என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

பீப் சாங் ஜோக்ஸ்


  பீப் சாங் பற்றி எழுதாவிட்டால் வலைப்பதிவர் என்று எப்படி சொல்லிக் கொள்வது? ஆனால்  பீப் சாங்  புகழ்   இகழ் சிம்பு அனிருத் பற்றி அக்கு வேறு ஆணிவேராக அலசி விட்டனர். இத்தனை வாங்கிக் கட்டிக் கொண்டபின்னாவது திருந்துவார்களா? பார்ப்போம். 
இந்த விவாகரத்தில மக்கள் ரொம்ப டென்ஷன் ஆகிட்டதால கொஞ்சம் ரிலாக்ஸ் செஞ்சுக்கட்டுமேன்னு பீப் சாங் பற்றி வடிவேலுன்னு ஒரு நகைச்சுவை பதிவு போட்டேன்.  அதன் தொடர்ச்சியாக இந்த நகைச்சுவை துணுக்குகளையும் ரசித்து விட்டு பீப் பாடல் விவகாரத்தை மூட்டை கட்டிவிடலாம் என எண்ணுகிறேன். நான் சொன்னாலும் யாருக்கு ஞாபகம் இருக்கப் போகிறது. அதான் நம்ம கேப்டன் வந்துட்டாரே! 
பீப் சாங் ஜோக்ஸ்
இந்த நகைச்சுவை முழுக்க முழுக்க கற்பனையே .சிரித்து விட்டு மறந்து விடவும்.

*************************************************************************

மேடையில நம்ம தலைவர புகழ்ந்து பேசினதாத்தானே சொல்றீங்க!அப்ப ஏன் கட்சிய விட்டு நீக்கிட்டாங்க

நான் புகழ்ந்து பேசறப்ப எவனோ பீப் சவுண்ட் குடுத்துட்டான். நான் திட்டினதா நினைச்சுட்டார் தலைவர்.


  
  உங்க வீட்டில இருந்து அடிக்கடி பீப் சத்தம்   
  கேக்குதே ஏன் ?

நான் கண்ட படி திட்டும்போது வெளிய கேக்காம இருக்கறதுக்காக எங்க வீட்டுக்காரர்தான் பீப் சவுண்ட் குடுப்பார்.






டைரக்டர் சார்! இந்த பாட்டு   பீப் சாங்குன்னு சொல்றீங்களே பிரச்சனை வராதா?

நிச்சயம் வராது பாட்டு முழுசும்  பீப் சவுண்டு குடுத்துடுங்க  லிரிக்சே கிடையாதே! 




அந்த பிரபல பாப் பாடகர் ஏன் கோபமா இருக்கார்?

மேடையில  அவரை பீப் பாடகர்னு அறிமுகப் படுத்திட்டாங்களாம் 







ஏன்யா நைட் ட்யூட்டி  போக மாட்டேங்கறே?


ரோந்து போகும்போது விசில் ஊதினா 
பீப் சாங்கா பாடறேன்னு அடிக்க வராங்களே 





*********************************************************************************

படித்து விட்டீர்களா?

பீப் சாங் பற்றி வடிவேலு 


வெள்ளி, 25 டிசம்பர், 2015

பீப் சாங் பற்றி வடிவேலு சொன்னது என்ன?


எங்கோ போய் கொண்டிருந்த வடிவேலுவை மடக்கி விட்டனர் நிருபர்கள் 
"சார் எங்கே போறீங்க? கொஞ்சம் நில்லுங்க! 
"அடடா! இவனுங்க கிட்ட மாட்டிகிட்டமே. வாயைக் கிளறி நம்ம வாயாலேயே நமக்கு ஆப்பு வச்சுடுவாங்களே !
"எனக்கு பேச நேரம் இல்ல. நான் முக்கியமான வேலையா போய்க்கிட்டிருக்கேன். அப்புறம் வந்து பேட்டி கொடுக்கறேன் " என்று தப்பிக்க முயல, விடாமல் துரத்தி சூழ்ந்து கொண்டு "அப்படி என்ன முக்கியமான வேலை?
"சரி விட மாட்டீங்களே! நான் வெல்ல நிவாரணம் செய்யப் போறேன். என்ன போக விடுங்க/
"என்னது? வெல்ல நிவாரணமா? சார் நீங்க வெல்ல நிவாரணம்னா சொன்னீங்க?
"ஆமாம் வெல்ல நிவாரணம்தான் "
"வடிவேலு சார்! அது வெல்ல நிவாரணம் இல்ல வெள்ள நிவாரணம் .மதுரைக்காரரான உங்களுக்கு 'ள' வரவில்லையே?."

(மனதுக்குள்)ரொம்ப முக்கியம். நம்ம பேசறதுல தப்பு கண்டுபிடிக்கறதே இவனுங்களுக்கு பொழப்பா போச்சு .விடக்க கூடாது. ஸ்டெடியா நிக்கணும்

"யோவ்! உங்களுக்கு அறிவு இருக்கா?  என்ன கேள்வி கேக்கறீங்க "

இவரும் நம்மை பார்த்து அறிவு இருக்கான்னு கேக்கறாரே என்று திகைத்து நின்றனர் நிருபர்கள்.
வடிவேலு தொடர்ந்தார் "நான் தமிலன்யா. நான் சொன்னது சரிதான் வெல்ல நிவாரணம்தான். இப்ப மழை வந்துச்சு இல்லை? . நம்ம ஊர்க்காரங்க மெட்ராஸ்ல வெல்ல மண்டி வச்சிருந்தாங்க மழையில அவங்க மண்டியில இருந்த வெல்லம் எல்லாம் மழையில கரைஞ்சு போச்சா? பாவம் இப்போ நஷ்டப்பட்டு நடுத் தெருவில நிக்கறாங்களா?. 
அவங்க எனக்கு போன் போட்டு அண்ணே எங்களுக்கு வெல்ல நிவாரணம் வேணும்னு கதறனானுங்க. பாவமா இருந்துச்சா? எல்லோருக்கும் மூட்ட மூட்டயா வெல்லம் வாங்கிக் கொடுத்து திரும்பவும் வியபாரம் செய்ய உதவப் போறேன். அதைத்தான் வெல்ல நிவாரணம்னு சொன்னேன் "
"ஆஹா பிரமாதம் வடிவேலு சார்."
 நல்ல காலம் எப்படியோ சமாளிச்சிட்டோம்
"அப்ப  நான் வரட்டா"
"ஒரே ஒரு முக்கியமான கேள்வி அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டுப் போயிடுங்க.?
அடாடா ஒண்ணாம் கிளாஸ்ல   அனா ஆவன்னா வாத்தியார் கேட்டப்பவே திருதிருன்னு முழிச்சமே இவனுங்க என்ன கேக்கப் போறாங்களோ தெரியலையே.
"சரி கேளுங்க?
" சார்! இந்த பீப் சாங் பத்தி சொல்லுங்களேன் .
 (மனதுக்குள்)  நல்ல காலம். நமக்கு தெரிஞ்ச கேள்வியாத்தான் இருக்கு, 

" ஓ! அத கேக்கறீங்களா. தில்லானா மோகனாம்பாள் படத்தில பத்மினி நலம்தானான்னு டான்ஸ் ஆடிகிட்டே கேக்க,   சிவாஜி பீபீனு  ஊதி நலம்தான்னு சொல்லுவாரே அந்தப் பாட்டுதானே. அருமையான பாட்டு சார் அது . அந்த பீபீ கேக்க எவ்வளோ சொகமா இருக்கும்.அந்த மாதிரி சாங் இப்ப எங்க வருது "
"சார் நாங்க அந்த சொல்லல . சி .."
"அட! உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா! நான் சின்ன வயசுல பூச (பூவரச) இலையில பீபீ செஞ்சு ஊதி அதுல  எம்ஜிஆர் சிவாஜி பாட்டு பாடினது. நீங்க என் சின்ன வயசு ஞாபத்தை கிளறி விட்டுட்டீங்க. அந்த பிளாஷ் பேக்க சொல்றேன் கேளுங்க "
கண்ணை மூடிக் கொண்டு சொல்ல ஆரம்பித்தார். 
"எனக்கு பத்து வயசு இருக்கும். ஒரு தடவ இப்படித்தான் பூவரச மரத்துக்கு கீழ நின்னு  பீப்பி செஞ்சு ஊதிக்கிட்டிருந்தேன். அப்போ என் செல்லம் திவ்யா அங்க வந்து எனக்கும் பீபீ வேணும்னு அடம் பிடிச்சா. நானும் என்கிட்டே இருந்த பீபீய  குடுத்தேன்.அவ சேசே இது எச்சி . எனக்கு புதுசா வேணும்னு  சொன்னா . அப்ப நான் பக்கத்தில  இருந்த  பூவரச மரத்தில ஏறி ஒரு இலைய பறிச்சு அதை அழகா சுருட்டி சுருட்டி  பீபீ செஞ்சு கொடுத்தேன். அவ அதை ஆசையா வாங்கி வாயில வச்சு ஊதி பாத்தா. பீ பீ சத்தம் வரவே இல்ல வெறும் காத்துதான் வந்தது. சீ சீ இது நல்லாவே இல்ல. வேற செஞ்சு குடுன்னு கேட்டா , நான் திரும்பவும் மரம் ஏறி இல பறிச்சு பீபீ  செஞ்சு குடுத்தேன்.  அதுவும் சரியில்லன்னு தூக்கி எறிஞ்சுட்டா. இப்படி அவ கேக்க நான் மரத்தில இருக்க எல்லா இலையும் பறிச்சு பீப்பி செஞ்சு குடுத்துப் பாத்துட்டேன். மரத்துல இருந்த அத்தனை இலையும் காலியாகிடுச்சு.   வெறும் கிளை மட்டும்தான் இருந்து.  சரி வேற மரத்தில  பூவரச மரத்தில  இருந்து பிப்பீ செஞ்சு கொடுக்கலாம்னு நினைச்சேன். சுத்து  முத்தும் பாத்தேன் ஒரு மரம் கூட இல்லை.ஊஹூம். நானும் அந்த மரம் மாதிரி நின்னேன் சார். உனக்கு பீபீ செய்யவே தெரியலன்னு என்ன கெட்ட வர்த்தையில திட்டிட்டா சார் என் திவ்யா . அது யாரும் கேட்டுடக் கூடாதேங்கறதுக்காக நான் கையில் இருந்த பீப்பியை ஊதினேன். அதை யாரோ மறஞ்சிருந்து எங்களுக்கு  தெரியாம கேட்டுட்டு உங்க கிட்ட சொல்லிட்டாங்க போலிருக்கு.

  அதுக்குள்ள மரத்துக்கு சொந்தக்காரன் வந்துட்டான். பிப்பீ செஞ்சு கொடுத்த எனக்கு பேப்பே காட்டிட்டு போயிட்டா சார் என் திவ்யா. 
மரத்துக்கு சொந்தகாரன் கோபத்துடன் "டேய்! இந்த மரத்தோட நிழல்லதானே மாடு கட்டுவேன். நிழல் கொடுக்கற மரத்தோட இலையெல்லாம் பறிச்சி இப்படி மொட்டையாக்கிட்டயேடான்னு சொல்லி என்ன அந்த மரத்திலேயே கட்டிப்போட்டுட்டு போய்ட்டான் சார். கட்டிப்போட்டுட்டு போய்ட்டான். அப்ப கீழே இருந்த பீபீயை எடுத்து நான் ஒரு சாங் பாடினேன், அது  எங்கயோ இருந்த திவ்யாவுக்கு தெரிஞ்சிதோ இல்லையோ . உங்களுக்கு தெரிஞ்சுடுச்சே சார். இத்தனை  நாளா நான் தூக்கி வச்சுக்கிட்டிருந்த பாரத்தை இன்னக்கு இறக்கி வாய்ப்பு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி நிருபர் சார்! ரொம்ப நன்றி  என்று கண்களை திறக்க ..
நிருபர்கள் இடத்தை விட்டு எப்போதோ போய்விட்டிருந்தனர்.
ஏன் ஓடிட்டானுங்க? காரணம் தெரியாமல் விழித்தார் வடிவேலு.


*************************************************************************

குறிப்பு : மேற்கண்ட பதிவு முற்றிலும் கற்பனையே. சிரிப்பதற்காக மட்டுமே.

மேலும் சில வடிவேலு நகைச்சுவை பதிவுகளை படிக்க விருப்பமா?
என் கற்பனையில் வடிவேலு எப்படின்னு பாருங்க 


சனி, 12 டிசம்பர், 2015

மழை விடுமுறையால் மாணவர் படிப்பு பாழாய்ப் போனதா?


மழை காரணமாக பள்ளிகளுக்கு வரலாறு காணாத அளவுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது அனைவரும் அறிந்ததே. இவ்வளவு விடுமுறை தேவையா? மாணவர் படிப்பு பாழாகிறதே. அரையாண்டு தேர்வுகள் தள்ளிப் போகிறதே . இழந்த பாடத்தை ஈடுகட்டுவது எப்படி என்று கவலைப் படத் தொடங்கி விட்டனர் சிலர்  இத்தனை நாட்கள் வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறதே என்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர் பலர் விடுமுறை என்றால் மாணவர்களுக்கு  மகிழ்ச்சிதானே (சில ஆசிரியர்களுக்கும்தான்)   குறிப்பாக தனியார் பள்ளி மாணவர்களுக்கு சிறையில் இருந்து தற்காலிகமாக விடுதலை பெற்றது போன்ற உணர்வை காண முடிந்தது. 
அது கிடக்கட்டும்! விடுமுறையால்  படிப்பு பாதிப்பா? இதோ  இந்த மாணவன் சொல்வதைக் கேட்போம் 

ஒரு மாணவனின் குரல்

                                                     மழை விடுமுறை
                                                     மாணவர்கள் படிப்பு பாதிப்பாம்!
                                                     புலம்பிக் கொண்டிருக்காதீர்கள் பெருசுகளே!
                                                     மழை கற்றுக் கொடுக்காததையா
                                                     ஆசிரியர் கற்றுக் கொடுத்து விடப் போகிறார்?
.
                                                     ஆர்க்கிமெடிஸ் தத்துவத்தையும்
                                                     மிதத்தல் விதிகளையும்
                                                     அறிவியல் ஆசிரியரை விட
                                                     நன்றாகவே  சொல்லித் தந்தது மழை!
.
                                                     ஆற்றங்கரை, 
                                                     நாகரீகங்களை வளர்த்த
                                                     வரலாற்றை பாடத்தில் படித்தோம்.
                                                     நாகரீகம் 
                                                     ஆற்றங்கரைகளை   அழித்த வரலாறு
                                                     மழை தானே சொல்லியது

                                                     கொள்ளளவும்,  செ.மீ, .டிஎம் சி கணிதப் பாடத்தை
                                                     கச்சிதமாக கற்பித்துக் காட்டியது மழைதானே!

                                                     ஒண்டிக்கொள்ள இடமின்றி தவித்தபோது
                                                     நிவாரணம் செய்ய வந்தோரால் 
                                                     அரசியலும் கொஞ்சம் அறிய முடிந்ததே!

                                                     வெள்ளம் பெருக்கெடுத்துப் பரவிய போது 
                                                     புவியியல் பாடமும் புரிந்து போனது

                                                     எந்த பள்ளிப்பாடத்தினாலும் 
                                                     அறிய முடியாத 
                                                     நல்லமனம் படைத்தோரை 
                                                     மழைதான் அடையாளம் காட்டியது! .

                                                     இத்தனை பாடங்கள் போதாதா?
                                                     இன்னொரு முறை சொல்லாதீர்!  
                                                     மழை விடுமுறையால் 
                                                     படிப்பு பாழாய்ப் போனதென்று!

                                                          *************************


                                           ஒரு பாமரனின் மழை நாட்கள்
(மைதிலி கஸ்தூரி ரங்கனின் ஒரு பதிவுக்கு நான் இட்ட கருத்தின் சிறு நீட்சி)                                                                                                       மழை
                                                           முதல் நாள் மகிழ்ச்சி
                                                           இரண்டாம் நாள் இனிமை
                                                           மூன்றாம் நாள் முணுமுணுப்பு.
                                                           நான்காம் நாள் நடுக்கம்
                                                           ஐந்தாம் நாள் அச்சம்
                                                           ஆறாம் நாள் ( மழை நின்றாலும்)   அவதி
                                                           ஏழாம் நாள் (நிவாரணத்திற்காக) ஏக்கம்
                                                           எட்டாம் நாள் எதிர்பார்ப்பு
                                                           ஒன்பதாம் நாள் ஓய்வு
                                                           பத்தாம் நாள் .....
                                                           போங்கப்பா பொலம்பிகிட்டே  
                                                            இருக்க   முடியுமா?
                                                           பொழைப்பை பாக்க வேணாமா?

                                                ======================================

செவ்வாய், 8 டிசம்பர், 2015

எச்சரிக்கை: வெள்ளம் நுழைந்த வீட்டுக்குள் செல்லுமுன்பு



விழிப்புணர்வு பதிவு: முகநூல் நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்த எச்சரிக்கை குறிப்புகளை கொஞ்சம் சேர்த்து பகிர்ந்திருக்கிறேன்.
மழை வெள்ளம் நுழைந்து விட்டதால் வீட்டை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் இப்போது திரும்பும் சூழல் உள்ளது அவ்வாறு மீண்டும்  புகுவதற்கு முன் கீழ்க்கண்ட குறிப்புகளை கவனத்தில் கொள்ளவும்:

1 மெயின் சுவிச் வெளியில் இருந்தால் முதலில் அதனை ஆஃப் செய்து விடு ஒரு டார்ச்சுடன் உள்ளே நுழையவும்
2. எரி வாயு வாசனை ஏதும் வருகிறதா என்று கவனிக்கவும் 
3. கதவுகள், ஜன்னல்களைத் திறந்து முடிந்த அளவு இயற்கையான வெளிச்சம், காற்றோட்டத்தை அனுமதியுங்கள்.
4.  நுழைந்த உடனேயே மின்சாரம் இருந்தாலும் உடனடியாக விளக்குகளை / மின் விசிறியை இயக்க வேண்டாம். மின்கசிவு இருக்கக் கூடும். 
 5. முதலில் ஆண்கள் நுழைந்து ஓரளவு சுத்தப்படுத்தி விட்டுப் பிறகு பெண்களை அழைக்கவும். அடுத்து முதியவர்கள்; கடைசியாகக்  குழந்தைகள்.
 6.  மின்சாரப் பொருட்களை இயக்குவதற்கு முன்பாக வீடு முழுதும் ஒரு  முறை எங்காவது மின்கசிவு இருக்கிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள். இதை ஒரு எலக்ட்ரிஷியன் கொண்டு செய்வது நல்லது. நீங்களே செய்வதாக இருந்தால் போதிய பாதுகாப்புடன்  (காலணி, கையுறை, மரநாற்காலி போன்றவை) மேற்கொள்ளவும்.
7. கையில் டெஸ்டர் வைத்துக் கொண்டு சுவர்களை சோதித்துக்   கொள்ளுங்கள் 
8 . அருகிலுள்ள சுகாதார நிலையம் அல்லது மருத்துவ மனையில்   தேவையான காய்ச்சல்/ பேதி மற்றும் தற்காப்பு மாத்திரைகளை வாங்கிக் கொள்ளுங்கள்; அறிவுறுத்தல்களின்படி தடுப்பூசிகள் தேவையென்றால் தவறாது போட்டுக் கொள்ளுங்கள்.
9. தண்ணீரை காய்ச்சியே பயன்படுத்துங்கள் 10. மளிகைப் பொருட்கள் கெட்டிருக்கிறதா என்று சோதித்து விட்டுப்   பயன்படுத்துங்கள். இலேசான ஐயம் இருந்தாலும், அவற்றைப்  பயன்படுத்த வேண்டாம். ஃப்ரிஜ்ஜிலேயே விட்டு விட்டுப் போன பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். அவை நிச்சயம் கெட்டுத்தான் .   போயிருக்கும்.
11.  முழுகிக் கிடந்த வாகனங்கள் காப்பீடு செய்யப்பட்டிருந்தால்,        காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் இயக்கிய பிறகு பழுதுபட்டதாகத் தெரியவந்தால்,அவற்றிற்கான காப்பீடு கிடைக்காமல் போய்விடலாம். 
12.முடிந்தால் பொருட்கள் வீடுகள் வாகனங்கள் மூழ்கிய நிலையில்  புகைப்படம்  எடுத்து வைத்திருங்கள் 
13.குடும்ப அட்டை, காப்புறுதி ஆவணங்கள்,சான்றிதழ்கள், ஆதார் அட்டை,டிரைவிங் லைசென்ஸ் வீட்டு பத்திரங்கள்  போன்ற முக்கிய      ஆவணங்கள்  நல்ல நிலையில் உள்ளதை உறுதிப் படுத்திக்        கொள்ளுங்கள்  
14. நல்ல நிலையில் இருந்தாலும் எச்சரிகையுடன் சிறிது காய வைத்து 
     எடுத்து வையுங்கள் 
15.மேல் நிலைத் தொட்டிகளை சுத்தம்செய்த பின்னர் பயன்படுத்துங்கள் 
16. இரண்டொரு நாட்களுக்கு மிக எளிமையான உணவை உட்கொள்ளுங்கள். அரை வயிற்றுக்கு மட்டுமே சாப்பிடுங்கள். ஒரு பெரிய அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்திருக்கிறீர்கள். உங்கள் மனமும் உடலும் சகஜ நிலைக்குத் திரும்ப அவகாசம் அளியுங்கள். பதற்றத்தை தவிர்த்து விடுங்கள் 
17. உங்கள் உறவினர்கள் நண்பர்களை  தொடர்பு கொண்டு அவர்கள் நிலையை அறிந்து கொள்ளுங்கள். உதவி தேவைப்பட்டால் முடிந்தவரை செய்ய முயற்சியுங்கள் 
18. உங்களையும், உங்கள் குடும்பத்தையும் இந்த அளவுக்குக் காப்பாற்றிய வர்களுக்கும் சிறு உதவி புரிந்தவர்ளாயினும், நலம் விசாரித்தவர்    களுக்கும் மறக்காமல் நன்றி சொல்லுங்கள் 
19. இந்தப் பேரிடரில் உங்களைக் கைவிடாதிருந்த துணிவும்,நம்பிக்கையும் வாழ்நாள் முழுதும் உங்களுக்கு இருக்க வேண்டும்  என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். எந்தவொரு இடரையும் சமாளித்து   வெல்லும் அறிவும், திறனும் உங்களுக்கு உண்டு என்று அறிந்து அமைதி கொள்ளுங்கள்.
20.  உங்களை விட பாதிக்கப் பட்டோர் ஆயிரக் கணக்கானோர் உள்ளனர் முடிந்தால் அவர்களுக்கு இயன்ற அளவுக்கு எந்த வகையிலேனும் உதவுங்கள். 

சேதமுற்ற மற்றும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முக்கிய ஆவணங்கள் திரும்பப் பெறுவதற்கான இலவச ஆலோசனைகளும் உதவிகளும் செய்ய

 சட்ட பஞ்சாயத்து என்றஅமைப்பு செயல்படுகிறது. தேவைப் படின் அவர்கள்  உதவியை நாடலாம் .

தொடர்பு எண் ; 7667100100
முகநூல் முகவரி: https://www.facebook.com/sattapanchayath



#myDIV { background-color:lightblue; transform:translateX(50px); }

புதன், 25 நவம்பர், 2015

வைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே! -

அடையாறு 

  வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்கும்  நம்மை சில நாள் மழை சின்னாபின்னமாக்கி விட்டது.  நாளிதழ்கள் தொலைக்காட்சி மட்டுமல்லாது  சமூக வலை தலைகளிலும் மழை இன்னமும் கதாநாயகனாய் (வில்லனாய்) வலம் வந்து கொண்டிருக்கிறது.  நான் அறிந்து இப்போதுதான் சென்னை அதிக அளவு மழையால் பாதிக்கப் பட்டிருக்கிறது அடுத்த பதிவில் இதைப் பற்றி எழுத இருக்கிறேன்.


 மழையினால் கிராம மக்கள் நகர மக்கள்  என்ற வித்தியாசமின்றி  பாதிக்கப் பட்டாலும்   நீண்ட கால பாதிப்பு கிராம மக்களுக்கே. குறிப்பாக   மழை வந்தாலும் வராவிட்டாலும் அதிக அளவில்பாதிப்படைவது  விவசாயிகளே. இந்த பாதிப்புகள் வைரமுத்துவின் விதைசோளம்  என்ற மழை பற்றிய கவிதையை எனக்கு  நினவுபடுத்தியது . அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  இந்தக் கவிதை இடம் பெற்ற கவிதை தொகுப்பு நூலின் தலைப்பு பெய்யெனப் பெய்யும் மழை 

                                         விதைச் சோளம்
                     ஆடி முடிஞ்சிரிச்சு
                      ஆவணியும் கழிஞ்சிரிச்சு
                      சொக்கிகொளம்  கோடாங்கி
                      சொன்ன கெடு முடிஞ்சிருச்சு.

                      காடு காஞ்சிரிச்சு
                      கத்தாழை கருகிடிச்சி
                      எலந்த முள்ளெல்லாம்
                      எலையோட உதிஞ்சிருச்சு
.
                      வெக்க பொறுக்காம
                      றெக்க  வெந்த குருவியெல்லாம்
                      வெண்காடு விட்டு
                      வெகுதூரம் போயிடிச்சி.

                      பொட்டு மழை பெய்யலையே
                      புழுதி அடங்கலையே
                      உச்சி நனையலையே
                      உள்காடு உழுகலையே

                      வெதப்புக்கு  விதியிருக்கோ
                      வெறகாக விதி இருக்கோ
                      கட்டி வெச்ச வெங்கலப்ப
                      கண்ணீர்  வடிச்சிருச்சு

                      காத்துல ஈரமில்ல
                      கள்ளியில பாலுமில்ல
                      எறும்பு குளிச்சேற
                      இரு சொட்டுத் தண்ணியில்ல

                      தெய்வமெல்லாம் கும்பிட்டு
                      தெசைஎல்லாம் தெண்டனிட்டு
                      நீட்டிப் படுக்கையிலே
                      நெத்தியில  ஒத்த மழை

                      துட்டுள்ள ஆள  தேடி
                      சொந்தமெல்லாம் வாரதுபோல்
                      சீமைக்குப் போயிருந்த
                      மேகமெல்லாம் திரும்புதையா!

                      வாருமையா வாருமையா
                      வருண பகவானே!
                      தீருமையா   தீருமையா 
                      தென்னாட்டுப் பஞ்சமெல்லாம்

                      ஒத்த ஏறு  நான் உழுக
                      தொத்தப்பசு வச்சுரிக்கேன்
                      இன்னும் ஒரு மாட்டுக்கு
                      எவனப் போய் நான் கேட்பேன்.

                      ஊரெல்லாம் தேடி
                      ஏர்மாடு  இல்லாட்டி
                      இருக்கவே இருக்கா என்
                      இடுப்பொடிஞ்ச பொண்டாட்டி

                      காசு பெருத்தவளே
                      கார வீட்டுக் கருப்பாயி
                      தண்ணிவிட்டு எண்ணயின்னு
                      தாளிக்கத் தெரிஞ்சவளே!

                      சலவைக்குப் போட்டா
                      சாயம் குலையுமின்னு
                      சீல தொவைக்காத
                      சிக்கனத்து மாதரசி

                      கால்மூட்ட வெதச் சோளம்
                      கடனாகத் தந்தவளே
                      கால் மூட்ட கடனுக்கு
                      முழு மூட்ட அளக்கறண்டி 

                      ஊத்துதடி ஊத்துதடி
                      ஊசிமழை ஊத்துதடி
                      சாத்துதடி சாத்துதடி
                      சடசட சடையா சாத்துதடி

                      முந்தா நாள் வந்த மழை
                      மூச்சு முட்டப் பெய்யுதடி
                      தெச ஏதும் தெரியாம
                      தெர  போட்டுக் கொட்டுதடி

                      கூர  ஒழுகுதடி
                      குச்சிவீடு நனையுதடி
                      ஈரம் பரவுதடி
                      ஈரக் கொலை நடுங்குதடி

                      வெள்ளம் சுத்தி நின்னு
                      வீட்ட இழுக்குதடி
                      ஆஸ்தியில சரிபாதி
                      அடிச்சிக்கிட்டுப் போகுதடி 

                      குடிகெடுத்த காத்து வந்து
                      கூர  பிரிக்குதடி
                      மழைத் தண்ணி ஊறி
                      மண்சுவரு சரியுதடி.

                      நாடு நடுங்குதையா
                      நல்லமழை போதுமையா
                      வெத வெதக்க  வேணும்
                      வெயில் கொண்டு வாருமையா.

                      மழையும் வெறிக்க
                      மசமசன்னு வெயிலடிக்க
                      மூலையில வச்சிருந்த
                      மூட்டையைப்  போய் நான் பிரிக்க

                      வெதச் சோளம் நனஞ்சிருச்சே
                      வெட்டியா பூத்திருச்சே
                      மொளைக்காத படிக்கு
                      மொளைகட்டிப் போயிடிச்சே

                      ஏர் புடிக்கும் சாதிக்கு
                      இதேதான் தலையெழுத்தா?
                      விதிமுடிஞ்ச ஆளுக்கே
                      வெவசாயம் எழுதிருக்கா?

                      காஞ்சு கெடக்குதேன்னு
                      கடவுளுக்கு மனு செஞ்சா
                      பேஞ்சுக்  கெடுத் திருச்சே
                      பெருமாளே என்ன  பண்ண?


****************************************************


முந்தைய தானே புயல் கடலூர் பகுதியை புரட்டிப் போட்டது அப்போது நான் எழுதிய கவிதை  நேரம் கிடைக்கும்போது படிச்சுப்பாருங்க 

தானே! உன்னோட தாக்கம் இன்னும் தீரலையே!

ஞாயிறு, 1 நவம்பர், 2015

இன்னொரு விடுதலை எப்போது?


    "வெறுங்கை என்பது மூடத் தனம்  விரல்கள் பத்தும் மூலதனம்"

 பட்டிமன்றங்களிலும் சொற்பொழிவுகளிலும் தன்னம்பிக்கை கட்டுரைகளும் இந்தக்  கவிதை வரிகளை மேற்கோளாக சொல்வதை கேட்டிருப்பீர்கள்  தன்னம்பிக்கையின் உச்சம் தொடும் இந்த வைர வரிகளுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? கவிஞாயிறு தாராபாரதிதான் அந்த அற்புதக் கவிஞர்
இவரது கவிதைகள் நம்முள் மறைந்து கிடக்கும்   தமிழுணர்வையும்  சமூக உணர்வையும்  தட்டி எழுப்பும் வல்லமை பெற்றவை.
புதுக்கவிதை கோலோச்சும் காலத்திலும்   இவரது கவிதைகள் மரபுக் கவிதைகள் கேட்போர் அனைவரையும் கவர்ந்தன.  அடுக்கடுக்கான சந்தங்கள் பொருட்செறிவோடு பின்னப் பட்டிருப்பது இவரது கவிதைகளின் பலநாகத் திகழ்கிறது. கவிதைகளை விரும்பாதவர்களையும்  இவரது பாடல்கள் ஈர்க்கும் என்றல் அது மிகை ஆகாது .
தமிழாசிரியராகப் பணியற்றிய தாரா பாரதி இன்று நம்மிடையே இல்லை. 2000ம் ஆண்டு வரை வாழ்ந்த இவரது கவிதை நூல்கள் நாட்டுடைமை யாக்கப் பட்டுள்ளன
ஏற்கனவே இவரது இரண்டு கவிதைகளை பகிர்ந்திருக்கிறேன்.
இதோ இதையும் படித்து பாருங்கள் நான் சொன்னதை ஏற்றுக் கொள்வீர்கள்

                                   இன்னொரு விடுதலை எப்போது?

                                                      ஒருமைப்பாடு குறைபாடு
                                                       உண்மை போனது சுடுகாடு
                                                       தருமம் போனது வனவாசம்
                                                       தாயே இதுதான் உன்தேசம்

                                                        மாண்புகள் வாழும் திருநாடு
                                                        மன்னர்கள் கையில் திருஒடு
                                                        வீண்புகழ் பேசும் வள நாடு
                                                        விடுதலை  வந்தும் ஒழியாது

                                                        சிறுமைகளுக்கு  செல்லுபடி
                                                        சில்லறைகளுக்கு பல்லக்கு
                                                        பெருமைக் குணங்கள் கல்லறையில்
                                                         பிரிவினைக் குரல்கள் கொடிநிழலில்

                                                         பட்டப் பகலில் வழிப்பறிகள்
                                                         பலர் முன்னிலையில் படுகொலைகள்
                                                         வெட்ட வெளியில் கற்பழிப்பு
                                                         வீதியின் நடுவில் மதுக் கடைகள்

                                                         ஒழுக்கம் யாவும் தரைமட்டம்'
                                                         ஊழல்களுக்குப் பரிவட்டம்
                                                         அழுக்குகளுக்குப் பெரும்பதவி
                                                         அழுகல் சட்டம் அதற்குதவி

                                                         அரசியல் கட்சிகள் விலைபோகும் 
                                                         ஆண்டவன் கட்சிகள் நிலைமாறும் 
                                                          சரிவைநோக்கி நடைபோடும் 
                                                          சாதிக் கட்சிகள் வலையாகும் 

                                                           ஏய்ப்பவன் எல்லாம் கோபுரத்தில் 
                                                           ஏமாந்தவர்கள் ஒர்புரத்தில் 
                                                           மேய்ப்பவன் எல்லாம் புலியாக 
                                                            மேயும் ஆடுகள் பலியாக 

                                                            பத்துப்பேர்க்கு  சோலைவனம் 
                                                            பாதிப் பேர்க்கு  பாலைவனம் 
                                                            எத்திப் பிழைக்கும் மீதிப்பேர்க்கு 
                                                            இந்திய நாடு சொந்த நிலம் 

                                                            ஏனோதானோ மனப்பான்மை 
                                                            எங்கும் இதுதான் பெரும்பான்மை 
                                                            ஆணோ பெண்ணோ என்றாலும் 
                                                            அவரவர் தொழிலில் பொறுப்பின்மை 

                                                             நானோ நீயோ உழைக்காமல் 
                                                             நமது கூரை வழியாக 
                                                             வானோ மண்ணோ வழங்குமென 
                                                             வாசல் திண்ணையில் காத்திருப்போம் 

                                                             பொம்மைகள் தானா பொது மக்கள்? 
                                                             பொய்யர்கள் தானா தலைமக்கள்? 
                                                              நம்மை நாமே சுரண்டுவதா 
                                                              நகமே விரலை விழுங்குவதா?

                                                              சின்னக் கோல்களின் ஏவலுக்கு
                                                              சேவகம் செய்யும் செங்கோல்கள் 
                                                              அன்னைக் கால்களின் விலங்குகளை 
                                                              அகற்றப் போவது யார் கைகள்

                                                                சுதந்திர தேவி நாற்பதிலே 
                                                                சூதாட்டத்தில் பலியாடு  
                                                                இதந்தரும் விடியலை கொண்டுவர 
                                                                இன்னொரு விடுதலை எப்போது?

*************************************************************************** 

தொடர்புடைய பதிவுகள் 




வெள்ளி, 30 அக்டோபர், 2015

புதுக்கோட்டையில் சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்தது

  

புதுக் கோட்டை வலைப் பதிவர் சந்திப்பு  பற்றி பெரும்பாலோர் எழுதி விட்டனர்.ஏனோ என்னால் உடனடியாக எழுத இயலவில்லை.மிக தாமதமாக எழுதியதற்கு  காரணம் சொல்வது நன்றாக இருக்காது. அதனால் மன்னிப்பு மட்டும்  கேட்டுக் கொண்டு சுருக்கமாக விழா பற்றி கூறிவிடுகிறேன்.
  வலைப் பதிவர் திருவிழாவிற்கு புதுக்கோட்டைசெல்லுமுன்   கைபேசியை சில மணி நேரம் அணைத்து விட்டேன். சனிக்கிழமைகளிலும் ஏதாவது ஒரு காரணத்திற்காக அழைப்பது வழக்கமாக இருந்ததன் விளைவே அது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா தமிழ்ப் பதிவுலகை பரபரப்பாக்கிக் கொண்டிருந்தது. நாளொரு போட்டியும் பொழுதொரு அறிவுப்புமாக களைகட்டிக் கொண்டிருந்ததை உலகமே பார்த்துக் கொண்டிருந்தது 

    ஒருங்கிணைப்பாளராக  பொறுபேற்றுக் கொண்ட கவிஞர் முத்து நிலவன் பம்பரமாய்  சுழன்றார். அவருக்கு உறுதுணையாக புதுக்கோட்டை பதிவர்களை சாட்டையின்றி சுழல வைத்தார். 
     இதுவரை நடந்த பதிவர் சந்திப்புகள் பதிவர்களுக்கு மகிழ்ச்சி தரக் கூடியதாய் அமைந்திருந்தது...பதிவர்கள் ஒருவரை ஒருவர்  சந்தித்து கருத்த்துகளை பரிமாறிக் கொள்வதே பிரதான நோக்கமாக இருந்தது. ஆனால் புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு வலையுலகில் தமிழை முதன்மை இடத்திற்கு கொண்டு வரப்படவேண்டும் என்ற நோக்கத்தையும் கூடுதலாக கொண்டு அமைந்திருந்தது குறிப்பிட தக்கது. அதற்கான முன்னேற்பாடுகள் திட்டமிடப்பட்டு செயல் வடிவம் பெற்றுக் கொண்டிருந்தது.செலவுகளைப் பற்றிக் கவலைப் படாமல் துணிந்து செயலில் இறங்கியது முத்துநிலவன் தலைமையிலான புதுக்கோட்டைப் படை. இவர்களோடு இணைந்து  பங்கேற்பாளர் படிவம் வடிவமைத்தது தொடங்கி விழா நேரடி ஒளிபரப்பு செய்வது வரை  திண்டுக்கல் தனபாலனின் பங்கு அசாதாரணமானது என்பது எல்லோரும் அறிந்ததே
       ஏற்கனவே  முந்தைய பதிவர் சந்திப்புகளுக்கு தனி வலைப்பூ தொடங்கி விழா தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தன என்றாலும் புதுக்கோட்டை விழா வலைப்பூ ஒரு தனி இடத்தை பெற்றது எனலாம். விழா பற்றிய  பதிவுகள், போட்டிகள் பற்றிய விவரங்கள் , குறிப்புகள் அறிவிப்புகள் என 45 பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளது/ 
     .
  கடந்த மூன்று வலைப் பதிவர் சந்திப்புகளிலும் தவறாமல் கலந்து கொண்ட நான் இதில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் , தடை ஏதும் வந்துவிடக் கூடாதே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.நல்ல வேலை அப்படி ஏதும் நடக்கவில்லை 
   சென்னையில் இருந்ததால் அழைப்பிதழை தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இயக்குநருக்கும் இணை இயக்குநருக்கும் சேர்த்துவிடும்படி முத்துநிலவன் அவர்கள் என்னிடம் கூறி இருந்தார். ( தமிழ் இணைய கல்விக் கழகத்துடன் நீச்சல் காரன் மூலம் ஏற்பட தொடர்பை நன்கு பயன்படுத்திக் கொண்டார். முத்துநிலவன். அதன் விளைவே போட்டி அறிவிப்புகள்) இயக்குநர் அவர்களிடம் விழா அழைப்பிதழை அளித்துவிட்டு  விட்டு வீடு திரும்பி இரவு சிலம்பு எக்ஸ்பிரசில் புறப்பட்டேன்..  
    நீச்சல்காரன்,புலவர் ராமானுஜம், சேட்டைக்காரன் அதே ரயிலில் வருவதாக அறிந்தோம். உடல் சிரமங்களைப் பாராமல் வந்த புலவர் அவர்களின் ஆர்வம் ஆச்சர்யப் பட வைத்தது. பதிவர்களை ஒருங்கிணைய வேண்டும் என்பதில் அதிக ஈடுபாடு உள்ளவர் அல்லவா?
    அதிகாலை ரயில் புதுக்கோட்டை அடைய  மலர்த்தரு கஸ்தூரி ரங்கனும்,அரும்புகள் மலரட்டும் பாண்டியன் உள்ளிட்ட விழாக் குழுவினர் இன்முகத்துடன் வரவேற்க தேநீர் அருந்திவிட்டு தங்கும் விடுதியை அடைந்தோம். அதே ஹோட்டலில்தான் , மூத்த பதிவர்கள் ரமணி, ,ராய செல்லப்பா , கவியாழி கண்ணதாசன்  ஆகியோரையும் சந்தித்தோம்... சிறிது நேரம் சேட்டைக்காரன் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்க நேரம்போனதே  தெரியவில்லை. சிறிது நேரத்தில் பாலகணேஷ் அவர்களும் வந்து சேர குளித்துவிட்டு ஆட்டோவில் விழா அரங்கிற்கு புறப்பட்டோம்.
    சீருடையுடன்   அணிந்த விழாக் குழுவினர் சுறுசுறுப்பாக வலம் வந்து வந்தோரை வரவேற்றுக் கொண்டிருந்தனர், பெயரைப் பதிவு செய்து  ஒரு அடையாள கைப்பை ஒன்றை அளித்தனர். அதில் பெரு முயற்சியுடன் தயாரிக்கப் பட்ட வலைப் பதிவர் கையேடு , பேனா, குறிப்பு நோட்டு, அடங்கிய  கைப்பை ஒன்றை வழங்கினார்  .
  கவிதை ஓவியக் காட்சியை புலவர் ராமானுஜம் அவர்கள் திறந்து வைத்தார். ஓவியங்களும் கவிதையும்  தங்களில் சிறந்தவர் யார் என்று பட்டிமன்றம்  நடத்திக் கொண்டிருந்தன. அதில் தளிர் சுரேஷ்,சேட்டைக்காரன்  அரசன், என நானறிந்த நண்பர்களின் கவிதைகளும் இடம் பெற்றிருந்தன.
      சிறிது நேரத்தில் தங்கம் மூர்த்தி அவர்கள் கம்பீரமான குரலில் அழகு தமிழில்  தொகுப்புரை வழங்க  விழா தொடங்கியது. முத்து நிலவன் இங்கும் அங்குமாக நிற்க நேரமின்றி பணியாற்றிக் கொண்டிருந்தார்.
புதுக்கோட்டை கணினி தமிழ் சங்கத்துக்கு வித்திட்ட முதன்மைக் கல்வி அலுவ்லர் அருள் முருகன், தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இணை இயக்குனர் தமிழ்ப்பரிதி , விக்கி பீடியா திட்ட இயக்குனர் ரவிசங்கர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் சிறப்பான உரையாற்றினர்.  இடை இடையே பதிவர் அறிமுகமும் நடை பெற்றுக்  கொண்டிருந்தது. 
    விக்கி பீடியாவில் 200 கட்டுரைகள் எழுதி சாதனை புரிந்த முனைவர் ஜம்புலிங்கம், அன்பு நண்பர் ஜோதிஜி,கரந்தை ஜெயகுமார்,தமிழ் இளங்கோ ,ஜி.எம்.பி, பழனி கந்தசாமி, குடந்தையூர் சரவணன், துளசி தரன்,நிகழ்காலம் எழில்.அன்பே சிவம் சிவசக்தி, திருப்பதி மகேஷ்,கோவை,ஆவி, அரசன்,சீனு,தமிழ்வாசி பிரகாஷ், கவிஞர் மதுமதி, கடற்கரை விஜயன், பகவான்ஜிஅசத்தல் பதிவுகளால் கலக்கிக் கொண்டிருக்கும் கூட்டாஞ்சோறு எஸ்.பி.செந்தில் குமார்  உள்ளிட்ட பலரையும் சந்தித்து பேசியது  மகிழ்ச்சி அளித்தது 

   பாண்டியன்,மைதிலி,கஸ்தூரி ரங்கன்,கீதா, ஜெயலட்சுமி ஆகியோர் விழா  பணிகளுக்கிடையேயும் நம்மிடையே உரையாடிவிட்டு சென்றனர்.
அம்மாதான் பெஸ்ட் குக் என்று சொன்ன குட்டிப் பதிவரும் மைதிலி -கஸ்தூரி ரங்கன் செல்லப் பெண்ணுமான நிறைமதி  . தண்ணீர் வழங்குவது உள்ளிட்ட தன்னாலியன்ற பணிகளை செய்து கொண்டிருந்தார். இனிமையான குரலில் தமிழ்ப் பாடல்கள் பாடியவரும் கவிஞர் பேச்சாளருமான   மகாசுந்தரின் இனிய மகள் சுபாஷிணி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். 

கரந்தை ஜெயகுமார் அவர்களின் வித்தகர்கள் நூல் வெளியீடும் சிறப்பாக நடைபெற்றது. அதில் இடம் பெற்றுள்ள வித்தகர்கள் கர்னல் கணேசன், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களும் பங்கு பெற்று பேசியது சிறப்புக்குரியது . நம் பதிவுலக நண்பர் ரூபன் அவர்களின் கவிதை நூலான "ஜன்னலோரத்து நிலா" வெளியிடப் பட்டது. திண்டுக்கல் தனபாலன் நூலைப் பெற்றுக் கொள்ள ரமணி அவர்கள் நூல்பற்றி பேசினார். நூல் வெளியிட்ட இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 

 மாலையில் எழுத்தாளர்  எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்பாக உரையாற்றினார். பதிவர்கள் என்ன  எழுத வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளையும்  ஆக்க பூர்வமான கருத்துகளையும் கூறினார். உரைக்குப் பின்னர் பதிவர்களின் கேள்விகளுக்கு   பதில் அளித்தார். காலையில் இருந்து மாலை வரை அரங்கம் முழுமையாக நிரம்பி இருந்தது குறிப்பிடத் தக்கது.
  மதிய உணவும் மலையில் வழங்கப்பட்ட குழிப் பணியாரத்தின்  சுவையும் அவை அன்புடன் பரிமாறப் பட்ட விதமும் இதை விட சிறப்பான உணவை உண்ணும் வரை நாவிலும்  நினைவிலும்  இருக்கும்.
இத்தனை நிகழ்ச்சிகளை நடத்த முடியுமா என்று தொடக்கத்தில் சந்தேகம் வந்தது என்னவோ உண்மை. அத்தனை நிகழ்ச்சிகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள்   நடத்தி காட்டியது புதுக்கோட்டை விழாக் குழு.
     போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும்  இணையக் கல்விக் கழகத்துடன் இனிது நடத்திய போட்டிகளில் ஒன்றில் என்னை நடுவாராக பணியாற்ற கிடைத்த வாய்ப்பு அக்குறையப் போக்கியது 

   கஸ்தூரி ரங்கன் ரயில் ஏறும் வரை கூடவே இருந்து நேரம் போவதே தெரியாமல் சுவையான தகவல்களையும், நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டு  வழி அனுப்பி வைத்த பாங்கை பாராட்டாமல் இருக்க முடியாது.
பல நாட்கள் திட்டமிட்டு பாடுபட்டு எப்போதும் குறிப்பிடத்தக்க அளவுக்கு விழாவை வெற்றிகரமாக நடத்திய முத்துநிலவன் தலைமையிலான விழாக் குழுவினருக்கு பதிவர்கள் சார்பாக பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். போட்டிகளில் வென்றோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 
  விழாவிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும், பெயர் வெளியில் தெரியாமலும் பங்காற்றிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. வலையுலகை சாராத பல்வேறு தரப்பினரையும் தமிழ்ப் பதிவுலகை உற்று நோக்க வைத்த பெருமை இந்த விழாவுக்கு கிடைத்துள்ளது என்பதை உறுதியாக சொல்லலாம்.  

*******************************************************************************