என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 28 ஏப்ரல், 2014

தேர்தல் கமிஷனுக்கு சபாஷ்+வாக்கு சதவீதம் குறைவு ஏன்?



இந்தப் பதிவுக்கு முன்னால் இரண்டு சின்ன கேள்விகள்
1)  ஒருவேட்பாளருக்கு தேர்தலில் எவ்வளவு ஒட்டு கிடைத்தால் செலுத்திய டெப்பாசிட் தொகை திரும்பக் கிடைக்கும்.
2) ஒரு தொகுதியில் போட்டியிட்ட அதிக வேட்பாளர் எண்ணிக்கை என்ன/
விடை கடைசியில்
**************************************************************************************************************
    
       தமிழகத்தில் தேர்தல் முடிந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது. அடுத்த கட்ட தேர்தல்கள் இருப்பதால் முடிவு தெரிந்து கொள்ள காத்திருக்க வேண்டி இருக்கிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் தேர்தல் நடத்தி முடிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை.
   தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை முதன் முதலாக அறியச் செய்தவர் டி.என்.சேஷன் என்று கூறலாம். ஆனால் அவரும் பணியில் இருந்து  ஓய்வுபெற்ற பின் பின்னர் ஒரு கட்சியில் சேர்ந்து தன் நடுநிலையை கேள்விக் குறி ஆக்கிவிட்டார். பொதுவாக தேர்தல் கமிஷன் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் என்ற கருத்து எப்போதும் உண்டு. ஏனெனில் தேர்தல் பணிக்கு பயன்பபடுத்தப்படும் உயர் நிலை அலுவலர்கள் ஊழியர்கள் பணியாளர்கள் அனைவரும் அரசுப் பணியாளர்களே என்பதால் சந்தேகக் கண் கொண்டே பார்க்கப் படுகிறது.

   முன்பெல்லாம்  விளம்பரம், பிரச்சாரம் , ஏகப்பட்ட பணம் செலவுசெய்தல் போன்றவற்றிக்கு கடுமையான கட்டுப் பாடுகள் இல்லை. தேர்தல் காலம் வந்துவிட்டாலே வீட்டு சுவர்களில்  உரிமையாளரின்  அனுமதி கேட்காமல் விளம்பரங்கள் செய்து சுவரை பாழடித்து விடுவார்கள். இதில் எந்தக் கட்சிகளும் விதி விலக்கல்ல. வேட்பாளர் தேர்வுக்கு முன்னதாகவே ஒவ்வொரு கட்சியும் சுவரை வெள்ளை அடித்து ரிசர்வ்  செய்து விடும். இதில் அவர்களுக்குள் தகராறு வேறு நடக்கும். ஆனால் சமீப தேர்தல்களில் விளம்பரங்கள் ஏதுமில்லை. கொடி தோரணங்கள் அதிகம் காணப்படவில்லை. ஒலி பெருக்கிகள் காதை கிழிக்கவில்லை. இவையெல்லாம் செலவு கணக்கில் சேர்ந்து விடும் என்பதால் ஓரளவிற்கு அடக்கியே வாசித்தனர்.

  அதற்கு முன்னர்தேர்தல் நடைபெறம் சமயங்களில் மட்டுமே வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படும் நரேஷ்குப்தா தேர்தல் ஆணையாளராக இருந்த காலத்தில்  வாக்காளர் பட்டியல் சேர்க்கையை  ஆண்டு முழுவதும் முடுக்கிவிட்டார். அரசு தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை BLO  என்று அழைக்கப் படும் BOOTH LEVEL OFFICERS களாக நிரந்தரமாக நிர்ணயம் செய்து இவர்கள் மூலமாக  ஆண்டுக்கு மூன்று முறைக்கு மேல் வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கம், திருத்தம் இவை செய்யப்பட்டன. ஆசிரியரால் ஆசிரியப் பணியை விட இந்தப் பணியையே பள்ளியில் செய்ய வேண்டி இருந்தது. இப்போதும் இந்நிலைதான் உள்ளது.    கல்வி உரிமை சட்டத்தில்  ஆசிரியருக்கு வேறு பணிகள் வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு தேர்தல் பணியும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியும் விதி விலக்குகள். ஆனால் அதிகப்படியான பணி தேர்தல் பணிமட்டுமே. 

  கிராமப் புறங்களில் இப்பணி எளிதானது   ஆனால் நகர்ப் பகுதிகளில் குறிப்பாக சென்னை புறநகர்ப் பகுதிகளில் இப்பணி கடினமானது. நிறையப் பேர் வாடகைதாரர்கள் என்பதால் அடிக்கடி வீடு மாறி சென்று விடுவார்கள். குடிபெயர்ந்து செல்லும் ஒருவர் இங்கு வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப்பித்துவிட்டு   வேறு ஒரு இடத்திற்கு இடம் மாறி விடுவார். அவர் அங்கும் போய் விண்ணப்பித்து விடுவார். அவர்கள் பெயர் இரண்டு பட்டியல்களிலும் இடம் பெற்றிருக்கும். சேர்க்கைக்கு விண்ணப்பிப்பார்களே தவிர நீக்குதலுக்கு இதுவரை விண்ணப்பித்ததை நான் பார்த்ததில்லை. மிகச் சிலர் செய்யக் கூடும்.
  நிறையப் பேரின் பெயர்கள் இடம்பெறாமைக்குக் காரணம் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியும் ஒரு காரணம் இந்தத் தேதியில் பட்டியலை அறிவித்து  விடுவோம் என்று சொல்லி விடுவார்கள். ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்த நிலையில் ஊழியர் பற்றாக்குறை ( இதற்கென தனி ஊழியர்கள் இல்லை. ஆசிரியர்களும், வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களும் அவர்கள் பணிகளையும் செய்து கொண்டு இதையும் செய்ய வேண்டி இருக்கிறது) காரணமாக அவசர அவசரமாக பரிசீலனை செய்து பட்டியலை வெளியிட்டு விடுவார்கள்.
நகர்ப் பகுதிகளில் சொந்த வீடு வைத்திருப்போரும் தங்கள் சொந்த ஊரிலும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பார்கள். 
சென்னையில் வாக்களிப்பு சதவீதம் குறைவு என்று கூறப்படுவதற்கு மேற் சொன்ன காரணங்கள் முக்கியமானவை. என்னை பொறுத்தவரை வாக்களிக்காதவர் சதவீதம் 10 க்குள்தான் இருக்கும் என்பது என் கருத்து.இதில் அரசு ஊழியர்கள் பெரும்பாலும் நடைமுறை சிக்கல் காரணமாக  வாக்களிப்பதில்லை 

   மேலும் உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்களிப்போர் எண்ணிக்கை எப்போதும் அதிகமாக இருக்கும். போட்டியிடுவோர் அனைத்து வாக்காளர்களையும் சந்தித்து வாக்கு சாவடிக்கு வரவழைத்து விடுவர்.
சட்டமன்றத் தேர்தலில் வாக்கு சதவீதம் இதை விட சற்று குறைவாக இருக்கும். நாடாளுமன்றத் தேர்தலில்தான் வாக்கு சதவீதம் மிகக் குறைவாக இருக்கும். அந்தந்தக் கட்சியைத் சேர்ந்தவர்கள் கூட முந்தைய மற்ற தேர்தலில்  காட்டிய ஆர்வத்தை காட்ட மாட்டார்கள்.
முன்பெல்லாம் பூத் ஸ்லிப்புகளை கட்சிக்காரர்கள்தான் வழங்குவார்கள் இப்போது BLO க்கள் மூலம் சில நாட்களுக்கு முன்னதாகவே வீட்டுக்கே வந்து சேர்ந்துவிட்டது. புதிதாக சேர்ந்தவர்களுக்கு பெயர் சேர்க்கப் பட்டது என்ற கடிதமும் அனுப்பபிய தேர்தல் கமிஷனின் சுறுசுறுப்பு ஆச்சர்யமாக இருந்தது. இணையத்தின் மூலம் வேட்பாளர் பெயர்களை சரிபார்த்துக் கொள்ளச்செய்தது, SMS மூலம்வாக்குச்சாவடிகளை எளிதாக அடையாளம்காண வசதி ஏற்படுத்திக் கொடுத்தது போன்றவை தேர்தல் கமிஷனுக்கு சபாஷ் போட வைத்தது.

   வேட்பாளர்களின் செலவுத் தொகை அலுவலர்களால்  கண்காணிக்கப் படுகிறது. இவ்வளவு கெடுபிடிகளையும் ஏமாற்றி பலவித விதி மீறல்களை அனைத்துக் கட்சிகளுமே செய்து வருகின்றன. எவ்வித சீர்த்திருத்தங்களாக இருந்தாலும் மக்கள் ஒத்துழைப்பின்றி  செயல்படுத்த முடியாது 

   திருவிழா முடிந்து விட்டது. திருவிழாவில் காணாமல் போகப் போகிறார்கள் யார்? தோற்பவர் மட்டும்தானா? ஜெயிப்பவர்களும்தான் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொகுதி பக்கம் எங்கே தலை காட்டப்போகிறார்கள்?

*****************************************************

அதிக பட்ச ஜனநாயகக் கடமைகளை ஆற்றிய தொகுதிகளை அறிந்து கொள்ள கீழுள்ள  இணைப்பை கிளிக் செய்யுங்கள் 

*****************************************************************************************************************
முதலில் கேட்ட கேள்விகளுக்கு விடை
  1.  பதிவான வோட்டுகளில் 6 இல் 1 பங்கு ஓட்டுக்கள் பெற்றால் செலுத்திய  டெப்பாசிட் திரும்பக் கிடைக்கும்.
  2.  1996 இல் நடை பெற்ற தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் அதிகபட்ச வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிகமில்லை ஜென்டில்மென் 1033 பேர்தான்.
****************************************




வியாழன், 24 ஏப்ரல், 2014

குமுதத்தில் என் சிறுகதை! வலைப் பதிவு எழுதுவதால் பயன் உண்டா?

      செவ்வாய்க் கிழமை காலையில் ஒரு தொலை பேசி அழைப்பு. பேசுவது யாரென்று சொல்லாமல் உங்கள் "என்ன செய்யப் போகிறாய்" கதை குமுதத்தில் வந்திருக்கிறது. இன்னும் படிக்கக் கூட இல்லை. உங்கள் பெயரைப்பார்த்ததும் வாழ்த்து தெரிவிக்க உடனே அழைத்துவிட்டேன். வாழ்த்துக்கள் என்று  இன்ப அதிர்ச்சி தந்துவிட்டு "நான் யாரென்று  அறிந்து கொள்ள முடிகிறதா" என்றார். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரே சொன்னார் "நான் உங்களுக்கு தெரிந்தவன்தான் என்னை சென்னை பித்தன் என்று அழைப்பார்கள் என்று மென்மையாக சொன்னார். ஒரு மூத்த பதிவர், பதிவுலகில் இளைஞர்களுக்கு இணையாக வெற்றிக் கொடி நாட்டியவரின் பண்பு என்னை ஆச்சர்யப் படுத்தியது.
2012 ஜனவரியில் வலைச்சரத்தில் முதன் முதலாக என்னை அறிமுகப்படுத்தியவர் இவரே. அவரே கதை வெளியான முதல் தகவல் அளித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து பலரும் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர். இடைவிடாத அலுவலக வேலைகள் காரணமாக அடுத்த நாள்தான் நான் குமுதம் வாங்கிப் படிக்க முடிந்தது. ஏற்கனவே வலையுலக நண்பர்கள் பலருக்கும் மின்னல்வரிகள் பாலகணேஷ் அவர்கள் மூலம் தெரிந்து விட்டதால் இதைப் பற்றி எழுதலாமா வேண்டாமா என்று யோசித்தேன்.  வவ்வால்ஜி 'அறியாதன அறிந்தேன் ' என்று கலாய்த்தல் கம்மென்ட் போடுவார் என்றாலும் இதனை (அவருடனும்) பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்ற முடிவுக்கு வந்தேன். 

30.04.2014 தேதியிட்ட குமுதம் இதழில் கதை வெளிவந்துள்ளது. இந்த இதழ் 22.04.2014 அன்றே வெளிவந்துவிட்டது.

******************************

    பாலகணேஷ் அவர்களின் சரிதாயணம்  கதைகள் வலையுலகில் பிரசித்தமானவை. இயல்பான நகைச்சுவை அவருக்கு கைவந்த கலை. தன்னையே நாயகனாகக் கொண்டு சரிதா என்ற கற்பனை கதாபாத்திரத்துடன் இணைந்து  நகைச்சுவை விருந்து படைத்து வருபவர்  அவர். அந்தப் பாத்திரத்தைக் கொண்டு அதே பாணியில் ஒருகதை எழுத வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு நினைத்திருந்தேன். வேறு ஒரு  கதைக் களத்தைக் கொண்டு கதையும் தொடங்கி விட்டேன். பின்னர் தற்போதைய சூழலில் தேர்தலை வைத்து எழுதினால் நன்றாக இருக்குமே என்று நினைத்து அவசர அவசரமாக எழுதி முடித்து விட்டு அதை பாலகணேஷ் மின்னஞ்சலுக்கு அனுப்பிவிட்டு இரவு 9.30 மணிக்கு போன் செய்து மெயில் அனுப்பியதை தயக்கத்துடன்   சொன்னேன். சிறிது நேரத்திலேயே என்னுடன் தொடர்பு கொண்டு மிக நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். அவருடைய என் பெயரைத் தெரிவிக்காமல் வலைத்தளத்தில் வேண்டிய திருத்தம் செய்து வெளியிடும்படி கேட்டுக் கொண்டேன்.   நான் எழுதியதில் எதுவும் விட்டதாகவும் சேர்த்ததாகவும் தெரியாமல் அற்புதமாக எடிட் செய்துவெளியிட்டார் 

   எனக்கும் நகைச்சுவைக்கும் ரொம்ப தூரம் என்று நினைத்து ஒருவரும் என்பெயரை யூகிக்கவில்லை என்பது ஏமாற்றத்தை தந்தாலும்  கண்டு பிடிக்கமுடியாத அளவுக்கு இருந்தது என்பதில் சற்று மகிழ்ச்சியே! அதற்கு கிடைத்த வரவேற்பு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நான்தான் எழுதினேன் என்று முன்னரே  தெரிந்திருந்தால் வரவேற்பு ஒரு வேளை குறைந்திருக்கக்கூடும். கருத்திட்டு பாராட்டும் தெரிவித்த அனைவருக்கும்  
 வேறு ஒரு ஸ்டைலில் எழுதுவதில் ஒருசவால் இருக்கிறது.
அதுபோல எழுதி "திடம் கொண்டு போராடு" சீனு நடத்திய காதல் கடிதப் போட்டியில் என்னைக் கவுத்திட்டாயே சரோ என்ற கடிதம் எழுதி பரிசு பெற்றதும் ஒரு வித்தியாசமான அனுபவம்.  
நன்றி 


*********************************************************************************
 வலைப் பதிவு எழுதுவதால் பயன் உண்டா?

  கதை கவிதை  கட்டுரை ஆர்வத்துடன் படிப்போர் பலருக்கும் எழுதவேண்டும் என்ற ஆசையும் வரும். சிலர்  அந்த முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வெற்றி பெறுகிறார்கள். நல்ல திறமை இருந்தும் வேலை, குடும்பம் சூழலில் தனக்கு படைப்பாற்றல் இருப்பதையே மறந்து போனவர் நிறையப் பேர் உண்டு. ஆரம்பத்தில்  பத்திரிகைகளுக்கு தங்கள் ஆக்கங்களை அனுப்பிவிட்டு அடுத்த வாரமே வந்து விடும் என்று ஆர்வக் கோளாறால் வாரா ரம் வாங்கிப் பார்த்து ஏமாற்றம் அடைந்த அனுபவமும் உண்டு. கடைசியில் சீ சீ இந்தப் பழம் புளிக்கும் நிலைதான் .  

   வலை உலகைப் பொறுத்தவரை படிப்போரும் படைப்பளிகளாகவே உள்ளனர்.செய்திகளை படிப்பவர்களை விதி விலக்காகக் கொள்ளலாம் பத்திரிகைகளை படைப்போர் அல்லாதவரும் படிப்பது அதன் கூடுதல் பலம்.
 நம் எழுத்தை அச்சில் ,பத்தரிகைகளில்  பார்க்கும்போது ஏற்படும் பரவசம் ஒரு தனியே. அதுவும் அந்தப் பத்திரிகை பிரபலமானததாக இருந்தால் கூடுதல் மகிழ்ச்சிதான். எல்லா பிரபல பத்திரிகைகளும் வலைப் பதிவுகளை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன. வலையுலகம் இன்று முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. அச்சு ஊடங்களில் பிரபலமாக உள்ள பலரும் தங்களை மேலும் நிலை நிறுத்திக் கொள்ள இணையம் நோக்கி  (முகநூல், திரும்ப வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

    மூன்றாவது படிக்கும்போது கதைப் புத்தகம் வாசிக்கத் தொடங்கிய நான்  9 வது படிக்கும்போது கதை எழுதத் தொடங்கினேன்.அப்போதே அது ஒரு சின்ன பத்திரிகையில் பிரசுரமானது ஆச்சர்யம்தான். ஒரு சில கதைகள் கவிதைகள், துணுக்குகள் அவ்வபோது இதழ்களில்  பிரசுரமானாலும் குறிப்பிடத் தக்கவையாக  அமைந்தது பாக்யாவில் வெளியான படைப்பும், தற்போது குமுதத்தில் வெளியாகி உள்ளது மட்டுமே.

   சினிமாவைப் பற்றி எழுதினால் மட்டுமே அதிக பார்வையாளர்கள் வருவார்கள் என்ற சூழலே இருக்கும் நிலையில் என்னால் ஒரு வருடம் கூட வலையில் தாக்குப் பிடிக்க முடியாது என்றே நினைத்தேன். திரட்டிகளின் சூட்சுமம் புரியாமல் திண்டாடினேன். (இன்னமும் புரியாமல்தான் இருக்கிறது) . எப்படிப்பட்ட பதிவுகள் எழுதுவது என்று ஆரம்பத்தில் குழப்பமாக இருந்தது. இணையத்தைப் பொறுத்தவரை ஒரே வகைப்  பதிவாக  தொடர்ந்து எழுதுவது என்பது என்னை போன்றவர்களுக்கு  ஒத்து வராத  ஒன்றாக இருப்பதை உணர்ந்தேன். எனவே கதை கட்டுரை, கவிதை,சமூகம்,  கணினி அனுபவங்கள்,எளிய அறிவியல் என்பதை என் தகுதிக்கேற்ற வகையில் பல்வகைப் பதிவுகளை  எழுதிவருகிறேன். சிறப்பாக எழுதுவதற்கு முயற்சியும்  செய்து வருகிறேன்.

   உண்மையில் பார்த்தால் வலைப் பதிவு எழுதுவதால் பொருளாதாரப் பயன்கள் ஏதுமில்லை என்பது அனைவரும் அறிந்ததே. பின் ஏன் எழுதிக் கொண்டிருக்கிறோம்.
  1.  நம்மிடம் இருக்கும் சின்ன எழுத்துத் திறமைக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது இணையம். கொஞ்சம் பேராவது நமது படைப்புகளை ரசிக்கிறார்கள். ஒரு அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. 
  2. பல நல்ல நட்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. 
  3. திறமையாளர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 
  4. உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் உள்ளவர்களும் நம்மை அறிந்து கொள்ள வாய்ப்பை அமைத்துக் கொடுத்திருக்கிறது
  5. நமது திறனை வளர்த்துக் கொள்ளும் மேடையாக வலைப்பூக்கள் அமைகின்றன. 
  6. உடனடியாக நமது படைப்பின் கருத்துக்களை அறிந்து கொள்ள முடிகிறது 
  7. எதிர்வினைகளை கையாள கற்றுக் கொடுக்கிறது 
  8. நம்மை புதுப்பித்துக்  கொள்ளவும் மேம்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது
  9. பலரையும் ஊக்கிவிக்க முடிகிறது
  10. நமது எண்ணங்களுக்கு ஒரு வடிகாலாக அமைகிறது.
  11. பத்திரிகையில் எழுதியது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது 
  12. பிரபல பத்திரிகைகளின் பார்வையில் படுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது 
  13. போட்டிகளில் கலந்து கொள்ளவும் வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கிறது.
   வலை உலகம் பல பாடங்களை கற்றுத்தரும் ஆசிரியராக இருக்கிறது. தொடக்கத்தில் எழுதியதற்கும் இப்போது எழுதுவதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடிகிறது.

  நாம் அறியாமல் நம்மை பிரபலங்கள் உட்பட பலரும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது என் அனுபவத்தின் மூலம் நான் உணர்ந்த பாடம்.   தொடர்ந்து வித்தியாசமாகவும் நல்ல முறையிலும்  எழுதி வந்தால் ஏதேனும் ஒரு வகையில் கவன ஈர்ப்பைப் பெற முடியும்   என்றே நம்புகிறேன். 
ஆதரவு அளித்து வரும் அத்துணை பேருக்கும் என் மனமார்ந்த நன்றி

*********************************************************************************

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

சிரிப்பு வந்தா சிரிக்கலாம்



  இதெல்லாம் படிச்சா சிரிப்புவராதுன்னு எனக்கு தெரியும் . ஏன்னா எல்கஷன் நேரத்தில பல கோமாளித் தனங்களை பாத்து சிரிச்சிக்கிட்டு இருக்கிற உங்களுக்கு இதை பாத்து சிரிப்பு வராம போறதில ஆச்சர்யம் இல்ல. சரி பரவாயில்லன்னா கொஞ்சம் சிரிச்சிவைங்க 




'உங்க வீட்டுக்காரர்  தமிழ் வருடப் பிறப்பிற்கு உனக்கு என்ன வாங்கிக் கொடுத்தார்?'


'எனக்கு எங்க வாங்கிக் கொடுத்தார்? அவருக்குத்தான் ஒரு கிரைண்டர் வாங்கிக் கிட்டார்.'


'சார்! கல்யாணம் ஆன நீங்க எப்படி ஓட்டப்பந்தயத்தில முதலாவதா வந்தீங்க?'
'என் மனைவி பின்னாடி துரத்திட்டு வர 
மாதிரி நினச்சிகிட்டேன்.'



'தலைவரே! நீங்க அந்த நடிகையோட உல்லாசமா இருந்தப்போ வீடியோ புடிச்சவங்களை கையும் களவுமா புடிச்சிட்டீங்களாமே! என்ன பண்ணீங்க!'

'விடுவனா அவங்களை? சி.டி போட்டதும் முதல் காப்பி எனக்குதான் குடுக்கனுன்னு அடிச்சி சொல்லிட்டேன்.'


 
'ஏண்டா! தலைவர்  மீட்டிங்ல பேசறதுக்கு லோக்பால் பத்தி விசாரிச்சிட்டு வரச் சொன்னாரே விசாரிச்சயா
'அண்ணே! எல்லா பால்காரன் களையும் கேட்டுட்டேன். எருமைப்பால் பத்தி சொல்றாங்க பசும்பால் பத்தி  சொல்றாங்க.ஆட்டுப்பால்,  கழுதைப் பால் ஏன் ஒட்டகப் பால் பத்தியும்   சொல்றாங்க. ஆனா லோக்பால் பத்தி யாருக்குமே தெரியலன்னே.'



'நம்ம தலைவருக்கு விளயாட்டுமேலே ரொம்ப ஆர்வம் அதிகம்.'

'எப்படி சொல்ற?'

'ஃபுட்பால்  வாலிபால் மாதிரி லோக்பாலையும் ஒலிம்பிக்ல சேக்கனும்னு சொல்றாரு'.




"முல்லை பெரியார்  பற்றி எனக்குத் தெரியாதாம். எதிர் கட்சிக்  காரர்கள் என்னிடமே சவால் விடுகிறார்கள். பெரியாரை வம்புக்கிழுத்தால் நான் வாயை மூடிக் கொண்டிருக்க மாட்டேன். அவருக்காக பெரும்                   போராட்டம் நடத்துவேன்  என்றும் எச்சரிக்கிறேன்."



"பெரியோர்களே! தாய்மார்களே! நம்முடைய அண்ணன்தான் இரவு 8.00 மணி முதல் காலை 8 மணிவரை  அதிக நேரம் அமைச்சராக இருந்தவர் சாதனை படைத்தவர்  என்பதால் அவருக்கே வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.



  
  
 "அனு உலையை  மூடவேண்டும் அனு  உலையை  மூடவேண்டும் என்று சொல்பவர்களே! என் உறவினர் அனு வந்து உலையை  மூடவேண்டும் என்று சொல்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்."



தலைவரோடபழிவாங்கும்உணர்ச்சி ஒவரா போயிடுச்சி?
எப்படி சொல்ற

அமாவாசை அன்னிக்கு எதிர்கட்சி தலைவர்மேல நிலா அபகரிப்பு வழக்கு போடப்போறாராம்









சங்கீதவித்வானை எம்.பி ஆக்கினது
தப்பா  போச்சு?
ஏன்?
லோக்சபாவில கச்சேரி பண்ண சான்ஸ் கேட்டு நச்சரிக்கிறாராம்



ஹலோ! டார்லிங் நம்ம காதல் உங்கங்கப்பாவுக்கு தெரிஞ்சு போச்சுங்கிறதுக்காகவா
இவ்வளவு
கவலைப்படற?

எங்கப்பாவைப் பத்தி உங்களுக்கு தெரியாது? அவர் எப்படியாவது நம்ம ரெண்டு பேருக்கும்  கல்யாணம் பண்ணி வச்சுடுவார்.









' உன் சமையல் அறையில் நான் உப்பா? சர்க்கரையா?'.

சமையல் காரரே நீங்கதானே!



என்கிட்டே கருப்பு பணம் எதுவும் இல்ல. வேணும்னா வந்து செக் பண்ணிக்க சொல்லுங்கன்னு  தலைவர் சவால் விடராரே?

கறுப்புப் பணம் கறுப்பு கலர்ல
இருக்கும்னு நினைச்சிக்கிட்டு
இருக்காரு.










*************************************************************************************

படித்து விட்டீர்களா?
நிறம் வெளுத்துப் போகும் நிஜம்

சனி, 12 ஏப்ரல், 2014

புரோகிதரே போதும் -சொன்னவர் யார்?

    

  
  கீழே ஒரு பிரபல கவிஞரின்  கவிதைகள் மூன்றை தந்திருக்கிறேன். இந்தக் கவிஞரின் (ஏற்கனவே கொஞ்சம் நினைவில் இருந்த) கவிதை ஒன்றைத்  தேடினேன். அது கிடைக்கவில்லை. வேறுசில கவிதைகளே கிடைத்தன.  அவற்றில் என்னைக் கவர்ந்த மூன்றை மட்டும் இங்கு பகிர்ந்திருக்கிறேன்.  

   ஒரு சின்ன போட்டி. இந்தக் கவிதைகளை எழுதியவர் யாரென்றுசொல்ல வேண்டும் . 
இந்த மூன்று கவிதைகளிலும் கொஞ்சம் திருத்தங்கள் செய்திருக்கிறேன்.  கவிஞரின் ரசிகர்கள் மன்னிப்பார்களாக!

இரண்டு பேருக்கு மட்டும் நிபந்தனை . பதிவின் முடிவில் பார்க்க 



புரோகிதரே  போதும் 


வந்து திரும்ப 
வழி செலவுத் தொகை ,
ஏசி வசதியுள்ள விடுதி,
சுண்டக் காய்ச்சிய பசும்பால், 
முந்திரிப் பருப்பு 
முடிந்தால் 
முயல் கறி; மான்கறி 
முக்கியம் பிரியாணி

கடிதம் கண்டதும் 
ஆசையாய்  
சீர்திருத்தத் திருமணம் 
செய்யக் கருதிய 
தனபாலனுக்கு தலை சுற்றியது 
அவனையும் மீறி வாய் கத்தியது 
"அம்மா சொன்ன 
அய்யரே போதும்"



கடவுளைத் தேடி 

"இருக்கிறார்  கடவுள் "
"இல்லை கடவுள்" 
வாதம் பிறந்தது ;
மோதல் வளர்ந்தது 

இப்போது 
இல்லை ஒருவர் இங்கே 
இன்னொருவர் இருக்கிறார் 
தலைமறைவாக  


தமிழ்ப் பற்று 

தேவ பாஷை 
சாஸ்திரி ஒருவர் 
சபையில் சொன்னார் 
"ஜாதி வேண்டும் "
"ஜாதி வேண்டும் "

சீறி எழுந்தார் 
தமிழ்மறவர் ஒருவர் 
ஓங்கிக் கத்தினார்
"ஒய்! ஓய்!
இனி நீர் 
ஜாதி வேண்டும் என்றால் 
 பொறுமையாக 
இருக்க முடியாது  என்னால் 
'சாதி' வேண்டும் என்று 
சரியாய் சாற்றும் 


**************************************************


1. கவிஞர் முத்துநிலவன் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டாம் . தனியாக மின்னஞ்சல் அனுப்பவும் 


2. தேடல் மன்னன் வௌவால் இணையத்தில்   தேடாமல் இதற்கு பதில் சொல்வதென்றால் சொல்லலாம் .

விடை அறிய கீழே க்ளிக் செய்யவும்
கவிஞரின் பெயர்

****************************************************

படித்து விட்டீர்களா?




செவ்வாய், 8 ஏப்ரல், 2014

நிறம் வெளுத்துப் போகும் நிஜம்



பதிவுலகைப் பற்றி நிறைய கட்டுரைகள் வந்திருக்கின்றன. கவிதையாக எழுதினால் என்ன?அதுவும் குறள் வடிவத்தில் எழுதினால் என்ன?  என்று தோன்றியதன் விளைவே  இந்தப் பதிவு.  எப்போதும் போல் சகித்துக் கொள்ளவும். ஹிஹிஹி 


  1.    கூகுள் வழங்கும்  வசதிகள்- செந்தமிழில்
        வாகாய் பதிவுகள் செய் 

  2.     கற்க  கணினி கசடற- கற்றுப் 
        பதிக தமிழில் பதிவு  


  3.     தொடங்கல் எளிதாம் வலைப்பூ- அரிதாம்
        தொடர்ந்து பதிவு இடல்

  4.     முன்னோட்டம் பார்த்துப் பதிவிடு உன்பதிவை
        பின்னூட்டம் பார்த்துத் திருத்து.
         
  5.     சிலைக்கழகு சேர்க்கும் சிறுநுட்பம் உந்தன்
        வலைக்கழகு சேர்க்கும் வடிவம்

  6.     தரவரிசை ஏற்றுதற்கு தாழ்தல் வேண்டாம்
        நிறம்வெளுத்துப் போகும் நிஜம்

  7.     பிறர்பதி வைகவர்தல் நன்றன்று சிந்திப்பாய்
        உன்பதி வும்களவு போம்

   8.          வயலில் விதைப்பார் விதைகள்       அதுபோல் 
               வலையில் விதைப்பாய் பதிவு 

   9.          எல்லை இலையே எழுதவா!       பதிவுலகம் 
                நல்ல பயிற்சிக் களம்   

  10.    கதவு திறந்து அழைக்கும் இணையம் 
         பதிவு பயனுறச் செய். 

**************



படித்து விட்டீர்களா?




ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

இப்படியும் இருக்க முடியுமா?-வித்தியாசமான கதை



இந்தக் கதையை  சற்று வித்தியாசமாக ( அதை நாங்கள் சொல்லவேண்டும் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது) சொல்ல முயற்சித்திருக்கிறேன்.

என்ன செய்யப் போகிறாய்?

   வழக்கம் போல மின்சார ரயிலில் ஏகப்பட்ட கூட்டம். ரயிலின் ஒவ்வொரு பெட்டியின்  வாசல்களும் மனித தேன்கூடுகள் போல காட்சி அளித்தது. தேன்கூட்டை துளைத்து   உள்ளே நுழைந்தாயிற்று . அரைமணி நேரப் பயணம் என்றாலும் கசக்கிப் போட்டுவிடும். இந்த அரைமணி நேரம் இரண்டு மணிநேரம் ஆவதுபோல எரிச்சலை ஏற்படுத்தும். சாய்ந்து நெளிந்து கைப்பிடியை பிடித்துக் கொண்டேன். இந்த அவஸ்தையை எப்படி தாங்கப்போகிறோமோ என்று நினைத்துக் கொண்டிருக்கும்  வேளையில் அருகில் சீட்டில் உட்கார்ந்திருந்த ஒருவர் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். நான் இருந்த நிலையில் புத்தகத்தை படிக்க முடிந்தது. அது  அவதியிலும் கொஞ்சம் ஆறுதல் அளித்தது. அவருடன் சேர்ந்து நானும் படிக்க ஆரம்பித்தேன்

" .........வண்டி மூன்று  மணிநேரம் தாமதமாக ரயில் நிலையத்தை அடைந்தது. மதன், கோவிந்த் இருவரும் ரயிலை விட்டு கீழே இறங்கியபோது  நள்ளிரவைத் தாண்டிவிட்டது.அவர்கள் அங்கிருந்து கிட்டத்தட்ட 5கி.மீ தூரத்தில் உள்ள அவர்கள் இருப்பிடத்துக்கு செல்ல வேண்டும். நேரம் ஆகிவிட்டதால் பேருந்து இல்லை. ஆட்டோ, சைக்கிள் ரிக்.ஷாவில்தான் போகவேண்டும்.  ஆட்டோவில் போய் விடலாம் என்று முடிவு எடுத்தனர். ஆட்டோ நின்று கொண்டிருந்த இடத்தை அடைந்தனர்.அப்போது ரிக்ஷாக்காரர் ஒருவர் ஓடிவந்து, "ஐயா எனது வண்டியில் ஏறுங்கள்" என்றார். ஆட்டோக்காரர்கள் thangalஅவரை  விரட்டினர். அவரைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. சவாரிக்கு எவ்வளவு என்று கேட்டனர். அவர் சொன்ன தொகை குறைவாக இருந்ததால் ரிக்.ஷாவில் செல்ல சம்மதித்தனர். அவர்கள் ஏறி உட்கார   ரிக்.ஷா நகர்ந்தது....

  அடுத்த ஸ்டேஷன் வந்தவிட்டது . இன்னும் ஒரு கூட்டம் ஏறி முட்டித்  தள்ளியது.  "எவ்வளோ இடம் இருக்கு உள்ளே போங்க சார்" என்று என்னை தள்ளினர். நான் நகர்த்தப்பட இப்போது படிக்க முடியவில்லை.
   நல்ல வேளை புத்தகம் வைத்துக் கொண்டிருந்தவரோ புத்தகத்தை திறந்து வைத்தபடியே  தூங்கிக் கொண்டிருந்தார். நான் எனக்கு  முன்னால் இருந்தவர்களை எப்படியோ பின்னே போக வழி விட்டு மீண்டும் அதே இடத்தில் வந்து நின்றுகொண்டு விட்ட இடத்தில்  இருந்து படிக்க தொடங்கினேன் 
 
  .......அது குளிர்காலமாதலால்  கடுங்குளிர் வாட்டி எடுத்தது . சூடாக டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து  ஏதாவது டீக்கடையில் நிறுத்த சொன்னார்கள்.  கடைகள் மூடி இருந்தன, ஓரிடத்தில் திறந்திருந்த டீக்கடை வாசலில் நிறுத்தினார் . மதனும் கோவிந்தும் ரிக்.ஷாவில் இருந்து இறங்கி , " நீயும் வா டீ சாப்பிடலாம்" என்று ரிக்.ஷாக்கரரையும் அழைத்துவிட்டு டீக்கடைக்குள் நுழைந்து மூன்று டீ போடும்படி சொன்னார் மதன். இருவரும் டீ குடிக்க ஆரம்பித்தனர் ஆனால் ரிக்.ஷாக்காரர் வரவில்லை .......

   நான் சுவாரசியமாக படித்துக் கொண்டிருந்தேன். அவர் இன்னும் தூங்கி விழுந்து கொண்டிருந்தார். அவ்வப்போது தலை மறைத்தாலும் நான் கஷ்டப்பட்டு அந்தப் பக்கத்தை படித்துவிட்டேன்.  தூக்கத்தில் இருந்ததால் அவர் அடுத்த பக்கத்தை புரட்டவில்லை.  நான் இறங்கும் வரை எழுந்திருக்க மாட்டாரோ ஏமாற்றமடைந்தேன். அப்போது அவரது பாக்கேட்டிலிருந்து கர்ச்சீஃப் கீழே விழுந்தது. நான்அவரை எழுப்புவதற்கு அதைபயன்படுத்திக்கொண்டு  கர்ச்சீஃப் கீழேவிழுந்தை சொன்னேன். தூக்கத்திலிருந்து விழித்த அவர் எனக்கு நன்றி சொல்லிவிட்டு நான் எதிர்பார்த்தது போலவே அடுத்த பக்கத்தை திருப்பினார்

.......ஒரு வேளை காதில் விழவில்லையோ என்று நினைத்து வெளியே வந்து மீண்டும் அழைத்தார். ரிக்ஷாக்காரரோ மவுனமாக தலை அசைத்து டீ வேண்டாமென மறுத்து விட்டார். "சரி விடுப்பா இவனுங்க எல்லாம் சாயந்திரம் ஆனா தண்ணிதான் போடுவானுங்க. டீ எல்லாம் சாப்பிட மாட்டானுங்க என்றார் மதன்  கிண்டலாக
டீ குடித்தபின் மீண்டும் ரிக்.ஷாவில் பயணத்தை தொடர்ந்தனர்  . கோவிந்த் கோபத்துடன் கேட்டார் " என்னப்பா! எங்களுடன் சேர்ந்து டீ அருந்த மாட்டாயா! , எங்களை மேட்டுக் குடி என்று நினைத்து விட்டாயா. அல்லது உன்னுடன் சேர்ந்து டீ சாப்பிட எங்களுக்கு தகுதி இல்லையா"

மிதிப்பதை நிறுத்திவிட்டு திரும்பி இருவரையும் பார்த்தார் ரிக்ஷாக்காரர்.....

   அதற்குள் ஏதோ ஒரு கால் வர மொபைலை எடுத்து பேச ஆரம்பித்தார் புத்தகம் வைத்திருந்தார்  அதே நேரத்தில் இன்னொரு கையால் அனிச்சையாக  படிக்கும் பக்கத்தில் ஒரு விரலை வைத்துகொண்டே புத்தகத்தை மூடினார். எப்போது பேசி முடித்து புத்தகத்தை திறப்பார். என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். படிக்கும் சுவாரசியத்தில் கொஞ்ச நேரமாக மறந்திருந்த அசௌகிரியங்கள் மீண்டும் தெரிய ஆரம்பித்தன. நல்ல வேளையாக பேச்சை சீக்கிரம் முடித்துவிட்டு புத்தகத்தை திறந்தார். நானும் விட்டுப் போன சுவாரசியத்துடன் தொடர்ந்தேன்

......அவர் கண்கள் கலங்கி, கண்ணீர் வந்து கொண்டிருந்ததுஅந்த இருட்டிலும் தெரிந்தது .
"ஐயா. என்னை மன்னியுங்கள். தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள் . இன்று மதியம்  என் மகன் இறந்துவிட்டான் . அவன் ஈம சடங்குகளுக்கு பணம் தேவை. போதுமான பணம் என்னிடத்தில் இல்லை. அந்த தொகையை சம்பாதிக்கும்வரை நான் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்துவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். அதனால்தான் உங்கள் அழைப்பை ஏற்க முடியவில்லை" என்று தயங்கி தயங்கி சொன்னார்
வாயடைத்துப் போயினர் மதனும் கோவிந்தும். அதிர்ச்சியும் வியப்பும் அவர்களை ஆட்கொண்டது .
இறங்கும் இடம் வந்ததும் ஒரு முழு நோட்டை எடுத்துக் கொடுத்தனர். அவர் கேட்ட தொகையை விட கூடுதலாகஅதில் இருந்தது. " மிச்சம் வேண்டாம் அப்படியே வைத்துக் கொள்" என்றனர்.
ரிக்.ஷாக்காரரோ மறுப்பு தெரிவித்து  மீதித் தொகையை கட்டாயப் படுத்தி திருப்பிக் கொடுத்து விட்டு. மீண்டும் ரயில் நிலையத்தை நோக்கி ரிக்.ஷாவை செலுத்தினார்....

   கதையில் வரும் ரிக்.ஷாக்காரர் மேல்  எனக்கும் பரிதாபமும் அவர் சூழலை நினைத்து வருத்தமும் அவரது நேர்மையைக் கண்டு ஆச்சரயமும் என்னை ஆக்ரமித்துக் கொண்டிருந்த  வேளையில் சட்டென்று வெளியே பார்க்க அப்போதுதான் தெரிந்தது. நான் இறங்க வேண்டிய நிலையம் கடந்து விட்டது என்பது.  வேறு வழியில்லை அடுத்த ஸ்டேஷனில் இறங்கித்தான் திரும்ப வேண்டும். கதை இன்னும் இருக்கிறதா என்று பார்க்க ஒரு பத்தி இருந்தது. இறங்குவதற்குள் அதையும் படித்துவிடலாம் என்று தொடர்ந்தேன்.


 ......இந்த சம்பவம் நடந்து பல வருடங்கள் இருக்கலாம். இதை பத்திரிகையாளனான என்னிடம் விவரித்தனர் மதனும் கோவிந்தும் ஆனால் இன்னும்  இருவர் மனதிலும் அந்த சம்பவத்தின் தாக்கம் இருப்பதாக கூறினர். அந்த ரிக்.ஷாக்கரரின் முகம் அவ்வப்போது நினைவுக்கு வந்து தங்கள் மனதை உறுத்துவதாக வருந்தினர். "உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி இருக்க இடமின்றி வறுமையில் வாடும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீ என்ன செய்திருக்கிறாய்" என்று அந்த முகம் கேட்பது போல் தோன்றுகிறது. அதே கேள்வி எனக்கும் தோன்ற முதலில் இதை பத்திரிகையில் வெளியிடுகிறேன்.இவரைப் போன்றவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை இதைப் படிப்பவர்கள் தெரிந்துகொள்ளட்டும். நாமும் என்னசெய்யலாம் என்பதை முடிவெடுக்கலாம் என்றேன் நான்" 

    கதை என்னவோ முடிந்துவிட்டது. ஆனால் அதன் பாதிப்பு மனதில் தொடர்ந்தது. கீழே அந்த பத்திரிகையாளரின் பெயர் போட்டிருந்தது. அதை படிக்குமுன் அடுத்த ஸ்டேஷன் வந்து விட்டதால் படிக்க முடியவில்லை. யோசித்துக் கொண்டே இறங்கி எதிர்ப்புறம் வரும் ரயிலை பிடித்து நான் இறங்க வேண்டிய எழும்பூர் நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன். அந்தக் கதையை நினைத்துக் கொண்டே வெளியே வர ஆட்டோவில் மூட்டை முடிச்சுகளுடன் ஒரு குடும்பம் இறங்கியது.
  அப்போது ஒரு வயதானவர் ஒருவர் ஓடி வந்து நான் பிளாட்பார்முக்கு லக்கேஜுகளை எடுத்து செல்கிறேன் என்று சொல்ல அதற்குள் போர்ட்டர்கள் சிலர் ஒடிவந்து அவரை விரட்டி அனுப்பிவிட்டனர். அவர் முகம் வாடிநிற்க நான் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன் 
  தலை லேசாக வலிக்க ஒரு டீ குடித்தால் தேவலை போல் இருந்தது.எதிரிலேயே டீக்கடை இருந்தது .
டீக்கடை வாசலில்  கிழிந்த ஆடையுடன்  சிறுமி ஒருத்தி நின்றிருந்தாள்.  பசியோடு இருப்பதை அவள் முகம் காட்டிக் கொடுத்தது 
'டீ குடிக்கிறயா' என்று கேட்டுவிட்டு  அந்தப் பெண்ணுக்கு டீயும் பண்ணும் கொடுக்க சொன்னேன். 
"வேணாம். எங்க தாத்தா  திட்டுவாரு . இப்ப வந்து எனக்கு வாங்கி தருவாரு" என்று மறுத்து விட்டாள்  
"உங்க தாத்தா  எங்கே?" என்றேன்
"அதோ" 
சிறுமி கை காட்டிய திசையில் பார்த்தேன். அவள் சுட்டிக் காட்டியது சற்று முன்பு போர்ட்டர்களால் விரட்டப்பட்ட அந்தப் பெரியவரை.

*********************************************************************************

கொசுறு : 
  1.  இதில்  மூன்று கதைகள் உள்ளன . மொத்தமாக ஒரு கதையாக ரசிக்க முடியும் .
  2. ஊதா நிறத்தில் எழுதப்பட்டவை மட்டும் படித்தால்கூட ஒரு தனி கதையாகக் கொள்ள முடியும். 
  3. கருப்பு வண்ணத்தில் உள்ளவற்றை படித்தாலும் தனி கதையாக இருக்கும்.
  4. எப்போதோ படித்த பழைய செய்தியை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.


**************************************************************************** 


இதைப் படிச்சிட்டீங்களா?  
எ.பா.ப.கு. க.  விவேகானந்தரின் கண் திறந்த தேவ தாசி-
எட்டிப் பார்த்து படித்த குட்டிக் கதை-படிச்சா ஷாக் ஆயிடுவீங்க! எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-2 கூகுள்ல தேடிப் பாத்து சொல்றேன்! 

எட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதை-3 காபி மாதிரிதான் வாழ்க்கை எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-4யாரோ உங்களை பாக்கறாங்க! 
எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை 6 இதுவல்லவா வெற்றி!
நீங்கள் ஏழையா?பணக்காரரா
கம்பனை காக்க வைத்த கவிஞன்

 

புதன், 2 ஏப்ரல், 2014

ஓட்டல்ல வேட்டு



        உழவன் பசியால் வீழ்வதை மாற்றி
         உணவை அளிக்கும் அவன்தொழில் போற்றி
      
         செயற்கையின் சாயம் வெளுக்கும் முன்னர்
         இயற்கை அதனை விளக்கும் முன்னர்


         கற்றுத் தேர்ந்த கலைகளைக் கொண்டு
         சுற்றுச் சூழலை சுத்தமாய் ஆக்கி,


         தீவிர வாத வேர்களை அறுத்து
         தீவிர மான முயற்சிகள் எடுத்து


         மன ஏடுகளில் மதங்களை அழித்து             

         பதிவேடுகளிலும் சாதிகள் ஒழித்து

         அடுத்த தலைமுறை வாழ்ந்திட நினைத்து

         அனைத்து வளங்களும் சுரண்டுதல் தடுத்து

         அரிய தலைமை தேடிப் பிடித்து
         அரசியல் சாக்கடை தூய்மைப் படுத்து


         தேசப் பற்றை கொஞ்சம் நீட்டி

         உலகப் பற்றுடன் உயர் வழி காட்டும்

          உயர்ந்த  தலைவனை உண்மையாய் தேடு

          உன்னத பணிசெய் ஓர்முனைப் போடு 

          ஓட்டை நோட்டாய் மாற்றிட வேண்டாம் 
          ஓட்டைப் படகில் பயணம்  வேண்டாம் 

          மந்தை ஆடாய்  இன்னுமா வாழ்வாய் 

          சிந்தனை செய்வாய் சீர்பட செய்வாய் 

          உந்தன் கையில் வாக்குச் சீட்டு 

          ஊழல் செய்வோர்க் கதுவே வேட்டு 

          எழுதிய விதியை மாற்றிக் காட்டு 

          எழுச்சி கொண்டே போடுஉன் ஒட்டு 

*************************************************