என்னை கவனிப்பவர்கள்

புதன், 25 நவம்பர், 2015

வைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே! -

அடையாறு 

  வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்கும்  நம்மை சில நாள் மழை சின்னாபின்னமாக்கி விட்டது.  நாளிதழ்கள் தொலைக்காட்சி மட்டுமல்லாது  சமூக வலை தலைகளிலும் மழை இன்னமும் கதாநாயகனாய் (வில்லனாய்) வலம் வந்து கொண்டிருக்கிறது.  நான் அறிந்து இப்போதுதான் சென்னை அதிக அளவு மழையால் பாதிக்கப் பட்டிருக்கிறது அடுத்த பதிவில் இதைப் பற்றி எழுத இருக்கிறேன்.


 மழையினால் கிராம மக்கள் நகர மக்கள்  என்ற வித்தியாசமின்றி  பாதிக்கப் பட்டாலும்   நீண்ட கால பாதிப்பு கிராம மக்களுக்கே. குறிப்பாக   மழை வந்தாலும் வராவிட்டாலும் அதிக அளவில்பாதிப்படைவது  விவசாயிகளே. இந்த பாதிப்புகள் வைரமுத்துவின் விதைசோளம்  என்ற மழை பற்றிய கவிதையை எனக்கு  நினவுபடுத்தியது . அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  இந்தக் கவிதை இடம் பெற்ற கவிதை தொகுப்பு நூலின் தலைப்பு பெய்யெனப் பெய்யும் மழை 

                                         விதைச் சோளம்
                     ஆடி முடிஞ்சிரிச்சு
                      ஆவணியும் கழிஞ்சிரிச்சு
                      சொக்கிகொளம்  கோடாங்கி
                      சொன்ன கெடு முடிஞ்சிருச்சு.

                      காடு காஞ்சிரிச்சு
                      கத்தாழை கருகிடிச்சி
                      எலந்த முள்ளெல்லாம்
                      எலையோட உதிஞ்சிருச்சு
.
                      வெக்க பொறுக்காம
                      றெக்க  வெந்த குருவியெல்லாம்
                      வெண்காடு விட்டு
                      வெகுதூரம் போயிடிச்சி.

                      பொட்டு மழை பெய்யலையே
                      புழுதி அடங்கலையே
                      உச்சி நனையலையே
                      உள்காடு உழுகலையே

                      வெதப்புக்கு  விதியிருக்கோ
                      வெறகாக விதி இருக்கோ
                      கட்டி வெச்ச வெங்கலப்ப
                      கண்ணீர்  வடிச்சிருச்சு

                      காத்துல ஈரமில்ல
                      கள்ளியில பாலுமில்ல
                      எறும்பு குளிச்சேற
                      இரு சொட்டுத் தண்ணியில்ல

                      தெய்வமெல்லாம் கும்பிட்டு
                      தெசைஎல்லாம் தெண்டனிட்டு
                      நீட்டிப் படுக்கையிலே
                      நெத்தியில  ஒத்த மழை

                      துட்டுள்ள ஆள  தேடி
                      சொந்தமெல்லாம் வாரதுபோல்
                      சீமைக்குப் போயிருந்த
                      மேகமெல்லாம் திரும்புதையா!

                      வாருமையா வாருமையா
                      வருண பகவானே!
                      தீருமையா   தீருமையா 
                      தென்னாட்டுப் பஞ்சமெல்லாம்

                      ஒத்த ஏறு  நான் உழுக
                      தொத்தப்பசு வச்சுரிக்கேன்
                      இன்னும் ஒரு மாட்டுக்கு
                      எவனப் போய் நான் கேட்பேன்.

                      ஊரெல்லாம் தேடி
                      ஏர்மாடு  இல்லாட்டி
                      இருக்கவே இருக்கா என்
                      இடுப்பொடிஞ்ச பொண்டாட்டி

                      காசு பெருத்தவளே
                      கார வீட்டுக் கருப்பாயி
                      தண்ணிவிட்டு எண்ணயின்னு
                      தாளிக்கத் தெரிஞ்சவளே!

                      சலவைக்குப் போட்டா
                      சாயம் குலையுமின்னு
                      சீல தொவைக்காத
                      சிக்கனத்து மாதரசி

                      கால்மூட்ட வெதச் சோளம்
                      கடனாகத் தந்தவளே
                      கால் மூட்ட கடனுக்கு
                      முழு மூட்ட அளக்கறண்டி 

                      ஊத்துதடி ஊத்துதடி
                      ஊசிமழை ஊத்துதடி
                      சாத்துதடி சாத்துதடி
                      சடசட சடையா சாத்துதடி

                      முந்தா நாள் வந்த மழை
                      மூச்சு முட்டப் பெய்யுதடி
                      தெச ஏதும் தெரியாம
                      தெர  போட்டுக் கொட்டுதடி

                      கூர  ஒழுகுதடி
                      குச்சிவீடு நனையுதடி
                      ஈரம் பரவுதடி
                      ஈரக் கொலை நடுங்குதடி

                      வெள்ளம் சுத்தி நின்னு
                      வீட்ட இழுக்குதடி
                      ஆஸ்தியில சரிபாதி
                      அடிச்சிக்கிட்டுப் போகுதடி 

                      குடிகெடுத்த காத்து வந்து
                      கூர  பிரிக்குதடி
                      மழைத் தண்ணி ஊறி
                      மண்சுவரு சரியுதடி.

                      நாடு நடுங்குதையா
                      நல்லமழை போதுமையா
                      வெத வெதக்க  வேணும்
                      வெயில் கொண்டு வாருமையா.

                      மழையும் வெறிக்க
                      மசமசன்னு வெயிலடிக்க
                      மூலையில வச்சிருந்த
                      மூட்டையைப்  போய் நான் பிரிக்க

                      வெதச் சோளம் நனஞ்சிருச்சே
                      வெட்டியா பூத்திருச்சே
                      மொளைக்காத படிக்கு
                      மொளைகட்டிப் போயிடிச்சே

                      ஏர் புடிக்கும் சாதிக்கு
                      இதேதான் தலையெழுத்தா?
                      விதிமுடிஞ்ச ஆளுக்கே
                      வெவசாயம் எழுதிருக்கா?

                      காஞ்சு கெடக்குதேன்னு
                      கடவுளுக்கு மனு செஞ்சா
                      பேஞ்சுக்  கெடுத் திருச்சே
                      பெருமாளே என்ன  பண்ண?


****************************************************


முந்தைய தானே புயல் கடலூர் பகுதியை புரட்டிப் போட்டது அப்போது நான் எழுதிய கவிதை  நேரம் கிடைக்கும்போது படிச்சுப்பாருங்க 

தானே! உன்னோட தாக்கம் இன்னும் தீரலையே!

20 கருத்துகள்:

  1. அருமையான கவிதை...கிராம மக்களுக்குத்தான் குறிப்பாக விவசாயிகளுக்குத்தான் கூடினாலும் பாதிப்பு.... இல்லை என்றாலும் பாதிப்பு..

    மற்றபடி நகர மக்கள் மழையைக் குற்றம்சொல்லுவதில் அர்த்தம் இல்லை எனலாம். இயற்கையை நாம் என்ன பண்ண முடியும்? மக்கள் நாமும், ஆட்சியாளர்களும் செய்யும் தவறுகளுக்கான விளைவுகளைச் சந்தித்துவிட்டு மழையைக் குற்றம் சொல்லுவதில் அர்த்தமில்லை.

    பதிலளிநீக்கு
  2. நல்ல கவிதை...நீங்கள் சொன்ன விதம். அருமை

    பதிலளிநீக்கு
  3. அற்புதமான கவிதை
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. இந்த மழையில் நான் சென்னையில் இருந்தேன் மழையால் வீடுகளில் பாம்பும் அட்டையும் மீனும் சொந்தம் கொண்டாடியதைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன்

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் நண்பரே நலமா ? கவிதை நன்று ரசித்தேன்
    தமிழ் மணம் முதலாவது

    பதிலளிநீக்கு
  6. பெய்தும் கெடுக்கும் ,பெய்யாமலும் கெடுக்கும் மழை என்பது உண்மைதானே :)

    பதிலளிநீக்கு
  7. பத்து நாட்கள் வெய்யிலும் , ஒருநாள் மழையுமே சொர்க்கம்.
    அதுவே மாதம் மும்மாரியாக வளம் தரும்..

    மாறினால் பெய்து கெடுத்தது
    பெய்யாமல் கெடுத்தது என்று வசைபாடப்படும்..!

    பதிலளிநீக்கு
  8. இத்தனை பொருத்தமா ஒரு கவிதை!! எங்கிருந்து தான் உங்களுக்கு மட்டும் கிடைக்கிறதோ அண்ணா! அருமையான கவிதை அல்ல கொடுமையான கவிதை:((

    பதிலளிநீக்கு
  9. விவசாயிகளுக்குத்தான் எத்தனை சோதனை!???

    நன்றி கவி. வைரமுத்து அவர்களுக்கு!

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. காய்ந்தால் கரு வெள்ளம். பெய்தால் பெருவெள்ளம்!

    பதிலளிநீக்கு
  12. தேடிப் பிடித்து தந்த வைரமுத்து கவிதைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வைரமுத்துவின் கடைசி “நச்“வரிகளைப் போலவே,
    உங்கள் தானே கவிதையின் கடைசி வரிகள் மூன்று நச்!
    (ஒரு நல்ல கவிதையைப் படிச்சா ஒரு கவிஞருக்கு,
    தானே கவிதை வருமாமே? அது உண்மை தானே?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தானேவைப் பார்த்ததும் தானே வந்துவிட்டது
      சில படைப்புகள் நம்மையும் அறியாமல் பாதிப்பை ஏற்படுத்தி எழுதவைப்பது உண்மைதான்.
      நன்றி ஐயா

      நீக்கு
  14. பொருத்தமான ஒரு பாடலை தக்க நேரத்தில் எடுத்துக் காட்டியது அருமை.

    தங்களின் தானே பற்றிய பாடலும் ரசனை.

    தொடர்கிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895