என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

இப்போதாவது இணைந்திருப்போம்!

                         
                        பெரிய முள்ளின் புலம்பல் 
                   சிறியவளே!
                   வட்டக் கூட்டுக்குள் 
                   அடைப்பட்டுக் கிடக்கும் 
                   வழியில்லா முட்கள் நாம் 
                   என்று வருந்துகிறாயா?

                   முட்களுக்கும் வலி உண்டு 
                    என்பதை உலகம் 
                   அறியவா போகிறது?


                  இருக்கட்டும்
                   வருத்தம் தொலைத்து விட்டு 
                   என் வார்த்தைகளைக் கேள்!  

                   நமக்கு 
                   இடம் கொடுத்தது 
                   என்பதற்காக 
                   எத்தனை நாள் 
                   இந்த 
                   கடிகார எண்களையே
                   சுற்றி வருவது?

                   மனிதனுக்கு 
                   மணிகாட்டுவதும் 
                   சொல்லும்போது  
                   சோர்வின்றி 
                   அவனை 
                   எழுப்புவது மட்டுமா 
                   நம் வாழ்க்கை?

                   உன்னை பலமுறை 
                   சந்தித்து மன்றாடியும் 
                   நீ என்னை 
                   துரத்துவதையே 
                   தொழிலாகக்
                   கொண்டிருக்கிறாய் 

                    மணிக்கு
                    ஒருமுறை, 
                    ஒரு நொடி மட்டுமே 
                    உன்னோடு ஒட்டி இருக்க 
                    சம்மதிக்கிறாய்!

                    நாம்  கொஞ்ச நேரம் 
                    நின்று போனால்தான் என்ன?
                    காலம் நிற்கவா போகிறது? 

                   நாம் 
                   காலம்தான் காட்டுகிறோமே தவிர 
                   காலமே நாம் அல்ல 
                   என்பதைப் புரிந்து கொள்வாய் 

                    இப்போது 
                    மணி பன்னிரண்டு! 
                    இப்பொழுதாவது 
                    நம் இயக்கத்தை 
                    நிறுத்திக் கொள்வோம்!

                    மனிதன் நம்மை 
                    மறுபடி 
                    இயக்கும் வரையாவது 
                    நாம் 
                    பிரியாமல் 
                    இணைந்திருப்போம்!

********************************************
படித்து விட்டீர்களா?


சனி, 18 ஏப்ரல், 2015

பாலியல் தொல்லைகள்-குழந்தைகளை எச்சரிப்பீர்.

   மூன்று வயதுக் குழந்தையாக இருந்தாலும் சரி  60 வயதைத் தாண்டிய கிழவியாக இருந்தாலும் சரி பாலியல் வன்முறையில் இருந்து தப்ப முடியவில்லை  என்பது கசப்பான உண்மை. பள்ளிச் சிறுவனும் பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறான் பல் போன தாத்தாக்கள்  சிலரும் இந்தப் பாதகத்தை செய்கின்றனர். 
      பள்ளிகளில்  வீடுகளில் அலுவலகங்களில், பேருந்துகளில் என்று பல இடங்களிலும் தெரிந்தும் தெரியாமலும் பாலியல் தொந்தரவுகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அதுவும்    குழந்தைகள் மீதான பாலியல் தொல்லைகள் வன்முறைகள் பற்றி நாளிதழ்களில் செய்திகள் வராத நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். குறிப்பாக பள்ளி மாணவியிடம் ஆசிரியர் அத்துமீறல், வேன் டிரைவர் சில்மிஷம்  என்பன போன்ற செய்திகளை படிக்கும்போதெல்லாம் மனம் பதைக்கத்தான் செய்கிறது.  நாளுக்கு நாள் இவை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது,  பல காலமாக இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்றாலும் சமீப காலங்களில்தான் அதிகமாக வெளியே தெரியவருகிறது. இன்னும் பல சம்பவங்கள் வெளியில் சொல்லாமல்  மறைத்து வைக்கப்படுகின்றன. பல சமயங்களில்  குழந்தைகள் இது போன்ற தொல்லைகளுக்கு ஆட்படும்போது  வெளியில் சொல்வதில்லை. காரணம் இதை செய்பவர்கள் மிகவும் தெரிந்தவர்கள் குடும்ப  நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள், ஆசிரியர்கள், வடிவங்களில் இருப்பதுதான். சில நேரங்களில்  அதிக நம்பிக்கை வைத்து அடுப்படி வரை அனுமதிக்கும் நபர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கேள்விப் பட்டிருப்போம். 

  பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் குழந்தைகளை தனியே விட்டு செல்ல நேரிடுகிறது. பள்ளியில் இருந்து திரும்பும் குழந்தைகள் நெடு நேரம் தனியாக  வீட்டிலோ அல்லது அக்கம் பக்கத்து வீடுகளிலோ இருக்க வேண்டி இருக்கிறது. அப்போது இது போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது.
   எங்கேயோ  எப்போதோ நடக்கிறது. நமக்கு அப்படியெல்லாம் நடக்காது  என்று அலட்சியத்துடன் இருந்துவிட முடியாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எச்சரிக்கையுடன் கவனிப்பது மட்டுமல்லாமல்   குழந்தைகளுடன் விளையாட்டாகப் பேசி பள்ளியில், பள்ளிக்கு செல்லும் வழியில், வீட்டில் குழந்தை தனித்திருக்கும் சந்தர்ப்பங்களில் என்ன நடந்தது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். குழந்தைகளுடைய அன்றாட நடவடிக்கைகளில் திடீர் மாற்றம் ஏதேனும் தென்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
     ஒருவரை ஒருவர் தொட்டுப் பேசுவது இயல்புதான். என்றாலும்  பெண்குழந்தைகளை சாதாரணமாக தொட்டுப் பேசுவதற்கும் தகாத  எண்ணங்களோடு தொடுவதற்கும் வேறுபாடுகள் உள்ளன.  அம்மா அல்லது பாட்டி போன்ற பெரியவர்கள்தான் குழந்தைகளுக்கு இவற்றை சொல்லிக் கொடுக்க வேண்டும்.  தொடுகையின் நோக்கம் குழந்தைகளுக்கு தெரியாது. ஆனால் தொடுதலின் வித்தியாசத்தை உணரமுடியும். Good Touch எது  Bad Touch எது என்பதை குழந்தைகள் உணர கற்றுக் கொடுக்கவேண்டும் . குழந்தைகள் அதை உணர்ந்து எச்சரிக்கையுடன் நடந்து கொண்டால் பல அசம்பாவிதங்களில் இருந்து தப்பிக்க முடியும். அதை உணர்த்த வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கடமையாகும். கீழ்க்கண்ட தகவல்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

தொடுதலின் வகைகள்:
  1. பாதுகாப்பான தொடுதல்: இந்த வகை தொடுதலில் குழந்தைகள் பாதுகாப்பாக  உணர்வார்கள், தாயின் அணைப்பு, தந்தையின் அரவணைப்பு, தாத்தா பாட்டியின் அன்பான தொடுதல்,தட்டிக் கொடுத்தல், போன்றவை.
  2. பாதுகாப்பற்ற தொடுதல்: தள்ளி விடுதல், எட்டி உதைத்தல், கிள்ளுதல், அடித்தல் , பெரும்பாலும் சக நண்பர்கள், தோழிகளாலும், விளையாட்டின் போதும் நிகழ்வது. இவ்வகைத் தொடுதல் வலியையும் காயத்தையும் ஏற்படுத்தக் கூடியவை, இவையும் தவிர்க்கப் பட வேண்டியவையே!
  3. தேவையற்ற தொடுதல்: இதுதான் ஆபத்தானது. இது பாதுகாப்பானது என்றே குழந்தைகள் நினைக்கக் கூடும். நன்கு தெரிந்த நபராக இருந்தாலும் குழந்தைகளின் உடலில் கண்ட இடங்களை தொடுவது சரியல்ல என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.
குழந்தைகளுக்கு  சொல்ல வேண்டியது என்னென்ன? இதோ இந்தப் படங்களைப் பாருங்கள் 

                                                             தொடுதல் விதி 
எந்த உறுப்புகள் உன் உள்ளாடைகளால் மறைக்கப் பட்டுள்ளதோ அவைதான் உன் தனிப்பட்ட உறுப்புகள்.உன் உடல் ஆரோக்கியத்திர்காகத் தவிர வேறு காரணங்களுக்காக அவற்றை வேறு காரணங்களுக்காக மற்றவர்கள் தொடுவதோ பார்ப்பதோ அதைப் பற்றிப் பேசுவதோ சரி இல்லை.

             கட்டியணைப்பது

உன் மனசுக்கு பிடிச்சவங்க உன்னை  கட்டி பிடிச்சிகிட்டாலோ, முத்தம் குடுத்தாலோ உனக்கு சந்தோஷமாகூட இருக்கும்.அப்படி செஞ்சவங்க அதை ரகசியமா வச்சிருக்கச் சொன்னா உடனே அம்மா கிட்டயோ அல்லது நம்பிக்கையான பெரியவங்ககிட்டயோ சொல்லிடனும் 

                                                                          பரிசு 
சிலபேர் சில சமயங்களில் பரிசு காசு இனிப்பு கொடுத்து ஏமாத்தி அவங்கள் சொல்றபடி நடக்க வைப்பாங்க. அப்போது சங்கடமாவும் குழப்பமாவும் இருந்தா அவங்க கொடுக்கறதை வாங்காத. அவங்க சொல்றதையும் செய்யாதே.

 
                     ரகசியம் 
தொடுதல் பற்றிய ரகசியம் நல்லதல்ல. தொடுதல் விதிகளை மீற முயற்சி செய்தாலோ அல்லது உன்ன ரகசியமா வச்சுக்க சொன்னா அதை உடனே நீ நம்பற பெரியவங்க கிட்ட சொல்லணும் 


வேண்டாம்னு சொல்லணும்: தொடுதல் விதியை யாராவது மீறினால் "வேண்டாம்"னு சொல்லக் கத்துக்கறது ரொம்ப அவசியம். இதை ரொம்ப சத்தம் போட்டு சொல்லணும் 



சொல்லிவிடு
 உன்னை யாராவது தொடும் முறை கவலையோ குழப்பமோ பயமோ ஏற்படுத்தினால் உடனே நீ நம்பற பெரியவங்க கிட்ட அதைப் பத்தி சொல்லிவிடு. உதாரணமா உன்னுடைய அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, டீச்சர் இப்படி யாராவது. நீ முதலில் சொல்றவங்க உதவி செய்யலைன்னா வேற ஒருத்தர்கிட்ட சொல்லு. உனக்கு உதவி கிடைக்கும் வரை சொல்லிக்கிட்டே இரு
                                                               
  உன்மீது தவறு இல்லை
தொடுதல்  விதி மீறி சிலர்உன்னை காயப் படுத்தினால் அது உன் தவறு இல்லை.சில சமயங்களில் உன்னால் "வேண்டாம்"என்று சொல்ல முடியவில்லை என்றாலோ  அல்லது அந்த இடத்தில் இருந்து விலகிச் செல்ல முடியவில்லை என்றாலோ அல்லது மிகவும் பயமாக இருந்தாலோ  ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள். காயப்படவேண்டும் என்று நீ விரும்பவில்லை.அதற்கு நீ காரணமும் இல்லை.உன்னால் எப்போது மற்றவரிடம் சொல்ல முடியுமோ அப்போது  சொல்லலாம்.
    மேற்கூறிய அனைத்தையும்  குழந்தைகளுக்கு தயங்காமல் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவை பெண் குழந்தைகள் மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் தெரிவிக்கவேண்டிய அவசியம் உள்ளது.

   அரசு பள்ளிகளில்  படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை பற்றிய விழிப்புணர்வுப் பயிற்சிகூட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் அளிக்கப் பட்டது . இந்தப் பிரச்சனை அடித்தட்டு மக்கள், நடுத்தர மக்கள், வசதி படைத்தோர் அனைவருக்கும் பொதுவானதே! 

    இந்த  தகவல்கள் பயனளிக்கும் என்று நம்புகிறேன். இவற்றை குழந்தைகளின் கவனத்திற்கு உரிய வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்.

இது போன்ற தகாத செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப் பட்டு கடுமையான தண்டனை கிடைக்க செய்யவேண்டும் என்பதே பெரும்பாலோர் விருப்பம் 

இக்குற்றங்களுக்கு அதிக பட்ச தண்டனை என்ன? இதை தடுக்கும் வழிகள் உண்டா? பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாக்கப்பட  சட்டம் என்ன சொல்கிறது என்று  பார்ப்போம்.

(தொடரும்) 
  .
******************************************************************************

திங்கள், 13 ஏப்ரல், 2015

ஜெயகாந்தன் இளையராஜாவை அவமதித்தாரா?


     தமிழின் முக்கிய எழுத்தாளரான ஜெயகாந்தனின் மறைவு காரணமாக கடந்த சில நாட்களாக ஜெயகாந்தனைப் பற்றிய செய்திகளை அதிக அளவில் இணையத்தில் இடப் பெற்றிருந்தது. வாழும்போதே உரிய அங்கீகாரத்துடன் வாழ்ந்த ஒரு சிலரில் ஜெயகாந்தனும் ஒருவர் என்பதை பலரும் சுட்டிக் காட்டி இருந்தனர். மனதில் தோன்றுவதை எழுதவும் சொல்லவும் இவர் தயங்கியதில்லை என்பதை கடந்த நாட்களில் படித்த செய்திகள் மூலம் அறிந்து  கொள்ள முடிகிறது. இவர் மீதான விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை. முரண்பாடான  குணங்களும் அகம்பாவமும் கொண்டவர் என்றும் குற்றம் சாட்டப் படுகிறார்.

  இசைஞானி இளையராஜாவும் ஜெயகாந்தனும்  நண்பர்கள்  என்பது எல்லோரும் அறிந்ததுதான்.  தன்  சகோதரர்களோடு  சென்னைக்கு வந்ததும் முதன் முதலில் சென்றது ஜெயகாந்தனின் வீட்டுக்குத்தானாம்  'நாங்கள் உங்களை நம்பித்தான் வந்திருக்கிறோம்'  என்று ராஜா  சொன்னபோது "என்னை நம்பி எப்படி வரலாம் " என்றுகேட்டு நம்பிக்கையை விதைத்தவர்.ஜெயகாந்தன் " என்று கூறி இருக்கிறார் 
(இப்படி சொன்னால் நிஜமாவே நம்பிக்கை வருமா?).
மேலும் ஜெயகாந்தனைப் புகழ்ந்த இளையராஜா திருவண்ணாமலையில் அவருக்காக மோட்ச தீபம் ஏற்ற இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் இருவருக்குமான நெருக்கம் புலனாகிறது.
   ஆனால் ஒரு முறை ஆனந்த விகடனில் ஜெயகாந்தன் பற்றி ஒரு கேள்வி வைரமுத்துடம் கேட்கப் பட்டது . அந்தக் கேள்வி
"ஜெயகாந்தனிடம் நீங்கள் ரசிப்பது எது?" என்ற கேள்விக்கான பதிலில் ஒரு நிகழ்வைக் கூறி இருந்தார் .
 ஜெயகாந்தன் தன்மகனின் திருமணத்தை வைரமுத்துவின் திருமண மண்டபத்தில் வைத்திருந்தார்.மகனின் திருமணத்திற்கு தன் நண்பரான இளையாராஜாவிற்கு அழைப்பிதழ் கொடுக்க அவரது வீட்டிற்கு சென்று அழைப்பிழைக் கொடுத்து திருமணத்திற்கு அழைத்திருக்கிறார். நிச்சயம் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்  அழைப்பிதழைப் பிரித்த ராஜா, மண்டபத்தின் பெயரைப் பார்த்ததும் முகம் மாறினார். 'நான் அங்கு வர முடியாதே' என்றார். கோபத்துடன் வாசல்வரை சென்ற ஜெயகாந்தன்  சட்டென்று திரும்பி  வந்து, "நீதான் திருமணத்திற்கு வரப் போவதில்லையே உனக்கு எதற்கு அழைப்பிதழ்" என்று கொடுத்ததை  பிடுங்கிச் சென்று விட்டாராம் . இந்த சம்பவத்தை நண்பரின் வாயிலாக தெரிந்து கொண்டேன் என்று கூறிய வைரமுத்து சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ என்ற கண்ணதாசனின் வரிகள்  நினைவுக்கு வந்ததாக  கூறி மகிழ்ந்துள்ளார் . 

    ஜெயகாந்தனைப் பற்றி அறிந்தவர்களின் கருத்துகளை வைத்துப் பார்க்கும்போது அவர் இப்படிக் கூறி இருந்தாலும் இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் உண்மையில் இப்படி  நடந்திருந்தால் இளையராஜா ஜெயகாந்தன்  மீது நிச்சயம் கோபம் கொண்டிருப்பார். தப்பித் தவறிக் கூட புகழாரம் சூட்டி இருக்க மாட்டார் என்றே கருத்துகிறேன்.
   அறிவுச்செருக்கு  இலக்கிய வாதிகளின் சொத்து  என்பதை நாம் அறிந்திருந்தாலும்  அது ஜெயகாந்தனுக்கு  சற்று கூடுதலாக இருப்பதாகவே படுகிறது.. 

      பிரபல பதிவர் எழுத்தாளர்,பத்திரிக்கை   அனுபவம் உள்ள அமுதவன் அவர்கள்  கலை இலக்கியம்  ,திரைப்படம் என்று அரிய செய்திகளைத்  தருபவர். பதிவர் வருணின் ஜெயகாந்தன் பற்றிய பதிவொன்றிற்கு இட்ட பின்னூட்டம் இன்னும் ஆச்சர்யம் அளித்தது .  அமுதவன் அவர்கள் மூலம் அறிந்த செய்தி இதுதான்
     ஜெயகாந்தன் ஞான பீடப் பரிசு பெற்ற போது அப்போதைய முதல்வர் கலைஞர் அவரை  சந்திக்க் விரும்பியதும் அதற்கு அவரது முகவரி கேட்ட போது ஒரு முதலவருக்கு இது கூட தெரியாதா?  வேண்டுமானால் கண்டுபிடித்து வரட்டும்  என்று  சொன்னதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

   சிறந்த படைப்பாளியாக இருந்தாலும் இவ்வளவு அகங்காரம் உடையவரா  என்று எண்ணும் அளவுக்கு  நிறைய சம்பவங்கள் உதாரணமாக சொல்லப் படுகின்றன . இதே போன்ற ஒருகருத்தை விகடனில் ஜெயகாந்தனைப் பற்றிய கட்டுரையின் பின்னூட்டத்திலும் ஒருவர் தெரிவித்திருந்தார்.
   ஆனால் இத்தனையும் தாண்டி அவரது படைப்புகள் அவரது  தனி மனிதக்  குணங்களை  பொருட்படுத்தாமல் இருக்க செய்யும் வல்லமை பெற்றிருக்கிறது.
       உண்மையில் இந்தப் பதிவில் எழுத நினைத்தது நாள் பள்ளி வயதில் புரியாமல் படித்த சில ஜெயகாந்தன் கதைகளைப் பற்றி. ஜெயகாந்தனை கரைத்துக் குடித்த நிறையப்பேர் அதை பற்றி எழுதிவிட்டனர். ஏதோ சில கதைகளை மட்டுமே படித்த நான் அவரது எழுத்தைப் பற்றி  புதிதாகவோ சிறப்பாகவோ  என்ன எழுதிவிட முடியும்? 
    அதனால் மற்ற ஜெயகாந்தனின் கதைகள் சிலவற்றை இணையத்தில் தேடிப் படித்துக் கொண்டிருந்தேன் .  பள்ளி வயதில் நான் படித்த ஜெயகாந்தனின் மிகச்சில கதைகளில் " இது என்ன பெரிய விஷயம்"  என்ற கதை என்னை மிகவும் கவர்ந்தது.  அதன் சாரம் நினவு இருக்கிறதே தவிர முழுமையாக ஞாபகத்தில் இல்லை. அதனை மீண்டும் படிப்பதற்காக இணையத்தில் தேடினேன். கிடைக்கவில்லை. அப்போது "நீ என்னா சார் சொல்ற" என்ற ஜெயகாந்தனின் கதையை  முதன்முறையாக படித்தேன்.  இதற்கு முன் அந்தக் கதையை நான் படித்ததில்லை. 
      எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. நான் கடந்த ஆண்டு 'நான் ரொம்ப நல்லவன் சார்' என்று ஒரு கதை எழுதி பதிவிட்டிருந்தேன். தன்னைப் பற்றி ஒருவன் சொல்லிக் கொண்டே போகும் அந்தக் கதையின் இறுதி வரி "என்ன சார் சொல்றீங்க".  அதேபோல தன்னைப் பற்றி சொல்லிக்கொண்டே போகும்  ஜெயகாந்தன் கதையின் கடைசி  வரியும்  "நீ என்னா சார் சொல்ற" என்று முடிந்திருந்தது. (இதெல்லாம் ஒரு பெருமையான்னு கேக்கப் படாது) எனது கதையை நான் ஏதோ வித்தியாசமாக எழுதியதாக நினைத்திருந்தேன். 55 வருஷத்துக்கு முன்னாடியே நான் எப்படி எழுதி இருக்கேன் பாரு என்று சொல்வதுபோல  ஒரு வித்தியாசமான நடையில் எழுதி அசத்தி இருந்தார் ஜெயகாந்தன் .ஹோட்டல்  ரூம் பாய்  ஒருவன் தன் சொந்தக் கதையை தானே விவரிக்கும்  அற்புதக் கதை அது.  அவன் தனது கதையை சொல்லிக் கொண்டே போக நம்மையும் கதைக்குள் ஈர்த்து  இறுதி வரி  வரை படிக்க வைத்து விடுகிறார்.  ஜெயகாந்தனின் எழுத்துக்கள் செய்த ரசவாதம் புரிந்தது. இதோ உங்களுக்காக அந்தக் கதை

எனது மொக்கை    (கதையைப்) படிக்க கீழே கிளிக்கவும்
ஜெயகாந்தனின் கதை கீழே இணைக்கப் பட்டுள்ளது உள்ளே க்ளிக் செய்து ஸ்க்ரோல் செய்து படிக்கவும்


*************************************

கொசுறு :1. ஜெயகாந்தன் எழுதிய வெண்பா 

'பட்டேன் பலதுயரம் பாரிலுள்ளோ ரால்வெறுக்கப்
பட்டேன், படுகின்றேன், பட்டிடுவேன் - பட்டாலும்
நாட்டுக் குழைக்குமெனை நாடேவெறுத்திட நான்
வீட்டுக்கும் வேண்டா தவன் '

இதை ஜெயகாந்தனுக்கு  ஞானபீடப் பரிசு வழங்கிப் பாராட்டிப் பேசியபோது குறிப்பிட்டவர் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் 

கொசுறு :2 ஜெயகாந்தன் பற்றிய அனைத்து அம்சங்களையும் அலசக் கூடிய ஒரு திறனாய்வுக் கட்டுரையை கவிஞரும் பட்டிமன்றப் பேச்சாளருமான  முத்து நிலவன் வளரும் கவிதை வலைப்பதிவில் எழுதி உள்ளார். அதற்கான இணைப்பு 

ஜெயகாந்தன் படைப்புகள் - ஒரு முழு விமர்சனம் - நா.முத்து நிலவன்


********************************************************

மன்னிக்கவும் ,தற்காலிகமாக Comment Moderation வைக்கப்பட்டுள்ளது 

புதன், 8 ஏப்ரல், 2015

வெற்றிச் சூத்திரம்


முன்னேறியவர்கள்
சொன்னதை
முன் மாதிரியாய்க் கொள்

நம்பிக்கைச் செடியை
நட்டு வை

உழைப்பு என்ற
நீரை ஊற்று

நாணயம் என்ற
நல்லுரம் இடு

உறுதி என்ற
வேலி போடு

எதிர்ப்பு என்ற
களைகளை
 எச்சரிக்கையுடன்
அகற்று

பொறுமையாய்க்
கவனத்துடன் 
காவல் இரு

பின்னர்
வெற்றி
பூவாய்,
காயாய்,
கனியாய்
உன் கையில்!

ஆம்
எல்லாம் உன்
தன்னம்பிக்கையில்






*********



திங்கள், 6 ஏப்ரல், 2015

எழுதியது யார்? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்


 ஒரு பிரபலமான புத்தகத்தின் மொழி பெயர்ப்பிலிருந்து   கொஞ்சம் எடுத்துக் கொடுத்திருக்கிறேன். மூல நூலின் பெயரையும் இதை எழுதியவர் யாரென்றும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

              எனக்கு மணமான போது   நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்  நாங்கள் அண்ணன் தம்பிமார்மூன்று பேரும் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தோம்.  மூத்த அண்ணன் மிகவும் மேல் வகுப்பில் படித்தார். என்னோடு   விவாகமான அண்ணனோ எனக்கு ஒரு வகுப்பு மேலே படித்தார். விவாகத்தால்   எங்கள் இருவருக்குமஓர் ஆண்டு வீணாயிற்று. இதன் பலன் தான்    என் அண்ணனுக்கு பின்னும்     மோசமானதாகவே    இருந்தது. அவர் படிப்பையே முற்றும் விட்டு விட்டார்.அவரைப் போல    எத்தனை இளைஞர்கள் இதே கதிக்கு ஆளாகி யிருக்கிறார்கள் என்பதைக் கடவுளே அறிவார். இன்றைய நமது  ஹிந்து சமூகத்தில் மட்டுமே படிப்பும் கல்யாணமும் ஏக காலத்தில் நடைபெறுகின்றன.

     நான் தொடர்ந்து படித்தேன். உயர்நிலைப் பள்ளியில் என்னை மந்தமானவன் என்று யாருமே  எண்ணவில்லை. என் உபாத்தியாயர்கள் என்னிடம்    எப்பொழுதும் அன்போடு இருந்தார்கள். என் படிப்பின்    அபிவிருத்தி, நடத்தை ஆகியவை பற்றி ஆண்டுதோறும் பெற்றோருக்கு நற்சாட்சிப் பத்திரம் அனுப்பப்படும். கெடுதலான       பத்திரம் என்னைக் குறித்து ஒரு தடவையேனும் வந்ததில்லை.  உண்மையில் நான் இரண்டாம் வகுப்புத் தேறிய பிறகு           பரிசுகளையும் பெற்றேன். ஐந்தாம், ஆறாம் வகுப்புக்களில் முறையே  நான்கு ரூபாயும், பத்து ரூபாயும் உபகாரச் சம்பளங்களாகப் பெற்றேன். இவைகளை  நான் அடைந்ததற்கு என் திறமையை விட என்னுடைய  நல்லதிர்ஷ்டமே காரணம். ஏனெனில், இந்த உபகாரச் சம்பளம்   எல்லோருக்கும் உரியதன்று.கத்தியவாரில் சோராத் பகுதியிலிருந்து வரும்  சிறந்த மாணவர்களுக்கு மாத்திரமேஅது உண்டு.அந்த நாட்களில் நாற்பது முதல் ஐம்பது பேர் வரையில்  கொண்ட ஒரு வகுப்பில் சோராத்திலிருந்து வரும் மாணவர்கள் பலர் இருப்பதில்லை.

     என் திறமையில்     எனக்குப்         பிரமாதமான மதிப்பு இருந்ததில்லை என்பதே ஞாபகம். எனக்குப்    பரிசுகளும் உபகாரச் சம்பளங்களும் கிடைக்கும் போதெல்லாம் நான்   ஆச்சரியப்படுவது வழக்கம். ஆனால், எனது     நன்னடத்தையை      நான் சர்வ ஜாக்கிரதையாகக் காப்பாற்றி வந்தேன். இதில் ஒரு      சிறிது குறை ஏற்பட்டாலும் கண்ணீர்            விட்டு அழுது விடுவேன்.கண்டிக்கப்பட்டாலோ, கண்டிக்கபட வேண்டியவன் நான் என்று உபாத்தியாயர் கருதினாலோ, என்னால்       சகிக்க முடியாது. ஒரு தடவை அடிபட்டதாக   எனக்கு நினைவிருக்கிறது. அடிபட்டதற்காக நான் வருத்தப் படவில்லை ; நான்     அடிபட வேண்டியவன் என்று கருதப்பட்டதே எனக்கு அதிக வருத்தத்தை அளித்தது. அதற்காகப் பரிதாபகரமாக  அழுதேன்.
   முதல் வகுப்பிலோ, இரண்டாம்    வகுப்பிலோ படித்தபோது நடந்தது அது. நான் ஏழாம் வகுப்பில்         படித்துக் கொண்டிருந்த போது அத்தகைய மற்றொரு சம்பவம்     நிகழ்ந்தது. .  எங்கள் தலைமை ஆசிரியர் மீது மாணவர்களுக் கெல்லாம்  அதிகப் பிரியம்.  அதே    சமயத்தில் கட்டுத் திட்டங்களில மிகக் கண்டிப்பானவர்; குறிப்பிட்ட        முறைப்படி காரியங்களைச் செய்பவர்; நன்றாகப் போதிப்பவருங்கூட       அவர் மேல் வகுப்புப் பையன்களுக்குத்    தேகாப்பியாசத்தையும், கிரிக்கெட்டையும் கட்டாயமாக்கி விட்டார்.  இந்த    இரண்டும் எனக்குப் பிடிக்கவில்லை.
       இவை கட்டாயமாக்கப் படுவதற்கு    முன்னால் நான் தேகாப்பியாசம் செய்ததோ, கிரிக்கெட் அல்லது கால்பந்து விளையாடியதோ  இல்லை. ஒன்றிலும்  சேராமல்   நான் ஒதுங்கி இருந்து விட்டதற்கு எனக்கிருந்த கூச்சம் ஒரு காரணம். அப்படி      இருந்து விட்டது தவறு என்பதை இப்போது அறிகிறேன். படிப்புக்கும்  தேகப்பயிற்சிக்கும் சம்பந்தமே இல்லை என்ற தவறான கருத்தும்     அப்பொழுது எனக்கு இருந்தது. ஆனால், இன்று, பாடத் திட்டத்தில்  மனப்பயிற்சிக்கு எவ்வளவு இடம் அளிக்கப்படுகிறதோ, அவ்வளவு உடற்பயிற்சிக்கும் அளிக்கப்பட வேண்டும்  என்பதை அறிவேன். என்றாலும், தேகப் பயிற்சியில்    கலந்து கொள்ளாமல் இருந்து விட்டதனால் எனக்கு அதிகத் தீமை   எதுவும் ஏற்பட்டு விடவில்லை என்றும் கூறுவேன். இதற்கு ஒரு  காரணம் உண்டு. திறந்த வெளியில் நீண்ட தூரம் நடப்பதால் ஏற்படக்   கூடிய நன்மைகளைக் குறித்துப் புத்தகங்களில் படித்திருந்தேன். இந்த         யோசனை எனக்குப் பிடித்ததால் நீண்ட நேரம் நடக்கும்     பழக்கம் எனக்கு ஏற்பட்டது. அப்பழக்கம் இன்னும்     எனக்கு இருக்கிறது. இதன் பயனாக என் உடல் நன்கு வலுப்பெற்றது. 

       தேகாப்பியாச  வகுப்புக்குப் போக      நான் விரும்பாததற்குக் காரணம், என்   தந்தைக்குப் பணிவிடை    செய்யவேண்டும் என்று எனக்கு இருந்த ஆர்வமேயாகும். பள்ளிக்கூடம் விட்டதும்,   நேரே அவசரமாக வீட்டுக்குப் போய் அவருக்குப்    பணிவிடை செய்வேன். இந்தச்         சேவை செய்வதற்குக்    கட்டாயத் தேகப்பயிற்சி இடையூறாக இருந்தது. என்      தந்தைக்கு நான் பணிவிடை செய்ய வேண்டும் ஆகையால்      தேகப்பயிற்சி வகுப்புக்குப் போகாதிருக்க அனுமதிக்குமாறு திரு ஜிமியிடம்   கோரினேன். ஆனால், அவர் என் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ல மறுத்துவிட்டார். ஒரு நாள் சனிக்கிழமைஅன்று   காலையில்  பள்ளிக் கூடத்திற்குப் போக வேண்டும். மாலை 4  மணிக்குத்          தேகப் பயிற்சிக்காக நான் வீட்டிலிருந்து திரும்பவும்   பள்ளிக்கூடம் போக வேண்டும். நான் பள்ளிக் கூடம்    போய்ச்    சேருவதற்கு முன்னால் அங்கிருந்து பிள்ளைகளெல்லாம் போய் விட்டார்கள்.  வந்திருந்தோரின்  கணக்கை திரு ஜிமி மறுநாள் தணிக்கை செய்து பார்த்தபோது நான் வரவில்லை என்று குறித்திருந்ததைக் கண்டார். ஏன் வரவில்லை என்று என்னைக்  கேட்டதற்கு நடந்ததைச் சொன்னேன்.   நான் கூறியதை நம்ப அவர் மறுத்து விட்டார். ஓரணாவோ அல்லது  இரண்டணாவோ (எவ்வளவு என்று எனக்குச்     சரியாக நினைவில்லை)    அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

     பொய் சொன்னதாக நான்   தண்டிக்கப்பட்டேன்! இது எனக்கு மிகுந்த மன வேதனையாகி விட்டது.   நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பது எப்படி? அதற்கு வழியே  இல்லை. வேதனை தாங்காமல் கதறி அழுதேன். உண்மை யுள்ளவன்  எச்சரிக்கையுடன்  இருப்பவனாகவும்  இருக்க வேண்டியது  முக்கியம் என்பதை உணர்ந்தேன். பள்ளிக்கூடத்தில் நான் அசட்டையாக நடந்துகொண்ட முதல் சந்தர்ப்பமும், கடைசிச்  சந்தர்ப்பமும் இதுதான். முடிவில் அந்த அபராதம் ரத்து செய்யப்பட்டு  விட்டதில் நான் வெற்றி  அடைந்தேன் என்று   இலேசாக ஞாபகம் இருக்கிறது. பள்ளிக்கூடம் விட்டதும் நேரே வீட்டுக்கு  நான்  வந்துவிட வேண்டும் என்று தாம் விரும்புவதாகத் தலைமையாசிரியருக்கு  என் தந்தையே சொன்னதன் பேரில், தேகாப்பியாசத்திற்குப்    போகவேண்டும் என்பதில் இருந்து  விலக்குப் பெற்றேன்...............................



    ************************************************************

கிட்டத்தட்ட அனைவருமே சரியாகக் கூறி விட்டீர்கள்  வாழ்த்துக்கள் .


நேரம் இருந்தால் படியுங்கள் 


வெள்ளி, 3 ஏப்ரல், 2015

காப்பி அடிக்க புத்தகம் தருவோம்! லாலு சொன்னது சரியா?

கட்டடம் கட்டல  பாஸ் காப்பி அடிக்க ஹெல்ப் பண்றாங்க 

     மார்ச்சும்  ஏப்ரலும் தேர்வுகள் மாதம். ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நேரங்களில் மாணவர் ஆசிரியர் பெற்றோர் அரசு என ஒரு பரபரப்பு  காணமுடியும்.இந்த ஆண்டு தேர்வுகள் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. பீகாரில் ஒரு பள்ளியில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவ பெற்றோர் பட்டபாடு காணக்கிடைக்காத காட்சியாக பத்திரிகைகளில் வெளியாகி சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருந்தது அனைவரும் அறிந்ததே. அதற்கு அமைச்சர் அளித்த விளக்கம் மெய் சிலிர்க்க வைத்தது.
."நூற்றுக் கணக்கான பேர் கட்டிடத்தில் ஏறி துண்டு சீட்டுகளைக் கொடுத்துள்ளனர் அதற்காக அவர்களை துப்பாக்கியால் சுடவாமுடியும்? " என்று கேட்டுள்ளார். கூட்டமாக சேர்ந்து முறைகேடுகளுக்கு துணை போனால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுவது பொறுப்பின்மையைத் தான் காட்டுகிறது. (  இரண்டு நாட்கள் கழித்து தேர்வுகள் ரத்து செய்வதாக அறிவிக்கப் பட்டது). நடந்திருக்கும் விவகாரத்தை பார்த்தால் ஏதோ புதிதாக இந்த ஆண்டு மட்டும் நடந்தாகத் தெரியவில்லை.ஒவ்வோர் ஆண்டும் இப்படித் தான் நடக்கும் போல் இருக்கிறது . இந்த முறை யாரோ ஒருவர் புகைப்படம் எடுத்ததால் விவகாரம் பூதாகாரமாகிவிட்டது .
     இந்த விவகாரத்தில் லாலு பிரசாத் யாதவ் சொன்னது "நாங்களாக இருந்தால் காப்பி அடிக்க மாணவர்களுக்கு புத்தகத்தையே கொடுத்திருப்போம்" என்று
   தேர்வு எப்போதும் ஒரு வித பதட்டத்தை மாணவர்க்கும் பெற்றோர்க்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்படுத்தி விடுகிறது. மாணவர்களோடு பெற்றோரும் சேர்ந்து  மூளை சலவை செய்யப் பட்டவர்களாகவே உலாவருகின்றனர். தேர்வு சமயங்களில் உறவினரின் திருமணம் போன்ற முக்கிய குடும்ப  நிகழ்வுகளில் கலந்து கொள்வதையும் தவிர்த்து விடுவர். தேர்வில் பெறும் மதிப்பெண்தான் வாழ்க்கயை தீர்மானிக்கிறது என்ற தவறான புரிதல் பெற்றோரிடையே நிலவுகிறது. 80 சதவீத மதிப்பெண்கள் பெற்றாலும் குறைந்து போய்விட்டதே என்று புலம்புகின்றனர். எதிர்காலமே இருள் சூழ்ந்தது போல ஆகிவிட்ட தோற்றத்தை உருவாக்கிக் கொள்கின்றனர்.
பெற்றோரின் இந்த மனநிலையை பத்திரிகைகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.  பத்திரிகைகள் தங்கள் பங்குக்கு ஜெயித்துக் காட்டுவோம்,வெற்றி நமதே என்று அதிக மதிப்பெண்கள் பெற ஆலோசனை என்று நிகழ்ச்சிகளை நடத்தி தங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்கின்றன. மாதிரி வினாத்தாள்களை வெளியிடாத பத்திரிகைகளே இல்லை எனலாம்.  இவை அனைத்தும் படியுங்கள் எழுதிப் பாருங்கள் பயிற்சி செய்யுங்கள் என்று வலியுறுத்துகின்றனவே அன்றி சிந்தனைத் திறனை வளர்ப்பதற்கு ஆலோசனை கூறுவதில்லை 

      தற்போதைய கல்வி முறை முழுக்க முழுக்க மனப்பாடம் செய்யும் திறமையை  பொறுத்தே மதிப்பெண்கள் பெறக் கூடிய வகையில் உள்ளது.. கணிதம் கூட மனப்பாடம் செய்து எழுதி விட முடியும். பாடம் மாணவர்களுக்கு புரிந்ததா இல்லையா என்பதை சரியாக அறிய முடியாது. மனப்பாடத் திறன் முழுமையாக தேவையே இல்லை என்று சொல்லி விட முடியாது என்றாலும் நினைவாற்றல் கல்வியின் ஒரு பகுதியே தவிர நினைவாற்றலும் தகவல்கள் தெரிந்து வைத்துக் கொள்ளுதல் மட்டுமே கல்வியாகி விட முடியாது,  அது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இருந்தால் போதுமானது. சில விலங்குகள் மனிதனைவிட நினைவாற்றல் மிக்கவை அது அதற்கு அத்தியாவசியமானது
   குழந்தைகளுக்கு  ஞாபக சக்தி குறைவா இருக்கிறது என்று  நினைத்து அதை அதிகரிக்க மருந்துகள் கிடைக்குமா என்று தேடும் பெற்றோரும் உண்டு. நினவாற்றலின் தேவை சூழ்நிலை கருதியே அமைகிறது. முன்பெல்லாம் 40 ,50 தொலைபேசி எண்கள் நினைவில் வைத்திருக்க முடிந்தது. அதற்கான தேவை இருந்தது. இப்போது அதற்கான அவசியம் இல்லை. நமது தொலைபேசி எண்ணே கூட சில நேரங்களில் நினைவில் இருப்பதில்லை. தற்போதைய தொழில் நுட்பங்கள் நினைவாற்றலின் தேவையை சுருக்கி விட்டது. அதனை தவிர்க்க இயலாத நிலையில், நினைவாற்றலை மட்டுமே அதிகமாக சோதிக்கும் விதத்தில் தேர்வு அமைந்திருக்கும் அவசியம்தான் என்ன? மாணவர்களுடைய சிந்தனைத் திறனையும் படைப்பற்றலையும் வெளிப் படுத்தும் விதமாக அல்லவா தேர்வு அமைய வேண்டும்.
    மதிப்பெண்களே  பொறியியல்  மருத்துவப் படிப்புகளுக்கு அடிப்படை எத்தனை பேர் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தது? எத்தனை பேருக்கு பொறியியல் கிடைத்தது என்று சொல்வதே பள்ளிகளின் பெருமையாக கருதப்படுகிறது. பள்ளியைப் போலவே கல்லூரிகளும் இப்போது கோச்சிங் முறையையே கையாள்கின்றன.உண்மையில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் கூட முழு தகுதி பெற்றவர்களாக இருப்பதில்லை என வளாகத் தேர்வுக்கு வரும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன 

    தேர்வு முறையில் மாற்றம் வேண்டும் என்ற பலரும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் என்ன விதமான மாற்றம் செய்யவேண்டும். எப்படி செய்தால் சரியானது என்பதை முடிவு செய்ய முடியவில்லை. சி.பி.எஸ்.சி 10 வகுப்பு தேர்வில் GRADE முறைதான் நடைமுறையில் இருக்கிறது. இருந்தாலும் அதுவும் மதிப்பெண் அடிப்படையில் அமைந்ததுதானே!

 எப்படி சொன்னாரோ தெரியாது தேர்வு எழுத புத்தகம் கொடுப்பேன் என்று லாலு சொன்ன மாற்றத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது . அதனை பரிசீலிக்க வேண்டிய காலம் வெகு தூரத்தில் இல்லை என்றே கருதுகிறேன்

அரசு துறைத் தேர்வுகளில் பெரும்பாலான தேர்வுகள் புத்தகம் பார்த்து எழுத அனுமதி உண்டு. ஆனால் அவற்றில் இருந்து விடைகளை கண்டு பிடித்து எழுதுவது  எளிதான செயல் அல்ல. புத்தகத்தை பலமுறை வாசித்திருந்தால் மட்டுமே எது எங்கே இருக்கிறது என்பதை அறிய இயலும். அது போல மாணவர்களுக்கும் பாடப் புத்தகம் கொடுத்து அதிலிருந்து நேரடியாக எழுத முடியாமல் சிந்தித்து எழுதும் வண்ணம் கேள்விகளை உருவாக்க வேண்டும். அப்போதும் இருநூறுக்கு இருநூறு மதிப்பெண் பெறுதல்  அனைவராலும் முடியாது.
     பீகார் சமபவத்தை விடுங்கள். தமிழ்நாட்டிலும் தேர்வு தொடங்கிய நாளில் இருந்து தினந்தோறும் காப்பி அடித்தல் தொடர்பான செய்திகள் நாளிதழ்களில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. காப்பி அடிப்பது எனபது புதிதல்ல  எப்போது தேர்வு என்று உருவானதோ  அப்போதே காப்பியும் உருவாகி விட்டது.மாணவர்களாக குறுக்கு வழியில் மதிப்பெண் பெற காப்பி அடிப்பது காலங் காலமாக நடந்து கொண்டு வருகிறது. நான் படிக்கும்போது காப்பி அடிக்க விதம் விதமான யுக்தியை மாணவர்கள் கையாள்வார்கள். படிக்காத மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்காக காப்பி அடித்த நிலைஅன்று .  நன்கு படிக்கும் மாணவர்களும் முழுமதிப்பெண்கள் பெறுவதற்காக  பார்த்து எழுதும் நிலை இன்று.  இதற்கு அங்கொன்று இங்கொன்றுமாய்  ஆசிரியர்கள் உதவி வந்த நிலை மாறி பள்ளிகளே திட்டமிட்டு உதவும் அளவுக்கு நிலை மோசமாகி விட்டது. நூறு சதவீத தேர்ச்சி, அதிக மதிப்பெண்கள். என்று தங்கள் பள்ளியின் வியாபாரத்தை பெருக்கிக் கொள்வதற்கு இவை உதவுகின்றன. இவற்றையே தரம் என்று பெற்றோரும் அரசாங்கமும் சமூகமும் நம்புகின்றன. எவ்வளவுதான் பறக்கும் படைகள் அமைக்கப் பட்டாலும் இவற்றை தடுக்க முடிவதில்லை.வாட்ஸ் அப் போன்ற தொழில்.  நுட்பங்கள் காப்பி அடிக்க உதவுதலை நவீனமாக்கி விட்டது.

      படிக்காத மாணவர்களை பள்ளிகளை விட்டு வெளியே அனுப்புவதை தனியார் பள்ளிகள் செய்து கொண்டிருந்தன. இன்றும் செய்து கொண்டிருக்கின்றன. இதே நடைமுறை அரசு பள்ளிகளும் பின் பற்ற ஆரம்பித்து விட்டன. தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க  சராசரிக்கும் கீழ் உள்ள மாணவர்களை ஒன்பதாம் வகுப்பில் வெளியேற்றும் சம்பவங்கள் பள்ளிகளில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் கூட ஏதோ ஒரு பள்ளியில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க சில மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வில்லை என்ற செய்தியை தொலைக் காட்சியில் பார்த்தேன். காரணம் தனியார் பள்ளிகளின் தேர்ச்சி வீதத்தை ஒப்பிட்டு  ஆய்வுக் கூட்டங்களில் தேர்ச்சி வீதம் குறைந்ததற்காக காரணம் கேட்கப் பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டும்  அரசு பள்ளிகளுக்கும் நெருக்கடி கொடுக்கப் படுகிறது.
   இதனால் தலைமை ஆசிரியர்கள் மாலை வகுப்பு இரவு வகுப்பு விடுமுறை நாட்களில் வகுப்பு என்று மாணவர்களை வாட்டி எடுக்கிறார்கள். பெரும்பாலும் இச் சிறப்பு வகுப்புகளில் புரியாத பாடம் விளக்கப் படுவதோ மாணவர்களின் ஐயங்கள் தீர்க்கப் படுவதிலோ அதிக அக்கறை காட்டுவதில்லை. ப்ளூ பிரிண்ட்டின் படி கேள்விகளின் விடைகளை படிக்க வைத்து குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் பெறுவதற்கு  பயிற்சி அளிக்கிறார்கள். அப்படியும் இயலாத நிலையில் உள்ளவர்களை ஒன்று தேர்வு எழுத அனுமதிக்காமல் தவிர்க்க செய்வது அல்லது  காப்பி அடிக்க உதவுவது என்று ஏதோதோ செய்ய முயற்சிக்கிறார்கள் 

   இது இப்படி என்றால், முன்பெல்லாம் தேர்வு  முடிந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி நிதானமாக நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில்கூட வந்ததுண்டு . ஆனால் இப்போதோ மே முதல் வாரத்திலேயே முடிவுகள் வெளியாகி விடுகிறது. இந்த சுறுசுறுப்பு வரவேற்கத் தக்கதுதான் என்றாலும் சரியானதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். எப்போதும் +2 தேர்வுகள் முடிந்தபின்தான் 10 வகுப்பு தேர்வுகள் தொடங்கும். இவ்வாண்டு +2தேர்வு நடக்கும்போதே 10 வகுப்பு தேர்வும் இடையில் நடை பெறுகிறது. இந்தப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு பல இடர்பாடுகள் ஏற்படுகின்றன . அதோடு மட்டுமல்லாமல் தேர்வு  நடந்து கொண்டிருக்கும்போதே விடைத்தாள் திருத்தும் பணியும் இந்த ஆண்டு தொடங்கி விட்டது. இந்தப் பணிகளுக்கான போதுமான ஆட்கள் தேவை அல்லவா அதற்கும் பள்ளியில் பணி புரியும் மற்ற வகுப்பு ஆசிரியர்கள் ஈடுபடுத்தப் படுகிறார்கள். அந்த வகுப்புகள் என்ன ஆவது . அப்படி வேக வேகமாக முடிக்க வேண்டிய அவசியம்தான் என்ன?

 ஒரே நாளில் அதிக விடைத்தாள்கள் திருத்த கட்டாயப் படுத்தப் படுதல், எந்தப் பாட ஆசிரியராக பணி செய்கிறாரோ அந்தப் பாடத்தின் விடைத்தாள்களை  கொடுக்காமல் வேறு பாடத்தின் வினாத்தாள்களை கொடுத்து திருத்தத் செய்தல், நிதானமாக கவனத்துடன் செய்யவேண்டிய பணியை வேகமாக முடிக்க வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்தப்படுவதும் வழக்கமாக உள்ளதாக  கூறப்படுகிறது..
   உயர் அலுவலர்கள் எப்போதும் மற்றவர்களின் நடை முறை இடர்பாடுகளை சிறிதும் அறிய விரும்புவதில்லை. தான் நினைத்ததை எந்த வித மறுப்புமின்றி செய்து முடிக்க வேண்டும். கேள்வி கேட்டல் அறவே கூடாது.   நிறைய அதிகாரிகள்  இந்த மனப்பான்மை உடையவர்களாகவே இருக்கின்றனர். இவையும் பல சிக்கல்களுக்கு காரணங்களாக அமைகின்றன.
   கேள்வித் தாள் குழப்பங்கள் வேறு அவ்வப்போது ஏற்படுவதுண்டு. தவறான கேள்விகள்  கேட்கப் படுவது ஒருபக்கம் இருந்தாலும் சற்று மாற்றிக் கேட்டு விட்டாலும் கடினம் என்றும் புத்தகத்தில் இல்லாததை கேட்டு விட்டார்கள் என்று ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோரும் புலம்பத் தொடங்கி விடுவார்கள்.  அவற்றிற்கும் இந்த அவசர போக்கே காரணம்

   லாலு சொன்ன புத்தகம் கொடுப்பேன் என்ற  தேர்வு  முறை மாற்றத்தை முதலில் செயல் முறைத் தேர்வுகளில் இருந்து தொடங்கலாம் என்பது என் கருத்து 
      ஏனெனில் அறிவியல் பாட செயல் முறைத் தேர்வுகள் கூட மனப்பாட முறையையே நம்பி இருக்கின்றன. இவற்றிற்கான விடைகளை  ஆசிரியர்களோ உதவியாளர்களோ சொல்லிக் கொடுத்து விடுவதுதான் வழக்கமாக உள்ளது. அப்படி இருக்கையில் செய்முறை விளக்கங்கள பார்த்தே  குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்முறைத்  தேர்வை எழுத அனுமதிப்பதில் தவறு ஏதும் இல்லையென்றே கருதுகிறேன்.
       மெல்ல இந்த மாற்றத்தை வல்லுனர்களைக் கொண்டு ஆய்வு செய்து பொதுத் தேர்வுகளுக்கும் விரிவு படுத்தலாம்.

யார் பூனைக்கு மணி கட்டப் போகிறார்கள்? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .

  *************************************************************************

 படிச்சாச்சா 



வியாழன், 2 ஏப்ரல், 2015

கலகக் கோப்பை 2015


    கிரிக்கெட் உலகக் கோப்பை பைனல்ஸ்ல இந்தியா நுழைஞ்சிடும்னு நம்பி ஏமாந்து போய் இருப்பீங்க. அட விடுங்க .  உலகக் கோப்பை என்னங்க பெரிய உலகக் கோப்பை. . எங்க ஏடாகூடம் ஃபிளாட்ஸ்ல நடக்கிற  கலகக் கோப்பையை விடவா அது சுவாரசியமா இருக்கப் போகுது. 
        எங்க ஏரியாவில ஏடாகூடம் ஃபிளாட்ஸ்னு கேட்டு பாருங்க சின்ன கொழந்தைங்க கூட சொல்லும். அது என்ன வித்தியாசமான பேரா இருக்கேன்னு பாக்கறீங்களா? அதை கட்டின பில்டர் உண்மையில ஒரு ஏடா கூடம். அது மட்டுமில்ல அதுல குடியிருக்கிற குடும்பங்களும் ஏடாகூடம்தான். சரியான கலகக்கார குடும்பங்கள். கோள் மூட்டறது, போட்டு கொடுக்கறது, புரளி பேசறது எல்லாம் இவங்களுக்கு கைவந்த கலை இல்ல; இல்ல வாய்வந்த கலை. ஆனா பேரு அப்படி இருக்கிறதுக்கான காரணம் அது இல்ல. ஒவ்வொரு ஊருக்கும் ஒருபெயர் காரணம் இருக்கும். பிளாட்சுக்குக் கூடவா பெயர்க் காரணம் இருக்கும்னு நீங்க ஆச்சர்யப் படலாம்  

          அந்தப் பகுதியில் முதல்ல வந்த குடியிருப்பு இதுதான். அக்கம்பக்கத்தில ஒரு கி.மீ தூரத்துக்கு எந்த வீடும் இல்லை . அதனால ஈடன் கார்டன்னு ஃபிளாட்சுக்கு  பேர் வச்சார் பில்டர். கன்னாபின்னான்னு கட்டி இருந்தாலும் பேரை மட்டும் பாருங்க. ஆனா எல்லாரும் குடி வந்ததுக்கு அப்புறமும் பேர் எழுதல.. ஒரு பெயிண்டரக்  கூப்பிட்டு Eden Garden  கிறுக்கி எழுதி கொடுத்திருக்கார். பெயிண்டருக்கு அவ்வளவா   எழுதப் படிக்க தெரியாது.  Eda godam ன்னு எழுதிட்டுப் போய்ட்டான்.அதை அப்புறமா சரிபண்ணிக்கலாம்னு விட்டுட்டதால எல்லோரும்  கிண்டலா  ஏடாகூடம்னே பேரு வச்சுட்டாங்க.

 இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்னு கேக்கறீங்களா அந்த ஃபிளாட்டோட வாட்ச்மேன் நான்தான். எங்க ஃபிளாட்ஸ் தாண்டி போற யாரும் மூக்குமேல கை வைக்காம போக மாட்டாங்க.  அப்படி என்ன அதிசயம்னுதானே கேக்கறீங்க. அதிசயம் ஒண்ணும் இல்லீங்க. சாக்கடை தண்ணி பிளாட் வாசல்ல தேங்கி நின்னு நாத்தம் அடிக்கும். அப்புறம் எப்படி மூக்குமேல கை வெக்காம போகமுடியும். அக்கம் பக்கத்தில இருக்கவங்க அடிக்கடி வந்து கம்ப்ளைன்ட பண்ண வருவாங்க. அவங்களுக்கு  பதில் சொல்லாம   அத்தனை பேரும் ஒண்ணா சேந்து ஒருத்தரை ஒருத்தர் கை காட்டி   நீதான் காரணம்னு சொல்லி திட்டி சண்டை போட்டுக்குவாங்க. அவங்க வாயிலிருந்து வர்ற வார்த்தைய விட சாக்கடை எவ்வளவோ பரவாயில்லன்னு ஒடுவாங்க பாருங்க! 

 கையில வாட்ச் இல்லாத வாட்ச் மேனா  இருந்தாலும்  பல நேரங்கள்ல காட்ச் மேனா இருப்பேன். கேப்டன் தோனி கூட விக்கட் பின்னாடி ரிலாக்சாத்தான் நிப்பார். ஆனா நான் அப்படி கேட்ல நிக்க முடியாது எப்பவும் அலர்ட்டா இருக்கணும். எப்ப எந்த வீட்டில இருந்து என்ன பொருள் பறந்து வரும்னு தெரியாது. அப்படியே காட்ச் புடிக்கணும்; இல்ல சாமார்த்தியமா நகந்துக்கணும்

 மறந்துட்டேன் பாருங்க.இங்க யாரெல்லாம் இருக்காங்கன்னு சொல்லலியே . நாலு கலகக் குடும்பங்கள் சார். ஒவ்வொண்ணும் கலகத்தில எக்ஸ்பர்ட். ஆரம்பத்தில அவங்களுக்குள்ளேயே கலகம் செஞ்சுக்கிட்டிருந்தாங்க. அப்புறம் அது போரடிச்சுப் போய் வெளியிலே தங்கள் திறமையக்  காட்ட எங்க ப்ளாட்ஸ் பேமஸ் ஆயிடுச்சு .

    உங்களுக்கு உ.வே.சா தெரியும். அ.வே.சா தெரியுமா? அழுக்கு வேட்டி சாமிநாதனோட சுருக்கம்தான் அது. பெயர்க் காரணம் பேர்லயே இருக்கே! ரிடயர்ட் ஆகிட்டதால முழு நேர கலகம்தாங்க அவரோட தொழில்.  அழுக்கு வேட்டி சாமிநாதன் தினமும் பக்கத்துல இருக்கிற பிள்ளையார் கோவிலுக்கு போறது வழக்கம். அந்த கோவிலோட அர்ச்சகர் ஒருநாள்  "சாமிநாதன்! பளிச்சுன்னு  நல்ல வேட்டி கட்டிக்கிட்டு  கோவிலுக்கு வரப்படாதா?" என்று கிண்டலாக  கேட்க, என் வேட்டிய பத்தியா பேசற? உன்ன என்ன பண்றேன் பார்” என்று கருவிக்கொண்டே சமயம் வாய்த்தபோது 'அர்ச்சனை கணக்கெல்லாம் சரியாய் காட்றது இல்லேன்னு' ட்ரஸ்ட்டீகிட்ட நைசா போட்டு குடுத்துட்டார். ட்ரஸ்ட்டீ இவர் எதிர்லயே  சம்பளத்தில கட் பண்ணிடுவேன்னு அர்ச்சகரை மிரட்ட பாவம் நொந்து திரி நூல் ஆயிட்டார் .
   
     அப்படித்தான் ஒருமுறை ஒரு பெண் இவரிடம் "சவுக்கியமா மாமா" என்று  தெரியாத்தனமாய் கேட்க அவரும் "அட சுசீலாவா? எப்படி இருக்க?  உன் வீட்டுக்காரனை இன்னைக்கு தாம்பரம் டாஸ்மாக் கடைகிட்ட பாத்தேனே! மெரூன் கலர் சட்டையும் ப்ளூ பேன்டும்தானே (அது அவர் வேலை செய்யும் கம்பனி யூனிஃபார்ம்) போட்டிருந்தான். எதுக்கும் ஒரு கண் வச்சுக்கோ” என்று சொல்ல, ஜாலியா  கோவிலுக்கு வந்தவங்க காளியா கோபத்துடன்  வீட்டுக்கு திரும்பினாங்க  சுசீலா. பாவம் அவன் துரதிர்ஷ்டம் அன்னைக்குன்னு பாத்து ட்ரையின்ல வரும்போது எவனோ குடிகாரன் இவன்மேல வாந்தி எடுத்து வைக்க, அதை ஸ்டேஷன்லயே சுத்தப் படுத்தியும் அந்த நாத்தம் போகல. வீட்டுக்குள்ள நுழையும்போதே நாத்தம் லேசா வர, அ.வே.சா சொன்னது உண்மைதான்னு நினச்சு, எவ்வளோ சொல்லியும் வீட்டுக்காரன நம்பாம சண்டை போட்டு கோவிச்சுகிட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டாங்க.

     சுசீலா வீட்டுக்காரன்  ஆவேசத்துடன் அ.வே.சா விடம் சண்டைக்கு கிளம்பினபோது  அங்க இருந்தவங்க  'வேண்டாம்  அப்புறம் அந்த ஆள் இன்னும் மோசமா கலகம் மூட்டிடுவான்னு' சொல்லி   தடுத்து விட்டனர்.

  அப்புறம் சாரதாம்மா இன்னொரு கலக சிரோன்மணி, அந்த ஏரியா  வீடுகள்ல மாமியாரைப் பற்றி மருமகளிடமும் மருமகள் பற்றி மாமியாரிடமும் வாயைக் கிளறி  கேட்டு அவங்க மனக்குறைய அவங்க வாயாலேயே சொல்ல வச்சு  அதை மறக்காம “உங்க மருமக இப்படி! உங்க மாமியார்  இப்படி சொன்னா!” என்று சொல்லி  குழப்பம் விளைவிப்பதில் சாரதாம்மா  ஒரு நவீன நாரதாம்மா. உதாரணத்துக்கு உங்க மருமக ஆபீஸ்ல இருந்து நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் வரை ஆபீஸ்ல வேல செய்யறவரோட வண்டியிலதான் தினமும்  வராளாமே!” என்று சொல்ல  அப்புறம் என்ன நடந்ததுன்னு சொல்லணுமா என்ன?  அந்தப் பகுதியில் பல தனிக் குடித்தன குடும்பங்களை குறுகிய காலத்தில் உருவாக்கிய பெருமை அவருக்கு தாங்க

    அப்புறம் நாட்டியப் பேரொலி நளினா. நான் தப்பா எழுதிட்டதா நினைக்காதீங்க. கொஞ்சம் இருங்க!  பேரொலிதான் கரெக்டுன்னு புரிஞ்சிக்குவீங்க. டான்ஸ் கிளாஸ் நடத்தற அவங்க கிட்டயும் நாலு பசங்க டான்ஸ் கத்துக்க வராங்களேன்னு ஆச்சர்யமா இருக்கும்.  அவங்க டான்ஸ் “தை தை”ன்னு கத்துக் குடுக்கும்போது  பேரொலி வரும் பாருங்க! ஏடாகூடம் பிளாட்சே அதிரும். ஏற்கனவே பைசா கோபுரம் மாதிரி சாஞ்சி கிடக்கிற காம்பவுண்ட் இன்னும் கொஞ்சம் சாயறமாதிரி தெரியும்.  இவங்க டான்ஸ் கத்துக் கொடுக்கறத விட கத்துக்க வர்ற பசங்க கிட்ட அவங்க வீட்டு  சண்டை சச்சரவுகளை விசாரிச்சு தெரிஞ்சுக்கத்தான்   அதிக நேரம் செலவு பண்ணுவாங்க. இந்தப் பசங்களை டான்ஸ் கிளாஸ் முடிச்சு கூட்டிட்டு போறதுக்காக வர்ற அண்ணன் அக்காவெல்லாம் காத்திருக்கிற நேரத்தில போன்ல பேசும்போது ஒட்டுக் கேட்டு, லவ் பண்ற விஷயம், செமஸ்டர்ல அரியர் வச்சுருக்கிற ரகசியம், காலேஜ் கட் அடிச்சிட்டு சினிமா பாத்தது,   இதையெல்லாம் பசங்க வழியே அவங்க வீட்டுக்கு பாஸ் பண்றது ஒரு இனிமையான பொழுதுபோக்கு. சம்பந்தப் பட்டவங்களுக்கோ அது அதிர்வேட்டு.

    ஏடாகூடத்தின் இன்னொரு ஏடோகூடக் குடும்பம் பெட்டிஷன் பெரியசாமியோடது . ஒரு பெட்டிஷன் எழுதினதில்லன்னாலும் கையில ஒருகொயர் பேப்பர், பேனாவோடுதான் சுற்றிக் கொண்டிருப்பார்  தான் பெட்டிஷன் எழுதித்தான்  ரோடு வந்தது, தண்ணி வந்தது, லைட்டு போட்டாங்க, மேல போற கரண்டு கம்பிய மாத்தினாங்க என்று ரீல் விடுவார், அவரோட திருவிளையாடலும் மத்தவங்களுக்கு சளச்சது இல்ல.

       ஒரு முறை அந்த ஏரியாவின் வார்டு கவுன்சிலர் தன் குடும்ப திருமணத்திற்கு ஊரையே அழைந்த்திருந்தார். பெட்டிஷன் பெரியசாமியும்  கல்யாணத்திற்கு பந்தாவாக போனார். அங்கு மாவட்ட செயலாளருடன் பேசிக் கொண்டிருந்த கவுன்சிலரிடம்  குறுக்கிட்டு  "அண்ணே! ஊர் முழுக்க அடிச்சு இருக்கிற போஸ்டர் எல்லாம் சூப்பர். வருங்கால மேயரே!” ன்னு  அடிச்சிருக்கிற போஸ்டர்ல உங்க போஸ் அட்டகாசமா இருக்குண்ணே!", என்று அப்பாவி போல்  சொல்லிவிட்டுப் போக, மாவட்டம் ஒரு மாதிரியாகப் பார்க்க, அடுத்த முறை சீட்டு கிடைக்குமோ கிடைக்காதோன்னு  துக்கத்தில் ஆழ்ந்தார் கவுன்சிலர். (இந்த கவுன்சிலர்தான் ஒரு முறை வீட்டுவரி ஏன் கட்டலைன்னு திட்டிட்டுப் போனவர். அதனோட விளைவுதான் இது)  அதிலிருந்து பெரியசாமியைப் பார்த்தாலே சுப்ரமணியசாமியப் பார்த்த அரசியல்வாதி மாதிரி ஓடுவார்.
   அந்த பிளாட்ஸ்ல   இருக்க நண்டு சிண்டுகள்  கூட கலகம் செய்யறதுல யாருக்கும் குறைஞ்சவங்க  இல்ல. நாரதர் கலகம் நன்மையில் முடியும். ஆனால்  இந்தக் கலகக் கண்மணிகளின் கலகம் நன்மையில் முடிந்ததாக சரித்தரம், பூகோளம், எகனாமிக்ஸ் எதுவும் இல்லை.

    கிரிக்கட் வோல்டு கப் பைனல்சம் சப்பென்று முடிஞ்சி போச்சு. பரவாயில்ல விடுங்க அடுத்த வாரம்  எங்க பகுதியில இருக்கிற நல சங்கத்தோட  ஆண்டு விழா நடக்கப் போகுது. அன்னைக்கு ஏடாகூடம் பிளாட்ஸ்ல இருந்து யாரும் வரக்கூடாதுன்னு, அந்த ஏரியா மக்கள் கோவில்ல விரதம் இருந்து வேண்டிக்கிட்டிருக்காங்க. ஆனா எங்க கலகக் கண்மணிகள் புதியதோர் கலகம் செய்வோம்னு அந்த கலகக் கோப்பை2015  பைனல்ஸ் நாளுக்காக காத்துக்கிட்டிருக்காங்க.. நேரம் இருந்தா வந்து பாருங்க. இந்த நாலு பேர்ல யாருக்கு கலகக் கோப்பை கொடுக்கலாம்னு நீங்கதான் சொல்லணும் .அதன் பின்விளைவுகளை நீங்கள் அனுபவிக்க வேண்டி இருக்கும் பரவாயில்லையா?
***************************************************************************

முந்தைய பதிவு 
நானொரு முட்டாளுங்க!


புதன், 1 ஏப்ரல், 2015

நானொரு முட்டாளுங்க!

  
                              நான் கழுதை 
                              
                              இன்று முட்டாள்கள் 
                              தினமாம் 
                              இன்றாவது
                              நான் சொல்வதைக் கேளுங்கள் 

                              முட்டாள்களின்
                              உருவகம் நான்!

                              மூடர்களின்
                              உவமானம் நான்!

                              மதி குறைந்து
                              போனதால்
                              பொதி சுமக்கப்
                              பிறந்தவனாம்!

                              குரல் வளத்தில்
                              காக்கையும் நானும் 
                              கைவிடப் பட்டவர்கள்.

                              குட்டியாய் இருக்கும்போது
                              குதிரையைப் போல்
                              நானும் அழகுதான்!   
        
                              கழுதை வளர்ந்து
                              குதிரை ஆனதா
                              குதிரை தேய்ந்து
                              கழுதை ஆனதா?
                              டார்வினிடம்தான்
                              கேட்கவேண்டும்

                              கத்திப் பேசுபவர்கள் எல்லாம்
                              கழுதைப் பாலை கொஞ்சம்
                              அதிகம் குடித்தவர்களாம்.

                               "என்னைப்பார் யோகம் வரும்"
                               என் படத்தை  மாட்டி
                               எழுதி வைத்திருக்கிறீர்கள்.

                                உங்களுக்கு
                                யோகம்வரும்;
                                எனக்கு?

                                பிறரை  ஏசும்போதும்
                                என் பெயரே
                                உங்களுக்கு நினைவு வரும்!

                                மாடுகள்கூட
                                மதிப்பிழந்துபோன வேளையில்
                                கழுதைகளுக்கு ஏது கவனிப்பு?

                                எனக்கு  
                                தெரியாதுதான்;
                                கற்பூரவாசம்!

                                நான்  
                                தேடியும்  கிடைக்காதது 
                                அன்பு, நேசம் 

                                கட்டிப்  பிடிக்க
                                யாரும் இல்லை!
                                அதனால் 
                                எட்டி  உதைத்து 
                                என் கோபத்தை 
                                வெளிப்படுத்துவேன்!
                                என்ன செய்வது? 

                                காலச் சுழற்சியில்
                                எம்மினம் 
                                காணாமல் போகும்!

                                ஏளனப் பொருட்களாக 
                                எங்களை பார்ப்பவர்களே!
                                உங்களிடம்
                                ஒன்றுமட்டும் சொல்கிறேன்.

                                முட்டாள்களுக்கும்
                                இந்த  மண்ணில்
                                கொஞ்சம் இடம் கொடுங்கள்

                                அவர்களை வைத்துத்தான்
                                அறிவாளிகள் அளக்கப்படுகிறார்கள்.

                *********************
சில கழுதைக் குறிப்புகள் 

  1. கழுதைகளின்  மூல இருப்பிடம்ஆப்ரிக்க பாலைவனங்கள் என்று கூறப்படுகிறது.
  2. சாதரணமாக கழுதைகள் 3 வகைகளில் காணப்படுகின்றன. 36 இன்ச்சுகளுக்கு குறைவானவை.சிறுகழுதைகள், 36 லிருந்து 54'' வரை நடுத்தரக் கழுதைகள்,56'' மேலுள்ளவை மம்மூத் என்று அழைக்கப்படும் பெருங்கழுதைகள்.
  3. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் முதல் மம்மூத்தை வளர்த்தவர்.
  4. கழுதைகள் உண்மையில் புத்திசாலித் தனமானவை.ஆனால்  அறிவில்லாத மிருகம் என்று தவறாகக் கருதப்படுகிறது.
  5. ஒரே அளவில் உள்ள கழுதையையும் குதிரையையும் ஒப்பிடும்போது கழுதையே வலிமையானது.
  6.  கழுதைகள் அபார ஞாபக சக்தி வாய்ந்தது.25 ஆண்டுகளுக்கு முன்னால்வாழ்ந்த இடத்தையும் உடனிருந்த கழுதையும் கண்டுபிடித்துவிடும் திறமை உடையது.
  7. கழுதையை எளிதில் பயமுறுத்தி விட முடியாது.
  8. ஆண் கழுதை ஜாக் என்றும் பெண் கழுதை ஜென்னி என்றும் அழைக்கப் படுகிறது.
  9. ஆண்  கழுதைக்கும் பெண் குதிரைக்கும் பிறந்தவை ம்யூல்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
  10. பெண்  கழுதைக்கும் ஆண் குதிரைக்கும் பிறந்தவை ஹின்னீஸ்
  11.  கழுதைகளுக்கு மழையில் நனைவது பிடிக்காது.இயற்கையில் அதன்தோல் பிற விலங்குகளைப் போல் வாட்டர் ப்ரூஃப் ஆக அமையவில்லை 
  12. நன்கு  பராமரிக்கப் பட்டால் கழுதை 40 ஆண்டுகள் கூட உயிர் வாழும்.
  13. கழுதைப்பால் கிராமப் புறங்களில் மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது.
                   *******************************************

இந்தக் கதையை படியுங்கள் சிரிப்புக்கு நிச்சயம் உத்தரவாதம் உண்டு