என்னை கவனிப்பவர்கள்

அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

பழையபேப்பர்காரர் கேட்டார் ஜனவரி 4ல் அது நடக்குமா?

சனிக்கிழமை காலையில் 11 மணிக்கு மாடிப்படியில் அமர்ந்து பேப்பர் பார்த்துக்  கொண்டிருந்தேன். வழக்கமாக வரும் பழைய பேப்பர்காரர் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.
"போனவாரம் தான் போட்டுட்டனே! இப்ப ஒண்ணும் இல்லையே!" என்றேன்
"அது இல்லை சார் . சைக்கிள் பஞ்சராயிடிச்சு இந்த பேப்பரெல்லாம் இங்க வச்சுட்டுப் போறேன். வந்து எடுத்துக்கறேன். என்று சொல்லி விட்டுப் போனவர் உடனே திரும்பி வந்தார் .
" சைக்கிள் கடை இன்னும் திறக்கல சார். அதுக்குள்ள இதெல்லாம் கொஞ்ச அடுக்கி வச்சுக்கறேன். டீ குடிச்சிட்டு வரலாம்னு பாத்தா டீக்கடையும் என்னவோ தொறக்கலியே என்று பேப்பரை அடுக்க ஆரம்பித்துக் கொண்டே பேச ஆரம்பித்தார்.
"சார், இன்னைக்கு பேப்பர்தானே படிக்கிறீங்க"
அதுல என்னங்க சந்தேகம் இன்னைக்கு பேப்பர்தான்"
சார் நாளைக்கு ஜனவரி நாலு இல்ல . ஏதோ நடக்கபோவுதாமே அதைப் பத்தி ஏதாவது போட்டிருக்கா?
எதை சொல்றீங்க? அப்படி எதுவும் போடலீங்க
"இல்லையே! அந்த மாமி சொன்னாங்களே! ஜனவரி நாலாந்தேதி பூமிக்கு என்னவோ ஆவப் போவுதாம் . அன்னைக்கு 5 நிமிஷத்துக்கு பூமிக்கு இசுக்குற சக்தி குறைஞ்சு போயிடுமாம். பொருளோட எடை எல்லாம் குறைஞ்சு போயிடுமாம் . மொதக்கிறமாதிரி ஆயிடுமாமே. அவங்கள் வூட்டு மாமா பாஸ் புக்கை பாத்து சொன்னாராம்."
"என்னது பாஸ்புக்கா?"
"அதான் சார்! கம்ப்யூடர்ல பசங்கெல்லாம் பொழுதன்னைக்கும் பாத்துகினு இருக்குதுங்களே .."
"ஓ! ஃபேஸ் புக்கை சொல்றீங்களா. நீங்க சொன்னதை  நானும் கேள்விப்பட்டேன் வெறும் வதந்தி .அப்படியெல்லாம் எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை. அமெரிக்காவில நாசா பேர்ல எவனோ அந்த செய்திய பரப்பி வுட்டுட்டான். ஆனா தமிழ்ல அந்த ந்யூஸ் கண்ணில படலேயே ..நாசா வில் இருந்து அதுக்கு மறுப்பு சொல்லிட்டான்.


"அப்ப அந்த மாதிரி எது வும் நடக்காதா?"
"ஏன் அது நடக்கனும்னு எதிர்பார்க்கறீங்களா?"

" ஹிஹி இல்ல  சார். அந்த நேரத்தில ஒரு ரவுண்டு அடிச்சா குறைவான எடை போட்டு நிறைய பழைய பேப்பர்  பிளாஸ்டிக் இரும்பெல்லாம் வாங்கலாம். ஒரு நாள் மட்டும்தானே அப்படி இருக்கும் அடுத்த நாள் அதெல்லாம் எடை கூடிடும் இல்ல. ஒரு அமவுண்டு தேத்தலாம்னு பாத்தேன். அப்பா எல்லாம் டுபாக்கூர்தானா?
(இதைப் பற்றிய ஒரு கேள்வி உங்களுக்கு பதிவின் இறுதியில இருக்கு.)


"எந்த வசதியும் இல்லாத காலத்திலேயே வதந்தி வேகமா பரவிடும். இப்ப போன் இன்டர்நெட் இருக்கே.ஒரு செகண்டல உலகம் முழுசும் பரவிடுதே .

ஜனவரி 4  வாகில எடை எல்லாம் குறையாது. ஆனா அன்னைக்கு முக்கியமான விசேஷம் ஒண்ணு இருக்கு
"இன்னா சார் அது "
"ஜனவரி 4 அன்னைக்கு மத்த நாளை விட சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கும் தூரம் குறைவா இருக்கும். அதாவது கொஞ்சம் சூரியன் கிட்ட நெருங்கும்."

"அது எப்படி சார்?பன்னண்டு மணிக்குக் கூட  வெயில்  ஒரைக்கலயே. இது குளிர் காலம் இல்ல. குளிர் காலத்தில சூரியன் தூரமாத்தானே  இருக்கணும் . வெயில் காலத்தில்தானே சூரியன் கிட்ட இருக்கும்."

"அது தப்பு. சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கிற தூரத்துக்கும் வெயில் காலம் மழைக் காலம் குளிர் காலம் இதுக்கும் சம்பந்தம் இல்ல."
" நீ சொல்றது ஒண்ணும் புரியலேயே சார்."
"பூமி கொஞ்சம் சாஞ்சமாதிரி (23.5 டிகிரி ) தன்ன தானே சுத்திக்கிட்டு சூரியனையும் சுத்தி வருது . ஆதனால சூரியனோட கதிர்கள் பூமிமேல எப்போதும் செங்குத்தா விழறதில்லை . செங்குத்தா விழுந்தா வெப்பம் அதிகமா இருக்கும் சாய்வா விழுந்தா குறைவா இருக்கும்.இதான் காலங்கள் வர்றதுக்கு காரணம் "

" நானும் எட்டாங்க்ளாஸ் வர  படிச்சவன்தான் . கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு.  நான் இன்னா கேக்கறன்னா நெருப்பு பக்கத்துல நின்னாதானே  சூடா இருக்கும் தூரமா போய் நின்னா சூடு குறையும்தானே . அதானே உண்மை. நீ என்னாடான்னா எல்லாம் ஒண்ணுனு சொல்றியே எப்படி?"

" பயங்கரமாத்தான் கேக்கறீங்க. சரி ஒரு உதாரணம் சொல்றேன். நூறு மீட்டர் தூரத்தில  ஒரு வைக்கோல் போர் எரியுதுன்னு வச்சுக்குவோம். நீங்க சரியா 100 மீட்டர் தள்ளி நிக்கறீங்க. கொஞ்சம் சூடு தெரியுதுன்னு வச்சுக்குவோம். 3 மீட்டர் முன்னால போங்க . இப்போ உங்களுக்கு முன்ன இருந்ததை விட சூடு அதிகமா தெரியுமா?
" அது எப்படிசார் தெரியும்  மூணு மீட்டர்னா கிட்டத்தட்ட 10  அடிதானே இருக்கும் . அதுல ஒண்ணும் வித்தியாசம் தெரியாதே! "
இந்த நேரத்தில வெளியில் வந்த எங்க வீட்டம்மாவைப் பார்த்து " சனி ஞாயிறுல இந்த  பக்கம் போம்போது நான் பாப்பேன். சார் இந்த நேரத்தில டீ குடிச்சிகுனுதானே பேப்பர் படிப்பாரு"
"என்ன பேப்பர்காரரே பக்கத்து இலைக்கு பாயசமா? அவருக்கு என்ன வேலை ஜாலியா உங்ககூட அரட்டை அடிச்சிகிட்டு இருக்கார்.  டீ போட்டு தொலைக்கிறேன்"
"நீ சொல்லு சார் அம்மா எப்பவும் தமாசா பேசும் "

நான் சிரித்துக் கொண்டே தொடர்ந்தேன்

" மூணு மீட்டர் முன்னாடி போன வித்தியாசம் எதுவும் தெரியாதுன்னு சொன்ன இல்லையா? அதான் அதேதான் . ஜனவரி 4 ந்தேதி வாக்கில சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கிற தூரம்  கிட்டத்தட்ட 91400000 மைலு. இதுதான்  ஒரு வருஷத்தில குறஞ்ச பட்ச தூரம். அதிக பட்சமா  ஜூலை மாசம் 5 தேதி வாக்கில 94500000 மைல் தூரத்தில சூரியன் இருக்கும். 3 % மட்டும்தான் அதிகமா இருக்கு அதனால தூரத்தினால வித்தியாசம் எதுவும் உணர முடியாது.....

பேப்பரை அடுக்கி வைக்கும் வேலை முடிந்து விட்டதால் அதற்கு மேல் பொறுமை இல்லதாதால் இடைமறித்தார்
"சார்!. இது போறும்.நல்லா வெலாவாரியா த்தான் சொல்லி இருக்க. பேப்பர் பொறுக்கிற பசங்க நம்ம கூட தன் இருப்பானுங்க அவங்க கிட்ட பொழுதுபோகலேன்னா இத்தை எல்லாம்  சொல்வேன். கொஞ்சம் இட்டுகட்டி சொல்வனா ,பசங்க ஆன்னு பாப்பங்க.  சார் டீ இன்னும் வரலியே! ரொம்ப நேரம்ஆயிடிச்சு போல இருக்கே. 

அதற்குள் டீ கொண்டு வர,
"ஒனக்கும் சேத்து டீ வந்துட்ச்சி , குட்சிட்டு கேட்டை மூடிகினு போ"
டீ டம்ப்ளரை கையில் வாங்கிக் கொண்டு சிரித்தார்
"எதுக்கு சிரிக்கிறீங்க"
"சார் நீங்களும் நம்ம லாங்க்வேஜ் கத்துக்குனீங்க" என்றான்

*****************************************************************************
உங்களுக்கு ஒரு டெஸ்ட்
கொசுறு:ஹிஹி ஆமாம் சார். அந்த நேரத்தில ஒரு ரவுண்டு அடிச்சா குறைவான எடை போட்டு நிறைய பழைய பேப்பர்  பிளாஸ்டிக் இரும்பெல்லாம் வாங்கலாம். ஒரு நாள் மட்டும்தானே அப்படி இருக்கும் அடுத்த நாள் அதெல்லாம் எடை கூடிடும் இல்ல. 


கேள்வி : உண்மையில் பேப்பர்காரர் சொன்னதுபோல அன்றைக்கு கொஞ்ச நேரம் ஈர்ப்பு விசை குறைந்து பொருட்கள் எடை இழக்கும் நிலை ஏற்பட்டால்   குறைவான எடையில் அதிக அளவு பேப்பரை வாங்க முடியுமா?அவர் ஆசை நிறைவேறி  இருக்குமா?

ஒரு வேளை இதுக்கான விடை உங்களுக்கு தெரியாம இருந்து தெரிஞ்சிக்க விரும்பினா இங்க க்ளிக் செஞ்சு பாருங்க 
விடை 

**************************************************************************

இந்த நிகழ்வு பற்றி அறிவியல் எழுத்தாளர்  என் ராமதுரை அவர்கள் WWW.ARIVIYAL.IN இல் விரிவாக எழுதி இருக்கிறார்

*************************************************************
தொடர்புடைய பதிவுகள்


திங்கள், 14 அக்டோபர், 2013

பெட்டிக் கடை 4-புதிர் விடை+ஆச்சர்யம் +போட்டி +இன்னும்

பெட்டிக்கடை 4
ஊஞ்சல்  புதிருக்கான விடை
கடந்த பெட்டிக் கடையில் ஊஞ்சல் ஆடுவது பற்றி ஒரு புதிரைக் குறிப்பிட்டிருந்தேன். (புதிரை  படிக்க இங்கு கிளிக் செய்க )அதன் விடையை வவ்வால் சரியாக சொல்லி விட்டார். அதற்கான விளக்கங்களும் விரிவாக அவரே கருத்தில் சொல்லி விட்டதால் இப்போது அதை விளக்கப் போவதில்லை
  விடை . தாத்தா பாட்டி, அம்மா அப்பா, குழந்தைகள் மூன்று பேருமே எடுத்துக் கொள்ளும் நேரம் ஒன்றே.
இது தனி ஊசல் பாடம்,சுவாரசியமாக சொல்லிக் கொடுப்பதற்காக நான் உருவாக்கிய புதிர். ஊசல்(ஊஞ்சல் என்று வைத்துக்கொள்ளுங்கள்) மெதுவாக ஆடினாலும் சரி வேகமாக ஆடினாலும் சரி அலைவுநேரம் மாறாது. ஊசலின் நீளம் மாறினால் மட்டுமே அலைவு நேரம் மாறும்.
இது பற்றி சுவாரசியமான விஷயம் உண்டு .
     இந்த  உண்மையை கண்டறிந்தவர் கலீலியோ. ஒரு சர்ச்சுக்கு சென்றிருந்தபோது தற்செயலாக சர்ச்சில் சங்கிலியில் கட்டி தொங்க விடப்பட்ட விளக்கு காற்றில் ஆடிக் கொண்டிருப்பதை  கவனித்தார்.அதை உற்று நோக்கிய கலீலியோ, அது காற்றின் வேகத்திற்கேற்ப எப்படி ஆடினாலும் ஒரு அலைவுக்கு எடுத்துக் கொள்ளும் நேரம் ஒரே அளவாக இருந்தது.  கூடுதல் ஆச்சர்யம் என்னவெனில் அப்போது  கடிகாரம் கண்டுபிடிக்கப் படவில்லை.  பின் எப்படி இந்த உண்மையைக் கண்டறிந்தார். விளக்கின் அலைவை தன் நாடித் துடிப்பின் மூலம் கணக்கிட்டார்.  இந்த உண்மை அறியப்பட்ட  காலம் கி.பி. 1642.
     இதனால் என்ன பயன் என்று கேட்கிறீர்களா? பெண்டுலம் கடிகாரம் கண்டு பிடிப்பதற்கு இதுதான் அடிப்படையாக அமைந்தது. தான் இறப்பதற்கு முன்னர் ஒரு கடிகாரம் தயாரித்துவிட வேண்டும் என்று நினைத்தார் கலீலியோ . ஆனால் முடியவில்லை.  இதை அடிப்படையாக வைத்து  டச்சு நாட்டு அறிஞர்  ஹைஜென்ஸ் என்ற விஞ்ஞானிதான் வெற்றிகரமாக முதல் கடிகாரத்தை உருவாக்கினார். தனி ஊசல் பாடம் நடத்தும்போது பெரும்பாலான ஆசிரியர்கள் இதெல்லாம் சொல்லிக் கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே! அலைவு நேரம் கண்டுபிடிக்கும் சோதனை எதற்காகப் பயன்பட்டது என்று உங்கள் ஆசிரியர் உங்களுக்கு சொல்லி இருக்கிறார்களா? அப்படி இருந்தால் அந்த ஆசிரியரின் பெயரை சொல்லுங்கள் பாராட்டு விழா நடத்தி விடலாம்.
இன்னும் விளக்கமாக எழுதினால் பயந்து  ஓடி (ஒட்டி) விடுவார்கள் என்பதால்  இதன் தொடர்ச்சியை தற்போதைக்கு ஒத்தி வைக்கிறேன்.

***************************************************************************************************
சச்சின் ஒய்வு
ஒரு வழியாக சச்சின் தனது ஓய்வை அறிவித்து விட்டார். எவ்வளவுதான் புகழும் பணமும் சம்பாதித்தாலும், திறமை குறைந்து போனதை அறிந்த பின்னும் விலக மனமின்றி துரத்தும் வரை விடாப் பிடியாக இருப்பது இந்திய வீர்கள் மட்டுமே. சச்சின் ஒரு சகாப்தம் என்பதில் சந்தேகம் இல்லை. அதிக அளவில் சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்காமல் இருந்ததே ஒரு சாதனைதான். என்ன? கொஞ்சம் முன்னரே ஒய்வு அறிவித்திருக்கலாம்!

    ஓய்வை அறிவித்து விட்டதால் விமர்சித்தவர்கள் கூட கொஞ்ச நாளைக்கு அவருடைய தலையில் தூக்கி வைத்துக் கொண்டு  கொண்டாடுவார்கள். ஓய்வுக்குப் பின் ஒரு எம்பியாக கிரிக்கெட் மட்டுமல்லாது மற்றவிளையாட்டுகளையும் வளர்ப்பதற்கு ஏதேனும் முயற்சி செய்ய வேண்டும் என்றே என் போன்றவர்களின் எதிர்பார்ப்பு. செய்வாரா அல்லது எம்பி சலுகைகளை அனுபவித்துக் கொண்டு மௌனமாகவே இருந்து விட்டுப் போய்விடுவாரா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

சச்சின்  தொடர்பான பிற பதிவுகள்
சதத்தில் சதம்! சச்சினுக்கு ஒரு வாழ்த்துப்பா!
சச்சினுக்கு ஒரு கடிதம்.
**********************************************************************************************
ஈஞ்சம்பாக்கம் சீரடி  சாய்பாபா கோவில்

நீலாங்கரையை தாண்டி ஈன்ஜம்பாகாத்தில்  உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு மாதம் ஒருமுறை போவது வழக்கம். கிழக்கு கடற்கரை சாலையில்  பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டருக்கு அருகில் கடற்கரையை ஒட்டி அமைதியான சூழலில் கோவில் அமைந்திருக்கிறது. கொஞ்சம் பெரிய பரப்பளவில் அழகான மரங்களும் செடிகளும் நிறைந்த சோலைக்குள் கோவில் கட்டப் பட்டிருக்கிறது. மாலை 6 மணிக்கு சென்றால் வெளியில் பறந்து திரிந்து கூடு சேரும் கீச்சு கீச்சு என்று பறவைகளின் ஒலியும், வங்கக் கடலின் அலை ஓசையும் நமது செவிகளுக்குள் நுழைந்து ஒரு ஆனந்தத்தை தரும். வட மாநில மக்கள் பலரை இங்கு காண முடிகிறது. விடுமுறை நாட்களில் சில திரை உலக பிரபலங்களும்  இங்கு வருவதுண்டு. கோயிலை ஒருமுறை சுற்றி காலாற நடந்து வந்தால்  மனம் லேசாகத்தான் ஆகிறது.
வெளியே  வந்தால் கோயிலை ஒட்டி சிறிது நடந்தால் கடற்கரை. சிது நேரம் செலவழித்து வங்கக் கடலின் அழகை ரசித்து திரும்பலாம்.

 பக்கத்து காம்பவுண்ட் ராதிகாவின் ராடன் ஹவுஸ்

********************************************************************************************
ரூபனின்  கவிதைப் போட்டி
தீபாவளியை ஒட்டி பதிவர் ரூபன் ஒரு கவிதைப் போட்டியை அறிவித்திருந்தார்.


போட்டிக்கான தலைப்பு
1. நாம் சிரிக்கும் நாளே திருநாள்
2. ஒளி காட்டும் வழி
3. நாம் சிரித்தால் தீபாவளி
  போட்டிக்கு கவிதைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் 31.10.2013 என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு  
இந்த  இணைப்பிற்கு சென்று பார்க்கவும். எத்தனை கவிதைகள் இதுவரை வந்திருக்கிறது என்று தெரியவில்லை.கவிஞர்களே உங்கள் படைப்புகளை விரைந்து அனுப்புங்கள். 
திடங்கொண்டு போராடு சீனுவைத் தொடர்ந்து தன் சொந்தப் பணத்தை செலவு செய்து ஏராளமான பரிசுகளை அறிவித்து கவிதைப்  போட்டியினை நடத்தும் தம்பி ரூபனுக்கு, கவிஞர்களே உங்கள் அழகான படைப்புகளை அனுப்பி ஆதரவு வழங்குங்கள். 
நான் ரூபன்!,இது வரை எத்தனை பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்ற விவரத்தை தெரிவிக்கவும்.

********************************************************************************************
ஒரு பஞ்ச் கவிதை 

             தற்கொலைக்கு  முயற்சிக்காதே!
             ஏற்கனவே  நீ 
             இறந்திருக்கலாம்!

புதன், 25 செப்டம்பர், 2013

செப் 22 அதிசய நாள்- வவ்வாலின் கருத்துக்கு சில விளக்கங்கள்


  செப் 22 அதிசய நாள் ( முந்தைய பதிவப் படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்தப் தொடர்ந்தால் தலை சுற்றாமல் இருக்கும்) பதிவிற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர் பார்க்கவில்லை. அனைவருக்கும் நன்றி. வழக்கம்போல் வவ்வால் அவர்களும் சில மாற்றுக் கருத்துக்களை முன் வைத்து பின்னூட்டமிட்டிருக்கிறார். எதையும் யாரும் அறியாத கோணத்தில் ஆய்வு செய்யும் வல்லமை படைத்தவரான வௌவால்  பல தகவல்களை கூறி இருக்கிறார். அவருக்கு எனது நன்றிகள். எதிர்பாரா அலுவலக வேலைகாரணமாக மூன்று நாட்களாக வலைப் பக்கம் வர முடியவில்லை. என்னால் முடிந்த, எனக்குத் தெரிந்த, நான் புரிந்துகொண்டவாறு விளக்கம் கொடுத்திருக்கிறேன். பின்னூட்டத்திலேயே அதற்கு பதில் அளிக்கலாம் என்று இருந்தேன். சில படங்களையும் இணைக்க வேண்டி இருந்தாதால் தனி பதிவாகவே போட்டு விட்டேன். இதையும் பொறுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 

வவ்வால்:சன் டயல் பற்றி சொல்லும் போது குச்சியை உதாரணம் காட்டி சின்னதாக ஒரு பின்னூட்டம் போட்டேன் ,நீங்கள் செயல்முறையில் செய்துப்பார்த்து பதிவாக போட்டதற்கு பாராட்டுக்கள்!
  என் கருத்து: உங்கள் பாரட்டுக்கு நன்றி வவ்வாலிடம் பாராட்டு பெறுவது எளிதாஎன்ன?

வவ்வால்: உங்க முயற்சி சரி தான்,ஆனால் இவ்வளவு மொத்தமான பொருளை வச்சு செய்யக்கூடாது, இப்படி செய்தால் சூரியன் உச்சியில் வரும் போது கூட நிழல் விழலாம்.
  சூரிய ஒளியின் கோணத்திற்கும், பூமிக்கும் ,சூரியனுக்கும் உள்ள தூரம், சூரியனின் அளவு இவற்றுடன் ஒப்பிட்டு சரியான முறையில் காலிபரேட் செய்து குச்சியின் நீளம்,தடிமன் கொண்டு செய்தால் நிழல் விழுவதை பெருமளவு கோண அளவில் தவிர்த்துவிடலாம். சென்னைப்போன்ற பகுதிக்கு சுமார் இரண்டு இஞ்ச் உயரம், ஒரு பென்சில் அளவு(குறைவான தடிமன் இன்னும் நல்லது) கொண்டு முயற்சித்தால் நிழல் உச்சி வெயில் நேரத்தில் நிழல் விழாமல் செய்து விடலாம். குறிப்பிட்ட ஒரு நாளுக்கு மட்டுமில்லை, பலநாட்களுக்கு சாத்தியமுண்டு.
என் கருத்து: கடந்த ஆண்டு இதே நாள் ஒரு ரெனால்ட்ஸ் பேனாவை வைத்து இந்த சோதனையை செய்தேன்.அப்பொழுதும் கிட்டத்தத்ட்ட இதே போல்தான் நிழல் அமைந்திருந்தது. அப்படித்தான் இருக்கும் என்பதையும் அறிந்தே இருந்தேன்.எளிதில் நிற்க வைப்பதற்காக குழயைப் பயன்படுத்தினேன் . இன்னும் சொல்லப் போனால் தடிமனான பொருளை பயன்படுத்தினால் நிழலின் அளவு சற்றுக் குறைவாக இருப்பது போலவே தோன்றும்.நிற்கவைக்கப்படும் பொருள் வளைந்து காணப்பட்டாலோ அடிபரப்பு சற்றுசாய்வாக வெட்டப் பட்டிருந்தாலோ செங்குத்தாக நிற்காது. அதனால் நிழல் விழும்.முடிந்த வரை  அவ்வாறில்லமால் பார்த்துக் கொண்டேன். 100% துல்லியம் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவிற்கு இவற்றை கவனத்தில் கொண்டே செய்தேன்.
ஒரு  குறிப்பிட்ட நேரத்தில் நிழல் விழாத நிலை (அதாவது பொருளின் மீதே விழும் நிலை- பொருள் செங்குத்தாக இருப்பதாக வைத்துக் கொள்ளப்படும்போது) பல நாட்களுக்கு சாத்தியமில்லை.சில நாட்களுக்கு மட்டுமே உண்டு. அந்த சில நாட்களிலும் நிழல் விழத்தான் செய்யும். ஆனால் நிழலுக்கும் பொருளுக்கும் உள்ள கோணம் 90 டிகிரியை விட சற்றே குறைவாக இருப்பதால்  நிழல் கண்களுக்கு தெரியாது.

வவ்வால்: இந்தியாவுக்கு மார்ச் -21 தான் Equinox . செப்டம்பர் 22 தென்கோளார்த்தத்தின் Equinox ,ஆஸ்திரேலியா,நியுசிலாந்து பகுதிகளில் சமநாள்,இரவு இருக்கும்.நேற்று சென்னையின் பகல் நேரம் 12 மணி ஏழுநிமிடங்கள்
என் கருத்து:: மிகத் துல்லியமாக பன்னிரண்டு மணிநேரம் பகல் பன்னிரண்டு மணிநேரமாக அமைவது அரிது. சம இரவு பகல் பெரும்பாலும் செப்டம்பர் 21 ஐ ஒட்டியே இருக்கிறது. இன்று நேர இரவுபகல் நேர வித்தியாசம் நேற்றை விட இன்னமும் சற்று குறைவாக இருக்கக் கூடும்

வவ்வால் சிலர் சொல்வது போல ஈக்கவடேரியல் ரீஜனில் மட்டும் சூரியன் உச்சியில் வரும் என்பது சரியானது அல்ல, நீங்களும் அதனை நம்புகிறீர்களா என தெரியவில்லை.
டிகிரி வடக்கு (கடகரேகை) - 23.5 டிகிரி தெற்கு(மகரரேகை) இடைப்பட்ட பகுதியில் எல்லா இடத்திற்கும் சில குறிப்பிட்ட காலத்தில் சூரியன் மிகச்சரியாக உச்சி நிலையில் சஞ்சரிக்கும்..

என் கருத்து:: என் கருத்தும் இதுவே,  இதை நானும் சொல்லி இருக்கிறன். சென்னையைப் பொறுத்தவரை செப் 22 அன்று சூரியன் நேர செங்குத்தாக சஞ்சரிக்கவில்லை என்பதை எடுத்துக்காட்டவே நிழலைப் படம் பிடித்துக் காட்டினேன். சென்னையில் பொருத்தவரை கிட்டத்தட்ட  ஆகஸ்டு இறுதி  அல்லது செப்டம்பர் துவக்கத்தில்  நேர் செங்குத்தாக்க அமையும் நாளில் படம் பிடிக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்போது இதைப் பற்றி எழுதுவேன் என்று தெரிந்திருந்தால் செல்போனிலாவது படம் பிடித்திருப்பேன்.

அதாவது 23.5 கடக ரேகை  23. 5 மகர ரேகை மொத்தம் 47 டிகிரியைக் கடக்க 365(rounded) நாட்களை எடுத்துக் கொள்வதாக வைத்துக் கொண்டால் ஒருடிகிரியைக் கடக்க 365/47 =.7.7 நாட்கள் ஆகும். சென்னை 13 டிகிரி வட அட்சத்தில் இருப்பதால்  june 21 இல் கடக ரேகையில் பிரகாசிக்கும் சூரியன் 23.5 லிருந்து 13 டிகிரி வரை அதாவது 10.5 டிகிரிகளை கடக்க 80நாட்கள் ஆகும் . அதாவது செப்டம்பர் துவக்கத்தில் சூரியன் செங்குத்தாக பவனி வரலாம். துல்லியமான கணக்கீட்டை தர முயற்சிக்கிறேன்.

வவ்வால்: #//
//மேல் முனை பூமியை நோக்கி இருக்காது.இப்போது கீழ் முனை பூமியை நோக்கி இருக்கும். // மணி சுற்றுவது போல் பூமி சுற்றினால் கீழுள்ள படத்தில் உள்ளது போல் 6 மாதங்களுக்குப் பிறகும் அதன் வடமுனை எப்போதும் பூமியை நோக்கியே சாய்ந்திருக்கும்.//
இப்படி சொல்லி இருப்பது எதனை ஒப்பிட்டு , நீங்கள் பூமியை ,பூமியின் அச்சுடனே ஒப்பிட்டு அதுவே அதனைப்பார்த்து சாய்ந்திருப்பது போல சொல்லி இருக்கிறீர்கள். சூரியனை நோக்கி ,பூமியின் அச்சினை ஒப்பிட்டுத்தான் சொல்லவேண்டும்.

என்கருத்து: நீங்கள் சொல்வது சரி சூரியனை என்றுதான் இருக்கவேண்டும். தவறுதலாக "பூமியை" என்றிருக்கிறது. சூரியனை என்று திருத்தம் செய்து விட்டேன். நன்றி

வவ்வால்:ஆனால் பூமியின் சாய்வு அச்சு அதன் சுற்றுவட்டப்பாதையின் எந்த நிலையிலும் சூரியனுக்கு வெளிப்புறமாக அவுட்டர் ஸ்பேஸ் பார்த்து தான் இருக்கும் எனவும் சொல்கிறார்கள், அப்படி இருக்கும் எனில் இப்போது அளிக்கும் விளக்கங்கள் அனைத்துமே தவறாகிவிடும், சரியான விளக்கம் வேறு ஆக இருக்க வேண்டும் ,எளிதில் புரிய வைக்க இப்படியே விட்டுவிட்டார்கள் என நினைக்கிறேன்
மணி சுற்றுவது போல் பூமி சுற்றினால் கீழுள்ள படத்தில் உள்ளது போல் 6 மாதங்களுக்குப் பிறகும் அதன் வடமுனை எப்போதும் பூமியை நோக்கியே சாய்ந்திருக்கும்.// 

என்கருத்து: இப்படி இருக்க வாய்ப்பு இல்லை என்று கருதுகிறேன். நீங்கள் எப்படி சொல்கிறீர்கள் என்பது புரியவில்லை.அச்சின் இரண்டு முனைகளும் எப்படி வெளிப்புறம் பார்த்து இருக்கமுடியும். இதை விளக்க படங்கள் ஏதேனும் உண்டா?
நான் கம்பியில் கோர்த்த மணிபோல என்று குறிப்பிட்டது கீழ்க்கண்ட  படத்தில் உள்ளவாறு. ஆனால் கம்பியை அச்சாகக் கொண்டு சுற்ற இயலாதவாறு  இருக்க வேண்டும் இந்தப் படத்தில் பாருங்கள் பூமி சுழலும் அச்சின் வடதுருவ முனை சூரியனை நோக்கி இருப்பதை காணலாம். ஆனால் பூமி இவ்வாறு சுற்றவில்லை


வவ்வால்// ஜுன் மாதத்தில் பூமியை நோக்கி சாய்ந்திருக்கும் வடதுருவம் 6 மாதங்களுக்குப் பின் சூரியனை சுற்றி எதிர் பக்கம் வரும்போது அதன் வடதுருவம் சரியான விட்டு விலகி இருக்கும், //
பெரும்பாலும் கால நிலை மாற்றம் இப்படித்தான் உருவாகிறது என்பதற்காக சொல்லப்படுகிறது, உண்மையில் அது சரியான விளக்கமும் அல்ல.
 கால நிலைமாற்றம் ஏற்படக்காரணம் நீள்வட்டப்பாதையும், பூமியின் சுழற்சியில் உள்ள அலைவும் காரணம், மேலும் பிளேன் ஆப் ரோட்டேஷனில் ஏற்படும் மாற்றமும் இருக்கிறது, இந்த பிளேன் ஆப் ரோட்டஷனில் உள்ள மாற்றத்தினை இதுவரையில் யாரும் பெரிதாக ஆய்வு செய்யவில்லை ,அல்லது இணையத்தில் இல்லை, இதன் அடிப்படையில் நானே ஒரு தியரி வச்சிருக்கேன் , நேரம் கிடைத்தால் பதிவு போடுகிறேன்.

என்கருத்து : நீங்கள் சொல்வது சரியானதாகத் தெரியவில்லை.  நாசாவின் தளத்தில் கூட காலநிலை மாற்றம் ஏற்பட பூமியின் சாய்வச்சே காரணம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அது சரியானதாகவும் தோன்றுகிறது.Plane of rotationஐ என்று குறிப்பிட்டீர்களா அல்லது ப்ளேன் plane of revolution குறிப்பிட்டிருப்பீர்களா?  எதுவாக இருப்பினும் பெரிய அளவில் plane மாறுபாடு இருக்கும் என்று  தோன்றவில்லை. ஆய்வாளர்கள் அறிஞர்கள் யாருக்கும் இது தொடர்பாக ஐயமோ அல்லது அதை கருத்தில் கொள்ளாமலோ இருந்தார்கள் என்பதை நம்ப முடியவில்லை. பல்வேறு கணக்கீடுகளும் இதன் அடிப்படையில்தான் செய்யப் பட்டிருக்கின்றன. வெற்றி பெற்ற பல வானியல் சோதனைகள் தோல்வியில்முடிந்திருக்கக் கூடும்.
http://spaceplace.nasa.gov/seasons/





வவ்வால்: பூமித்தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருப்பதால் , சூரியனை விட்டு விலகி இருக்கும் வட துருவம் , அடுத்த 24 மணிநேரத்தில் சூரியன் இருக்கும் பக்கம் வந்துவிடுமே, அப்புறம் எப்படி நிரந்தமாக குளிர்,கோடைகாலம் உருவாகிறது. ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் மீண்டும் சூரியனை பார்க்க ஆரம்பித்துவிடும்,எனவே நிரந்தரமாக எந்த துருவமும் சூரியனை விட்டு விலகியே நிற்காது.

என்கருத்து: நீங்கள் இப்படி சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது. ஒவ்வொரு 24 மணிநேரத்திற்குள் விலகி பின்னர்  நோக்கியும் இருக்க சாத்தியமில்லை. சூரியன் பூமி சுற்றுப்பாதையை ஒரு plane ஆக வைத்துக் கொண்டால் அதனோடு. பூமியின் சுழற்சி அச்சு ஏற்படுத்தும் கோணம் ஒரே அளவாகவே இருக்கும். அச்சின்  ஒரு முனை சூரியனை விட்டு விலகவோ நோக்கியோ இருக்க கிட்டத்தட்ட பாதி நாட்கள் தேவைப்படும்
நீங்கள் சொல்லும் கருத்து ஆனால் "பூமியின் சாய்வு அச்சு அதன் சுற்றுவட்டப்பாதையின் எந்த நிலையிலும் சூரியனுக்கு வெளிப்புறமாக அவுட்டர் ஸ்பேஸ் பார்த்து தான் இருக்கும் எனவும் சொல்கிறார்கள்" என்ற கருத்துக்கும் எதிராகவேஅல்லவா இருக்கிறது.

வவ்வால்:உண்மையில் பூமி செங்குத்தான அச்சில் சுழன்றாலும்  கால நிலை மாற்றம் ஏற்படும். மேற் சொன்ன காரணங்களே போதுமானவை. மேலும் கூடுதல் காரணங்கள் பூமியின் வளிமண்டலம், வளிமண்டலத்தின் சுழற்சி, பூமியின் நிலம்,நீர் பரவல் ஆகும். வடகோளார்த்தத்தில் அதிக நிலப்பரப்பும், தென்கோளார்த்தத்தில் அதிக நீர்பரப்பும் என உள்ளதால், பூமி சூடாவதில் ஒரு மாற்றம் உண்டாகிறது, கூடவே வளிமண்டல சுழற்சி, இதனால் கொரியாலிஸ் எபெக்ட், எல்நினோ,லாநினோ, தாழ்வழுத்த/ உயர் அழுத்தம் ஆகியன என எல்லாம் சேர்ந்து மழைப்பொழிவுகள் ஏற்படுகிறது.

என்கருத்து: இதை எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள் என்பது புரியவில்லை.பூமி செங்குத்தான அச்சில் சுழல்வதாகக் கொண்டால் சூரிய ஒளி பூமியின் மீது எந்தக் காலத்திலும் நில நடுக்கோட்டுப் பகுதியின் மீது செங்குத்தாகவும் மற்ற இடங்களில் சாய்வாகவும் இருக்கும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் சூரிய ஒளி எப்போதும் ஒரே மாதிரியாகவே விழும்.
நீர்நிலைகள், காற்றழுத்தம் போன்றவை வானிலையில் மாற்றம் ஏற்படுத்தக் கூடியவைதான். என்றாலும் அந்தப் பகுதியில் ஒரே மாதிரியான மாற்றங்கள் ஆண்டு முழுதும் நடைபெறும்.

கால மாற்றத்திற்கு சூரியனின் நீள்வட்டப் பாதையும் ஒரு காரணமே என்று கூறி இருக்கிறீர்கள்.
என்கருத்து: அதுவும் சரியல்ல. பூமியின் சுற்றுப் பாதை நீள்வட்டம் என்றாலும் அதன் (eccentricity 1/60) . கிட்டத்தட்ட  வட்டமாகவே காட்சி அளிக்கும். இந்த நீள் வட்டத்தில்  மேஜர் ஆக்சிஸ் மைனர் ஆக்சிஸ் வித்தியாசம் மிகக் குறைவு. எனவே உயரத்தில் இருந்து காண முடிந்தால் கிட்டத் தட்ட வட்டமாகவே தோன்றும். மேலும் சுற்றுப் பாதையில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள குறைந்த பட்ச தூரமும் அதிக பட்ச தூரத்திற்கும் உள்ள வித்தியாசம் 3% மட்டுமே. எனவே தூரம் காலநிலை மாறுபாட்டிற்கு காரணமல்ல என்று கூறப்படுகிறது. மேலும் சூரியனுக்கு மிக அருகில் பூமி நெருங்கும் காலம் ஜனவரியில்தான். அப்படிப் பார்த்தால் நில நடுக்கோட்டுப் பகுதியில் கூட ஜனவரி மாதம் கோடைக் காலம் அல்ல.

வவ்வால்: சென்னையிலேயே வருடம் 365 நாளும் உச்சி வெயில் (நன்பகல்- 11.30-12)க்கு நிழலே விழாமல் படம் எடுக்கலாம்,மகர- கடக ரேகைக்கு இடைப்பட்ட இடங்கள் மேலும் அதன் அருகில் உள்ள இடங்களில் எல்லாம் சாத்தியம்., அதுக்கு சரியா காலிபரேட் செய்யனும், எகிப்திய தொழில்நுட்பம் சுமார் 3800 ஆண்டுகளுக்கு முன்னரே செய்துக்காட்டிடுச்சு, நானும் அதன் அடிப்படையில் நிழல் விழாத படம் எடுத்து வச்சிருக்கேன் ,இன்னிக்கோ ,நாளைக்கோ பதிவா போடுறேன்,அப்போவாச்சும் நம்புறிங்களானு பார்ப்போம்.

என்கருத்து: நம்புகிறேன்.இது சாத்தியமே என்பதே எனது கருத்தும். சூரிய ஒளியின் கோணத்திலேயே பொருள்  பூமியோடு இணைத்திருக்கும் அமைப்பில் இருந்தால்  நிழல் அந்தப் பொருளின் மீதே விழும். பூமியில் விழாது. எல்லா நேரத்திலுமே இதை செய்ய முடியும். ஆனால் இந்தக் கட்டுரையில் செங்குத்தான பொருளின் நிழல் பற்றியே பேசப் பட்டுள்ளது. காலையில் பார்த்திருந்தால் ஒரு படம் பிடித்திருப்பேன். 

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. 
வௌவால் சார் உங்கள் கருத்துகளை படங்களுடன் தனி பதிவாக வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

அடுத்த பதிவு அறிவியல் பதிவு அல்ல *********************************************************************************
 முந்தைய பதிவு
இன்று செப் 22 அதிசய நாள்


ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

இன்றைய நாளின் வானியல் சிறப்பு

மார்ச் 21&செப்டம்பர் 22 அதிசய நாட்கள்!

   "தஞ்சை பெரிய கோவிலின் நிழல் பூமியில் விழும்" என்பதை இண்டு மூன்று நாட்களுக்கு முன் பதிவிட்டிருந்தார் நம்பள்கி. அந்தப் பதிவின் கருத்துரைகளில் நிழல் விழுவது பற்றி  பலரும் விவாதித்திருந்தனர்.  நிழல் விழாமல் எந்த கட்டடமும் கட்ட முடியாது ஒரு குறிப்பிட்ட நாளில் சூரியன் தலைக்கு மேல் வரும்போது (நேர் செங்குத்தாக) வரும்போது மட்டும் நிழலை காண முடியாது.ஏன் எனில் நிழல் அந்தப் பொருள் மீதே விழும். இது ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நிகழும். அந்த அதிசயம் நிகழும் இரண்டு நாட்களில் இன்று இன்றைய நாளும்(செப் 22) ஒன்று.
    நமக்குள்ள பல பிரச்சனைகளில் சில விஷயங்களை கவனிக்கவும் நினைவில் வைத்துக் கொள்ளவும் நேரம் இருப்பதில்லை. பல சுவாரசியமான நிகழ்வுகள் விண்வெளியில்  நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பூமியிலும் இவ்வாறு நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21(சில சமயங்களில் மார்ச் 20) க்கும் செப்டம்பர் 22(சில சமயங்களில் செப் 23) க்கு தனி சிறப்பு உண்டு. இவ்விரு நாட்களிலும் இரவு நேரமும் பகல் நேரமும் சமமாக இருக்கும். மற்ற நாட்களில் பகல் இரவு நேரங்களில் வித்தியாசம் இருக்கும். அதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.

    பூமி தனி அச்சில் 23.5 டிகிரி சாய்வாக சுற்றுகிறது. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்பது நமக்குத் தெரியும்.தன்னைத் தானே சுற்றிக் கொள்வதால்தான் இரவுபகல் ஏற்படுகிறது.என்பதும் நாம் அறிந்ததே! சில காலங்களில் பகல் பொழுது அதிகமாகவும் இரவு பொழுது குறைவாகவும் இருக்கும். சில காலங்களில் இரவுப் பொழுது அதிகமாகவும் பகல் குறைவாகவும் இருக்கும். பூமியின் நீள் வட்டசுற்றுப்பாதை  ஒரு சாலை என்று கொண்டால்  அந்தப் பாதைக்கு நேர்  செங்குத்தாக பூமி தன்னைத்  தானே சுற்றிக் கொள்வதில்லை. சற்று சாய்வாக அதாவது 23.5 டிகிரி சாய்வாக தனது அச்சில் சுற்றுகிறது.
  இதுவே இரவு பகல் நேரங்களில் வித்தியாசம் ஏற்படுவதற்கு காரணம்.பூமியில் கோடைகாலம் குளிர்காலம் போன்ற பருவ காலங்கள் ஏற்படுவதற்கும் இந்த சாய்வே காரணமாக அமைகிறது. வேறு மாதிரி சொல்வதென்றால் பூமி செங்குத்தாக தன்னைத் தானே சுற்றிக் கொண்டால் பருவ காலங்கள் ஏற்படாது. அதாவது பூமியில் ஓரிடத்தில் எந்தவிதமான காலம் இருக்கிறதோ ஆண்டு முழுதும் மாற்றமின்றி அப்படியே இருக்கும்.
இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
பூமி அச்சின் இரு முனைகளையே வட துருவம் தென் துருவம் என்கிறோம்.  ஒரு குறிப்பிட்ட நாளில் மேல் முனை (வடதுருவம்) சூரியனை நோக்கி சாய்ந்து இருப்பதாக  வைத்துக்கொள்வோம்.
கீழுள்ள படத்தைப் பாருங்கள்

படம் 1

   ஆறு மாதங்களுக்குப் பின் பூமி பாதி  சுற்று சுற்றி எதிர்புறம் வந்திருக்கும் அப்போது அதன் மேல் முனை(துருவம்அல்லது சுழலும் அச்சின் மேல்முனை )  சூரியனை நோக்கி இருக்காது. இப்போது  கீழ் முனை தென் துருவம்  சூரியனை  நோக்கி இருக்கும். அதாவது பூமியின் அச்சு அதே நிலையில் இருக்கிறது.
இதோ  இந்தப் படத்தைப் பாருங்கள்
படம் 2

பூமியின் சுற்றுப் பாதையை ஒரு கம்பியாகவும் பூமியை ஒரு மணியாகவும் வைத்துக் கொள்ளுங்கள் கம்பியில் கோர்த்தபடி மணி சுற்றுவது போல் பூமி சுற்றினால்  கீழுள்ள படத்தில் உள்ளது போல் 6 மாதங்களுக்குப் பிறகும் அதன் வடமுனை எப்போதும் பூமியை நோக்கியே சாய்ந்திருக்கும்.
படம் 3
ஆனால்  இயற்கையில் அவ்வாறு நிகழவில்லை. இப்படி பூமி சுற்றினால் கால மாற்றங்கள் நிகழாது. ஜுன் மாதத்தில் பூமியை நோக்கி சாய்ந்திருக்கும் வடதுருவம் 6 மாதங்களுக்குப் பின் சூரியனை சுற்றி எதிர் பக்கம் வரும்போது அதன் வடதுருவம் சூரியனை  விட்டு விலகி இருக்கும், அதாவது பூமியின் சுழலும் அச்சை ஒரு கோடாக பல்வேறு நிலைகளில் வரைந்தால் ஒவ்வொரு நிலையிலும் அந்தக் கோடு பல்வேறு தளங்களில் அமைந்த இணைகோடுகளாக  இருப்பதைக் காணலாம் 
   படம் 1 இல் காணப்படும் நிலை ஜூன் 21 அன்று ஏற்படுகிறது. தென் துருவம் சூரியனிடமிருந்து சற்று விலகி இருப்பதைக் காணாலாம் அன்று ஆண்டில் மிக நீண்ட பகலாக இருக்கும். இந்த நாளில் நில நடுக்கோட்டுக்கு மேலுள்ள வட அரைக் கோளத்தில் சூரிய ஒளி  அதிகமாகவும் தென் அரைக்கோளத்தில் குறைவாகவும் விழுகிறது. அன்றிலிருந்து பகல் நேரம் சிறிது சிறிதாக குறைந்து இரவு  நேரம் சிறிது சிறிதாக அதிகரிக்கும். செப் 23 அன்று இரவும் பகலும் சம நிலையை அடைகிறது. 
    இந்த நாட்களில் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர்வதைப் போல் தோற்றமளிக்கும் இதை தட்சணாயணம் என்று கூறுவது வழக்கம். செப் 22 அன்று நில நடுக்கோட்டுக்கு செங்குத்தாக சூரிய ஒளி விழுவதால் வட  அரைக் கோளத்திலும் தென் அரைக் கோளத்திலும் சம அளவு ஒளி விழுகிறது.அதாவது வட துருவமும் தென் துருவமும் சம தொலைவில் உள்ளது. இதனால் இரவும் பகலும் சமமாக உள்ளது. இதே நிலைய மார்ச் 21 அன்றும் ஏற்படுவதால் அன்றும் இரவும் பகலும் சமமாக அமைகிறது.
   இதற்கிடையில் (படம் 2)டிசம்பர் 21(சில சமயங்களில் டிசம்பர் 22) அன்று ஜூன் 21 அன்று உள்ள நிலைக்கு நேர் எதிரான சூழ்நிலயில் பூமி அமைவதால் அன்று மிக நீண்ட இரவாகவும் குறைந்த பகலாகவும் காணப்படும்.அன்றிலிருந்து சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்வது போல் தோற்ற மளிக்கும் இதை உத்தராயணம் என்று கூறுவார்கள்.
   சரி! இவையெல்லாம் விண் வெளியில்  நிகழ்கிறது.நாம் எப்படி இதை அறிவது. நாம் கண்ணால் என்ன மாற்றங்களை பார்க்க முடியும் 
1. இன்று சூரியன் உதிப்பது சரியான கிழக்கு திசையின் மையத்தில்  
2. இன்றிலிருந்து நிழல் வடக்குப்புறம் சாய்வாக விழத் தொடங்கும் 
3 இன்று பகல் பன்னிரண்டு மணிக்கு 90 டிகிரி செங்குத்தாக ஒரு வளைவில்லாத  குச்சியை வைத்தால்(பூமத்திய ரேகைப் பகுதியில்) அதன் நிழல் தரையில் விழாது. தலைக்கு மேல் நேராக சூரியன் இருக்கும்.
4 தமிழகத்தில் நெய்வேலியைத் தவிர இதர இடங்களில் சரியான கிழக்கு  மேற்காகவோ ,வடக்கு தெற்காகவோ  சாலைகள் இல்லை அதனால் திசைகளை அறிவது சில வேளைகளில் கடினமாக உள்ளது. இன்றைய சூரியனை வைத்து  திசைகளின் அமைப்பை  அறிந்து கொள்ளலாம்.
இதோ இந்தப் படங்கள் அதை விளக்கும் என்று நம்புகிறேன்.படத்தில் உள்ள குச்சியின் நிழலை கவனியுங்கள்.

ஜூன் 21 அன்று                               டிசம்பர் 21 அன்று
 
                       இன்று செப்டம்பர் 22 அன்று 

  இவை  யாவும் நில நடுக்கோட்டுப் பகுதியில் உள்ளவர்களுக்கு100 சதவீதம் பொருந்தும். மற்ற இடங்களில் நிழலில் மாறுபாடு காணப்படலாம். தமிழகத்தை பொறுத்தவரை நிலநடுக் கோட்டுக்கு வட பகுதியில் அமைந்துள்ளதால் நிழல் சற்று வடக்குப்புறம் சாய்வாக விழும். இரவு பகல் நேரங்கள் சமமாகவே இருக்கும். 

மேலே சொன்னது எல்லா இடங்களுக்கும் பொருந்துமாயின் இன்று  பகல்  12  மணி அளவில் ஒரு பொருளின் நிழல் பூமியில் விழாமல் இருக்கவேண்டும் ஆனால் இன்று எல்லா இடங்களிலும் அப்படி இருக்காது. உதரணமாக சென்னையில் எப்படி இருக்கிறது என்பதை அறிய கீழே உள்ள புகைப் படத்தை பாருங்கள் . என் வீட்டு வாசலில் ஒரு அரை அடி உயரமுள்ள முக்கால் அங்குல பிவிசி பைப்பை நிற்க வைத்து புகைப்படம் எடுத்திருக்கிறேன். எடுத்த நேரம் இன்று(sep 22) ஏறக்குறைய பன்னிரண்டு மணி 

மேலுள்ள படத்தில்  பன்னிரண்டு மணிக்கு நிழல் வடக்கு புறமாக விழுந்துள்ளதை காணலாம். இதே  நில்னடுக்கொட்டுப் பகுதியில் இதே முறையில் படம் எடுத்தால் நிழல் இருக்காது. 
  அப்படியானால் இதே நேரத்தில் சென்னையில் நிழல் தெரியா நிலை எப்போது வரும் என்று கேள்வி எழலாம்? 
    சென்னை 13 டிகிரி வட அட்சத்தில்(lattitude) அமைந்துள்ளது. ஜூன் மாதத்தில் தெற்கு பக்கமாக சாய்ந்து பயணம் செய்வது (போல)  தொடங்குகிறது.  0 டிகிரி நில நடுக்கோட்டுப்(Equator) பகுதிக்கு வர செப்டெம்பர் மாதம் வரை எடுத்துக் கொள்கிறது. ஆனால் சென்னையை அதற்கு முன்பாகவே கடந்து விடுகிறது. அதாவது ஆகஸ்ட் மாதத்தில்  20(தோராயமாக ) தேதிகளுக்கு கடக்கிறது.அந்த நேரத்தில் பகல் பன்னிரண்டு மணி அளவில் மேற்கண்ட போட்டோ எடுக்கப் பட்டால் நிழல் இல்லாமல் இருக்கும். அதாவது சூரியன் நேர் செங்குத்தாக இருக்கும். இதே நாளில் நிழல் மற்ற நேரத்தில் வலப்புறமோ இடப் புறமோ சாயாமல் தண்டவாளம் போல வரையப்பட்டுள்ள இணை கோட்டுக்குள்ளேயே காலையில் மேற்குப் புறமாகவும் மாலையில் கிழக்குப் புறமாகவும் விழும்.
மேற்புறத்தில் இருந்து எடுக்கப் பட்ட படம்
சுருக்கம்:  1.மார்ச் 21 &செப்டம்பர் 22 சம இரவு பகல் நாட்கள் 
           2. ஜூன் 21 நீண்ட பகல் குறுகிய இரவு 
           3. டிசம்பர் 21 நீண்ட இரவு குறுகிய பகல் 

  இன்றைய நாளோட முக்கியத்துவம்  இதுதாங்க
தலையை  சுத்துதா? சகிச்கிக்கோங்க பாஸ். திட்டறதுன்னா
கம்மென்ட்ல திட்டலாம்

*********************************************************************************
இந்தப்  பதிவு தொடர்பான வவ்வாலின் கேள்விகளுக்கு  இன்னும் சில விளக்கங்களை காண
http://tnmurali.blogspot.com/2013/09/explanation-shadows-axis-of-rotation-revolution.html வவ்வாலின் கருத்துகளுக்கு விளக்கங்கள்


வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

பெட்டிக் கடை-திருக்குறளில் இலக்கணப் பிழையா?


பெட்டிக்கடை 
வலை நட்புகளுக்கு வணக்கம். 
   ஒரு சில நேரங்களில் என் மனதில் தோன்றியவற்றை   முழு பதிவாக எழுத நினைப்பேன் ஆனால் அவை போரடிக்கக் கூடும் என்பதால்  குட்டி செய்திகளாக பெட்டிக்கடை என்ற தலைப்பில்  இன்று முதல் எழுதத் தொடங்குகிறேன். ரோட்டோர பெட்டிகடையில் சோப்பு, சீப்பு, ஷாம்பூ, பேனா என்று சிறு சிறு பொருட்கள் கிடைக்கும். 

    மனதில் பட்ட சின்ன சின்ன விஷயங்களை சரக்காகக் கொண்டு   பெட்டிக்கடை யை தொடங்குகிறேன். 
திறப்பு விழாவிற்கு வருக! வருக!

                                                          அன்புடன்         
                                                      டி.என்.முரளிதரன்

****************************************************************************************************
   லியோனி அவர்களின்  குழுவின் முக்கிய பட்டிமன்ற பேச்சாளரான  கவிஞர் முத்து நிலவன் அவர்கள் வளரும் கவிதைகள் என்ற வலைப் பக்கம் வைத்துள்ளார்.பட்டிமன்றங்களில் நகைச்சுவை முகத்தை காட்டும் இவர்  அரசியல்  சமூகம்,கல்வி,இலக்கியம் என்று ஏராளமான கருத்துக்களை தனது வலைப்பூவில்  பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் படித்தது திருக்குறளில் தளைப் பிழையா? புதிய சுவாரசியமான தகவல்கள் 

இன்னொரு பதிவு தமிழில் தேசிய கீதம்

**************************************************************************************************
திகைக்க வைத்த  இன்னொரு  பதிவு சந்தானம்  என்றொரு சண்டாளான். ஆசிரியர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு. வலைப்பூ மலரின் நினைவுகள்

***************************************************************************************************
பெட்ரோல் விலை மீண்டும்உயர்ந்து விட்டதாம். இரு சக்கர வாகனத்தில் இனிமேல் பேருந்தில் போகவேண்டும் என்ற முடுவெடுத்து விட்டு நமது அற்புத பேருந்து சேவையின் காரணமாக முடிவை மாற்றிக் கொண்டு உயர்வை சகித்துக் கொண்டு சராசரி மக்களாக வழக்கம் போல் இருப்போமாக!
**********************************************************************************************
  எங்கள் வீட்டுக்கு சமீபத்தில் ஒரு விருந்தாளி  வந்தார் .வாசலில் உள்ள மல்லிகைக் கொடியை இழுத்து வாயில் போட்டுக் கொண்டார்.. மாம்பழ சீசன் ஆதலால் எங்கள் வீட்டு மாமரத்திலிருந்து விழுந்து கிடந்த மாங்காய் மற்றும் பழங்களை அவருக்கு கொடுக்க அவர் ஆசையோடு தின்ன ஆரம்பித்து விட்டார். இப்போதெல்லாம் தினந்தோறும் அதே நேரத்தில் வந்துவிடுகிறார். மாங்காய் கொடுத்தால்தான் போகிறார். கொடுக்கும் வரை பிடிவாதமாக அங்கேயே நிற்கிறார். மல்லிகைக் கொடியை பிடித்து இழுப்பதில்லை. எனக்கு ஏதாவது கொடுத்து மரியாதையாக புண்ணியம் தேடிக் கொள்ளுங்கள் என்று சொல்வது போல் நடந்து கொள்வார். இதோ அவர் தான் இவர்.


இன்னைக்கு ஆடி வெள்ளிகிழமை! என்னையும் கொஞ்சம் கவனிங்க

இன்னும் சில விருந்தாளிகள் உண்டு. அவர்களில் சிலர் உரிமையாக உள்ளே வந்து அதிரடியாக அச்சுறுத்துபவரும்  உண்டு. அவர்களைப் பற்றி இன்னொரு பதிவில் சொல்லி உங்களையும் அச்சுறுத்த ஆவல்.

*********************************************************************************
 நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போதுதான் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டேன்.சைக்கிள் ஸ்பேர் பார்ட்சில் எனக்கு பிடித்தது Freewheel.
மனிதனின் அசத்தலான கண்டுபிடிப்பு சக்கரம் என்றால். அதன் உட்பிரிவான Freewheel இன்னும் அசத்தல். சைக்கிள் பெடலை ஒருபுறம் அதாவது முன்புறமாக மிதித்தால் மட்டுமே சக்கரங்கள் சுற்றும். எதிர் புறமாக பெடலை சுழற்றினாலும் அதன் சுழற்சி தடைபடாது. இந்த அமைப்புதான் என்னை ஆச்சர்யப் படுத்தும். ப்ரீவீல் வேலை செய்யாத சைக்கிளில் மிதிப்பதை நிறுத்த முடியாது.அப்படி நிறுத்தினால் சைக்கிள் ப்ரேக் பிடித்ததுபோல் தடுமாறும். இதுபோன்ற சமயங்களில் காலை பெடலில் படாமல் தூக்கி வைத்துக்கொண்டு சிலர் செல்வதை பார்க்க முடியும். 
    இதை பற்றி எல்லாம் பள்ளியில் அறிவியல் ஆசிரியர்கள்  சொல்லிக் கொடுக்கிறார்களா? எனக்கு எந்த ஆசிரியரும் சொல்லித் தரவில்லை. உங்களுக்கு?. என்ன செய்வது அவர்களுக்கு சிலபஸ் முடிக்கவேண்டும்.


மிதிவண்டிக்கான   ப்ரீவீலை கண்டறிந்தவர் வில்லியம் வான் ஆண்டன் என்பவர்.ஆண்டு 1869.

************************************************************************************************************

எச்சரிக்கை:பெட்டிக்கடை  தொடர்ந்து நடத்துவதுவது உங்கள் கையில்தான் இருக்கிறது

பெட்டிக்கடை  2  க்கு செல்ல கீழுள்ள கதவை மௌசால் தட்டுங்கள்


புதன், 20 பிப்ரவரி, 2013

விவாதம் விரும்பும் பதிவர்கள்

  ஒன்றரை ஆண்டுகளாகத்தான்  தமிழ்ப் பதிவுலகில் எழுதி வருகிறேன். மற்றவர்களுடைய பதிவுகளையும் படித்து வருகிறேன்.சமூகப் பிரச்சனைகள், சினிமா, இலக்கியம்,கவிதை, நகைச்சுவை, அரசியல், அறிவியல், அனுபவம் என்று பல்வேறு பிரிவுகளில் அற்புதமாக எழுதி வருகிறார்கள் பதிவர்கள். சில பதிவுகள் சில நேரங்களில் தெரிந்தும் தெரியாமலும் விவாதத்திற்கு உரியவையாய் அமைந்துவிடுகிறது . பின்னூட்டங்களில் இவை காராசாரமாக விவாதிக்கப் படுகின்றன. ஆணித்தரமாகவும் ஆதாரங்களுடனும் தங்கள் கருத்தை எடுத்து வைத்து விவாதிப்பதில் சிலர் வல்லவர்களாக விளங்குகிறார்கள். அவர்களில் பலரும் அறிந்தவர்கள்  'வவ்வால்-தலைகீழ் விகிதங்கள்', 'ரிலாக்ஸ் ப்ளீஸ்' வருண்,  'சமரசம் உலாவும் இடமே! சார்வாகன்'., ஜெயதேவ் தாஸ். இவர்களைத்  தவிர இன்னும் பலரும் உண்டு. இருப்பினும் இந்த நால்வர் பற்றி எனது கருத்துக்கள்

  வலைசரங்களில் இவர்கள் அதிகமாக குறிப்பிடப்பட்டு அவ்வளவாக பார்த்ததில்லை.(ஒரு வேளை நான் கவனிக்காமல் இருந்திருக்கலாம்.) இவர்கள், எவ்வளவு பிரபல பதிவர்களாக இருந்தாலும்  அவர்களுடைய  பதிவுகளில் உள்ள குறைகளை தயவு தாட்சயன்மின்றி சுட்டிக் காட்டக் கூடியவர்களாகவும் தங்கள் மனதுக்குப் பட்டதை தயங்காமல் உரைக்கக் கூடியவர்களாகவும் இருப்பது காரணமாக இருக்கலாம். இவர்களது பின்னூட்டங்கள் சுவாரசியமாகவும் பல்வேறு விஷயங்களையும் வெளிக் கொணரும் வகையில் அமைந்துள்ளது.

 இவர்களுக்கிடையே உள்ள ஒற்றுமை அபார வாதத் திறமை. மூவர் மட்டும் நாத்திகர்கள் என்று அறிய முடிகிறது. ஜெயதேவதாஸ் மட்டுமே ஆத்திகர். நிறையப் பேருக்கு சந்தோஷம் அளிக்கக் கூடிய விஷயம் இவர்கள் நிறைய விஷயங்களில்  ஒருவருக்கொருவர் கருத்து மாறுபாடு உடையவர்களாக இருப்பதுதான். பிராம்மண எதிர்ப்பு நால்வருக்கும் பொதுவாக அமைந்திருக்கிறது.
 
1.வவ்வால்-தலைகீழ் விகிதங்கள் : 2006 முதல் எழுதிவரும் வலைப் பதிவர் இரண்டு ஆண்டுகளில் 100 பதிவு எழுதிய இவர் அடுத்த 3 ஆண்டுகளில் 35 மட்டுமே. 2012 இல்தான் அதிக பட்சமாக 91 பதிவுகள் எழுதி இருக்கிறார். இவர் நக்கீரன் போல தனக்கு தவறு என்று பட்டால் குற்றம் குற்றமே என்று குட்டத் தயாராக இருப்பவர்.இவரது ப்ரஃபைல் பார்த்தபோது இவர் எந்த ப்ளாக்கையும் ஃபாலோ செய்வதாகத் தெரியவில்லை. ஒரு வேலை Follow privately என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். விவாதத்திற்குரிய பதிவுகளை அறிந்து அல்லது ஒரு பதிவிற்குள்  ஏதேனும் ஒரு வரியில் காணப்படும்  நுணுக்கமாக பொருளை எடுத்து தன் கருத்தை ஆணித் தரமாக தெரிவிப்பார். மறுப்பு கூறுவது மிகக் கடினமாக இருக்கும்.பெரும்பாலான பதிவர்கள் இவர் தங்களது வலைப் பக்கம் வருவதை விரும்புவதில்லை. புள்ளி விவரங்களை அள்ளி வீசுகிறார். சமீபத்திய தொழில் நுட்பங்களை நாளதுவரைப் படுத்திக் கொள்கிறார்.பல துறைகளில் ஈடுபாடு உடையவராக இருக்கிறார். உரமான்யம் பற்றி இவர் எழுதிய பதிவு அசத்தல் ரகம். இது போன்ற வேறு பதிவு என் கண்களில் இதுவரை பட்டதில்லை.

  இவரது கற்றது தமிழ் போன்ற பதிவுகள் எனக்குப் பிடிக்கும். யார் என்ன கூறினாலும், கடுமையாகக் கடிந்து கொண்டாலும் அதை மறந்து விட்டு தன் விமர்சனப் பணியை தொடர்வது இவரது சிறப்பு. எனக்குத் தெரிந்து வலைசர அறிமுகத்தில் திருப்பூர் ஜோதிஜி மட்டுமே இவரைக் குறிப்பிட்டிருந்தார். பல ஆண்டுகளாக பதிவுலகில் சலிப்பின்றி தொடர்ந்து எழுதிவருவது ஆச்சர்யப்பட வைக்கிறது.

2. வருண் ரிலாக்ஸ் ப்ளீஸ்: நீண்ட நாட்களாக எழுதி வருபவர்.2008 இல்தொடங்கி கிட்டத் தட்ட 950 க்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதி உள்ளார். விவாதங்கள் என்றால் இவருக்கும் அல்வா சாப்பிடுவது மாதிரி. ஒவ்வொரு பிரச்சனையும் வேறு கோணங்களில் பார்ப்பவர். ப்ளாக் Contributors என்று  இவர் பெயரோடு கயல் விழி என்று குறிப்பிட்டிருந்தாலும் இருவரும் ஒருவரே என்றுதான் நினைக்கிறேன். இவரது கதைகளில் செக்ஸ் கொஞ்சம் தூக்கலாக காணமுடிகிறது.. பிராய்டின் உளவியல் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.மனித மனத்தை பகுப்பாய்வு செய்வது தனக்கு பிடிக்கும் என்று தனது ப்ரோஃபைலில் சொல்கிறார். இவரும் வவ்வாலைப் போலவே எந்த எந்த வலைப்பூக்களை பின்தொடர்கிறார் என்பதை அறிய முடியவில்லை.

சமரசம் உலாவும் இடமே! சார்வாகன்:  இந்த நால்வரில் முதலில் எனக்கு அறிமுகம் ஆனவர் ஆற்றலரசு என்கிற சார்வாகன்தான். இவர் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையவில்லை. இருநூறு பதிவுகள் எழுதி இருந்தாலும் இவரது பெரும்பாலான பதிவுகள் பரிணாமம் சார்ந்தவையாக உள்ளன. மதசார்பு பதிவுகளை கண்டால் போதும் இவருக்கு குஷி  பிறந்துவிடும். விவாதத்தில் இறங்கி வாதங்களை அடுக்க ஆரம்பித்து விடுவார்.பல்வேறு வீடியோக்களை தன் வாதத்திற்கு துணை சேர்த்துக்கொள்ள களைகட்டும் பின்னூட்டங்கள். பல எதிரிகளை சம்பாதித்திருப்பார் என்று நினைக்கிறன்.  இவர் அறிவியல், கணிதத்தில் அபார ஞானம் உடையவராகத் தெரிகிறது. சிக்கலான கணித அறிவியல் வழிமுறைகளை எளிய தமிழில் விளக்குவதில் அதிக ஆர்வம் உடையவர். பல்வேறு உலக விஷயங்களை இவர் அலசினாலும் எனக்குப் பிடித்தது இவரது கணிதப் பதிவுகள்தான். இவர் பின் தொடரும் வலைத்தளங்கள் பற்றியும் தகவல்கள் இல்லை.

ஜெயதேவ்தாஸ்: விவாதங்களில் துணிந்து இறங்கும் ஒரே ஆத்திகப் பதிவர். 2012 ஆகஸ்டில் இருந்து எழுதி வரும் இவர் நூறு பதிவுகளை எழுதி விட்டார். சைவ உணவின் தீவிர ஆதரவாளர். அதற்காக அவர் எடுத்து வைக்கும் வாதங்கள் ஆச்சர்யப் படுத்துகின்றன.ஆத்திகப் பதிவுகளை வித்தியாசமான கோணத்தில் எழுதுகிறார். நாத்திகர்களுக்கும் போலி ஆன்மிக வாதிகளுக்கும் ஆப்பு வைத்தலில் ஆர்வம் உடையவர் என்று தெரிவித்திருக்கிறார். அனைத்து சாமியார்களையும் தாக்கு தாக்கு என்று தாக்குகிறார். அறிவியலிலும் ஆர்வம் உடையவராக இருக்கிறார். மாப்பிள  என்றும் பாகவதர் அழைக்கப்படும் இவர் தன் பாணியில் பதிலடி கொடுக்கத் தயங்குவதில்லை. திறமையான நாத்திகப்  பதிவர்களுக்கு எதிராக சளைக்காமல் வாதாடுவதால் இவருக்கு நிறையப் பதிவர்களின் ஆதரவு கிடைக்கிறது. குறுகிய காலத்தில் தமிழ்மணத்தின் முதல் இருபது இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளார். இவரது நிலவின் மறுபக்கத்தை நாம் காணமுடியாது  என்ற பதிவு எனக்கு பிடிக்கும் தெளிவான விளக்கங்களுடனும் படங்களுடனும் எழுதி இருப்பார் ( இந்தக் கருத்தை நான் எழுத நினைத்திருந்தேன்)
 இதுபோல விவாதங்கள் மூலம் பதிவுகளை சுவாரசியமாக ஆக்கும் இன்னும் சிலரும் உண்டு. அவர்களைப் பற்றி இன்னொரு பதிவில் சொல்கிறேன்.

    விவாதங்கள், அறியாத பல தகவல்களை அறிந்து கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை. ஆனால் விவாதங்கள் ஒருவருடைய கருத்தை மாற்ற உதவி இருக்கிறதா என்றால் அது சந்தேகம்தான்.
  எப்படி  இருப்பினும் இவர்களுடைய விவாதங்கள் சுவையானவை என்பதை மறுக்க முடியாது. வரையறை மீறாமல் விவாதங்கள் தொடரட்டும்! ரசிப்போம்!.

******************************************************************************************

 

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

மார்ச் 21&செப்டம்பர் 22 அதிசய நாட்கள்!


. (இந்தப் பதிவை இடுவதில் சிறிது தயக்கம் இருந்தது. இதற்கு வரவேற்பு எப்படி இருக்கும் ஐயம் இருந்தாலும் இன்றைய தினத்தில் இந்தப் பதிவு பொருத்தமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.பள்ளி வயதில் இருக்கும் உங்கள் பிள்ளைகள், அல்லது தம்பி தங்கைகளுக்கு சொல்வதற்கு ஏற்றதாக இருக்கும் என்றும் நினைக்கிறேன்.)

    நமக்குள்ள பல பிரச்சனைகளில் சில விஷயங்களை கவனிக்க நேரம் இருப்பதில்லை. பல சுவாரசியமான நிகழ்வுகள் விண்வெளியில்  நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பூமியிலும் இவ்வாறு நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21(சில சமயங்களில் மார்ச் 20) க்கும் செப்டம்பர் 22(சில சமயங்களில் செப் 23) க்கு தனி சிறப்பு உண்டு. இவ்விரு நாட்களிலும் இரவு நேரமும் பகல் நேரமும் சமமாக இருக்கும். மற்ற நாட்களில் பகல் இரவு நேரங்களில் வித்தியாசம் இருக்கும். அதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.

    பூமி தனி அச்சில் 23.5 டிகிரி சாய்வாக சுற்றுகிறது. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்பது நமக்குத் தெரியும்.தன்னைத் தானே சுற்றிக் கொள்வதால்தான் இரவுபகல் ஏற்படுகிறது.என்பதும் நாம் அறிந்ததே! சில காலங்களில் பகல் பொழுது அதிகமாகவும் இரவு பொழுது குறைவாகவும் இருக்கும். சில காலங்களில் இரவுப் பொழுது அதிகமாகவும் பகல் குறைவாகவும் இருக்கும். பூமியின் நீள் வட்டசுற்றுப்பாதை  ஒரு சாலை என்று கொண்டால்  அந்தப் பாதைக்கு நேர்  செங்குத்தாக பூமி தன்னைத்  தானே சுற்றிக் கொள்வதில்லை. சற்று சாய்வாக அதாவது 23.5 டிகிரி சாய்வாக தனது அச்சில் சுற்றுகிறது.

  இதுவே இரவு பகல் நேரங்களில் வித்தியாசம் ஏற்படுவதற்கு காரணம்.பூமியில் கோடைகாலம் குளிர்காலம் போன்ற பருவ காலங்கள் ஏற்படுவதற்கும் இந்த சாய்வே காரணமாக அமைகிறது. வேறு மாதிரி சொல்வதென்றால் பூமி செங்குத்தாக தன்னைத் தானே சுற்றிக் கொண்டால் பருவ காலங்கள் ஏற்படாது. அதாவது பூமியில் ஓரிடத்தில் எந்தவிதமான காலம் இருக்கிறதோ ஆண்டு முழுதும் மாற்றமின்றி அப்படியே இருக்கும்.
இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
பூமி அச்சின் இரு முனைகளையே வட துருவம் தென் துருவம் என்கிறோம்.  ஒரு குறிப்பிட்ட நாளில் மேல்முனை சூரியனை நோக்கி சாய்ந்து இருப்பதாக  வைத்துக்கொள்வோம்.
கீழுள்ள படத்தைப் பாருங்கள்

படம் 1

   ஆறு மாதங்களுக்குப் பின் பூமி பாதி  சுற்று சுற்றி எதிர்புறம் வந்திருக்கும் அப்போது அதன் மேல் முனை  பூமியை நோக்கி இருக்காது.இப்போது  கீழ் முனை பூமியை நோக்கி இருக்கும். அதாவது பூமியின் அச்சு அதே நிலையில் இருக்கிறது.
இதோ  இந்தப் படத்தைப் பாருங்கள்
படம் 2

பூமியின் சுற்றுப் பாதையை ஒரு கம்பியாகவும் பூமியை ஒரு மணியாகவும் வைத்துக் கொள்ளுங்கள் கம்பியில் கோர்த்தபடி மணி சுற்றுவது போல் பூமி சுற்றினால்  கீழுள்ள படத்தில் உள்ளது போல் 6 மாதங்களுக்குப் பிறகும் அதன் வடமுனை எப்போதும் பூமியை நோக்கியே சாய்ந்திருக்கும்.
படம் 3
ஆனால்  இயற்கையில் அவ்வாறு நிகழவில்லை.இப்படி பூமி சுற்றினால் கால மாற்றங்கள் நிகழாது.

   படம் 1 இல் காணப்படும் நிலை ஜூன் 21 அன்று ஏற்படுகிறது. தென் துருவம் சூரியனிடமிருந்து சற்று விலகி இருப்பதைக் காணாலாம் அன்று ஆண்டில் மிக நீண்ட பகலாக இருக்கும். இந்த நாளில் நில நடுக்கோட்டுக்கு மேலுள்ள வட அரைக் கோளத்தில் சூரிய ஒளி  அதிகமாகவும் தென் அரைக்கோளத்தில் குறைவாகவும் விழுகிறது. அன்றிலிருந்து பகல் நேரம் சிறிது சிறிதாக குறைந்து இரவு  நேரம் சிறிது சிறிதாக அதிகரிக்கும். செப் 23 அன்று இரவும் பகலும் சம நிலையை அடைகிறது. 

    இந்த நாட்களில் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர்வதைப் போல் தோற்றமளிக்கும் இதை தட்சணாயணம் என்று கூறுவது வழக்கம். செப் 23 அன்று நில நடுக்கோட்டுக்கு செங்குத்தாக சூரிய ஒழி விழுவதால் வட  அரைக் கோளத்திலும் தென் அரைக் கோளத்திலும் சம அளவு ஒளி விழுகிறது.அதாவது வட துருவமும் தென் துருவமும் சம தொலைவில் உள்ளது. இதனால் இரவும் பகலும் சமமாக உள்ளது. இதே நிலைய மார்ச் 21 அன்றும் ஏற்படுவதால் அன்றும் இரவும் பகலும் சமமாக அமைகிறது.

   இதற்கிடையில் (படம் 2)டிசம்பர் 21(சில சமயங்களில் டிசம்பர் 22) அன்று ஜூன் 21 அன்று உள்ள நிலைக்கு நேர் எதிரான சூழ்நிலயில் பூமி அமைவதால் அன்று மிக நீண்ட இரவாகவும் குறைந்த பகலாகவும் காணப்படும்.அன்றிலிருந்து சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்வது போல் தோற்ற மளிக்கும் இதை உத்தராயணம் என்று கூறுவார்கள்.

   சரி! இவையெல்லாம் விண் வெளியில்  நிகழ்கிறது.நாம் எப்படி இதை அறிவது. நாம் கண்ணால் என்ன மாற்றங்களை பார்க்க முடியும் 

1. இன்று சூரியன் உதிப்பது சரியான கிழக்கு திசையின் மையத்தில்  
2. இன்றிலிருந்து நிழல் வடக்குப்புறம் சாய்வாக விழத் தொடங்கும் 
3 இன்று பகல் பன்னிரண்டு மணிக்கு 90 டிகிரி செங்குத்தாக ஒரு வளைவில்லாத  குச்சியை வைத்தால்(பூமத்திய ரேகைப் பகுதியில்) அதன் நிழல் தரையில் விழாது. தலைக்கு மேல் நேராக சூரியன் இருக்கும்.
4 தமிழகத்தில் நெய்வேலியைத் தவிர இதர இடங்களில் சரியான கிழக்கு  மேற்காகவோ ,வடக்கு தெற்காகவோ  சாலைகள் இல்லை அதனால் திசைகளை அறிவது சில வேளைகளில் கடினமாக உள்ளது. இன்றைய சூரியனை வைத்து  திசைகளின் அமைப்பை  அறிந்து கொள்ளலாம்.
இதோ இந்தப் படங்கள் அதை விளக்கும் என்று நம்புகிறேன்.படத்தில் உள்ள குச்சியின் நிழலை கவனியுங்கள்.

               ஜூன் 21 அன்று           டிசம்பர் 21 அன்று 

                       இன்று செப்டம்பர் 22 அன்று 

  இவை  யாவும் நில நடுக்கோட்டுப் பகுதியில் உள்ளவர்களுக்கு100 சதவீதம் பொருந்தும். மற்ற இடங்களில் நிழலில் மாறுபாடு காணப்படலாம். தமிழகத்தை பொறுத்தவரை நிலநடுக் கோட்டுக்கு வட பகுதியில் அமைந்துள்ளதால் நிழல் சற்று வடக்குப்புறம் சாய்வாக விழும்.ஆனாலும்  இரவு பகல் நேரங்கள் சமமாகவே இருக்கும்.

சுருக்கம்:  1.மார்ச் 21 &செப்டம்பர் 22 சம இரவு பகல் நாட்கள் 
           2. ஜூன் 21 நீண்ட பகல் குறுகிய இரவு 
           3. டிசம்பர் 21 நீண்ட இரவு குறுகிய பகல் 
பதிவு பயனுள்ளதாக இருந்ததா? 
தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்.உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக  இருக்கிறேன்.
 ************************************************************************************************************
தொடர்புடைய பதிவு