மகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே.உண்மை பேசுபவரகளையும் நேர்மையானவர்கையும் இவர் பெரிய காந்தி என்று கிண்டல் செய்வதுதான் வழக்கம். பணம் கொடுத்து வராவிட்டால் காந்தி கணக்கு என்று சொல்வதை அறிவோம். காந்தி மட்டுமல்ல யாருமே விமரசனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனாலும் உலக வரலாற்றில் காந்திக்கு ஒரு பெருமைக்குரிய இடம் உண்டு என்பதை மறுக்க இயலாது
அவரைப் பற்றி எழுத நிறைய உண்டு . இதோ காந்தி பற்றிய சில சுவாரசிய தகவல்கள்
- மகாத்மா காந்தி 5 முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார். பாரத ரத்னா போல் இறப்புக்குப் பின் யாருக்கும் நோபல் பரிசு வழங்கப் படுவதில்லை என்பதால் காந்திக்கு கிடைக்க வில்லை. பாரத ரத்னாவும் காந்திக்கு வழங்கப் படவில்லை. (இதைப் பற்றி இன்னொரு பதிவில் விரிவாகப் பார்ப்போம் )
- மகாத்மா காந்தியின் இறுதி ஊர்வலத்தில் பல லட்சக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.வரிசை நீளம் ஐந்து கிலோமீட்டருக்கு மேல் தாண்டிவிட்டதாம்.
- பிரிட்டனின் ஆதிக்கத்திற்கு எதிராக காந்தி போராடினார்.ஆனால் அவர் இறந்து 21 ஆண்டுகளுக்குப் பின் அவரை தபால் தலை வெளியிட்டு கௌரவப் படுத்தியது இங்கிலாந்து
- காந்தி நடைப் பயணத்தின் மீது ஆர்வம் கொண்டவர்.அவர் வாழ் நாள் முழுதும் நடந்து சென்ற தூரத்தை கணக்கிட்டால் உலகை ஒருமுறை சுற்றி வந்து விடலாம் என்கிறார்கள்.
- மகாத்மா காந்தி டால்ஸ்டாய், ஐன்ஸ்டீன் போன்றவர்களோடு மட்டுமல்லாது ஹிட்லருக்கும் கடிதம் எழுதி இருக்கிறார்
- ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் காந்தியின் மீது அபிமானம் கொண்டவர் . அவர் காந்தி அணிந்தது போன்ற மூக்குக் கண்ணாடியை அணிந்து பெருமிதம் கொண்டார் .
- காந்தியின் ஆங்கில பேச்சு ஐரிஷ் பாணியில் இருக்கும். காரணம் அவரது ஆரம்ப கால ஆங்கில ஆசிரியர் ஒரு ஐரிஷ் காரர் .
- இந்தியாவில் 53 பெரிய சாலைகளுக்கு காந்தியின் பெயர் வைக்கப் பட்டுள்ளது . காந்தி பெயர் வைக்கப் பட்டுள்ள சிறிய சாலைகள் தெருக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை. வெளிநாடு களிலும் 48 சாலைகள் அவர் பெயரைத் தாங்கி உள்ளன
- காந்தி தென் ஆப்ரிக்காவில் மூன்று கால் பந்தாட்டக் குழுக்களை உருவாக்கினர் . அதன் பெயர் Passive Resisters Soccer Club
- காந்தியைப் பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம் ரிச்சர்ட் அட்டன் பாரோ இயக்கிய காந்திதான் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் 1940 லியே தமிழரான ஏ.கே.செட்டியார் காந்தியைப் பற்றிய ஆவணப் படத்தை தமிழில் தயாரித்தார் இதற்காக பல நாடுகளுக்கும் பயணம் செய்து படச் சுருள்களை சேகரித்து படத்தை உருவாக்கினார். ஆனால் அப்போதைய ஆங்கில அரசுக்கு அஞ்சி இப்படத்தை வெளியிட எத்திரையங்கும் முன் வரவில்லை . 1948 இல் சுந்திர தினத்தன்று இத் திரைப்படம் டில்லியில் இந்தி மொழியில் வெளியிடப் பட்டது, பின்னரே தமிழிலும் வெளியிட ப் பட்டது
- காந்தியடிகளின் மனதில் ஒத்துழையாமை இயக்கத்தின் வித்தை விதைத்தது ஹென்றி சால்ட் என்பவர் எழுதிய ஹென்றி டேவிட் தொரேயூ என்பவரைப் பற்றிய நூலேயாகும். ஹென்றி டேவிட் ஒரு அமெரிக்கர். அநியாயமாக விதிக்கப் பட்ட வரிகளை செலுத்த மறுத்தவர்.அதனால் சிறையில் அடைக்கப் பட்டவர் .அங்கிருந்தே ஒத்துழையாமை பற்றி எழுதினார் .
- காந்தி புகைப்படம் எடுக்கப் படுவதை விரும்புவதில்லை எனினும் அக்காலத்தில் அதிகமாக புகைப்படம் எடுக்கப் பட்ட மனிதராகத் திகழ்ந்தார் ..
- மாற்றுக் கருத்து கொண்டிருந்தபோதும் சுபாஷ் சந்திரபோஸ் தான் காந்தியை இந்தியாவின் தந்தை என்று முதலில் அழைத்தார்
- காந்தியை மகாத்மா என்று முதலில் அழைத்தவர் ரபீந்திரநாத் தாகூர்
- காந்தி 1930 இல் டைம் இதழின் TIME PERSON OF THE YEAR என்ற பட்டத்தை பெற்றார். இந்த பெருமையை அடைந்த ஒரே இந்தியர் காந்தி மட்டுமே
*********************
தொடர்புடைய பதிவுகள்
- 1. காந்தியைப் பற்றி சுஜாதா
- 2.நீதிபதியின் கேள்வி-மிஸ்டர் காந்தி! இது மோசடி வேலை .
- 3.வக்கீல் தொழில் பொய்யர்களின் தொழிலா? தெரிந்த வரலாறு...
- 3.சர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா?சசித...
- 4.கோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி
- 5.காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்-
6 .
**********************************