என்னை கவனிப்பவர்கள்

சம இரவுபகல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சம இரவுபகல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

இன்றைய நாளின் வானியல் சிறப்பு

மார்ச் 21&செப்டம்பர் 22 அதிசய நாட்கள்!

   "தஞ்சை பெரிய கோவிலின் நிழல் பூமியில் விழும்" என்பதை இண்டு மூன்று நாட்களுக்கு முன் பதிவிட்டிருந்தார் நம்பள்கி. அந்தப் பதிவின் கருத்துரைகளில் நிழல் விழுவது பற்றி  பலரும் விவாதித்திருந்தனர்.  நிழல் விழாமல் எந்த கட்டடமும் கட்ட முடியாது ஒரு குறிப்பிட்ட நாளில் சூரியன் தலைக்கு மேல் வரும்போது (நேர் செங்குத்தாக) வரும்போது மட்டும் நிழலை காண முடியாது.ஏன் எனில் நிழல் அந்தப் பொருள் மீதே விழும். இது ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நிகழும். அந்த அதிசயம் நிகழும் இரண்டு நாட்களில் இன்று இன்றைய நாளும்(செப் 22) ஒன்று.
    நமக்குள்ள பல பிரச்சனைகளில் சில விஷயங்களை கவனிக்கவும் நினைவில் வைத்துக் கொள்ளவும் நேரம் இருப்பதில்லை. பல சுவாரசியமான நிகழ்வுகள் விண்வெளியில்  நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பூமியிலும் இவ்வாறு நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21(சில சமயங்களில் மார்ச் 20) க்கும் செப்டம்பர் 22(சில சமயங்களில் செப் 23) க்கு தனி சிறப்பு உண்டு. இவ்விரு நாட்களிலும் இரவு நேரமும் பகல் நேரமும் சமமாக இருக்கும். மற்ற நாட்களில் பகல் இரவு நேரங்களில் வித்தியாசம் இருக்கும். அதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.

    பூமி தனி அச்சில் 23.5 டிகிரி சாய்வாக சுற்றுகிறது. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்பது நமக்குத் தெரியும்.தன்னைத் தானே சுற்றிக் கொள்வதால்தான் இரவுபகல் ஏற்படுகிறது.என்பதும் நாம் அறிந்ததே! சில காலங்களில் பகல் பொழுது அதிகமாகவும் இரவு பொழுது குறைவாகவும் இருக்கும். சில காலங்களில் இரவுப் பொழுது அதிகமாகவும் பகல் குறைவாகவும் இருக்கும். பூமியின் நீள் வட்டசுற்றுப்பாதை  ஒரு சாலை என்று கொண்டால்  அந்தப் பாதைக்கு நேர்  செங்குத்தாக பூமி தன்னைத்  தானே சுற்றிக் கொள்வதில்லை. சற்று சாய்வாக அதாவது 23.5 டிகிரி சாய்வாக தனது அச்சில் சுற்றுகிறது.
  இதுவே இரவு பகல் நேரங்களில் வித்தியாசம் ஏற்படுவதற்கு காரணம்.பூமியில் கோடைகாலம் குளிர்காலம் போன்ற பருவ காலங்கள் ஏற்படுவதற்கும் இந்த சாய்வே காரணமாக அமைகிறது. வேறு மாதிரி சொல்வதென்றால் பூமி செங்குத்தாக தன்னைத் தானே சுற்றிக் கொண்டால் பருவ காலங்கள் ஏற்படாது. அதாவது பூமியில் ஓரிடத்தில் எந்தவிதமான காலம் இருக்கிறதோ ஆண்டு முழுதும் மாற்றமின்றி அப்படியே இருக்கும்.
இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
பூமி அச்சின் இரு முனைகளையே வட துருவம் தென் துருவம் என்கிறோம்.  ஒரு குறிப்பிட்ட நாளில் மேல் முனை (வடதுருவம்) சூரியனை நோக்கி சாய்ந்து இருப்பதாக  வைத்துக்கொள்வோம்.
கீழுள்ள படத்தைப் பாருங்கள்

படம் 1

   ஆறு மாதங்களுக்குப் பின் பூமி பாதி  சுற்று சுற்றி எதிர்புறம் வந்திருக்கும் அப்போது அதன் மேல் முனை(துருவம்அல்லது சுழலும் அச்சின் மேல்முனை )  சூரியனை நோக்கி இருக்காது. இப்போது  கீழ் முனை தென் துருவம்  சூரியனை  நோக்கி இருக்கும். அதாவது பூமியின் அச்சு அதே நிலையில் இருக்கிறது.
இதோ  இந்தப் படத்தைப் பாருங்கள்
படம் 2

பூமியின் சுற்றுப் பாதையை ஒரு கம்பியாகவும் பூமியை ஒரு மணியாகவும் வைத்துக் கொள்ளுங்கள் கம்பியில் கோர்த்தபடி மணி சுற்றுவது போல் பூமி சுற்றினால்  கீழுள்ள படத்தில் உள்ளது போல் 6 மாதங்களுக்குப் பிறகும் அதன் வடமுனை எப்போதும் பூமியை நோக்கியே சாய்ந்திருக்கும்.
படம் 3
ஆனால்  இயற்கையில் அவ்வாறு நிகழவில்லை. இப்படி பூமி சுற்றினால் கால மாற்றங்கள் நிகழாது. ஜுன் மாதத்தில் பூமியை நோக்கி சாய்ந்திருக்கும் வடதுருவம் 6 மாதங்களுக்குப் பின் சூரியனை சுற்றி எதிர் பக்கம் வரும்போது அதன் வடதுருவம் சூரியனை  விட்டு விலகி இருக்கும், அதாவது பூமியின் சுழலும் அச்சை ஒரு கோடாக பல்வேறு நிலைகளில் வரைந்தால் ஒவ்வொரு நிலையிலும் அந்தக் கோடு பல்வேறு தளங்களில் அமைந்த இணைகோடுகளாக  இருப்பதைக் காணலாம் 
   படம் 1 இல் காணப்படும் நிலை ஜூன் 21 அன்று ஏற்படுகிறது. தென் துருவம் சூரியனிடமிருந்து சற்று விலகி இருப்பதைக் காணாலாம் அன்று ஆண்டில் மிக நீண்ட பகலாக இருக்கும். இந்த நாளில் நில நடுக்கோட்டுக்கு மேலுள்ள வட அரைக் கோளத்தில் சூரிய ஒளி  அதிகமாகவும் தென் அரைக்கோளத்தில் குறைவாகவும் விழுகிறது. அன்றிலிருந்து பகல் நேரம் சிறிது சிறிதாக குறைந்து இரவு  நேரம் சிறிது சிறிதாக அதிகரிக்கும். செப் 23 அன்று இரவும் பகலும் சம நிலையை அடைகிறது. 
    இந்த நாட்களில் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர்வதைப் போல் தோற்றமளிக்கும் இதை தட்சணாயணம் என்று கூறுவது வழக்கம். செப் 22 அன்று நில நடுக்கோட்டுக்கு செங்குத்தாக சூரிய ஒளி விழுவதால் வட  அரைக் கோளத்திலும் தென் அரைக் கோளத்திலும் சம அளவு ஒளி விழுகிறது.அதாவது வட துருவமும் தென் துருவமும் சம தொலைவில் உள்ளது. இதனால் இரவும் பகலும் சமமாக உள்ளது. இதே நிலைய மார்ச் 21 அன்றும் ஏற்படுவதால் அன்றும் இரவும் பகலும் சமமாக அமைகிறது.
   இதற்கிடையில் (படம் 2)டிசம்பர் 21(சில சமயங்களில் டிசம்பர் 22) அன்று ஜூன் 21 அன்று உள்ள நிலைக்கு நேர் எதிரான சூழ்நிலயில் பூமி அமைவதால் அன்று மிக நீண்ட இரவாகவும் குறைந்த பகலாகவும் காணப்படும்.அன்றிலிருந்து சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்வது போல் தோற்ற மளிக்கும் இதை உத்தராயணம் என்று கூறுவார்கள்.
   சரி! இவையெல்லாம் விண் வெளியில்  நிகழ்கிறது.நாம் எப்படி இதை அறிவது. நாம் கண்ணால் என்ன மாற்றங்களை பார்க்க முடியும் 
1. இன்று சூரியன் உதிப்பது சரியான கிழக்கு திசையின் மையத்தில்  
2. இன்றிலிருந்து நிழல் வடக்குப்புறம் சாய்வாக விழத் தொடங்கும் 
3 இன்று பகல் பன்னிரண்டு மணிக்கு 90 டிகிரி செங்குத்தாக ஒரு வளைவில்லாத  குச்சியை வைத்தால்(பூமத்திய ரேகைப் பகுதியில்) அதன் நிழல் தரையில் விழாது. தலைக்கு மேல் நேராக சூரியன் இருக்கும்.
4 தமிழகத்தில் நெய்வேலியைத் தவிர இதர இடங்களில் சரியான கிழக்கு  மேற்காகவோ ,வடக்கு தெற்காகவோ  சாலைகள் இல்லை அதனால் திசைகளை அறிவது சில வேளைகளில் கடினமாக உள்ளது. இன்றைய சூரியனை வைத்து  திசைகளின் அமைப்பை  அறிந்து கொள்ளலாம்.
இதோ இந்தப் படங்கள் அதை விளக்கும் என்று நம்புகிறேன்.படத்தில் உள்ள குச்சியின் நிழலை கவனியுங்கள்.

ஜூன் 21 அன்று                               டிசம்பர் 21 அன்று
 
                       இன்று செப்டம்பர் 22 அன்று 

  இவை  யாவும் நில நடுக்கோட்டுப் பகுதியில் உள்ளவர்களுக்கு100 சதவீதம் பொருந்தும். மற்ற இடங்களில் நிழலில் மாறுபாடு காணப்படலாம். தமிழகத்தை பொறுத்தவரை நிலநடுக் கோட்டுக்கு வட பகுதியில் அமைந்துள்ளதால் நிழல் சற்று வடக்குப்புறம் சாய்வாக விழும். இரவு பகல் நேரங்கள் சமமாகவே இருக்கும். 

மேலே சொன்னது எல்லா இடங்களுக்கும் பொருந்துமாயின் இன்று  பகல்  12  மணி அளவில் ஒரு பொருளின் நிழல் பூமியில் விழாமல் இருக்கவேண்டும் ஆனால் இன்று எல்லா இடங்களிலும் அப்படி இருக்காது. உதரணமாக சென்னையில் எப்படி இருக்கிறது என்பதை அறிய கீழே உள்ள புகைப் படத்தை பாருங்கள் . என் வீட்டு வாசலில் ஒரு அரை அடி உயரமுள்ள முக்கால் அங்குல பிவிசி பைப்பை நிற்க வைத்து புகைப்படம் எடுத்திருக்கிறேன். எடுத்த நேரம் இன்று(sep 22) ஏறக்குறைய பன்னிரண்டு மணி 

மேலுள்ள படத்தில்  பன்னிரண்டு மணிக்கு நிழல் வடக்கு புறமாக விழுந்துள்ளதை காணலாம். இதே  நில்னடுக்கொட்டுப் பகுதியில் இதே முறையில் படம் எடுத்தால் நிழல் இருக்காது. 
  அப்படியானால் இதே நேரத்தில் சென்னையில் நிழல் தெரியா நிலை எப்போது வரும் என்று கேள்வி எழலாம்? 
    சென்னை 13 டிகிரி வட அட்சத்தில்(lattitude) அமைந்துள்ளது. ஜூன் மாதத்தில் தெற்கு பக்கமாக சாய்ந்து பயணம் செய்வது (போல)  தொடங்குகிறது.  0 டிகிரி நில நடுக்கோட்டுப்(Equator) பகுதிக்கு வர செப்டெம்பர் மாதம் வரை எடுத்துக் கொள்கிறது. ஆனால் சென்னையை அதற்கு முன்பாகவே கடந்து விடுகிறது. அதாவது ஆகஸ்ட் மாதத்தில்  20(தோராயமாக ) தேதிகளுக்கு கடக்கிறது.அந்த நேரத்தில் பகல் பன்னிரண்டு மணி அளவில் மேற்கண்ட போட்டோ எடுக்கப் பட்டால் நிழல் இல்லாமல் இருக்கும். அதாவது சூரியன் நேர் செங்குத்தாக இருக்கும். இதே நாளில் நிழல் மற்ற நேரத்தில் வலப்புறமோ இடப் புறமோ சாயாமல் தண்டவாளம் போல வரையப்பட்டுள்ள இணை கோட்டுக்குள்ளேயே காலையில் மேற்குப் புறமாகவும் மாலையில் கிழக்குப் புறமாகவும் விழும்.
மேற்புறத்தில் இருந்து எடுக்கப் பட்ட படம்
சுருக்கம்:  1.மார்ச் 21 &செப்டம்பர் 22 சம இரவு பகல் நாட்கள் 
           2. ஜூன் 21 நீண்ட பகல் குறுகிய இரவு 
           3. டிசம்பர் 21 நீண்ட இரவு குறுகிய பகல் 

  இன்றைய நாளோட முக்கியத்துவம்  இதுதாங்க
தலையை  சுத்துதா? சகிச்கிக்கோங்க பாஸ். திட்டறதுன்னா
கம்மென்ட்ல திட்டலாம்

*********************************************************************************
இந்தப்  பதிவு தொடர்பான வவ்வாலின் கேள்விகளுக்கு  இன்னும் சில விளக்கங்களை காண
http://tnmurali.blogspot.com/2013/09/explanation-shadows-axis-of-rotation-revolution.html வவ்வாலின் கருத்துகளுக்கு விளக்கங்கள்