என்னை கவனிப்பவர்கள்

புதன், 6 மார்ச், 2019

500 வது பதிவு நானும் ஏர் ஃபோர்ஸ் ரிடர்ன்தான்



Image result for 500th blogger post
எனது 500 வது பதிவு .

------------------------------
இந்த விமானப் படைப் பணிக்கு சேரப் போன  எனது  அனுபவம்  கொஞ்சம் கற்பனை கலந்தது.

 வேலைக்காக காத்திருந்தபோது  இடையே ட்யூஷன் சொல்லிக் கொடுப்பது  வேலைக்கான போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது என காலம் போய்க்கொண்டிருந்தது . ரயில்வே ரெக்ரூட்மெண்ட்., பேங்கிங் ரெக்ரூட்மெண்ட் ஸ்டாஃப் செலெக்‌ஷன், டி.என்.பி.எஸ்சி தேர்வுகளில் எதிலாவது தேர்ச்சி அடைந்து விடலாம் என்ற அல்ப ஆசை இருந்தது.  சில  புத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டு படிப்பதும் உண்டு.  காம்படிஷன் சக்ஸஸ் போன்ற பத்திரிகைகளுக்கும் அவ்வப்போது  வாங்குவேன் .

         அதில் ஐ.ஏ,எஸ் தேர்வில் முதலிடம் பெற்றவர்களின் பெற்றவர்களின் பேட்டி இருக்கும்.  தலைப்பாகை  சிங்குகள் தனது வெற்றிக் கதையைக் கூறுவார்கள். அவர்கள் ஐ.ஐடில்  படித்தவர்களாக இருப்பார்கள். அதைப் படித்தாலே நமக்கு இதெல்லாம் சரிப்படாது என்று தோன்றினாலும் சும்மா எதற்காவது அப்ளை செய்வது   உண்டு
     ரயில்வே ஸ்டேஷன்ல 10000 பணியிடங்கள் 20000 பணியிடங்கள்னுகாலி  போட்டு உசுப்பேத்துவான். அப்ளிகேஷன்ஸ் சேல்ஸ் பயங்கரமா இருக்கும்.ஆனா வேலதான் கிடைக்காது. இப்போது எல்லாம் ஆன் லைன் ஆகிவிட்டது
     அப்போது  ஏர்ஃபோர்ஸ்ல  கிளார்க்  வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் என்று  விளம்பரம் வந்தது  சுபயோக சுப தினத்தில் அப்ளை செய்தாயிற்று. நான் அப்ளை செய்தது வீட்டுக்கு தெரியாது.  வீட்டில் மற்றவர்கள் ஊருக்கு சென்றிருந்தனர். 
      ஒரு நாள் எழுத்துத் தேர்வுக்கு வரச் சொன்னார்கள். காலையில ஒரு எக்சாம். அதுல பாஸ் பண்ணவங்களுக்கு மத்தியானம் எக்சாம்.நானும் தேர்வு எழுத பேனா பென்சில் ரப்பர் போன்ற ஸ்கேல் போன்ற பயங்கர ஆயுதங்களுடன்  புறப்பட்டேன். 

     கிழக்கு தாம்பரம் ஏர்ஃபோர்ஸ் கேம்புக்குள்(Camp) நுழைந்தேன். உள்ளே சிறிது தூரம் நடக்க வேண்டி இருந்தது. அங்கு  மஞ்சள் நிறத்தில் குட்டி விமானங்ள் சில இருந்தன. இவை வானத்தில் பறக்கும்போது பார்த்திருக்கிறேன்.

    காலையில்  500 பேர் தேர்வு எழுதினார்கள். தேர்வு எளிமையாக இருந்தது.  9 மணிக்கு ஆரம்பித்து 11 மணிக்கு முடிந்து விட்டது.   ஒரு மணிக்கு ரிசல்ட் சொல்லி விட்டார்கள். முதல் தேர்வில் செலக்ட் ஆகி இருந்தேன்.  முதல் தேர்வில் செலக்ட் ஆன  கொஞ்சம் பேருக்கு இரண்டு மணிக்கு 2 ஆவது தேர்வு  வைத்தார்கள்.  அதன் ரிசல்டும் உடனே சொல்லி விட்டார்கள். ஆச்சர்யம்! அதிலும் தேர்வு செய்யப்பட்டிருந்தேன்.  மறு நாள்  மெடிக்கல் டெஸ்டுக்கு வர வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.  கூட  இருந்தவர்கள் உனக்கு கன்ஃபார்மா செலக்ட் ஆயிடும் என்றார்கள். 
சந்தோஷமாக வீட்டுக்கு வந்தேன். 

     என் நண்பன் ஒருவன் மிலிட்டரில இருந்தான். அதிர்ஷ்டவசமாக அவன் ஊருக்கு வந்திருந்தான்  அவன்கிட்ட விஷயத்தை சொல்லி   ஆலோசனை கேட்டேன். 

”ஏர் ஃபோர்ஸ்லயா சேரப்போற! ரொம்ப கஷ்டமாச்சே . செம பெண்டெடுப்பான். அனேகமா பார்டர்லதான் போஸ்டிங் போடுவான். இருபதுல இருந்து இருபத்தைந்து  வயசுக்குள்ளதான் காஷ்மீருக்கு அனுப்புவான். மத்தவங்களால அந்தக் குளிர தாங்க முடியாது. பயங்கரமா இருக்கும். நீ பயப்படாத. என்ன? சண்டை வந்தா ஃப்ளைட்ல போய் குண்டு போடனும்.அவ்வளவுதான் ”: என்று சொல்லி ஒரு குண்டைப் போட்டான்.

”அடப்பாவி நான் அப்ளை பண்ணி இருக்கறது க்ளெர்க் போஸ்ட்தானே நான் ஏன் அதெல்லாம் செய்யனும் “
“அதெல்லாம் கிடையாது சண்டன்னு வந்துட்டா  எல்லாரையும்தான் அனுப்புவாங்க”
உன்ன எப்பாவாவது சண்டை போட அனுப்பி இருக்காங்களா”
“ம்  எனக்கு அந்த சான்ஸ் கிடைக்கல உனக்காவது கிடைக்கட்டும்” என்று வாழ்த்தி பீதி ஏற்றினான்”
மேலும் விடாமல் “ஆமா1  நீ வெஜிடேரியனாச்சே மிலிடரில நான் வெஜ்தானே சாப்பிடனும். சரி பரவாயில்ல போகப்போக சரியாயிடும்.  “

நாங்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டே நண்பனின் அப்பா அங்கு வந்தார்.  அவர் ரிட்டயர்டும் மிலிட்டர் ஆஃபீசர்.
விஷயத்தை கேட்டு விட்டு கடகடவென சிரித்தார். பயமுறுத்தாத போடா! என்று அவனை அனுப்பி விட்டு , அதெல்லாம் ஒன்னும் இல்ல. தைரியமா போ. ஏர்போர்ஸல  நீ ஜாயின் பண்ற போஸ்டுக்கு  ஏத்த சிவில் ஒர்க்தான்  அல்லாட் பண்ணுவங்க” என்று தைரியம் கொடுத்தார்.அப்புறம் பல சந்தேகங்களைக் கேட்டும் தெளிவு பெறாமல் வீட்டுக்குத் திரும்பினேன். 

       இரவு தூக்கம் வராமல் நெடு நேரம் கழித்துத் தூங்கினேன். தூக்கத்தில் விமானக் கனவுகள் அணிவகுத்தது. கனவில்  நான் ஒற்றை ஆளாக விமானத்தை ஒட்டினேன். மவுண்ட்ரோடில் ஒட்டிக் கொண்டு போனேன். அப்படியே ட்ரைன்  ட்ராக்கில்  ப்ளைட் ஒட்டி சாதனை புரிந்தேன் . அப்படியே கொஞ்சம் முன்னேறி விமானத்தை தாறுமாறாக ஒட்டி குட்டிக் கரனம் அடிக்க வைத்தேன். ”   அப்புறம் விட்டு வாசலில் ஃப்ளைட்டை நிறுத்தியதும் விழிப்பு வந்து விட்டது.

  அடுத்த நாள் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே சென்றேன்.  கேட் இன்னும் திறக்கவில்லை எனக்கு முன்பாக ஏற்கனவே என்னுடன் தேர்வானவர்கள் வெளியே  வரிசையில்   நின்றிருந்தார்கள்.  

அங்கே பேசிக்கொண்டிருந்தார்கள் ”மெடிக்கல் டெஸ்ட்ல செலக்ட் ஆயிட்டா அப்புறம் வெளியே விடமாட்டாங்க. அப்பவே வேலைக்கு சேந்திடனும்”. என்றான் ஒருவன்.
   ”இது என்னடா வம்பா போச்சே நாம வந்தது வீட்டுக்குக் கூடத் தெரியாதே ஒரு வேளை செலக்ட் ஆயிட்டா எப்படி தகவல் சொல்றது”என்று பயம் வந்து விட்டது  

அவனே  ” கவலைப் படாதீங்க நீ ரொம்ப ஒல்லியா இருக்கியே! எவ்வளவு வெயிட்? . செலக்ட் ஆறது கஷ்டம்தான் “என்றான்?

    இன்னொருவன்” சில பேர் ஒல்லியாத்தான் இருப்பாங்க  ஆனா போன் வெயிட் இருக்கும் என்றான்.” எதுக்கும் கொஞ்சம் வாழப்பழம் சாப்பிடு வெயிட் கூட காமிக்கும் என்றான்
எனக்கும் அண்டர் வெயிட்டாக இருப்பேன் என்று சந்தேகம் வர  வாழைப்பழம் வாங்கி முக்கிமுக்கி தின்றாலும் மூன்று வாழைப்பழங்களுக்கு மேல் சாப்பிட முடியவில்லை, அப்போதுதான் பார்த்தேன். குண்டாக இருந்தவர்கள் கூட வாழைப்பழங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.  

     ஒரு வழியாக  மெடிக்கல் டெஸ்ட் தொடங்கியது. என் முறை வந்ததும்  ஒருவன் முதலில்  உயரம் அளவெடுத்தான். பின்னர் எடை எடுத்தான் குறித்துக்கொண்டான்  செஸ்ட் எக்ஸ்பேன்ஷன் பார்த்தான்.   அப்புறம் வேறு ஏதோதோ சோதனை எல்லாம் செய்தார்கள்
பின்னர் சிரித்துக் கொண்டே ஹிந்தியில் ஏதோ சொன்னான்.
 ஏக் மால் தோ துக்கடா ஏக் காவ் மே ஏக்  கிசான் ரஹ்தா தா என்பதைத்தவிர ஹிந்தியில் வேறு எதுவும் தெரியாது என்ப்தால் அவர்  சொன்னது புரியவில்லை

 வெளியே வந்து   கூட்டணி கிடைக்காத கட்சி தனியா நின்னு எலக்‌ஷன் ரிசல்டுக்காக காத்திருப்பது போல அல்ப ஆசையுடன்  காத்திருந்தேன்.  

மதியம்  தேர்வு செய்யப் பட்டவர் பட்டியலை  ஒட்டினர்.  எதிர்பார்த்தது போல என் பெயர் இல்லை.    இப்போது புரிந்தது ஹிந்தியில் அவர் சொன்னது ”அடுத்த முறையாவது நல்லா சாப்பிட்டு உடம்ப தேத்திக்கிட்டு வா”  என்பதாகத்தான் இருக்கும் என்று

       நான் வெற்றிகரமான தோல்வியுடன் வெளியேறினேன்.  இப்போது சொல்லுங்கள் நான் ஏர்ஃபோர்ஸ் ரிடர்ன் தானே!

---------------------------------------------------------------------------------------



    விங் கம்மேண்டர் அபிநந்தன் கடந்த வார  பேசு பொருளாக இருந்தார். அவரது வீரத்தால் அனைவரது மனதிலும் இடம் பிடித்திருந்தார்.  பாக்கிஸ்தான் அவரை  விடுவித்தது  ஒரு இன்ப அதிர்ச்சிதான். நிர்ப்பந்தமோ அல்லது நல்லெண்ணமோ எந்தக் காரணமாக இருப்பினும் இம்ரானுக்கு நன்றி .
 -------------------------------

இது எனது  500 வது பதிவு.   இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே  500 வது பதிவை எழுதிவிட வேண்டும் என நினைத்தேன். ஆனால் இப்போதுதான் முடிந்தது.
இதுவரை ஆதரவு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி