என்னை கவனிப்பவர்கள்

சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 ஏப்ரல், 2019

பட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா?


  தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. தமிழகத்தின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்கள் என அறிய அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர் முதல் கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்ட நிலை தமிழகத்தில் வரும் 18 அன்று தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 
     ஃபேஸ்புக் டுவிட்டர்  வாட்ஸ் ஆப், யூடியூப் சமூக வலைதளங்களிலும் பிரச்சாரம் அனல் பறக்கிறது. வேட்பாளர்களின் கோமாளித்தனமான பேச்சுக்கள் செயல்களால் மீம்சுகள் பஞ்சமில்லாமல் நிறைந்து சுவாரசியம் கூடியுள்ளது.
      வதந்திகள் பொய்த் தகவல்களை கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சிகளும் முடிந்த அளவு பரப்புகின்றன. இவை எந்த அளவுக்கு கட்சிகளுக்கு  பலனளிக்கும் என்பது தெரியவில்லை.  எவை உண்மை பொய் எனபதை  பற்றிய கவலை இன்றி  ஃபார்வேர்ட் செய்து மகிழ்கிறார்கள்.
     சிலர் பயனுள்ள தகவல்கள் என்று அவர்களை அறியாமலேயே தவறான தகவல்களை பரப்புகிறார்கள் சர்க்கார் படத்தை பார்த்த பாதிப்பில்.(நான் இன்னும் சர்க்கார் படம் பார்க்க வில்லை  சில தேர்தல் விதிமுறைகளை அள்ளி விடுகிறார்கள்
     கடந்த வாரங்களில் அடிக்கடி என் கண்ணில் பட்ட தகவல்களில் ஒன்று  வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை எனில்  வாக்குச் சாவடி அதிகாரியிடம் சேலஞ்ச் வோட் (Challenge Vote) என்று கேட்டு வாக்களியுங்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது. 


          உண்மையில் இப்படி வாக்களிக்க முடியுமா என்றால் முடியாது என்பதே சரியான பதில்.  வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் நிச்சயம் வாக்களிக்க அனுமதிக்கப்படாது.  அவ்வாறு வாக்களிப்பதற்கான விதிமுறை இதுவரை இல்லை. 
        அப்படியானால் சேலஞ்ச் ஒட்டு என்று ஒன்று இருக்கிறதா? இல்லையா?

      ஆம்!சேலஞ்ச் வோட் என்று ஒன்று உள்ளது. அது  தவறான வாக்காளர் வாக்களிக்க வரும்போது செய்ய வேண்டிய நடைமுறை . வாக்காளரின் அடையாளத்தை எதிர்த்தல். அதாவது வந்திருப்பவர் தவறான வாக்காளர்  என வேட்பாளரோ அல்லது அவரது அனுமதி பெற்ற ஏஜெண்டோ  எதிர்த்தலைத்தான் சேலஞ்ச் வோட் என தேர்தல் ஆணையம் கூறுகிறது. 
        வாக்குப் பதிவு நேர்மையாகவும் விதிகளின்படியும் நடைபெறுகிறதா என்பதை அறிய வேட்பாளர்களுக்கு உரிமை உண்டு. அதனால் வாக்குப் பதிவு தொடங்கி முடியும் வரை வாக்குப் பதிவை கண்காணிக்க தனக்கான ஏஜெண்டுகளை -தங்கள் நம்பிக்கைக்கு உரிய உள்ளூர்வாசிகளை ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் வேட்பாளர்கள் நியமனம் செய்கிறார்கள். 
     வாக்குப் பதிவு தொடங்குவது முதல் ,வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீலிடுவது, மாதிரி வாக்குப் பதிவு நடத்துவ்து, வாக்காளர்களின் அடையாளங்களை உறுதிபடுத்துவது வாக்குப்பதிவு நிறைவு செய்து சீலிடுவது இவர்கள் முன்னிலையில்தான் நடைபெறுகிறது. அனைத்துக் கட்சி ஏஜெண்டுகளும் உள்ளே வரும் வாக்காளர்களை அடையாளம் கண்டு உறுதிப் படுத்துவார்கள்.  வருகின்ற வாக்காளர்  உண்மையானவர் இல்லை என நினைத்தால் ஏஜெண்டுகள் ஆட்சேபம் எழுப்பலாம்.  ஆள் மாறாட்டம் செய்பவர் என உறுதிபடத் தெரிந்தால் இவர்  பட்டியலில் உள்ள உண்மையான வாக்களர் அல்ல என சேலஞ்ச் செய்ய முடியும். வாக்குச்சாவடி முதன்மை அலுவலரிடம் முறையாக புகார் தெரிவித்தால் அலுவலர் அவரது அடையாள ஆவணங்களை சரிபார்த்து  உண்மையக இருக்கும் பட்சத்தில் வாக்களிக்க அனுமதிப்பார்.      
      அப்போதும் எதிர்ப்பு தெரிவிக்க நினைத்தால் உரிய கட்டணம் செலுத்தி 
 ( கட்டணம் 2 ரூபாய்-  இப்போதும் கட்டணம் மாறியதாக தகவல் இல்லை)  எதிர்ப்பை பதிவு செய்யலாம். தக்க ஆதாரங்களுடன் வந்திருப்பவர் உண்மையான வாக்காளர் அல்ல என அவர் நிருபித்தால் வந்திருப்பவர் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார். விதிகளின்படி அவரை காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.  எதிர்ப்புக் கட்டணம் திரும்ப வழங்கப் படும். எதிர்ப்புக்கான முறையான ஆதாரம் இல்லையெனில் எதிர்பை ரத்து செய்து வாக்களிக்க அவரை அனுமதிக்கலாம். ஆனால் எதிர்ப்புக் கட்டணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது. அரசுக் கணக்கில் சேர்க்கப் படும்.   

    நடைமுறையில் ஏஜெண்டுகள் அவ்வப்போது எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம் என்றாலும் அவற்றை பதிவு செய்வது இல்லை. அனைத்து ஏஜெண்டுகளும் தாங்களாகவே அடையாளம் பற்றிய ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். 

இதுதான் சேலஞ்ச் வோட்.   

(வேட்பாளர் தொகுதிப் பக்கம் வரலன்னா மக்கள் மறந்துடுவாங்க . நாமும் வலைப் பக்கம் வரலன்னா நம்மையும் வலை நண்பர்கள் மறந்துவிடுவார்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும் நம்ம ப்ளாக் பாஸ்வேர்டே  மறந்து விடும் அபாயம் இருப்பாதால்  நாம இன்னமும் பளக்கர்தான்  என்பதை நினைவு படுத்தவே இந்தப் பதிவு)

நன்றி: தேர்தல் ஆணையத்தின் வலைப்பக்கம் மற்றும் கையேடுகள்


அடுத்த பதிவில் டெண்டர் ஒட்டு, டெஸ்ட் ஓட்டு, மாதிரி வாக்குப் பதிவு இவற்றைப் பார்க்கலாம்

செவ்வாய், 20 நவம்பர், 2018

சிறு துளி கஜா புயல் நிவாரணப் பொருட்கள்

        

சென்னை மாவட்ட கல்வித் துறை சார்பாக கஜா புயல் நிவாரணப் பொருட்கள் திங்கள் அன்று அனுப்பப்பட உள்ளதாகவும் பொருட்களை கொண்டு வந்து மாவட்ட அலுவலகத்தில் சேர்க்கும்படியும்  வாட்ஸ் ஆப் மூலம்  முந்தைய தினம் மாலை  தகவல் தெரிவிக்கப் பட்டிருந்தது. அனைத்து பள்ளிகளுக்கும் வட்டாரக் கல்வி அலுவலர் மூலமாக விருப்பம் உள்ளவர் நிவாரணப் பொருட்கள் வழங்கும்படி  பள்ளிகளுக்கு வேண்டுகோள் விடப் பட்டிருந்தது..  பொருட்கள் வரச்சற்று தாமதம் ஆனது.  அதற்குள் சிறிய  மனவருத்தம் ஏற்படுத்தக் கூடிய நிகழ்வு.
புறந்தள்ளிவிட்டு கையும் பேசியுமாக களம் இறங்கினர் வட்டாரக் கல்வி அலுவலர்கள்.அப்போது மணி 11.00 க்கு மேல் ஆகி விட்டது . அடையார், திநகர், எழும்பூர், மைலப்பூர் திருவல்லிக்கேணி ராயபுரம், பெரியமேடு  புரசைவாக்கம்  ஜார்ஜ் டவுன் பெரம்பூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் எங்கு தட்டினால் உடனே திறக்கும் எங்கு சிறிது நேரம் தட்ட வேண்டும் என்பதை அறிந்து தொலைபேசித் திரையில் விரல்களால் தட்ட ஆரம்பித்தனர்.     


ஆச்சர்யம்! அடுத்த ஒரு மணி நேரத்தில் நிவாரணப் பொருட்கள் தனித் தனிப் பள்ளிகளாகவும் இணைந்தும் வரத் தொடங்கி விட்டன.  வாட்டர் பாட்டில்கள் அரிசி, பருப்பு வகைகள் சமையல் எண்ணெய்ஆடைகள் போர்வைகள்  மெழுகு வர்த்திகள் பிஸ்கட், ப்ரட் பாக்கெட்டுகள் பாத்திரங்கள் மருந்துகள், சானிடரி நாப்கின்ஸ் என் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வந்து குவித்தனர்.


மிகக் குறுகிய காலத்தில் பள்ளிகளுக்கு தெரிவித்து அவர்கள் ஆசிரியர்களுக்கு தெரிவித்து பின்னர் கடைகளுக்கு சென்று நிவாரணப் பொருட்களை  வாங்கி அவற்றை ஒரிடத்தில் வைத்து பேக் செய்து அதன் மீது பெயர் எழுதி  ஒரு வண்டியில் ஏற்றி தலைமை இடத்திற்கு கொண்டு சேர்த்த வேகம் அசாதரணமானது.  நிச்சயம் எண்ணிப் பார்க்காதது . எப்படி சாத்தியமாகப்  போகிறது என்று நினைத்தது சாத்தியமானது.
 இதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. கொடுக்கப் பட்ட அவகாசத்திற்குள் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்ட ஆசிரியர்/ஆசிரியைகளின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியன . அடையார் வட்டாரத்தில் உதவி பெறும் பள்ளிகள் சார்பாக 85,000 மதிப்பிலான நிவாரணப் பொருட்களும் நர்சரி பள்ளிகள் சார்பாக  ரூ65000 மதிப்பிலும் நிவாரணப் பொருட்கள் வழங்கப் பட்டன. இதே போல சென்னையில் உள்ள பத்து சரகங்களிலும் நிவாரணப் பொருட்கள் குறுகிய நேரத்தில் பெறப்பட்டுள்ளன
  
     இது தொடக்கக் கல்வி மட்டுமே. இது மட்டுமல்லாது அரசு, உதவிபெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகளும் நிவாரணப் பொருட்களை ஆச்சர்யமூட்டும் வகையில் கொண்டு சேர்த்துள்ளனர்.

     இவை அனைத்தும்  கஜா புயல் பாதிப்பின் அளவைப் பார்க்கும்போது சிறு துளியே . தேன் துளி சிறிதென்றாலும் இனிக்காமலாபோகும்? எதிர்பார்த்ததை விட அதிக ஒத்துழைப்பு நல்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி அனைத்து சென்னை வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் பாராட்டுகள்

திங்கள், 29 அக்டோபர், 2018

மதிமாறனுக்காக தோசை-இட்லி புதிய தத்துவங்கள்


மதிமாறன் சார்! 
    வைரமுத்து சின்மயி விவகாரம் பரபரப்பு இழந்து உங்கள் தோசைப் பேச்சு  தற்போது சமூக வலை தளங்களின் பேசு பொருளாக ஆகி விட்டது.  உங்கள் பேச்சு கேலிப் பொருளாக மாறும் என்று நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டீர்கள். உங்கள் பேச்சு வெறுப்புணர்வின் வெளிப்பாடாகவே அமைந்திருந்தது.  மீம்ஸ்களின் நாயகனாக இன்று மாறி இருக்கிறீர்கள் இதுவும்  ஒரு விளம்பரம்தான் 
     சில ஆண்டுகளுக்கு சன் டிவி சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் அருமையான நிகழ்ச்சி ஒன்று ஒளி பரப்பானது. 
     இட்லி தோசைகள் தயாரிப்பு விதம் விதமாக   காட்சியாக தெரிய பின்னணியில் சன் டிவி செய்தி வாசிக்கும்   சண்முகத்தின் வசீகரக் குரலில் இட்லி தோசையை வாழ்க்கையோடு ஒப்பிட்டுக் கூறிய நிகழ்ச்சியை பாத்தேன்.  அதனை அப்படியே இங்கு விவரித்திருக்கிறேன்.

     உங்கள் தோசை  இட்லி  சாதிய தத்துவத்திற்கும்  இந்த இட்லி தோசை தத்துவத்திற்கும் உள்ள வித்தியாசத்தை படித்துப் பாருங்கள்.  ஏற்கனவே இப்பதிவை நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதி இருந்தேன். உங்களுக்காக மீண்டும் இன்று. 

இட்லியும்  தோசையும் 

   இட்லி என்பது மௌனம். தோசை என்பது சப்தமும் பேச்சும். இட்லி ஒவ்வொரு விள்ளலிலும் மௌனத்தை வெளிப்படுத்தும்.தோசை ஒவ்வொரு துண்டிலும் மொறுமொறுப்பான சத்தத்தில் பேசும். உறவு என்பது முதலில் மௌனத்தில் தொடங்கி பேச்சில் வளர்வது. பிரிவு என்பது பேச்சில் தொடங்கி மௌனத்தில் முடிவது. உறவு என்பது இட்லியில் தொடங்கி தோசையில் வளர்வது. பிரிவு என்பது தோசையில் தொடங்கி இட்லியில் முடியும் என்பதால்  யாரும் தோசையில் தொடங்கு வதில்லை. உணவு விஷயத்தில் உணர்வுகள் சரியாகவே இயங்கு கின்றன. இட்லியில் தொடங்கித்தான் தோசையில் வளர்கின்றன.உணவு விஷயத்தில் சரியாகச் செயல்படும் உணர்வுகள் உறவு விஷயத்தில் மாறிச் செயல்படும்போது உறவுகள் உடைகின்றன.

   இட்லிக்கு பின் தோசை என்பது இயற்கையின் தொடர் நிகழ்வு. இட்லிகள் பூக்கள். தோசைகள் என்பவை கல்லில் பழுப்பவை. அதிக நேரம் இருவர் மெளனமாக இருக்கும்போது  சிறிது புளிப்பு ஏற்படும். அப்போது சுவையான உரையாடலில்  ஈடுபடுவது சுவையோ சுவை. முதல் நாள் மாவில் இட்லி உற்பத்தியாகும் அது மௌனம்.மறுநாள் சிறிது புளித்தவுடன் தோசைகளை படைப்பதுண்டு.அது பேச்சைப் போன்றது.

   மௌனத்தில் இருந்தே பேச்சு பிறக்கவேண்டும். இட்லியும் தோசையும் இதையே மௌனமாகவும் மொறுமொறுப்பாகவும்  வெளிப் படுத்துகின்றன. மௌனம்  என்பது இட்லியின் வடிவமாக இருப்பதால் இரண்டு நிலைகளை இட்லிகள் எடுக்கத் தேவை இல்லை. அவை ஒரே நிலையில் உருவாகின்றன. இட்லிகள் பிரண்டு படுப்பதில்லை, தோசை என்பது பேச்சின் வடிவமாக இருப்பதால் அது வாயின்  தன்மையை பெற வேண்டி இருக்கிறது.தோசைக் கரண்டிதான் நாவு. சுவையூறும் உமிழ் நீர் போன்றது எண்ணை. நாவு இரண்டு பக்கமும் பேசும். கரண்டி நாவுகள் தோசையை இரண்டு பக்கமும் திருப்பிப் போடும். மௌனத்திடம் நாவுக்கு என்ன வேலை?

   இட்லிக்கும் தோசைக்கும் தொடர்பிருந்தாலும் இட்லிக்கும் தோசைக் கரண்டிக்கும் தொடர்பில்லை. மௌனத்தின் ருசி உமிழ் நீருக்கு அப்பாற்பட்டது என்பதால்  இட்லியின் உருவாக்கத்தில் எண்ணைக்கு பெரிய இடமில்லை. இட்லி குழந்தை; தோசை வளர்ச்சி; தாயின் மடியிலிருந்து  பிரண்டு விழும் குழந்தையைபோல துணியிலிருந்து இட்லி விழுவது அழகின் அடுக்கு .தோசைகள் வளர்பவை. ஹோட்டல்களில் தோசை, கல்லில் ஊற்றப்பட்டு பின்எழுதப்பட்டு பின் சுடப்பட்டு பின் சுருட்டப்பட்டு பின்னும் கட்டுக்குள் அடங்காமல் படைக்கப் படுகின்றன. 

   இட்லிகள் பிறந்த வீட்டின் பெருமையும் புகுந்த வீட்டின் தன்மையும் கொண்ட பெண் போன்றவை. பிறந்த வீட்டின் பெருமை  என்பது வெண்மை நிறம். இட்லியின் வளரச்சியில் இட மாற்றம் உண்டு என்றாலும் நிற மாற்றம் கிடையாது. புகுந்த வீடு என்பது குழிவு ஆனால் இட்லிகளில் குழிவுகள் தெரியாது.அதையும் மேடாக்கிக் காட்டும் மேன்மை பொருந்தியவை இட்லிகள். தோசைகளில் தோசைக்கல்லின் வடிவம் முழுமையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஹோட்டல்களில் சதுரக்கல்லில் வட்ட தோசைகளும் முக்கோணமாக மடிக்கப் பட்ட தோசைகளும் பிறக்கின்றன. வீட்டில்கூட பிற  வடிவத்தை தோசைகள் ஏற்றுக் கொள்வதில்லை. இருந்தாலும் இட்லிக்கு தோசை மீது ஆழ்ந்த பிரியம் உண்டு. ஒன்றில் ஊற்றப்பட்டு அதன் வடிவத்தை ஏற்பதை வார்க்கப்படுதல் என்பார்கள்.உண்மையில் இட்லிகள்தான் வார்க்கப் படுகின்றன என்றாலும் அந்தப் பெயரை தோசைக்கு கொடுப்பதில்தான் இட்லிக்கு சந்தோஷம். 

  குழந்தைகள் இளமைப் பருவத்தை அடைந்தவுடன் பழைய அடையாளங்கள் மறைந்து புதியவை பிறக்கும். புதிய உறவுகள் கூடும். தோசைகள் அப்படிப்பட்டவை. தோசைகள் வண்ணத்தை மாற்றிக் கொள்ளும்; புதியவைகளை சேர்த்துக் கொள்ளும். ரவா தோசை, மசாலா  தோசை, பொடி தோசை வெங்காய ஊத்தப்பம் என பலப்பல வகைகள்; குட்டித் தோசை கல் தோசை என்ற பல வடிவங்கள். அதிலும் இந்த மசாலா தோசைகள் மிகவும் சுவாரசியமானவை. உருளைக் கிழங்குகள் மண்ணுக்குள் விளைபவை. சட்னி தரும் தேங்காய்கள் விண்ணில் தொங்குபவை. மண்ணுக்குள் விளைந்த உருளைக் கிழங்கை வயிற்றுக்குள் வைத்த மசாலா தோசைக்கு விண்ணில் விளைந்த தேங்காய்ச் சட்னி ஏகப் பொருத்தம். 
  குழந்தைகளை தொட்டுப் பார்க்கத் தூண்டுவது எல்லோருக்கும் இயற்கைதானே. இட்லிகளை தொட்டுப் பார்ப்பார்கள்.சமைத்தவரின் விரலைப் பதிவு செய்யும் பழக்கம் சில இட்லிகளுக்கு உண்டு. ஆசை ஆசையாக பார்த்து செய்யப்பட வேண்டியது தோசை. இட்லிகள் பூப்பதை  யாரும் பார்க்க முடியாது. இட்லி மௌனத்தின் ரகசியம். 

   குழந்தைகளில் குட்டிக் குழந்தைகள் இருப்பது மாதிரி. இட்லிகளில் குட்டி இட்லிகள் உண்டு குழந்தைகளுக்கு குளிப்பது பிடிக்கும்தானே? குட்டி இட்லிகளை சாம்பாரில் குளிக்க வைக்க வேண்டும். பாத் டப்பைப் போல இந்தத் தட்டும் குளிப்பதற்கு ஏற்றார்போல குழிவாக இருக்கும். குட்டி இட்லிகளை கைகளால் தொடக் கூடாது. ஸ்பூனால் எடுத்துப் போடவேண்டும். 

  இட்லிக்கும் தோசைக்கும் ஒரு பெரிய ஒற்றுமை இருக்கிறது. ஒன்று பழைய தமிழ்ச் சொல்லையும் மற்றொன்று பழைய கலாசாரத்தையும் நினைவூட்டுகிறது. 'இடு' என்பது இடுதலை குறிக்கிறது. இட்டு மூடி விடுபவை இட்லிகள். கல்லில்தான் ஆதி மனிதர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள். இன்றைக்கு இரும்பிலும் மற்ற உலோகத்திலும் வந்தாலும் அதற்குப் அவற்றிற்குப் பெயரென்னவோ தோசைக் கல்தான். இடு என்பது துன்பத்தையும் குறிக்கும். இடுக்கண் வரும்போது சிரிக்கவேண்டும் என்கிறார் வள்ளுவர். பள்ளங்களில் இடப் படும் மாவு இட்லியாகச் சிரிக்கிறது;பக்குவமடைகிறது. ஒரே மாவுதான் இட்லியாகவும் சிரிக்கிறது; தோசையாகவும் இருக்கிறது; மௌனமாகவும் இருக்கிறது; பேச்சாகவும் இருக்கிறது;. இரண்டுமே தேவைப் படுகிறது வாழ்க்கைக்கு.

இதையெல்லாம் விட்டுட்டு  தோசைக்கும் இட்லிக்கும் சாதி சாயம் பூசியது நியாயம்தானா?

செவ்வாய், 16 அக்டோபர், 2018

96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo

   
 வைரமுத்து நான் மதித்து வந்த ஒரு கவிஞர்.  அற்புதமான சொல்லாற்றல் உடையவர். திரைப் பாடல்களுக்கும் கவிதை உணர்வைத் தந்தவர். அவருடைய பல கவிதைகளை நான் என் வலைப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.  அவரது கவிநயம் கண்டு வியந்திருக்கிறேன்.
       
       திரை உலக பிரபலங்கள் பெரும்பாலும் அரசியல் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள். .ஆனால் ஜெயலலிதா கோலோச்சியபோது கூட கலைஞருடனான நெருக்கத்தை அவர் விடவில்லை வைரமுத்து. எனினும் அவர் அவ்வப்போது மோடியையும் புகழ்ந்து பேசவும்  தயங்கியதில்லை. அவர் புகழுக்கும்  விருதுகளுக்கும் ஆசைப் படுபவர்.அதை எப்படியாவது வாங்கும் திறமை படைத்தவர் என்பது பரவலாக அறியப்பட்ட ஒன்று. ஆனால் பாலியல் புகாருக்கு ஆளாவார் என்பது எதிர் பாராத ஒன்று

       #MeToo tag  மூலம் இந்தியா முழுதும் பல பிரபலங்களின் பாலியல் தொல்லைகள் அம்பலப் படுத்தப் பட்டு வருகின்றன. அதிகாரம் செல்வாக்கு பணபலம் இவற்றால்  தவறுகள் யாருக்கும் தெரியாது என்று இருமாப்புடன் இருந்தவர்களுக்கு வில்லனாய் வந்தது #MeToo.  தமிழ்நாட்டில் இந்த இயக்கத்தில் முதலில் சிக்கிக் கொண்டார் வைரமுத்து .அவரைப் பற்றி சின்மயி பாலியல் தொல்லை குற்றச்சாட்டு கூறியுள்ளது . தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில்  விவாதப் பொருளாக மாறியுள்ளது. பெரும்பாலான பெண்கள் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆண்களைப் பொறுத்தவரை பிஜேபி யினர் மற்றும் ஆண்டாள் பற்றிய வைரமுத்துவின் கருத்தின்மீது கோபம் கொண்டவர் மட்டுமே இவ்விஷயம் சார்ந்து வைரமுத்துவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.  

     இனம் சார்ந்த நோக்கில் ஆண்களில் பலர் சின்மயின்மீது குற்றம் சுமத்தவும் தவறவில்லை.  நீ என்ன யோக்கியமா என்ற தொனியில் ஆபாசமான வசை பாடல்களை காணமுடிகிறது. பெரியாரிய வாதிகள் . பலர் இன்று அமைதி காக்கின்றனர்.  . இதற்கு சின்மயியும் ஒரு காரணம். ஏற்கனவே  தன்னை பார்ப்பனர் என முன்னிலைப் படுத்திக் கொண்டதில் பார்ப்பனர் அல்லாதவரின் ஆதரவை இழந்தார்.. . இதனால் ஆண்டாளுக்கு ஆதரவான பார்ப்பன சதி என்று கூறிவிடவும் முடியவில்லை. காரணம் பார்ப்பனர் சிலரும்  #MeToo இல் சுட்டிக் காட்டப்பட்டனர். ஆனால் அவர்கள் வைரமுத்துவைப் போல் புகழ் பெற்றவர்கள் அல்ல என்பதால் கவன ஈர்ப்பு பெறவில்லை. என்மீது வழக்கு தொடருங்கள் நான் நல்லவனா கெட்டவனா என்பதை நீதி மன்றம் முடிவு செய்யட்டும் என்று பதிலுரைத்துள்ளார் வைரமுத்து. ஆனாலும் இன்று வரை புகார்கள் தொடர்கின்றன.

     ஒரு சிலர் பெட்ரோல் விலை உயர்வு, ரபேல் விவகாரம் போன்றவற்றை மறப்பதற்காக திட்டமிடப்பட்டு பரப்பப் படுகிறது என்கின்றனர். ( அப்படி எல்லாம் கஷ்டப் படவே தேவை இல்லை. எப்படி இருந்தாலும் ரெண்டு நாள்ல நாமளே மறந்துடுவோம்.)

       இதனை ஏன் சின்மயி அப்போதே சொல்லவில்லை என்ற கேள்வி எழுகிறது. நடைமுறை  வாழ்க்கையில் சில விஷயங்கள் சில ஆண்டுகளுக்குப் பின்னரே சுட்டிக் காட்டப்பட்டு பிரச்சனை தொடங்கப் படுகிறது.  ..  மனைவி திடீரென்று ஒரு நாள் கணவனிடம் முதன் முதல்ல உங்க அம்மா என்ன பண்ணாங்க தெரியுமா என்று மாமியார் தொல்லைகளை கோபத்துடன் கூறுவார். இத அப்பவே சொல்ல வேண்டியதுதானே என்றால்,  ’அப்ப எங்க சொல்ல விட்டீங்க?’ என்று தொடங்கி நீங்க செஞ்சதை சொல்லவா என தொடர்வதும் நடைமுறை!
ஆண்கள் தங்கள் திரும்ணத்திற்கு முந்தைய காதலையோ அல்லது அந்தரங்க சம்பவங்களையோ தன் நண்பர்களிடம் கூச்ச மின்றி குற்ற உணர்வின்றி பகிர்ந்து கொள்ள் முடியும். ஆனால் எல்லா பெண்களும் தங்கள் நெருங்கிய தோழிகளிடம் கூட பகிர்ந்து கொளவார்களா என்பது ஐயமே

        வைரமுத்து சபலம் அடைந்திருக்கலாம். நெறி பிறழ்ந்திருக்கலாம்.தன் செல்வாக்கை பயன்படுத்தி இருக்கலாம் ஆனால் காமக் கொடூரன் அளவுக்கு சித்தரிப்பது சற்று அதிகமோ என்றே தோன்றியது. ஆனால் வைரமுத்துவின் மீது புதுப்புது புகாராக முளைத்துக் கொண்டிருப்பது அவர் மீதான நம்பிக்கையை குலைத்துவிட்டது.  பிரபலங்கள் இதனை பாடமாகக் கொள்வது நல்லது
.
   #MeToo  வில் பெண்கள் தைரியமாக தங்கள் அனுபவத்தை  பகிர்கிறார்கள். ஆனால் 96 படத்தை பார்த்து விட்டு ஆண்கள் ( நான் இன்னும் பார்க்கவில்லை) உருகி உருகி தங்கள்  பழைய காதலை முகநூலில்  பகிர்ந்தார்கள்.  அவர்கள் அனைவ்ரும் ஆண்களே. ஆனால் இதில் ஒரு பெண்கூட தன் காதலை  பகிர்ந்ததாகத் தெரியவில்லை.  முந்தைய தலைமுறை ஆண்களின் மனதை அறிந்தவர்கள் பெண்கள். . அதனால் இதுபோன்ற விஷயங்களை பகிர்ந்து சிக்கலை உருவாக்கிக் கொள்ள விரும்புவது இல்லை.

 ஒருபக்கம் #MeToo ஆண்களின் (பெரும்பாலும் வயதானவர்கள்) இன்னொரு பக்கத்தை வக்கிரங்களை   அடையாளம் காட்டுவது போலவே அடுத்த தலைமுறை ஆண்களின்  மனமாற்றத்தையும் (பெருந்தன்மையை?)  வெளிக்காட்டுகிறது என்று கூறலாம் கணவனிடம் தன் சிறுவயதில் நடந்த #MeToo சம்பவங்களை தைரியமாக பகிர்ந்து விட முடியாது. அதை கணவன் சரியாகப் புரிந்து கொள்வானா என்பது ஐயமே.ஆனால்  அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் ஆண்களுக்கு இப்போது வந்திருக்கிறது என்பதை சம்பவங்கள் உணர்த்துகின்றன. ஆனாலும்  தன் மனைவியின் கடந்த கால அந்தரங்க சம்பவங்கள் வெளியில் தெரிவதை எந்தக் கணவனும் விரும்பமாட்டான் என்பது நிதர்சனம். ஆனால்  தற்போது தைரியமாக சொல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சிலர் ஆதரவு அளிக்கிறார்கள். அதனால் பலரும் உசுப்பிவிடப் பட்டது போல் தங்களுக்கு நேர்ந்ததை கொஞ்சம் மிகைப்படுத்தியும்  தைரியமாக சொல்கின்றனர்..

 #MeToo வால் சில நன்மைகள் விளைந்தாலும் சில குறைகளும் உண்டு.  பெண்கள் ஒரு வித கழிவிரக்கத்தை தங்கள்மீதே ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு. இயல்பாக நடந்தவற்றைக் கூட பாலியல் சார்ந்ததாக இருந்திருக்குமோ என்ற எண்ணத் தோன்றும்.. இதைப்  பற்றி பேசும் பெண்கள் எல்லாம் இது உங்கள் வீட்டில் நடக்கலாம். பக்கத்து  வீட்டில் நடக்கலாம் என்று கூறுவதை காணலாம். இதனால்  தினந்தோறும் இப்படித்தான் நடக்கிறதோ என்ற மாயை உருவாக்கி விடும் அபாயம் உள்ளது. #MeToo வைக் காண்போர் நமக்கு   10 வயது இருக்குபோது தாய்மாமா என்னை இடுப்பைப் பிடித்து தூக்கி மடியில் உட்காரவைத்துக் கொண்டு கன்னத்தை கிள்ளி கொஞ்சினாரே அது கூட பாலியல் வன்முறையாக இருக்குமோ என்று ஆராயத் தொடங்கினாலும் ஆச்சர்யப் படுவத்ற்கில்லை.

     பொது வாழ்வில் உள்ளவர்கள் பிரபலங்களின் முகத்தை தோலுரித்துக் காட்டப் படுவதால் இனி தவறுகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதன் மூலம் எந்த பிரபலத்தின் மீதும் சேற்றை வாரி இறைத்து விடமுடியும். அதனால் பெண்கள் உண்மை எனும் பட்சத்தில் மட்டும் பகிர வேண்டும்.  ஆனால் நடைமுறை வாழ்வில் வீடுகளில் அலுவலகங்களில் இத் தொல்லைகளை அனுபவித்தவர்களுக்கு இதனால் அதிகப் பயன் ஏதுமில்லை/ இன்னும் சில நாட்களில் #MeToo மறக்கப் பட்டுவிடும்.  


செவ்வாய், 2 அக்டோபர், 2018

அதிசய வக்கீல் காந்தி

        
      
உலகத்திற்கே அகிம்சைப் போராட்டத்தை கற்றுத் தந்தவர் காந்தி
      வக்கீலாக வாழ்க்கையைத் தொடங்கிய மகாத்மாவின் வாழ்க்கை பல்வேறு திருப்பு முனைகளைக் கொண்டது. சொல்லுக்கும் செயலுக்கும் ஒரு நூலிழை வேறுபாடும் இன்றி வாழ்ந்து காட்டியவர்.
        பள்ளிப் பாடங்களில் காந்தியைப் பற்றி ஆசிரியர்கள் சரியாக கற்பித்ததாக நினைவில்லை. பெரும்பாலான தமிழாசிரியர்கள் காந்திக்கு எதிரான மனநிலையையே கொண்டிருந்ததாகவே கருதுகிறேன். அதனால் பள்ளி வயதில் காந்தி தாக்கம் ஏதும் ஏற்படுத்தவில்லை. ஆனால் பிற்காலத்தில் அவரைப் பற்றிய தகவல்களை படித்தறிந்தபோது ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சத்திய சோதனை படித்ததும் காந்தியின் மீதான உயர் எண்ணம் வலுப்பட்டது. காந்தி மீதான விமர்சனங்களும், எதிர்மறைக் கருத்துகளும் கேலிகளும் எந்த விதத்திலும் என் கருத்தில் மாற்றம் விளைவிக்கவில்லை. மகாத்மாவில் 150 வது பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
      பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியா வந்த பின் காந்தி வக்கீல் தொழிலில் ஈடுபட்டார்.  லண்டன் சென்று படிப்பதற்கு ஆதரவு கொடுத்து செலவுகளுக்கும் உதவிய காந்தியின் மூத்த சகோதரர் லட்சுமிதாஸ் காந்திக்கு, காந்தியின் மீது பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது. காந்தி வக்கீல் தொழிலில் பிரகாசித்து பொருளீட்டுவார் என்று நம்பினார். ஆனால் காந்தி முதல் வழக்கிலேயே சொதப்பினார். வாதாடுவதற்கு எழுந்து நின்றார். நாக் குழறியது . கட்சியின் கொள்கை என்ன என்று ரஜினியை பத்திரிகையாளர் கேட்ட போது தலைசுற்றியதாகக் கூறினாரே அது போல காந்திக்கும் தலை சுற்றியது. அவரால் வாதிட முடியவில்லை குறுக்கு விசாரணை செய்ய முடியாமல் தடுமாறினார். இந்த வழக்கில் வாதாட இயலாது என கூறி பெற்ற முன் பணத் தொகையை திருப்பிக் கொடுத்து விட்டார். சரிவர வக்கீல் பணியை செய்ய இயலாததற்கு வெட்கப்பட்டார் காந்தி.
   இந்த நிலையில் போர்பந்தரின் உள்ள ஒரு மிகப் பெரிய வியாபாரக் கம்பெனியினர் லட்சுமிதாஸ் காந்திக்கு ஒரு கடிதம் எழுதினர்,” எங்கள் கம்பெனி தென் ஆப்ரிக்காவிலும் வியாபாரம் செய்து வருகிறது. எங்களுக்கு பவுன் 40000 வர வேண்டி இருக்கிறது அதற்கான வழக்கு தென் ஆப்ரிக்காவில் நடந்து கொண்டிருக்கிறது . பெரிய வக்கீல்களையும் பாரிஸ்டர்களையும் அமர்த்தி இருக்கிறோம். வக்கீல்களுக்கு விஷயங்களை எடுத்துக் கூற உங்கள் தம்பியை அங்கு அனுப்பி வைக்க வேண்டும் எங்களை விட அவரால் தகவல்களை சிறப்பாக எடுத்துக் கூற முடியும் என்று நம்புகிறோம்” என்று காந்தியை அனுப்பக் கோரினர். 
     கோர்ட்டில் ஆஜராகாமல் வக்கீல்களுக்கு மட்டும் எடுத்துக் கூறும் வேலையாக இருந்தால் மட்டும் நல்லது என்று நினைத்தார்.
வேலை கடினமாக இராது என்றும் வக்கீல்களுக்கு தகவல்களை விளக்கும் நேரம் போக மற்ற நேரத்தில் எங்கள் வியாபாரத்தின் கடித விவகாரங்களை கையாண்டால் போதும் என்றும் 105 பவுன் சம்பளம் என்றும் போய் வர் கப்பலில் முதல் வகுப்புக் கட்டணம் வழங்கவும் சம்மதம் தெரிவித்தனர்.. தன் குடும்ப செலவுக்கு போதுமான தொகை தர இயலவில்லையே என்ற வருத்ததில் இருந்த காந்திக்கு இது மகிழ்ச்சியைத் தந்தது.
பாரிஸ்டராக அல்ல. அப்துல்லா கம்பெனியின் ஊழியராக நினைத்தே தென்னாப்ரிக்காவுக்கு புறப்பட்டார் காந்தி. பல நாட்கள் பயணத்திற்குப் பிறகு நேட்டால் துறைமுகத்தை அடைய அங்கேஅப்துல்லா அவரை வரவேற்றார். 
         மிகப் பெரிய வர்த்தகராக இருந்தாலும் இந்தியர்களுக்கு அங்கே உரிய மரியாதை இல்லை என்பதை தென்னாப்ரிக்காவில் கால் வைத்ததுமே காந்தி உணர்ந்தார் இது மிகப் பெரிய வருத்தத்தை தந்தது. அப்துல்லா சேத் துக்கு எழுதப் படிக்கத் தெரியாது. என்றாலும் விஷய ஞானமும் புத்திசாலித்தனமும் உடையவர் என்பதை அறிந்தார் காந்தி 
      டர்பன் நீதி மன்றத்திற்கு தலைப்பாகை அணிந்திருந்த காந்தியை அழைத்துச் சென்று அங்குள்ளவர்களுக்கு அறிமுகப் படுத்தினார் அப்துல்லா சேத். வக்கீல்களுக்கு அருகில் அமர்ந்திருந்த காந்தியையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தார் ஒரு மேஜிஸ்ட்ரேட்.. தலைப்பாகை அவர் கண்ணை உறுத்தியது. காந்தியை தலைப்பாகையை எடுக்கும்படி கோபத்துடன் கூறினார். காந்தி மறுத்து விட்டார். மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். காந்தி. காந்தியின் முதல் போராட்டம் இப்படித்தான் தொடங்கியது.
    அங்கு முஸ்லீம்கள் மட்டும் தலைப்பாகை அணிய அனுமதி உண்டு முஸ்லீம்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்லாமல் தங்களை அரேபியர்கள் என்று சொல்லிக் கொள்வதால் இந்த அனுமதி அவர்களுக்கு கிடைத்திருந்தாது
     இதனை காந்தி விடுவதாக இல்லை பத்திரிகைகளுக்கு தலைப்பாகை விவகாரம் பற்றி எழுதினார் காந்தி . நீதிமன்றத்தில் தான் தலைப்பாகை அணிந்தது நியாயம் என்று வாதாடினார் . இது சார்ந்து பத்திரிகைகள் பலத்த விவாதம் நடத்தியது. காந்தியை வேண்டாத விருந்தாளி என வர்ணித்தன . பைத்தியக்காரத்தனமான துணிச்சல் என்று சிலர் கண்டித்தனர். ஒரு சிலர் ஆதரவும் அளித்தனர். இதனால் காந்தி பிரபலம் அடையத் தொடங்கினார். முதல் வழக்கில் தோற்றாலும் முதல் போராட்டத்தில் வெற்றி பெற்றார். ஆம். தென் ஆப்ரிக்காவில் இருந்தவரை தலைப் பாகை அணிவதை கைவிடவில்லை. காந்தியின் உறுதி பாராட்டப் பட்டது. 
      வழக்கு தொடர்பாக அப்துல்லா சேத் தனக்கு பதிலாக காந்தியை பிரிட்டோரியா செல்லக் கோரினார். வழக்கு விவரங்களை சேத்தின் குமாஸ்தா விளக்கினார். வழக்கு முழுக்க கணக்கு விவகாரமாக இருந்தது. காந்திக்கு தலையும் புரிய வில்லை காலும் புரியவில்லை கணக்கு வைக்கும் முறையைஅறியாமல் இவ்வழக்கில் ஈடுபடுவது கடினம் என்று எண்ணினார். குமாஸ்தா பி. நோட்டு என்ற வார்த்தையை அடிக்கடி பயன் படுத்தினார். அது என்னவென்றே காந்திக்கு தெரிந்திருக்கவில்லை. பாரிஸ்டர் பட்டம் ஒரு ஏட்டு சுரைக்காய் என்பதை பல அனுபவங்கள் காந்திக்கு உணர்த்தின.. வெட்கத்தை விட்டு குமாஸ்தாவி\டம் கேட்டு பி. நோட் என்றால் பிராமிசரி நோட்டு என்று அறிந்தார். பின்னர் கணக்கு வைத்தல் சம்பந்தமான புத்தகம் ஒன்றைப் படித்து ஓரளவு தெளிவும் பெற்றார் காந்தி -
     பிரிட்டோரியாவுக்கு புறப்பட்டார் காந்தி இந்தப் பயணத்தில்தான் புகழ்பெற்ற திருப்புமுனை சம்பவங்கள் நடைபெற்றன இதனை ஏற்கனவே எழுதி விட்டதால் தவிர்த்து விட்டு பிரிட்டோரியாவில் நடந்ததைப் பார்ப்போம்
பிரிட்டோரியாவில்தான் வழக்கு சம்பந்தமான அறிவும் மக்கள் பணி பற்றிய தெளிவும் தனக்கு கிடைத்ததாக காந்தி கூறுகிறார். 
        அப்துல்லா சேத்தின் வழக்கு எளிய வழக்கல்ல சிக்கலான வழக்கு என்பதை காந்தி உணர்ந்தார். சிக்கலான கணக்குப் பதிவுகள். இருபுறமும் அலசப் பட வேண்டி இருந்தது. தன் கட்சிக்காரரான அப்துல்லாவின் பக்கம் நியாயம் இருந்தது. ஆனால் வழக்கு எப்போது முடியும் என்று சொல்வதற்கில்லை வழக்கு தொடர்ந்து நடந்தால் இருவருக்குமே எழுந்திருக்க முடியாத நஷ்டம் ஏற்படும் என்பதை திட்டவட்டமாக அறிந்தார் காந்தி. எதிரியான தயாப் சேத், அப்துல்லாவுக்கு உறவினரே என்பதை அறிந்த காந்தி சமரசம் செய்து கொள்ள பரிந்துரைத்தார். அரைகுறை மனதுடன் சம்மதித்தார் அப்துல்லா. காந்தி தயா சேத்தை சந்தித்து சமரசத்திற்கான அவசியத்தை வலியுறுத்தினார், இருவரும் நம்பத்தகுந்த ஒரு மத்தியஸ்தர் மூலமாக வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதன் மூலம் 37000 பவுன் தயா சேத், அப்துல்லாவுக்கு செலுத்த ஒப்புக்கொண்டார். ஆனால் அவ்வளவு தொகையை ஒரே தவணையில் செலுத்தினால் அவர் திவால் ஆகி விடுவார் என்ப்தை காந்தி உணர்ந்தார். ஆனால் தயாசேத்தோ ஓரே தவணையில் செலுத்துவதே கவுரவமாகக் கருதினார். தவணை முறையில் பெற்றுக் கொள்ள அப்துல்லாவும் சம்மதித்தார். இரு பெரும் வியாபாரிகளின் பிரச்சனை முடிவுக்கு வந்ததில் தென்னாப்ரிக்க இந்தியர்கள் மகிழ்ந்தனர்.
பிளவுபட்ட இரு கட்சிக்காரர்களை ஒன்று சேர்ப்பதே ஒரு நல்ல வக்கீலின் கடமை என்று கருதினார் காந்தி. 
  தான் வக்கீல் தொழில் நடத்திய 20 ஆண்டுகளில் நூற்றுக் கணக்கான வழக்குகளில் தனிப்பட்ட முறையில் சமரசம் செய்து வைத்ததில்தான் நான் அதிக ஆனந்தம் அடைந்தேன் என்று கூறிய காந்தி அதிசய வக்கீல்தானே!

---------------------


காந்தியைப் பற்றிய பிற பதிவுகள்


1.தற்கொலைக்கு முயன்ற காந்தி
2. காந்தியைப் பற்றி சுஜாதா
3.நீதிபதியின் கேள்வி-மிஸ்டர் காந்தி! இது மோசடி வேலை .
4.வக்கீல் தொழில் பொய்யர்களின் தொழிலா? தெரிந்த வரலாறு...
5.அகிம்சை அண்ணல் சுடப்பட்டபோது
6.சர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா?சசித...
7.கோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி
8.காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்-
9.காந்தி தேசத் தந்தை இல்லையா?
10.எழுதியது யார்? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
12. தெரிந்த வரலாறு! தெரியாத சம்பவங்கள்!

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

அந்நியன் வருவானா? தண்டனை தருவானா?

                     


                        கணினி விசைப் பலகை-மேல் 
                             என் கண்ணீர் விழுந்திடுதே 
                         கவிதை எழுதுமுன்னே  -என் 
                             கைகள் நடுங்கிடுதே

                        நெஞ்சு  கொதிக்கிறதே-பாவிகளை
                             நிழலும் வெறுக்கிறதே 
                        பஞ்சு  மனங்கள் எல்லாம்-இன்று 
                            பதறித் துடிக்கிறதே!  

                         ஆசிஃபா மலர்மொட்டை

                                 அழித்த பாவிகளே! 
                         காஷ்மீர் கோவிலிலே ஒரு 
                                கொடுரம் நிகழ்த்திவிட்டீர் 

                           மதம்தான் காரணமா -பிடித்த

                                 மதம்தான் காரணமா ?
                            மனிதம் மறந்துவிட்டீர் -சொந்த 
                                    மதத்தை அவமதித்தீர்  

                         பச்சிளங் குழந்தையினை-படு 
                                 நாசம் செய்து விட்டீர்
                          இச்சை தீர்ப்பதற்கு - நீங்கள் 
                                 இழி செயல்  செய்தீரே

                            வாரித் தூற்றுதற்கு 
                                    வார்த்தைகள்  போதவில்லை 
                           காரித் துப்புதற்கு -  வாய்
                                   எச்சில் போதவில்லை                      


                        அகிம்சை விரும்பி;நான்-இன்று
                            இம்சை விரும்பினேன் 
                        அந்நியன்  தேடுகின்றேன்- ஒரு 
                            அதிரடி நாடுகின்றேன்.

                        அப்படிஒருவன் இருந்தால்-இந்த
                            அநியாயம் கண்டபின்னே
                        இப்படி  தண்டனைகள் -இன்று
                            தந்துதான் செல்வானோ!

                        கண்ணைப்  பிடுங்கிடிவான்- அவன் 
                            காட்சி பறித்திடுவான்
                        புண்ணாய் ஆக்கிடுவன் -அவனை 
                            பொத்தல் செய்து வைப்பான்

                        காமக்  கொடுஞ்செயல்கள் - பல
                            புரிந்த   பாவிகளைப்
                        சாமப் பொழுதுக்குள் --கொடும்
                            சாவறிய வைத்திடுவான்.

                        பாம்புகள் நடுவேதான் -அவனை 
                             படுக்கவே வைத்திடுவான் 
                        சாம்பல் ஆகும்வரை  -அவனை
                            எரித்துப் பொசுக்கிடுவான் 

                       நாக்கைப் பிடுங்கித்தான் -அவனை 
                            நடுங்க வைத்திருப்பான் 
                       காக்கையை அழைத்து -அதை
                            வீசி எறிந்திருப்பான்
  
                       உடலில்  ஆடையுருவி-அவனை 
                            உறுமீன் இரையாக 
                       கடலில் வீசிடுவான் -அவன்
                            கால்களை கட்டிவைத்து
  
                       காலில் செருப்பகற்றி -அவனை
                           கடும்பகல் வெயிலிலே
                       பாலையின் நடுவேதான்-தனியாய் 
                           பரிதவிக்க விட்டிடுவான் 

                       சுட்ட நீரைத்தான் -எடுத்து 
                           முகத்தில் வீசிடுவான் 
                       கட்டி நெருப்பெடுத்து-அவன் 
                           கையில் தைத்திடுவான்  

                       உறுப்பை  அறுத்திடுவான் -அவன் 
                            உடலை சிதைத்திடுவான்
                       வெறுப்பை  காட்டிடுவான் -இன்னும்
                            வேறுபல  செய்திடுவான்

 
                   அந்நியா  வருவாயா?  -கடுந்

                              தண்டனை தருவாயா  
                       புண்ணியம் உனக்கே தான்- உடனே  
                                புறப்பட்டு  வருவாயே!   

                    

  

ஞாயிறு, 25 மார்ச், 2018

சீதை ராமனை மன்னித்தாளா?

 

    எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் தன் வலைப் பக்கத்திற்காக    ஒரு சீதை ராமனை மன்னித்தாளா?  தலைப்பில்  கதை எழுதக் கேட்டிருந்தார். எழுதி அனுப்பினேன். அக்கதை அவர் வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்டது. ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.   இன்று ஸ்ரீராம நவமி என்பதாலும் கூடுதலாக ஒரு பதிவாக இருக்கட்டும்  என்ற வகையிலும் என் வலைப் பக்கத்தில்  வெளியிடுகிறேன். ஸ்ரீராம் மன்னிப்பாராக!


சீதை ராமனை மன்னித்தாளா ?

      பட்டாபிஷேகம் முடிந்தது.அயோத்தி ஆனந்தத்தில் மூழ்கிக் திளைத்துக் கொண்டிருந்தது. .முடிசூட்டிகொண்ட ஸ்ரீராமபிரானுக்கு  பக்கத்தில்  சீதா பிராட்டியும்  அயோத்தி அரியணையில்  அமர்ந்த காட்சியைக் கண்ட அயோத்தி மக்கள் பரவச நிலையில் கிடந்தனர்  குறையிலா அழகு கொண்ட இருவரும் எவ்வளவு பொருத்தம் என்று ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர். தேவர்களைப் போல கண்ணை இமைக்காத சக்தி இருக்கக் கூடாதா என்று ஏங்கினர்..'ஜெய் ஸ்ரீராம்' என்ற கோஷம் விண்ணை நிறைத்தது.  சீதாப்பிராட்டியின் சௌந்தர  ரூபம் விவாகத்தின் போது இருந்ததை விடப் பல மடங்கு அதிகரித்துக் காணப்பட்டது. அட! அந்த ராவணன் மயங்கியதில் தவறு ஏதுமில்லை என்றே பேசிக் கொண்டனர்.
   ரிஷிகள், ஆன்றோர் சான்றோர் சக தேசத்து மன்னர்கள்  வந்து  வாழ்த்திக் கொண்டிருந்தனர்.  அனைவரும்  மனமின்றிக்  கலைந்து சென்றனர் 
       அடுத்த நாள்  காலை அரண்மனை  நந்தவனத்தில்   வாயு மைந்தன்  மண்டியிட்டுக் கண்மூடி  நேற்றைய பட்டாபிஷேகக் காட்சியை  கண்ணாரக் கண்டு கொண்டிருந்தான். அவனது திருவாய் ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தது .எந்த ருசிரா இராமா ஏமி ருசிரா ராமா என்று மனம் ஸ்லாகித்துக் கொண்டிருந்தது 

"ஆஞ்ச நேயா!" குரல் கேட்டு கண் திறந்தான் ஹனுமான்
எதிரே லட்சுமணன் நின்று கொண்டிருந்தான்.

" தாங்களா  என்னை அழைத்தீர்கள்?. தங்கள் திருமுகத்தில் ஏதோ குழப்பம் உள்ளதாக தெரிகிறதே. "

"ஆம் மாருதி. மனம் சஞ்சலமாக உள்ளது. என் சஞ்சலம் நீக்க இருவரால் மட்டுமே முடியும். ஒருவர்  சீதாப் பிராட்டியார். இன்னொருவர் நீ  சீதம்மையிடம் கேட்க என் தன்மானம் இடம் தரவில்லை .அப்படிக் கேட்பது எனது அண்ணாவுக்கு அவப் பெயராகி விடுமோ என்றும் அஞ்சினேன். அதனால் சொல்லின் செல்வனே! உன்னிடம் வந்தேன். "

    "என் நெஞ்சில் குடியிருக்கும் எம்பெருமானின் சாயலை ஒத்தவரே!தங்களின் ஐயத்தை நான் எப்படித் தீர்க்க முடியும். நான் சாதாரண ராமதாசன் தானே! என்னால் செய்ய முடிந்தது ஏதேனும் இருப்பின் ஆணையிட்டு சொல்லுங்கள் என் சிரம் கொடுத்தேனும் செய்ய சித்தமாய் இருக்கிறேன் "

       நேற்று பட்டாபிஷேகம் முடிந்ததும் நான்  மாறுவேடமிட்டு நகர்வலம் வந்தேன்.எங்கு நோக்கினும் மக்களின் பேச்சு சீதா,ராமரைப் பற்றியே இருந்தது.ராமபிரானின் மாண்பை  விட  என் அன்னைக்கு நிகரான  சீதாப் பிராட்டியின் பெருமை  பற்றியே இரவு  முழுவதும் பேசித்தீர்த்தனர்  அப்போது  ஒரு  பெண்மணி சொன்னதுதான் என் நெஞ்சை உறுத்திக் கொண்டிருக்கிறது...."
     சற்று நிறுத்திய  லட்சுமணனை உற்று நோக்கிய ஆஞ்சநேயன், குறுக்கீடு ஏதும்  செய்யவில்லை.
       
    லட்சுமணன் தொடர்ந்தான்  "சொக்கத் தங்கமாகிய ஜானகியை தீக்குளிக்க வைத்து விட்டாரே தசரத மைந்தன்..எப்படிக் கோபம் கொள்ளாமல் சீதை ராமனை மன்னித்தாள் என்றார். ராமனின் செயல் அவ்வளவு எளிதில் மன்னிக்கக் கூடியதா? என்று அந்தப் பெண்மணி கேட்ட கேள்விதான் என் நெஞ்சை உறுத்திக் கொண்டிருக்கிறது.

      யுத்தம் முடிந்து இராவணன் வீழ்ந்தான்.     அப்போது நீ, நான் எல்லோரும் அருகில் தானே  இருந்தோம். அசோக வனத்தில்  இருந்து  ஆவலோடு வந்த சீதா தேவியின் முகத்தைக் கூடப்பாராமல்   ராமன் சிந்திய  மொழிகள் எனக்கே கோபத்தை ஏற்படுத்தியது.  தன்னை நிருபிக்க என்னை அழைத்து விறகு கொண்டு வந்து தீமூட்ட ஆணையிட்டார் பிராட்டி. ஆனால்  அண்ணனோ கிஞ்சித்தும்  கருணை காட்டவில்லை. நான் மூட்டிய தீ அந்தக்  பதிவிரதையை ஒன்றும் செய்யவில்லை. ராமன் சீதையை ஏற்றுக் கொண்டு சொன்னது உனக்கு  இருக்கிறதா ?"
"நன்றாக நினைவுக்கிறது ஐயனே! நான் பரிட்சை வைத்தது எனக்காக அல்ல உன் புனிதத்தை உலகறியச் செய்யவே " என்றாரே கோதண்டராமன். சீதாப் பிராட்டியும் மகிழ்ச்சியோடு  ஒன்று  சேர்ந்ததை இப்பூவுலகமே அறியுமே!"

    "ஆம்!. ஆஞ்சநேயா! நானும் அண்ணன் மீது கொண்ட கோபத்தை மறந்து சமாதானம் ஆனேன்.ஆனால்  இப்போது அயோத்திப் பெண்மணி ஒருத்தி பேசியதைக் கேட்டதும் எனக்கு ஐயம் வந்துவிட்டது. பேரமைதி தவழும் பிரகாசமான  சீதாப் பிராட்டியின் முகம் அகத்தில் உள்ள கோபத்தை வெளிக்காட்டாவிட்டாலும் உள்ளுக்குள் இருக்கும் என்றே அஞ்சுகிறேன். உண்மையில் என்அண்ணன்  ராமனை சீதா தேவியார் மன்னித்திருப்பாரா? நீதான்கூற வேண்டும்"
   .
  "ஸ்ரீ ராமச்சந்திர பிரபுவின் அன்பிற்குரிய சகோதரரே! தாங்கள் அனைத்தும் உணர்ந்தவர். தங்களுக்கு எடுத்து சொல்லக் கூடிய அளவுக்கு என்னிடம் ஞானம் ஏதுமில்லை. ராமநாமம் தவிர வேறேதும் அறியாத  மூடன் நான். என்றாலும் சொல்கிறேன்.

   "இராவணன் கடத்திச் சென்ற சீதாப்பிராட்டியைத் தேடி இலங்கை சென்றேன்.அழகான அசோக வனத்தில் அவரைக் கண்டேன்.
. நானே தங்களை ராமனிடம் சேர்த்து விடுகிறேன். என் தோளில் அமருங்கள் என்றேன். அது என் ராமனுக்குப் பெருமை சேர்க்காது என்றார்
 அப்போது இராவணன் சொன்னதை என்னிடம் சொன்னார் ஜானகிதேவி 

    ."மாருதி! அந்த பாதகன் இராவணன் என்ன சொன்னான் தெரியுமா. அவன் மிகவும் நல்லவனாம். அவன் நல்லவனாக இருப்பதால்தால் என் சம்மதம் கேட்டு என்னை உரிமையாக்கிக் கொள்ள தன் நிலை இறங்கி கெஞ்சிக் கொண்டிருக்கிறானாம். ராமன் வந்து உன்னை மீட்டுச் செல்ல வாய்ப்பே இல்லை . என்னைக் கொன்ற பிறகே அது நடக்கும். அகில உலகத்தில் என்னை வெற்றி கொள்ள யாராலும் இயலாது என்று உனக்குத் தெரியாதா .மூடப் பெண்ணே! அப்படியே அவன் என்னை வென்று உன்னை மீட்டாலும் உன்னை மனமார ஏற்றுக் கொள்வான் என்றா நினைக்கிறாய்? .அன்னியர் தேசத்தில் கண்காணாது இருந்த உன்னை ஏற்றுக் கொள்ளும் உயர் குணம் எந்த மானிடனுக்கும்  இருக்காது. நீ வேண்டுமானால் பார்!." என்று சொன்னதை என்னிடம் சொன்னார்.
 ஆனால்  ஜானகியைக் கண்ட சந்தோஷத்தில் இது எனக்குப் பெரிய விஷயமாகத் தோன்றவில்லை.ஸ்ரீதேவியின் அம்சமான சீதாப் பிராட்டியின் கணையாழியை ஸ்ரீ ராமனிடம் கொண்டு சேர்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்த மகிழ்ச்சியில்   இச் செய்தியை நான் ஸ்ரீ ராமபிரானிடம் தெரிவிக்கவில்லை .

      யுத்தம்  முடிந்து ராமச்சந்திர மூர்த்தி   சீதையை சந்தித்தபோது நெருப்பு வாத்தைகளை வீச,   தாங்களோ தீ மூட்டினீர் . அப்போது சீதாப் பிராட்டியார் என்னை பார்த்தார் . அந்தப் பார்வை என்னைக் கலங்க வைத்தது. ராவணன் சொன்னதை உன் இஷ்ட தெய்வம்   உண்மையாக்கி விட்டாரே! இதை நீ சொல்லவில்லையா     என்பது போல் இருந்தது. என் நாயகனுக்கு நான் எப்படி அறிவுரை சொல்ல முடியும். ஆனால் தீங்கு ஏதும் விளையாது என்று மட்டும் நம்பினேன். அப்படியே நடந்தது.ஆயினும்  இப்போது தங்களுக்கு  ஏற்பட்ட சந்தேகம் எனக்கு அப்போதே ஏற்பட்டது 

   ஒரு சந்தர்ப்பத்தில் அன்னை சீதையிடம் கோரினேன் . " தாயே! தங்களின் பொருள் பொதிந்த பார்வை என்னை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. ஸ்ரீராம பிரான் தங்களை சோதனைக்குள்ளாக்கியதை நானும் விரும்பவில்லை. மகா பதிவிரதையான தங்களின் கோபம் என் ஸ்ரீ ராமனை பாதித்துவிடக் கூடாது எனவே தாங்கள் என் இதய ராமனை மன்னித்தீரா என்பதை தெளிவிக்க வேண்டுகிறேன்" .

  அப்போது அவர் கூறினார்  "எல்லோரையும் மன்னிக்கும் தயாளகுணம் கொண்ட அவதார புருஷன் அல்லவா என் ஸ்ரீராமன். தன்னை வனவாசம் செய்யும் சூழ்நிலையை உருவக்கிய தசரதனை  மன்னித்தவர் அவர். பரதனுக்கு முடி சூட்ட விரும்பி ராமனைக்காட்டுக்கு அனுப்ப தசரதனை நிர்பந்தித்தத கைகேயியும் மன்னிக்கத் தயங்கவில்லை என் ராமன். அவளுக்கு துர்போதனை செய்த மந்தரையையும் சங்கடமின்றி  க்ஷமித்தவன் கோசல ராமன். அகலிகைக்கு  சாப விமோசனம்  தந்தவன் என் ராமன் . அவரது  தயாள குணமும் கருணையும் அன்பும்  பூலோகப் பிரசித்தி பெற்றவைதானே! எனக்கு பாதுப்பாக இருக்க வேண்டும்; எந்தக் காரணத்தை கொண்டு இவ்விடம் விட்டு செல்லலாகாது   என்று ஆணையை, என் நிந்தனையை பொறுக்காது வேறு வழியின்றி மீறி    என்னைத்   தனியாக விட்டுச் சென்ற லட்சுமணனையும் ராமன் மன்னித்தார்.  ஆனால் என் பிராண நாதர்  மன்னிக்கப்படும்  சூழ்நிலை ஏற்கனவே ஒரு முறை  உருவாகி விட்டதே.!

"பிராட்டியே என்ன சொல்கிறீர்கள்?

  "மாவீரன் வாலியை மறைந்து  நின்று கொன்றார் என்று நீ தானே சொன்னாய்.  யுத்த தர்மத்திற்கு எதிராக ராமன் நடந்து கொண்டதால் வாலியின் மன்னிப்பு ஸ்ரீ ராமனுக்கு கிடைத்திருக்குமா என்று எனக்குத் தெரியாது. இப்பொது என் கோபமும் வருத்தம் காரணமாக  இன்னொரு  பாவமும்   என்   ராமனை சூழ விடுவேனா? அது மட்டுமல்ல பகவான்
 ஸ்ரீராமனையே மன்னிக்கும் பேறு   கிட்டியது என்  பாக்கியம் அல்லவா? வேறு யாருக்கு இது வாய்க்கும்." என்று சீதாப் பிராட்டி சொன்னதை லட்சுமணனுக்கு கூறிய ஹனுமான் 

    "ஐயனே! ஐயம் வேண்டாம்! மேற்சொன்ன காரணங்களால்தால் "சீதை ராமனை மன்னித்தாள்"  என அமைதி கொள்வீர்!. 

  லட்சுமணன் சஞ்சலம் நீங்கி."அஞ்சனை மைந்தனே! நற்சொல் கூறினாய். என் தாய்க்கு நிகரான சீதா தேவியின் கோபம் அகத்துள் இருந்துவிடக் கூடாது என்றே அஞ்சினேன்.இப்போது தெளிந்தேன். ஜானகி தேவியாரின் நெஞ்சில் கோபம் இல்லை.  இனி ஸ்ரீராமனுக்கு அபவாதம் ஏற்படாது என நிம்மதி  கொள்வேன் " என்று உருகினான் 

"கருணா மூர்த்தியை தமையனாகக் கொண்டவனே! சீதாதேவி தாயார் ராமனை மன்னித்து விட்டார். ஆனால் ..."

"என்ன ஆனால்...." பதறினான் லட்சுமணன் 

"மன்னிப்பு கிடைக்க வேண்டியவர் இன்னொருவரும் உண்டு.""
"யார் அது? உனது சொல்லின் அர்த்தம் விளங்க வில்லையே. யார் அந்த அபாக்கிய சாலி? யார்,  யாரால் மன்னிக்கப் படவேண்டும் "

"ஸ்ரீராமன் தண்டகாருண்யம்  செல்லும்போது தாங்களும்  சீதா தேவியும் பிடிவாதமாகக் கூட சென்றீர்கள்.அதற்கு தாங்கள் அனுமதி பெற்றீர்களா"

"ஏன் இந்த சந்தேகம்? என் தந்தையிடமும்  ஸ்ரீராமனிடமும் அனுமதி பெற்றுத்தானே சென்றேன்!

"யாரிடம் அனுமதி பெற வேண்டுமோ அவரிடம் பெற்றாயா? அவர் எண்ணத்தை அறிந்தாயா? நீங்கள் தண்டகாருண்யம் சென்றீர்கள் ஆனால் 14 ஆண்டுகாலம்  தண்டனை இன்னொருவருக்கு அளித்ததை உணர்ந்தீர்களா? அதற்கு தங்களுக்கு  உரிமை இருக்கிறதா?

"மாருதி நீ என்ன சொல்கிறாய்....."
"நான் சொல்ல என்ன இருக்கிறது. தங்கள்  சகதர்மிணி ஊர்மிளா தேவியின் மன்னிப்பு உங்களுக்கு  கிடைத்ததா என்று எண்ணிப் பார்த்தீர்களா?  தெரிந்து வருவீர் ஐயனே!"
 என்று சொல்லி விட்டு மீண்டும் கண்ணை மூடி ராமநாமம்  ஜபிக்கத் தொடங்க 

லட்சுமணன் திகைத்து நின்றான்.


********************************************************************************




ஞாயிறு, 18 மார்ச், 2018

வந்துட்டேன்னு சொல்லு! ஒரு புதிரோட வந்துட்டேன்னு சொல்லு!


 ஹலோ! என்னை ஞாபகம் இருக்கா  நீ------------------------------ ண்ட இடைவெளிக்குப்  பிறகு உங்களை சந்திக்க வந்துள்ளேன்.

அட நம்ம அரசியல்வாதிகள்தான்  உங்கள குழப்பணுமா என்ன?  நானும்  ஒரு புதிர் போட்டு உங்களை குழப்பலாம்னு நினைக்கிறேன்.

        ஒரு 20 கி.மீ  சாலையில ஒரு முனையில் காதலனும்  இன்னொரு முனையில் காதலியும் ஒருவரை ஒருவர் சந்திக்க  சைக்கிள்ள ஒரே நேரத்தில கிளம்பறாங்க! ரெண்டு பெரும்  சரியா  10 கிமீ வேகத்திலதான்  சைக்கிள் ஒட்டாறாங்க.  காதலி வளக்கிற புறாவும் சைக்கிள் ஹான்டில் பார்ல கூடவே கிளம்ப ரெடியா இருக்கு. ரெடி ஸ்டார்ட்டுன்னு ரெண்டு பேரும் அவங்க அவங்க இருந்த இடத்தில இருந்து கிளம்ப புறாவால சும்மா ஒக்கார முடியல. அது 15  கி.மீ வேகத்தில பறக்க ஆரம்பிச்சு வேகமா போய் காதலன் சைக்கிள்ள ஒக்காந்துட்டு உடனே திரும்பி அதே வேகத்தில் காதலி சைக்கிள தொட்டுட்டு திரும்பவும் காதலனை நோக்கி அதே வேகத்தில பறக்குது,. இப்படியே ரெண்டு பேரும் மீட் பண்றவரை பறந்துகிட்டே இருக்கு புறா . ஒருவழியா மீட் பண்ணிடறாங்க .  புறா அப்பாடான்னு பெருமூச்சு விடுது. மீட் பண்ணதும்  அவங்க ரெண்டும் பேரும் பேசிக்கிட்டிருக்க  சும்மா இருக்க போரடிக்கவே  நாம எவ்வளோ தூரம் பறந்திருப்போம்னு புறா கணக்கு போட்டு பாக்குது.அதனால் கண்டு பிடிக்க  முடியல நீங்கள் சொல்லுங்களேன் புறா மொத்தமா எவ்வளவு தூரம் பறந்திருக்கும்?



(கணக்கு புரியம்படி இல்லன்னா மட்டும் கேக்கணும்.மத்த குறுக்கு கேள்வில்லாம் கேக்கப் படாது )

இந்த கணக்கதான் ஒரு கணித மேதை கிட்ட ஒருத்தர் சொன்னாராம் ?
அந்தக் கணித மேதை  யாரு அவர் சரியா விடை  சொன்னாரான்னு அடுத்த பதிவில பாக்கலாம் 

விடை அறிய கிளிக் செய்க 

புதிருக்கான விடை

திங்கள், 14 ஆகஸ்ட், 2017

காந்தி செய்தது சரியா? பாவம் கஸ்துரி பாய்

  
        காந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு இது ஒரு பாடம்
     காந்தி இரண்டாவது முறையும் தென்னாப்பரிக்கா சென்று அங்கு இந்தியர் நலனுக்காக போராடினார் எனபது அனைவருக்கும் தெரிந்ததே. பின்னர் இந்தியா திரும்ப விரும்பிய காந்தியை அவ்வளவு எளிதில் இந்தியா அனுப்ப விரும்பவில்லை அங்குள்ள மக்கள். காந்தி உறுதியாக இருக்கவே "நாங்கள் விரும்பினால் மீண்டும் நீங்கள் இங்கே வரவேணும் என்று அன்புக் கட்டளையுடன் இந்தியா திரும்ப சம்மதித்தனர். காந்தி தாய்நாட்டுக்கு புறப்பட்டபோது அவருக்கு ஏராளமான வெகுமதிகளை அவருக்கு அளித்தனர் தென்னாப்பரிக்க இந்தியர். அதை காந்தி விவரிப்பில் காண்போம்
     "1899-இல் நான் இந்தியாவுக்குப் புறப்பட்டபோதும் இத்தகைய வெகுமதிகளை எனக்குக் கொடுத்தனர். ஆனால், இத் தடவையிலோ, பிரிவுபசாரம் அளவு கடந்ததாக இருந்தது. வெள்ளி, தங்கச்சாமான்களும் அன்பளிப்பில் அடங்கியிருந்ததோடு, விலை உயர்ந்த வைரச் சாமான்களும் இருந்தன.
        இந்த வெகுமதிகளையெல்லாம் ஏற்றுக்கொள்ள எனக்கு என்ன உரிமை இருக்கிறது? இவைகளையெல்லாம் வாங்கிக் கொண்ட பிறகு,ஊதியம் பெறாமல் சமூகத்திற்குச் சேவை செய்து வந்திருப்பதாக நான் எண்ணிக் கொள்ளுவது எப்படி?என் கட்சிக்காரர்கள் கொடுத்த சில வெகுமதிகளைத் தவிர மற்றவை யாவும், சமூகத்திற்கு நான் செய்த சேவைக்கு என்றே முற்றும் எனக்கு அளிக்கப்பட்டவைகள் ஆகும். என் கட்சிக் காரர்களும் பொது வேலையில் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, கட்சிக்காரர்கள் வேறு, பொது ஊழியர்கள் வேறு என்று பாகுபாடு செய்துகொள்ளுவதற்கும் இல்லை.

கிடைத்த வெகுமதிகளில் ஒன்று தங்கச் சங்கிலி. அது 52 பவுன் பெறு மானம் உள்ளது. என் மனைவிக்கு என்று அதை அளித்தனர். ஆனால், அதுவும்கூட என்னுடைய பொதுச்சேவைக்கு அளிக்கப்பட்ட வெகுமதியே. ஆகையால் மற்றவைகளிலிருந்து அதை நான் தனியாக பிரித்துவிட முடியாது.

   ஒரு நாள் மாலை, இந்த வெகுமதிகளில் பெரும் பகுதியை எனக்கு அளித்தார்கள். அன்று இரவெல்லாம் என்னால் தூங்கவே முடியவில்லை. என் அறையில் அங்கும் இங்கும் இரவெல்லாம் உலாவினேன்; தீவிரமாகச் சிந்தித்தேன்.ஆனால், ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. ஆயிரக்கணக்கில் மதிப்புள்ள இந்த வெகுமதிகளை வேண்டாம் என்று துறந்து விடுவது எனக்குக் கஷ்டமாக இருந்தது. அவைகளை வைத்துக்கொள்ளுவதோ இன்னும்அதிகக் கஷ்டமாக இருந்தது அவைகளை நான் வைத்துக் கொள்கிறேன் என்றாலும் என் குழந்தைகளின் கருத்து என்ன? என் மனைவியின் விஷயம் என்ன? சேவைக்கு வேண்டிய வாழ்க்கை நடத்த அவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். சேவை ஒன்றே அதற்குரிய சன்மானம் என்றும் அவர்களுக்குச் சொல்லி வந்திருக்கிறேன்.

   வீட்டில் என்னிடம் விலை உயர்ந்த நகை எதுவும் இல்லை. எங்கள் வாழ்க்கையையே விரைவாக எளிமை ஆக்கிக்கொண்டு வந்திருக்கிறோம். அப்படியிருக்கத் தங்கக் கடிகாரங்களை நாங்கள் எவ்வாறு வைத்துக் கொள்ள சங்கிலிகளையும் வைரமோதிரங்களையும் நாங்கள் எவ்வாறு அணிந்துகொள்ள முடியும்? மக்கள், நகைகளின் மீது இருக்கும் ஆசையை விட்டுவிட வேண்டும் என்று பல தடவை நான் மக்களுக்கு உபதேசம் செய்தும் இருக்கிறேன். அப்படியிருக்க என்னிடம் வந்திருக்கும் நகைகளை நான் என்ன செய்வது?
இந்த வெகுமதிகளையெல்லாம் நான் வைத்துக்கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். இவற்றையெல்லாம்ச மூகத்திற்கே சொந்த மானதாக்கி விட வேண்டும். இதற்கு என் மனைவியைச் சம்மதிக்கச் செய்வதில் கொஞ்சம் சிரமம் இருக்கும் என்பதை அறிவேன். குழந்தை களைப் பொறுத்த வரையில் எந்தவிதமான கஷ்டமும் இராது என்பதும் எனக்குத் தெரியும். ஆகவே, அவர்களையே என் வக்கீல்கள் ஆக்கிக் கொண்டு விடுவது என்ற முடிவுக்கு வந்தேன்.
என் யோசனைகளைக் குழந்தைகள் உடனே ஏற்றுக் கொண்டு விட்டனர். “இந்த விலையுயர்ந்த வெகுமதிகள் நமக்குத் தேவை யில்லை. ஆகையால், அவற்றைச் சமூகத்திற்குத் திருப்பிக் கொடுத்து விடவேண்டியதே சரியானது.அவை நமக்கு எப்பொழுதாவது தேவைப்பட்டால் நாம் அவற்றை எளிதில் விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்” என்று குழந்தைகள் கூறினர்.
   நான் ஆனந்தம் அடைந்தேன். “அப்படியானால், உங்கள் தாயாரிடம் இதைக் குறித்து எடுத்துக் கூறி, அவளும் இதற்குச் சம்மதிக்கச் செய்வீர்கள் அல்லவா?” என்று கேட்டேன். “நிச்சயமாகச் செய்வோம். அது எங்கள் வேலை. அம்மாவுக்கு நகைகள் வேண்டியதில்லை. அவைகளை எங்களுக்காக வைத்திருக்க வேண்டும் என்றே அவர் விரும்புவார் அவை எங்களுக்கு தேவை இல்லை என்று நாங்கள் கூறும்போது, அவற்றைக் கொடுத்துவிட அம்மா ஏன் சம்மதிக்க மாட்டார்? என்றும் கூறினார்கள்.
      பேச்சளவில் இது எளிதாகத்தான் இருந்தது. ஆனால், காரியத்திலோ அது அதிகக் கஷ்டமாக இருந்தது. என் மனைவி கூறியதாவது: “இவையெல்லாம் உங்களுக்குத் தேவைப் படாமல் இருக்கலாம் . உங்கள் குழந்தைகளுக்கும் அவை வேண்டாம் என்று இருக்கலாம். அவர்களை நீங்கள் தட்டிக் கொடுத்தால், உங்கள் இஷ்டப்படியெல்லாம் அவர்கள் கூத்தாடுவார்கள்.நகைகளை நான் போட்டுக் கொள்வதை நீங்கள் அனுமதிக்காமலிருப்பதை நான் புரிந்து கொள்ளுகிறேன். ஆனால், என் மருமகப்பெண்கள் வரும்போது அவர்கள் விஷயம் என்ன?  நிச்சயம் அவர்களுக்கு நகைகள்வேண்டியிருக்கும் நாளை நம் நிலை எப்படி இருக்கும் என்பது யாருக்குத் தெரியும்? அதிக அன்போடு அளிக்கப்பட்ட இந்த வெகுமதிகளைத் திருப்பிக் கொடுத்துவிட நான் ஒரு போதும் சம்மதிக்கவே மாட்டேன்.”

   இவ்வாறுஅவள், வாதங்களை சண்டமாருதமாகப் பொழிந்தாள். முடிவில் கண்ணீர் வடித்தும் அவற்றைப் பலப்படுத்தினாள். ஆனால், குழந்தைகளோ உறுதியுடன் இருந்தார்கள். நானும் அசையவில்லை. நான் சாந்தமாகப் பின்வருமாறு கூறினேன்: “குழந்தைகளுக்கு இனிமேல்தான் விவாகம் நடக்க வேண்டும். அவர்கள் குழந்தைகளாக இருக்கும் போதே விவாகம் செய்து வைத்துவிட நாம் விரும்பவில்லை. அவர்கள் வளர்ந்ததும், அவர்கள் காரியங்களை அவர்களே முடித்துக்கொள்ளுவார்கள். மேலும், நகைப் பித்துப் பிடித்த பெண்களை நம் குமாரர்களுக்கு நாம் மணம் செய்து வைக்கப் போவதில்லை என்பதும் நிச்சயம். அவர்களுக்கு நகை போட வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் அவற்றை வாங்கிக் கொடுக்க நான் இருக்கிறேன். அப்பொழுது நீ என்னைக் கேள்.”

    அதற்கு அவள், “உங்களைக் கேட்பதா?இவ்வளவு நாள் பழகியும் உங்களை எனக்குத் தெரியாதா? என் நகைகளைப் பிடுங்கிக் கொண்டீர்கள். அவற்றை நான் போட்டுக்கொண்டு நிம்மதியாக இருக்கவும் நீங்கள் என்னை விடவில்லை. இப்படிப்பட்ட நீங்கள் மருமகள்களுக்கு நகை வேறு செய்து போட்டுவிடப் போகிறீர்களாக்கும்! முடியாது. நகைகளை நான் திருப்பிக் கொடுக்கப்போவதில்லை. மேலும், என்னுடைய கழுத்துச் சரத்தைக் கேட்க, உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்றாள்.

“ஆனால், அந்தக் கழுத்துச் சரத்தை, உனக்குக் கொடுத்தது என் சேவைக்காகவா?, உன் சேவைக்காகவா?” என்று நான் கேட்டேன்.

  “உங்கள் சேவைக்காகவே என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால், நீங்கள் செய்த சேவை, நான் செய்த சேவையே அல்லவா? உங்களுக்காக இரவு பகல் நான் பாடுபட்டு உழைத்திருக்கிறேன். அதெல்லாம் சேவையல்லவா? போகிறவர்கள் வருகிறவர்களையெல்லாம் வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களுக்கெல்லாம் உழைத்து, நான் கண்ணீர் வடிக்கச்செய்தீர்கள். அவர்களுக்கெல்லாம் அடிமையாக உழைத்தேனே!” என்றாள், என் மனைவி.
சொல்லம்புகள் என் உள்ளத்தில் தைத்தன. அவற்றுள் சில ஆழப் பதிந்தன. ஆனாலும், நகைகளைத் திருப்பிக் கொடுத்துவிடுவது என்று நான் உறுதி கொண்டுவிட்டேன். இதற்கு அவளும் முடிவாகச் சம்மதித்துவிடும்படி செய்வதில் எப்படியோ வெற்றி பெற்றேன். 1896, 1901-ஆம் ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட அன்பளிப்புகள் யாவும் திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டன. ஒரு தருமகர்த்தாப் பத்திரம் தயாரித்தேன். அந்த வெகுமதிகளையெல்லாம் ஒரு பாங்கில் ஒப்படைத்தேன். என் விருப்பப்படியோ, தரும கர்த்தாக்களின் விருப்பபடியோ, இந் நிதியைச் சமூகத்தின் சேவைக்குப் பயன்படுத்துவது என்று ஏற்பாடு செய்தேன்.

    பொதுஜன காரியங்களுக்கு நிதி எனக்குத் தேவைப்பட்டு, ‘இந்தத் தரும நிதியிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டியதே’ என்று நான் எண்ணிய போதெல்லாம், தேவைக்கு வேண்டிய பணத்தை வெளியிலேயே வசூல் செய்துகொள்ள என்னால் முடிந்திருக்கிறது. ஆகையால், அந்த நிதி அப்படியே செலவாகாமல் இருந்தது. அந்த நிதி இன்னும் இருந்து வருகிறது. தேவைப்படும் போது செலவிட்டு வருகிறார்கள். ஒழுங்காக அந்நிதி சேர்ந்து கொண்டும் வருகிறது.
    இவ்வாறு இந்நிதியை உண்டாக்கியதற்காக நான் என்றும் வருந்தியதே இல்லை. சில ஆண்டுகளானதும், அப்படிச் செய்தது தான் புத்திசாலித்தனமானது என்பதை என் மனைவியும் அறிந்து கொண்டாள். எத்தனையோ ஆசைகளிலிருந்து அது எங்களைப் பாதுகாத்தது.
பொதுஜன சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள், விலை உயர்ந்த
வெகுமதிகளை   ஏற்றுக்கொள்ளவே கூடாது என்பது என்னுடைய
திடமான அபிப்பிராயம்.


 ***********************************************************

இதைப் படித்ததும் கீழக்கண்ட எண்ணங்கள் என் மனதில் தோன்றின

1.இப்படிக் கூட  ஒரு மனிதர் இருப்பாரா . இவைதான் மனிதரை மகாத்மா ஆக்கியிருக்கிறது 

2.மகாத்மாக்களுக்கு மனைவியாய் இருப்பதைப் போல துன்பம்  வேறில்லை 

3.மாமனிதர்கள் அவர்கள் குடும்பத்திருக்கு உவப்பானவர்களாக இருப்பதில்லை 

4. சலுகைகளோடு  வெகு மானங்களையும்   பொது சொத்தையும் குற்ற உணர்வின்றி அனுபவித்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் அதிகாரிகளை  இதனை ஒரு முறையாவது படிக்க செய்ய  வேண்டும்

--------------------------------------------------------------

தொடர்புடைய பதிவுகள்



1. காந்தியைப் பற்றி சுஜாதா
2.நீதிபதியின் கேள்வி-மிஸ்டர் காந்தி! இது மோசடி வேலை .
3.வக்கீல் தொழில் பொய்யர்களின் தொழிலா? தெரிந்த வரலாறு...
2.அகிம்சை அண்ணல் சுடப்பட்டபோது
3.சர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா?சசித...
4.கோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி
5.காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்-
6 .காந்தி தேசத் தந்தை இல்லையா?

7.எழுதியது யார்? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
8. தெரிந்த வரலாறு! தெரியாத சம்பவங்கள்!

ஞாயிறு, 18 ஜூன், 2017

தாயிடம் தோற்கும் தந்தைகள்


       பல்வேறு சூழல்களால்  பதிவு எழுத இயலவில்லை.   இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து  மீண்டும் வெளியிட  என்வலைப் பக்கம் வந்தபோது எனக்கு சிறு ஆச்சர்யம். பார்வைகளின் எண்ணிக்கை  7,07,571 ஐ  கடந்திருந்தது . அதிகம் எழுதாத நிலையிலும் மாதத்திற்கு  ஏறக்குறைய 8.000 பக்கப் பார்வைகள் கிடைத்தால் ஆச்சர்யப் படாமல் எப்படி இருக்க முடியும். 
ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. இனி அவ்வப்போது சந்திப்போம்.


--------------------------

   தாயை மட்டுமே போற்றி வந்த சமூகம்  சமீப காலமாக  தந்தையைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்கி இருக்கிறது. நிறைய கட்டுரைகள் கதைகள் திரைப்படங்கள் தந்தையின்  பெருமையைப்  பேசுகின்றன. முரடர்களாக கருதப்பட்ட அப்பாக்கள் இன்று இல்லை. தந்தைகள்  அன்பான அப்பாக்களாக  உருமாறினார்கள்.  தற்போதைய அப்பாக்கள் மகனாக இருந்தாலும் மகளாக இருந்தாலும் தோழமையான அப்பாக்களாக மாறிப்போனார்கள். அதற்கு இடம் கொடுத்த தாய் களுக்கும் நன்றி சொல்லத் தான் வேண்டும்.தந்தைக்கு  சிறப்புக்கள் எப்போதும் தாமதமாய்த்தான் கிடைக்கும்.
      . எனது தந்தையைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த தந்தையர் தினத்திற்கு நன்றிகள் . 

    என்னுடைய ஹீரோ ரோல் மாடல்  எங்கப்பாதான் என்று  பலரும் தங்கள் தந்தையைப் பற்றி கூறுவார்கள்.  அப்படி எல்லாம் நான் நினைத்ததில்லை. அப்பாவுக்கென்று பெரிதாக குறிக்கோள்கள் ஏதும் இருந்ததில்லை. அம்மாவின் விருப்பங்களை நிறைவேற்றுவதில்தான் கவனம் செலுத்தினார். பல வீடுகளில் அம்மாக்களின் அளவுக்கு மீறிய ஆளுமை தந்தையின் தனித்துவத்தை உணர விடாமல்  செய்து விடுகிறது. அப்படித்தான் எனது தந்தையும். எங்களை இதுதான் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப் பட்டதில்லை. எங்களை படி என்று வற்புறுத்தியதில்லை. படிப்புதான் வாழ்க்கை என்று மூளை சலவை செய்ததில்லை. ஒரு நாளும் அடித்ததில்லை; ஏன்? திட்டியது கூட இல்லை. அவர் மிகவும் நல்லவர் என்று பெயர் எடுத்திருக்கிறார் ஆனால் சாமர்த்தியசாலி என்று பெயர் எடுக்கவில்லை . அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தன. எந்தவித கெட்ட பழக்கமும் அவரிடம் இருந்ததில்லை.. வெற்றிலை கூட போடமாட்டார்.  அவரை ஒரு அப்பாவியாகவே பலரும் பார்த்தனர். இதுவே அவரது பலமாகவும் இருந்தது; பலவீனமாகவும் இருந்தது. நீண்ட நாட்களாக அவரை பற்றி எழுத வேண்டும் நினைத்திருப்பேன்.   அவரது  நினைவுகளை அசை போட வாய்ப்பளித்த தந்தையர் தினத்துக்கு நன்றிகள் .சொல்லத்தான் வேண்டும்
        எனது தந்தை ஒரு ஆசிரியர். அதுவும் தலைமை ஆசிரியர் என்பதால் நல்ல ஆசிரியருக்கு  உரித்தான் பல குணங்கள் அவரிடம்  இயல்பாகவே இருந்தன. .பிற்காலத்தில் அவை எனக்கும் தொற்றிக் கொண்டன.

   நான் பிறந்த நேரத்தில்  எனது தந்தை பள்ளியில் இருந்தததாகவும் கடுமையான புயல் மழை என்பதால் மாணவர்களை பாதுகாப்புக்காக இரவு முழுவதும் பள்ளியிலேயே தங்க வேண்டி இருந்தது என்றும் அம்மா(குறையாக) சொல்வார்கள். அந்த கிராமத்தில் வாத்தியார் என்றால் அதிக மரியாதை உண்டு. ஊரில் வசதியும் செல்வாக்கும் உள்ள ஒருவர்  இலவசமாகவே தங்கு வதற்கு  இடவசதி செய்து  கொடுத்திருந்தார். அவர்கள் வீட்டு மாட்டுக் கொட்டகையை ஒரு முனையை தடுத்து வீடாக்கி கொடுத்தார்கள்.வேலையில் சேர்ந்தபோது அந்த வீட்டுக்கு வந்த அப்பா  ஒய்வு பெறும் வரை  அந்த வீட்டில்தான் இருந்தார். எனது அண்ணன் அக்கா ஆகியோர் மருத்தவமனையில் பிறந்தவர்கள். நான் மட்டும் அந்த வீட்டில் பிறந்தவன் என்ற பெருமை எனக்குண்டு. (புயல் காரணமாக மருத்துவமனை செல்ல முடியவில்லையாம். )

  மாலை நேரங்களில் பெரிய  வீட்டுக் குழந்தைகள்  ட்யுஷன் படிக்க வருவார்கள். அம்மா ஆசிரியை இல்லை என்றாலும்  டீச்சர் என்றுதான் அழைப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து நானும் படிப்பேன்.ட்யுஷனுக்கு பணம் ஏதும் தரமாட்டார்கள்.  ஆனால்  தன் வயலில் விளையும் நெல், நிலக்கடலை, போன்றவற்றை அறுவடை நேரத்தில் எங்கள் வீட்டுக்கு  கொடுத்து அனுப்புவர் 

  அவர் தலைமை ஆசிரியராக பணியாற்றிய பள்ளியிலேயே என்னையும் சேர்த்தார். ஆறாம் வகுப்பு வரை அங்கேதான் படித்தேன். தந்தையே ஆசிரியராக இருக்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கே கிடைக்கும். அது எனக்கும் கிடைத்தது.  என் தந்தைக்கு விட்டுக் கொடுக்கும் குணம் உண்டு. அதனை பயன்படுத்திக் கொண்ட இன்னொரு பள்ளியின் தலைமை ஆசிரியர்  பணியாற்றிய இடத்தை விட்டு ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு பள்ளிக்கு ,  மனமொத்த மாறுதல் பெற்றுக்  கொண்டார். அந்தப் பள்ளிக்கு நடந்துதான் செல்லவேண்டும் .பேருந்து வசதியும் கிடையாது. அப்பாவுக்கு சைக்கிள் ஒட்டவும் தெரியாது. எங்கு சென்றாலும் நடந்துதான் செல்வார்.  நடராஜன் என்ற பெயருக்கு ஏற்ப நடராஜா சர்வீசிலேயே காலத்தை  கடைசி வரை கழித்து விட்டார்.

   அப்பா மாணவர்களை அடிக்க மாட்டார், அடிக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் கையைக் குவித்து முதுகில் லேசாக அடிப்பார். சத்தம் மட்டும்  பெரிதாக கேட்கும்; வலிக்காது என்று அவரிடம் படித்தவர்கள் கூறுவார்கள். அப்பாவுக்கு சில விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். பாட்மிண்டன்  நன்றாக ஆடுவார்.

   பம்பரம் வாங்கிக் கொடுத்து பம்பரம்  விடுவதற்கு எனக்கு கற்றுத் தந்தார். அதில் சில வித்தைகளையும் செய்து காட்டுவார். வழக்கமாக பம்பரத்தை தரையில் சுற்றவைத்தது விட்டு பின்பு அதை கையில் லாவகமாக எடுப்பார்கள். அனால் அப்பா சாட்டையை வீசி அப்படியே பாமபரத்தை கையிலேயே நேரடியாக பிடித்து சுழலச் செய்வார். அதை பலமுறை செய்து நானும் கற்றுக் கொண்டேன்,
  சர்க்கசில் செய்வது போல மூன்று பந்துகளை மாற்றி மாற்றி கைகளில் தூக்கிப்போட்டு பிடித்துக் காட்டுவார்.நீண்ட குச்சியை விரல்களில் நிற்கவைத்துக் காட்டுவார். அதோடு அதை தூக்கிப் போட்டு அதன் மறுமுனையை அப்படியே விரல்களில் விழாமல் பிடிப்பார். 

    பனை ஓலையில் காற்றாடி செய்து கருவேல முள் கொண்டு வேகமாக சுழலச் செய்வார். பட்டம் செய்து கொடுப்பார். பட்டத்திற்கு சூத்திரம் போடுவது எப்படி என்று சொல்லித் தருவார். பட்டம் விடும்போது நூல் வழியே ஓலைத் துண்டை அனுப்பு வார். அது சுற்றிக்கொண்டே வேகமாக உயரே சென்று பட்டத்தை சென்றடயும். அதை தந்தி என்று சொல்லி மகிழ்விப்பார்.

  விநாயகர் சதுர்த்தி வந்து விட்டால் போதும்; குடை செய்ய ஆரம்பித்து விடுவார். ஒரு மாதத்துக்கு முன்பே மூங்கில், காகிதம் இவற்றை சேகரித்து வைப்பார். விதம் விதமாக அழகான குடைகள் கடைகளில் கிடைத்தாலும் அவர் கையால் செய்து அதை பயன்படுத்துவதுதான் அவருக்கு பிடிக்கும். இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

  இவை எல்லாம் அப்போது எனக்கு ஆச்சர்யமாக தோன்றவில்லை. ஆனால் இப்போது நினைத்துப் பார்த்தால் வியப்பை ஏற்படுத்துகிறது. 

   ஏற்கனவே சொன்னது போல அப்பாவின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையால் தாத்தாவின் சொத்தில்( சென்னையின் முக்கியப் பகுதியில் இருந்தது  )  தன் உரிமையை  விட்டுக் கொடுத்தார்.  அதனால் கோபம் அடைந்த  அம்மாவின் வற்புறுத்தலால் சென்னையின் புறநகர் பகுதியில் மனை வாங்கினார். வீடு கட்டி உறவினர் முன் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பது அம்மாவின் ஆசை. அதை நிறைவேற்ற முனைந்தார் . அண்ணனின் மேல் படிப்புக்காக சென்னைக்கு இடம் பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது.   எப்படியோ கஷ்டப்பட்டு வீடும் கட்டி விட்டார்.  நாங்கள் இங்கே தங்கி இருக்க அப்பா ஊரிலேயே இருந்தார். மாதம் ஒரு முறைதான் வருவார். 

   அப்பாவுக்கு சங்கீத  ஞானமும் கொஞ்சம் உண்டு. ராகங்களை அடையாளம் கண்டுபிடித்து விடுவார். "தீராத விளையாட்டுப் பிள்ளை" என்ற பாடல் அப்பாவுக்கு மிகவும் படிக்கும். எங்களை தூங்க வைக்க அந்த பாடலையே பாடுவார் . அப்பாவுக்கு சமைக்கவும் தெரியும். ருசித்து  சாப்பிடவும் செய்வார்.  கதை புத்தகங்களில் அவருக்கு ஆர்வம் இருந்ததில்லை. செய்தித்தாளை வைத்துக் கொண்டு நாள் முழுதும் வாசித்துக் கொண்டிருப்பார்.

    அப்பாவுக்கு எப்போதுமே எல்லோரும் நல்லவர்கள்தான் என்றே எண்ணுவார். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் முதலில் நம் மீது தவறு இருக்குமோ என்றுதான் சிந்திப்பார். 

   ஒல்லியான தோற்றம் அவருடையது .அவருக்கு நடையே உடற்பயிற்சியாக இருந்ததால் ப்ரெஷர், சுகர் என்று எதுவும் அவருக்கு வந்ததில்லை.அவரது வாழ்நாளின் இறுதி நாட்களில் மட்டுமே சிறிது சிரமப் பட்டார். அவருக்காக மேற்கத்திய கழிப்பறை அமைத்தோம்.சில நாட்கள் மட்டுமே பயன் பட்டது. 
 ஆனாலும் நடந்தே பல இடங்களுக்கும் சென்ற அவரால் கழிப்பறை செல இயலவில்லை. நான் மெது வாக அழைத்து செல்வேன். என் மகனும் உதவுவான். என் மனைவியும் முகம் சுளிக்காமல் தன் பங்கை செய்தார்.  பணிக்குசெல்லுமுன்  டயபர்  கட்டி விட்டு செல்வேன்.  மாலையில் வந்து  வேறு மாற்றுவேன்.
    ஒரு நாள் காலை அப்பா லேசாக நெஞ்சடைக்கிறது என்று சொல்ல ஒன்றுமில்லை காப்பி சாப்பிடுங்கள் என்று காபியை கொடுக்க, விழுங்க முடியாமல் அவதிப் பட்டார். பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவரது உயிர் மெல்லப் பிரிந்தது.  அதை மனம் நம்ப மறுத்து சினிமாவில் வருவது போல மார்பில் லேசாக இரு கைகளாலும் வேகமாக தட்டிப் பார்த்தேன். பயன் ஏதுமில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் சில நிமிடங்கள் திகைத்து நின்றேன். உடனே அழுகை வரவில்லை. பின்னர் கண்கள் கலங்க ஆரம்பித்தன. ஓ! வென்று கதற நினைத்த நான் அடக்கிக் கொண்டேன்.  கடைசி நேரத்தில் அவரது அருகில் இருந்தமைக்காக லேசான திருப்தியுடன் அடுத்த பணிகளை கவனிக்க சென்றேன்.அவரை பொருத்தவரை நிறைவாகவே வாழ்ந்திருப்பார் என்று நம்புகிறேன். 

   எங்கள் பகுதியில் முதலில் வீடு கட்டியது அப்பாதான். அவர் பணியாற்றிய போது ஆசிரியர்களின் சம்பளம் மிகக் குறைவு. அதனால் வீடு கட்டியதை பெருமையாகக் கருதினார். 

   இன்று அது பழமையானதாக மாறி விட்டது அதன் பின்னர் கட்டிய பல வீடுகள் இன்று பிளாட்டுகளாக மாறி விட்டது.அந்த வீட்டை இடித்து விட்டு புதிதாக கட்ட நினைத்துள்ளோம் ஆனால் மனம் வரவில்லை. ஒவ்வொரு கல்லும் என்னை இடிக்காதே என்று சொல்வது போல் எனக்குத் தோன்றியது .. ஆனாலும் வேறு வழியின்றி வீடு இடிக்கும் பணி துவங்கப் பட்டது.  வீடு இடிக்கும் வேலைக்கு வந்தவர்    கடப்பாறையால் ஓங்கி முதல் இடி இடித்தார். கொஞ்சம் மெல்ல இடியுங்க என்றேன். மெதுவா இடிச்சா எப்படி சார் இடிக்க முடியும். நீங்க போங்க சார்! என்றான். மனதை என்னவோ செய்தது. குற்ற உணர்வுடன் அங்கிருந்து வெளியேறினேன். நான் கட்டிய வீட்டை இடிச்சிட்டயேடா  என்று என் தந்தை கேட்பது போல் தோன்றியது.  அன்று  இரவு முழுதும் உறக்கம் வரவில்லை. 
  இப்போது புதியதாக வீடு கட்டும் பணி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. தனி வீடு கட்டுவதில் எவ்வவளவு சிரமங்கள் இருக்கின்றன என்பதை என்னால் உணர முடிந்தது. இடிக்கப்பட்ட வீட்டின் சில கட்டிடத் துண்டுகள் ஆங்கே கிடக்கின்றன என் மனதைப் போலே. அவை எனது தந்தையை நினைவு படுத்திக் கொண்டிருக்கின்றன. வீடுகள் செங்கல் மணல், சிமென்ட்  ஜல்லிக் கலவைகளால்  மட்டும் கட்டப்படுவதில்லை . அந்தக் கலவையில் கண்ணுக்குத்  தெரியாத  உணர்வுகள் கலந்து கிடக்கின்றன.  

   தாய்களைப் போலவே பெரும்பாலான தந்தைகளும் தனக்காக வாழ்வதில்லை. தாய்களிடம் தோற்றுப் போவதை தந்தைகள் பெரிது படுத்துவதில்லை. இறந்தபின்பு அவரை போற்றுவதை விட, இருக்கும்போது நம்மைத் தாங்கிய தந்தையை கடைசி வரை தாங்குவதே மகன் தந்தைக்காற்றும் உதவியாகக் கொள்வோம். 
நம் பிள்ளைகளும் நம்மை நினைவு கூறும் அளவுக்கு நடந்திருக்கிறோமா?  தெரியாது ! தெரிய பல காலம் ஆகலாம்.  ஏன்? தெரியாமலேகூட போகலாம் .


*******************************