என்னை கவனிப்பவர்கள்

புதன், 17 ஏப்ரல், 2019

தேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன?

   
   முந்தைய பதிவில் சாலஞ் ஓட்டு என்றால் என்ன என்பதை விளக்கி இருந்தேன்.  டெஸ்ட் வோட் என்பது பலரும் அதிகம் அறியப்படாத ஒன்று. அது  என்ன என்பது இப்பதிவில் விளக்கப் பட்டுள்ளது   இதற்கான பதில்  மூன்றாவது கேள்வியில் உள்ளது.  தேர்தல் பணி செயத அனுபவத்தின் அடிப்படையிலும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வமான வலைத் தளத்திலிருந்து  இத்தகவல்கள் சேகரிக்கப்பட்டு இங்கு அளிக்கப் பட்டுள்ளது.
சில நண்பர்கள் எழுப்பிய ஐயங்களும் அதற்கான பதில்களும்

1.VVPAT இன் பயன் என்ன?.   வாக்காளர்கள் தங்களின் விருப்பமான வேட்பாளருக்கு வாக்கை பதிவு செய்ய வாக்குப்பதிவு இயந்திரத்தில் பட்டனை அழுத்தியவுடன், இந்த VVPAT இயந்திரம் ஒப்புகைச் சீட்டு ஒன்றை காட்டும். அதில் வாக்காளர் தேர்வு செய்த வேட்பாளரின் பெயர் மற்றும் அவரின் தேர்தல் சின்னம் இடம்பெற்றிருக்கும். அந்த ஒப்புகைச் சீட்டு ஏழு விநாடிகளுக்கு மட்டுமே வாக்காளருக்கு காண்பிக்கப்படும். பின் அது ஒரு சீல் வைக்கப்பட்ட பெட்டியில் விழுந்துவிடும்.அதே சமயத்தில் ஏழு வினாடிகள் பீப் சத்தம் கேட்கும். 
2. VVPAT இயந்திரம் இப்போதுதான் பயன் படுத்தப் படுகிறதா? ஏற்கனவே எஙேனும் பயன்படுத்தப் பட்டதா

 2013 இல் உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி  2014 மக்களவை தேரதலில்  இந்தியா முழுதும் உள்ள 543   தொகுதிகளில் LucknowGandhinagarBangalore SouthChennai CentralJadavpurRaipurPatna Sahib and Mizoram  ஆகிய 8 தொகுதிகளிலும் சோதனை முயற்சியாக பயன்படுத்தப் பட்டது.


3இந்த VVPAT(Voter Verrifiable Paper Audit Trail அனைத்து பூத்களிலும் வைக்கப்படுமா...? இல்லை குறிப்பிட்ட சில இடங்களிலா...? குறிப்பிட்ட இடங்களில் மட்டும் என்றால், என்ன காரணம்...?

இந்தத் தேர்தலில் எல்லா வாக்கு சாவடிகளிலும்  VVPAT இயந்திரம் வைக்கப்படும்.  


.4. அனைத்து வாக்குச் சாவடிகளிலும்  இய்ந்திரத்தின் மூலம் எண்ணப்படும் வாக்கு ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கையுடன் சரிபார்க்கப் படுமா?


 இல்லை. ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள ஏதேனும் 5 வாக்குசாவடிகளின் எண்ணிக்கை ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கையுடன் சரிபார்க்கப் படும். சில நாட்களுக்கு முன்பு ஒரு தொகுதிக்கு ஒரு வாக்க் சாவடி மட்டுமே வாக்கு ஒப்புகைச்
 சீட்டு எண்ணிக்கையுடன் சரிபார்க்கப் படும் என தெரிவித்திருந்தது. 50 % சரிபார்க்கப் படவேண்டும் என வழக்கு தொடுக்கப் பட்டது. நீதி மன்றம் ஒவ்வொரு தொகுதியிலும்  5 வாக்கு சாவடிகளுக்கு சரிபார்க்கப் படவேண்டும் எனக் கூறியுள்ளது. வாக்குச் சாவடிகள் வேட்பாளர்கள் முன்னிலையில் ரேண்டம் முறையில் தேர்ந்தெடுக்கப் படும். 


VVPAT இதன் பயன் நாம் அளித்த வாக்கை சரியாக இருக்கிறதா என்று பார்க்கும்போது .. தவறாக வந்தால் என்ன செய்வது...? ஏனென்றால் 7 வினாடிகள் தான் ஒளிரும் என்று படத்தில் உள்ளது



 இதற்குத்தான் டெஸ்ட் ஓட்டு பயன்படுகிறது. ஒரு வாக்காளர் தான் வாக்களித்த பின்னர் யாருக்கு வாக்களித்தாரோ அந்த சின்னமும் பெயரும் VVPAT  இயந்திரத்தில் காண்பிக்கப்படும் சீட்டில்  இல்லாமல்,  வேறு  சின்னமும் பெயரும் இடம் பெற்றிருந்தால் உடனடியாக  49     துணை விதி-1 இன் கீழ் வாக்கு சாவடி தலைமை அலுவலரிடம் புகார் அளிக்கலாம். அதற்கென படிவம் வாக்கு சாவடி அலுவலரிடம் உள்ளது. அதில் உறுதி அளித்து கையொப்பமிட்டு அளிக்க வேண்டும். இயந்திரம் தவறாகத்தான் காட்டியது என்ப்தை உறுதிப்படுத்த அவர் மீண்டும்  வாக்களிக்க அனுமதிக்கப் படுவார். இதற்குத்தான் டெஸ்ட்  ஓட்டு என்று பெயர் ஆனால் அவர் தனியாக வாக்களிக்க முடியாது. 
       இந்தப் புகார்,   வந்திருக்கும் கட்சி ஏஜென்டுகளுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களுடன் வாக்குச் சாவடி தலைமை அலுவலர் முன்னிலையில் எந்த சின்னத்திற்கு வாக்களித்தார் என்று தெரியும் வகையில் வாக்களிக்க வேண்டும்.(எந்த சின்னத்திற்கும் வாக்களிக்கலாம்)  அவர் வாக்களிக்கும் சின்னத்தை அனைவரும் பார்ப்பார்கள். எல் இ டி விளக்குகள் சரியாக ஒளிர்கிறதா? சரியான சின்னம்   VVPAT இயந்திரத்தில்  காண்பிக்கப் படுகிறதா என  கவனிக்கப் படும். . இயந்திரத்தில் தவறாகக் காண்பித்தால் வாக்குப் பதிவை உடனடியாக நிறுத்தி மண்டல அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.



 VVPAT  இயந்திரத்தில் சரியான விவரங்கள் காண்பித்தால் புகார் பொய்யானதாக கருதப்பட்டு  தவறான தகவல் கூறியதற்காக காவல் துறை வசம் ஒப்படைக்கப் படுவார்,

6. சரியாக இருக்கும் பட்சத்தில் ஒரு வாக்கு அதிகமாகி விடுமே என்ன செய்வது?



       இதற்காகத்தான் வாக்கு சாவடி அலுவலர் மற்றும் ஏஜெண்டுகள் முன்னிலையில் டெஸ்ட் வாக்கு  போட அனுமதிக்கப் படுகிறது.  டெஸ்ட் ஒட்டு  எந்த சின்னத்திற்கு போடப்பட்டது  என்ற விவரங்கள் உட்பட உரிய  படிவத்தில்  17 C ல் பதிவு செய்ய வேண்டும். இவை சீல் வைக்கப் பட்டு அனுப்பப் படும்.  வாக்கு எண்ணிக்கையின் போது  படிவத்தில் உள்ள டெஸ்ட் வாக்குகள் மொத்த பதிவான வாக்குகளில் இருந்து கழிக்கப் படும்.

                 


7. உண்மையாக இவ்வாக்குகள் கழிக்கப் படுகின்றனவா என்பதை எவ்வாறு அறிவது?


    இது மட்டுமல்ல. ஒரு பூத்தின்  வாக்குப் பதிவு  விவரம் அனைத்தும் சரிபார்த்துக் கொள்ள 17 படிவத்தின் நகல் அனைத்து ஏஜெண்டுகளுக்கும் வழங்கப் படும். தரவில்லை எனில் கட்டாயம் கேட்டுப் பெறவேண்டும். ஏனெனில் இப்படிவத்தில் மொத்த பதிவான வாக்குகள், வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப் படும் மூன்று இயந்திரங்களின் ( வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம். ஒப்புகை சீட்டு இயந்திரம்  VVPAT)  இவற்றின் சீரியல் எண்கள் சீல்வைப்பதற்குப் பயன்படுத்தப் பட்ட பலவதமான பேப்பர் ஸ்ட்ரிப் சீல் தாள்களின் வரிசை எண்கள் உள்ளிட்ட பல விவரங்கல் இருக்கும். இவற்றை வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்து சென்று வாக்கு எண்ணிக்கையின் போது சரிபார்த்துக் கொள்ளலாம் பேப்பர்சீல்களில் ஏஜெண்டுகளின் கையொப்பமும் இருக்கும்

8.  இந்த வாட்ஸ் ஆப் தகவல் உண்மையா?
  // வாக்குப்பதிவு இயந்திரத்தில் நீங்கள் விரும்பும் வேட்பாளரின்  சின்னத்தின் பட்டனை அழுத்தும்போது வேறு ஒரு வேட்பாளரின்  சின்னத்தில் உள்ள விளக்கு எரிந்தால் உங்கள் ஒட்டு திருடப் படுவதாக அர்த்தம். அழுத்திய பட்டனில் இருந்து விரலை எடுக்க வேண்டாம் அதிகாரிகளிடம் பத்திரிகையாளர்களிடம்  காட்டி நிருபித்த  பிறகு  விரலை எடுங்கள். பீ ப் ஒலி வந்து கொண்டே இருந்தாலும் பரவாயில்லை.//  இதெல்லாம் நடக்கிற காரியமா என்று நண்பன் திண்டுக்கன் தனபாலன் அவர்கள் கேட்டிருந்தார்.

  இது உண்மையல்ல.இதை .   தவறாக ஒளிர்ந்தால் டெஸ்ட் வோட் பயன்படுத்தி மீண்டும் வாக்களித்து  நிருபித்து வாக்குப் பதிவை நிறுத்தலாம்.

   பட்டனை அழுதத்திக் கொண்டே இருந்தாலும் பீப் சவுண்டு 7 வினாடிகளுக்கு மேல் நீடிக்காது. நீங்கள் வேண்டுமானால் வாக்குப் பதிவின் போது சோதனை செய்து பாருங்கள்.  ஒரு முறை பட்டனை அழுத்திக் கொண்டே   விடாமல் இருந்தாலும், அது அழுத்தியதுமே  மின்சுற்று தொடங்கி  பூர்த்தி அடைந்து விடும்.அதனால் ஒரு முறை மட்டுமே 7 வினாடிகள் பீப் சவுண்ட் நீடிக்கும். மறுபடியும் விரலை எடுத்தால் மட்டுமே அடுத்த முறை பட்டனை அழுத்த தயாராக இருக்கலாம். ஆனால் மீண்டும் உடனே பட்டனை அழுத்தினால் வாக்கு பதிவு ஆகாது. பீப் சவுண்டுக்குப் பின். வாக்குப் பதிவு அலுவலர் கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள பட்டனை அழுத்தினால் மட்டுமே அடுத்த ஒட்டு போடமுடியும். அடுத்த வாக்காளரின் சீட்டைப்பெற்ற பின்னர்தான் பட்டனை அழுத்துவார். அதன்பின்னரே வாக்களிக்க முடியும். 
    வீடுகளில் பார்க்கலாம் காலிங் பெல்லை அழுத்திக்  கொண்டே இருந்தாலும் சில வினாடிகள் ஒலித்து நின்றுவிடும்.  கையை எடுத்து விட்டு மீண்டும் அழுத்த வேண்டும்.

9. ஒரே நேரத்தில் இரண்டு பட்டனை அழுத்தினால் என்ன ஆகும்/.

   ஒரே நேரத்தில் இரண்டு பட்டனை அழுத்தினாலும் ஒரு வாக்கு மட்டுமே பதிவாகும். என்னதான் ஒரே நேரத்தில் பட்டனை அழுத்துகிறோம் என்று நாம் நினைத்தாலும்  எதாவது ஒரு விரல்  fraction of seconds இல் முன்னதாக அழுத்தி விடும். அதன் வோட்டே பதிவாகும்    

----------------------------------------------------

டெண்டர் வோட்டு என்றால் என்ன? 
மாதிரி வாக்குப் பதிவு எப்போது நடை பெறும்.? 
நோட்டா வோட்டு 14%க்கும் அதிகமானால் மறு தேர்தல் வருமா?
இன்று மாலை அடுத்த பதிவில்

முந்தைய பதிவு

பட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா?



தொடர்புடைய பதிவுகள்

******************************************************************

சார்ந்த  பிற பதிவுகள் 

சனி, 13 ஏப்ரல், 2019

பட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா?


  தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. தமிழகத்தின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்கள் என அறிய அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர் முதல் கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்ட நிலை தமிழகத்தில் வரும் 18 அன்று தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 
     ஃபேஸ்புக் டுவிட்டர்  வாட்ஸ் ஆப், யூடியூப் சமூக வலைதளங்களிலும் பிரச்சாரம் அனல் பறக்கிறது. வேட்பாளர்களின் கோமாளித்தனமான பேச்சுக்கள் செயல்களால் மீம்சுகள் பஞ்சமில்லாமல் நிறைந்து சுவாரசியம் கூடியுள்ளது.
      வதந்திகள் பொய்த் தகவல்களை கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சிகளும் முடிந்த அளவு பரப்புகின்றன. இவை எந்த அளவுக்கு கட்சிகளுக்கு  பலனளிக்கும் என்பது தெரியவில்லை.  எவை உண்மை பொய் எனபதை  பற்றிய கவலை இன்றி  ஃபார்வேர்ட் செய்து மகிழ்கிறார்கள்.
     சிலர் பயனுள்ள தகவல்கள் என்று அவர்களை அறியாமலேயே தவறான தகவல்களை பரப்புகிறார்கள் சர்க்கார் படத்தை பார்த்த பாதிப்பில்.(நான் இன்னும் சர்க்கார் படம் பார்க்க வில்லை  சில தேர்தல் விதிமுறைகளை அள்ளி விடுகிறார்கள்
     கடந்த வாரங்களில் அடிக்கடி என் கண்ணில் பட்ட தகவல்களில் ஒன்று  வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை எனில்  வாக்குச் சாவடி அதிகாரியிடம் சேலஞ்ச் வோட் (Challenge Vote) என்று கேட்டு வாக்களியுங்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது. 


          உண்மையில் இப்படி வாக்களிக்க முடியுமா என்றால் முடியாது என்பதே சரியான பதில்.  வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் நிச்சயம் வாக்களிக்க அனுமதிக்கப்படாது.  அவ்வாறு வாக்களிப்பதற்கான விதிமுறை இதுவரை இல்லை. 
        அப்படியானால் சேலஞ்ச் ஒட்டு என்று ஒன்று இருக்கிறதா? இல்லையா?

      ஆம்!சேலஞ்ச் வோட் என்று ஒன்று உள்ளது. அது  தவறான வாக்காளர் வாக்களிக்க வரும்போது செய்ய வேண்டிய நடைமுறை . வாக்காளரின் அடையாளத்தை எதிர்த்தல். அதாவது வந்திருப்பவர் தவறான வாக்காளர்  என வேட்பாளரோ அல்லது அவரது அனுமதி பெற்ற ஏஜெண்டோ  எதிர்த்தலைத்தான் சேலஞ்ச் வோட் என தேர்தல் ஆணையம் கூறுகிறது. 
        வாக்குப் பதிவு நேர்மையாகவும் விதிகளின்படியும் நடைபெறுகிறதா என்பதை அறிய வேட்பாளர்களுக்கு உரிமை உண்டு. அதனால் வாக்குப் பதிவு தொடங்கி முடியும் வரை வாக்குப் பதிவை கண்காணிக்க தனக்கான ஏஜெண்டுகளை -தங்கள் நம்பிக்கைக்கு உரிய உள்ளூர்வாசிகளை ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் வேட்பாளர்கள் நியமனம் செய்கிறார்கள். 
     வாக்குப் பதிவு தொடங்குவது முதல் ,வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீலிடுவது, மாதிரி வாக்குப் பதிவு நடத்துவ்து, வாக்காளர்களின் அடையாளங்களை உறுதிபடுத்துவது வாக்குப்பதிவு நிறைவு செய்து சீலிடுவது இவர்கள் முன்னிலையில்தான் நடைபெறுகிறது. அனைத்துக் கட்சி ஏஜெண்டுகளும் உள்ளே வரும் வாக்காளர்களை அடையாளம் கண்டு உறுதிப் படுத்துவார்கள்.  வருகின்ற வாக்காளர்  உண்மையானவர் இல்லை என நினைத்தால் ஏஜெண்டுகள் ஆட்சேபம் எழுப்பலாம்.  ஆள் மாறாட்டம் செய்பவர் என உறுதிபடத் தெரிந்தால் இவர்  பட்டியலில் உள்ள உண்மையான வாக்களர் அல்ல என சேலஞ்ச் செய்ய முடியும். வாக்குச்சாவடி முதன்மை அலுவலரிடம் முறையாக புகார் தெரிவித்தால் அலுவலர் அவரது அடையாள ஆவணங்களை சரிபார்த்து  உண்மையக இருக்கும் பட்சத்தில் வாக்களிக்க அனுமதிப்பார்.      
      அப்போதும் எதிர்ப்பு தெரிவிக்க நினைத்தால் உரிய கட்டணம் செலுத்தி 
 ( கட்டணம் 2 ரூபாய்-  இப்போதும் கட்டணம் மாறியதாக தகவல் இல்லை)  எதிர்ப்பை பதிவு செய்யலாம். தக்க ஆதாரங்களுடன் வந்திருப்பவர் உண்மையான வாக்காளர் அல்ல என அவர் நிருபித்தால் வந்திருப்பவர் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார். விதிகளின்படி அவரை காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.  எதிர்ப்புக் கட்டணம் திரும்ப வழங்கப் படும். எதிர்ப்புக்கான முறையான ஆதாரம் இல்லையெனில் எதிர்பை ரத்து செய்து வாக்களிக்க அவரை அனுமதிக்கலாம். ஆனால் எதிர்ப்புக் கட்டணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது. அரசுக் கணக்கில் சேர்க்கப் படும்.   

    நடைமுறையில் ஏஜெண்டுகள் அவ்வப்போது எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம் என்றாலும் அவற்றை பதிவு செய்வது இல்லை. அனைத்து ஏஜெண்டுகளும் தாங்களாகவே அடையாளம் பற்றிய ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். 

இதுதான் சேலஞ்ச் வோட்.   

(வேட்பாளர் தொகுதிப் பக்கம் வரலன்னா மக்கள் மறந்துடுவாங்க . நாமும் வலைப் பக்கம் வரலன்னா நம்மையும் வலை நண்பர்கள் மறந்துவிடுவார்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும் நம்ம ப்ளாக் பாஸ்வேர்டே  மறந்து விடும் அபாயம் இருப்பாதால்  நாம இன்னமும் பளக்கர்தான்  என்பதை நினைவு படுத்தவே இந்தப் பதிவு)

நன்றி: தேர்தல் ஆணையத்தின் வலைப்பக்கம் மற்றும் கையேடுகள்


அடுத்த பதிவில் டெண்டர் ஒட்டு, டெஸ்ட் ஓட்டு, மாதிரி வாக்குப் பதிவு இவற்றைப் பார்க்கலாம்