என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 29 ஜனவரி, 2013

நீயா? நானா?காதல் திருமணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதா?



   நமது சமுதாயத்தில் காலம் காலமாக காதல் திருமணங்கள் நடந்ததாலும் கூடவே அதற்கு ஆதரவும்,  எதிர்ப்பும் இருந்து  வந்திருக்கிறது. ஆனால் இப்போது ஆதரவு கூடி இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். இதில் சினிமாவிற்கு பெரும்பங்கு உண்டு.
  20.01.2013 அன்று நீயா நானா நிகழ்ச்சியில் காதலை ஆதரிக்கும் பெற்றோர்களும் எதிர்க்கும் பெற்றோர்களும் விவாதித்தனர். வழக்கம்போல கோபியூத் சாரி கோபிநாத் காதலை ஆதரித்து பேசினார்.(கோபிநாத்தின் திருமணம் காதல் திருமணம் இல்லை என்று நினைக்கிறேன்.)

 காதல் திருமண எதிர்ப்பிற்கு காரணம் சாதிதான் என்று  நிகழ்ச்சியில்  பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களில் சுபவீ அவர்களின் பேச்சு எதிர்வாதம் செய்ய முடியாத அளவிற்கு சிறப்பாக இருந்தது. ஆனால் வாதம் செய்ய முடியாதே தவிர மனதை மாற்றிவிடுமா என்றால் சந்தேகமே! பத்திரிகையாளர். இறைவன் ,"என்னதான் சாதிகள் வெளியே இல்லை என்று சொன்னாலும் உள்மனதில் சாதீய உணர்வு இருப்பதை   மறுக்க முடியாது" என்றார்.

அதற்கு உதாரணம் இதில் பங்கேற்ற ஒருவர் இளவயதில் சாதி மதம் பார்க்காமல் காதலித்து திருமணம் செய்தவர்.அவர் கூட  பிற்காலத்தில் தன் வாரிசுகள் காதலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியது பத்திரிகையாளர் இறைவன் கருத்தில் இருந்த உண்மையை சுட்டிக் காட்டியது.

  தாழ்த்தப்பட்ட இனத்தில் பெண் கொடுப்பதையோ எடுப்பதையோ விரும்பவில்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்தது ஒரு தரப்பு. சமூகத்தில் பலர் சொல்லவில்லையே தவிர உள்மனதின் நிலை இதுதானே!

  கிராமப் புறங்களில் காதல் திருமணம் ஒரு பிரச்சனையாக இருந்தாலும் தற்போது குறிப்பாக நகர்ப்புறப் பெற்றோர்களின் மனநிலை மாறியுள்ளதாகவே தெரிகிறது. நிச்சயிக்கப்படும்  திருமணங்களிலும் இப்போது மாற்றம் வந்திருக்கிறது.   உட்பிரிவுகளை பொருட் படுத்தாமல் நிச்சயம் செய்யப் படுகிறது. காதல் திருமணத்தை விரும்பாவிட்டாலும் தீவிர எதிர்ப்பு காட்டுவதில்லை. மகன் அல்லது மகனுடன் பேசி காதல் திருமணத்தை நிச்சயிக்கப்பட்ட திருமணமாக மாற்றிவிடுகிறார்கள்.அதனால் பல சிக்கல்கள் தீர்ந்து விடுகிறது. உறவினர்களின் முணுமுணுப்பை கண்டு கொள்வதில்லை. 

  எனது நண்பர்களில் ஒரு சிலர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். சிலரது காதல் பாதியில் முடிந்திருக்கிறது. இந்தக் காதல்களில் ஒரு விஷயம் கவனித்தேன். நகர்ப்புறமாக இருந்தாலும் சாதிகளின் பங்கு இருக்கத்தான் செய்கிறது. பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய இனத்தை விட  உயர்ந்த சாதியாக தாங்களே கருதும் பெண்களைத்தான் காதலிக்கிறார்கள். இதனை சாதனையாகவும் நினைக்கிறார்கள்.இதற்கு பல சமூக காரணங்கள் உண்டு.. இதற்கு பையனின் பெற்றோர்கள் அதிக எதிர்ப்பு காட்டுவதில்லை.

    கீழ் நிலையில் உள்ளதாககக் கருதப்படும்  இனத்தின்  பெண்ணை  காதலிப்பதை பெற்றோர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் தன்பெண்  தன்னைவிட கீழ் சாதியாக கருதப்படும் ஆணை  காதலித்தால்  வெட்டிவிடுவேன் என்று சொன்னது அதிர்ச்சி ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் சில இடங்களில் அவ்வாறுதான் நடந்து கொண்டிருகின்றன.

 நிகழ்ச்சியில்   தாழ்த்தப்பட்ட இனப் பெண்ணை யார் காதலிப்பதற்கும் தடை ஏற்படுவதில்லை  என்றார்  எழுத்தாளர் இமயம்
   ஆனால் தன் இனத்தை விட  கீழானதாக நினைக்கும்    சாதிப் பெண்ணை காதலித்து திருமணம் செய்வது அரிய நிகழ்வாகத்தான் இருக்கிறது.  காதலிப்பவனே  திருமணம் செய்து கொள்ள முழுமனதுடன் விரும்புவதில்லை என்றே கருதுகிறேன்.  இதற்கு விலக்குகளும் உண்டு.

  ஆண்  அழகைப் பார்த்தே காதலை தொடங்குகிறான். தொடர்கிறான்
தொடக்கத்தில் ஆணின் தோற்றத்தால் பெண்கள் கவரப் பட்டாலும் தன்னை உண்மையாக காதலிப்பவன் என்று பெண் நினைத்தால் அவனது அழகைப் பற்றி சிந்திப்பதில்லை என்பது எனது கருத்து. பெண்கள் பெரும்பாலும் சாதிகள் பார்ப்பதில்லை என்பது நல்ல விஷயம்.

   காதலால் சாதிகள் ஒழியும் என்ற நப்பாசை நிறையப் பேருக்கு உண்டு.எத்தனையோ காதல் திருமணங்கள் நடந்தாலும் சாதிகள் ஒழிய அது உதவியதா என்பது கேள்விக் குறியே! மேல் தட்டு வர்க்கத்தினரிடம் காதல் பெரிய  பாதிப்பை ஏற்படுத்துவதில்லை நடுத்தர வர்க்கமும் ஏழை வர்க்கமுமே காதலால் அதிக பாதிப்பை சந்திக்கின்றன.

   எந்த  சாதியாக இருந்தாலும் அழகான அல்லது திறமையான பெண்களே காதலிக்கப்படுகிறார்கள். ஆனால் ஆண்கள் அப்படி அல்ல. காதலிக்கப்படாத அல்லது காதலிக்காத பெண்களுக்கு நிச்சயிக்கப்படும் திருமணமே கை கொடுக்கிறது. யாருக்காவது வறுமையில் வாடும் பெண்ணை பார்த்து காதலிக்கவும் திருமணம் செய்து கொள்ளவும் தோன்றுகிறதா என்று கேட்கப்பட்ட கேள்வி சிந்திக்க வைத்தது.

  நல்ல மாற்றங்களுக்கு காதல் திருமணம் உதவினால் மகிழ்ச்சிதான். அதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

*****************************************************************************************

சனி, 26 ஜனவரி, 2013

உங்களுக்கு குடியரசு தினம்!..ஆனால் எனக்கு?

இது சரவணன் மீனாட்சி
 இன்னைக்கு  குடியரசு தினம் சந்தோஷமாக கொண்டாடி  இருப்பீங்க இன்றுதான் நமது அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள். அது மாதிரி எனக்கும் புது சட்டங்கள் அறிமுகப் படுத்தப்பட்ட நாள் அதாங்க எனக்கு திருமண நாள். அதனால காலையில  இருந்து சட்ட திட்டங்களை மீறி பதிவு எதுவும் போடமுடியல
   இப்பதான் டைம் கிடைச்சது கல்யாணம் மனைவி  பற்றிய சில ஆங்கிலப் பொன்மொழிகளை போட்டு உங்களை கடுப்பேத்தலாம்னு  முடிவு பண்ணேன். உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருந்தாலும் சும்மா இன்னொரு தடவை படிச்சு பாருங்க 
எனக்கு தெரிஞ்சவரை தமிழ் படுத்தி இருக்கேன். தப்பா இருந்தா சொல்லுங்க . நான் கொஞ்சம் பீட்டர்ல வீக்

1.In my house I’m the boss, my wife is just the decision maker.

- Woody Allen

என்  வீட்டில் எல்லா அதிகாரமும் எனக்கே.என் மனைவி சும்மா முடிவு எடுப்பவர் மட்டுமே .

2. My wife and I were happy for twenty years. Then we met.-
- Rodney Dangerfield
  நானும் என் மனைவியும் 20 வருடமா சந்தோஷமா இருந்தோம்.அதாவது திருமணம் ஆகும் வரை 


3. After marriage, husband and wife become two sides of a coin; they just can’t face each  other, but still they stay together.-
- Henny Youngman
 திருமணத்திற்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.எதிர் எதிராக இருந்தாலும் இணைந்துதான் இருக்கவேண்டும் 

4. We always hold hands. If I let go, she shops.-
   நாங்கள் எப்போதும் இணைந்தே செல்வோம்.அவ்வாறு இல்லையெனில் அவள் ஷாப்பிங் சென்றிருக்கிறாள் என்று அர்த்தம்.

5. Marriage is a three ring circus: engagement ring, wedding ring, and suffering.
   திருமணம் என்பது மூன்று மோதிரங்கள் கொண்ட சர்க்கஸ்.1.engagement ring, wedding ring, and suffering.

 6.My husband said he needed more space. So I locked him outside.
  என் கணவர் அவருக்கு அதிக இடம் கொடுக்க வேண்டும் என்றார், வீட்டின் வெளியே இருக்க சொல்லி விட்டேன்.

7. Marriage is when a man looses his bachelors degree and woman gets her masters degree.
   திருமணத்தின் போது ஆண் பேச்சிலர் பட்டத்தை இழக்கிறான். பெண்ணோ முதுகலை பட்டத்தை பெறுகிறாள்

8. I don’t worry about terrorism. I was married for two years

- Sam Kinison

  நான் தீவிர வாதத்தை பற்றி கவலைப் படுவதில்லை.ஏனனில் எனக்கு திருமணம் ஆகிவிட்டது.


9. Marriage is the only war in which you sleep with the enemy.
  எதிரியுடன் உறங்க வேண்டிய ஒரே போர் திருமணம்தான் 

10. Love is blind, marriage is the eye-opener.
    காதல் கண்களை மறைக்கும். கல்யாணம் கண்களை திறக்கும்
  
11-Why are wives more dangerous than the Mafia?
The mafia wants either your money or life… Wives want both! 

  கொள்ளைக்காரனுக்கு  உங்கள் பணம் அல்லது உயிர் ஏதாவது ஒன்று  வேண்டும் . மனைவிக்கு இரண்டும் வேண்டும்  

12. The only moment that my wife listens to me is when I’m talking in my sleep.
   நான் தூக்கத்தில் பேசும்போது மட்டுமே என் மனைவி என் பேச்சை கவனிப்பாள்

13. Behind every successful wife, stands a surprised mother in law.
   ஒவ்வொரு வெற்றி கரமான மனைவிக்கும் பின்னால் அவர் அம்மா இருப்பார் 

14. Marriage is like a public toilet. Those waiting outside are desperate to get in & those inside are desperate to come out...
திருமணம் என்பது ஒரு பொதுக் கழிப்பறை போன்றது.வெளியே காத்துக் கொண்டிருப்பவர்கள் சீக்கிரம் உள்ளே போக துடிப்பார்கள். உள்ளே இருப்பவர்களோ வெளியே வர விரும்புவார்கள்

  15. A good wife always forgives her husband when she's wrong.
   ஒரு நல்ல மனைவி தான் செய்த தவறுகளுக்கு பெருந்தன்மையுடன் கணவனை மன்னித்து விடுவார் 

அப்ப எல்லா நாட்டுலயும் இப்படித்தானா?


*********************************************************************************
என் பதிவிலிருந்து
 
உன் சமையல் அறையில் நான் உப்பா? சர்க்கரையா?'.
சமையல் காரரே நீங்கதானே!


****************************************************************************
இதைப் படித்து விட்டீர்களா?

வெள்ளி, 25 ஜனவரி, 2013

அரவாணிகள் கவிதைப் பதிவில் செய்த தவறு.

   முந்தைய பதிவில் அரவாணிகள் பற்றிய இரண்டு கவிதைகள் வெளியிட்டிருந்தேன், அதில் ஒன்று பிரபல கவிஞர் எழுதியது ஒன்று நான் எழுதியது.எதை யார் எழுதியது என்பதை கண்டுபிடிக்கச் சொல்லி இருந்தேன். பெரும்பாலானவர்கள் எது நான் எழுதியது என்பதை சரியாகக் கணித்துள்ளனர். பலர் இன்னொரு கவிதையை அறிந்திருந்தாலும்  எழுதிய கவிஞரின் பெயரை  மட்டும் கண்டுபிடிக்கவில்லை. முதல் கவிதை "நாங்கள் யார்" நான் எழுதியது. இரண்டாவது கவிதை "காகிதப் பூக்கள்" எழுதிய கவிஞர் நா.காமராசன் அவர்கள். அவர் எழுதிய கருப்பு மலர்கள் என்ற கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது இக் கவிதை . நிறையப் பேர் அரவாணிகளின் வலிகளை சொல்லும் இரண்டு கவிதைகளுமே நன்றாக இருக்கின்றன என்று கூறினாலும் அவரது கவிதை என்க விதையை  விட உயர்வானது என்பதே என் கருத்து.

பலர் கருத்திட்ட போதும் நான் எதிர்பார்க்காத கருத்தை பெயர் சொல்லாத ஒருவர் கூறி இருந்தார் 

// ரயிலில் செல்லும் போது, திருநங்கை உங்களிடம் மிரட்டி பணம் வாங்குகிறார். கையில் இருக்கும் எதையாவது பிடுங்கி கொண்டு விடுகிறார். என்ன நினைப்பீர்கள்? கோபம், வருத்தம் துளியும் படாமல், சாந்தமாக நின்று கொண்டு இருப்பீர்களா?

உங்களிடம் அவர்கள் வந்து காசு கேட்டால் எவ்வளவு கொடுப்பீர்கள்?
பஸ்ஸில் உங்கள் அருகில் அவர்கள் உட்கார்ந்தால் எவ்வாறு உணர்வீர்கள்? அவர்களிடம் பேசுவீர்களா?
கவிதையை தவிர, அவர்களுக்கு ஏதாவது உதவி, நன்மையை செய்திருக்கிறீர்களா? அவர்களை எவ்வாறு நடத்தியிருக்கிறீர்கள்?

முடிந்தால் மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள்.//
என்று எழுதி இருந்தார்

   நான் தினமும்  மின்சார ரயிலில்தான் பயணம்  செய்கிறேன். அவர்கள் காசுகேட்கும்போது அவ்வபோது என்னால் முடிந்ததைக் ( 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை) கொடுத்திருக்கிறேன் என்பதைத் தவிர வேறு எதுவும் பெரிதாக செய்ததில்லை என்பது உண்மைதான்.  பல சமயம் கொடுக்காமலும் இருந்திருக்கிறேன். திட்டும் வாங்கி இருக்கிறேன். முதன் முதலில் அவர்களைப் பார்த்தபோது சற்று பயம் இருந்தது. நாளடைவில் அது மறைந்து விட்டது. ஏதாவது செய்ய வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. எப்படி என்றுதான் பிடிபடவில்லை. . பொதுவாக அவர்கள் காலியாக இருந்தாலும் இருக்கைகளில் உட்காருவதில்லை.   
    ஒரு சமயம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் பார்த்த ஒரு சில  நிகழ்வுகளின் பாதிப்பிலும் அவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் உண்மையான பாதிப்பிலும் தான்  இந்தக் கவிதையை எழுதினேன். அரசாங்கம் இவர்களுக்கு என்ன செய்கிறது  தனி மனிதன் என்ன செய்ய முடியும், சமுதாயம் சென்ன செய்ய வேண்டும் நல்ல தீர்வுகளுக்கு வாய்ப்பு உண்டா?   என்பது போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள முயற்சி செய்வேன்.

    நாங்கள் யார் கவிதை எழுதி ஓராண்டுக்கு மேலாக இருக்கும். இந்தக் கவிதையை மட்டும் வெளியிடுவதாகத்தான் இருந்தேன்.இதை பற்றி வேறு யாராவது எழுதி இருப்பார்களா என்று தேடினேன்.குறிப்பாக வைரமுத்துவின் கவிதைகளில் தேடினேன்.  தமிழ் படித்த ஆசிரியர் ஒருவர் நா. காமராசன் இது பற்றி எழுதி இருக்கிறார். தற்கால இலக்கியத்தில் படித்ததாக நினைவு என்றார். காமராசன் என்றதுமே கருப்பு மலர்கள் நூல் நினைவுக்கு வந்தது. கேள்விப் பட்டிருக்கிறேனே தவிர படித்ததில்லை. சமீபத்தில் நான் கன்னிமாரா நூலகம் சென்றபோது அந்தப் புத்தகம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதையும் சேர்த்து பதிவிட முடிவு செய்தேன். இதுவரை தவறு ஏதுமில்லை.

  பொதுவாக கவிதைகளுக்கு கருத்துக்கள் அதிகமாகக் கிடைத்தாலும் மொத்த பார்வையாளர் எண்ணிக்கை பிற பதிவுகளைவிட  குறைவே (எனது கவிதைகளுக்கு).  பிரபலத்தின் கவிதை அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்  என்பதற்காக கவரும் விதமாக தலைப்பும் வோட்டுப் பட்டனும் வைத்தேன். அரவாணிகளின் வலிகளை சொல்லும் பதிவில் சவால், இரண்டு கவிதைகளை ஒப்பிடும் விதமாக ஒட்டுப்பட்டை இதெல்லாம் தேவையா என்று அவர் சுட்டிக் காட்டியதும் நான் செய்தது தவறு என்று உணர்ந்து கொண்டேன்.  கருத்தை ஏற்று அதை  நீக்கி விட்டேன். இது போன்ற பதிவுகளின்போது பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டேன். கருத்துக்களைப் பதிவு செய்த அத்துணை பேருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

*******************************************************************************************
அந்தக் கவிதைகள் இதோ
அரவாணிகள் -பிரபல கவிஞர் எழுதியது எது? 

*****************************************************************************************

புதன், 23 ஜனவரி, 2013

பிரபல கவிஞர் எழுதியது எது?



  அரவாணிகள் பற்றிய இவ்விரண்டு கவிதைகளில். ஒன்று பிரபல கவிஞர் எழுதியது. ஒன்று  நான் எழுதியது. எதை  யார் எழுதியது  என்பதைக் கண்டு பிடியுங்கள். கவிஞர் பெயரையும் சொல்லுங்கள். நீங்கள் எளிதில் கண்டு பிடித்து விடுவீர்கள்.

                         நாங்கள் யார்? 
                    நாங்கள் யார்?
                    எங்களுக்கே ஐயமுண்டு!

                    நாங்கள்

                    பாலினம் அறியாத 
                    படைப்புப் பழுதுகள்!

                    வேராய் மாற முடியாத
                    வெற்று விழுதுகள்!

                    ஆணாய்ப் பிறந்தாலும்

                    பெண்மை உணர்வுகளால்
                    பேதப்  பட்டுப்போனவர்கள்!

                    பெற்ற அன்னையும்
                    வெறுத்ததொதுக்கும்
                    பெரும்பாவம் செய்தவர்கள்!

                    அலிகள் என்று 
                    உங்களால் கேலி செய்யப்படும் 
                    கேள்விக் குறிகள்!

                    கடுங்குரலும் கடுமுடியும்
                    காட்டிக் கொடுக்க 
                    கழிப்பறைக்குள் கூட 
                    அனுமதிக்கப்படாத
                    அருவெறுப்பு பிண்டங்கள்

                    எங்களுக்கும்  ஆசைதான்! 
                    கூடப் பிறந்தவர்களுடன் கூடி வாழ,
                    அன்னையின்  மடியில் 
                    அழுதபடி தலை சாய்க்க,
                    தங்கையின்  பூப்பெய்தலில்
                    பூரிப்படைய,
                    அண்ணனின் திருமணத்திற்கு 
                    அலங்காரமாய்ச் செல்ல!

                    என்ன செய்ய?
                    தெருவோரம்  நின்றால்கூட
                    துரத்தப்படும்
                    தெருநங்கைகளான  
                    திருநங்கைகள் ஆகிவிட்டோமே!
                   

                    கடவுளாய் இருந்தால் 
                    கை கூப்பி தொழுகிறீர்கள்!
                    மனிதராய்ப் பிறந்தால் 
                    கைகொட்டி சிரிக்கிறீர்கள்!

                    ஆனாலும்
                    நீங்களெல்லாம்  பெருந்தன்மை 
                    கொண்டவர்கள்தான்!
                    ஒரிலக்க எண்களில் 
                    மிகப்பெரியதை எங்களுக்கே 
                    சொந்தமாக்கி இருக்கிறீர்களே! 

****************************************************************************************

                          காகிதப் பூக்கள் 


                          காலமழைத் தூரலிலே
                          களையாய்ப் பிறப்பெடுத்தோம்
                          தாய்ப்பாலின் சரித்திரத்தில்
                          சதிராடும் புதிரானோம்

                          விதைவளர்த்த முள்ளானோம்

                          விளக்கின் இருளானோம்
                          சதை வளர்க்கும் பிணம் நாங்கள்
                          சாவின் சிரிப்புகள்

                          மூங்கையொரு பாட்டிசைக்க

                          முடவனதை எழுதி வைக்க
                          முடவன்  எழுதியதை
                          முழுக் குருடர் படித்ததுண்டோ

                          சந்திப் பிழை போன்ற 

                          சந்தததிப் பிழை நாங்கள்
                          காலத்தின் பேரேட்டை
                          கடவுள் திருத்தட்டும்

                          தலை மீது பூவைப்போம்

                          தாரணியோர் கல்லறையில்
                          பூவைத்தல்  முறைதானே
                          பூத்த உயிர் கல்லறைகள் நாங்கள்

                          தாய்ப் பெண்ணோ முல்லைப்பூ

                          தனி மலடி தாழம்பூ
                          வாய்ப் பந்தல் போடுகின்ற
                          காகிதப் பூக்கள் நாங்கள் 

******************************************************************************************

கவிதைத் தேர்தலில் ஒட்டு போட்டு விட்டீர்களா?
டெப்பாசிட்டாவது கிடைக்குமா?

*****************************************************************************************
 இதைப் படித்து விட்டீர்களா?
புத்தக்கக் காட்சியில் பட்டிக்காட்டாரிடம் பதிவர்கள் கோரிக்கை.