என்னை கவனிப்பவர்கள்

சனி, 21 அக்டோபர், 2017

சித்திரவதை

      
  நடிகை புஷ்பாஸ்ரீ  கையெழுத்தில்  "உங்கள் சித்திரவதை தாங்க  முடிய வில்லை என்னை  விட்டு விடுங்கள்"  என்ற துண்டு சீட்டை  நடிகை வீட்டு  வேலைக்காரி இன்ஸ்பெக்டர்  மோகனிடம் கொடுத்தாள்.
  நான்கு நாட்களாக புஷ்பாம்மாவைக் காணவில்லை என்றும் தெரிவித்தாள்.

" வீட்டில யாரெல்லாம் இருக்காங்க" விசாரித்தார்  மோகன்
"புஷ்பாம்மாவும் அவங்க புருஷன் ரவிவர்மன் மட்டும்தான்."
"அவர் என்ன பண்றார்"

 "உருப்படியா ஒண்ணும் இல்லீங்க . கத்தையா கத்தையா பேப்பர் வச்சுக்கிட்டு படம்  வரஞ்சிகிட்டு இருப்பார்". .

அவன்  கொடுமைக்காரனா?

"அப்படி ஒன்னும் இல்ல.  ஐயா! அடிக்கடி ரெண்டும் பெரும் சண்டை போடற சத்தம் கேக்கும். அப்புறம்  ஒண்ணாயிடுவாங்க  .

"இப்ப வீட்டில இருக்காரா?"

"ரூமுக்குள்லையே  இருக்கார் எவ்வளவோ  கூப்பிட்டுப்  பார்த்தும் வெளியே வர மாட்டேங்கறார்".

இன்ஸ்பெக்டர்  புஷ்பாஸ்ரீ வீட்டுக்கு   புறப்பட்டார்.

" ரவி வர்மன் கதவை திறங்க . போலீஸ் வந்திருக்கோம்" என்றார் .

 ரவி வர்மன் கதவை திறந்தான் . அறை  முழுவதும் அலங்கோலமாக கிடந்தது  பேப்பர்கள் சிதறிக் கிடந்தன .

  "உங்க மனைவி புஷ்பாஸ்ரீயை காணோம்னு இவங்க சொல்றாங்க . எங்க போனாங்க  "

"தெரியல சார். எங்கயாவது ஷூட்டிங் போயிருப்பாங்க ! நானும் அவங்க எங்க போனாங்கன்னு தெரியாம கவலை பட்டுகிடிருக்கேன்."
உங்க கிட்ட சொல்லலையா ".

"எப்பவும் சொல்லிட்டுதான் போவாங்க .ஆனா இப்ப சொல்லல . எம் மேல என்ன  கோவமோ தெரியல செல்போனையும் சுவிச் ஆஃப் பண்ணி வச்சுட்டாங்க. எப்படியும்  வந்துடுவாங்க சார்".

"நீங்க அவங்களை சித்திர வதை பண்றதா எழுதி வச்சுருக்காங்களே ! உண்மைய சொல்லுங்க அவங்களை என்ன பண்ணீங்க"

  " ஐயோ!அவங்க சம்மதம் இல்லாம என் விரல் கூட அவங்க மேல படாது சார்"
       
    வீட்டை சுற்றி பார்த்தார் . இந்த மாதிரி ஆளுங்க கிறுக்குப் பயலுங்களா இருப்பாங்க. அப்பாவி மாதிரி இருந்தாலும் ஏதாவது ஒரு வேகத்தில கொலை பண்ணனாலும் பண்ணிடுவாங்க என்று நினைத்துக் கொண்டு  எதற்கும் இவனை ஸ்டேஷனில் விசாரிக்கலாம் என்று அழைத்து  வந்து விட்டார். லாக் அப்பில் ஒரு நாள் முழுக்க வைத்து விசாரித்தும் பயனில்லை.  உளறிக் கொண்டும் அழுது கொண்டும் இருந்தானே தவிர உருப்படியாக ஒன்றும் சொல்லவில்லை .  என்ன செய்வது என்று தெரியாமல் .இன்ஸ்பெக்டர் யோசித்துக் கொண்டிருக்க   வாசலில் கார்! புஷ்பாஸ்ரீ  உள்ளே ஓடி வந்தாள்

இன்ஸ்பெக்டர் சார் அவரை விட்டுடுங்க அவர் அப்பாவி.
"என்னம்மா   இப்படியா  அவர் சித்திரவதை தாங்க முடியலன்னு எழுதி வச்சுட்டு சொல்லாம கொள்ளாமயா போறது ? தேவையில்லாம எங்கள டென்ஷன் ஆக்கிட்டீங்களே.பிரஸ்சுக்கு நியூஸ் போச்சுன்னா என்னாகும்  ஏன் அப்படி எழுதி வச்சீங்க?
.
"சொல்லிட்டுதான் போனேன்  அவர் குடிச்சி இருந்ததால்  மறந்து இருப்பார்..  சார், அவருக்கு பிரபல ஒவியரா ஆகணும்னு ஆசை.   பேர் என்னமோ  ரவி வர்மா .ஆனா சுமாராத்தான் வரைவார்.    என்னை போஸ் கொடுக்கச் சொல்லி விதம்  விதமா வரைவார்.  ஷூட்டிங்  போகாத நேரத்தில இவரை காதலிச்ச பாவத்துக்காக  இவர் வரையறதுக்கு மணிக்கணக்கா சகிச்சிக்கிட்டு  போஸ்  கொடுப்பேன்"

"அதுக்கு போய் சித்திரவதைன்னு எழுதி வச்சது ரொம்ப ஓவர் இல்லையா ?"

 ஒரு பேப்பரை புஷ்பாஸ்ரீ எடுத்துக் காட்டி , "என்னப் பார்த்து வரஞ்ச ஓவியத்தை  பாருங்க." என்றாள்

அதில்   20 வயது புஷ்பாஸ்ரீ 50 வயது தோற்றத்தில் இருந்தாள்.

"என் படத்தை இப்படி கன்றாவியா வரஞ்சுட்டு  'சித்திரம் பேசுதடி'ன்னு தலைப்பு  வேற.  எனக்கு எப்படி இருக்கும்?    கோவத்தில  என்னை  "சித்திர"வதை  செய்யாதீங்கன்னு பொயட்டிக்கா எழுதி வச்சேன்.. இப்படி ஆகும்னு  எனக்கு தெரியாது " என்று வெட்கத்துடன்  சொல்ல

தலையில் அடித்துக் கொண்டார் இன்ஸ்பெக்டர் மோகன்


**************************************************************

ஏதோ என்னாலான சித்திர வதை. 





திங்கள், 2 அக்டோபர், 2017

மகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்

    மகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே.உண்மை பேசுபவரகளையும் நேர்மையானவர்கையும் இவர் பெரிய காந்தி என்று கிண்டல் செய்வதுதான் வழக்கம். பணம் கொடுத்து வராவிட்டால் காந்தி கணக்கு என்று சொல்வதை அறிவோம். காந்தி மட்டுமல்ல யாருமே விமரசனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனாலும் உலக வரலாற்றில் காந்திக்கு ஒரு பெருமைக்குரிய இடம் உண்டு என்பதை மறுக்க இயலாது 
அவரைப் பற்றி எழுத நிறைய உண்டு . இதோ காந்தி பற்றிய சில சுவாரசிய தகவல்கள்

  1. மகாத்மா காந்தி 5 முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார்.  பாரத ரத்னா போல்   இறப்புக்குப் பின் யாருக்கும் நோபல் பரிசு வழங்கப் படுவதில்லை என்பதால் காந்திக்கு கிடைக்க வில்லை. பாரத ரத்னாவும் காந்திக்கு வழங்கப் படவில்லை. (இதைப் பற்றி இன்னொரு பதிவில்  விரிவாகப் பார்ப்போம் )
  2. மகாத்மா காந்தியின் இறுதி ஊர்வலத்தில் பல லட்சக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.வரிசை  நீளம் ஐந்து கிலோமீட்டருக்கு மேல் தாண்டிவிட்டதாம். Ganhiji's funeral procession in Delhi. It took a length of 8 km.
  3. பிரிட்டனின்  ஆதிக்கத்திற்கு எதிராக காந்தி போராடினார்.ஆனால் அவர் இறந்து 21 ஆண்டுகளுக்குப்  பின் அவரை தபால் தலை வெளியிட்டு கௌரவப் படுத்தியது இங்கிலாந்து  
  4. காந்தி நடைப் பயணத்தின்  மீது ஆர்வம் கொண்டவர்.அவர் வாழ் நாள் முழுதும் நடந்து சென்ற தூரத்தை கணக்கிட்டால் உலகை ஒருமுறை சுற்றி வந்து விடலாம்  என்கிறார்கள்.
  5. மகாத்மா காந்தி டால்ஸ்டாய், ஐன்ஸ்டீன் போன்றவர்களோடு மட்டுமல்லாது  ஹிட்லருக்கும்  கடிதம் எழுதி இருக்கிறார் 
  6. ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ்  ஜாப்ஸ் காந்தியின் மீது அபிமானம் கொண்டவர் . அவர் காந்தி அணிந்தது போன்ற மூக்குக் கண்ணாடியை அணிந்து பெருமிதம் கொண்டார் . 
  7. காந்தியின் ஆங்கில பேச்சு ஐரிஷ் பாணியில்  இருக்கும். காரணம் அவரது  ஆரம்ப கால  ஆங்கில ஆசிரியர் ஒரு ஐரிஷ் காரர் .
  8. இந்தியாவில் 53 பெரிய சாலைகளுக்கு காந்தியின் பெயர் வைக்கப் பட்டுள்ளது . காந்தி பெயர் வைக்கப் பட்டுள்ள சிறிய சாலைகள் தெருக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை. வெளிநாடு களிலும் 48 சாலைகள் அவர் பெயரைத் தாங்கி உள்ளன 
  9. காந்தி தென் ஆப்ரிக்காவில் மூன்று கால் பந்தாட்டக் குழுக்களை உருவாக்கினர் . அதன் பெயர்  Passive Resisters Soccer Club
  10. காந்தியைப் பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம் ரிச்சர்ட் அட்டன் பாரோ இயக்கிய காந்திதான் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் 1940 லியே  தமிழரான ஏ.கே.செட்டியார் காந்தியைப் பற்றிய ஆவணப் படத்தை  தமிழில்  தயாரித்தார்  இதற்காக பல நாடுகளுக்கும் பயணம் செய்து படச் சுருள்களை சேகரித்து படத்தை உருவாக்கினார். ஆனால் அப்போதைய ஆங்கில அரசுக்கு அஞ்சி இப்படத்தை வெளியிட  எத்திரையங்கும் முன் வரவில்லை . 1948 இல் சுந்திர தினத்தன்று இத் திரைப்படம் டில்லியில் இந்தி மொழியில் வெளியிடப் பட்டது, பின்னரே தமிழிலும்  வெளியிட ப் பட்டது 
  11. காந்தியடிகளின் மனதில்  ஒத்துழையாமை இயக்கத்தின் வித்தை விதைத்தது  ஹென்றி சால்ட் என்பவர் எழுதிய ஹென்றி டேவிட் தொரேயூ என்பவரைப் பற்றிய நூலேயாகும். ஹென்றி டேவிட் ஒரு அமெரிக்கர். அநியாயமாக விதிக்கப் பட்ட  வரிகளை செலுத்த மறுத்தவர்.அதனால் சிறையில் அடைக்கப் பட்டவர் .அங்கிருந்தே ஒத்துழையாமை பற்றி எழுதினார் . 
  12. காந்தி புகைப்படம் எடுக்கப் படுவதை விரும்புவதில்லை எனினும் அக்காலத்தில்   அதிகமாக புகைப்படம் எடுக்கப் பட்ட மனிதராகத் திகழ்ந்தார் ..
  13. மாற்றுக் கருத்து கொண்டிருந்தபோதும்  சுபாஷ் சந்திரபோஸ் தான் காந்தியை இந்தியாவின் தந்தை என்று  முதலில்  அழைத்தார்
  14. காந்தியை மகாத்மா என்று முதலில் அழைத்தவர் ரபீந்திரநாத் தாகூர் 
  15.  காந்தி 1930 இல் டைம்  இதழின் TIME PERSON OF THE YEAR என்ற பட்டத்தை பெற்றார். இந்த பெருமையை அடைந்த ஒரே இந்தியர் காந்தி மட்டுமே 
Gandhi as 'Man of the Year 1930' on TIME Cover

*********************


தொடர்புடைய பதிவுகள் 




**********************************