கடந்த வார 20.03.2016 நீயா நானாவில் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்கள் பற்றி பெற்றோர் மற்றும் கருத்துகள் விவாதிக்கப் பட்டது. இப்போதெல்லாம் ஆழமான விவாதங்கள் நடை பெறுவதில்லை. நான்கைந்து கேள்விகளுக்கு ஒருவர் பின் ஒருவராக பதில் கூற வைத்து நிகழ்ச்சி முடிந்து விடுகிறது. நம் எதிர்பார்க்கும் சில கேள்விகள் கேட்கப் படுவதில்லை. சிறப்பு விருந்தினர்களும் எப்போதும் வரக்கூடிய ஆஸ்தான சிறப்பு விருந்தினர்களே. அவர்களுடைய கருத்துக்களையே மீண்டும் மீண்டும் கேட்க வேண்டி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியும் அப்படியே. இந்த நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் சார்பில் ஒருவரும் அழைக்கப்படவில்லை. அடிக்கடி நிகழ்ச்சியில் பங்கு பெறும் பத்ரி சேஷாத்திரியும், இளங்கோ கல்லாணையும் கலந்து கொண்டனர். நாமும் கொஞ்சம் கல்விக் கட்டணம் பெருஞ்சுமையாக ஏன் ஆனது என்பதை கொஞ்சம் ஆராய்வோம்.
விலை கேட்டு வாங்கவா முடியும் கல்வி வேளை தோறும் கற்று வருவதால் படியும் என்றான் நறுக்கு மீசைக் கவிஞன் பாரதிதாசன். ஆனால் கல்வி இன்று சந்தைப் பொருளாக மாறிவிட்டது. எங்கே கல்வி அதிக விற்பனைக்கு விற்கப் படுகிறதோ அங்கிருந்து கல்வியை வாங்கவே பெற்றோர் விரும்புகின்றனர். விலை அதிகமுள்ள பொருளே தரமானது என்பது சந்தை சித்தாந்தம். அது கல்விக்கும் பொருந்தும் என்பதே பெற்றோர் எண்ணம். தன்னுடைய பொருளாதார நிலைக்கு மீறிய கல்வியை வாங்க துணிவதன் விளைவே பெருஞ்சுமையாக மாறி இன்று அச்சுறுத்துகிறது.
முந்தைய தலைமுறையினர் கல்வியின் அவசியத்தை உணர்ந்து அரசு பள்ளிகளில் சேர்த்து தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்தனர். ஆனால் இந்தத் தலை முறையினரோ கல்விக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர். கல்வி இல்லையென்றால் வாழ்க்கையே வீண் என்று கருதுகின்றனர். தன்னுடைய பெற்றோர் அரசு பள்ளிகளில் தங்களை சேர்த்ததால்தான் தாம் நல்ல கல்வி பெற முடியவில்லை என்று ஆதங்கம் கொண்டவர்களாகவே இன்றைய பெற்றோரை காணமுடிகிறது.. அதனால் இந்தத் தலை முறையினர் அந்தக் குறை தங்கள் பிள்ளைகளுக்கு இருக்கக் கூடாது எனக் கருதி தனியார் பள்ளிகளில் சேர்க்க முற்பட்டனர். குறிப்பாக நடுத்தர முற்பட்ட இனத்தவர் பணக்காரர்களின் பள்ளிக்கு தங்களை பிள்ளைகளை அனுப்ப முயற்சி செய்தனர். இதற்காக தங்கள் தேவைகளை சுருக்கிக் கொள்ளவும் தயங்கவில்லை. அறிவுரை சொல்கிறோம் என்ற பெயரில் 'நல்லா படிக்கலன்னா பிச்சைதான் எடுக்கணும்' என்றெல்லாம் கூறி அச்சத்தை குழந்தைகள் மனதில் ஏற்படுத்தினர். முற்பட்ட இனத்தவரின் இந்த மனப்பான்மை மற்ற இனத்தவருக்கும் தொற்றிக் கொள்ள கல்வி வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. பெரிய பணக்காரப் பள்ளிகளை நெருங்க முடியாத இவர்களின் நிலையை மெட்ரிக் பள்ளிகள் பயன்படுத்திக் கொண்டன. ஆங்கில மோகமும் கவர்ச்சிகரமான விளம்பரங்களும் ஈர்க்க விட்டில் பூச்சிகளாய் வீழ்ந்தனர். மூட்டை மூட்டையாய் புத்தகங்களையும் நோட்டுகளையும் முதுகில் சுமந்து செல்வதை பெற்றோர் பூரிப்பில் மிதந்தனர்.
ஓரளவிற்கு பொருளாதார நிலை உயர்ந்தபோது ஏழைகள் படிக்கும் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பதை கௌரவக் குறைவாகக் கருதத் தொடங்குவதும் அதிகரித்தது. அரசு பள்ளிகளில் பயின்றால் ஒழுக்கமும் கட்டுப்பாடும் கிடைக்காது என்று எண்ணத்தையும் வளர்த்துக் கொண்டனர் . ஆனால் தாங்கள் அரசு பள்ளியில்தான் படித்தவர்கள் என்பதை மறந்து விட்டனர் .தங்கள் பிள்ளைகள் அசாத்திய திறமை பெற வேண்டுமெணில் தனியார் பள்ளிகளே அதனை அளிக்க முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர். இதைப் பற்றியெல்லாம் நிகழ்ச்சியில் விவாதிக்கவில்லை
நிகழ்ச்சியில் ஒருபெண்மணி சொன்னார் நாங்கள் அரசு பள்ளிகளில் படித்ததால் எங்களால் ஆங்கிலம் பேச முடியவில்லை. தொடர்புத் திறன் (communication Skill) இல்லை என்று கூறினார். அதிகம் படிக்காத அரசியல் வாதியிடம் இருக்கும் Communication Skill ஆங்கிலம் படித்த எல்லோரிடமும் இருக்கிறதா என்பது ஐயத்துக்கிற்குரியதே. ஆங்கிலத்தில் பேசுவதுதான் Communication skill என்ற புரிதலே இதற்கு காரணம்
ஒன்றை கவனிக்க வேண்டும். பெரும்பாலும் அரசு பள்ளிகளில் படித்தவர்கள்தான் பல்வேறு அரசுப்பணிகளில் அதிகாரிகளாக உள்ளனர். அவர்களில் பலருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரியுமா என்பது ஐயமே. ஆனால் சிறப்பான நிர்வாகத் திறமை பெற்றவர்களாகத்தான் இருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது.
நிகழ்ச்சியில் சர்வதேச பள்ளி சார்பாக பேசியவரிடம் ஏன் இவ்வளவு பணம் வாங்குகிறீர்கள். என்று கேட்டதற்கு, தரும் வசதிகள் ஆசிரியர் சம்பளம் போன்றவையும், கூடுதலாக சொல்லித் தரப்படும் நீச்சல், கராத்தே,யோகா செஸ் பேஸ்கட் பால், இவற்றிற்குத்தான் காசு என்றார்.
3 ஆண்டுகளாக நீச்சல் பயிற்சி தருகிறார்கள் ஆனால் என் மகனுக்கு இன்னும் நீந்தத் தெரியாது என்று உண்மையை போட்டு உடைத்தார் ஒருவர்.
அதை சொல்லித் தருகிறோம் இதை சொல்லித் தருகிறோம் என்று சொல்லும் இந்தப் பள்ளிகள் ஒரு குற்றாலீஸ்வரனையோ விஸ்வநாதன் ஆனந்தையோ உருவாக்கி இருக்கிறதா என்ற கேள்வியை இந்தப் பள்ளிகளை கோபிநாத் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இசைப் புயல் AR ரகுமான் சென்னையில் புகழ் பெற்ற பணக்காரர்கள் படிக்கும் பள்ளியில் படித்தார். அடிக்கடி பள்ளிக்கு வராததால் அவர் பள்ளியில் இருந்து வெளியேற்றப் பட்டார். அந்தப் பள்ளியின் விதிமுறைகளுக்கு கீழ்ப்படிந்திருந்தால் ஒரு ஆஸ்கார் நாயகன் உருவாகி இருப்பாரா என்பது ஐயமே. அவரை அனுப்பியதற்காக அந்தப் பள்ளிக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.
சட்டப்படி கல்வியை லாபம் பார்க்கும் தொழிலாக நடத்தக் கூடாது என்பது பள்ளிகள் நடத்தும் பலருக்கு தெரியாமல் இருப்பதை அறிய முடிந்தது . அனுமதி பெறுவதற்கு செய்யப்படும் செலவுகள் அதிகம் அந்த தொகையை நாங்கள் எங்கிருந்து பெறமுடியும் என்று கேட்கிறார்கள் .
சட்டம் அனுமதிக்காவிட்டாலும் உண்மையில் லாபம் பார்க்கும் தொழிலாகத்தான் செய்யப் படுகிறது. இப்போதும் நிறையப் பேர் அதிகம் சம்பாதிக்கலாம் என்றுதான் பள்ளிகள் நடத்துகிறார்கள். நாங்க முதல் போடுகிறோம் லாபம் வேண்டாமா என்றார் இன்னொரு நிர்வாகி.பெற்றோர் கல்விக் கட்டணம் அதிகம் வாங்கப் படுவதையும் பள்ளிகளில் சேர்ப்பதற்கு கஷ்டப் படுவதையும் என்று புகாராகக் கூறினார்கள் . கட்டணம் குறைவாக உள்ள பள்ளிகளிலும் அல்லது அரசு பள்ளிகளிலோ சேர்க்க தயாராக இல்லை. குறைவான கல்விக் கட்டணங்களை இப்பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.பணக்காரர்களிடமிருந்து பணம் பிடுங்கவே இப்பள்ளிகள் தொடங்கப் பட்டன. ஆனால் நடுத்தர வர்க்கத்தினரும் நானும் அந்தப் பள்ளியில்தான் என் பிள்ளைகளை படிக்க வைப்பேன் என்று தானாகப் போய் விழுவதும் சீட் கிடைக்க போடப்படும் நிபந்தனைகளைக் கண்டு ஆதங்கப் படுவதும் , கட்டணம் குறைக்க வேண்டும் என்று கூறுவதும் வழக்கமானதாக உள்ளது.
சேர்க்கைக்கு போட்டி இருக்கும்போது கட்டணம் உயர்த்தப்பட்டு விடுகிறது.சேர்க்கைக்கான பிற விதிகளை இது புறந் தள்ளிவிடுகிறது . மாதம் இவ்ளோ பீஸ் கட்டறோம் என்று பெருமையாக சொல்லிக் கொள்பவர்களும் உண்டு
அரசு பள்ளிகளில் வழங்கப்படும் அனைவருக்கும் சமமான கல்வியை சாதாரணர்களுக்கானது அது குறைந்தபட்ச கல்வி என்று நினைப்பதும் இப்பள்ளிகளை நாடுவதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. வகுப்பறைகளை கலர்புல்லாக வைத்திருக்கிறோம் . Smart Class வைத்திருக்கிறோம் கண்காணிக்க வாட்ஸ் அப், போன்ற நுட்பங்களை பயன் படுத்துகிறோம் என்றெல்லாம் பீற்றிக் கொண்டார்கள். இவற்றில் எந்தப் பள்ளியில் நங்கள் நல்ல குடிமக்களை உருவாக்குவதற்கான பயிற்சி அளிக்கிறோம் என்று சொல்லவில்லை
தமிழ் நாட்டில் ஒவ்வொரு தனியார் பள்ளியும் அரசு நிர்ணயித்த கட்டணத்தைத்தான் வசூலிக்க வேண்டும். அதற்கென ஒரு நபர் குழு நியமிக்கப்பட்டு கட்டணம் நிர்ணயிக்கப் படுகிறது. கமிட்டியின் மூலம் கட்டணம் நிர்ணயிக்கப் படாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப் படமாட்டாது. அதன்படி அனைத்துப் பள்ளிகளும் தங்கள் கட்டணத்தை தாங்கள் தரும் வசதிகளை குறிப்பிட்டு கட்டணம் நிர்ணயித்துக் கொண்டன. செல்வாக்கை பயன்படுத்தி கூடுதல் கட்டணமும் நிர்ணயம் செய்யப்டுவதாகவும் சொல்லப் படுகிறது. உண்மையில் பல பள்ளிகள் இந்தக் கட்டணத்தை விட அதிகமாகவே வசூலிக்கின்றன. முறையான ரசீதுகள் வழங்கப் படுவதில்லை. இவற்றையெல்லாம் குற்றச்சாட்டாக சொல்லும் பெற்றோர் விசாரணையின்போது பல்டி அடித்துவிடுவதே வழக்கமாக உள்ளது. புகார் கூறினால் தன் குழந்தையை பழி வாங்கக் கூடும் என்ற அச்சமே அதற்கு காரணம்
ஒரு நபர் கமிட்டி நிரனயித்துள்ள மெட்ரிக் பள்ளிகள் கட்டண விவரம் அறிய வேண்டுமா?
க்ளிக் செய்யுங்கள்
|
ஒரு பெண்மணி சொல்கிறார் எவ்வளவு செலவானால் என்ன அதற்கேற்ற கல்வி கிடைக்கிறதே என்று. பள்ளியை தேடுவதை ஸ்கூல் ஷாப்பிங் என்று வர்ணித்தார். அப்படி ஷாப்பிங் செய்து படித்த பள்ளியில் அவர்கள் பிள்ளைகள் என்ன சாதித்தார்கள் என்று தெரியவில்லை.
ஒரு பள்ளி தொடங்கிய மூன்று ஆண்டுகளுக்குள் 15 பள்ளிகளை தொடங்கினேன் என்றார் ஒருவர். செலவு அதிகம் என்று சொல்கிறீர்களே உங்கள் வருடாந்திர Turn over எவ்வளவு? செலவு அதிகமெனில் மூன்று ஆண்டுகளுக்குள் 15 பள்ளிகளை எப்படி திறக்க முடிந்தது என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்க வில்லை.
இக் கட்டணக் கொள்ளைகளை தடுப்பது எப்படி.? இரண்டு வழிகளை பத்ரி சேஷாத்ரி கூறினார். ஒன்று அரசே பள்ளிகள் நடத்தவேண்டும் வேண்டும்.அது இப்போதைக்கு சாத்தியமில்லை, சட்டப்படியே சிறு லாபத்துடன் நடத்த அனுமதிக்கலாம் என்றார். அப்படி செய்தால் இன்னும் நிறையப் பேர் வருவார்கள் கல்விக் கட்டணங்கள் குறையும் என்றார். இப்போதும் ஏராளமான தனியார் பள்ளிகள் உள்ளன. உண்மையில் சட்டம் அனுமதித்தாலும் அனுமதிக்காவிட்டலும் லாபகரமான தொழிலாக பள்ளிகளை நடத்துவதையே குறிக்கோளாக வைத்துள்ளார்கள். தற்போது பள்ளிகளின் மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தும் ப்ளாக் மணிதான் என்று அதிரடிக் கருத்து ஒன்றையும் கூறினார் பத்ரி. மேலும் இப்பள்ளிகள் செய்யும் விதிமீறல்களை பெற்றோர் பொருட்படுத்தப் படுவதில்லை. சொல்லவும் துணிவதில்லை.அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் எங்களுக்கு இடம் கொடுத்தால் போதும் என்ற எண்ணமே இருப்பதை சுட்டிக் காட்டினார்
கட்டணங்களை அரசு குறைக்கவேண்டும் பெற்றோர் என்று விரும்புகின்றனரே தவிர கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளை மூடுங்கள் என்றும் கல்வியை அரசுதான் வழங்கவேண்டும் என்றும் ஒருவரும் சொல்ல தயாராக இல்லை ன்பதை நீயா நானா உணர்த்தியது
அப்படியானால் இப்பளிகள் எவ்வளவு கட்டணம் வேண்டுமானாலும் வசூலிக்கவும் அனுமதிக்கலாமா? என்றால் கூடாதுதான் .என்னதான் செய்யலாம் .
கல்விக்கான அரசின் செலவை குறைப்பதற்காக தனியார் ஊக்குவிக்கப் பட்டன. இன்று அரசு பள்ளிகளே அழிந்துவிடும் நிலை உருவாகி விட்டது. அரசு இப்பள்ளிகள் மீதான கண்காணிப்பை சட்டத்தின் துணை கொண்டு வலுப்படுத்த வேண்டும் . விதிமுறைகளை முழுமையாக பின்பற்றினால் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். நேர்மையாக செயல்படும் அதிகாரிகளுக்கு அரசியல் வாதிகளிடமிருந்தோ உயர் அதிகாரிகளிடமிருந்தோ எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது. சமரசங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. அரசு பள்ளிகளின் கட்டமைப்பையும் ஆசிரியர்களின் தரத்தையும் மேம்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் படித்தவர்க்கே அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப் படவேண்டும். சாதாரண பணியாளராய் இருந்தாலும் சரி ஐ.ஏ எஸ். அதிகாரியாய் இருந்தாலும் சரி அரசு பள்ளியில்தான் தங்கள் குழந்தைகளை படிக்கவைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப் படவேண்டும்.
ஆனாலும் கல்விக் கட்டணம் குறைப்பது அரசாங்கத்தால் மட்டும் சாத்தியமாகி விடாது. பெற்றோர் தனியார் பள்ளிகளின் மீது கொண்டுள்ள மோகத்தை கைவிட வேண்டும். பிறருக்கு அடிமை வேலை செய்யும் மனப்பான்மையை விடுத்து சுய தொழில் செய்யும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.
இன்னும் விவாதிக்க வேண்டியவை பல இருந்தாலும் நீளம் கருதி தற்போதைக்கு முடித்துக் கொண்டு பின்னர் தொடர்வோம்.
******************************************************************************