என்னை கவனிப்பவர்கள்

சனி, 8 டிசம்பர், 2018

இளையராஜா செய்த தவறு


    மீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை  அனும்தி பெறாமல் பாடக்கூடாது என்று  மீண்டும் வலியுறுத்தியதோடு தன் இசைக்கான ராயல்டி பெற்றுத் தரும் உரிமையை தென்னிந்திய திரை இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு தந்துள்ளார். பெறப்படும் ராயல்டி தொகையில் 80% தனக்கும் 20% சங்கத்திற்கும் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.
   கடந்த வாரங்களில் பரபரப்பான இந்த விஷயத்தை இப்போது எழுதுவதற்கு காரணம் உண்டு. சில  விவகாரங்களில் அதன் பின்னனி பற்றி யோசிக்காமல் உடனடியாக நமக்கு தோன்றும் கருத்தை வெளிப்படுத்துவோம். சில நாட்களுக்குப்பிறகு அந்த எண்ணm மாறக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. இவ்விவகாரத்தில் உடனடியாக இளையராஜா மீது கோபம் உண்டானது உண்மை , ஆனால் இப்போது அவர் செய்தது முழுமையாக சரி என்று தோன்றாவிட்டாலும் அவர் பக்கம் உள்ள நியாயத்தையும் யோசிக்க வைத்தது,
    ஆணவமாகப் பேசும்போது எரிச்சல்  உண்டாவது போலவே  ஒரு  சிலர் அடக்கமாகப் பேசும்போதும் ஏற்படுகிறது  அவர்களில் சட்டென்று நினைவுக்கு  வருகிறவர்கள் நடிகர் பிரபு,சூர்யா, எஸ்பி.பி. காரணம் இவர்களின் பேச்சில் அளவுக்கு அதிகமான பணிவு காணப்படும். அந்த தன்னடக்கம் இயல்புக்கு மாறானதாகவே எனக்குத் தோன்றும். . இது போன்ற தன்னடக்க பேச்சுக்கள் அவர்களுக்கு ஒரு நல்ல பிம்பத்தை ஏற்படுத்தி வைக்கிறது. ஆனால் சில சமயங்களில் சிறு பிறழ்வு ஏற்படும்போது அதிர்ச்சி அடைந்து அவர்களை தூற்ற ஆரம்பிக்கிறோம். எனது எண்ணம் தவறாகக் கூட இருக்கலாம். குறிப்பாக எஸ்பிபியின் பேச்சு தேன் தடவிய பேச்சு,குரலைப் போலவே பேச்சு அவருக்கு இன்னொரு பலம்.. 
      ஆனால் இளையரஜா சபைக்கேற்றபடி பேசத் தெரியாதவர் என்பதை அவரது பல பேச்சுக்கள் உணர்த்தும், பேசும் கலை அறியாத  அவர் எப்போது பேசினாலும் ஆணவத்துடன் பேசுவதாகவே தோன்றும்.  முன்பு எஸ்.பி.பி விவகாரத்தில் அவர் மீது பரிதாபமும் இளையராஜா மீது கோபமும் ஏற்படும் விதத்தில் உருக்கமான அறிக்கயை வெளியிட்டது எல்லோருக்கும் தெரிந்ததே.   இளையராஜாவின் தீவிர ரசிகர்கள் கூட அவருக்கு ஆதரவாகப் பேசினாலும் இப்படிச் செய்திருக்கக் கூடாது என்றே மனத்திற்குள்  நினைத்திருப்பர்.  இசை  ஞானி. பேச்சும் மௌனமும் முரண்பாடனான நேரங்களில் வெளிப்பட்டு அவரது ரசிகர்களுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கும்.
   ஆனாலும் அவரது இசை ஆளுமை அவரது குறைபாடுகளையும்மீறி வெறித்தனமான ரசிகர்களைக் தந்துள்ளது.

  ஆனால்  ராஜாவின் பக்கம் சட்டப்படியான நியாயம் இருந்தாலும்  மேலோட்டமாக இதனைப் பார்க்கும் பலருக்கும் ராஜவின் கோபம் ஏற்படுவதும் இயல்பானதே.
   இளையராஜா செய்த மிகப் பெரிய தவறு ராயல்டி சார்ந்து நேரிடையாகப் பேசியதுதான். அமைதியாக ராயல்டி பொறுப்பை யாரிடமேனும்  ஓப்படைத்திருக்க வேண்டும். அவர்கள் மூலம் பாடல் பாடுவதற்கான அனுமதி சார்ந்து பேசி இருக்கலாம். இசைப் புயல்  ஏ.ஆர் ரகுமான், ராஜாவுடன் ஒப்பிடும்போது மூன்றில் ஒரு பங்கு அளவுக்குக் கூட இசை அமைத்திருக்க மாட்டார். ஆனால் இளையராஜாவை விட அதிகமாக சம்பாதித்து விட்டார். காரணம் ரகுமான் காப்புரிமையை முதல் படத்தில் இருந்தே சத்தமின்றி மிகத் திறமையாக பயன்படுத்தியதுதான். 
ராயல்டி சார்ந்து தனக்கென நிர்வாக அமைப்பு வைத்திருக்கிறார் ரகுமான். அதுவும்  இந்தியா அமெரிக்க லண்டன், என்று தனித்தனியக தனக்கு மேனேஜ்மெண்ட் சிஸ்டம் உள்ளது என்றும் அவர்கள் அனைத்தையும் கவனித்துக் கொள்வார்கள் என்றும் தனக்கு அது பற்றி தெரியாது என்றும் சில சமயங்களில் மேனேஜ்மெண்ட்கூட நான் சொல்வ்தைக் கேட்காது என்று ரங்கராஜ் பாண்டேவிடம் ஒரு பேட்டியில் கூறுகிறார் ரஹ்மான். அவர் அனாவசியமாக பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளவில்லை. ஆனல் கிடைக்கவேண்டியதை புத்திசாலித் தனமகப் பெற்று வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். 

 இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும்  இதை குறிப்பிட்டுள்ளார். 
இளையராஜா காப்புரிமை சார்ந்து தாமதமாக விழித்துக் கொண்டார் எனலாம். இதில் எம்.எஸ். வி போன்றவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். தங்கள் உரிமை சார்ந்து எம்/.எஸ் வி அறிந்திருப்பாரா என்பது ஐயமே. 
     இளையராஜா உரிமை கோருவது தவறு என ரகுமான் உட்பட எந்த இசை அமைப்பளரும் தெரிவிக்கவில்லை. ரகுமானின் பாடல்களை அனுமதி பெறாமல் ராயல்டி வழங்காமல்தான் பாடுகிறோம் என எந்த பாடகரோ நிகழ்ச்சி அமைப்பாளர்களோ சொல்லவில்லை. ராயல்டி சார்ந்த கேள்வி ஒன்றுக்கு ரகுமான்  அது பற்றி தனக்கு தெரியாது  என்றும் தன் மனைவி அதனைக் கவனித்துக் கொள்கிறார் எனவும் கூறினார். வேறு எந்த பிரபல இசை அமைப்பாளரும் இளையராஜா சொன்னது தவறு. நான் என் பாடல்களை இலவசமாக பாட அனுமதிக்கிறேன் என்று சொல்லவில்லை என்பது குறிப்பிடத் தக்கது

       சரியாகப் புரிந்து கொள்ளாத பலரும்  கல்யான மண்டபம் கோவில் திருவிழாக்கள் போன்றவற்றில் கூட பாடக்கூடாது என கூறி இருப்பதாக  கருதுகிறார்கள். திருமண நிகழ்ச்சிகள், கோவில் நிகழ்ச்சிகள். கல்வி நிலையங்கள் போன்ற இடங்களுக்கு எந்த அனுமதியும் தேவை இல்லை. டிக்கெட் வசூலித்து நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கே இது பொருந்தும். இளையராஜா உரிமை பெற்றுள்ள பாடல்களுக்கு எவற்றிற்கு எவ்வள்வு தொகை கொடுத்து  அனுமதி  பெறவேண்டும் எதற்கு தொகை செலுத்த வேண்டும் என்ற Tariff 




திரைப்படப் பாடலில் யாருக்கு என்ன உரிமைதான் உள்ளது?
  50 % தயாரிப்பாளருக்கும் 30% இசை அமைப்பாலருக்கும் 20% பாடலாசிரியருக்கும் ராயல்டி பெற உரிமை உண்டு என ஏற்கனவே செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இவர்கள் சார்பாக ஒருவர் IPRS  (INDIAN PERFORMING RIGHTS SOCIETY).  இல் இருந்து தொகை பெற்றால் ஒப்பந்த வீதப்படி மற்றவர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும்.  இவர்களும் உறுப்பினர்களாக இருப்பின்IPRS  இப்பணியை செய்து விடும்./  
   IPRS (INDIAN PERMING RIGHTS SOCIETY). என்ற அமைப்பு  இந்திய காப்புரிமை சட்டப்படி இயங்கி தன் உறுப்பினர்களுக்கு  ராயல்டி பெற்றுத் தருகிறது. இதில் படைப்பு உரிமையாளர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.   ராஜா ரகுமான் வைரமுத்து எஸ்பிபி(இசை அமைப்பாளராக) போன்றோர் இந்த அமைப்புடன் செய்து கொண்ட ஒப்பந்துள்ளனர். இவர்களின் பாடல்களை பாட ஒளி பரப்ப செய்ய உரிய கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேன்டும்
கீழே இளையராஜா ,ரகுமானின் ஒப்பந்த பத்திரம். குறிப்பிட்ட கால இடைவெளியில் இதனை புதிப்பித்தலும் வேண்டும்.








    IPRS இல் உறுப்பினராக இருந்த இளையராஜா இப்போது அதனை விட்டு விலகி விட்டார். எனவே இனிமேல் IPRS ராயல்டி தொகை பெற்று வழங்காது. இப்போது உரிமையை தென்னிந்திய திரை இசைக் கலைஞர்கள்  சங்கத்திற்கு ராயல்டி வசூலிக்க உரிமை தந்துள்ளார். ஒப்பந்தப்படி  பெறப்படும் ராயல்டி தொகையில் 80 % ராஜாவிற்கும் 20 % சங்கத்திற்கும் எடுத்துக் கொள்ளலாம். இளையராஜா பாடல் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் இதன் மூலம் கிடைக்கும் தொகை அதிகமாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது ஆனால் இப்பணியை அவர் உரிமை வழங்கியுள்ள சங்கம் செய்வது மிகக் கடினம் என்று சொல்லப்படுகிறது.  இப்பணியையே முழுமையாக செய்து வரும் IPRS போன்ற அமைப்புகளே இசை நிகழ்ச்சிகளை சரிவர கண்காணிக்க இயலாத  நிலையில் திரை இசைக் கலைஞர்கள் சங்கம் எவ்வாறு இப்பணியை மேற்கொள்ளும் என்று கேள்வி எழுப்புகிறார் ஜேம்ஸ் வசந்தன்.
   
எனினும் திரை இசைக் கலைஞர்கள் சங்கம் இதனை வரவேற்றுள்ளது.20% சதவீத தொகை என்பது கணிசமானது இது நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவும் என்று நம்புகிறது

இந்த விமர்சனங்கள் எதனால் எழுந்தன? இசைஞானி அவர் இசைக்குத்தான் ஞானி. ஆனால் நாம் ஞானி என்றால் பற்றற்றவர் என்று புரிந்து கொள்கிறோம். அவருக்கு ஏன் இவ்வளவு பணத்தாசை என்று கருவுகிறோம். அவர் சேவை செய்ய வரவில்லை. இசையில் மேதமை உடையவர் என்பதால் அவர் பணத்தின் மீது பற்றற்றவரக இருக்கவேண்டும் என்பதில் நியாயமில்லை.  சராசரி மனிதர்களின் குணங்கள் அவர்க்கும் உண்டு. தமிழ் திரை இசையின் மகத்தான சாதனையாளர் அற்புதமான பல பாடல்களைத் தந்தவர் என்ற வகையில் மட்டும் அவரைப் பார்ப்போம். இசையை மட்டும் ரசிப்போம்  யாரையும் அளவுக்கதிகமாக கொண்டாடவும் தேவை இல்லை. வெறுக்கவும் தேவை இல்லை.

---------------------------------------------------------------------------------------  
டிஸ்கி:
ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி டிசம்பர் 24 அன்று டொரண்டோ .MTCC இல் ் நடை பெறுகிறது.இசை பிரபலங்கள் கலந்து கொள்ளும்நிகழ்ச்சி. அரஙில் 1000பேருக்கு மேல் இடவசதி உள்ளது.அதற்கான டிக்கெட் விலை கீழே..குறைந்தது 49டாலர் அதிகப்ட்சம் 300டாலர்.மொத்த விற்பனையை கணக்கிட்டுப் பாருங்கள்.ரகுமான் மற்றும் பல பிரபலங்கள் இதில் கலந்து கொள்வதால் இந்த விலை இருக்கலாம்.மற்ற பிரபலங்கள் நடத்தும்போது குறைவாகத் தான் இருக்கும் என்றாலும் கணிசமான தொகை கிடைக்க வாய்ப்பு உண்டு இளையராஜா ஏன் ராயல்டி கேட்கிறார். என்பது புரியலாம்

டிஸ்கி 2:  வைரமுத்து முன்பு ஐ.பி.ஆர்.எஸ் உறுப்பினராக இருந்தார்.
---------------------------------------------------------------

நன்றி
http://copyright.gov.in/Documents/Copyright%20Societies.pdf
https://indiankanoon.org/doc/1636994/
http://copyright.gov.in/documents/handbook.html
http://copyright.gov.in/frmFAQ.aspx
http://copyright.gov.in/Documents/handbook.html
http://www.iprs.org/cms/Membership/AssignmentDeeds.aspx

https://youtu.be/LAiJ2xawe0I
rahman pande interview link
https://www.youtube.com/watch?v=TwD4k1sPo0I

செவ்வாய், 20 நவம்பர், 2018

சிறு துளி கஜா புயல் நிவாரணப் பொருட்கள்

        

சென்னை மாவட்ட கல்வித் துறை சார்பாக கஜா புயல் நிவாரணப் பொருட்கள் திங்கள் அன்று அனுப்பப்பட உள்ளதாகவும் பொருட்களை கொண்டு வந்து மாவட்ட அலுவலகத்தில் சேர்க்கும்படியும்  வாட்ஸ் ஆப் மூலம்  முந்தைய தினம் மாலை  தகவல் தெரிவிக்கப் பட்டிருந்தது. அனைத்து பள்ளிகளுக்கும் வட்டாரக் கல்வி அலுவலர் மூலமாக விருப்பம் உள்ளவர் நிவாரணப் பொருட்கள் வழங்கும்படி  பள்ளிகளுக்கு வேண்டுகோள் விடப் பட்டிருந்தது..  பொருட்கள் வரச்சற்று தாமதம் ஆனது.  அதற்குள் சிறிய  மனவருத்தம் ஏற்படுத்தக் கூடிய நிகழ்வு.
புறந்தள்ளிவிட்டு கையும் பேசியுமாக களம் இறங்கினர் வட்டாரக் கல்வி அலுவலர்கள்.அப்போது மணி 11.00 க்கு மேல் ஆகி விட்டது . அடையார், திநகர், எழும்பூர், மைலப்பூர் திருவல்லிக்கேணி ராயபுரம், பெரியமேடு  புரசைவாக்கம்  ஜார்ஜ் டவுன் பெரம்பூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் எங்கு தட்டினால் உடனே திறக்கும் எங்கு சிறிது நேரம் தட்ட வேண்டும் என்பதை அறிந்து தொலைபேசித் திரையில் விரல்களால் தட்ட ஆரம்பித்தனர்.     


ஆச்சர்யம்! அடுத்த ஒரு மணி நேரத்தில் நிவாரணப் பொருட்கள் தனித் தனிப் பள்ளிகளாகவும் இணைந்தும் வரத் தொடங்கி விட்டன.  வாட்டர் பாட்டில்கள் அரிசி, பருப்பு வகைகள் சமையல் எண்ணெய்ஆடைகள் போர்வைகள்  மெழுகு வர்த்திகள் பிஸ்கட், ப்ரட் பாக்கெட்டுகள் பாத்திரங்கள் மருந்துகள், சானிடரி நாப்கின்ஸ் என் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வந்து குவித்தனர்.


மிகக் குறுகிய காலத்தில் பள்ளிகளுக்கு தெரிவித்து அவர்கள் ஆசிரியர்களுக்கு தெரிவித்து பின்னர் கடைகளுக்கு சென்று நிவாரணப் பொருட்களை  வாங்கி அவற்றை ஒரிடத்தில் வைத்து பேக் செய்து அதன் மீது பெயர் எழுதி  ஒரு வண்டியில் ஏற்றி தலைமை இடத்திற்கு கொண்டு சேர்த்த வேகம் அசாதரணமானது.  நிச்சயம் எண்ணிப் பார்க்காதது . எப்படி சாத்தியமாகப்  போகிறது என்று நினைத்தது சாத்தியமானது.
 இதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. கொடுக்கப் பட்ட அவகாசத்திற்குள் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்ட ஆசிரியர்/ஆசிரியைகளின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியன . அடையார் வட்டாரத்தில் உதவி பெறும் பள்ளிகள் சார்பாக 85,000 மதிப்பிலான நிவாரணப் பொருட்களும் நர்சரி பள்ளிகள் சார்பாக  ரூ65000 மதிப்பிலும் நிவாரணப் பொருட்கள் வழங்கப் பட்டன. இதே போல சென்னையில் உள்ள பத்து சரகங்களிலும் நிவாரணப் பொருட்கள் குறுகிய நேரத்தில் பெறப்பட்டுள்ளன
  
     இது தொடக்கக் கல்வி மட்டுமே. இது மட்டுமல்லாது அரசு, உதவிபெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகளும் நிவாரணப் பொருட்களை ஆச்சர்யமூட்டும் வகையில் கொண்டு சேர்த்துள்ளனர்.

     இவை அனைத்தும்  கஜா புயல் பாதிப்பின் அளவைப் பார்க்கும்போது சிறு துளியே . தேன் துளி சிறிதென்றாலும் இனிக்காமலாபோகும்? எதிர்பார்த்ததை விட அதிக ஒத்துழைப்பு நல்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி அனைத்து சென்னை வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் பாராட்டுகள்

வெள்ளி, 9 நவம்பர், 2018

குமுதத்தில் என் கதை எக்சல் சவால் விடை+96 படம் எப்படி?


பெட்டிக் கடை பகுதி நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப் படுகிறது

     கடந்த வாரங்களில்  தோசையில் சாதி பற்றிய செய்தி  ப்ரதான இடத்தைப் பிடித்திருந்தது.
அதனைப் பற்றிய வேறு ஒரு பார்வையில்  ஒரு பக்கக் கதை ஒன்றை எழுதி குமுதத்திற்கு அனுப்பி இருந்தேன். இந்த வார குமுதம் இதழில் வெளியாகி இருந்தது.மிகக் குறுகிய காலத்தில் பிரசுரிக்கப் படும் என நான் நினைக்க வில்லை. காலம் தாண்டி விட்டால் அவுட் டேட்  ஆகி விடும். வெகு விரைவாக வெளியிட்ட குமுதம் ஆசிரியர் திரு பிரியா கல்யாணராமன் அவர்களுக்கு நன்றி.
இதோ கதை.

இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இணையத்தின் பரபரப்பான  பேசப் பட்டுக்கொண்டிருந்தது வே. மதிமாறனின் தோசையில் சாதி உண்டு என்ற பேச்சு, அதன் அடிப்படையில் எழுதப் பட்டதே இந்த ஒரு பக்கக் கதை


நாம ஆதிக்க  சாதியாம்மா?

ஸ்கூல் வேனில் இருந்து இறங்கி ஓடி வந்து டிபன் பாக்சை சிங்கில்போட்டுவிட்டு வந்ததும் வராததுமாக “அம்மா! நாம ஆதிக்கசாதியாம்மா? என்று கேட்ட தன் பெண் ரம்யாவை அதிர்ச்சியுடன் பார்த்தாள் சித்ரா.
”என்னடி சொல்ற”
”இல்லம்மா நீ எனக்கு மத்தியானம் தோசை கொடுத்து அனுப்பி இருந்தஇல்ல! அதை
பாத்துட்டு என்ஃப்ரண்ட் ஹேமாதாம்மா அப்படி கேட்டா”
”ஏன் அப்படிக் கேட்டாளாம்?”
”நான் கொண்டு போன தோசை ரொம்ப மெல்லீசா இருந்ததாம். ஆதிக்க சாதிக்காறங்கதான் அப்படி தோசை செய்வாங்களாம். ஃபேஸ்புக்கு வாட்ஸப்புல யாரோ சொன்னங்களாம். சொல்லும்மா! நாம ஆதிக்க சாதியா?”
”அடி போடி! தோசையில எங்கிருந்துடீ சாதி வந்தது?. காலையில நாலுகரண்டி மாவுக்கு வக்கில்ல. ரெண்டு கரண்டி மாவுதான் இருந்தது. அதுல எத்தன தோசைதான் வரும்? தடியா வார்த்தா ஒருத்தருக்குதான் கொடுக்கமுடியும். சன்னமாக தோசை வார்த்தாதான் உனக்கு ரெண்டு, உன் தம்பிக்கு ரெண்டு, இதோ வேலை வெட்டிக்கு போகாம ஒக்காந்திருக்காரே உங்கப்பா! அவருக்கு ரெண்டு கொடுக்க முடிஞ்சது.”
”அப்ப உனக்கு இல்லையாம்மா”.
”எனக்கெதுக்கு? உங்களுக்கு இருந்தா போதாதா?”

”நாளையில இருந்து இன்னும் மெல்லிசா வார்த்துக் குடும்மா உனக்கும் ரெண்டு தோசை வரட்டும்” என்ற ரம்யாவை இழுத்து அணைத்துகொண்டாள் சித்ரா
-----------------------------------------------------------------------------------------------------------------
    நேற்று சன் டிவியில்  96  படம்
ஒளி பரப்பப் பட்டது. ஆஹா ஒஹோ என்று பாராட்டப் பட்ட படம் ஆயிற்றே. என்று பார்க்க விரும்பினேன். படம் மிக மெதுவாக சென்றது. படத்தில் அனைவரும் ஆரம்ப கால மணிரத்தினம் பட பாத்திரங்கள் போல குசுகுசுவென்று ஹஸ்கி வாய்சில் பேசிக் கொண்டிருந்தனர்  முதல் காதலை தெய்வீகக் காதலாகக் கருதி பின்னர் சிலகாலத்திற்குப் பின் யதார்த்தத்தை உணர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களை உசுப்பி விட்டு அடே மடையா உன் முதல் காதலை எப்படி மறந்தாய் என்று பழைய நினைவுகளைக் கிள்றி விட்டு மாய உணர்வை(உண்மையில் கிளுகிளுப்பை)  40 வயதுக் காரர்களுக்கு ஏற்படுத்தி ம்ற்ற குறைகள் எல்லாம் மறந்து நெகிழ்ந்து கரைந்து  பேச வைத்திருப்பது டைரக்டரின் வெற்றியாக இருக்கலாம். .
       மாசற்ற முதல் காதலைக்  கொண்ட கதாநாயகனாக தன்னையே வரித்துக் கொண்டு தன்னை ஈர்த்தவளை முகநூலிலும் தேடிக் கொண்டிருந்தனராம் சிலர். சில வாட்சப் க்ரூப்கள் கூட உருவாக்கப் பட்டதாக செய்தி . ஆனால்  இப்படிக் பழைய காதலை தேடி ஒடுவது விபரீதத்தில்தான் முடிய வாய்ப்பு இருக்கிறது  மேலும் இது போன்ற நிகழ்வுகள் சகஜமானது என்ற உணர்வை ஏற்படுத்தி விடக் கூடிய அபாயம் உண்டு. இப்படத்தை கொண்டாடும் எந்த ஆணாவது தன் மனைவி தான் படித்த பள்ளி மாணவர்களுக்கான் ரீயூனியன் நிகழ்வுக்கு அனுப்புவார்களா?
இப்படித்தான் ஆட்டோ கிராப் படம் வரும்போதும் அந்த வயதுக்காரர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள்.
அமரக் காதல் தெய்வீகக் காதல் புனிதக் காதல் போன்றவற்றில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை என்பதால் இப்படம் ஈர்க்கவில்லை.
--------------------------------------------------------------------------------------------------------
சென்ற பதிவில் எக்சல் சவால் ஒன்றைக் கேட்டிருந்தேன்.  அதன் விடை
அதைனை ஏற்கனவே படிக்காதவர்கள்  கீழே க்ளிக்குக
ஓரு Excel சவால்
மதுரைத் தமிழன். வெங்கட் நாகராஜ் இருவருமே சரியான விடையை கூறி இருந்தனர். திண்டுக்கல் தனபாலன் சுருக்கு விசைகளை மட்டும் பயன் படுத்தி  இருந்தார். .

மதுரைத் தமிழனின் விடை
முதலில் Month செல்லில் இருந்து கிழே 300 என்ற மதிப்பி இருக்கும் செல்வரை செலக்ட் செய்து கொள்ள வேண்டும்.
அதன் பின் மேலே உள்ள மெனுவில் find&select என்பதை க்ளிக் செய்ய வேண்டும் அதில் உள்ள சப் மெனுவில் Go To Special என்பதை க்ளிக் செய்தால் ஒரு சிறிய பாப் அப் விண்டோ வரும் அதில் Blanks என்பதை தெரிவு செய்தால் காலியாக இருக்கும் செல் எல்லாம் செலக்ட் ஆகி இருக்கும். அதன் பின் find&select என்பதை மீண்டும் க்ளிக் செய்ய வேண்டும் அதன் பின் அதில் உள்ள Replace என்பதை தெரிவு செய்து அதில் NIL என்று டைப் செய்து Replace all என்பதை க்ளிக் செய்தால் காலியான செல் எல்லாம் NIL என்ற வார்த்தைகளால் நிரம்பிவிடும் அவ்வளவுதான்


Go To Special அற்புதமான வசதி வெவ்வேறு வகையில் இதன் மூலம் செல்களை தேர்ந்தெடுக்க முடியும் 

Go To Special செல்லாமலே நான் சொன்ன செயல்பாட்டிற்கு சாதரண  find and replace போதும்

அட்டவணையை முழுவதுமாக தேர்வு செய்து  find and Replace பயன் படுத்தலாம். findல் தேட வேண்டியதை காலியாக விட்டு விட்டுவிட்டு Replace ஐ பயன்படுத்தி அதில் NIL என்று டைப் செய்து Replace all க்ளிக் செய்தால் காலி செல்கள் முழ்வதும் செல்களால் நிரப்பப் பட்டு விடும்.
இந்த வீடியோவை பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்



------------------------------------------------------------------------------------------

    வலைப்பதிவு நண்பர் தளிர் சுரேஷ்  நம் அனைவருக்கும் அறிமுகமானவர்தான். வலைப்பதிவர்களில் ஆரம்ப காலங்களில் சிலரை குறை மதிப்பீடு செய்ததுண்டு. அவர்களில் ஒருவர் சுரேஷ்
காரணம் அவர் முதலில் தன் பதிவுகளோடு சேர்த்து காப்பி பேஸ்ட் பதிவுகள் அதிகம் போட்டு வந்தார். அதனால் அவரது உண்மையான திறமை ஐயத்திற்கு இடமாகி விட்டது.  ஆனால் பின்னர் காப்பி பேஸ்ட் பதிவுகளுக்கு தலைமுழுகி விட்டு சொந்த படைப்புகளை எழுத ஆரம்பித்தார். தமிழ்மணம் திரட்டி அவரை நிராகரித்த போதும் சளைக்காமல் எழுதினார்.  (இன்று தமிழ் மணமே தள்ளாடிக் கொண்டிருக்கிறது) பலரின் பதிவுகளுக்கு சென்று கருத்திட்டு தன் இருப்பை காட்டிக் கொண்டே இருந்தார். எழுதிக் குவித்தார் என்று சொல்வார்களே அது அவருக்கும் பொருந்தும். 

     நகைச்சுவை சிறுகதைகள் சிறு கவிதைகள் சிறுவர் கதைகள்  ஆன்மீகம் என்று அனைத்தையும் எழுதித் தள்ளிக்  கொண்டிருக்கிறர். ஆனால் அவரது பலம் ஜோக்ஸ் எழுதுவது என்பதே என்  கருத்து. குமுதம் விகடன், தமிழ் ஹிந்து பாக்யா தினமலர் போன்ற பத்திரிகைகளில் அனைத்திலும் அவரது நகைச்சுவை துணுகுகள் இடம் பெற்றுக் கொண்டு இருகின்றன.  வலைப் பதிவர்கள் பலர் எழுதுவதைக்  கைவிட்ட நிலயில் இன்றும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது அவரது சிறப்பு.  தமிழ் ஹிந்துவில் பன்ச் பச்சோந்ஜி பகுதியில் அதிக அளவில் இடம் பெற்றது இவரது பஞ்ச்கள்தான் என நினைக்கிறேன். தகவல் தெரிவித்த வாட்சப் குழுமத்திற்கு நன்றி என்ற செய்தியை வெளியிடுவார்.பத்திரிகையில் வெளியாவது அவருக்கு பிறர் சொல்லித்தான் தெரிய வருகிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. படைப்பாளிகளுக்கு மின்னஞல் மூலமாகவாவது படைப்பு வெளியிடப்படுவதை தெரிவிக்கலாம்
 தற்போது தேன்சிட்டு என்ற மின்னிதழையும் வெளியிட்டு அசத்தி வருகிறார்.
 எழுத்தில் கொஞ்சம் புதுமையைக் கையாண்டால்  இன்னும் சிறப்பான இடத்தைப் பெற வாய்ப்பு உண்டு வாழ்த்துகள் சுரேஷ்

-----------------------------------------------------------------------------------------------------

முக ராசியும் முகநூல் ராசியும்
முக ராசிதான் இல்லை என்றாலும் முகநூல் ராசியாவது இருக்குமா என்றால் அதுவும் இல்லை 
  முகநூலில் வெற்றிகரமாக இயங்க திறமை வேண்டும்  . .  எனது முகநூல் நட்புகளின் எண்ணிக்கை 380 மட்டுமே நான் பெரும்பாலும் யாருக்கும் நட்பு அழைப்பு விடுப்பதில்லை.  நண்பர்களின் பதிவுகளுக்கு கம்மெண்டும் லைக்கும் போடுவதுண்டு.    எவ்வளவு பேர் நாம போட்ட  பதிவை படித்தார்கள் என்று சொல்ல முடியாது. லைக்குகள் அதன் அளவுகோலாக வைத்துக் கொண்டால்.  முகநூல் நமது தன்னம்பிக்கையை குலைத்து விடும் அட்டகாசமான மீம்சுகள் வருகின்றன. அதுபோல மீம்சுகள்  சில  நானும் போடுவதுண்டு. இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று நினைத்து ஒரு பதிவு போட்டால் அதனை யாரும் சீண்டக் கூட மாட்டார்கள். ஒரே முறை  நான் பெற்ற 30 லைக்குகள்தான் அதிக பட்சம். மற்றவை  10 க்கும் குறைவானவை.அதிலும் நம் வலைப்பதிவு நண்பர்களான பாலகணேஷ், மதுரைத் தமிழன், ஜோதிஜி, ஸ்ரீராம். போன்றவர்களோடு  பழகியதற்காக கிடைப்பவை. 
 ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் என் வலைப் பகுதியில் எழுதிய குட்டிக்கதை வாட்சப் வழியாக வார்த்தைக்கு வார்த்தை  காப்பி அடிக்கப் பட்டு  அதை தன் முகனூலில் பகிர்ந்திருந்தார் ஒருவர் அதற்கு ஏராளமான லைக்குகள். நானும் ஒரு லைக் போட்டேன். எழுதுவது என்ன என்பதை விட எழுதுபவர் யார் என்பதே இங்கு முக்கியம் 

   ஒன்று மோடிக்கு ஆதரவாக பதிவுகள் போடவேண்டும் அல்லது தீவிரமாக எதிர்த்து பதிவு போடவேண்டும்.  அல்லது பெண்களாக இருக்க வேண்டும். ஆனால் எதனையும் கண்டு கொள்ளாமல் கர்ம சிரத்தையுடன் தொடர்ந்து பதிவுகள் இடும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் ஞானிகள் வகையறா.

------------------------------------------------------------------------------------------------------------

சனி, 3 நவம்பர், 2018

உங்களால் முடியுமா?ஓரு Excel சவால்


கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்

நீங்கள் எக்சல்லில் பணிபுரிவதில் ஆர்வம் உள்ளவரா? அப்படி எனில் ஒரு சிறிய சவால்.  இதன் கடைசியில்
  கணினித் துறையில் பல்வேறு மாற்றங்கள் வந்தபோதும் கடந்த 15  ஆண்டுகளுக்கும் மேலாக எம்.எஸ்.ஆஃபீஸ் பயன்பாடு அரசு அலுவலகங்கள்,  கல்வி நிலையங்கள் தனியார் நிறுவனங்களிலும் இன்றுவரை ஆக்ரமித்துள்ளன என்பதை மறுக்க முடியாது. அதும் Word,Excel, Power point பயன் படுத்தாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அதற்கான தேவைகள் இருந்து கொண்டே உள்ளன.
ஆவணவங்கள் தயாரிப்பதற்கு வோர்டும், தகவல்களைப் பெற்று தொகுக்க எக்செல்லும் தனி மென்பொருள் வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு இன்று வரை வரப் ப்ரசாதமாகத் திகழ்கின்றன.

Stand up காமெடியில் ஒரு மென்பொருள் ஊழியர் கூறுவார். ”நான் CTS ஆஃபீசில் பணி புரிவதாக என் அம்மா பெருமையுடன் மற்றவர்களிடம் கூறுவார். ஆனால் நான் உண்மையில் இங்கு எம்.எஸ் ஆஃபீசில் பணிபுரிகிறேன் என்பார்”. பெரிய மென்பொருள் நிறுவனங்கள் கூட எம்.எஸ் ஆபீசை நம்பி இருக்கின்றன என்பதே உண்மை நிலை
   எனக்கு எக்சல்லில் கொஞ்சம் ஆர்வம் உண்டு. அதன் பிரம்மாண்டம் என்னை வியக்க வைக்கக் கூடாது.அதன் பயன்பாடுகள் பல அனைவராலும் பயன்படுத்தப் படுவதில்லை  ஒவ்வொரு முறையும் எக்சல்லில் நுழையும்போது புதிதாக ஏதாவது ஒன்று கிடைக்கிறது. அதனால் இன்றுவரை எக்சல்லில் கற்றுக் குட்டியாகவே இருகிறேன். அட இவ்வளவு நாள் இதனைப் பயன்படுத்தாமல் போனோமே என்று வருந்தியதுண்டு. சில நேரங்களில் சில பணிகளை செய்ய வெகு நேரம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் அதனை எக்சல்லில் எளிதாக செய்ய வழி இருக்கும். ஆனால் நாம் அறிந்திருக்க மாட்டோம்

  நான்  எனக்குத் தெரிந்த நான் அனுபவபூர்வமாக கற்றுக் கொண்ட விஷயங்களை கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள் என்ற தலைப்பில் பகிர்ந்து வந்திருக்கிறேன். தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு அது நிச்சயம் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.

போட்டி இதுதான்

      அலுவலகத்தில் நிறைய தகவல்கள் அடங்கிய எக்சல்  அட்டவணை ஒன்றை உயர் அலுவலருக்கு அனுப்ப வேண்டும். தகவல்களை உள்ளீடு செய்த பின்பும் அன்ப்புவதற்கு தாம்தம் செய்தார் எழுத்தர். காரணம் கேட்டதற்கு 1000 க்கும் மேற்பட்ட வரிசைகளும் 10000 மேற்பட்ட செல்கள் அடங்கிய அட்டவணயில் சில செல்கள் காலியாக இருந்தன. அவற்றை  காலியாக விடாமல்  விடாமல் NIL என்று நிரப்பித்தான் அனுப்ப வேண்டும். காலி செல்கள் சீராக இருந்தால் அவற்றை எளிதில் நிரப்பி விடுவேன் ஆனால் அவை ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால் செல்களை தேடித் தேடி நிரப்ப வேண்டி இருக்கிறாது அதனால் தாமதம் ஆகிறது என்றார்.

நான் எக்சல் அட்டவணையை பார்த்தேன். இதனை செய்வதற்கு எக்சல்லில் நிச்சயம் ஏதாவது வழி இருக்கும் என்று நம்பினேன். நான் நினைத்தது போலவே இவ்வேலையை எளிதாக்க வசதிகள் இருப்பதை கணடறிந்தேன். உடனே அதனை பயன்படுத்தி NIL ஐ  காலி செல்களில்  ஒரே நிமிடத்தில் கட்டங்களில் நிரப்பினேன். 
எப்படி?.

உதாரணத்திற்கு ஒரு சிறிய அட்டவணையைத் தருகிறேன். அவற்றில் காலி இடங்களை NIL என்று எளிதில் நிரப்புவதற்கான  எளிய வழி என்ன?  நான் எப்படி நிரப்பி இருப்பேன் அல்லது நான் செய்ததைவிட எளிமையான வழிகளும்  உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும்.  அவற்றை தெரிவித்தால் நானும் தெரிந்து கொண்டு பயன் அடைவேன்.


மேலே வலது புற்த்தில் ஊள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி எக்சல் ஃபைலை டவுன்லோட் செய்தும் முயற்சித்துப் பார்க்கலாம்.

சரியாக சொல்பவர்களுக்கு




தொடர்புடைய பிற பதிவுகள்

எக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா   

முதலில் வந்ததோடு சரியான விடை சொன்ன மதுரைத்தமிழனுக்கு வாழ்த்துகள். வேறு யாரேனும் சொல்கிறார்களா என்று பார்ப்பதற்கு விடையை தற்காலிகமாக மறைத்து வைக்கப்படும்.


திங்கள், 29 அக்டோபர், 2018

மதிமாறனுக்காக தோசை-இட்லி புதிய தத்துவங்கள்


மதிமாறன் சார்! 
    வைரமுத்து சின்மயி விவகாரம் பரபரப்பு இழந்து உங்கள் தோசைப் பேச்சு  தற்போது சமூக வலை தளங்களின் பேசு பொருளாக ஆகி விட்டது.  உங்கள் பேச்சு கேலிப் பொருளாக மாறும் என்று நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டீர்கள். உங்கள் பேச்சு வெறுப்புணர்வின் வெளிப்பாடாகவே அமைந்திருந்தது.  மீம்ஸ்களின் நாயகனாக இன்று மாறி இருக்கிறீர்கள் இதுவும்  ஒரு விளம்பரம்தான் 
     சில ஆண்டுகளுக்கு சன் டிவி சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் அருமையான நிகழ்ச்சி ஒன்று ஒளி பரப்பானது. 
     இட்லி தோசைகள் தயாரிப்பு விதம் விதமாக   காட்சியாக தெரிய பின்னணியில் சன் டிவி செய்தி வாசிக்கும்   சண்முகத்தின் வசீகரக் குரலில் இட்லி தோசையை வாழ்க்கையோடு ஒப்பிட்டுக் கூறிய நிகழ்ச்சியை பாத்தேன்.  அதனை அப்படியே இங்கு விவரித்திருக்கிறேன்.

     உங்கள் தோசை  இட்லி  சாதிய தத்துவத்திற்கும்  இந்த இட்லி தோசை தத்துவத்திற்கும் உள்ள வித்தியாசத்தை படித்துப் பாருங்கள்.  ஏற்கனவே இப்பதிவை நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதி இருந்தேன். உங்களுக்காக மீண்டும் இன்று. 

இட்லியும்  தோசையும் 

   இட்லி என்பது மௌனம். தோசை என்பது சப்தமும் பேச்சும். இட்லி ஒவ்வொரு விள்ளலிலும் மௌனத்தை வெளிப்படுத்தும்.தோசை ஒவ்வொரு துண்டிலும் மொறுமொறுப்பான சத்தத்தில் பேசும். உறவு என்பது முதலில் மௌனத்தில் தொடங்கி பேச்சில் வளர்வது. பிரிவு என்பது பேச்சில் தொடங்கி மௌனத்தில் முடிவது. உறவு என்பது இட்லியில் தொடங்கி தோசையில் வளர்வது. பிரிவு என்பது தோசையில் தொடங்கி இட்லியில் முடியும் என்பதால்  யாரும் தோசையில் தொடங்கு வதில்லை. உணவு விஷயத்தில் உணர்வுகள் சரியாகவே இயங்கு கின்றன. இட்லியில் தொடங்கித்தான் தோசையில் வளர்கின்றன.உணவு விஷயத்தில் சரியாகச் செயல்படும் உணர்வுகள் உறவு விஷயத்தில் மாறிச் செயல்படும்போது உறவுகள் உடைகின்றன.

   இட்லிக்கு பின் தோசை என்பது இயற்கையின் தொடர் நிகழ்வு. இட்லிகள் பூக்கள். தோசைகள் என்பவை கல்லில் பழுப்பவை. அதிக நேரம் இருவர் மெளனமாக இருக்கும்போது  சிறிது புளிப்பு ஏற்படும். அப்போது சுவையான உரையாடலில்  ஈடுபடுவது சுவையோ சுவை. முதல் நாள் மாவில் இட்லி உற்பத்தியாகும் அது மௌனம்.மறுநாள் சிறிது புளித்தவுடன் தோசைகளை படைப்பதுண்டு.அது பேச்சைப் போன்றது.

   மௌனத்தில் இருந்தே பேச்சு பிறக்கவேண்டும். இட்லியும் தோசையும் இதையே மௌனமாகவும் மொறுமொறுப்பாகவும்  வெளிப் படுத்துகின்றன. மௌனம்  என்பது இட்லியின் வடிவமாக இருப்பதால் இரண்டு நிலைகளை இட்லிகள் எடுக்கத் தேவை இல்லை. அவை ஒரே நிலையில் உருவாகின்றன. இட்லிகள் பிரண்டு படுப்பதில்லை, தோசை என்பது பேச்சின் வடிவமாக இருப்பதால் அது வாயின்  தன்மையை பெற வேண்டி இருக்கிறது.தோசைக் கரண்டிதான் நாவு. சுவையூறும் உமிழ் நீர் போன்றது எண்ணை. நாவு இரண்டு பக்கமும் பேசும். கரண்டி நாவுகள் தோசையை இரண்டு பக்கமும் திருப்பிப் போடும். மௌனத்திடம் நாவுக்கு என்ன வேலை?

   இட்லிக்கும் தோசைக்கும் தொடர்பிருந்தாலும் இட்லிக்கும் தோசைக் கரண்டிக்கும் தொடர்பில்லை. மௌனத்தின் ருசி உமிழ் நீருக்கு அப்பாற்பட்டது என்பதால்  இட்லியின் உருவாக்கத்தில் எண்ணைக்கு பெரிய இடமில்லை. இட்லி குழந்தை; தோசை வளர்ச்சி; தாயின் மடியிலிருந்து  பிரண்டு விழும் குழந்தையைபோல துணியிலிருந்து இட்லி விழுவது அழகின் அடுக்கு .தோசைகள் வளர்பவை. ஹோட்டல்களில் தோசை, கல்லில் ஊற்றப்பட்டு பின்எழுதப்பட்டு பின் சுடப்பட்டு பின் சுருட்டப்பட்டு பின்னும் கட்டுக்குள் அடங்காமல் படைக்கப் படுகின்றன. 

   இட்லிகள் பிறந்த வீட்டின் பெருமையும் புகுந்த வீட்டின் தன்மையும் கொண்ட பெண் போன்றவை. பிறந்த வீட்டின் பெருமை  என்பது வெண்மை நிறம். இட்லியின் வளரச்சியில் இட மாற்றம் உண்டு என்றாலும் நிற மாற்றம் கிடையாது. புகுந்த வீடு என்பது குழிவு ஆனால் இட்லிகளில் குழிவுகள் தெரியாது.அதையும் மேடாக்கிக் காட்டும் மேன்மை பொருந்தியவை இட்லிகள். தோசைகளில் தோசைக்கல்லின் வடிவம் முழுமையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஹோட்டல்களில் சதுரக்கல்லில் வட்ட தோசைகளும் முக்கோணமாக மடிக்கப் பட்ட தோசைகளும் பிறக்கின்றன. வீட்டில்கூட பிற  வடிவத்தை தோசைகள் ஏற்றுக் கொள்வதில்லை. இருந்தாலும் இட்லிக்கு தோசை மீது ஆழ்ந்த பிரியம் உண்டு. ஒன்றில் ஊற்றப்பட்டு அதன் வடிவத்தை ஏற்பதை வார்க்கப்படுதல் என்பார்கள்.உண்மையில் இட்லிகள்தான் வார்க்கப் படுகின்றன என்றாலும் அந்தப் பெயரை தோசைக்கு கொடுப்பதில்தான் இட்லிக்கு சந்தோஷம். 

  குழந்தைகள் இளமைப் பருவத்தை அடைந்தவுடன் பழைய அடையாளங்கள் மறைந்து புதியவை பிறக்கும். புதிய உறவுகள் கூடும். தோசைகள் அப்படிப்பட்டவை. தோசைகள் வண்ணத்தை மாற்றிக் கொள்ளும்; புதியவைகளை சேர்த்துக் கொள்ளும். ரவா தோசை, மசாலா  தோசை, பொடி தோசை வெங்காய ஊத்தப்பம் என பலப்பல வகைகள்; குட்டித் தோசை கல் தோசை என்ற பல வடிவங்கள். அதிலும் இந்த மசாலா தோசைகள் மிகவும் சுவாரசியமானவை. உருளைக் கிழங்குகள் மண்ணுக்குள் விளைபவை. சட்னி தரும் தேங்காய்கள் விண்ணில் தொங்குபவை. மண்ணுக்குள் விளைந்த உருளைக் கிழங்கை வயிற்றுக்குள் வைத்த மசாலா தோசைக்கு விண்ணில் விளைந்த தேங்காய்ச் சட்னி ஏகப் பொருத்தம். 
  குழந்தைகளை தொட்டுப் பார்க்கத் தூண்டுவது எல்லோருக்கும் இயற்கைதானே. இட்லிகளை தொட்டுப் பார்ப்பார்கள்.சமைத்தவரின் விரலைப் பதிவு செய்யும் பழக்கம் சில இட்லிகளுக்கு உண்டு. ஆசை ஆசையாக பார்த்து செய்யப்பட வேண்டியது தோசை. இட்லிகள் பூப்பதை  யாரும் பார்க்க முடியாது. இட்லி மௌனத்தின் ரகசியம். 

   குழந்தைகளில் குட்டிக் குழந்தைகள் இருப்பது மாதிரி. இட்லிகளில் குட்டி இட்லிகள் உண்டு குழந்தைகளுக்கு குளிப்பது பிடிக்கும்தானே? குட்டி இட்லிகளை சாம்பாரில் குளிக்க வைக்க வேண்டும். பாத் டப்பைப் போல இந்தத் தட்டும் குளிப்பதற்கு ஏற்றார்போல குழிவாக இருக்கும். குட்டி இட்லிகளை கைகளால் தொடக் கூடாது. ஸ்பூனால் எடுத்துப் போடவேண்டும். 

  இட்லிக்கும் தோசைக்கும் ஒரு பெரிய ஒற்றுமை இருக்கிறது. ஒன்று பழைய தமிழ்ச் சொல்லையும் மற்றொன்று பழைய கலாசாரத்தையும் நினைவூட்டுகிறது. 'இடு' என்பது இடுதலை குறிக்கிறது. இட்டு மூடி விடுபவை இட்லிகள். கல்லில்தான் ஆதி மனிதர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள். இன்றைக்கு இரும்பிலும் மற்ற உலோகத்திலும் வந்தாலும் அதற்குப் அவற்றிற்குப் பெயரென்னவோ தோசைக் கல்தான். இடு என்பது துன்பத்தையும் குறிக்கும். இடுக்கண் வரும்போது சிரிக்கவேண்டும் என்கிறார் வள்ளுவர். பள்ளங்களில் இடப் படும் மாவு இட்லியாகச் சிரிக்கிறது;பக்குவமடைகிறது. ஒரே மாவுதான் இட்லியாகவும் சிரிக்கிறது; தோசையாகவும் இருக்கிறது; மௌனமாகவும் இருக்கிறது; பேச்சாகவும் இருக்கிறது;. இரண்டுமே தேவைப் படுகிறது வாழ்க்கைக்கு.

இதையெல்லாம் விட்டுட்டு  தோசைக்கும் இட்லிக்கும் சாதி சாயம் பூசியது நியாயம்தானா?

செவ்வாய், 16 அக்டோபர், 2018

96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo

   
 வைரமுத்து நான் மதித்து வந்த ஒரு கவிஞர்.  அற்புதமான சொல்லாற்றல் உடையவர். திரைப் பாடல்களுக்கும் கவிதை உணர்வைத் தந்தவர். அவருடைய பல கவிதைகளை நான் என் வலைப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.  அவரது கவிநயம் கண்டு வியந்திருக்கிறேன்.
       
       திரை உலக பிரபலங்கள் பெரும்பாலும் அரசியல் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள். .ஆனால் ஜெயலலிதா கோலோச்சியபோது கூட கலைஞருடனான நெருக்கத்தை அவர் விடவில்லை வைரமுத்து. எனினும் அவர் அவ்வப்போது மோடியையும் புகழ்ந்து பேசவும்  தயங்கியதில்லை. அவர் புகழுக்கும்  விருதுகளுக்கும் ஆசைப் படுபவர்.அதை எப்படியாவது வாங்கும் திறமை படைத்தவர் என்பது பரவலாக அறியப்பட்ட ஒன்று. ஆனால் பாலியல் புகாருக்கு ஆளாவார் என்பது எதிர் பாராத ஒன்று

       #MeToo tag  மூலம் இந்தியா முழுதும் பல பிரபலங்களின் பாலியல் தொல்லைகள் அம்பலப் படுத்தப் பட்டு வருகின்றன. அதிகாரம் செல்வாக்கு பணபலம் இவற்றால்  தவறுகள் யாருக்கும் தெரியாது என்று இருமாப்புடன் இருந்தவர்களுக்கு வில்லனாய் வந்தது #MeToo.  தமிழ்நாட்டில் இந்த இயக்கத்தில் முதலில் சிக்கிக் கொண்டார் வைரமுத்து .அவரைப் பற்றி சின்மயி பாலியல் தொல்லை குற்றச்சாட்டு கூறியுள்ளது . தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில்  விவாதப் பொருளாக மாறியுள்ளது. பெரும்பாலான பெண்கள் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆண்களைப் பொறுத்தவரை பிஜேபி யினர் மற்றும் ஆண்டாள் பற்றிய வைரமுத்துவின் கருத்தின்மீது கோபம் கொண்டவர் மட்டுமே இவ்விஷயம் சார்ந்து வைரமுத்துவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.  

     இனம் சார்ந்த நோக்கில் ஆண்களில் பலர் சின்மயின்மீது குற்றம் சுமத்தவும் தவறவில்லை.  நீ என்ன யோக்கியமா என்ற தொனியில் ஆபாசமான வசை பாடல்களை காணமுடிகிறது. பெரியாரிய வாதிகள் . பலர் இன்று அமைதி காக்கின்றனர்.  . இதற்கு சின்மயியும் ஒரு காரணம். ஏற்கனவே  தன்னை பார்ப்பனர் என முன்னிலைப் படுத்திக் கொண்டதில் பார்ப்பனர் அல்லாதவரின் ஆதரவை இழந்தார்.. . இதனால் ஆண்டாளுக்கு ஆதரவான பார்ப்பன சதி என்று கூறிவிடவும் முடியவில்லை. காரணம் பார்ப்பனர் சிலரும்  #MeToo இல் சுட்டிக் காட்டப்பட்டனர். ஆனால் அவர்கள் வைரமுத்துவைப் போல் புகழ் பெற்றவர்கள் அல்ல என்பதால் கவன ஈர்ப்பு பெறவில்லை. என்மீது வழக்கு தொடருங்கள் நான் நல்லவனா கெட்டவனா என்பதை நீதி மன்றம் முடிவு செய்யட்டும் என்று பதிலுரைத்துள்ளார் வைரமுத்து. ஆனாலும் இன்று வரை புகார்கள் தொடர்கின்றன.

     ஒரு சிலர் பெட்ரோல் விலை உயர்வு, ரபேல் விவகாரம் போன்றவற்றை மறப்பதற்காக திட்டமிடப்பட்டு பரப்பப் படுகிறது என்கின்றனர். ( அப்படி எல்லாம் கஷ்டப் படவே தேவை இல்லை. எப்படி இருந்தாலும் ரெண்டு நாள்ல நாமளே மறந்துடுவோம்.)

       இதனை ஏன் சின்மயி அப்போதே சொல்லவில்லை என்ற கேள்வி எழுகிறது. நடைமுறை  வாழ்க்கையில் சில விஷயங்கள் சில ஆண்டுகளுக்குப் பின்னரே சுட்டிக் காட்டப்பட்டு பிரச்சனை தொடங்கப் படுகிறது.  ..  மனைவி திடீரென்று ஒரு நாள் கணவனிடம் முதன் முதல்ல உங்க அம்மா என்ன பண்ணாங்க தெரியுமா என்று மாமியார் தொல்லைகளை கோபத்துடன் கூறுவார். இத அப்பவே சொல்ல வேண்டியதுதானே என்றால்,  ’அப்ப எங்க சொல்ல விட்டீங்க?’ என்று தொடங்கி நீங்க செஞ்சதை சொல்லவா என தொடர்வதும் நடைமுறை!
ஆண்கள் தங்கள் திரும்ணத்திற்கு முந்தைய காதலையோ அல்லது அந்தரங்க சம்பவங்களையோ தன் நண்பர்களிடம் கூச்ச மின்றி குற்ற உணர்வின்றி பகிர்ந்து கொள்ள் முடியும். ஆனால் எல்லா பெண்களும் தங்கள் நெருங்கிய தோழிகளிடம் கூட பகிர்ந்து கொளவார்களா என்பது ஐயமே

        வைரமுத்து சபலம் அடைந்திருக்கலாம். நெறி பிறழ்ந்திருக்கலாம்.தன் செல்வாக்கை பயன்படுத்தி இருக்கலாம் ஆனால் காமக் கொடூரன் அளவுக்கு சித்தரிப்பது சற்று அதிகமோ என்றே தோன்றியது. ஆனால் வைரமுத்துவின் மீது புதுப்புது புகாராக முளைத்துக் கொண்டிருப்பது அவர் மீதான நம்பிக்கையை குலைத்துவிட்டது.  பிரபலங்கள் இதனை பாடமாகக் கொள்வது நல்லது
.
   #MeToo  வில் பெண்கள் தைரியமாக தங்கள் அனுபவத்தை  பகிர்கிறார்கள். ஆனால் 96 படத்தை பார்த்து விட்டு ஆண்கள் ( நான் இன்னும் பார்க்கவில்லை) உருகி உருகி தங்கள்  பழைய காதலை முகநூலில்  பகிர்ந்தார்கள்.  அவர்கள் அனைவ்ரும் ஆண்களே. ஆனால் இதில் ஒரு பெண்கூட தன் காதலை  பகிர்ந்ததாகத் தெரியவில்லை.  முந்தைய தலைமுறை ஆண்களின் மனதை அறிந்தவர்கள் பெண்கள். . அதனால் இதுபோன்ற விஷயங்களை பகிர்ந்து சிக்கலை உருவாக்கிக் கொள்ள விரும்புவது இல்லை.

 ஒருபக்கம் #MeToo ஆண்களின் (பெரும்பாலும் வயதானவர்கள்) இன்னொரு பக்கத்தை வக்கிரங்களை   அடையாளம் காட்டுவது போலவே அடுத்த தலைமுறை ஆண்களின்  மனமாற்றத்தையும் (பெருந்தன்மையை?)  வெளிக்காட்டுகிறது என்று கூறலாம் கணவனிடம் தன் சிறுவயதில் நடந்த #MeToo சம்பவங்களை தைரியமாக பகிர்ந்து விட முடியாது. அதை கணவன் சரியாகப் புரிந்து கொள்வானா என்பது ஐயமே.ஆனால்  அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் ஆண்களுக்கு இப்போது வந்திருக்கிறது என்பதை சம்பவங்கள் உணர்த்துகின்றன. ஆனாலும்  தன் மனைவியின் கடந்த கால அந்தரங்க சம்பவங்கள் வெளியில் தெரிவதை எந்தக் கணவனும் விரும்பமாட்டான் என்பது நிதர்சனம். ஆனால்  தற்போது தைரியமாக சொல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சிலர் ஆதரவு அளிக்கிறார்கள். அதனால் பலரும் உசுப்பிவிடப் பட்டது போல் தங்களுக்கு நேர்ந்ததை கொஞ்சம் மிகைப்படுத்தியும்  தைரியமாக சொல்கின்றனர்..

 #MeToo வால் சில நன்மைகள் விளைந்தாலும் சில குறைகளும் உண்டு.  பெண்கள் ஒரு வித கழிவிரக்கத்தை தங்கள்மீதே ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு. இயல்பாக நடந்தவற்றைக் கூட பாலியல் சார்ந்ததாக இருந்திருக்குமோ என்ற எண்ணத் தோன்றும்.. இதைப்  பற்றி பேசும் பெண்கள் எல்லாம் இது உங்கள் வீட்டில் நடக்கலாம். பக்கத்து  வீட்டில் நடக்கலாம் என்று கூறுவதை காணலாம். இதனால்  தினந்தோறும் இப்படித்தான் நடக்கிறதோ என்ற மாயை உருவாக்கி விடும் அபாயம் உள்ளது. #MeToo வைக் காண்போர் நமக்கு   10 வயது இருக்குபோது தாய்மாமா என்னை இடுப்பைப் பிடித்து தூக்கி மடியில் உட்காரவைத்துக் கொண்டு கன்னத்தை கிள்ளி கொஞ்சினாரே அது கூட பாலியல் வன்முறையாக இருக்குமோ என்று ஆராயத் தொடங்கினாலும் ஆச்சர்யப் படுவத்ற்கில்லை.

     பொது வாழ்வில் உள்ளவர்கள் பிரபலங்களின் முகத்தை தோலுரித்துக் காட்டப் படுவதால் இனி தவறுகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதன் மூலம் எந்த பிரபலத்தின் மீதும் சேற்றை வாரி இறைத்து விடமுடியும். அதனால் பெண்கள் உண்மை எனும் பட்சத்தில் மட்டும் பகிர வேண்டும்.  ஆனால் நடைமுறை வாழ்வில் வீடுகளில் அலுவலகங்களில் இத் தொல்லைகளை அனுபவித்தவர்களுக்கு இதனால் அதிகப் பயன் ஏதுமில்லை/ இன்னும் சில நாட்களில் #MeToo மறக்கப் பட்டுவிடும்.  


செவ்வாய், 2 அக்டோபர், 2018

அதிசய வக்கீல் காந்தி

        
      
உலகத்திற்கே அகிம்சைப் போராட்டத்தை கற்றுத் தந்தவர் காந்தி
      வக்கீலாக வாழ்க்கையைத் தொடங்கிய மகாத்மாவின் வாழ்க்கை பல்வேறு திருப்பு முனைகளைக் கொண்டது. சொல்லுக்கும் செயலுக்கும் ஒரு நூலிழை வேறுபாடும் இன்றி வாழ்ந்து காட்டியவர்.
        பள்ளிப் பாடங்களில் காந்தியைப் பற்றி ஆசிரியர்கள் சரியாக கற்பித்ததாக நினைவில்லை. பெரும்பாலான தமிழாசிரியர்கள் காந்திக்கு எதிரான மனநிலையையே கொண்டிருந்ததாகவே கருதுகிறேன். அதனால் பள்ளி வயதில் காந்தி தாக்கம் ஏதும் ஏற்படுத்தவில்லை. ஆனால் பிற்காலத்தில் அவரைப் பற்றிய தகவல்களை படித்தறிந்தபோது ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சத்திய சோதனை படித்ததும் காந்தியின் மீதான உயர் எண்ணம் வலுப்பட்டது. காந்தி மீதான விமர்சனங்களும், எதிர்மறைக் கருத்துகளும் கேலிகளும் எந்த விதத்திலும் என் கருத்தில் மாற்றம் விளைவிக்கவில்லை. மகாத்மாவில் 150 வது பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
      பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியா வந்த பின் காந்தி வக்கீல் தொழிலில் ஈடுபட்டார்.  லண்டன் சென்று படிப்பதற்கு ஆதரவு கொடுத்து செலவுகளுக்கும் உதவிய காந்தியின் மூத்த சகோதரர் லட்சுமிதாஸ் காந்திக்கு, காந்தியின் மீது பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது. காந்தி வக்கீல் தொழிலில் பிரகாசித்து பொருளீட்டுவார் என்று நம்பினார். ஆனால் காந்தி முதல் வழக்கிலேயே சொதப்பினார். வாதாடுவதற்கு எழுந்து நின்றார். நாக் குழறியது . கட்சியின் கொள்கை என்ன என்று ரஜினியை பத்திரிகையாளர் கேட்ட போது தலைசுற்றியதாகக் கூறினாரே அது போல காந்திக்கும் தலை சுற்றியது. அவரால் வாதிட முடியவில்லை குறுக்கு விசாரணை செய்ய முடியாமல் தடுமாறினார். இந்த வழக்கில் வாதாட இயலாது என கூறி பெற்ற முன் பணத் தொகையை திருப்பிக் கொடுத்து விட்டார். சரிவர வக்கீல் பணியை செய்ய இயலாததற்கு வெட்கப்பட்டார் காந்தி.
   இந்த நிலையில் போர்பந்தரின் உள்ள ஒரு மிகப் பெரிய வியாபாரக் கம்பெனியினர் லட்சுமிதாஸ் காந்திக்கு ஒரு கடிதம் எழுதினர்,” எங்கள் கம்பெனி தென் ஆப்ரிக்காவிலும் வியாபாரம் செய்து வருகிறது. எங்களுக்கு பவுன் 40000 வர வேண்டி இருக்கிறது அதற்கான வழக்கு தென் ஆப்ரிக்காவில் நடந்து கொண்டிருக்கிறது . பெரிய வக்கீல்களையும் பாரிஸ்டர்களையும் அமர்த்தி இருக்கிறோம். வக்கீல்களுக்கு விஷயங்களை எடுத்துக் கூற உங்கள் தம்பியை அங்கு அனுப்பி வைக்க வேண்டும் எங்களை விட அவரால் தகவல்களை சிறப்பாக எடுத்துக் கூற முடியும் என்று நம்புகிறோம்” என்று காந்தியை அனுப்பக் கோரினர். 
     கோர்ட்டில் ஆஜராகாமல் வக்கீல்களுக்கு மட்டும் எடுத்துக் கூறும் வேலையாக இருந்தால் மட்டும் நல்லது என்று நினைத்தார்.
வேலை கடினமாக இராது என்றும் வக்கீல்களுக்கு தகவல்களை விளக்கும் நேரம் போக மற்ற நேரத்தில் எங்கள் வியாபாரத்தின் கடித விவகாரங்களை கையாண்டால் போதும் என்றும் 105 பவுன் சம்பளம் என்றும் போய் வர் கப்பலில் முதல் வகுப்புக் கட்டணம் வழங்கவும் சம்மதம் தெரிவித்தனர்.. தன் குடும்ப செலவுக்கு போதுமான தொகை தர இயலவில்லையே என்ற வருத்ததில் இருந்த காந்திக்கு இது மகிழ்ச்சியைத் தந்தது.
பாரிஸ்டராக அல்ல. அப்துல்லா கம்பெனியின் ஊழியராக நினைத்தே தென்னாப்ரிக்காவுக்கு புறப்பட்டார் காந்தி. பல நாட்கள் பயணத்திற்குப் பிறகு நேட்டால் துறைமுகத்தை அடைய அங்கேஅப்துல்லா அவரை வரவேற்றார். 
         மிகப் பெரிய வர்த்தகராக இருந்தாலும் இந்தியர்களுக்கு அங்கே உரிய மரியாதை இல்லை என்பதை தென்னாப்ரிக்காவில் கால் வைத்ததுமே காந்தி உணர்ந்தார் இது மிகப் பெரிய வருத்தத்தை தந்தது. அப்துல்லா சேத் துக்கு எழுதப் படிக்கத் தெரியாது. என்றாலும் விஷய ஞானமும் புத்திசாலித்தனமும் உடையவர் என்பதை அறிந்தார் காந்தி 
      டர்பன் நீதி மன்றத்திற்கு தலைப்பாகை அணிந்திருந்த காந்தியை அழைத்துச் சென்று அங்குள்ளவர்களுக்கு அறிமுகப் படுத்தினார் அப்துல்லா சேத். வக்கீல்களுக்கு அருகில் அமர்ந்திருந்த காந்தியையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தார் ஒரு மேஜிஸ்ட்ரேட்.. தலைப்பாகை அவர் கண்ணை உறுத்தியது. காந்தியை தலைப்பாகையை எடுக்கும்படி கோபத்துடன் கூறினார். காந்தி மறுத்து விட்டார். மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். காந்தி. காந்தியின் முதல் போராட்டம் இப்படித்தான் தொடங்கியது.
    அங்கு முஸ்லீம்கள் மட்டும் தலைப்பாகை அணிய அனுமதி உண்டு முஸ்லீம்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்லாமல் தங்களை அரேபியர்கள் என்று சொல்லிக் கொள்வதால் இந்த அனுமதி அவர்களுக்கு கிடைத்திருந்தாது
     இதனை காந்தி விடுவதாக இல்லை பத்திரிகைகளுக்கு தலைப்பாகை விவகாரம் பற்றி எழுதினார் காந்தி . நீதிமன்றத்தில் தான் தலைப்பாகை அணிந்தது நியாயம் என்று வாதாடினார் . இது சார்ந்து பத்திரிகைகள் பலத்த விவாதம் நடத்தியது. காந்தியை வேண்டாத விருந்தாளி என வர்ணித்தன . பைத்தியக்காரத்தனமான துணிச்சல் என்று சிலர் கண்டித்தனர். ஒரு சிலர் ஆதரவும் அளித்தனர். இதனால் காந்தி பிரபலம் அடையத் தொடங்கினார். முதல் வழக்கில் தோற்றாலும் முதல் போராட்டத்தில் வெற்றி பெற்றார். ஆம். தென் ஆப்ரிக்காவில் இருந்தவரை தலைப் பாகை அணிவதை கைவிடவில்லை. காந்தியின் உறுதி பாராட்டப் பட்டது. 
      வழக்கு தொடர்பாக அப்துல்லா சேத் தனக்கு பதிலாக காந்தியை பிரிட்டோரியா செல்லக் கோரினார். வழக்கு விவரங்களை சேத்தின் குமாஸ்தா விளக்கினார். வழக்கு முழுக்க கணக்கு விவகாரமாக இருந்தது. காந்திக்கு தலையும் புரிய வில்லை காலும் புரியவில்லை கணக்கு வைக்கும் முறையைஅறியாமல் இவ்வழக்கில் ஈடுபடுவது கடினம் என்று எண்ணினார். குமாஸ்தா பி. நோட்டு என்ற வார்த்தையை அடிக்கடி பயன் படுத்தினார். அது என்னவென்றே காந்திக்கு தெரிந்திருக்கவில்லை. பாரிஸ்டர் பட்டம் ஒரு ஏட்டு சுரைக்காய் என்பதை பல அனுபவங்கள் காந்திக்கு உணர்த்தின.. வெட்கத்தை விட்டு குமாஸ்தாவி\டம் கேட்டு பி. நோட் என்றால் பிராமிசரி நோட்டு என்று அறிந்தார். பின்னர் கணக்கு வைத்தல் சம்பந்தமான புத்தகம் ஒன்றைப் படித்து ஓரளவு தெளிவும் பெற்றார் காந்தி -
     பிரிட்டோரியாவுக்கு புறப்பட்டார் காந்தி இந்தப் பயணத்தில்தான் புகழ்பெற்ற திருப்புமுனை சம்பவங்கள் நடைபெற்றன இதனை ஏற்கனவே எழுதி விட்டதால் தவிர்த்து விட்டு பிரிட்டோரியாவில் நடந்ததைப் பார்ப்போம்
பிரிட்டோரியாவில்தான் வழக்கு சம்பந்தமான அறிவும் மக்கள் பணி பற்றிய தெளிவும் தனக்கு கிடைத்ததாக காந்தி கூறுகிறார். 
        அப்துல்லா சேத்தின் வழக்கு எளிய வழக்கல்ல சிக்கலான வழக்கு என்பதை காந்தி உணர்ந்தார். சிக்கலான கணக்குப் பதிவுகள். இருபுறமும் அலசப் பட வேண்டி இருந்தது. தன் கட்சிக்காரரான அப்துல்லாவின் பக்கம் நியாயம் இருந்தது. ஆனால் வழக்கு எப்போது முடியும் என்று சொல்வதற்கில்லை வழக்கு தொடர்ந்து நடந்தால் இருவருக்குமே எழுந்திருக்க முடியாத நஷ்டம் ஏற்படும் என்பதை திட்டவட்டமாக அறிந்தார் காந்தி. எதிரியான தயாப் சேத், அப்துல்லாவுக்கு உறவினரே என்பதை அறிந்த காந்தி சமரசம் செய்து கொள்ள பரிந்துரைத்தார். அரைகுறை மனதுடன் சம்மதித்தார் அப்துல்லா. காந்தி தயா சேத்தை சந்தித்து சமரசத்திற்கான அவசியத்தை வலியுறுத்தினார், இருவரும் நம்பத்தகுந்த ஒரு மத்தியஸ்தர் மூலமாக வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதன் மூலம் 37000 பவுன் தயா சேத், அப்துல்லாவுக்கு செலுத்த ஒப்புக்கொண்டார். ஆனால் அவ்வளவு தொகையை ஒரே தவணையில் செலுத்தினால் அவர் திவால் ஆகி விடுவார் என்ப்தை காந்தி உணர்ந்தார். ஆனால் தயாசேத்தோ ஓரே தவணையில் செலுத்துவதே கவுரவமாகக் கருதினார். தவணை முறையில் பெற்றுக் கொள்ள அப்துல்லாவும் சம்மதித்தார். இரு பெரும் வியாபாரிகளின் பிரச்சனை முடிவுக்கு வந்ததில் தென்னாப்ரிக்க இந்தியர்கள் மகிழ்ந்தனர்.
பிளவுபட்ட இரு கட்சிக்காரர்களை ஒன்று சேர்ப்பதே ஒரு நல்ல வக்கீலின் கடமை என்று கருதினார் காந்தி. 
  தான் வக்கீல் தொழில் நடத்திய 20 ஆண்டுகளில் நூற்றுக் கணக்கான வழக்குகளில் தனிப்பட்ட முறையில் சமரசம் செய்து வைத்ததில்தான் நான் அதிக ஆனந்தம் அடைந்தேன் என்று கூறிய காந்தி அதிசய வக்கீல்தானே!

---------------------


காந்தியைப் பற்றிய பிற பதிவுகள்


1.தற்கொலைக்கு முயன்ற காந்தி
2. காந்தியைப் பற்றி சுஜாதா
3.நீதிபதியின் கேள்வி-மிஸ்டர் காந்தி! இது மோசடி வேலை .
4.வக்கீல் தொழில் பொய்யர்களின் தொழிலா? தெரிந்த வரலாறு...
5.அகிம்சை அண்ணல் சுடப்பட்டபோது
6.சர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா?சசித...
7.கோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி
8.காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்-
9.காந்தி தேசத் தந்தை இல்லையா?
10.எழுதியது யார்? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
12. தெரிந்த வரலாறு! தெரியாத சம்பவங்கள்!

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

அந்நியன் வருவானா? தண்டனை தருவானா?

                     


                        கணினி விசைப் பலகை-மேல் 
                             என் கண்ணீர் விழுந்திடுதே 
                         கவிதை எழுதுமுன்னே  -என் 
                             கைகள் நடுங்கிடுதே

                        நெஞ்சு  கொதிக்கிறதே-பாவிகளை
                             நிழலும் வெறுக்கிறதே 
                        பஞ்சு  மனங்கள் எல்லாம்-இன்று 
                            பதறித் துடிக்கிறதே!  

                         ஆசிஃபா மலர்மொட்டை

                                 அழித்த பாவிகளே! 
                         காஷ்மீர் கோவிலிலே ஒரு 
                                கொடுரம் நிகழ்த்திவிட்டீர் 

                           மதம்தான் காரணமா -பிடித்த

                                 மதம்தான் காரணமா ?
                            மனிதம் மறந்துவிட்டீர் -சொந்த 
                                    மதத்தை அவமதித்தீர்  

                         பச்சிளங் குழந்தையினை-படு 
                                 நாசம் செய்து விட்டீர்
                          இச்சை தீர்ப்பதற்கு - நீங்கள் 
                                 இழி செயல்  செய்தீரே

                            வாரித் தூற்றுதற்கு 
                                    வார்த்தைகள்  போதவில்லை 
                           காரித் துப்புதற்கு -  வாய்
                                   எச்சில் போதவில்லை                      


                        அகிம்சை விரும்பி;நான்-இன்று
                            இம்சை விரும்பினேன் 
                        அந்நியன்  தேடுகின்றேன்- ஒரு 
                            அதிரடி நாடுகின்றேன்.

                        அப்படிஒருவன் இருந்தால்-இந்த
                            அநியாயம் கண்டபின்னே
                        இப்படி  தண்டனைகள் -இன்று
                            தந்துதான் செல்வானோ!

                        கண்ணைப்  பிடுங்கிடிவான்- அவன் 
                            காட்சி பறித்திடுவான்
                        புண்ணாய் ஆக்கிடுவன் -அவனை 
                            பொத்தல் செய்து வைப்பான்

                        காமக்  கொடுஞ்செயல்கள் - பல
                            புரிந்த   பாவிகளைப்
                        சாமப் பொழுதுக்குள் --கொடும்
                            சாவறிய வைத்திடுவான்.

                        பாம்புகள் நடுவேதான் -அவனை 
                             படுக்கவே வைத்திடுவான் 
                        சாம்பல் ஆகும்வரை  -அவனை
                            எரித்துப் பொசுக்கிடுவான் 

                       நாக்கைப் பிடுங்கித்தான் -அவனை 
                            நடுங்க வைத்திருப்பான் 
                       காக்கையை அழைத்து -அதை
                            வீசி எறிந்திருப்பான்
  
                       உடலில்  ஆடையுருவி-அவனை 
                            உறுமீன் இரையாக 
                       கடலில் வீசிடுவான் -அவன்
                            கால்களை கட்டிவைத்து
  
                       காலில் செருப்பகற்றி -அவனை
                           கடும்பகல் வெயிலிலே
                       பாலையின் நடுவேதான்-தனியாய் 
                           பரிதவிக்க விட்டிடுவான் 

                       சுட்ட நீரைத்தான் -எடுத்து 
                           முகத்தில் வீசிடுவான் 
                       கட்டி நெருப்பெடுத்து-அவன் 
                           கையில் தைத்திடுவான்  

                       உறுப்பை  அறுத்திடுவான் -அவன் 
                            உடலை சிதைத்திடுவான்
                       வெறுப்பை  காட்டிடுவான் -இன்னும்
                            வேறுபல  செய்திடுவான்

 
                   அந்நியா  வருவாயா?  -கடுந்

                              தண்டனை தருவாயா  
                       புண்ணியம் உனக்கே தான்- உடனே  
                                புறப்பட்டு  வருவாயே!