஏதேனும் இருப்பின் ஆணையிட்டு சொல்லுங்கள் என் சிரம் கொடுத்தேனும் செய்ய சித்தமாய் இருக்கிறேன் "

       நேற்று பட்டாபிஷேகம் முடிந்ததும் நான்  மாறுவேடமிட்டு நகர்வலம் வந்தேன்.எங்கு நோக்கினும் மக்களின் பேச்சு சீதா,ராமரைப் பற்றியே இருந்தது.ராமபிரானின் மாண்பை  விட  என் அன்னைக்கு நிகரான  சீதாப் பிராட்டியின் பெருமை  பற்றியே இரவு  முழுவதும் பேசித்தீர்த்தனர்  அப்போது  ஒரு  பெண்மணி சொன்னதுதான் என் நெஞ்சை உறுத்திக் கொண்டிருக்கிறது...."
     சற்று நிறுத்திய  லட்சுமணனை உற்று நோக்கிய ஆஞ்சநேயன், குறுக்கீடு ஏதும்  செய்யவில்லை.
       
    லட்சுமணன் தொடர்ந்தான்  "சொக்கத் தங்கமாகிய ஜானகியை தீக்குளிக்க வைத்து விட்டாரே தசரத மைந்தன்..எப்படிக் கோபம் கொள்ளாமல் சீதை ராமனை மன்னித்தாள் என்றார். ராமனின் செயல் அவ்வளவு எளிதில் மன்னிக்கக் கூடியதா? என்று அந்தப் பெண்மணி கேட்ட கேள்விதான் என் நெஞ்சை உறுத்திக் கொண்டிருக்கிறது.

      யுத்தம் முடிந்து இராவணன் வீழ்ந்தான்.     அப்போது நீ, நான் எல்லோரும் அருகில் தானே  இருந்தோம். அசோக வனத்தில்  இருந்து  ஆவலோடு வந்த சீதா தேவியின் முகத்தைக் கூடப்பாராமல்   ராமன் சிந்திய  மொழிகள் எனக்கே கோபத்தை ஏற்படுத்தியது.  தன்னை நிருபிக்க என்னை அழைத்து விறகு கொண்டு வந்து தீமூட்ட ஆணையிட்டார் பிராட்டி. ஆனால்  அண்ணனோ கிஞ்சித்தும்  கருணை காட்டவில்லை. நான் மூட்டிய தீ அந்தக்  பதிவிரதையை ஒன்றும் செய்யவில்லை. ராமன் சீதையை ஏற்றுக் கொண்டு சொன்னது உனக்கு  இருக்கிறதா ?"
"நன்றாக நினைவுக்கிறது ஐயனே! நான் பரிட்சை வைத்தது எனக்காக அல்ல உன் புனிதத்தை உலகறியச் செய்யவே " என்றாரே கோதண்டராமன். சீதாப் பிராட்டியும் மகிழ்ச்சியோடு  ஒன்று  சேர்ந்ததை இப்பூவுலகமே அறியுமே!"

    "ஆம்!. ஆஞ்சநேயா! நானும் அண்ணன் மீது கொண்ட கோபத்தை மறந்து சமாதானம் ஆனேன்.ஆனால்  இப்போது அயோத்திப் பெண்மணி ஒருத்தி பேசியதைக் கேட்டதும் எனக்கு ஐயம் வந்துவிட்டது. பேரமைதி தவழும் பிரகாசமான  சீதாப் பிராட்டியின் முகம் அகத்தில் உள்ள கோபத்தை வெளிக்காட்டாவிட்டாலும் உள்ளுக்குள் இருக்கும் என்றே அஞ்சுகிறேன். உண்மையில் என்அண்ணன்  ராமனை சீதா தேவியார் மன்னித்திருப்பாரா? நீதான்கூற வேண்டும்"
   .
  "ஸ்ரீ ராமச்சந்திர பிரபுவின் அன்பிற்குரிய சகோதரரே! தாங்கள் அனைத்தும் உணர்ந்தவர். தங்களுக்கு எடுத்து சொல்லக் கூடிய அளவுக்கு என்னிடம் ஞானம் ஏதுமில்லை. ராமநாமம் தவிர வேறேதும் அறியாத  மூடன் நான். என்றாலும் சொல்கிறேன்.

   "இராவணன் கடத்திச் சென்ற சீதாப்பிராட்டியைத் தேடி இலங்கை சென்றேன்.அழகான அசோக வனத்தில் அவரைக் கண்டேன்.
. நானே தங்களை ராமனிடம் சேர்த்து விடுகிறேன். என் தோளில் அமருங்கள் என்றேன். அது என் ராமனுக்குப் பெருமை சேர்க்காது என்றார்
 அப்போது இராவணன் சொன்னதை என்னிடம் சொன்னார் ஜானகிதேவி 

    ."மாருதி! அந்த பாதகன் இராவணன் என்ன சொன்னான் தெரியுமா. அவன் மிகவும் நல்லவனாம். அவன் நல்லவனாக இருப்பதால்தால் என் சம்மதம் கேட்டு என்னை உரிமையாக்கிக் கொள்ள தன் நிலை இறங்கி கெஞ்சிக் கொண்டிருக்கிறானாம். ராமன் வந்து உன்னை மீட்டுச் செல்ல வாய்ப்பே இல்லை . என்னைக் கொன்ற பிறகே அது நடக்கும். அகில உலகத்தில் என்னை வெற்றி கொள்ள யாராலும் இயலாது என்று உனக்குத் தெரியாதா .மூடப் பெண்ணே! அப்படியே அவன் என்னை வென்று உன்னை மீட்டாலும் உன்னை மனமார ஏற்றுக் கொள்வான் என்றா நினைக்கிறாய்? .அன்னியர் தேசத்தில் கண்காணாது இருந்த உன்னை ஏற்றுக் கொள்ளும் உயர் குணம் எந்த மானிடனுக்கும்  இருக்காது. நீ வேண்டுமானால் பார்!." என்று சொன்னதை என்னிடம் சொன்னார்.
 ஆனால்  ஜானகியைக் கண்ட சந்தோஷத்தில் இது எனக்குப் பெரிய விஷயமாகத் தோன்றவில்லை.ஸ்ரீதேவியின் அம்சமான சீதாப் பிராட்டியின் கணையாழியை ஸ்ரீ ராமனிடம் கொண்டு சேர்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்த மகிழ்ச்சியில்   இச் செய்தியை நான் ஸ்ரீ ராமபிரானிடம் தெரிவிக்கவில்லை .

      யுத்தம்  முடிந்து ராமச்சந்திர மூர்த்தி   சீதையை சந்தித்தபோது நெருப்பு வாத்தைகளை வீச,   தாங்களோ தீ மூட்டினீர் . அப்போது சீதாப் பிராட்டியார் என்னை பார்த்தார் . அந்தப் பார்வை என்னைக் கலங்க வைத்தது. ராவணன் சொன்னதை உன் இஷ்ட தெய்வம்   உண்மையாக்கி விட்டாரே! இதை நீ சொல்லவில்லையா     என்பது போல் இருந்தது. என் நாயகனுக்கு நான் எப்படி அறிவுரை சொல்ல முடியும். ஆனால் தீங்கு ஏதும் விளையாது என்று மட்டும் நம்பினேன். அப்படியே நடந்தது.ஆயினும்  இப்போது தங்களுக்கு  ஏற்பட்ட சந்தேகம் எனக்கு அப்போதே ஏற்பட்டது 

   ஒரு சந்தர்ப்பத்தில் அன்னை சீதையிடம் கோரினேன் . " தாயே! தங்களின் பொருள் பொதிந்த பார்வை என்னை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. ஸ்ரீராம பிரான் தங்களை சோதனைக்குள்ளாக்கியதை நானும் விரும்பவில்லை. மகா பதிவிரதையான தங்களின் கோபம் என் ஸ்ரீ ராமனை பாதித்துவிடக் கூடாது எனவே தாங்கள் என் இதய ராமனை மன்னித்தீரா என்பதை தெளிவிக்க வேண்டுகிறேன்" .

  அப்போது அவர் கூறினார்  "எல்லோரையும் மன்னிக்கும் தயாளகுணம் கொண்ட அவதார புருஷன் அல்லவா என் ஸ்ரீராமன். தன்னை வனவாசம் செய்யும் சூழ்நிலையை உருவக்கிய தசரதனை  மன்னித்தவர் அவர். பரதனுக்கு முடி சூட்ட விரும்பி ராமனைக்காட்டுக்கு அனுப்ப தசரதனை நிர்பந்தித்தத கைகேயியும் மன்னிக்கத் தயங்கவில்லை என் ராமன். அவளுக்கு துர்போதனை செய்த மந்தரையையும் சங்கடமின்றி  க்ஷமித்தவன் கோசல ராமன். அகலிகைக்கு  சாப விமோசனம்  தந்தவன் என் ராமன் . அவரது  தயாள குணமும் கருணையும் அன்பும்  பூலோகப் பிரசித்தி பெற்றவைதானே! எனக்கு பாதுப்பாக இருக்க வேண்டும்; எந்தக் காரணத்தை கொண்டு இவ்விடம் விட்டு செல்லலாகாது   என்று ஆணையை, என் நிந்தனையை பொறுக்காது வேறு வழியின்றி மீறி    என்னைத்   தனியாக விட்டுச் சென்ற லட்சுமணனையும் ராமன் மன்னித்தார்.  ஆனால் என் பிராண நாதர்  மன்னிக்கப்படும்  சூழ்நிலை ஏற்கனவே ஒரு முறை  உருவாகி விட்டதே.!

"பிராட்டியே என்ன சொல்கிறீர்கள்?

  "மாவீரன் வாலியை மறைந்து  நின்று கொன்றார் என்று நீ தானே சொன்னாய்.  யுத்த தர்மத்திற்கு எதிராக ராமன் நடந்து கொண்டதால் வாலியின் மன்னிப்பு ஸ்ரீ ராமனுக்கு கிடைத்திருக்குமா என்று எனக்குத் தெரியாது. இப்பொது என் கோபமும் வருத்தம் காரணமாக  இன்னொரு  பாவமும்   என்   ராமனை சூழ விடுவேனா? அது மட்டுமல்ல பகவான்
 ஸ்ரீராமனையே மன்னிக்கும் பேறு   கிட்டியது என்  பாக்கியம் அல்லவா? வேறு யாருக்கு இது வாய்க்கும்." என்று சீதாப் பிராட்டி சொன்னதை லட்சுமணனுக்கு கூறிய ஹனுமான் 

    "ஐயனே! ஐயம் வேண்டாம்! மேற்சொன்ன காரணங்களால்தால் "சீதை ராமனை மன்னித்தாள்"  என அமைதி கொள்வீர்!. 

  லட்சுமணன் சஞ்சலம் நீங்கி."அஞ்சனை மைந்தனே! நற்சொல் கூறினாய். என் தாய்க்கு நிகரான சீதா தேவியின் கோபம் அகத்துள் இருந்துவிடக் கூடாது என்றே அஞ்சினேன்.இப்போது தெளிந்தேன். ஜானகி தேவியாரின் நெஞ்சில் கோபம் இல்லை.  இனி ஸ்ரீராமனுக்கு அபவாதம் ஏற்படாது என நிம்மதி  கொள்வேன் " என்று உருகினான் 

"கருணா மூர்த்தியை தமையனாகக் கொண்டவனே! சீதாதேவி தாயார் ராமனை மன்னித்து விட்டார். ஆனால் ..."

"என்ன ஆனால்...." பதறினான் லட்சுமணன் 

"மன்னிப்பு கிடைக்க வேண்டியவர் இன்னொருவரும் உண்டு.""
"யார் அது? உனது சொல்லின் அர்த்தம் விளங்க வில்லையே. யார் அந்த அபாக்கிய சாலி? யார்,  யாரால் மன்னிக்கப் படவேண்டும் "

"ஸ்ரீராமன் தண்டகாருண்யம்  செல்லும்போது தாங்களும்  சீதா தேவியும் பிடிவாதமாகக் கூட சென்றீர்கள்.அதற்கு தாங்கள் அனுமதி பெற்றீர்களா"

"ஏன் இந்த சந்தேகம்? என் தந்தையிடமும்  ஸ்ரீராமனிடமும் அனுமதி பெற்றுத்தானே சென்றேன்!

"யாரிடம் அனுமதி பெற வேண்டுமோ அவரிடம் பெற்றாயா? அவர் எண்ணத்தை அறிந்தாயா? நீங்கள் தண்டகாருண்யம் சென்றீர்கள் ஆனால் 14 ஆண்டுகாலம்  தண்டனை இன்னொருவருக்கு அளித்ததை உணர்ந்தீர்களா? அதற்கு தங்களுக்கு  உரிமை இருக்கிறதா?

"மாருதி நீ என்ன சொல்கிறாய்....."
"நான் சொல்ல என்ன இருக்கிறது. தங்கள்  சகதர்மிணி ஊர்மிளா தேவியின் மன்னிப்பு உங்களுக்கு  கிடைத்ததா என்று எண்ணிப் பார்த்தீர்களா?  தெரிந்து வருவீர் ஐயனே!"
 என்று சொல்லி விட்டு மீண்டும் கண்ணை மூடி ராமநாமம்  ஜபிக்கத் தொடங்க 

லட்சுமணன் திகைத்து நின்றான்.


********************************************************************************




சனி, 21 அக்டோபர், 2017

சித்திரவதை

      
  நடிகை புஷ்பாஸ்ரீ  கையெழுத்தில்  "உங்கள் சித்திரவதை தாங்க  முடிய வில்லை என்னை  விட்டு விடுங்கள்"  என்ற துண்டு சீட்டை  நடிகை வீட்டு  வேலைக்காரி இன்ஸ்பெக்டர்  மோகனிடம் கொடுத்தாள்.
  நான்கு நாட்களாக புஷ்பாம்மாவைக் காணவில்லை என்றும் தெரிவித்தாள்.

" வீட்டில யாரெல்லாம் இருக்காங்க" விசாரித்தார்  மோகன்
"புஷ்பாம்மாவும் அவங்க புருஷன் ரவிவர்மன் மட்டும்தான்."
"அவர் என்ன பண்றார்"

 "உருப்படியா ஒண்ணும் இல்லீங்க . கத்தையா கத்தையா பேப்பர் வச்சுக்கிட்டு படம்  வரஞ்சிகிட்டு இருப்பார்". .

அவன்  கொடுமைக்காரனா?

"அப்படி ஒன்னும் இல்ல.  ஐயா! அடிக்கடி ரெண்டும் பெரும் சண்டை போடற சத்தம் கேக்கும். அப்புறம்  ஒண்ணாயிடுவாங்க  .

"இப்ப வீட்டில இருக்காரா?"

"ரூமுக்குள்லையே  இருக்கார் எவ்வளவோ  கூப்பிட்டுப்  பார்த்தும் வெளியே வர மாட்டேங்கறார்".

இன்ஸ்பெக்டர்  புஷ்பாஸ்ரீ வீட்டுக்கு   புறப்பட்டார்.

" ரவி வர்மன் கதவை திறங்க . போலீஸ் வந்திருக்கோம்" என்றார் .

 ரவி வர்மன் கதவை திறந்தான் . அறை  முழுவதும் அலங்கோலமாக கிடந்தது  பேப்பர்கள் சிதறிக் கிடந்தன .

  "உங்க மனைவி புஷ்பாஸ்ரீயை காணோம்னு இவங்க சொல்றாங்க . எங்க போனாங்க  "

"தெரியல சார். எங்கயாவது ஷூட்டிங் போயிருப்பாங்க ! நானும் அவங்க எங்க போனாங்கன்னு தெரியாம கவலை பட்டுகிடிருக்கேன்."
உங்க கிட்ட சொல்லலையா ".

"எப்பவும் சொல்லிட்டுதான் போவாங்க .ஆனா இப்ப சொல்லல . எம் மேல என்ன  கோவமோ தெரியல செல்போனையும் சுவிச் ஆஃப் பண்ணி வச்சுட்டாங்க. எப்படியும்  வந்துடுவாங்க சார்".

"நீங்க அவங்களை சித்திர வதை பண்றதா எழுதி வச்சுருக்காங்களே ! உண்மைய சொல்லுங்க அவங்களை என்ன பண்ணீங்க"

  " ஐயோ!அவங்க சம்மதம் இல்லாம என் விரல் கூட அவங்க மேல படாது சார்"
       
    வீட்டை சுற்றி பார்த்தார் . இந்த மாதிரி ஆளுங்க கிறுக்குப் பயலுங்களா இருப்பாங்க. அப்பாவி மாதிரி இருந்தாலும் ஏதாவது ஒரு வேகத்தில கொலை பண்ணனாலும் பண்ணிடுவாங்க என்று நினைத்துக் கொண்டு  எதற்கும் இவனை ஸ்டேஷனில் விசாரிக்கலாம் என்று அழைத்து  வந்து விட்டார். லாக் அப்பில் ஒரு நாள் முழுக்க வைத்து விசாரித்தும் பயனில்லை.  உளறிக் கொண்டும் அழுது கொண்டும் இருந்தானே தவிர உருப்படியாக ஒன்றும் சொல்லவில்லை .  என்ன செய்வது என்று தெரியாமல் .இன்ஸ்பெக்டர் யோசித்துக் கொண்டிருக்க   வாசலில் கார்! புஷ்பாஸ்ரீ  உள்ளே ஓடி வந்தாள்

இன்ஸ்பெக்டர் சார் அவரை விட்டுடுங்க அவர் அப்பாவி.
"என்னம்மா   இப்படியா  அவர் சித்திரவதை தாங்க முடியலன்னு எழுதி வச்சுட்டு சொல்லாம கொள்ளாமயா போறது ? தேவையில்லாம எங்கள டென்ஷன் ஆக்கிட்டீங்களே.பிரஸ்சுக்கு நியூஸ் போச்சுன்னா என்னாகும்  ஏன் அப்படி எழுதி வச்சீங்க?
.
"சொல்லிட்டுதான் போனேன்  அவர் குடிச்சி இருந்ததால்  மறந்து இருப்பார்..  சார், அவருக்கு பிரபல ஒவியரா ஆகணும்னு ஆசை.   பேர் என்னமோ  ரவி வர்மா .ஆனா சுமாராத்தான் வரைவார்.    என்னை போஸ் கொடுக்கச் சொல்லி விதம்  விதமா வரைவார்.  ஷூட்டிங்  போகாத நேரத்தில இவரை காதலிச்ச பாவத்துக்காக  இவர் வரையறதுக்கு மணிக்கணக்கா சகிச்சிக்கிட்டு  போஸ்  கொடுப்பேன்"

"அதுக்கு போய் சித்திரவதைன்னு எழுதி வச்சது ரொம்ப ஓவர் இல்லையா ?"

 ஒரு பேப்பரை புஷ்பாஸ்ரீ எடுத்துக் காட்டி , "என்னப் பார்த்து வரஞ்ச ஓவியத்தை  பாருங்க." என்றாள்

அதில்   20 வயது புஷ்பாஸ்ரீ 50 வயது தோற்றத்தில் இருந்தாள்.

"என் படத்தை இப்படி கன்றாவியா வரஞ்சுட்டு  'சித்திரம் பேசுதடி'ன்னு தலைப்பு  வேற.  எனக்கு எப்படி இருக்கும்?    கோவத்தில  என்னை  "சித்திர"வதை  செய்யாதீங்கன்னு பொயட்டிக்கா எழுதி வச்சேன்.. இப்படி ஆகும்னு  எனக்கு தெரியாது " என்று வெட்கத்துடன்  சொல்ல

தலையில் அடித்துக் கொண்டார் இன்ஸ்பெக்டர் மோகன்


**************************************************************

ஏதோ என்னாலான சித்திர வதை. 





திங்கள், 10 ஆகஸ்ட், 2015

மதுவுக்கு எதிரான போராட்டம் தேவைதானா?


     குமுதம் ( 24.08.2015)இதழில் வெளியான ஒரு பக்கக் கதை 
   டிவியில் சாராயக் கடைகளை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்கள் பற்றிய செய்திகள்  ஒளி பரப்பாகிக் கொண்டிருந்தது. பரபரப்பான பேட்டிகளும் விவாதங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்த போது ரமேஷிடம் இருந்து போன் வந்தது.

"டேய் உனக்குத் தெரியுமா?  கார்த்திக் மதுவுக்கு எதிராக போராடப் போறானாம்.பந்தல் போட்டு சாகும் வரை உண்ணா விரதம் இருக்கப் போகிறானாம். அவன் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடமாட்டானாம் " அவன் குரலில் ஒரு பதட்டம் தெரிந்தது
நானும் அதிர்ச்சியுடன் "உண்மைதானா! அவனால் எப்படி மதுவுக்கு எதிராகப் போராட முடியும் இவனுக்கு எதுக்கு  இந்த வீண் வேலை" என்றேன்.
"சொன்னால் கேட்க மாட்டேங்கிறான். நீ வேண்டுமானால் சொல்லிப் பாரேன் " என்றான்
"நான் சொன்னா மட்டும் கேப்பானா?. உனக்கு  ஞாபகம் இருக்கா ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ஒரு பார்ட்டியில் மதுவை அவனுக்கு நாம தானே அறிமுகப் படுத்தினோம். அப்போது ஓடி ஒளிஞ்சான்.  ஆனால் எப்படியோ கொஞ்சம் ஓவராவே   மதுவோடு  ஐக்கியமாட்டான்றது  நமக்கு லேட்டாத் தானே தெரியும்!. மதுவுக்கு முழுசா அடிமையா இல்ல  இருந்தான். நம்மை சட்டைகூட  செய்யலையே. மதுவை அவனால் மறக்க முடியாதே!. அவன் சும்மா சொல்வான் விட்டுடு " என்று சொல்லி விட்டு போனை வைத்தேன்.
   ஆனால்  அவன் சீரியசாகத் தான் சொல்கிறானாம் . மதுவினால்தான் அவன் அம்மா  முதியோர் இல்லத்திற்கு செல்ல நேர்ந்ததாம். உறவினர்களும் அவனை வெறுத்தது மதுவினால்தானாம். அவன் இன்று தனி மரமாய் இருப்பது மதுவினால்தான்  என்று உறுதியாக சொன்னானாம்
      இவனுக்கென்ன பைத்தியமா?  போலீஸ்காரர்கள் சும்மா விடுவார்களா?
    கார்த்திக்கை பற்றி உங்களிடம் சொல்லியாக வேண்டும். பணக்காரப் பெண்ணை  காதலித்து திருமணம் செய்துகொண்டவன். ஒரு ஆண்டுக்குள்  வாழ்க்கை கசந்துபோனது கார்த்திக்கின் மனைவிக்கு. சொல்லாமல் கொள்ளாமல் சென்று விட்டாள் பிறந்த வீட்டுக்கு. ஆனால் கார்த்திக்கால் அவளை மறக்க முடியவில்லை. அவனுடைய மனைவியும் செல்வாக்கு மிகுந்த பிரபல தொழிலதிபரின் மகளுமான  மது என்கிற மதுமிதாவை தன்னோடு சேர்ந்து வாழ வலியுறுத்தி அவர்கள் வீட்டுக்கெதிரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போகிறானாம் என் நண்பன் கார்த்திக்.
நீங்களே சொல்லுங்கள்!
   மதுவுக்கு எதிரான இந்தப் போராட்டம் தேவைதானா?


****************************************************************


படிச்சிட்டீங்களா?

வியாழன், 30 ஜூலை, 2015

இது அந்த நடிகரைப் பற்றிய பதிவு அல்ல



இது முற்றிலும் கற்பனைக் கதையே   நீங்கள் நினைக்கும் அந்த நடிகரை நினைத்து  எழுதப்பட்டது அல்ல
****************

    அந்த கிராமமே பரபரப்பாக இருந்தது. இருக்காதே பின்னே. பிரபல நடிகர் மரக்கன்றுகள் நடுவதற்கு அந்த ஊருக்கு வருகிறாரே. ஒரு திருவிழா போல அல்லவா ஏற்பாடு செய்ப்பட்டிருந்து.   ஏராளமான கூட்டம். ப்ளக்சில் அப்துல் கலாமோடு சிரித்துக் கொண்டிருந்தார் நடிகர்.  இன்னும் சிறிது நேரத்தில் வரப் போகிறார். தொடங்கப் போகிறது விழா 
"தனது சொந்தப் பணத்தில் இருந்து செலவு செய்து மரம் நடுகிறாராமே." "இதுவரை 2999999 மரக் கன்றுகள்  நட்டுவிட்டாராம் "
 "30 லட்சமாவது மரத்தை நம் ஊரில் நடப் போகிறாராம்"
"இந்த நடிகர் மத்த நடிகர்கள் மாதிரி இல்ல .நல்ல ஜெனரல் நாலேட்ஜ்  இருக்கறவர். படங்கள்ல நல்ல கருத்துகளை சொல்பவர்" .
"அப்துல் கலாமை பேட்டி கண்டவர் . அவர் சொன்னார் என்ற ஒரே வார்த்தைக்காக ஒரு மாபெரும் சேவையை செய்யறார் தெரியுமா. வேற எந்த நடிகனாவது இப்படி செஞ்சிருக்கானா?
இப்படி ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்தனர்  . 
    நடிகரின் வரவை ஊர் மக்கள் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கு முன் ஓட்டுக்கேட்க வரும் அரசியல் வாதிகளைத் தவிர வேறு யாரும் அந்த ஊருக்கு வந்ததில்லை. முதல் முறையாக  ஒரு நடிகரை பார்க்கும் ஆவலுடன் பலர் குழுமி இருந்தனர்.   இளைஞர்கள் பெரியவர்கள்  பல்வேறுசமூக ஆர்வலர்கள்  தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் குவிந்திருந்தனர். பெரிய மேடை அமைக்கப் பட்டிருந்தது. அற்புதமாக அலங்காரமும் செய்யப் பட்டிருந்தது   சுற்று சூழல் விழிப்புணர்வு வாசகங்கள் ஆங்காங்கே  பளிச்சிட்டுக் கொண்டிருந்தன.அவர் பல்வேறு  இடங்களில் மரம் நட்ட  காட்சி சிசி டிவியில் ஓடிக் கொண்டிருந்தது 

  அந்த மைதானத்தில்நூற்றுக்கும் மேற்பட்ட  மரக் கன்றுகள் நடப்படுவதற்கு  தயாராக  நடிகருக்காக காத்துக் கொண்டிருந்தன. மரம் நட குழிகள் தோண்டப் பட்டிருந்தன.
நடிகரின் கார் மைதானத்தில் நுழைந்தது . முக்கியஸ்தர்கள் ஓடி வந்து வரவேற்றனர். மேடைக்கு அழைத்தனர். இல்லை நேரம் ஆகி விட்டது மரம் நடுவதை முடித்து விட்டு அப்புறம் மேடைக்கு செல்லலாம் என்று சொல்லி விட்டார்.  மைக்கில் அறிவிக்க 3000000 லட்சமாவது மரத்தை நட்டு தண்ணீரை ஊற்ற கூட்டம் கை தட்டியது. மேலும் சில மரங்களை நட போட்டோக்கள் பளிச்சிட்டன. மொபைல்களும்  ஹான்டி காம்களும், மரம் நாடும் காட்சியை கைப்பற்றிக்   கொண்டிருந்தன .  நடிகர் ஆர்வத்துடன் சிறுவர் சிறுமியரிடம் கை குலுக்கினார். 
     நடிகருக்கு பலவேறு தரப்பினர் சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகள் கொடுத்து பாராட்டினர்.  
   "நடிகர்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள். ஆனால் சமுதாயத்திற்கு எதுவும் செய்வதில்லை என்று கூறுவதுண்டு . ஆனால் நமது அண்ணன் நாட்டுக்காக சுற்று  சூழல் பாதுகாப்புக்காக உலகம் வெப்பமாகிக் கொண்டு வரும்  ஆபத்தை உணர்ந்து தன்னுடைய பங்காக மரம் நடும் இயக்கத்தை ஆரம்பித்து நான்கு ஆண்டுகளாக பல லட்சங்கள் மரங்கள் நட்டிருக்கிறார். எந்த எதிர்பார்ப்புமில்லாமல் அண்ணன் செய்யும் சேவையை நாம் போற்ற வேண்டும்............" மேடையில் ஆளுக்கு ஆள் புகழ்ந்தனர் 

 நடிகர் புகழ்ச்சி மழையில் நனைந்து பேச எழுந்தார் 

"...................கனவு காணுங்கள் என்று சொன்னார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்  என்னிடம் கேட்டார் ,"நாட்டுக்காக நீ ஏதாவது செய்ய்யலாமே" என்றார் 
'சொல்லுங்கள் ஐயா! செய்கிறேன்' என்றேன்  
'இயற்கையை அழிப்பதன் காரணமாக உலக வெப்பமாகிக் கொண்டே வருகிறது. இது எதிர் காலத்துக்கு ஆபத்தாய் முடியும் .அதில் நீ கவனம் செலுத்த வேண்டும்.  நீ ஏன் மரங்கள் நடக் கூடாது?. உன்னைப் போன்ற பிரபல நடிகர்கள் இதுபோல் செய்தால் அவர்கள் ரசிகர்களும்  அதனை பின்பற்றுவர்கள் அல்லவா 'என்றார் 
 'மனிதன் பிறந்து பெரிதல்ல .  பணம் சம்பாதிப்பது பெரிதில்லை. ஆனால் நாட்டுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்பதை உணர்த்தி  விட்டீர்கள் ஐயா,உங்கள் வார்த்தைகளை சிரமேற்கொள்வேன். இன்றே மரக்கன்று நடும் இயக்கத்தை தொடங்கிவிடுகிறேன். ஒரு கோடி  மரங்கள் நடுவதுதான் என் இலக்கு என்று அப்துல் கலாம் ஐயாவிடம் சூளுரைத்தேன். இன்று 3000000 லட்சம் மரக்கன்றுகள் நட்டுவிட்டேன். பெரிய விழா எடுத்து  3000000 மாவது மரத்தை கலாம் ஐயா அவர்கள் கரங்களால்  நடவேண்டும் என்று நினைத்தேன். அந்தோ ஆனால் அவர் மறைந்து விட்டார் . தனி மரமாக என்னை மரம் நடவைத்து விட்டீர்களே ஐயா "
நடிகர் கண்கலங்க கூட்டம் அமைதியானது  கண்களை துடைத்துக் கொண்டு தொடர்ந்தார்.
"அவர் கனவை நனவாக்குவதில் என் சிறு முயற்சியை செய்வேன்.   எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.  ஓரு கோடிமரங்கள் நட்டு முடிக்கும் வரை ஓய மாட்டேன். என்னுயிர் பிரிவதற்குள் அதனை செய்து முடிப்பேன். நீங்களும் மரம் நடுவதில் என்னோடு இணையுங்கள். மரம் நடுவோம்! மழை பெறுவோம்!  இந்த பூமியை குளிரவைப்போம்.   " என்று உணர்ச்சிப் பெருக்கோடு பேச அனைவரும் கைதட்டினர் 
  பின்னர் (தன்னையே இன்னொரு கலாமாக நினைத்துக் கொண்டு ) அருகில் அரசு பள்ளிக்கு சென்று மாணவர்களை சந்திக்க சென்றார் . மாணவர்களுக்கு கலாமை எடுத்துக்காட்டி தன்னம்பிக்கை உறையாற்றினார் 
"மாணவர்களே! நீங்கள் ஏதேனும் கேள்விகள் என்னிடம் கேட்கலாம் 
பலரும் அவரது  இள வயது வாழ்க்கை ஊர் , கல்வி, அறிவியல் வரலாறு   என்று  கேள்விகள்  கேட்க அவரும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டே வந்தார் . ஆசிரியர்கள் நடிகருக்கு இவ்வளவு திறமையா என்று வியந்தனர் 
அப்போது ஒரு சிறுவன் குறுகுறுவென அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். அதை கவனித்த நடிகர் "தம்பி! நீ ஏதோ கேட்க விரும்புவதாக தெரிகிறதே! தைரியமாகக் கேள்' . 
"ஐயா நீங்கள் எத்தனை மரக் கன்றுகள் நட்டிருக்கிறீர்கள் "
சிரித்துக் கொண்டே " அதை நீ போஸ்டரில் பார்த்திருப்பாயே. இருந்தாலும் சொல்கிறேன். 30லட்சம்" 
" எத்தனை ஆண்டுகளாக இந்த பணியை செய்து வருகிறீர்கள் ஐயா"
"நான்கு ஆண்டுகளாக "
அடுத்த கேள்வி அதிர வைத்தது 
"30லட்சம் மரக் கன்றுகளில் எத்தனை உயிரோடிருக்கின்றன?"

....................
பதில் கிடைக்குமுன் ஆசிரியர்கள் ஓடிவந்து அவனை இழுத்து சென்றனர். 


*********************************************************************

செவ்வாய், 21 ஜூலை, 2015

ஷர்மிலி மிஸ்! என் பொண்ண ஏன் அடிச்சீங்க?


நண்பர் ஸ்கூல் பையன் சரவணன்,ஷர்மிலி மிஸ் என்ற பதிவை தனது சொந்த அனுபவத்தை  அடிப்படையாகக் கொண்டு சிறுகதை போல அற்புதமாக எழுதி இருந்தார். உண்மையில் நெஞ்சம் நெகிழ வைத்தது என்று சொல்லலாம் . அதை இன்று காலையில் படித்ததும் என்னால் சும்மா இருக்க முடியவில்லை.ஒரு படைப்பின் வெற்றி தாக்கத்தை ஏற்படுத்துவதுதானே. பல்வேறு எண்ணங்கள் அலை மோத ஸ்கூல் பையனின்   இந்த பதிவிற்கு  இன்னொரு கற்பனை முடிவை பின்னூட்டத்தில் எழுத ஆரம்பித்தேன் நீளமாக ஆகிவிட்டதால் என்னுடைய வலைப்பதிவில் அதனைத் தொடர முடிவு செய்தேன்.

துளசிதரன்,கோவை ஆவி, குடந்தையூர் சரவணன் போன்ற குறும்பட ஆர்வலர்கள் ஸ்கூல் பையனின் பதிவோடு இதனையும் சேர்த்து இந்தக் கதையை குறும்படமாக்க முயற்சிக்கலாம் 

அவரது பதிவின் சுருக்கம்: எல்.கே.ஜி படிக்கும் தன் குழந்தையை பள்ளியில் அடித்து  விட்ட ஷர்மிலி டீச்சரை கோபம் கொண்டு கேள்வி கேட்க  தந்தை செல்ல அங்கு டீச்சரை பார்க்க முடியவில்லை.  காரணம் அவரது தந்தை இறந்து விட்டார் கோபத்தோடு  புறப்பட்டவர் இரக்கத்தோடு காத்திருப்பதகா முடிகிறது . ஸ்கூல் பையனின் பதிவு
ஸ்கூல் பையனியன்  பதிவைப் படிக்க கிளிக் செய்க ஷர்மிலி மிஸ்

ஒரு வேளை ஷர்மிலி மிஸ்ஸைப் பார்த்து கோபத்துடன்  பேசியிருந்தால் எப்படிப் போகும் கதை என்ற கற்பனையே எனது இப்பதிவு . ஸ்கூல் பையன் மன்னிக்கவும் 


அவருடைய பதிவில் கீழ்க்கண்டசிவப்பில் குறிப்பிட்ட  வாக்கியத்தை  தொடர்ந்து இதனை வாசிக்கவும் 
அடுத்த நாள் புதன்கிழமையன்று காலை நேரத்தோடேயே பள்ளிக்குச் சென்றுவிட்டேன்.
...ஸ்டாஃப்  ரூமில் ஷர்மிலி  மிஸ் இருப்பதாக சொல்ல கோபத்துடன் விரைந்தேன்.
ஷர்மிலி என்னை அடையாளம்  கண்டுகொண்டார். 
"நீங்க கற்பகாஸ்ரீ அப்பாதானே? "
ஷர்மிலி மிஸ்ஸின் மென்மையான குரல் எனது கோபத்தை குறைத்து  விடும் போல இருந்தது . அதை நான் விரும்பவில்லை. சற்றும் கடுகடுப்பு குறையாமல்  "ஆமாம்! கற்பகா வை  அடிச்சீங்களாமே!."
"இல்ல. அவ கொஞ்சம் குறும்பு பண்ணா அதுக்காக லேசா தட்டினேன். அவ்வளவுதான்அவங்க அம்மா கிட்ட கூட சொல்லிட்டனே!"என்றார் பதட்டத்துடன் 
 "குழந்தையை நீங்க எப்படி அடிக்கலாம் . ஆயிரக்கணக்குல பீஸ் கட்டி படிக்கவைக்கிறது உங்க கிட்ட அடி வாங்கவா?. இன்னும் எந்த காலத்தில இருக்கீங்க  ..." 
எனது  கோபத்தை எதிர்பார்க்காத ஷர்மிலி மிஸ்சின் முகம் பயத்தில் மாறியது 

நான் தொடர்ந்தேன் 
"அவ ஏதாவது தப்பு செஞ்சிருந்தா  எங்ககிட்ட தான் சொல்லணுமே தவிர நீங்க அடிக்கக் கூடாது. குழந்தைகளை அடிக்கறதுக்கு பெத்தவங்களுக்கே உரிமை இல்லை. நீங்க எப்படி அடிக்கலாம்? குழந்தைங்க என்ன கல்லா ? அசையாம அப்படியே இருக்கிறதுக்கு. பி.எட். ல சைல்ட் சைக்காலஜி படிச்சிட்டுதானே வந்தீங்க. குழந்தைகளை எப்படி ட்ரீட் பண்ணனும்னு தெரியாதா?.  சைல்ட் ப்ரொடெக்ஷன் சட்டம் இருக்கு தெரியுமா? இன்னொரு தடவை  இப்படி நடந்தா சும்மா இருக்க மாட்டேன் . பிரின்சிபால் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவேன். அவர் கேக்கலைன்னா சி இ ஓ கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவேன், அதுக்கு மேலயும் போவேன்" என்று கத்தினேன். 
 நான் சத்தம் போடுவதை கேட்டு ஓடிவந்த மற்ற டீச்சர்கள் "சார்! நீங்க போங்க பாத்துக்கறோம்  என்று  என்னை சமதானப் படுத்தி அனுப்பினர் 
ஆனாலும் குழந்தையை அடித்ததை மனம் ஏற்றுக் கொள்ளவில்லை  
    வீட்டுக்கு வந்ததும் சாப்பிட்டு விட்டு அலுவலகத்துக்கு புறப்பட்டேன். வேலையில் மூழ்கிப் போக ஷர்மிலி மிஸ் என்கோபத்தில் இருந்து தற்காலிகமாக விடுதலை பெற்றிருந்தார்..
      இரவு வீடு திரும்பும்போது கற்பகாவுக்கு பிடித்த ஸ்வீட்டை  அடையார் ஆனந்த பவனில் வாங்கிக் கொண்டேன். ரோட்டில் விற்றுக்கொண்டிருந்த பெரிய டெட்டி பியர் பொம்மையையும் வாங்கிக்கொண்டேன் கற்பகாவுக்கு ரொம்பப் பிடிக்கும். 
    பிளாட்ஸ் காம்பவுண்டுக்குள் நுழைந்ததும் எனது வாகன சத்தம் கேட்டு ஓடிவரும் கற்பகா இன்னும் வரவில்லை. ஏதோ ஹோம் ஒர்க் செய்து கொண்டிருப்பாள் அல்லது  மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருப்பாள் என்று நினைத்துக் கொண்டேன்.
மனைவி கதவை திறந்தார் மனைவியைத் தாண்டிப் பார்த்தேன் ஹாலில் குழந்தை  கண்ணில் படவில்லை .
"பிரபா, குழந்தை சாப்பிட்டாளா, அதுக்குள்ளயா தூங்கிட்டா? கற்பகா! உனக்கு அப்பா என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு !  அவளை கூப்பிடு"   என்று சொல்லிவிட்டு ஆடை மாற்றிக் கொண்டு வந்தேன். 
"ஏண்டி! உங்கப்பா கூப்பிடறது காதுல விழலயா?. நீங்க வர்ற வரைக்கும் நல்லாத்தான் விளையாடிக்கிட்டிருந்தா இப்பதான் ரூமுக்குள்ள  போனா. நீங்களாச்சு உங்க பொண்ணாச்சு. ரொம்பதான் செல்லம் கொடுத்து வச்சுருக்கீங்க "என்று அம்மாக்களின் வழக்கமான டயலாக்கை பேசினாள்
    அப்போதும் கற்பகாவரவில்லை நான் அவள் ரூமுக்குள் நுழைந்தேன். கட்டிலின் மூலையில் உம்மென்று உட்கார்ந்து கொண்டிருந்தது என் செல்லம்.. நான் போனதும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
 "ஒரு வேளை ஜுரமாக இருக்குமோ "  நேற்று டீச்சர் அடித்தது வேறு நினைவுக்கு வந்தது. அதனால்  காய்ச்சல் வந்திருக்குமோ? தொட்டுப் பார்த்தேன். நார்மலாகத் தான் இருந்தது 
"ஏம்மா? என்ன ஆச்சு? .டாடி உனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு."
...........................
"ஏன் கோவம்?  என் செல்லம்! உன்னை அடிச்ச  மிஸ்சைத்தான் நான் திட்டிட்டு வந்துட்டனே! நான் திட்டினதுக்காக உன்னை திரும்பவும் உன்னை அடிச்சாங்களா? இல்லை திட்டினாங்களா? சொல்லு. அந்த மிஸ்சை ஒரு வழி பண்ணிடறேன். என்ன நினைச்சிக்கிட்டிருக்காங்க . பயப்படாமா உண்மைய சொல்லு "  
பொம்மையையும் ஸ்வீட்டையும் கொடுத்தேன் . கோபத்துடன் தூக்கி எறிந்தாள் கற்பகா 

"போங்க டாடி! எங்க மிஸ்ஸை ஏன் திட்டினீங்க? பாவம்! ஷர்மிலி மிஸ். இன்னைக்கு   பூரா அழுதுக்கிட்டே இருந்தாங்க. 'உன்னாலதான்  மிஸ் அழறாங்கன்னு என் பிரண்ட்செல்லாம் என்னை திட்டினாங்க.  . என்கிட்ட கொஞ்ச பேர் டூ கூட விட்டுட்டாங்க. அப்புறம் நான் மிஸ் கிட்ட போய் சாரி மிஸ்! இனிமே எங்கப்பாகிட்ட சொல்லமாட்டேன்னு சொன்னேன்.. இனிமே நீங்க ஸ்கூலுக்கு வராதீங்க டாடி" என்று சொல்லிவிட்டு மீண்டும் முகத்தை திருப்பிக்கொண்டாள் 
என்ன சொல்வதென்று தெரியாமல் நான் திகைத்து நிற்க

காபி கொண்டு வந்த பிரபா என்னைப் பார்த்து  புன்னகைத்தாள். ஏளனமாய்!

                                           *********************************

பாத்திரங்கள் : 
தந்தை : சரவணன் 
மகள் : கற்பகாஸ்ரீ
தாய் : பிரபா 
மிஸ் : ஷர்மிலி 

நன்றி; ஸ்கூல் பையன் 


வியாழன், 2 ஏப்ரல், 2015

கலகக் கோப்பை 2015


    கிரிக்கெட் உலகக் கோப்பை பைனல்ஸ்ல இந்தியா நுழைஞ்சிடும்னு நம்பி ஏமாந்து போய் இருப்பீங்க. அட விடுங்க .  உலகக் கோப்பை என்னங்க பெரிய உலகக் கோப்பை. . எங்க ஏடாகூடம் ஃபிளாட்ஸ்ல நடக்கிற  கலகக் கோப்பையை விடவா அது சுவாரசியமா இருக்கப் போகுது. 
        எங்க ஏரியாவில ஏடாகூடம் ஃபிளாட்ஸ்னு கேட்டு பாருங்க சின்ன கொழந்தைங்க கூட சொல்லும். அது என்ன வித்தியாசமான பேரா இருக்கேன்னு பாக்கறீங்களா? அதை கட்டின பில்டர் உண்மையில ஒரு ஏடா கூடம். அது மட்டுமில்ல அதுல குடியிருக்கிற குடும்பங்களும் ஏடாகூடம்தான். சரியான கலகக்கார குடும்பங்கள். கோள் மூட்டறது, போட்டு கொடுக்கறது, புரளி பேசறது எல்லாம் இவங்களுக்கு கைவந்த கலை இல்ல; இல்ல வாய்வந்த கலை. ஆனா பேரு அப்படி இருக்கிறதுக்கான காரணம் அது இல்ல. ஒவ்வொரு ஊருக்கும் ஒருபெயர் காரணம் இருக்கும். பிளாட்சுக்குக் கூடவா பெயர்க் காரணம் இருக்கும்னு நீங்க ஆச்சர்யப் படலாம்  

          அந்தப் பகுதியில் முதல்ல வந்த குடியிருப்பு இதுதான். அக்கம்பக்கத்தில ஒரு கி.மீ தூரத்துக்கு எந்த வீடும் இல்லை . அதனால ஈடன் கார்டன்னு ஃபிளாட்சுக்கு  பேர் வச்சார் பில்டர். கன்னாபின்னான்னு கட்டி இருந்தாலும் பேரை மட்டும் பாருங்க. ஆனா எல்லாரும் குடி வந்ததுக்கு அப்புறமும் பேர் எழுதல.. ஒரு பெயிண்டரக்  கூப்பிட்டு Eden Garden  கிறுக்கி எழுதி கொடுத்திருக்கார். பெயிண்டருக்கு அவ்வளவா   எழுதப் படிக்க தெரியாது.  Eda godam ன்னு எழுதிட்டுப் போய்ட்டான்.அதை அப்புறமா சரிபண்ணிக்கலாம்னு விட்டுட்டதால எல்லோரும்  கிண்டலா  ஏடாகூடம்னே பேரு வச்சுட்டாங்க.

 இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்னு கேக்கறீங்களா அந்த ஃபிளாட்டோட வாட்ச்மேன் நான்தான். எங்க ஃபிளாட்ஸ் தாண்டி போற யாரும் மூக்குமேல கை வைக்காம போக மாட்டாங்க.  அப்படி என்ன அதிசயம்னுதானே கேக்கறீங்க. அதிசயம் ஒண்ணும் இல்லீங்க. சாக்கடை தண்ணி பிளாட் வாசல்ல தேங்கி நின்னு நாத்தம் அடிக்கும். அப்புறம் எப்படி மூக்குமேல கை வெக்காம போகமுடியும். அக்கம் பக்கத்தில இருக்கவங்க அடிக்கடி வந்து கம்ப்ளைன்ட பண்ண வருவாங்க. அவங்களுக்கு  பதில் சொல்லாம   அத்தனை பேரும் ஒண்ணா சேந்து ஒருத்தரை ஒருத்தர் கை காட்டி   நீதான் காரணம்னு சொல்லி திட்டி சண்டை போட்டுக்குவாங்க. அவங்க வாயிலிருந்து வர்ற வார்த்தைய விட சாக்கடை எவ்வளவோ பரவாயில்லன்னு ஒடுவாங்க பாருங்க! 

 கையில வாட்ச் இல்லாத வாட்ச் மேனா  இருந்தாலும்  பல நேரங்கள்ல காட்ச் மேனா இருப்பேன். கேப்டன் தோனி கூட விக்கட் பின்னாடி ரிலாக்சாத்தான் நிப்பார். ஆனா நான் அப்படி கேட்ல நிக்க முடியாது எப்பவும் அலர்ட்டா இருக்கணும். எப்ப எந்த வீட்டில இருந்து என்ன பொருள் பறந்து வரும்னு தெரியாது. அப்படியே காட்ச் புடிக்கணும்; இல்ல சாமார்த்தியமா நகந்துக்கணும்

 மறந்துட்டேன் பாருங்க.இங்க யாரெல்லாம் இருக்காங்கன்னு சொல்லலியே . நாலு கலகக் குடும்பங்கள் சார். ஒவ்வொண்ணும் கலகத்தில எக்ஸ்பர்ட். ஆரம்பத்தில அவங்களுக்குள்ளேயே கலகம் செஞ்சுக்கிட்டிருந்தாங்க. அப்புறம் அது போரடிச்சுப் போய் வெளியிலே தங்கள் திறமையக்  காட்ட எங்க ப்ளாட்ஸ் பேமஸ் ஆயிடுச்சு .

    உங்களுக்கு உ.வே.சா தெரியும். அ.வே.சா தெரியுமா? அழுக்கு வேட்டி சாமிநாதனோட சுருக்கம்தான் அது. பெயர்க் காரணம் பேர்லயே இருக்கே! ரிடயர்ட் ஆகிட்டதால முழு நேர கலகம்தாங்க அவரோட தொழில்.  அழுக்கு வேட்டி சாமிநாதன் தினமும் பக்கத்துல இருக்கிற பிள்ளையார் கோவிலுக்கு போறது வழக்கம். அந்த கோவிலோட அர்ச்சகர் ஒருநாள்  "சாமிநாதன்! பளிச்சுன்னு  நல்ல வேட்டி கட்டிக்கிட்டு  கோவிலுக்கு வரப்படாதா?" என்று கிண்டலாக  கேட்க, என் வேட்டிய பத்தியா பேசற? உன்ன என்ன பண்றேன் பார்” என்று கருவிக்கொண்டே சமயம் வாய்த்தபோது 'அர்ச்சனை கணக்கெல்லாம் சரியாய் காட்றது இல்லேன்னு' ட்ரஸ்ட்டீகிட்ட நைசா போட்டு குடுத்துட்டார். ட்ரஸ்ட்டீ இவர் எதிர்லயே  சம்பளத்தில கட் பண்ணிடுவேன்னு அர்ச்சகரை மிரட்ட பாவம் நொந்து திரி நூல் ஆயிட்டார் .
   
     அப்படித்தான் ஒருமுறை ஒரு பெண் இவரிடம் "சவுக்கியமா மாமா" என்று  தெரியாத்தனமாய் கேட்க அவரும் "அட சுசீலாவா? எப்படி இருக்க?  உன் வீட்டுக்காரனை இன்னைக்கு தாம்பரம் டாஸ்மாக் கடைகிட்ட பாத்தேனே! மெரூன் கலர் சட்டையும் ப்ளூ பேன்டும்தானே (அது அவர் வேலை செய்யும் கம்பனி யூனிஃபார்ம்) போட்டிருந்தான். எதுக்கும் ஒரு கண் வச்சுக்கோ” என்று சொல்ல, ஜாலியா  கோவிலுக்கு வந்தவங்க காளியா கோபத்துடன்  வீட்டுக்கு திரும்பினாங்க  சுசீலா. பாவம் அவன் துரதிர்ஷ்டம் அன்னைக்குன்னு பாத்து ட்ரையின்ல வரும்போது எவனோ குடிகாரன் இவன்மேல வாந்தி எடுத்து வைக்க, அதை ஸ்டேஷன்லயே சுத்தப் படுத்தியும் அந்த நாத்தம் போகல. வீட்டுக்குள்ள நுழையும்போதே நாத்தம் லேசா வர, அ.வே.சா சொன்னது உண்மைதான்னு நினச்சு, எவ்வளோ சொல்லியும் வீட்டுக்காரன நம்பாம சண்டை போட்டு கோவிச்சுகிட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டாங்க.

     சுசீலா வீட்டுக்காரன்  ஆவேசத்துடன் அ.வே.சா விடம் சண்டைக்கு கிளம்பினபோது  அங்க இருந்தவங்க  'வேண்டாம்  அப்புறம் அந்த ஆள் இன்னும் மோசமா கலகம் மூட்டிடுவான்னு' சொல்லி   தடுத்து விட்டனர்.

  அப்புறம் சாரதாம்மா இன்னொரு கலக சிரோன்மணி, அந்த ஏரியா  வீடுகள்ல மாமியாரைப் பற்றி மருமகளிடமும் மருமகள் பற்றி மாமியாரிடமும் வாயைக் கிளறி  கேட்டு அவங்க மனக்குறைய அவங்க வாயாலேயே சொல்ல வச்சு  அதை மறக்காம “உங்க மருமக இப்படி! உங்க மாமியார்  இப்படி சொன்னா!” என்று சொல்லி  குழப்பம் விளைவிப்பதில் சாரதாம்மா  ஒரு நவீன நாரதாம்மா. உதாரணத்துக்கு உங்க மருமக ஆபீஸ்ல இருந்து நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் வரை ஆபீஸ்ல வேல செய்யறவரோட வண்டியிலதான் தினமும்  வராளாமே!” என்று சொல்ல  அப்புறம் என்ன நடந்ததுன்னு சொல்லணுமா என்ன?  அந்தப் பகுதியில் பல தனிக் குடித்தன குடும்பங்களை குறுகிய காலத்தில் உருவாக்கிய பெருமை அவருக்கு தாங்க

    அப்புறம் நாட்டியப் பேரொலி நளினா. நான் தப்பா எழுதிட்டதா நினைக்காதீங்க. கொஞ்சம் இருங்க!  பேரொலிதான் கரெக்டுன்னு புரிஞ்சிக்குவீங்க. டான்ஸ் கிளாஸ் நடத்தற அவங்க கிட்டயும் நாலு பசங்க டான்ஸ் கத்துக்க வராங்களேன்னு ஆச்சர்யமா இருக்கும்.  அவங்க டான்ஸ் “தை தை”ன்னு கத்துக் குடுக்கும்போது  பேரொலி வரும் பாருங்க! ஏடாகூடம் பிளாட்சே அதிரும். ஏற்கனவே பைசா கோபுரம் மாதிரி சாஞ்சி கிடக்கிற காம்பவுண்ட் இன்னும் கொஞ்சம் சாயறமாதிரி தெரியும்.  இவங்க டான்ஸ் கத்துக் கொடுக்கறத விட கத்துக்க வர்ற பசங்க கிட்ட அவங்க வீட்டு  சண்டை சச்சரவுகளை விசாரிச்சு தெரிஞ்சுக்கத்தான்   அதிக நேரம் செலவு பண்ணுவாங்க. இந்தப் பசங்களை டான்ஸ் கிளாஸ் முடிச்சு கூட்டிட்டு போறதுக்காக வர்ற அண்ணன் அக்காவெல்லாம் காத்திருக்கிற நேரத்தில போன்ல பேசும்போது ஒட்டுக் கேட்டு, லவ் பண்ற விஷயம், செமஸ்டர்ல அரியர் வச்சுருக்கிற ரகசியம், காலேஜ் கட் அடிச்சிட்டு சினிமா பாத்தது,   இதையெல்லாம் பசங்க வழியே அவங்க வீட்டுக்கு பாஸ் பண்றது ஒரு இனிமையான பொழுதுபோக்கு. சம்பந்தப் பட்டவங்களுக்கோ அது அதிர்வேட்டு.

    ஏடாகூடத்தின் இன்னொரு ஏடோகூடக் குடும்பம் பெட்டிஷன் பெரியசாமியோடது . ஒரு பெட்டிஷன் எழுதினதில்லன்னாலும் கையில ஒருகொயர் பேப்பர், பேனாவோடுதான் சுற்றிக் கொண்டிருப்பார்  தான் பெட்டிஷன் எழுதித்தான்  ரோடு வந்தது, தண்ணி வந்தது, லைட்டு போட்டாங்க, மேல போற கரண்டு கம்பிய மாத்தினாங்க என்று ரீல் விடுவார், அவரோட திருவிளையாடலும் மத்தவங்களுக்கு சளச்சது இல்ல.

       ஒரு முறை அந்த ஏரியாவின் வார்டு கவுன்சிலர் தன் குடும்ப திருமணத்திற்கு ஊரையே அழைந்த்திருந்தார். பெட்டிஷன் பெரியசாமியும்  கல்யாணத்திற்கு பந்தாவாக போனார். அங்கு மாவட்ட செயலாளருடன் பேசிக் கொண்டிருந்த கவுன்சிலரிடம்  குறுக்கிட்டு  "அண்ணே! ஊர் முழுக்க அடிச்சு இருக்கிற போஸ்டர் எல்லாம் சூப்பர். வருங்கால மேயரே!” ன்னு  அடிச்சிருக்கிற போஸ்டர்ல உங்க போஸ் அட்டகாசமா இருக்குண்ணே!", என்று அப்பாவி போல்  சொல்லிவிட்டுப் போக, மாவட்டம் ஒரு மாதிரியாகப் பார்க்க, அடுத்த முறை சீட்டு கிடைக்குமோ கிடைக்காதோன்னு  துக்கத்தில் ஆழ்ந்தார் கவுன்சிலர். (இந்த கவுன்சிலர்தான் ஒரு முறை வீட்டுவரி ஏன் கட்டலைன்னு திட்டிட்டுப் போனவர். அதனோட விளைவுதான் இது)  அதிலிருந்து பெரியசாமியைப் பார்த்தாலே சுப்ரமணியசாமியப் பார்த்த அரசியல்வாதி மாதிரி ஓடுவார்.
   அந்த பிளாட்ஸ்ல   இருக்க நண்டு சிண்டுகள்  கூட கலகம் செய்யறதுல யாருக்கும் குறைஞ்சவங்க  இல்ல. நாரதர் கலகம் நன்மையில் முடியும். ஆனால்  இந்தக் கலகக் கண்மணிகளின் கலகம் நன்மையில் முடிந்ததாக சரித்தரம், பூகோளம், எகனாமிக்ஸ் எதுவும் இல்லை.

    கிரிக்கட் வோல்டு கப் பைனல்சம் சப்பென்று முடிஞ்சி போச்சு. பரவாயில்ல விடுங்க அடுத்த வாரம்  எங்க பகுதியில இருக்கிற நல சங்கத்தோட  ஆண்டு விழா நடக்கப் போகுது. அன்னைக்கு ஏடாகூடம் பிளாட்ஸ்ல இருந்து யாரும் வரக்கூடாதுன்னு, அந்த ஏரியா மக்கள் கோவில்ல விரதம் இருந்து வேண்டிக்கிட்டிருக்காங்க. ஆனா எங்க கலகக் கண்மணிகள் புதியதோர் கலகம் செய்வோம்னு அந்த கலகக் கோப்பை2015  பைனல்ஸ் நாளுக்காக காத்துக்கிட்டிருக்காங்க.. நேரம் இருந்தா வந்து பாருங்க. இந்த நாலு பேர்ல யாருக்கு கலகக் கோப்பை கொடுக்கலாம்னு நீங்கதான் சொல்லணும் .அதன் பின்விளைவுகளை நீங்கள் அனுபவிக்க வேண்டி இருக்கும் பரவாயில்லையா?
***************************************************************************

முந்தைய பதிவு 
நானொரு முட்டாளுங்க!


ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

நான் ரொம்ப நல்லவன் சார்!

 சார்! என்ன எல்லாரும் ரொம்ப நல்லவன்னு சொல்றாங்க. அப்படித்தான் எல்லார் கிட்டயும் பேர் வாங்கி இருக்கேன். அதுல என்ன கஷ்டம்னு கேக்கறீங்களா!நல்லவனா இருக்கறது எவ்வளவு கஷ்டம்னு உங்களுக்கு தெரியாது.
  எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே நான் ரொம்ப நல்லவன் சார். சின்னவயசுல இருந்தே என்னை அப்படி வளத்துட்டாங்க. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. எங்கம்மா ஒரு நாள் ஹால்ல அரிசியை முறத்தில வச்சுட்டு துணி துவைக்க போய்ட்டாங்க. போறதுக்கு முன்னாடி "நீ ரொம்ப சமத்தாம். ரொம்ப ரொம்ப நல்ல பையனாம். . அரிசிய இறைக்காம  விளையாடனும்"னு சொல்லிட்டு போனாங்க. அம்மா நல்லவன்னு சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது,  ஆனா அரிசிய கையில எடுத்து ஹால் பூரா இறைச்சு  விளையாடனும்னு ஆசையா இருந்தது.  என்ன பண்றது என்ன நல்லவன்னு சொல்லிட்டாங்களே! என் ஆசைய அடக்கிக்கிட்டேன்.

  எங்கப்பாவோட  பிரண்டு ஒரு நாள் வந்தார் . ஒரு பொம்மைய வாங்கி எனக்கு பிரசன்ட் பண்ணார். அந்த பொம்ம எனக்கு பிடிக்கவே இல்லை. கீழ போட்டு உடைக்கலாம்னு நினைச்சேன். அப்பா அவர் எங்கப்பாகிட்ட சொன்னாரு "உங்க பையன் ரொம்ப நல்ல பையன்னு என் வைப் அடிக்கடி சொல்வா! என் பையன் இருக்கானே ரொம்ப மோசம் எந்த பொருளை கொடுத்தாலும் உடனே உடைச்சிடுவான்"
  அவர் அப்படி சொன்னதும் நான் என்ன சார் பண்ண முடியும்? பொம்மைய தூக்கி போட்டு உடைக்கும் ஆசைய தூக்கி போட்டுட்டேன். புத்தகத்தை கிழிக்கனும் தண்ணியகொட்டணும், குளிக்கறதுக்கு அடம் பிடிக்கணும், ஓ ன்னு கத்தணும் இப்படி எல்லாம் செய்யணும்னுதான் நினைப்பேன்... ஊஹூம்

   எனக்கு ஒரு தங்கை உண்டு  சார். அவளை நைசா கிள்ளனும், முதுகில ஓங்கி அறையனும். அவ அழறத பாத்து சிரிக்கணும் நினைப்பேன். எங்க சார் அதெல்லாம் முடிஞ்சுது.? அக்கம் பக்கத்து வீட்டில இருக்கறவங்க எல்லாம் அவங்க பசங்க ஒருத்தருக்கொருத்தர் சண்டை போடறதா எங்க அம்மாக்கிட்ட சொல்வாங்க. உங்க பசங்க பரவாயில்லையே ஒத்துமையா இருக்காங்களேன்னு பாராட்டுவாங்க. அதுக்காகவே சண்டை போடறதில்லை சார்.

  வீட்டிலதான் இப்படின்னா ஸ்கூல்லயும் அப்படித்தான்.  நல்லவன்னா என்ன நெத்தியில எழுதி ஒட்டியா வச்சுருக்கும்? எங்க மிஸ்கூட அப்படித்தான் சொல்வாங்க. ஒருநாள் கிளாஸ்ல எல்லோருக்கும் டிக்டேஷன் குடுத்தாங்க. அதுல சிலதுல்லாம் எனக்கு தெரியல. சரி முன்னாடி இருக்கவன பாத்து எழுத எட்டிப் பாக்கலாம்னு நினச்சேன்.  இன்னொரு பையன் அவனுக்கு முன்னாடி இருந்த பையனை பாத்து எழுதிக்கிட்டிருந்தான், அதை பாத்துட்ட மிஸ் அவன் காதை திருகி அவன் கிட்ட என்னைக் கையா நீட்டி  காமிச்சி, "அவனை  பாரு! அவனுக்கு தெரியலன்னாகூட காப்பி அடிக்க மாட்டான். அவன மாதிரி நல்ல பையனா இருக்கணும்" னு  சொன்னதுக்கப்புறம் காப்பி அடிக்க மனசு வரல சார் எனக்கு 

   பெரியவங்க இருக்கட்டும் என்கூட படிக்கிற  பிரண்ட்சுங்க கிட்ட கூட எனக்கு நல்ல பேருதான் சார். நாங்கெல்லாம் கிரிக்கெட் மேட்ச் விளையாடுவோம். எதிர் டீம் பசங்ககூட என்ன நேர்மைய பாராட்டுவாங்க சார். பேட்ல லேசா பட்டு கேட்ச் புடிப்பாங்க. அது அவங்களுக்கே தெரியாது.  அவுட் கொடுக்காமலே நானே வெளிய போய்டுவேன். இந்த மாதிரி மேட்சுல பேட்டிங் டீம்ல ஒருத்தர அம்பயரா நிப்பாங்க. யாரா இருந்தாலும் ரன் அவுட், ஸ்டம்பிங் அவுட் ஒத்தக்க மாட்டாங்க. நான் மட்டும் கரெக்டா அவுட் குடுத்த்துடுவேன். ஆப்பனன்ட் டீம்காரங்க நான்தான் அம்பயரா இருக்கணும்னு ஒத்தக்கால்ல நிப்பாங்கன்னா பாத்துக்கோங்களேன்.

  காலேஜ் போற காலம் வந்துச்சு சார். என்கூட படிக்கிற பசங்க எல்லாம் ஜாலியா பொண்ணுங்க கூட அரட்டை அடிப்பாங்க கிண்டல் பண்ணி விளையாடுவானுங்க.  லேடீஸ் காலேஜ் வாசல்ல சைட் அடிக்க போவாங்க. நான் ரொம்ப நல்லவனாம் என்னை கூப்பிட்டுக்கிட்டு போக மாட்டாங்க. எனக்கும் ஆசையாத்தான் இருக்கும் ஆனா என்னால அவங்கள மாதிரி என்னால இருக்க  முடியாது.
   அடிக்கடி கட் அடிச்சிட்டு பரங்கி மலை ஜோதியில சினிமா பாப்பானுங்க. அடுத்த நாள் அந்த சினிமாவைப் பத்தி பொண்ணுங்களோட பேசிக்கிட்டிருப்பாங்க. நான் பக்கத்தில போகும்போது நிறுத்திட்டு வேற மேட்டர் பேச ஆரம்பிச்சுடுவாங்க. ஆனாலும் இந்த பொண்ணுங்க ரொம்ப மோசம் சார். எங்கிட்ட பேசும்போது மட்டும் பாடத்தைபத்தி மட்டும்தான் பேசுவாங்க. நான் ரொம்ப நல்லவனாம் கன்னாபின்னான்னு பேச மாட்டேனாம். எப்படி இருக்கு பாருங்க சார். காலேஜ் லைப் இப்படியே முடிஞ்சு போச்சு .

   அப்புறம் வேலை கிடைச்சது. அங்கயும் இதே கதைதான். நான் திறமையானவனாம் ரொம்ப பொறுமைமையானவனாம். என்கூடவேலை செய்யறவங்களும் அப்படித்தான் சொன்னாங்க.
சாருக்கு மட்டும் எப்படி கோவம் வராம இருக்குன்னு கேப்பாங்க. அப்புறம் எனக்கு எப்படி சார் கோவம் வரும்?

   கல்யாணமாச்சு  சார் எனக்கு. மாமியார் வீட்டில எனக்கு ரொம்ப நல்ல பேரு. ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளுவாங்க. . என்ன சார் பண்றது. நல்லவனா இருந்துதானே ஆகணும் அப்புறம் என்மனைவிக்கும் என்மேல நல்ல அபிப்ராயம்னா பாத்துக்கோங்களேன்.நம்ப முடியல இல்ல? நம்பறதெல்லாம் நடக்காததும்,நம்பாததெல்லாம் நடக்கறதும்தனே வாழ்க்கை !
   ஒரு நாள் நான் கம்ப்யூட்டர்ல ஒக்காந்து ஏதோ பண்ணிக்கிட்டிருந்தேன். என் மனைவியும் அவங்க பிரண்டும் ஹால்ல பேசிக்கிட்டிருந்தாங்க. "எங்க வீட்டுக்காரர் மாதிரி நல்லவர ரேராத்தான் பாக்க  முடியும். எனக்கு வீட்டு வேலையில ரொம்ப ஹெல்ப் பண்ணுவார். லீவு நாள்ல டீ ல்லாம் போட்டு கொடுப்பார்" னு என் மனைவி சொன்னது என் காதில விழுந்தது.

  அப்புறம் என்ன நடந்திருக்கும்னு  நீங்க நினைக்கிறது சரிதான் சார். ஆமாம் நான் எப்படி சும்மா இருக்க முடியும். உடனே கிச்சனுக்குள்ள நுழைஞ்சு ரெண்டு பேருக்கும் டீ போட்டு எடுத்துட்டுப் போய் குடுத்தேன். 

    இப்படியே காலம் போய்க்கிட்டிருந்தது. ஒரு நாள் ஆபீசில் இருந்து வீட்டுக்கு திரும்பினதும் டேபிள்ல  5 வது படிக்கிற என் பையனோட ரேங்க் கார்டு பாத்தேன். மார்க்கெல்லாம் குறைவா இருந்தது. எனக்கு கோவமா வந்தது. ரெண்டு சாத்து சாத்தனும்.  கையெழுத்து போடக்கூடாதுன்னு முடிவு பண்ணேன். எங்க பையனைக் காணோமேன்னு தேடினேன். வெளிய ரோட்ல அவன் ப்ரெண்டு கூட பேசிக்கிட்டிருந்தான் அவன் என்பையனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்  "டேய்! எங்கப்பாகிட்ட  ரேங்க் கார்டு இன்னும் காட்டலடா. நான் வாங்கி இருக்கிற ரேங்க்குக்கு என்ன செம அடி அடிப்பாருடா? உங்க அப்பா அடிப்பாரா" ன்னு கேட்டான். என் பையன்சொன்னான், "எங்கப்பா ரொம்ப நல்லவரு அடிக்க மாட்டாருன்னு.
அதை  என் காதில கேட்டுட்டனே சார். அப்புறம் எப்படி நான் அடிக்க முடியும்? இன்னும் எவ்வளவோ இருக்கு சார் . எதை சொல்றது எதை விடறது.

   என்ன உசுப்பேத்தி உசுப்பேத்தியே நல்லவனாக்கிட்டாங்க சார். வேற வழியில்ல இனிவாழ் நாள் முழுசும் நல்லவனா இருக்கவே முடிவு செஞ்சிட்டேன்.  என்ன சார் சொல்லறீங்க?.

******************************************************************************************
 குறிப்பு: இதில் வரும் நான் நானில்லைங்க. முற்றிலும் கற்பனைதான். நான் பொய் சொல்ல மாட்டேன்னு உங்களுக்கே தெரியும். ரொம்ப நல்லவங்க . ஹிஹிஹி 

*******************************************************************************
படித்து  விட்டீர்களா?
******************************************************************************************************

செவ்வாய், 21 ஜனவரி, 2014

கந்தா என்கிற கந்தசாமி


என் தேன் கூட்டின் சில தேனீக்கள்  
- 1 கந்தா என்கிற கந்தசாமி


   என் பிள்ளைப் பிராயத்தின் சில பக்கங்களை ஆக்ரமித்துக் கொண்டவன் கந்தா என்கிற கந்தசாமி. அவன் எனது நன்பன்(எழுத்துப் பிழை அல்ல).  என்னைவிட இரண்டு வயது பெரியவன்.அவனுடன் சுற்றிக் கொண்டிருக்கும்போது நேரம் போவதே தெரியாது. அவன் நண்பன் மட்டுமல்ல. எனக்கு அவன்தான் ஹீரோ. அவன் ஒரு சகலகலா வல்லவன். விளையாட்டுகளில் அவனை யாரும் மிஞ்ச முடியாது. அவன் ஒவ்வொரு செயலும் எனக்கு பிரமிப்பாக இருக்கும். பள்ளி நேரம் போக மீதி நேரத்தில் அவன் வீட்டில்தான் தவமாய்க் கிடப்பேன். ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக ஏதாவது செய்து என்னை அசத்திக் கொண்டிருப்பான்.

    நாங்கள்  இருவரும் அரை டிராயர் போட்ட ராமலக்ஷ்மணர்கள் போல் இணை பிரியாது கிராமத்து வீதிகளை வலம், இடம் என்று சுற்றி வந்து கொண்டிருப்போம். இருவரும் சேர்ந்து ஓசியில் அம்புலிமாமா படிப்போம். அதில் ராமாயணம் தொடராக வந்து  கொண்டிருந்தது. அதன் பாதிப்பில் வில் செய்து அதை வைத்து பூவரசு இலையை துளைக்கும்படி அம்பு விடுவோம். அணுவை துளைத்து ஏழு கடலை அம்பு தாண்டி சென்றது போன்ற மகிழ்ச்சி கொள்வோம். வில்லை தோளில் மாட்டிகொண்டும் கூர்மையாக சீவப்பட்ட அம்புகளை முதுகில் கட்டி வைத்துக் கொண்டு விளையாடுவது எங்களுக்கு பிடித்தமான ஒன்று.. அவன் வில்லும் அம்பும் அழகாக இருக்கும். பச்சை சவுக்கு குச்சியில் கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டு மேல்தோலை உரித்துவிடுவான்.தோலின் நிறமும் வெள்ளை நிறமும் கலந்து வண்ணமிட்டது போல் அழகாக காட்சி அளிக்கும். அதை வளைத்து வில்செய்வான். அவன் வல்வில் கந்தசாமியாக என் கண்ணுக்கு தெரிவான்.

    கந்தா அப்படி ஒன்றும் வசதியானவன் அல்ல. அவனுக்குஅம்மா மட்டுமே. அண்ணன் அக்கா உண்டு என்றாலும். அவன் கட்டற்ற சுதந்திரம் உடைய கன்றுக் குட்டியாய் திரிந்தான். உலகிலேயே அவன்தான் திறமைசாலி என்று எண்ணுவேன். அவன் ஒவ்வொரு செயலும் என்னை அப்போது ஆச்சர்யப் படவைத்தது 

   பேட்டரியில் குட்டி பல்பை எரிய வைத்து வித்தை கட்டுவான். ஒயரை பல்பு பேட்டரியுடன்  இணைக்க தாரை பயன்படுத்துவான். ஏற முடியாத எல்லா மரங்களிலும் ஏறிக் காட்டுவான். சைக்கிளை கைகளை விட்டு விட்டு ஒட்டுவான்.சைக்கிள் பஞ்சர் அவனே ஒட்டுவான். பாம்புகளை கொன்று வாலைப் பிடித்து சுற்றி எங்கள் மேல் வீசுவதுபோல் பயமுறுத்துவான். ஒத்தையா இரட்டையா, பல்லாங்குழி,கல்லாங்காய் போன்ற விளையாட்டுக்களிலும் பெண்களையும் போண்டி ஆக்கிவிடுவான். 

    விதம் விதமான தீப்பெட்டி அட்டைகள் சிகரட் பெட்டி அட்டைகளை கந்தா சேகரித்து வைத்திருப்பான். அவையெல்லாம் அவன் விளையாட்டில் ஜெயித்தவை. நாங்கள் கஷ்டப்பட்டு சேகரித்தவைகளை அவனிடம் இழந்து விடுவோம். 

   மண் தரையில் வட்டம் போட்டு  அதனுள் தன்னிடம் உள்ள அட்டைகளை வைக்க வேண்டும். மண்போட்டு மூடிவிட்டு . கொஞ்சம் தொலைவில் இருந்து தட்டையான கல்லை வட்டத்தை நோக்கி எறிய வேண்டும். யாருடைய கல் வட்டத்துக்கு மிக ஆருகில் இருக்கிறதோ அவர்கள் முதலில் கல்லை எடுத்து வேகமாக அட்டைகள் மூடப்பட்ட மண்மீது வேகமாக வீச வேண்டும். மண் கலைந்து வட்டத்திற்கு வெளியே வரும் அட்டைகளை வீசியவர் எடுத்துக் கொள்ளலாம். மிஞ்சி வட்டத்திற்குள் இருப்பவையே மற்றவர்களுக்கு கிடைக்கும். பெரும்பாலும் முதல் வீச்சிலேயே அத்தனையும் அடித்துக் கொண்டு சென்றுவிடுவான் கந்தா.

  கோலி விளையாட்டிலும் அப்படித்தான். குழி ஆட்டமாக இருந்தால் நம் முட்டியை தேய வைத்து விடுவான். கோலி விளையாட்டில் இன்னொரு வகையான  பேந்தா விலும் அவன் அணியே வெற்றி பெறும். ஒருவேளை தோற்று விட்டால் அடுத்த ஆட்டத்தில் அவன் காண்பிக்கும் ஆக்ரோஷம்  பலருடைய கோலிகளை உடைத்துவிடும். அப்போதுதான் அவனுக்கு திருப்தி.

   பம்பரம் விடுவது ஒரு கலை அதில் கை தேர்ந்தவன் கந்தா. .பம்பரம் விடுதலில் மூன்று வகை உண்டு. சாதாராண மாக விடுதல் , சொடுக்குவதுபோல் விடுதல், தேங்காய் உடைப்பது போல் ஓங்கி எறிதல். கடைசி முறையில் பம்பரம் மிகவேகமாக சுழலும் மண்ணில் பள்ளத்தை உண்டாக்கும். ஆனால் இவ்வாறு பம்பரம் விடுவது மிகக் கடினம். நிறையப் பேருக்கு பம்பரம் சுற்றாமல் உருண்டு ஓடிவிடும். ஆனால் கந்தாவுக்கு இது மிகவும் எளிது. சாட்டையை லாவகமாக  சுற்றி ஆணியை லேசாக முத்தமிட்டு பலம் கொண்ட மட்டும் ஓங்கி வீச பம்பரம் பூமியைவிட வேகமாக சுற்றுவது போல் இருக்கும். அதை அப்படியே லாவகமாக கையில் ஏந்தி சுற்றவைப்பான் . இந்த பம்பர விளையாட்டில்தான் அப்பீட் என்று ஒன்று உண்டு. அவற்றை எல்லாம் விளக்க ஒரு பதிவு போதாது.
   கில்லி விளையாட்டிலும் அவன் கில்லிதான். மற்றவர்கள் முழு பலமும் பிரயோகித்து நீண்ட தூரம் அடித்து பெரும் புள்ளிகளை  டபுள்ஸ் டிரிபில்ஸ் என்று அடித்து கஷ்டமில்லாமல் ஜெயித்து விடுவான்.எத்தனை முறை தோற்றாலும் மீண்டும் அவனிடம்தான் விளையாட ஆர்வம் கொள்வேன்.
    பள்ளியில் ஆண்டுவிழாவிற்காக கட்டபொம்மன் நாடகம் நடத்த ஆசிரியர்கள் முடிவு செய்தனர். கந்தாதான் கட்ட பொம்மன். மற்ற பாத்திரங்களுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்துவிட்டனர். அன்று நான் ஏதோ காரணத்திற்காக பள்ளி செல்லாததால் அந்த நாடகத்தில் இல்லை. நமக்கு நடிக்க வாய்ப்பிலையே என்று ஒத்திகையை ஏக்கத்தோடு  பார்ப்பேன். என்னுடைய தந்தைதான் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் என்றாலும் நாடகத்தில் சேர்த்துக் கொள்ளும்படி தந்தையிடம் நான் கேட்கவில்லை. சேவகன் பத்திரத்தில் ஒரு பையன் சரியாக வசனம் பேசாததால் கந்தா அவனை எடுத்து விட்டு என்னை சேர்த்துக் கொள்ள சிபாரிசு செய்தான்.எனக்கான வசனம் மிகக் குறைவு என்ற போதிலும் கட்டபொம்மன் உட்பட அனைத்து பாத்திரங்களின் வசனங்களும் எனக்கு மனப்பாடம். ஆனால் ஏதோ காரணத்துக்காக ஆண்டுவிழாவே நடக்காமல் போனதால் ஏமாற்றம் அடைந்தோம்.

அடுத்த ஆண்டுஅவன் ஒன்பதாம் வகுப்பு படிக்க பக்கத்து ஊர் உயர் நிலைப் பள்ளிக்கு சென்றுவிட நாங்களும்  எனது அண்ணணின் மேற்படிப்புக்காக  சென்னைக்கு இடம் பெயர வேண்டி இருந்தது.என் தந்தையின் வேலை மட்டும் அங்கேதான். விடுமுறை நாட்களில் சென்னைக்கு வருவார் .அப்போது கந்தாவைப் பற்றி கேட்பேன். ஓராண்டு சென்னை வாசம் நிறைவடைய கோடை விடுமுறையில்  ஊருக்கு சென்றேன். சாப்பிடக் கூட இல்லை கந்தா வீட்டுக்கு ஓடினேன்.

    கந்தா இன்னும் அரசனாகத்தான் இருந்தான். ஆனால் இப்போது அவன் ராஜாங்கம் மாறி இருந்தது.  அவனது அவையில் நான் புதியவனாய் உணர்ந்தேன். அவனுக்கு அப்படித் தோன்றியதா தெரியவில்லை.  இப்போதும் பல விளையாட்டுக்கள் விளையாடினோம். பலவற்றில் கந்தா என்னிடம் தோற்றுப் போனான். அவன் அதை பெரிதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை . எனக்கு ஏமாற்றமாக இருந்தது. எனது ஹீரோ என்னிடம் தோற்பதை நானே விரும்பவில்லை. பல ஆட்டங்களை பாதியில் நானே கலைத்துவிட்டேன்.

    உயர்நிலைப் பள்ளையின் பாதிப்பு அவன் பேச்சில் தெரிந்தது. அவனது ஆசிரியர் வகுப்பில் பேசியதை எல்லாம் சொல்லிக் காட்டினான். அதில் சமகால அரசியலும் இருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் அவன் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தேன்.
  ஒரு சில நாட்களே அங்கிருக்க முடிந்தது. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் ஊருக்குப் போக வேண்டிய சந்தர்ப்பம் வந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.

   இப்போது கந்தா அரை டிராயரில் இருந்து லுங்கிக்கு மாறி இருந்தான். இளமை அவன் முகத்தில் மீசை வரைய ஆரம்பித்திருந்தது. குரலின் மென்மை மாறி இருந்தது. நான் பார்த்த பத்து நிமிடத்தில் 10 தடவைக்குமேல் கண்ணாடியின் முன் நின்று தலை வாரிக் கொண்டே இருந்தான். முகத்தில் இருந்த பவுடரின் வாசனை  புதிதாக இருப்பதாக என் மூக்கு உணர்த்தியது. 
   என்னைப் பார்த்து புன்னகைத்துவிட்டு நான் அவசர வேலையா வெளிய போறேன் . அப்புறம் பாக்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பினான். "சரி போய்ட்டுவா நான் இங்கயே இருக்கேன்" என்று சொல்லிக் கொண்டே மூலையில் இருந்த மர பீரோவின் மேல் லேசாகத் தெரிந்த ஒரு புத்தகத்தை எடுக்க முனைந்தேன். நான் எடுக்கு முன் தாவி வந்து அதை எடுத்த கந்தா "இதையும் எடுத்துப் போகவேண்டும்" என்று கூறிக்கொண்டே பான்ட் பாக்கெட்டில் புத்தகத்தை சொருகிக் கொண்டு  பறந்தான். 
அந்தப் புத்தகம் என்னவாக இருக்கும் என்று அப்போது புரியவில்லை.

அவன் அம்மாவும் அக்காவும் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவன் இப்போதெல்லாம் ஒரு புதிய நண்பனுடன் சுற்றிக் கொண்டிருப்பதாகவும். இரவு வெகு நேரம் கழித்து வீடு திரும்புவதாகவும் வருத்தப் பட்டனர் .கந்தாவின் அம்மா என்னை சாப்பிடச் சொலி வற்புறுத்தியபோதும் வேண்டாம் என்று மறுத்துவிட்டு ஏமாற்றத்துடன் புறப்பட்டேன் .
    அதற்குப் பின் இன்றுவரை கந்தாவை பார்க்கவில்லை. ஏதாவது கல்யாணம் அல்லது விசேஷங்களில் கூட அவனை பார்க்க முடியவில்லை. அதன் பின் படிப்பு வேலை என்று நாட்கள் ராக்கெட் வேகத்தில் நகர்ந்தாலும்  கந்தா என் நினைவின் ஒரு மூலையில் சத்தம் போடாமல் ஒளிந்து கொண்டுதான் இருந்தான். எப்போதாவது தெருக்களில் பம்பரம்.பட்டம் விடும் சிறுவர்கள் கண்ணில் படும்போது  ஒளிந்திருக்கும் கந்தா வெளியே வந்து போவான்

    விசாரித்ததில் கந்தா யாரோ ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு வேறு ஊரில்  இருப்பதாக தெரியவந்தது. முகநூல், ட்விட்டரில் கந்தசாமி என்ற பெயர் கண்ணில் பட்டால் அவனாக இருக்குமோ என்று ப்ரோபைல் படங்களை அசட்டுத்தனமாக உற்றுப் பார்ப்பதுண்டு. கொஞ்சம் முயற்சி  செய்தால் கந்தாவின் தொலைபேசி எண், முகவரியை கண்டுபிடித்து விடலாம். ஆனால் நான் முயற்சிக்க வில்லை. இனி சந்திக்க வேண்டும் என்று விதித்திருந்தால் அந்த சந்திப்பு யதேச்சையாக நிகழட்டும்.  அதுவரை என் மனத்திரையில் விழுந்த கந்தாவின் மாயபிம்பம் அப்படியே நிலைக்கட்டும் .
    கந்தா எனும் தேனீ  எனது தேன்கூட்டில் சேகரித்து வைத்த தேனின் சுவை இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது அவ்வப்போது ருசித்துப் பார்க்க..
( இன்னும் மொய்க்கும் சில தேனீக்கள்)
********************************************************************************


  

ஞாயிறு, 28 ஜூலை, 2013

சுஜாதா சொல்கிறார்-சிறுகதை எப்படி இருக்க வேண்டும்?

  தற்போது  சிறு கதை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. நான்கைந்து பக்கங்களை தொடர்ந்து வாசிக்க பொறுமை இருப்பதில்லை. நாவல்களின் நிலையோ கேட்கவே வேண்டாம். புத்தகக் கண்காட்சியின்போது ஆர்வத்தின் காராணமாக வாங்கி வைத்த நாவல்கள் இன்னமும் படிக்கப் படாமல் (படிக்கமுடியாமல்) அலமாரியில் உறங்குவதாக  பலரும் சொல்கின்றனர். ஆனாலும் சிறுகதைகளை விரும்பி வாசிக்கும் வாசகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 
  ஒரு சிறு கதை எப்படி இருக்கவேண்டும் என்பதை சுஜாதா இப்படிக் கூறுகிறார். தற்போது எழுதுபவர்கள் அதை கருத்தில் கொள்ளலாம்.

   "எனக்குத் தெரிந்தவரை ஒரே ஒரு விதிதான் அதற்கு. சிறிதாக உரைநடையில் விவரிக்கப் பட்ட கதை. நல்ல சிறுகதை என்பது சிறிதாக சிறப்பாக விவரிக்கப்பட்ட கதை. சிறிதாக என்றால் சுமார் ஆயிரத்திலிருந்து பத்தாயிரம் வார்த்தைகளுக்குள் சொல்லலாம் என்று குத்து மதிப்பாக கொள்ளலாம். நூறு பக்கம் இருந்தால் அதை சிறுகதை என்று ஒப்புக் கொள்வது கடினம்.அதே போல் ஒரு பக்கத்தில் இருந்தால் அது கதை சுருக்கம். நான்கு வரிகளுக்கு கீழ் இருந்தால் கவிதையாக சொல்லிவிடலாம்.சில நேரங்களில் சில கட்டுரைகளை கூட சிறுகதையாகக் கருதலாம். 

   கதை சிறப்பாக இல்லையென்றால் அதை மறப்பார்கள்.ஒரு கதை ஜீவித்திருக்க அது சிறப்பாக சொல்லப் பட்டிருக்க வேண்டும்.யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் இருக்கலாம். நூற்றாண்டுகாலத்தையோ  சில நிமிஷங்களையோ சொல்லலாம். கருப்போ சிவப்போ,ஏழையோ, பணக்காரனோ, வயதானவர்களோ இளைஞர்களோ, வியாதியஸ்தர்களோ, தர்மகர்த்தாக்களோ, விஞ்ஞானிகளோ வேதாந்திகளாகவோ எந்த கதாபாத்திரமும் தடை இல்லை.மனிதர்களே இல்லாமல் கூட கதை சொல்லலாம்.கண்ணீர் வர சொல்லலாம். சிரிக்க சிரிக்க சொல்லலாம். கோபம் வர, ஆர்வம் வர, வெறுப்பு வர ஒன்பதில் ஏதேனும் ஓர் உணர்ச்சியைத் தந்தால் போதும்.

    இவ்வளவு விஸ்தாரமாக அறுதியிடப்படும் சிறுகதையில் எனக்குத் தெரிந்து ஒரே ஒரு பொது அம்சம்தானுண்டு. படித்த இரண்டு நிமிஷத்தில் மறந்து போய்விட்டால் அது கதையல்ல. பஸ் டிக்கெட்.. ஒரு வாரம் கழித்தோ ஒரு வருடம் கழித்தோ ஞாபகம் இருந்து அதை மற்றவரிடம் மாற்றியோ மாற்றாமலோ சொல்ல வைப்பது நல்ல கதை. நல்ல சிறுகதைகள் காலத்தையும் அன்றாட அவலங்களையும் கடக்கின்றன. 

   ஒரு கதை உங்களை பாதித்திருந்தால் ஒரு மாதம்; ஏன் ஒரு வருடம் விட்டுக் கூட அதை நீங்கள் திருப்பி சொல்ல முடியும். இது உங்கள் ஞாபகப் பிரச்சனை அல்ல.கதையின் பெயர்கள்,இடம் பொருள்,ஏற்பாடெல்லாம் ஞாபகம் இராது. ஆனால் கதையின் அடிநாதம், அதில் படித்த ஒரு கருத்தோ வரியோ நிச்சயம்  நினைவிருக்கும். அப்படி இல்லை என்றால் அந்தக் கதை உங்களைப் பொருத்தவரை தோல்விதான்.

    இதே விதிதான் கவிதைக்கும். இதேதான் நாவலுக்கும். ஒரு வாசகன் தனக்கு பிடித்தமான எழுத்தாளனை நண்பனைப் போல தேர்ந்தெடுக்கிறான். காரணம் அந்த எழுத்தாளன் எழுதுவது அவனுக்குப் புரிகிறது

   நல்ல கதைகளை அலசிய ஹெல்மெட் பான் ஹைம் என்பவர் அவற்றுக்கு சில அடையாளங்களை சொல்லியிருக்கிறார். சிறுகதையின் ஆரம்ப வாக்கியத்துக்கு முன் கதையின் தொண்ணூறு சதவீதம் நடந்து முடிந்திருக்கும். இதை கொஞ்சம் யோசித்து பாருங்கள். அதாவது சிறுகதையின் முடிவுக்கு மிக அருகில் ஆரம்பிக்கும் பெரும்பாலான கதைகள்  ஒரு பேசப்பட்ட வாக்கியத்தில் முடிகின்றன. வாழ்க்கையின் அபத்தத்தை சுட்டிக் காட்டி முடிகின்றன அல்லது கேள்விக் குறியில்.

     மொத்தத்தில் சிறுகதை என்பது அற்புத கணத்தை நிரந்தரமாக்கும் ரசவாதம்."

   சுஜாதாவின் வரையறைகளை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. 

    ஆனால் ஒன்றை மட்டும் சொல்லலாம். எப்போதோ படித்ததாக இருந்தாலும் இப்போதும் மனதில் அவ்வப்போது நினைக்கத் தோன்றுபவை சிறந்த சிறுகதைகள் 
அதன் படி என் மனதில் நிற்கும் சில சிறுகதைகள் 

1. காளையர் கோவில் ரதம் 
இது பள்ளியில் Non Detailed புத்தகத்தில் படித்தது. இதை எழுதியவர் ஜெகசிற்பியனா? கோ.வி.மணிசேகரனா? என்று நினைவில் இல்லை.
2. The Blind Dog- R.K.Narayan.  இது ஆங்கில Non detail இல் படித்தது.
3. நந்தவனத்தில் ஓர் ஆண்டி- ஜெயகாந்தன்- இதுவும் Non detailed
4. மாஞ்சு- சுஜாதா - குமுதத்தில் படித்தது என்று நினைக்கிறேன்
5. வெறுங்கையே மீண்டுபோனான்.- எழுதியவர் பெயர் நினைவில் இல்லை. விகடனில் படித்தது
  இந்த கதையை மூத்த பதிவர் சென்னை பித்தன்  பதிவாக வெளியிட்டிருந்தார். நானும் இதை அவருடைய வலைப்பக்கத்தில்தான் சமீபத்தில் படித்தேன். 
 7. யாரோ பார்க்கிறார்கள். -எப்போதோ படித்ததை(எங்கு படித்தது என்பது நினைவில் இல்லை) என் விருப்பத்திற்கேற்ப  மாற்றி பதிவிட்டிருக்கிறேன்.
(மேற்குறிப்பிட்டவை எல்லாம் பழைய எழுத்தாளர்கள் எழுதியவை.)

   இது போல சில சிறுகதைகள் உங்களையும் கவர்ந்திருக்கலாம். முடிந்தால் அவற்றை கருத்தில் தெரிவிக்கவும்.

******************************************************************************************

படித்து  விட்டீர்களா?
கணினி! நீ ஒரு டிஜிடல் ரஜினி !
என்னை கவுத்திட்டயே சரோசா!-காதல் கடிதம் போட்டி
எனது முதல் கணினி அனுபவம் 
மீண்டும் திருவிளையாடல்