என்னை கவனிப்பவர்கள்

சனி, 28 செப்டம்பர், 2013

இதுவல்லவா வெற்றி!

   
 எட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதைகள்
இதோ இன்னும் சில  நிமிடங்களில் அந்த   ஓட்டப் பந்தயம் தொடங்க இருக்கிறது. பார்வையாளர்கள் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதோ ஒன்பது பேர் போட்டியில் கலந்து கொள்ள  தொடக்கக் கோட்டுக்கருகே  தயாராக இருக்கின்றனர். கலந்து கொள்பவர்களின் முகத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி தெரிகிறது. போட்டி தொடங்குவதற்கான விசில் ஒலிக்கப்பட உடனே ஓட ஆரம்பிக்கின்றனர். பார்ப்போர் கை தட்டி ஆரவாரம் செய்கின்றனர். உற்சாக வார்த்தைகளை உரக்கக் கூவுகின்றனர். ஒருவரை ஒருவர் முந்த முயல்கின்றனர். அடடா! என்ன இது? ஓடிக்கொண்டிருந்த ஒருவன் கீழே விழுந்து விட்டானே! ஐயோ! அவனால் எழுந்திருக்க முடியவில்லையே! ரத்தம் வேறு வருவது போல் தெரிகிறதே! அவன் அழ ஆரம்பித்து விட்டானே! அவனது அழுகுரல் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனரே! முன்னால் ஓடிக்கொண்டிருந்த மற்ற எட்டுபேரும்   அந்த அழுகுரல் கேட்டு நின்று திரும்பிப் பார்க்கிறார்கள். தங்களில் ஒருவன் கீழே விழுந்து அழுதுகொண்டிருப்பதைப் கண்டு   அவர்கள் முகத்தில் அதிர்ச்சி தொற்றிக் கொள்ள அவனை நோக்கி ஒருவர் பின் ஒருவராக வர ஆரம்பிக்கின்றனர். விழுந்த சிறுவன் எழுந்திருக்க முயறசி செய்கிறான். பாவம்! முடியவில்லையே!  அவனருகில் வந்து விட்டாள் போட்டியில் கலந்து கொண்ட அந்தப் பெண்.

என்ன நடக்கப் போகிறது அங்கே! பார்வையாளர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த சிறுவனின் கண்களில் கண்ணீர்  பெருகிக் கொண்டிருக்க அவனை தோளின் மீது கையைப் போட்டு  லேசாக அணைத்து தூக்கி நிறுத்துகிறார். ஆஹா! அவனது நெற்றியில் முத்தமிட்டு ஆறுதல்  கூறுகிறாரே. என்ன ஆச்சர்யம் மற்றவர்களும் அவனருகே வந்து அன்புடன் விசாரிக்கின்றனரே! ஒன்றும் புரியாமல் பார்வையாளர்கள் அந்த அற்புதக் காட்சியை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    என்ன இது கண்முன்னே ஒரு  அதிசயம் நடந்து கொண்டிருக்கிறதே! அந்த எட்டு பேரும் கைகளைக் கோர்த்துக் கொண்டு அந்தப் பையனையும் சேர்த்துக் கொண்டு மெதுவாக நடக்க ஆரம்பிக்கின்றனர். இதோ ஓன்பது பேரும் ஒரே சமயத்தில் எல்லைக் கோட்டை தொடுகின்றன்றார்களே! அவர்களை விட்டுவிட்டு பார்வையாளர்களைப் பார்க்கிறேன்.  யாருக்கு பரிசு கிடைக்கப் போகிறது? ஆவலுடன் எட்டிப் பார்க்கின்றனர் அவர்கள்.  ஒன்பது பேரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் படுகிறார்கள் . தங்க மெடல்கள் வழங்குகிறார்கள்.. அத்தனை பேர் விழிகளிலும் கண்ணீர். எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். அத்தனை பேரின் கண்ணீர்த்துளிகளிலும் அந்தக் காட்சி எதிரொளித்துக் கொண்டிருப்பதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

 இதில் பரவசப்படவோ  கண்ணீர் விடவோ என்ன இருக்கிறது என்கிறீர்களா? அவசர்ப்பாடாதீர்கள்.கொஞ்சம் இருங்கள் 
   நீங்கள் கேட்டுக் கொண்டிருந்த வர்ணனை  சியோட்டில் நடந்த ஊனமுற்றோர்களுக்கான  ஓட்டப் பந்தயம் பற்றியது.
  இப்போது சொல்லுங்கள் என்கண்ணில் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் கண்ணீர் உங்கள் கண்களிலும் வழிந்து கொண்டிருக்கிறதா? மனிதம் போற்றுபவர் அல்லவா நீங்கள்? கட்டாயம் கண்ணீர் வரத்தான் செய்யும்.

************************

குறிப்பு: எப்போதோ படித்த செய்தியை வைத்து இந்த பதிவை புனைந்திருக்கிறேன்.முந்தைய  அறிவியல் பதிவுகளை படித்து அதிர்ச்சி அடைந்தவர்களுக்கு ஆறுதலாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.



*********************************************************************************

இதைப் படிச்சிட்டீங்களா?

எ.பா.ப.கு. க.  விவேகானந்தரின் கண் திறந்த தேவ தாசி-

எட்டிப் பார்த்து படித்த குட்டிக் கதை-படிச்சா ஷாக் ஆயிடுவீங்க!

எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-2 கூகுள்ல தேடிப் பாத்து சொல்றேன்!

எட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதை-3 காபி மாதிரிதான் வாழ்க்கை

எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-4யாரோ உங்களை பாக்கறாங்க!

புதன், 25 செப்டம்பர், 2013

செப் 22 அதிசய நாள்- வவ்வாலின் கருத்துக்கு சில விளக்கங்கள்


  செப் 22 அதிசய நாள் ( முந்தைய பதிவப் படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்தப் தொடர்ந்தால் தலை சுற்றாமல் இருக்கும்) பதிவிற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர் பார்க்கவில்லை. அனைவருக்கும் நன்றி. வழக்கம்போல் வவ்வால் அவர்களும் சில மாற்றுக் கருத்துக்களை முன் வைத்து பின்னூட்டமிட்டிருக்கிறார். எதையும் யாரும் அறியாத கோணத்தில் ஆய்வு செய்யும் வல்லமை படைத்தவரான வௌவால்  பல தகவல்களை கூறி இருக்கிறார். அவருக்கு எனது நன்றிகள். எதிர்பாரா அலுவலக வேலைகாரணமாக மூன்று நாட்களாக வலைப் பக்கம் வர முடியவில்லை. என்னால் முடிந்த, எனக்குத் தெரிந்த, நான் புரிந்துகொண்டவாறு விளக்கம் கொடுத்திருக்கிறேன். பின்னூட்டத்திலேயே அதற்கு பதில் அளிக்கலாம் என்று இருந்தேன். சில படங்களையும் இணைக்க வேண்டி இருந்தாதால் தனி பதிவாகவே போட்டு விட்டேன். இதையும் பொறுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 

வவ்வால்:சன் டயல் பற்றி சொல்லும் போது குச்சியை உதாரணம் காட்டி சின்னதாக ஒரு பின்னூட்டம் போட்டேன் ,நீங்கள் செயல்முறையில் செய்துப்பார்த்து பதிவாக போட்டதற்கு பாராட்டுக்கள்!
  என் கருத்து: உங்கள் பாரட்டுக்கு நன்றி வவ்வாலிடம் பாராட்டு பெறுவது எளிதாஎன்ன?

வவ்வால்: உங்க முயற்சி சரி தான்,ஆனால் இவ்வளவு மொத்தமான பொருளை வச்சு செய்யக்கூடாது, இப்படி செய்தால் சூரியன் உச்சியில் வரும் போது கூட நிழல் விழலாம்.
  சூரிய ஒளியின் கோணத்திற்கும், பூமிக்கும் ,சூரியனுக்கும் உள்ள தூரம், சூரியனின் அளவு இவற்றுடன் ஒப்பிட்டு சரியான முறையில் காலிபரேட் செய்து குச்சியின் நீளம்,தடிமன் கொண்டு செய்தால் நிழல் விழுவதை பெருமளவு கோண அளவில் தவிர்த்துவிடலாம். சென்னைப்போன்ற பகுதிக்கு சுமார் இரண்டு இஞ்ச் உயரம், ஒரு பென்சில் அளவு(குறைவான தடிமன் இன்னும் நல்லது) கொண்டு முயற்சித்தால் நிழல் உச்சி வெயில் நேரத்தில் நிழல் விழாமல் செய்து விடலாம். குறிப்பிட்ட ஒரு நாளுக்கு மட்டுமில்லை, பலநாட்களுக்கு சாத்தியமுண்டு.
என் கருத்து: கடந்த ஆண்டு இதே நாள் ஒரு ரெனால்ட்ஸ் பேனாவை வைத்து இந்த சோதனையை செய்தேன்.அப்பொழுதும் கிட்டத்தத்ட்ட இதே போல்தான் நிழல் அமைந்திருந்தது. அப்படித்தான் இருக்கும் என்பதையும் அறிந்தே இருந்தேன்.எளிதில் நிற்க வைப்பதற்காக குழயைப் பயன்படுத்தினேன் . இன்னும் சொல்லப் போனால் தடிமனான பொருளை பயன்படுத்தினால் நிழலின் அளவு சற்றுக் குறைவாக இருப்பது போலவே தோன்றும்.நிற்கவைக்கப்படும் பொருள் வளைந்து காணப்பட்டாலோ அடிபரப்பு சற்றுசாய்வாக வெட்டப் பட்டிருந்தாலோ செங்குத்தாக நிற்காது. அதனால் நிழல் விழும்.முடிந்த வரை  அவ்வாறில்லமால் பார்த்துக் கொண்டேன். 100% துல்லியம் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவிற்கு இவற்றை கவனத்தில் கொண்டே செய்தேன்.
ஒரு  குறிப்பிட்ட நேரத்தில் நிழல் விழாத நிலை (அதாவது பொருளின் மீதே விழும் நிலை- பொருள் செங்குத்தாக இருப்பதாக வைத்துக் கொள்ளப்படும்போது) பல நாட்களுக்கு சாத்தியமில்லை.சில நாட்களுக்கு மட்டுமே உண்டு. அந்த சில நாட்களிலும் நிழல் விழத்தான் செய்யும். ஆனால் நிழலுக்கும் பொருளுக்கும் உள்ள கோணம் 90 டிகிரியை விட சற்றே குறைவாக இருப்பதால்  நிழல் கண்களுக்கு தெரியாது.

வவ்வால்: இந்தியாவுக்கு மார்ச் -21 தான் Equinox . செப்டம்பர் 22 தென்கோளார்த்தத்தின் Equinox ,ஆஸ்திரேலியா,நியுசிலாந்து பகுதிகளில் சமநாள்,இரவு இருக்கும்.நேற்று சென்னையின் பகல் நேரம் 12 மணி ஏழுநிமிடங்கள்
என் கருத்து:: மிகத் துல்லியமாக பன்னிரண்டு மணிநேரம் பகல் பன்னிரண்டு மணிநேரமாக அமைவது அரிது. சம இரவு பகல் பெரும்பாலும் செப்டம்பர் 21 ஐ ஒட்டியே இருக்கிறது. இன்று நேர இரவுபகல் நேர வித்தியாசம் நேற்றை விட இன்னமும் சற்று குறைவாக இருக்கக் கூடும்

வவ்வால் சிலர் சொல்வது போல ஈக்கவடேரியல் ரீஜனில் மட்டும் சூரியன் உச்சியில் வரும் என்பது சரியானது அல்ல, நீங்களும் அதனை நம்புகிறீர்களா என தெரியவில்லை.
டிகிரி வடக்கு (கடகரேகை) - 23.5 டிகிரி தெற்கு(மகரரேகை) இடைப்பட்ட பகுதியில் எல்லா இடத்திற்கும் சில குறிப்பிட்ட காலத்தில் சூரியன் மிகச்சரியாக உச்சி நிலையில் சஞ்சரிக்கும்..

என் கருத்து:: என் கருத்தும் இதுவே,  இதை நானும் சொல்லி இருக்கிறன். சென்னையைப் பொறுத்தவரை செப் 22 அன்று சூரியன் நேர செங்குத்தாக சஞ்சரிக்கவில்லை என்பதை எடுத்துக்காட்டவே நிழலைப் படம் பிடித்துக் காட்டினேன். சென்னையில் பொருத்தவரை கிட்டத்தட்ட  ஆகஸ்டு இறுதி  அல்லது செப்டம்பர் துவக்கத்தில்  நேர் செங்குத்தாக்க அமையும் நாளில் படம் பிடிக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்போது இதைப் பற்றி எழுதுவேன் என்று தெரிந்திருந்தால் செல்போனிலாவது படம் பிடித்திருப்பேன்.

அதாவது 23.5 கடக ரேகை  23. 5 மகர ரேகை மொத்தம் 47 டிகிரியைக் கடக்க 365(rounded) நாட்களை எடுத்துக் கொள்வதாக வைத்துக் கொண்டால் ஒருடிகிரியைக் கடக்க 365/47 =.7.7 நாட்கள் ஆகும். சென்னை 13 டிகிரி வட அட்சத்தில் இருப்பதால்  june 21 இல் கடக ரேகையில் பிரகாசிக்கும் சூரியன் 23.5 லிருந்து 13 டிகிரி வரை அதாவது 10.5 டிகிரிகளை கடக்க 80நாட்கள் ஆகும் . அதாவது செப்டம்பர் துவக்கத்தில் சூரியன் செங்குத்தாக பவனி வரலாம். துல்லியமான கணக்கீட்டை தர முயற்சிக்கிறேன்.

வவ்வால்: #//
//மேல் முனை பூமியை நோக்கி இருக்காது.இப்போது கீழ் முனை பூமியை நோக்கி இருக்கும். // மணி சுற்றுவது போல் பூமி சுற்றினால் கீழுள்ள படத்தில் உள்ளது போல் 6 மாதங்களுக்குப் பிறகும் அதன் வடமுனை எப்போதும் பூமியை நோக்கியே சாய்ந்திருக்கும்.//
இப்படி சொல்லி இருப்பது எதனை ஒப்பிட்டு , நீங்கள் பூமியை ,பூமியின் அச்சுடனே ஒப்பிட்டு அதுவே அதனைப்பார்த்து சாய்ந்திருப்பது போல சொல்லி இருக்கிறீர்கள். சூரியனை நோக்கி ,பூமியின் அச்சினை ஒப்பிட்டுத்தான் சொல்லவேண்டும்.

என்கருத்து: நீங்கள் சொல்வது சரி சூரியனை என்றுதான் இருக்கவேண்டும். தவறுதலாக "பூமியை" என்றிருக்கிறது. சூரியனை என்று திருத்தம் செய்து விட்டேன். நன்றி

வவ்வால்:ஆனால் பூமியின் சாய்வு அச்சு அதன் சுற்றுவட்டப்பாதையின் எந்த நிலையிலும் சூரியனுக்கு வெளிப்புறமாக அவுட்டர் ஸ்பேஸ் பார்த்து தான் இருக்கும் எனவும் சொல்கிறார்கள், அப்படி இருக்கும் எனில் இப்போது அளிக்கும் விளக்கங்கள் அனைத்துமே தவறாகிவிடும், சரியான விளக்கம் வேறு ஆக இருக்க வேண்டும் ,எளிதில் புரிய வைக்க இப்படியே விட்டுவிட்டார்கள் என நினைக்கிறேன்
மணி சுற்றுவது போல் பூமி சுற்றினால் கீழுள்ள படத்தில் உள்ளது போல் 6 மாதங்களுக்குப் பிறகும் அதன் வடமுனை எப்போதும் பூமியை நோக்கியே சாய்ந்திருக்கும்.// 

என்கருத்து: இப்படி இருக்க வாய்ப்பு இல்லை என்று கருதுகிறேன். நீங்கள் எப்படி சொல்கிறீர்கள் என்பது புரியவில்லை.அச்சின் இரண்டு முனைகளும் எப்படி வெளிப்புறம் பார்த்து இருக்கமுடியும். இதை விளக்க படங்கள் ஏதேனும் உண்டா?
நான் கம்பியில் கோர்த்த மணிபோல என்று குறிப்பிட்டது கீழ்க்கண்ட  படத்தில் உள்ளவாறு. ஆனால் கம்பியை அச்சாகக் கொண்டு சுற்ற இயலாதவாறு  இருக்க வேண்டும் இந்தப் படத்தில் பாருங்கள் பூமி சுழலும் அச்சின் வடதுருவ முனை சூரியனை நோக்கி இருப்பதை காணலாம். ஆனால் பூமி இவ்வாறு சுற்றவில்லை


வவ்வால்// ஜுன் மாதத்தில் பூமியை நோக்கி சாய்ந்திருக்கும் வடதுருவம் 6 மாதங்களுக்குப் பின் சூரியனை சுற்றி எதிர் பக்கம் வரும்போது அதன் வடதுருவம் சரியான விட்டு விலகி இருக்கும், //
பெரும்பாலும் கால நிலை மாற்றம் இப்படித்தான் உருவாகிறது என்பதற்காக சொல்லப்படுகிறது, உண்மையில் அது சரியான விளக்கமும் அல்ல.
 கால நிலைமாற்றம் ஏற்படக்காரணம் நீள்வட்டப்பாதையும், பூமியின் சுழற்சியில் உள்ள அலைவும் காரணம், மேலும் பிளேன் ஆப் ரோட்டேஷனில் ஏற்படும் மாற்றமும் இருக்கிறது, இந்த பிளேன் ஆப் ரோட்டஷனில் உள்ள மாற்றத்தினை இதுவரையில் யாரும் பெரிதாக ஆய்வு செய்யவில்லை ,அல்லது இணையத்தில் இல்லை, இதன் அடிப்படையில் நானே ஒரு தியரி வச்சிருக்கேன் , நேரம் கிடைத்தால் பதிவு போடுகிறேன்.

என்கருத்து : நீங்கள் சொல்வது சரியானதாகத் தெரியவில்லை.  நாசாவின் தளத்தில் கூட காலநிலை மாற்றம் ஏற்பட பூமியின் சாய்வச்சே காரணம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அது சரியானதாகவும் தோன்றுகிறது.Plane of rotationஐ என்று குறிப்பிட்டீர்களா அல்லது ப்ளேன் plane of revolution குறிப்பிட்டிருப்பீர்களா?  எதுவாக இருப்பினும் பெரிய அளவில் plane மாறுபாடு இருக்கும் என்று  தோன்றவில்லை. ஆய்வாளர்கள் அறிஞர்கள் யாருக்கும் இது தொடர்பாக ஐயமோ அல்லது அதை கருத்தில் கொள்ளாமலோ இருந்தார்கள் என்பதை நம்ப முடியவில்லை. பல்வேறு கணக்கீடுகளும் இதன் அடிப்படையில்தான் செய்யப் பட்டிருக்கின்றன. வெற்றி பெற்ற பல வானியல் சோதனைகள் தோல்வியில்முடிந்திருக்கக் கூடும்.
http://spaceplace.nasa.gov/seasons/





வவ்வால்: பூமித்தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருப்பதால் , சூரியனை விட்டு விலகி இருக்கும் வட துருவம் , அடுத்த 24 மணிநேரத்தில் சூரியன் இருக்கும் பக்கம் வந்துவிடுமே, அப்புறம் எப்படி நிரந்தமாக குளிர்,கோடைகாலம் உருவாகிறது. ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் மீண்டும் சூரியனை பார்க்க ஆரம்பித்துவிடும்,எனவே நிரந்தரமாக எந்த துருவமும் சூரியனை விட்டு விலகியே நிற்காது.

என்கருத்து: நீங்கள் இப்படி சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது. ஒவ்வொரு 24 மணிநேரத்திற்குள் விலகி பின்னர்  நோக்கியும் இருக்க சாத்தியமில்லை. சூரியன் பூமி சுற்றுப்பாதையை ஒரு plane ஆக வைத்துக் கொண்டால் அதனோடு. பூமியின் சுழற்சி அச்சு ஏற்படுத்தும் கோணம் ஒரே அளவாகவே இருக்கும். அச்சின்  ஒரு முனை சூரியனை விட்டு விலகவோ நோக்கியோ இருக்க கிட்டத்தட்ட பாதி நாட்கள் தேவைப்படும்
நீங்கள் சொல்லும் கருத்து ஆனால் "பூமியின் சாய்வு அச்சு அதன் சுற்றுவட்டப்பாதையின் எந்த நிலையிலும் சூரியனுக்கு வெளிப்புறமாக அவுட்டர் ஸ்பேஸ் பார்த்து தான் இருக்கும் எனவும் சொல்கிறார்கள்" என்ற கருத்துக்கும் எதிராகவேஅல்லவா இருக்கிறது.

வவ்வால்:உண்மையில் பூமி செங்குத்தான அச்சில் சுழன்றாலும்  கால நிலை மாற்றம் ஏற்படும். மேற் சொன்ன காரணங்களே போதுமானவை. மேலும் கூடுதல் காரணங்கள் பூமியின் வளிமண்டலம், வளிமண்டலத்தின் சுழற்சி, பூமியின் நிலம்,நீர் பரவல் ஆகும். வடகோளார்த்தத்தில் அதிக நிலப்பரப்பும், தென்கோளார்த்தத்தில் அதிக நீர்பரப்பும் என உள்ளதால், பூமி சூடாவதில் ஒரு மாற்றம் உண்டாகிறது, கூடவே வளிமண்டல சுழற்சி, இதனால் கொரியாலிஸ் எபெக்ட், எல்நினோ,லாநினோ, தாழ்வழுத்த/ உயர் அழுத்தம் ஆகியன என எல்லாம் சேர்ந்து மழைப்பொழிவுகள் ஏற்படுகிறது.

என்கருத்து: இதை எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள் என்பது புரியவில்லை.பூமி செங்குத்தான அச்சில் சுழல்வதாகக் கொண்டால் சூரிய ஒளி பூமியின் மீது எந்தக் காலத்திலும் நில நடுக்கோட்டுப் பகுதியின் மீது செங்குத்தாகவும் மற்ற இடங்களில் சாய்வாகவும் இருக்கும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் சூரிய ஒளி எப்போதும் ஒரே மாதிரியாகவே விழும்.
நீர்நிலைகள், காற்றழுத்தம் போன்றவை வானிலையில் மாற்றம் ஏற்படுத்தக் கூடியவைதான். என்றாலும் அந்தப் பகுதியில் ஒரே மாதிரியான மாற்றங்கள் ஆண்டு முழுதும் நடைபெறும்.

கால மாற்றத்திற்கு சூரியனின் நீள்வட்டப் பாதையும் ஒரு காரணமே என்று கூறி இருக்கிறீர்கள்.
என்கருத்து: அதுவும் சரியல்ல. பூமியின் சுற்றுப் பாதை நீள்வட்டம் என்றாலும் அதன் (eccentricity 1/60) . கிட்டத்தட்ட  வட்டமாகவே காட்சி அளிக்கும். இந்த நீள் வட்டத்தில்  மேஜர் ஆக்சிஸ் மைனர் ஆக்சிஸ் வித்தியாசம் மிகக் குறைவு. எனவே உயரத்தில் இருந்து காண முடிந்தால் கிட்டத் தட்ட வட்டமாகவே தோன்றும். மேலும் சுற்றுப் பாதையில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள குறைந்த பட்ச தூரமும் அதிக பட்ச தூரத்திற்கும் உள்ள வித்தியாசம் 3% மட்டுமே. எனவே தூரம் காலநிலை மாறுபாட்டிற்கு காரணமல்ல என்று கூறப்படுகிறது. மேலும் சூரியனுக்கு மிக அருகில் பூமி நெருங்கும் காலம் ஜனவரியில்தான். அப்படிப் பார்த்தால் நில நடுக்கோட்டுப் பகுதியில் கூட ஜனவரி மாதம் கோடைக் காலம் அல்ல.

வவ்வால்: சென்னையிலேயே வருடம் 365 நாளும் உச்சி வெயில் (நன்பகல்- 11.30-12)க்கு நிழலே விழாமல் படம் எடுக்கலாம்,மகர- கடக ரேகைக்கு இடைப்பட்ட இடங்கள் மேலும் அதன் அருகில் உள்ள இடங்களில் எல்லாம் சாத்தியம்., அதுக்கு சரியா காலிபரேட் செய்யனும், எகிப்திய தொழில்நுட்பம் சுமார் 3800 ஆண்டுகளுக்கு முன்னரே செய்துக்காட்டிடுச்சு, நானும் அதன் அடிப்படையில் நிழல் விழாத படம் எடுத்து வச்சிருக்கேன் ,இன்னிக்கோ ,நாளைக்கோ பதிவா போடுறேன்,அப்போவாச்சும் நம்புறிங்களானு பார்ப்போம்.

என்கருத்து: நம்புகிறேன்.இது சாத்தியமே என்பதே எனது கருத்தும். சூரிய ஒளியின் கோணத்திலேயே பொருள்  பூமியோடு இணைத்திருக்கும் அமைப்பில் இருந்தால்  நிழல் அந்தப் பொருளின் மீதே விழும். பூமியில் விழாது. எல்லா நேரத்திலுமே இதை செய்ய முடியும். ஆனால் இந்தக் கட்டுரையில் செங்குத்தான பொருளின் நிழல் பற்றியே பேசப் பட்டுள்ளது. காலையில் பார்த்திருந்தால் ஒரு படம் பிடித்திருப்பேன். 

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. 
வௌவால் சார் உங்கள் கருத்துகளை படங்களுடன் தனி பதிவாக வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

அடுத்த பதிவு அறிவியல் பதிவு அல்ல *********************************************************************************
 முந்தைய பதிவு
இன்று செப் 22 அதிசய நாள்


ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

இன்றைய நாளின் வானியல் சிறப்பு

மார்ச் 21&செப்டம்பர் 22 அதிசய நாட்கள்!

   "தஞ்சை பெரிய கோவிலின் நிழல் பூமியில் விழும்" என்பதை இண்டு மூன்று நாட்களுக்கு முன் பதிவிட்டிருந்தார் நம்பள்கி. அந்தப் பதிவின் கருத்துரைகளில் நிழல் விழுவது பற்றி  பலரும் விவாதித்திருந்தனர்.  நிழல் விழாமல் எந்த கட்டடமும் கட்ட முடியாது ஒரு குறிப்பிட்ட நாளில் சூரியன் தலைக்கு மேல் வரும்போது (நேர் செங்குத்தாக) வரும்போது மட்டும் நிழலை காண முடியாது.ஏன் எனில் நிழல் அந்தப் பொருள் மீதே விழும். இது ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நிகழும். அந்த அதிசயம் நிகழும் இரண்டு நாட்களில் இன்று இன்றைய நாளும்(செப் 22) ஒன்று.
    நமக்குள்ள பல பிரச்சனைகளில் சில விஷயங்களை கவனிக்கவும் நினைவில் வைத்துக் கொள்ளவும் நேரம் இருப்பதில்லை. பல சுவாரசியமான நிகழ்வுகள் விண்வெளியில்  நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பூமியிலும் இவ்வாறு நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21(சில சமயங்களில் மார்ச் 20) க்கும் செப்டம்பர் 22(சில சமயங்களில் செப் 23) க்கு தனி சிறப்பு உண்டு. இவ்விரு நாட்களிலும் இரவு நேரமும் பகல் நேரமும் சமமாக இருக்கும். மற்ற நாட்களில் பகல் இரவு நேரங்களில் வித்தியாசம் இருக்கும். அதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.

    பூமி தனி அச்சில் 23.5 டிகிரி சாய்வாக சுற்றுகிறது. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்பது நமக்குத் தெரியும்.தன்னைத் தானே சுற்றிக் கொள்வதால்தான் இரவுபகல் ஏற்படுகிறது.என்பதும் நாம் அறிந்ததே! சில காலங்களில் பகல் பொழுது அதிகமாகவும் இரவு பொழுது குறைவாகவும் இருக்கும். சில காலங்களில் இரவுப் பொழுது அதிகமாகவும் பகல் குறைவாகவும் இருக்கும். பூமியின் நீள் வட்டசுற்றுப்பாதை  ஒரு சாலை என்று கொண்டால்  அந்தப் பாதைக்கு நேர்  செங்குத்தாக பூமி தன்னைத்  தானே சுற்றிக் கொள்வதில்லை. சற்று சாய்வாக அதாவது 23.5 டிகிரி சாய்வாக தனது அச்சில் சுற்றுகிறது.
  இதுவே இரவு பகல் நேரங்களில் வித்தியாசம் ஏற்படுவதற்கு காரணம்.பூமியில் கோடைகாலம் குளிர்காலம் போன்ற பருவ காலங்கள் ஏற்படுவதற்கும் இந்த சாய்வே காரணமாக அமைகிறது. வேறு மாதிரி சொல்வதென்றால் பூமி செங்குத்தாக தன்னைத் தானே சுற்றிக் கொண்டால் பருவ காலங்கள் ஏற்படாது. அதாவது பூமியில் ஓரிடத்தில் எந்தவிதமான காலம் இருக்கிறதோ ஆண்டு முழுதும் மாற்றமின்றி அப்படியே இருக்கும்.
இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
பூமி அச்சின் இரு முனைகளையே வட துருவம் தென் துருவம் என்கிறோம்.  ஒரு குறிப்பிட்ட நாளில் மேல் முனை (வடதுருவம்) சூரியனை நோக்கி சாய்ந்து இருப்பதாக  வைத்துக்கொள்வோம்.
கீழுள்ள படத்தைப் பாருங்கள்

படம் 1

   ஆறு மாதங்களுக்குப் பின் பூமி பாதி  சுற்று சுற்றி எதிர்புறம் வந்திருக்கும் அப்போது அதன் மேல் முனை(துருவம்அல்லது சுழலும் அச்சின் மேல்முனை )  சூரியனை நோக்கி இருக்காது. இப்போது  கீழ் முனை தென் துருவம்  சூரியனை  நோக்கி இருக்கும். அதாவது பூமியின் அச்சு அதே நிலையில் இருக்கிறது.
இதோ  இந்தப் படத்தைப் பாருங்கள்
படம் 2

பூமியின் சுற்றுப் பாதையை ஒரு கம்பியாகவும் பூமியை ஒரு மணியாகவும் வைத்துக் கொள்ளுங்கள் கம்பியில் கோர்த்தபடி மணி சுற்றுவது போல் பூமி சுற்றினால்  கீழுள்ள படத்தில் உள்ளது போல் 6 மாதங்களுக்குப் பிறகும் அதன் வடமுனை எப்போதும் பூமியை நோக்கியே சாய்ந்திருக்கும்.
படம் 3
ஆனால்  இயற்கையில் அவ்வாறு நிகழவில்லை. இப்படி பூமி சுற்றினால் கால மாற்றங்கள் நிகழாது. ஜுன் மாதத்தில் பூமியை நோக்கி சாய்ந்திருக்கும் வடதுருவம் 6 மாதங்களுக்குப் பின் சூரியனை சுற்றி எதிர் பக்கம் வரும்போது அதன் வடதுருவம் சூரியனை  விட்டு விலகி இருக்கும், அதாவது பூமியின் சுழலும் அச்சை ஒரு கோடாக பல்வேறு நிலைகளில் வரைந்தால் ஒவ்வொரு நிலையிலும் அந்தக் கோடு பல்வேறு தளங்களில் அமைந்த இணைகோடுகளாக  இருப்பதைக் காணலாம் 
   படம் 1 இல் காணப்படும் நிலை ஜூன் 21 அன்று ஏற்படுகிறது. தென் துருவம் சூரியனிடமிருந்து சற்று விலகி இருப்பதைக் காணாலாம் அன்று ஆண்டில் மிக நீண்ட பகலாக இருக்கும். இந்த நாளில் நில நடுக்கோட்டுக்கு மேலுள்ள வட அரைக் கோளத்தில் சூரிய ஒளி  அதிகமாகவும் தென் அரைக்கோளத்தில் குறைவாகவும் விழுகிறது. அன்றிலிருந்து பகல் நேரம் சிறிது சிறிதாக குறைந்து இரவு  நேரம் சிறிது சிறிதாக அதிகரிக்கும். செப் 23 அன்று இரவும் பகலும் சம நிலையை அடைகிறது. 
    இந்த நாட்களில் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர்வதைப் போல் தோற்றமளிக்கும் இதை தட்சணாயணம் என்று கூறுவது வழக்கம். செப் 22 அன்று நில நடுக்கோட்டுக்கு செங்குத்தாக சூரிய ஒளி விழுவதால் வட  அரைக் கோளத்திலும் தென் அரைக் கோளத்திலும் சம அளவு ஒளி விழுகிறது.அதாவது வட துருவமும் தென் துருவமும் சம தொலைவில் உள்ளது. இதனால் இரவும் பகலும் சமமாக உள்ளது. இதே நிலைய மார்ச் 21 அன்றும் ஏற்படுவதால் அன்றும் இரவும் பகலும் சமமாக அமைகிறது.
   இதற்கிடையில் (படம் 2)டிசம்பர் 21(சில சமயங்களில் டிசம்பர் 22) அன்று ஜூன் 21 அன்று உள்ள நிலைக்கு நேர் எதிரான சூழ்நிலயில் பூமி அமைவதால் அன்று மிக நீண்ட இரவாகவும் குறைந்த பகலாகவும் காணப்படும்.அன்றிலிருந்து சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்வது போல் தோற்ற மளிக்கும் இதை உத்தராயணம் என்று கூறுவார்கள்.
   சரி! இவையெல்லாம் விண் வெளியில்  நிகழ்கிறது.நாம் எப்படி இதை அறிவது. நாம் கண்ணால் என்ன மாற்றங்களை பார்க்க முடியும் 
1. இன்று சூரியன் உதிப்பது சரியான கிழக்கு திசையின் மையத்தில்  
2. இன்றிலிருந்து நிழல் வடக்குப்புறம் சாய்வாக விழத் தொடங்கும் 
3 இன்று பகல் பன்னிரண்டு மணிக்கு 90 டிகிரி செங்குத்தாக ஒரு வளைவில்லாத  குச்சியை வைத்தால்(பூமத்திய ரேகைப் பகுதியில்) அதன் நிழல் தரையில் விழாது. தலைக்கு மேல் நேராக சூரியன் இருக்கும்.
4 தமிழகத்தில் நெய்வேலியைத் தவிர இதர இடங்களில் சரியான கிழக்கு  மேற்காகவோ ,வடக்கு தெற்காகவோ  சாலைகள் இல்லை அதனால் திசைகளை அறிவது சில வேளைகளில் கடினமாக உள்ளது. இன்றைய சூரியனை வைத்து  திசைகளின் அமைப்பை  அறிந்து கொள்ளலாம்.
இதோ இந்தப் படங்கள் அதை விளக்கும் என்று நம்புகிறேன்.படத்தில் உள்ள குச்சியின் நிழலை கவனியுங்கள்.

ஜூன் 21 அன்று                               டிசம்பர் 21 அன்று
 
                       இன்று செப்டம்பர் 22 அன்று 

  இவை  யாவும் நில நடுக்கோட்டுப் பகுதியில் உள்ளவர்களுக்கு100 சதவீதம் பொருந்தும். மற்ற இடங்களில் நிழலில் மாறுபாடு காணப்படலாம். தமிழகத்தை பொறுத்தவரை நிலநடுக் கோட்டுக்கு வட பகுதியில் அமைந்துள்ளதால் நிழல் சற்று வடக்குப்புறம் சாய்வாக விழும். இரவு பகல் நேரங்கள் சமமாகவே இருக்கும். 

மேலே சொன்னது எல்லா இடங்களுக்கும் பொருந்துமாயின் இன்று  பகல்  12  மணி அளவில் ஒரு பொருளின் நிழல் பூமியில் விழாமல் இருக்கவேண்டும் ஆனால் இன்று எல்லா இடங்களிலும் அப்படி இருக்காது. உதரணமாக சென்னையில் எப்படி இருக்கிறது என்பதை அறிய கீழே உள்ள புகைப் படத்தை பாருங்கள் . என் வீட்டு வாசலில் ஒரு அரை அடி உயரமுள்ள முக்கால் அங்குல பிவிசி பைப்பை நிற்க வைத்து புகைப்படம் எடுத்திருக்கிறேன். எடுத்த நேரம் இன்று(sep 22) ஏறக்குறைய பன்னிரண்டு மணி 

மேலுள்ள படத்தில்  பன்னிரண்டு மணிக்கு நிழல் வடக்கு புறமாக விழுந்துள்ளதை காணலாம். இதே  நில்னடுக்கொட்டுப் பகுதியில் இதே முறையில் படம் எடுத்தால் நிழல் இருக்காது. 
  அப்படியானால் இதே நேரத்தில் சென்னையில் நிழல் தெரியா நிலை எப்போது வரும் என்று கேள்வி எழலாம்? 
    சென்னை 13 டிகிரி வட அட்சத்தில்(lattitude) அமைந்துள்ளது. ஜூன் மாதத்தில் தெற்கு பக்கமாக சாய்ந்து பயணம் செய்வது (போல)  தொடங்குகிறது.  0 டிகிரி நில நடுக்கோட்டுப்(Equator) பகுதிக்கு வர செப்டெம்பர் மாதம் வரை எடுத்துக் கொள்கிறது. ஆனால் சென்னையை அதற்கு முன்பாகவே கடந்து விடுகிறது. அதாவது ஆகஸ்ட் மாதத்தில்  20(தோராயமாக ) தேதிகளுக்கு கடக்கிறது.அந்த நேரத்தில் பகல் பன்னிரண்டு மணி அளவில் மேற்கண்ட போட்டோ எடுக்கப் பட்டால் நிழல் இல்லாமல் இருக்கும். அதாவது சூரியன் நேர் செங்குத்தாக இருக்கும். இதே நாளில் நிழல் மற்ற நேரத்தில் வலப்புறமோ இடப் புறமோ சாயாமல் தண்டவாளம் போல வரையப்பட்டுள்ள இணை கோட்டுக்குள்ளேயே காலையில் மேற்குப் புறமாகவும் மாலையில் கிழக்குப் புறமாகவும் விழும்.
மேற்புறத்தில் இருந்து எடுக்கப் பட்ட படம்
சுருக்கம்:  1.மார்ச் 21 &செப்டம்பர் 22 சம இரவு பகல் நாட்கள் 
           2. ஜூன் 21 நீண்ட பகல் குறுகிய இரவு 
           3. டிசம்பர் 21 நீண்ட இரவு குறுகிய பகல் 

  இன்றைய நாளோட முக்கியத்துவம்  இதுதாங்க
தலையை  சுத்துதா? சகிச்கிக்கோங்க பாஸ். திட்டறதுன்னா
கம்மென்ட்ல திட்டலாம்

*********************************************************************************
இந்தப்  பதிவு தொடர்பான வவ்வாலின் கேள்விகளுக்கு  இன்னும் சில விளக்கங்களை காண
http://tnmurali.blogspot.com/2013/09/explanation-shadows-axis-of-rotation-revolution.html வவ்வாலின் கருத்துகளுக்கு விளக்கங்கள்


வியாழன், 19 செப்டம்பர், 2013

திசைக் குழப்பம் வந்ததுண்டா?திசை அறிய மொபைல் மென்பொருள்

உங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில்  கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது? தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா?. புதிய இடங்களுக்கு செல்லும்போது இந்தக் குழப்பம் எனக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு. அந்த இடத்தில் வசிப்பவர்களை கேட்டுத்தான் திசை அறிய வேண்டி இருக்கிறது.  பகலில் சூரியனை வைத்து திசையை அடையாளம் கண்டு கொள்ள, முடியும் என்றாலும் சில நேரங்களில் சூரியன் சற்று மேலே இருந்தால்  திசைகளை சரியாக அறிந்து கொள்ள முடியவில்லை.  சாலைகளை வைத்தே திசைகளை அறிய முற்படுவதால் சரியான திசை தெரிவதில்லை.
    புதிய ஊர் மட்டுமல்ல பழகிய சென்னையிலும்  திசை இன்னமும் குழப்பத்தான் செய்கிறது. குறிப்பாக வட சென்னையில் கிழக்கு திசையை வடக்கு என்றே நினைத்துக் கொள்வேன்.
உதாரணத்திற்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் என் கண்களுக்கு வடக்கு தெற்காக அமைந்திருப்பதாகத் தோன்றும் ஆனால் உண்மையில் அது கிழக்கு  மேற்காக அமைந்திருக்கிறது.
தாம்பரத்தில் இருந்து தெற்கு வடக்காக செல்லும் ரயில் பாதை(சற்றே வடகிழக்கு திசையில் செல்லும்) நுங்கம்பாக்கம் வரை  ரயில் நிலையங்கள் ஓரளவிற்கு வடக்கு தெற்காகவே அமைந்திருக்கும். நுங்கம்பாக்கத்திலிருந்து கிட்டத்தட்ட அரை வட்ட வடிவில் இருப்புப் பாதை திரும்பி கிழக்கு நோக்கி செல்கிறது. சாலைகள் போல உடனே திருப்பம் இல்லாததால் ஒரே திசையில் செல்வது போல் தோன்றி கண்களை ஏமாற்றுகிறது. 
   அதுபோல் சிறு வயதில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம்  முகப்பு கிழக்கு நோக்கி அமைந்திருப்பதாக நினைத்துக் கொள்வேன். உண்மையில் தெற்கு நோக்கியே இருக்கிறது. இது தோற்றப் பிழை என்பதை அறிந்ததால் சரியான திசையை அறிவு சொல்லி விடுகிறது. 

  நமது மொபைலில் ஜி.பி.எஸ்  இருந்தால் அதைப் பயன்படுத்தி திசையையும் வழியையும் அறிந்து  கொள்ள முடியும். GPS வசதி இல்லாத மொபைல்களில் திசை அறிய  மென்பொருள் உண்டா தேடினேன்.
    ஜாவா எனேபில்டு கைபேசியாக இருந்தால் பயன்படுத்தக் கூடிய இலவச காம்பஸ் ஒன்று கிடைத்தது. இப்போது பெரும்பாலான கைபேசிகளில் Java இருப்பதால் இதை எளிதில் நிறுவ முடியும்.
இந்த அப்ளிகேஷன் மூலம் நமது கைபேசியையே திசைகாட்டும் கருவி போல் பயன்படுத்தி திசையை அறிந்து கொள்ள முடிகிறது. இதை
http://www.qcontinuum.org/compass/index.htm  என்ற முகவரியில் இருந்து
  • compass.jar (91K) என்ற பைல்களை டவுன்லோட் செய்து  செல்போனில் நிறுவிக் கொள்ளலாம். Games and Application Folder இல் காப்பி செய்தால் போதுமானது. இணைய இணைப்பு வசதி செல்லில் செயல்படுத்தி இருந்தால்  அதில் இருந்தே தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும்.  நிறுவிய பின்னர் பயன் படுத்த இணைப்பு தேவை இல்லை.
   இதை இயக்கும்போது படத்தில் உள்ளவாறு காட்சி அளிக்கும்.
 கீழ்ப் பகுதியில் உள்ள Options வழியாக நேரமண்டலம்,வசிக்கும் இருப்பிடம் தேர்ந்தெடுக்கலாம். சென்னையாக இருந்தால் 15டிகிரி வட  அட்சத்திலும் 80.15 டிகிரி தீர்க்க ரேகையிலும் அமைந்திருப்பதை காண முடியும். கீழே என்  LG மொபைலில் காட்சி தரும் காம்பசைத் தான் பார்க்கிறீர்கள் .இந்த மொபைலில் கேம்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் சென்று( ஒவ்வொரு செல்லிலும் இது வேறுபடும்) compass இயக்கினால் இது போல தோற்றமளிக்கும். 
இன்று (19.09.2013)  காலை 5.54 க்கு சூரியன் மற்றும் சந்திரனின் நிலை வானத்தில் இவ்வாறு அமைந்திருக்கிறது. ( படத்தில் சூரியன் மஞ்சள் நிறத்திலும் சந்திரன் வெள்ளை நிறத்திலும் உள்ளது. நிறத்தையும் மாற்றிக் கொள்ள முடியும் ) இதை வைத்துக் கொண்டு திசை எப்படி அறிவது என்கிறீர்களா? இதன் மூலம் திசை அறிய வானில் சூரியன் இருக்க வேண்டும். மொபைலில் காம்பசை  இயக்கி விட்டு வானில் சூரியன் இருக்கும் நிலைக்கு, மொபைலில் சூரியன் படம் பொருந்துமாறு மொபைலை திருப்பிக் கொள்ளவேண்டும். அல்லது நமது நிழலின் திசையில் நிழலோடு பொருந்தும்படி மொபைலைப் பிடித்துக் கொண்டால் மொபைலின் மேற்புறம் வடக்கு திசையைக் குறிக்கும். வானில் சூரியன் இருந்தால் நாங்கள் திசையை எளிதில் கண்டுபிடித்து விடுவோம் என்கிறீர்களா? காலையில் கிட்டத்தட்ட 11 மணிக்கு மேல் ஏறக்குறைய 3 மணி வரை சூரியன் இருந்தாலும் திசையை துல்லியமாக அறிவது புதியவர்களுக்கு கடினமாகவே இருக்கும். 

   நாம் பார்க்கின்ற நேரத்தில் வானத்தில் சூரியன் மற்றும் சந்திரன் எந்த இடத்தில்   இருக்குமோ அது போலவே மொபைல் காம்பசிலும் சூரியன் சந்திரனும் அதே நிலையில் அமைந்திருக்கும்.

உதாரணமாக இன்று காலை 5.50 மணி அளவில் சூரியனும் சந்திரனும் காம்பசில் இப்படித்தான் இருந்தது.



  மாலையில் சுமார் 6 மணி அளவில் வானில் உள்ளது போலவே சூரியன் சந்திரன் இடம் மாறி இருக்கும். இந்தக் காம்பஸ் நாம் பார்க்கின்ற நேரத்தில் சூரிய சந்திர நிலையை அப்படியே காட்டும்.



மேலுள்ள படத்தில் சந்திரன் இல்லை. அப்படி என்றால் நம் பார்வைப் பரப்பில் சந்திரன் இல்லை என்று அர்த்தம். ஒவ்வொரு நிலையிலும் சூரியன் சந்திரனின் azimuth, altitude கோணங்கள் மற்றும் பல தகவல்களை இதன்மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. 
இலவச ஜாவா அப்ளிகேஷனான இதன் சோர்ஸ் கோடையும் டவுன் லோட் செய்து கொள்ளலாம்.( ஜாவா நிரல் பத்தி எல்லாம் எனக்கு தெரியாது.)

இதை  மூன்று ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறேன். எனக்கு உபயோகமாய்த்தான் இருக்கிறது. 

 *********************************************************************************

இந்த நாளில் என்ன சிறப்பு ? அறிந்து கொள்ள கிளிக்குங்கள் 
  செப்டம்பர் 22 ஒரு அதிசய நாள்

திங்கள், 16 செப்டம்பர், 2013

தி இந்து தமிழில்-தினமலர்,தினமணி விற்பனை சரியுமா?


       தி ஹிந்து நாளிதழ் தமிழில் வெளிவர இருக்கிறது என்ற செய்தியை அறிந்திருந்தாலும் என்று என்பது நினைவில் இல்லை. விளம்பரம் பார்த்த ஞாபகமும் இல்லை. இன்று காலை பால் வாங்கச் செல்கையில் பேப்பர் கடையில் பளிச்சென்று தெரிந்தது விளம்பரம். எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக ஒரு பத்திரிகை வாங்கினேன் . 

     1878 ல் தொடங்கப்பட்ட The Hindu நாளிதழ் ஆங்கிலத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இன்றும் ஹிந்து படிப்பது கௌரவமாகக் கருதப் படுகிறது. ஏன் வாங்குவது கூட கௌரவம் என்று கருதுபவர்கள் உண்டு. அலுவலகத்திற்கு செல்பவர்கள் கையில்ஹிந்து பேப்பரை வைத்துக் கொண்டு சீன் காட்டுவதை ஆங்காங்கே பார்க்க முடியும்.

 "டெல்லி நிர்ப்பயா கேசுல நாலு பேருக்கு தூக்கு தண்டனை கொடுத்தாட்டாங்களாமே".
 "ஆமாம்! ஆமாம்! நான் கூட ஹிண்டுல  படிச்சேன் என்று பீற்றிக் கொள்வதில் பலருக்கு அலாதி இன்பம். 
"சார் இன்னைக்கு ஹிண்டு பாத்தீங்களா! ரூபா மதிப்பு ஏன் குறைஞ்சதுன்னு  கிழி கிழின்னு கிழிச்சிருக்கான்" என்று ஒரு தலைப்பை ஆங்கிலத்தில் கூறி அதைப் பற்றி அலச  ஆரம்பித்து விடுவார்கள். பலரும் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
தினமும் அலுவலகம் செல்பவர்கள் ரயில் பஸ்களில்  இதுபோன்ற சம்பாஷணைகளை கேட்கமுடியும் .

         அப்புறம் நண்பர் ஒருவர் குட்டை உடைத்தார். "தலைப்பு மட்டும் ஹிந்துவில் படித்தது. மீதியெல்லாம் தினமணி, தினமலர்ல படிச்சது" என்று. 

        படிக்கும் காலங்களில் ஹிந்து பேப்பர் படிச்சா English Knowledge இம்ப்ரூவ் ஆகும் என்று பலரும்  சொல்வதை நம்பி பேப்பர் வாங்குவது  நிறைய நடுத்தரக் குடும்பங்களின் வழக்கமாக இருந்தது. (பழைய ரெபிடக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகத்தை உறவினர் ஒருவர் வீட்டில் இருந்து சுட்டுக் கொண்டு வந்து  ஐ ஆம் கோயிங் டு ஸ்கூல் வகை ஆங்கிலக் கற்றல் பாடங்களை படித்து ஏமாந்ததும்  உண்டு)   இன்றும் அப்படித்தான் இருக்கிறது. தினமும் வாங்க முடியாததால் சனி ஞாயிறு மட்டும் வாங்குவோம். வாங்கிவிட்டால் போதுமா படிக்க வேண்டாமா? வாங்கிய ஆரம்பத்தில்  முழுமையாக படிக்க முயற்சி செய்ததுண்டு. போகப் போக நுண்ணிய எழுத்துக்களும் மொழி நடையும் அடிக்கடி அகராதி தேட வைக்க  ஸ்போர்ட்ஸ்  பேஜ் மட்டும் படித்து வந்தேன். அதுவும் கிரிக்கெட் பற்றிய செய்திகளை மட்டுமே படிப்பேன். சில நாட்களில் பேப்பர் பிரிக்கப் படாமல் அப்படியே கிடக்கும்.

       இதை எதற்கு சொல்கிறேன் என்றால் என்னதான் ஆங்கில நாளிதழ்கள் வாங்கி கௌரவத்தை நிலைநாட்டிக் கொள்ள முயற்சி செய்தாலும்  அரசியல்,சினிமா, சமூக பிரச்சனைகள் போன்றவற்றை தமிழில் (அவரவர் தாய் மொழியில்)  படித்துப் புரிந்து கொள்வது போல் ஆங்கிலத்தில் எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை. 


    உண்மையில் கெளரவத்திற்காக  ஆங்கில நாளிதழ்களும் படிப்பதற்காக தமிழ் நாளிதழ்களும் வாங்கப்படுகின்றன. அதுவும் தமிழில் தினமணி தினமலர் படித்தேன் என்று சொல்லிக் கொள்ளலாம். தினத்தந்தி படித்தேன் என்று சொன்னால் ஏளனமாகப் பார்ப்பார்கள். தினத் தந்தியை வீடுகளில் காண்பது அரிது. டீக்கடைகளிலும், சலூன் கடைகளிலும்தான் தினத் தந்தியை பார்க்க முடியும்.

               இந்த நிலையில் நூற்றாண்டு கனவு நனவாகிறது என்று சொல்லிக் கொண்டு ஹிந்துவின் தமிழ் பதிப்பு இன்று வெளியாகி உள்ளது. தமிழக  மக்கள் விரும்பும் ராசி பலன் உள்ளிட்ட அம்சங்களுடன் முதல் இதழ் 44 பக்கங்களுடன் வண்ணமயமாக  வெளிவந்திருக்கிறது. 

          ஆங்கில  நாளேட்டின் அனைத்துசிறப்பு இயல்புகளையும் தமிழ் பதிப்பு கொண்டிருக்கும் என்றும் அதே சமயத்தில் ஒரு தேசிய நாளிதழாக ஆங்கில நாளேடு செயல்படும் தளத்திலிருந்து தமிழ் நாளேட்டின் முகமும் களமும் மாறுபடும் என்றும் உள்ளூர் செய்திகள் தொடங்கி உலகச் செய்திகள் வரை தருவதோடு இலக்கியம் முதல் சினிமா வரை தமிழ் மக்களின் ருசி அறிந்து விருந்து படைக்கும்; ஆன்மீக ஆறுதல் தரும் பெண்கள் குழந்தைகள் இளைஞர்கள் பெரியவர்களுக்கு என பிரத்தியோக இணைப்புகளும்  உடன் வரும் என்றும் அநாகரிகமான அந்தரங்கச் செய்திகள் இடம் பெறாது என்றும் ஒவ்வொரு நாளும் தொடங்கும்போது நம்பிக்கைத் தாங்கி வரும் இதழாக திகழும் என்றும்  இன்றைய தலையங்கம் உறுதி கூறுகிறது.

        முதல் இதழில்  ஊர்வலம், கருத்துப் பேழை, மாநிலம், தேசம், ரிலாக்ஸ்(சினிமா செய்திகள்)சர்வதேசம், வணிகம், ஆடுகளம், என்ற தலைப்புகளில் செய்திகள் விரிவாக இடம் பெற்றுள்ளன. இன்றைய இதழில் ஜெயமோகன்,பா.ராகவன்  கட்டுரைகள்  காணப்படுகிறது. 

              வாசகர்களுக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளது தி ஹிந்து . ஆம்! கருத்து சித்திரம் வரையும் பொறுப்பை வாசகர்களுக்கு அளித்துள்ளது. அதற்கென இடமும் ஒதுக்கப் பட்டுள்ளது.  வாசகர்கள் கருத்து சித்திரத்தை வரைந்து அனுப்பலாம், வரைய முடியாதவர்கள் கருத்தை மட்டும்  எழுத்து  மூலமாக தெரிவித்தால் கூட போதுமானது.ஹிந்து அவர்களின் ஓவியர்களை வைத்து கருத்துப் படம் வரைந்து கொள்ளும் 
அனுப்ப வேண்டிய  மின்னஞ்சல் முகவரி  cartoon@kslmedia.in 
044-28552215 என்ற  எண்ணுக்கு  FAX ம் அனுப்பலாம் 

      மொத்தத்தில் முதல் இதழ்  சிறப்பாகவே வெளிவந்துள்ளது .இதே வடிவில் தொடரும் பட்சத்தில்  கணிசமான தினமணி, தினமலர் வாசகர்களை  தன் பக்கம் ஈர்க்கக் கூடும் 

 ************************************************************************

படித்து விட்டீர்களா? 
இப்படியும் உதவ முடியுமா? எழுத்தாளரின் அனுபவம் 


சனி, 14 செப்டம்பர், 2013

இப்படியும் உதவ முடியும்-ஒரு எழுத்தாளரின் அனுபவம்


   புதிய தலைமுறை வார இதழில் எழுத்தாளர் ஆத்மார்த்தி  மனக் குகை சித்திரங்கள் என்ற தலைப்பில் வாரந்தோறும் எழுதி வந்தார். சமீபத்தில் அத் தொடர் நிறைவைடைந்தது.இந்தத் தொடருக்கு முன்னர் அவரது வேறு எந்தப் படைப்பையும் நான் படித்ததில்லை. ஆனால் இந்தக் கட்டுரை என் மனதைக் கவர்ந்தது.

   தான் சந்தித்த மனிதர்கள்,சமுதாய நிகழ்வுகள்,அனுபவங்கள், மென்மையான மனித உணர்வுகள் பற்றி சுவாரசியமாகவும் உருக்கமாகவும் எழுதி வந்தார். சமீப காலங்களில் இது போன்ற  பல்வேறு தரப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டங்களைப் பற்றி எழுதும் தொடர்கள் வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் இந்த தொடரும் சிறப்பான தொடராக அமைந்திருந்தது.

    நிறைவுப் பகுதியில்  நெகிழ்ச்சியான நிகழ்வை நினைவு கூர்ந்து தொடரை முடித்திருந்தார். ஆத்மார்த்தி கைபேசிக் கடை நடத்தி வந்தாகவும்,செல்போன் விற்பதோடு ரீசார்ஜ், டாப் அப் செய்துவந்ததாகவும்  தெரிவிக்கும் இவர் கடைக்கு வரும் மனிதர்களுடன் தினமும் உறவாடக் கூடிய வாய்ப்ப்பு கிடைத்ததால் ஒவ்வொரு மனங்களையும் வெகு அருகில் இருந்து உணர முடிந்தது என்று கூறுகிறார். அவர்களில் சிலர் ஏற்படுத்திய தாக்கம் தனித்துவமானது என்று சொல்லி  ஒரு நிகழ்வை விவரிக்கிறார்,

அவரது கடைக்கு ஒரு நாள் முப்பத்தைந்து வயது மதிக்கத் தகுந்த நபர் ஒருவர் தன மனைவி குழந்தையுடன் வந்திருக்கிறார், அவர் பதட்டத்துடன் காணப்பட்டார் . தன் பெயர் பாஸ்கர் என்று தன்னை  அறிமுகப்படுத்திக் கொண்டு. தனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம் .

   விவரத்தை சொல்லுங்கள் முடிந்தால் செய்கிறேன் என்று கூறிய ஆத்மார்த்தியிடம்  அவர் சொன்னார் என் தந்தைக்கு அறுபத்தைந்து வயதிருக்கும் என்றும் அவர் கொஞ்சம் முடியாதவர் என்பதோடு ஞாபக மறதி அதிகம் உடையவர். என்றும் திருப்பதிக்கு போகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பினவர் ரயிலில் செல்லும்போது ஒரு ஸ்டேஷனில் இரவில் இறங்கியவர் ஏதோ வாங்கிவிட்டு மீண்டும் அதே ரயிலில் ஏறாமல் இடவல குழப்பம் காரணமாக வேறு ரயிலில் ஏறி அமர்ந்து உறங்கியும் விட்டாராம். காலையில் எழுந்து பார்க்கும்போதுதான் தெரிந்ததாம் தன் வழி தவறியது .   மகாராஷ்டிரா கர்நாடகா எல்லையில் ரயில் நிற்க அங்கே இறங்கி விட்டாராம். அவர் கொண்டு வந்த பையும் திருடு போய்விட்டது. அவரது சட்டைப் பையில் சொற்பத் தொகையே இருந்ததாம். எப்படியோ மகனிடம் தொடர்பு கொண்டு அவர் தன் நிலையை சொல்லி இருக்கிறார். அவரை எப்படியாவது எப்படி மீட்டுக் கொண்டு வருவது என்று தெரியாமல்தான் ஆத்மார்த்தியின் உதவியை நாடியதாகவும் சொன்னார். அவர் ஒரு டெலிபோன் பூத்தில் அமர்ந்து அந்த பூத்தின் எண்ணைக் மகனிடம் கொடுத்து ஊர் திரும்புவதற்கு வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

    தந்தைக்கு அவர் இருக்கும் இடத்திற்கு எப்படியாவது பணம் அனுப்ப முடியுமா என்று கேட்க , அவர் மனைவியோ இவர் என்ன செய்ய முடியும் என்று அலட்சியத்துடன் பார்க்க ஆத்தாமர்த்தி சிந்தனையில் ஆழ்ந்தார். இன்டர்நெட் பரிமாற்றம் போன்ற நவீன வசதிகள் இல்லாத காலமாம் அது . ஆத்மார்த்தி பாஸ்கர் கொடுத்த என்னை வைத்து தந்தை தொலைபேசிய கடைக்கு தொடர்பு கொண்டு  அந்தப் பெரியவருக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்ள , "நான் என்ன செய்ய முடியும் ? அவரை ஊருக்கு அனுப்பும் அளவுக்கு தொகையை தன்னால் தர இயலாது " என்றும் தெரிவித்திருக்கிறார்..

   பெரியவர்  போன் செய்த கடையும் ஒரு சிறிய செல்போன்  கடைதான் என்பதை அறிந்த ஆத்மார்த்தி,மீண்டும் தொடர்பு கொண்டு ,ஒரு ஆலோசனை ஒன்றை சொல்லி இப்படி செய்தால் அவருக்கு உதவ முடியும் என்றார். அந்தக் கடைக்காரரும் சம்மதிக்க,"இந்த நிமிடத்திலிருந்து  உங்கள் கடையில் ரீசார்ஜ் செய்ய வருபவர்களின் எண்களை எனக்கு சொல்லுங்கள் நான் இங்கிருந்து ரீசார்ஜ் செய்கிறேன். நீங்கள் கமிஷன் போக மீதம் உள்ள தொகையை அந்த பெரியவரிடம் கொடுத்துவிடுங்கள் என்று கூற  அவரும் அப்படியே செய்ய ஒரு மணிநேரத்தில்  கமிஷன் போக கணிசமான தொகை பெரியாரிடம் சேர்ந்தது. பின்னர் அவர் இரவுக்குள் பெங்களூர் வந்து சேர்ந்து அங்கிருந்து பத்திரமாக  ஊர் வந்து  சேர்ந்தாராம். 

  கண் முன் நடந்த இந்த நிகழ்வை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்த.அந்தத் தம்பதியினர்  கண்களில் நன்றிக் கண்ணீருடன் .. ரீசார்ஜ் தொகையை ஆத்மார்த்தியிடம் வழங்கினர்  

   ஏதோ ஒரு மாநிலத்தில் ஒரு ஊரில் முன்பின் தெரியாத ஒரு கடைக்காரர் ஒருவர் தனது  பரீட்சார்த்த   ஒரு முயற்சியை ஏற்று  மற்றவருக்கு உதவியது ஒரு நெகிழ்வான அனுபவம் என்று உணர்வு பூர்வமாக கூறி கட்டுரையை நிறைவு செய்கிறார் ஆத்மார்த்தி .

இதில்  ஒருவேளை கற்பனையும் கலந்திருக்கலாம்.ஆனால் ஆத்மார்த்தியின் சமயோசித புத்தியை  பாராட்டாமல் இருக்க முடியவில்லை. 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


கொசுறு: இவருக்கென்று வலைப் பக்கமும் உண்டு. குறைவான பதிவுகளே காணப்படுகின்றன. 2011க்குப் பிறகு பதிவுகள இல்லை.
முகவரி: http://aathmaarthi.blogspot.in/




வெள்ளி, 13 செப்டம்பர், 2013

பெட்டிகடை3-கேபிள் மீது பி.கே.பி. வருத்தம்?+ஒரு பெண்ணின் லட்சியம் 1 லட்சம் ஆண்கள்


பெட்டிக்கடை- 3 
யாருக்கு வெற்றி- புதிர்
புது வீடு கட்டின  ராமசாமி  தன் வீட்டில மனைவி குழந்தைகள் அப்பா அம்மா ஆசைப் படி ஊஞ்சல் வாங்கி மாட்டினார். எல்லோரும் ரொம்ப சந்தோஷமா தினமும் ஊஞ்சலாடுவாங்க. குழந்தைகளும் தாத்தா பாட்டிக்கும்  ஊஞ்சலாடறதில சண்டையே நடக்கும். அன்னைக்கு ஞாயித்துக் கிழமை. ராமசாமியும்  மனைவியோட  ஊஞ்சலாடறதுக்கு வந்துட்டாரு. தாத்தா-பாட்டி, மகன்-மகள், பேரன்-பேத்தி மூணு டீமும் இன்னைக்கு முழுதும் நாங்கதான் ஆடுவோம்னு சண்டை போட்டுக்கிட்டாங்க. அப்புறம் குட்டீசுகளின் ஆலோசனைப்படி ஒரு போட்டி வச்சு  அதுல யார் ஜெயிக்கறாங்களோ அவங்க இன்னைக்கு முழுதும் அவங்க இஷ்டப்படி ஊஞ்சலாடலாம்னு முடிவு பண்ணாங்க. போட்டியும் அவர்களே சொல்ல,  அதாவது ஒவ்வொரு டீமும் ஒரு நிமிஷம் ஊஞ்சலாடனும். யார் அதுக்குள்ள அதிக ஆட்டம் ஆடறாங்களோ அவங்கதான் ஜெயிச்சவங்க அவங்க மத்தவங்களுக்கு விட்டுக் கொடுத்துட்டு போயிடனும் . ஒரு ஆட்டங்கிறது  ஒரு பக்கத்தில ஆரம்பிச்சு திரும்பி அதே பக்கத்துக்கு வர்றது ஒரு ஆட்டம். இந்த டீலிங் தாத்தா பாட்டிக்கு பிடிக்கலன்னாலும் வேற வழியில்லாம ஒத்துக்கிட்டாங்க. ஒரு டீம் ஆடும்போது இன்னொரு டீம் செல் ஃபோன் ஸ்டாப் கிளாக் வச்சு ஒரு நிமிஷத்தில ஆட்டத்தை எண்ணணும்னு முடிவு பண்ணி போட்டிய ஆராம்பிச்சாங்க.
முதல்ல  பசங்க வேகமா ஆட ஆரம்பிச்சாங்க.
அடுத்து ராமசாமியும் அவர்  மனைவியும் ஆடினாங்க அவங்களால பசங்க மாதிரி வேகமா ஆட முடியல
கடைசியா தாத்தா பாட்டி ஆடினாங்க.அவங்க நாம எப்படியும் தோத்துதான  போறோம்னு நினைச்சு வழக்கத்த்டை விட மெதுவா ஆடினாங்க.
இப்ப உங்களுக்கு ஒரு கேள்வி. இதுல யாரு ஜெயிச்சிருப்பாங்க?
(இதற்கான  விடையும் விளக்கமும்  அடுத்த பெட்டிக்கடையில்)

*******************************************************************************
வம்பு
பிரபல பதிவர் கேபிள் சங்கர் ”தொட்டால் தொடரும்”  படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  இன்னொரு பழைய செய்தி. இந்த தொட்டால் தொடரும் தலைப்பு பட்டுக் கோட்டை பிரபாகரனின்  பிரபல நாவலின் தலைப்பாம். இதை தன் படத்துக்கு பெயர் வைக்க அனுமதி கேட்க, மறுத்து விட்டாராம். பி.கே.பி. ஆனாலும் பெயர் மாற்றப்படவில்லை என வருத்தப் பட்டாராம் பி.கே.பி. பெயரை பதிவு செய்தால் மட்டுமே சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.. எத்திக்ஸ்  என்றால் என்ன என்று அவருக்கு கற்றுக் கொடுங்கள் என்கிறார் பி.கே.பி. தனது முக நூல் பக்கத்தில்.



*******************************************************************************************
இந்த படத்தை பாருங்க




நான்கு படத்தை ஒன்றாக இணைத்திருக்கிறார்கள் என்றுதானே நினைகிறீர்கள்? அப்படி நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள்? இது ஒரே படம் ஒரு அறையில் உள்ளவற்றை வித்தியாசமான கோணத்தில் எடுக்க அது நான்கு படங்கள் சேர்ந்தாற் போல காட்சி அளிக்கிறது. எப்படியெல்லாம் யோசிக்கறாங்க!  Lateral Thinking என்பது இதுதானோ?

இன்னொரு  கோணத்தில் படத்தை பாருங்கள் 


இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
********************************************************************************************
அற்புத  லட்சியம்
   படத்தில இருக்கிற அம்மணியை பத்தி பத்திரிகையில படிச்சி இருப்பீங்க. பேரு ஆனியா லிசெவ்ஸ்கா  வயது 21. இந்த போலந்து நாட்டு அம்மணியோட வாழ்நாள் லட்சியத்தை கேட்டா ஆடிப் போயிடுவீங்க.  வாழ்நாள்ல குறைந்த பட்சம் ஒரு லட்சம் ஆண்களோட செக்ஸ் வச்சுக்கனுமாம். ஏற்கனவே Target ல 284 அச்சீவ் பண்ணிட்டாங்களாம். குறிக்கோள் நிறைவேறும் வரை அயாராது உழைக்கப் போறாங்களாம்? என்னா லட்சியம்?


*********************************************************************************************
 சமீபத்தில் படித்தது
நீங்கள் ஹாக்கர்களின் Victim ஆக இருக்கிறீர்களா?
Tamil Computer College என்ற வலை தளத்தில் மேற்கண்ட கட்டுரையை படித்தேன். எவ்வளவு பாதுகாப்பின்றி கணினி உலகம் இருக்கிறது என்பதை இந்த கட்டுரை சொல்கிறது. நாம் பயன்படுத்தும் ஈமெயில், முகநூல், டுவிட்டர் பாஸ்வோர்டுகளை எளிதில் ஹாக் செய்ய முடியும் எச்சரிக்கை செய்ய முடியும்என்கிறது கட்டுரை. எந்த முறையில் எப்படி எல்லாம்ATM பின் நம்பர் உட்பட ஹாக் செய்ய முடியும் என்பதை புட்டுப் புட்ட வைக்கிறார் கட்டுரை எழுதியவர். ஒரே மாதிரி பாச்வோர்டை எத்தனை பேர் வச்சுருக்காங்கன்னு ஒரு பட்டியல் வேறு காணப்படுகிறது.
ஆர்வம் இருப்பவர்கள் போய் படித்துப் பார்க்கலாம். 
********************************************************************************************
டெல்லி  பாலியல் வன்முறை சம்பவ வழக்கில் தீர்ப்பு வழங்கப் பட்டு விட்டது . இந்த அளவுக்கு விரைந்து வழக்கை முடித்தது பாராட்டுக்குரியது. இதுபோல் மற்ற பாலியியல் வன்முறை வழக்குகளிலும் விரைந்து முடித்து நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் . 
அந்த கொடூர சம்பவத்தின் போது நான் எழுதிய கவிதை 

அந்நியன் வருவானா தண்டனை தருவானா?

இந்தப்  பெட்டிக்கடை எப்படி இருக்கிறது?  தவறாமல் உங்கள் கருத்துக்களைப் பதியவும்.

******************************************************************************
படித்து  விட்டீர்களா?

பெட்டிக்கடை - 1-திருக்குறளில் இலக்கணப் பிழையா?
பெட்டிக் கடை-2- ஆடி(யோ) மாதம்,வளர்பிறையும் தேய்பிறையும்

வியாழன், 12 செப்டம்பர், 2013

சிறிய வாழ்க்கை! பெரிய சாதனை!

   முறுக்கு மீசைக் கவிஞனின் கம்பீர முகத்தைப் பார்த்தாலே நமக்கும் வீரம் பொங்கும். அநீதியைக் கண்டு மோதி மிதித்துவிடத் தோன்றும்.அவனது நறுக்கு வார்த்தைப் பாடல்கள் ஆங்கிலேயரை அச்சப்பட வைத்தன. காலத்தை வென்ற பாடல்களைப் படைத்த பாரதியின் நினைவு நாள் இன்று. உண்மையில் 12.09.1921 காலை 1.00 மணிக்கு இறந்தார் என்று ஒரு குறிப்பு காணப்படுகிறது. ஆனால். பாரதியின் மறைவு 11.09.1921 என்றே பல நூல்களில் கூறப்பட்டுள்ளது.
தனது  பாடல் மூலம் தேசபக்தியை தட்டி எழுப்பிய பாரதி குறுகிய காலமே உயிர் வாழ்ந்தபோதிலும் மகாகவியாக இன்றும் நம் நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
   இந்தியாவின் முதல் திரைப்படம் வருவதற்கு முன்பே மறைந்து போன பாரதியின் பாடல்கள் இன்றும் திரைப்படங்களில் இடம் பெறுகின்றன. இந்தக்  காலத்துக்கும் பொருந்தும் வண்ணம் அவரது பாடல்கள் அமைந்துள்ளது சிறப்பு.
   எழுதப்பட்ட பாடல்களுக்கு திரைப்படங்களில் இசை அமைப்பாளர்களால் அதிகமாக மெட்டமைக்கப்பட்டது பாரதியின் பாடல்களாகத் தான் இருக்கும்.. எம்.எஸ்.வி. க்கு முந்தைய காலத்து இசை அமைப்பாளர்கள் முதல் இன்றைய ரகுமான் வரை பாரதி பாடல் எழுதாத இசை அமைப்பாளரைக் காண்பது அரிது.

இதோ  அவரது சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு 

1882- டிசம்பர் 11 பாரதி பிறந்தார். தாயார் லட்சுமி அம்மாள். தந்தை 
     சின்னசாமிஅவர்கள் பாரதிக்கு இட்ட பெயர் சுப்பையா
1887- பாரதியின் தாயார் மரணம்- பாரதிக்கு வயது ஐந்து 
1889- தந்தையார் மறுமணம் 
1893-  எட்டயபுரம் சமஸ்தானப் புலவர்கள் பாலகன்  சுப்பையாவை 
      சோதித்து  வியந்து பாரதி என்ற பட்டம் அளிக்கின்றனர்.

1894-1897 திருநெல்வேலி ஹிந்து கல்லூரியில் ஐந்தாம் படிவம் படிப்பு 
         பண்டிதர்களுடன் சொர்போர்கள் 
1897-ஜூன்  பாரதி செல்லமாள் திருமணம் 

1898- தந்தை மரணம்-பெருந்துயர் சஞ்சலம் 

1898-1902 காசியில் அத்தை குப்பம்மாளுடன் வாசம்.பலமொழி கற்றல் 
          மீசை வைத்தல் வால் வைத்த தலைப்பாகை அணிதல் 
          இங்குதான் ஆரம்பம் 

1903-1904  எட்டயபுரம் மன்னருக்கு தோழர்-விருப்பமில்லா வேலை     
          மதுரை விவேக பானு பத்திரிகையில் தனிமை இரக்கம்என்ற  
          முதல் பாடல் அச்சேறுதல்

1904 - மதுரை சேதுபதி உயர் நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் 
      வேலை,சுதேச மித்திரன் உதவி ஆசிரியர் வேலை 

1905- வங்கப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகக் கலந்து 
     கொள்ளுதல், விவேகானந்தரின் சீடர் சிஸ்டர் நிவேதிதாவை   
     சந்தித்து ஞான குருவாக ஏற்றுக் கொள்ளுதல்  

1907  டிசம்பர்  சூரத் காங்கிரஸ் -திலகர் தீவிரவாத கோஷ்டிக்கு 
     ஆதரவு..வ.உ.சி., ஸ்ரீநிவாசாச்சாரி உள்ளிட்ட இளைஞர் குழுவுடன் 
     சூரத் பயணம் -திலகர் அரவிந்தர் லலாலஜபதிராயுடன் சந்திப்பு 

1907-  எதிர் கருத்து கொண்டவராக இருந்தபோதிலும் பாரதியின்  
      தேசியப் பாடல்களில் மெய் மறந்து  சிலவற்றை  பிரசுரித்து  
      இலவசமாய்  விநியோகிக்கிறார் வி. கிருஷ்ணசாமி ஐயர்.

1908 - சென்னையில் பாரதியும்,தூத்துக்கொடியில் வ.உ.சி ,சுப்ரமணிய 
      சிவாவும் சுயராஜ்ய தினம் கொண்டாடுகின்றனர், மூவரும் கைது

1908- 1910-  முதல் கவிதை நூல் வெளியீடு-பாரதிக்கு கைது வாரண்டு-
      புதுச்சேரிக்கு தப்பித்து செல்லுதல-அங்கிருந்து கொண்டே 
      இந்தியா  பத்திரிகைமூலம் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு  
      கடுமையான எதிர்ப்பு   பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் நுழைய 
      பாரதிக்கு தடை 

1911-  மணியாச்சி ஆஷ் துரைகொலை-போலீஸ் கெடுபிடிகள் 
       புதுவையில் இருந்து தேச பக்தர்களை வெளிஈற்ற முயற்சி 

1912-  கண்ணன் பாட்டு,குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலியன 
      படைப்பு
1913-18 பல்வேறு படைப்புகளில் தீவிரம்

1918- புதுவையில் இருந்து வெளியேறியபோது கடலூரில் கைது 34 
     நாட்கள் ரிமாண்ட்..பின்னர் வழக்கில்லை என விடுதலை -
      மனைவியின் ஊரான கடையநல்லூருக்கு செல்லுதல்
1919- சென்னை விஜயம் ராஜாஜி வீட்டில் காந்தியுடன்  சந்திப்பு

1920- மீண்டும் சுதேச மித்திரனில் ஆசிரியர் வேலை-சுதந்திர உணர்வை 
     தட்டி எழுப்பும் கட்டுரைகள் எழுதுதல்

1921-  ஜூலையில்திருவல்லிக்கேணி கோயில் யானை பாரதியை கீழே 
      தள்ளியது.குவளைக்கண்ணன் கா ப்பாற்றி அழைத்து செல்கிறார்.
      அதிர்ச்சி காரணமாக நோய்வாய்ப்படுகிறார்
.
1921- செப்டம்பர் 11 நோய் கடுமையாகிறது-மருந்து உண்ண மறுப்பு
     செப்டம்பர் 12 அதிகாலை 1.30 மணிக்கு மகாகவி மரணம் (ஆனால் 
     மறைவு செப்டம்பர் 11 என்றே சொல்லப் படுகிறது)

அந்த தேசிய கவியின் இறுதி ஊர்வலத்தின்போது சொற்பமான பேரே கலந்து  கொண்டனர் என்று தெரிவிக்கிறது வரலாறு. 


அவர் குறுகிய காலம் வாழ்ந்தார் என்று சொல்வது மடமை .அவர்தான் பாடல்களால் காலமெல்லாம் வாழ்கிறாரே!
*****************************************************************************

கொசுறு:வைரமுத்து  தன் கவிராஜன் கதை என்ற பாரதியின் வாழக்கை பற்றி புதுக் கவிதையில் எழுதி இருக்கிறார். பாரதியின் இறுதி ஊர்வலம் பற்றி வைரமுத்து எழுதியது நெஞ்சை உருக்கக் கூடியது,
*********************************************************************************
கடந்த ஆண்டு இதே நாளில்  கவிதாஞ்சலி



செவ்வாய், 10 செப்டம்பர், 2013

பதிவர்களை டான்ஸ் ஆட வைத்தது யார்?-கணினிக் குறிப்பு

.
இந்த கலை நிகழ்ச்சி எப்ப நடந்தது?
      படத்துக்கு பொருத்தமான பஞ்ச் டயலாக்  சொல்லலாம்
 கற்றுக் குட்டின் கணினிக் குறிப்புகள் ( புதியவர்களுக்காக)
பிரபல பதிவர் கவியாழி கண்ணதாசனின் Google + பக்கத்திலிருந்து பிரபல பதிவர்கள் டான்ஸ் ஆடுவது போன்ற படத்தை ஸ்கூல் பையன் தனது பதிவில் பகிர்ந்திருந்தார். பார்க்க சுவாரசியமாக இருந்தது.அதை யார் உருவாக்கினார்கள் என்று கண்ணதாசனிடம் கேட்டேன். என் மொபைல் கேமராவில் எடுக்கப் பாத்தது என்றார்..நிச்சயமாக அது கேமராவினால் ஒரே படமாக நேரடியாக எடுக்கப் பட்டிருக்க முடியாது. அது ஒரு animated புகைப்படம். gif வகையை சார்ந்தது. ஒன்றுக்குமேற்பட்ட இணைத்துத் தான் இப்படத்தை உருவாக்கி இருக்க முடியும். படங்களை jpeg, bmp, png, gif என்ற பல்வேறு Format களில் சேமிக்க முடியும். அசைவுப் படங்களை உருவாக்க gif Format பயன்படுகிறது
சற்று  ஆர்வம் ஏற்பட்டு அதில் உள்ள படங்களை பிரித்து எடுத்தேன். 
மொத்தம் 7 படங்கள் அதில் இருந்தன. இவை இணைக்கப்பட்டே பதிவர்கள் டான்ஸ் ஆடிய புகைப்படம் உருவாக்கப் பட்டுள்ளது அந்த ஏழு படங்களும் உங்கள் பார்வைக்கு 

படம் 1

படம் 2


படம் 3



படம் 4

படம் 5
படம் 6
படம் 7

மேற்கண்ட  ஏழு JPEG படங்களை இணைத்துத்தான் கண்ணதாசனின் படம் உருவாக்கப் பட்டிருக்கவேண்டும். சரியா என்று அவர்தான் சொல்லவேண்டும். பதிவின் தொடக்கத்தில் உள்ள அசைவுப் படம்  மேலுள்ள படங்களை சேர்த்து நான் உருவாக்கியது
gif பைல்களை உருவாக்குவதற்கும் ஏற்கனவே இருக்கிற gif படங்களை பிரித்தடுப்பதற்கும் நிறைய ஆன்லைன் tool கள் உள்ளன அவற்றில் ஒன்று http://gifmaker.me
இந்த முகவரிக்கு சென்று படங்களை பதிவேற்றி,அசைவுப் படங்களை உருவாக்கலாம் ஏற்கனவே உள்ள gif படத்திலிருந்து தனித்தனியாக படங்களை பிரித்துவைத்து சேமித்தும் கொள்ளலாம். 

பறக்கும் கொடி, மலரும் பூ, சுற்றும் கடிகாரமுள் இவற்றை gif பார்மேட்டில் உருவாக்கலாம்.
நான்  பயன் படுத்தியது  http://picasion.com/ இல் உள்ள ஆன் லைன் மென்பொருள். 
ஆர்வம் இருந்தா நீங்களும் முயற்சி செய்து  பார்க்கலாம் 
இது புதியவர்களுக்குத்தான். இதெல்லாம் ஏற்கனவே தெரிஞ்சவங்க எஸ்கேப் ஆகலாம்.

***************************

எச்சரிக்கை: யாரேனும் ஒருவர் விருப்பம் தெரிவித்தால் கூட இது போன்று வேறு சில அசைவுப் படங்களை எப்படி உருவாக்குவதென்று 
பதிவிடப்படும்  
***********************************************************************************
படித்து  விட்டீர்களா?