என்னை கவனிப்பவர்கள்

கமலஹாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கமலஹாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 ஏப்ரல், 2013

கமலஹாசன் பங்கேற்ற நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி!

 
    நான் சாதாரணமானவன் அல்ல சகலகலா  வல்லவன், உலக அறிவு நிரம்பப் பெற்றவன் என்பதை நிருபிக்க  தன் வாழ்க்கை முழுவதும் முயற்சி செய்பவர்கள் உண்டு. அத்தகையவர்களில் ஒருவர்தான் கமலஹாசன் என்பது நான் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. பல துறைகளின் ஈடுபாடுதான் அவரது மிகப் பெரிய பலம்.அதுவே சில சமயங்களில் அவரது பலவீனமாகவும் இருக்கிறது.
   நீங்களும்  வெல்லலாம் ஒரு கோடி  நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டு 50 லட்சம் வென்றதை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அல்லது படித்திருப்பீர்கள். எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்நிகழ்ச்சி நம்மை ஏமாற்றவில்லை .
  திட்டமிட்டு 50 லட்சம் கொடுத்து விளம்பரத்திற்காக கமலை பயன்படுத்தி தனது TRP ரேட்டை அதிகரித்துக் கொள்ளும் முயற்சியில் விஜய் டிவி வெற்றி பெற்றிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். 
   HIV யால் பாதிக்கப் பட்ட சிறுவர்களுக்காக உதவும் பெற்றால்தான் பிள்ளையா அமைப்புக்காக நிதி திரட்டுவதற்காக செய்த பிரச்சாரத்தை நினைவு கூர்ந்து இதில் வெல்லப் போகும் பணத்தில் பாதி இதற்கும் இன்னொரு பாதி புற்று நோயாளிகளுக்கு உதவும் அமைப்பான கேன்கேர் அமைப்புக்கும் தரப் போவதாக சொன்னார்.
   பெரும்பாலான பிரபலங்கள் இது போன்ற நிகழ்ச்சிகளில் கிடைக்கும் பணத்தை நற்பணிகளுக்காக நன்கொடையாகக் கொடுத்தாலும் கமல் கொடுத்ததில் ஒரு உண்மையான அக்கறை இருப்பததாகவே தோன்றியது. பாதிக்கப்பட்ட  பிள்ளைகளுடன் பேசியது பற்றி சொன்னது என் கண்களை கொஞ்சம் ஈரமாக்கியது. இன்றும்  எழும்பூர் மருத்துவமனையில் எயிட்ஸ் நோயாளிகளுக்கு உதவும் விதத்தில் வைக்கப் பட்டுள்ள கமலஹாசனின் விளம்பரத்தை காண முடியும்.

  கௌதமி புற்று நோயால் அவதிப் பட்டவர் என்பது நிறையபேருக்கு தெரிந்திருக்கக் கூடும். அத்தகைய சூழ்நிலையில்  கமல்ஹாசன்  அவருக்கு ஆதரவாக இருந்து நோயை வெல்ல உதவியதை நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் கௌதமி. சமுதாயம் ஏற்றுக் கொண்ட, ஏற்றுக் கொள்ளாத பல விஷயங்களை கமல் துணிந்து செய்திருக்கிறார். COMPANIONSHIP வாழ்க்கையை நம் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அது நல்லதா கெட்டதா என்று விவாதங்கள் தொடர்ந்தாலும், திருமணம் செய்து கொள்ளாமல் சிறப்பாக இணைந்து வாழமுடியும் என்பதை இருவரும் நிருபித்திருக்கிரார்கள் என்பதை மறுப்பதிற்கில்லை. 
   நிகழ்ச்சியில் கமலஹாசன் பேசும்போதெல்லாம் அவரை முகத்தில் பெருமிதமும் காதலும் பொங்க கௌதமி பார்ப்பதும்  அவ்வப்போது ஆதரவாக ஒருவருக்கொருவர் தொட்டுக் கொள்வதும் இயல்பாகவும் அவர்களுடைய அன்பின் ஆழத்தையும்  வெளிப்படுத்தியது.
    புத்திசாலித்தனம்,சமயோசித நகைச்சுவை,அரிய தகவல்கள்,உற்சாகம் பொங்கும் கலாட்டாக்கள்  கட்டிப்பிடிவைத்தியம்,முத்தங்கள் நெகிழ வைக்கும் நிகழ்வுகள் என மூன்று நாட்கள் நேரம் போவதே தெரியாமல் போனது நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி 
  ஒவ்வொரு கேள்விக்கும் கமல் அளித்த விரிவான பதிலை பார்க்கும்போது இக் கேள்வியெல்லாம் அவர்தான் உருவாக்கினாரா  என்ற ஐயம்  எதுவும் எழவில்லை.அவரேதான் தயாரித்தார்  உறுதியாக நம்ப முடிந்தது.

  பக்கிங்காம் கால்வாய் போக்குவரத்துக்கு பயனபடுத்தப்பட்டது என்று கமல் சொன்ன தகவல் வியப்பாகத்தான் இருந்தது. சாப்டற பொருள் முன்னாடி அதுல் வந்துகிட்டு இருந்தது இப்ப சாப்பிட்டதுக்கு அப்புறம் வர்ற பொருள்தான் வந்துக்கிட்டு இருக்குன்னு  தன இயல்பான நகைச்சுவையுடன் சொல்லி சிரிக்க வைத்தார்.
 சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவர் புகழ்ந்து தள்ளும் நபர்கள் பாலசந்தர், நாகேஷ்,சிவாஜி, போன்றவர்கள் கமலின் புகழ்ச்சிக்கு இம்முறையும் தப்பவில்லை.

   பாரதியார்  திருவனந்தபுரம் மிருகக் காட்சி சாலையில் சிங்கத்தின் பிடரியை உலுக்கிக் கொஞ்சியபோது உங்கள் மன நிலை எப்படி இருந்தது என்று பாரதியின் மனைவி செல்லம்மாவை கேட்டார்களாம். அவர்கள் கண்ணைமூடிக் கொண்டு கடவுளிடம் வேண்டிக் கொண்டார்களாம் "அந்த சிங்கத்துக்காவது புத்தியைக் கொடு" என்று சொன்னதாக கமல் சொன்னது சுவாரசியம்.

   சின்னத்  திரை பிரப\லங்கள் தேவதர்ஷனி படவா கோபி உள்ளிட்டவர்கள் கமலஹாசனுடன் பேசியும், பரவசமடைந்தும் கட்டிப்பிடி வைத்தியம் செய்து கொண்டனர். சின்னத் திரை நடிகை பத்மப் ப்ரியா  பேசியது கொஞ்சம் ஓவராகத் தான் இருந்தது. 
   கமலுடைய தேடுதல் வேட்கை நம்மை ஆச்சர்யப் பட வைக்கிறது. கமலஹாசனின் கனவுப் படமான மருத நாயகம் பற்றியும் கமல் சில தகவல்களை சொன்னார்.  மருதநாயகம் என்று ஒருவர் இருந்தார் என்பது நிறையப் பேருக்கு தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அவர் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார் என்றும் அவரை அடக்க ஆன செலவு சதாம் உசேனுக்காக அமெரிக்கா செய்த செலவுகளுக்கு ஈடானது என்ற தகவல் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நாம் படித்த  வரலாறு நமக்கு பல உண்மைகளை தெரிவிக்க மறந்து விட்டதா?அல்லது மறைத்து விட்டதா? 

    மருதநாயகம்  அவரது கனவு திட்டமாகவே இருக்கிறது. முடிந்தால்  பப்ளிக் ஃபண்டிங் மூலம், எடுக்க முயற்சி செய்வேன் என்றார். வெளி நாடுகளில் இந்த முறை யில் படம் எடுக்கிறார்களாம் .DTH க்கு அடுத்து இந்த முயற்சிதான் போலிருக்கிறது. அடுத்த சர்ச்சைக்கு அஸ்திவாரம் தயார்.

   கவிதை சொல்லுங்கள் என்றதும் தயாராகக் காத்திருக்கும் முதல் ரேங்க்  மாணவன்போல ஆர்வத்துடன் கையை அசைத்து ஏற்ற இறக்கத்துடன்  உனர்ச்சியுடன் கவிதை சொல்ல ஆரம்பித்தார். பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு வாழ்பவர்களுக்கு சாட்டையடியாக தாயம்மாளை நாயகியாக்கி அவர் சொன்ன கவிதை ஒரிரு நிமிடம் நம்மை கட்டிப்போட்டது. அவர் வாசித்த கவிதை வரிகள் அவரது  மதிப்பு கூட்டும் வரிகளாக அமைந்திருந்தது. என்ன மனுஷன்யா இவன் என்று பாரதிராஜா போல நம்மையும் வியக்க வைத்தது.
(அவரது  கவிதை படிக்கவும் அதன் காணொளி பார்க்கவும்  இங்கு கிளிக் செய்யவும்)

   அவர் சொன்ன இனொரு விஷயமும் அட! என்று சொல்ல வைத்தது.
நிறைய  மொழிகளில் ஒரு பொருளின் பெயர் அது தயாரிக்கபயன்படும்  மூலப் பொருளின் முதல் எழுத்தை கொண்டு தொடங்குகிறது
உதாரணத்திற்கு எண்ணெயின் முதல் எழுத்து அது தயாரிக்க பயன்படுத்தப் படும் எள் என்ற வார்த்தையின் முதலெழுத்து.
olive-oil
தெலுங்கில் சொல்ல முடிமா என்று ப்ரகாஷ்ராஜ் கேட்க, தெலுங்கு அறிந்த கெளதமியை பார்க்க அவர் விழிக்க கமலே சட்டென்று
நூலு-நூன
நூலு என்றால் எள். நூன என்றால் எண்ணெய் என்று சொல்லி அசத்தினார்.
   சும்மா  இருந்தபோது முடிவெட்டிக் கொள்ள கற்றுக்கொண்டது, டான்ஸ் கற்றுக் கொண்டது என்று இடைவெளியின்றி இந்தா எடுத்துக் கொள் என்று சுவாரசியங்களை அள்ளி வீசினார்.

   ஐம்பது  லட்சம் வென்றதும்  நேரம் முடிந்துவிட்டதால் ஒரு கோடிக்கான கேள்வி கேட்கப் படவில்லை. ஐம்பது லட்சத்திற்கான காசோலை மட்டுமே வழங்கப் பட்டது. இங்கு கிடைக்காவிட்டால் பரவாயில்லை மீதி ஐம்பது இலட்சத்தை இந்த நல்ல விஷயத்திற்கு உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் என்று சொல்லி முடித்தது வித்தியாசமாக இருந்தது. 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(அவரது  நிகழ்ச்சியில் சொன்ன கவிதை படிக்கவும் அதன் காணொளி பார்க்கவும் விரும்பினால்  இங்கு கிளிக் செய்யவும்.)  

காதலின் கழிபொருளாய்
பிறந்த பிள்ளைக்கு 
தாலாட்டு இசைப்பது போல் 
மொய்த்தன ஈக்கூட்டம்

தொப்புள் கொடியறுத்த கசியும் காயமே 
பிள்ளையின் விலாசம் 
தெருவில் வாழ் நாய் ஒன்று

          
          (தொடர்ந்து படிக்க )

**************************************************************