என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 21 நவம்பர், 2013

வைரமுத்துவின் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் -ஒரிஜினல் இதுதான்

     அமர்க்களம் என்ற திரைப்படத்தில் ரவுடியாக நடிக்கும் அஜீத் உணர்ச்சி கொந்தளிப்புடன் பாடும் "சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்" என்ற பாடலை கேட்டிருப்பீர்கள்.  பரத்வாஜின் இசையும் வைரமுத்துவின் வார்த்தைகளும்  எஸ்.பி.பி யின் குரலும் நம்மை சில நிமிடங்களுக்கு கட்டிப்போடும். அந்தப் பாடல் உண்மையில் திரைப்படத்திற்காக எழுதப் பட்ட பாடல் அல்ல. வைரமுத்துவின் பெய்யெனப் பெய்யும் மழை என்ற கவிதை தொகுப்பில்" கேள் மனமே கேள்" தலைப்பில்  வெளியான கவிதையே மெட்டுக்கேற்ற சில மாற்றங்களுடன் பாடலாய் வெளிவந்தது. அதன் ஒரிஜினலை படித்திருக்கிறீர்களா ? இக்கவிதை தொகுப்பில் அருமையான கவிதைகள் பல உள்ளன.
    பூதம் ஒன்று நேரில் வந்து  என்னென்ன வரம் வேண்டும் என்று கேட்டால் இப்படிக் கேட்பேன் என்று சொல்கிறார் வைரமுத்து. இதோ அந்த கவிதை வரிகள் .எண்சீர் விருத்தத்தில் அமைந்துள்ள கவிதை அது.மரபுக் கைவிதை எழுதும் திறமை உள்ளவர்கள் திரைப்படப் பாடல் எளிதில் எழுதமுடியும் என்பதற்கு கவிப்பேரரசு ஒரு உதாரணம். மரபுக் கவிதையும் கிட்டத்தட்ட மெட்டுக்கு பாட்டு எழுதுவது போல்தானே!

              சத்தங்கள் இல்லாத தனிமை கேட்பேன்
                 சரஞ்சரமாய் வந்துவிழும் வார்த்தை கேட்பேன்
              ரத்தத்தில் எப்போதும் வேகம் கேட்பேன்
                 ரகசியங்கள் இல்லாத வாழ்க்கை கேட்பேன்
              சுத்தத்தைக் கொண்டாடும் சூழல் கேட்பேன்
                  சுடர்விட்டுப் பொலிகின்ற ஞானம் கேட்பேன்
              யுத்தங்கள் இல்லாத உலகம் கேட்பேன்
                   உலகெங்கும் சம்பங்கு மழையைக் கேட்பேன்


              கண்ணிரண்டில் முதுமையிலும் பார்வை கேட்பேன்
                  கடைசிவரை கேட்கின்ற செவிகள் கேட்பேன்
              பின்னிரவில் விழிக்காத தூக்கம் கேட்பேன்
                  பிழையெல்லாம் மன்னிக்கும் பெருமை கேட்பேன்
              வெண்ணிலவில் நனைகின்ற சாலை கேட்பேன்
                  விண்மீனை மறைக்காத வானம் கேட்பேன்
              மென்காற்று வீசிவரும் இல்லம் கேட்பேன்
                   மின்சாரம் போகாத இரவு கேட்பேன்


              தன்னலங்கள் தீர்ந்துவிடும் இதயம் கேட்பேன்
                   தங்கத்தைச் செங்கல்லாய் காணக் கேட்பேன்
              விண்வெளியில் உள்ளதெல்லாம் அறியக் கேட்பேன்
                  விஞ்ஞானம் பொதுவுடைமை ஆகக் கேட்பேன்
              மண்ணுலகம் கண்ணீரை ஒழிக்கக் கேட்பேன்
                   மனிதஇனம் செவ்வாயில் வசிக்கக் கேட்பேன்
              பொன்னுலகம் பூமியிலே தோன்றக் கேட்பேன்
                   போர்க்களத்தில் பூஞ்செடிகள் பூக்கக் கேட்பேன்


              கோடையிலும் வற்றாத குளங்கள் கேட்பேன்
                   குளத்தோடு கமலப்பூக் கூட்டம் கேட்பேன்
              மேடையிலே தோற்காத வீரம் கேட்பேன்
                   மேதைகளை சந்திக்கும் மேன்மை கேட்பேன்
              வாடையிலும் நடுங்காத தேகம் கேட்பேன்
                   வாவென்றால் ஓடிவரும் கவிதை கேட்பேன்
              பாடையிலே போகையில்என் பாடல் கேட்டால்
                   பட்டென்று விழிக்கின்ற ஆற்றல் கேட்பேன்


              அதிராத குரல்கொண்ட நண்பர் கேட்பேன்
                   அளவோடு பேசுகின்ற பெண்கள் கேட்பேன்
              உதிராத மலர்கொண்ட சோலை கேட்பேன்
                   உயிர்சென்று தடவுகின்ற தென்றல் கேட்பேன்
              முதிராத சிறுமிகளின் முத்தம் கேட்பேன்
                    மோகனத்து வீணைகளின் சத்தம் கேட்பேன்
              பதினாறு வயதுள்ள உள்ளம் கேட்பேன்
                    பறவையோடு பேசுமொரு பாஷை கேட்பேன்


               முப்பதுநாள் காய்கின்ற நிலவைக் கேட்பேன்
                   முற்றத்தில் வந்தாடும் முகிலைக் கேட்பேன்
               எப்போதும் காதலிக்கும் இதயம் கேட்பேன்
                    இருக்கும்வரை வழங்கவரும் செல்வம் கேட்பேன்
               தப்பேதும் நேராத தமிழைக் கேட்பேன்
                    தமிழுக்கே ஆடுகின்ற தலைகள் கேட்பேன்
               இப்போது போலிருக்கும் இளமை கேட்பேன்
                    இருந்தாலும் அறிவுக்கு நரைகள் கேட்பேன்


               வானளந்த தமிழ்த்தாயின் பாலைக் கேட்பேன்
                   வைகைநதி புலவர்களின் மூளை கேட்பேன்
               தேனளந்த தமிழ்ச்சங்க ஓலை கேட்பேன்
                    தென்னாழி தின்றதமிழ்த் தாளைக் கேட்பேன்
               மானமகன் குட்டுவனின் வில்லைக் கேட்பேன்
                   மாமன்னன் பாண்டியனின் வேலைக் கேட்பேன்
               ஞானமகன் வள்ளுவனின் கோலைக் கேட்பேன்
                    ராஜராஜன் வைத்திருந்த வாளைக் கேட்பேன்



 


***********

37 கருத்துகள்:

  1. கற்பனைகளும், வார்த்தைகளும் வசப்பட்டால் கலக்கிடலாம்... மெட்டுக்கு பாட்டை! ஆனாலும்...திரைப்பட பாடல் எழுதுவதற்கு டெக்னிக் வச்சிருக்காங்க... அதெல்லாம் வெளியில் சொல்வதில்லை..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///கற்பனைகளும், வார்த்தைகளும் வசப்பட்டால் கலக்கிடலாம்.///

      உங்களுக்கு கற்பனைகளும், வார்த்தைகளும் வசப்பட்டால் கலக்கிடுவீங்க. எங்களுக்கு நல்ல சரக்கும் சோடாவும் கிடைத்தால் கலக்குவோம்ல

      நீக்கு
  2. முரளி,

    வைரமுத்து இது போல நிறைய தடவை அவரது பழையப்பாடல்களை பயன்ப்படுத்தியுள்ளார்.

    சின்ன சின்ன ஆசை - ரோஜா படப்பாடலும் இப்படி முன்னரே எழுதிய ஒன்றே, இதில் என்ன ஆச்சர்யம் என்றால், அந்த பாடலுக்கு ஏ.ஆர் ரஹ்மான் சின்ன வயசா இருக்கும் போதே தூர்தர்ஷனில் ஒன்டர் பலூன் நிகழ்ச்சியில் இசை அமைச்சு பாடிய ஒன்று. படத்தில சிறிய மாறுதலுடன் வந்திருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும்கேள்விப் பட்டிருக்கிறேன். நன்றி வவ்வால்

      நீக்கு
    2. சின்ன சின்ன ஆசை - ரோஜா படப்பாடல்...எந்த கவிதை?

      நீக்கு
    3. சின்ன சின்ன ஆசை - ரோஜா படப்பாடல்...எந்த கவிதை?

      நீக்கு
  3. வணக்கம்
    முரளி(அண்ணா)

    வைரமுத்துவின் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் என்ற தலைப்பில் எழுதிய பதிவு மிக அருமையாக உள்ளது எப்படி எல்லாம் எழுதிய வற்றை எப்படி எலல்லாம் பாடலாக்கியுள்ளார்கள்.... வாழ்த்துக்கள் அண்ணா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. கவிஞர் கண்ணதாசனுக்கு அடுத்தபடியாக சினிமா பாடல்களிலும் அழகான விஷயங்களை சொல்ல முடியும் என்று பல முறை நிரூபித்தவர் வைரமுத்து.

    பதிலளிநீக்கு
  5. புது தகவல். பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. பொன்மாலைப் பொழுது
    புத்தம்புது பூமி வேண்டும்
    போன்ற பாடல்களிலும் இதுபோல் நிறைய வரிகள் சினிமாவுக்காக வெட்டப் பட்டன. பகிர்ந்தமைக்கு நன்றி முரளி

    பதிலளிநீக்கு
  7. இத் திரைப்பாடலின் மூலப் பாடல் பற்றி அறியத் தந்ததற்கு நன்றி!

    இப் பாடல் எனக்குப் பிடித்த பாடல், இம் மூலப்பாடலில் இல்லாத சில
    அடிகள் திரைப்பாடலில் வந்து, என்னைப் புருவத்தை உயர்த்த வைத்தது.
    கவிஞர் வைரமுத்து கவிஞராகவும், நாத்தீகராகவும் தம்மை வெளிக்காட்டும்
    வகையைச் சேர்ந்தவர்.
    ஆனால் இவர்கள் உள் சிந்தனையுள் தெய்வம் குடிகொண்டுள்ளதோ? என ஐயுற
    வைப்பதாகவே சில செயல்பாடுகள் இருக்கும்.
    இத் திரைப்பாடலில் இருந்த "மாயக் கண்ணன் குழலைக் கேட்பேன்,மதுரை மீனாட்சி கிளியைக்
    கேட்பேன்" எனும் அடிகள் சான்று.
    இவர்கள் ஏன்? இப்படி இரட்டை வேடம் போடுகிறார்கள். புரியவில்லை.
    இவர் தலைவர், தாத்தா ,மஞ்சள் துண்டு மகான் போல் இரட்டை வேடம் போடுகிறார்.
    கண்ணதாசன் தன் நாத்தீகச் சட்டையை துணிச்சலுடன் கழட்டி எறிந்தார். இவரால் இன்னும்
    முடியவில்லை.
    2004 சித்திரைப் புத்தாண்டு தினத் தந்தி சிறப்பு மலரென ஞாபகம்; பிள்ளையார்ப் பட்டி பிள்ளையார்
    படத்தின் கீழ் இவர் கவிதை, பிள்ளையாரிடம் புத்தாண்டு அருள் எல்லோருக்கும் வேண்டி எழுதப்பட்டிருந்தது.
    இவர்கள் யாரை முட்டாளென நினைக்கிறார்கள்.
    என் சிறு தமிழறிவுக்கு எட்டக்கூடிய வகையில் எழுதுவதால் கவிஞர் வைரமுத்துவை எனக்குப் பிடிக்கும்.
    ஆனால் இவர் இரட்டை வேட வார்த்தை ஜாலங்கள் ..."எழுதியதைப் பார் - எழுதியவனைப் பார்க்காதே"
    எனும் கூற்றை நினைவு கூரவைக்கிறது.
    அதனால் இவர் ஏற்ற இறக்கத்துடன் மேடைகளில் பேசும் போது; "இந்த மனிசன் மனதுள் என்ன? நினைக்கிறானோ" என எண்ண வைக்கிறது.
    இந்த இரட்டை வேடத்தால் மகா கவிஞன் - சாதாரண மனிசனாகி விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெட்டுக்குப் பாட்டெழுத நுழைந்து விட்டால்
      மென்றமிழில் பலமொழியைக் கலக்க வேண்டும்!
      துட்டுக்குப் பாட்டெழுத வந்து விட்டால் - மனத்
      துணிவெல்லாம் அதன்காலில் விழுந்து போகும்!

      நீக்கு
  8. இம்மாதிரி பாடல் எழுதும் திறமை கேட்பேன், எழுதியதை ரசிக்கும் உள்ளம் கேட்பேன் நல்லதோர் பகிர்வுக்கு நன்றி முரளி.

    பதிலளிநீக்கு
  9. // பின்னிரவில் விழிக்காத தூக்கம் கேட்பேன்
    வெண்ணிலவில் நனைகின்ற சாலை கேட்பேன்// அழகு ...!

    //அளவோடு பேசுகின்ற பெண்கள் கேட்பேன்// இந்த வரியைப்பற்றி பெண்களின் கருத்து என்னவோ ....?

    பதிலளிநீக்கு
  10. கவிப்பேரரசு கவிப்பேரரசுதான், நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  11. //ஆனால் இவர்கள் உள் சிந்தனையுள் தெய்வம் குடிகொண்டுள்ளதோ? என ஐயுற
    வைப்பதாகவே சில செயல்பாடுகள் இருக்கும்.
    இத் திரைப்பாடலில் இருந்த "மாயக் கண்ணன் குழலைக் கேட்பேன்,மதுரை மீனாட்சி கிளியைக்
    கேட்பேன்" எனும் அடிகள் சான்று.
    இவர்கள் ஏன்? இப்படி இரட்டை வேடம் போடுகிறார்கள். புரியவில்லை.//

    கதை நாயகன் நாத்திகன் எனத் தெளிவுபடுத்திக் கொண்டீர்களா?

    பதிலளிநீக்கு
  12. கவிதையும் அதற்குரிய கருத்துக்களும் அருமை
    வைரமுத்து அவர்களின் கவித்திறனை நான் பள்ளியில் படிக்கும் போதே அறிவேன் அப்போதே கவித்துவமாக பேசும் திறன் அவருக்கு உண்டு ...பிறவிக் கவிஞர்

    பதிலளிநீக்கு
  13. அருமையான பாடல்... புதிய தகவலுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  14. கூலிக்காக எழுதும் பாடலில் கொள்கையை தேடுவதை என்னால் ஏற்க முடியவில்லை !
    ஒரிஜினாலிட்டி அரூமை .மேக்அப் போட்ட சினிமா பாடலும் அருமை !
    த .ம 4

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே..
    அற்புதமான பாடல் வரிகள். அதனால் கவிஞர் கண்ணதாசன் அவர்களை கவியரசு என்று சிறப்பித்து விட்டு கவிஞர் வைரமுத்து அவர்களை கவிப்பேரரசு என்று அழைக்கிறதோ எனும் எண்ணம் என்னுள் எட்டிப் பார்க்கிறது. தங்களின் தேடலின், வாசிப்பின் விளைவாக நாங்கள் புதிய தகவல்களை அறிந்து கொண்டோம். மிக்க ,மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.... என்று கேட்டாலும் மனதில் ஒரு வேகம் பிறக்கும்.

    பதிலளிநீக்கு
  17. அருமையான பாடலைச் சுட்டிக் காட்டி இருக்கிறீர்கள் மூங்கில் காற்று.

    பதிலளிநீக்கு
  18. வைரமுத்து போற்றத்தக்க ஆளுமை. இளையர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் இவரிடம் ஏராளம் உண்டு.

    பதிலளிநீக்கு
  19. lதங்கள் ஆய்வு மிகவும் நன்று! சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்வதும் ஏற்புடையதே!

    பதிலளிநீக்கு
  20. //தங்கத்தைச் செங்கல்லாய் காணக் கேட்பேன்//

    :))))))

    மூலப் பாடலையும் பகிர்ந்தமைக்கு நன்றி முரளி.....

    சத்தம் இல்லாத பாடல் எனக்கும் பிடித்த பாடல்!

    த.ம. 10


    பதிலளிநீக்கு
  21. ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கிறேன்.ஆனால் கவிதைய படித்ததில்லை. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  22. Oh!...mikka nanry. for sharing...
    Eniya vaalththu.....
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
  23. சூழ்நிலைக்கு ஏற்ப தன்னுடைய கவிதைகளைப் பாடலில் பயன்படுத்திக் கொள்வதில் எந்த்த் தவறும் இல்லை..அடுத்தவர் கவிதையைத் திருடி எழுதினால்தான் தவறு...வைரமுத்து பாமரனும் ரசிக்கும் ஒரு அற்புதமான கவிஞன்...

    பதிலளிநீக்கு
  24. அருமையான கவிதை... பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. நாத்திகர்கள் தெய்வங்களை கவி புனையக் கூடாதா? அழகியலில் எது தென்பட்டாலும் கவிக்குள் கொண்டு வரலாம். அதற்கு மதம் கோட்பாடு சித்தாந்தம் கிடையாது. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, ஆனால் கோவில்களுக்கு போவேன், காற்று வாங்கவும், ரசிக்கவும்,.. சமணரான இளங்கோ வைதிக மற்றும் நாட்டுப்புற தெய்வங்களையும், கிறித்தவரான வீரமாமுனிவர் வைதிக தெய்வங்களையும், முஸ்லிமான உமறுப்புலவரும் இந்து மத சாராம்சங்களை உள்வாங்கி பாபுனைந்துள்ளனரே. அப்போ எல்லோரும் ரெட்டை வேடதாரிகளா? அழகியல் எங்குள்ளதோ அதைக் கவிக்குள் கொண்டு வரலாம், அதுவும் சினிமா போன்ற அனைவரும் ரசிக்கும் ஊடகத்தில் தாராளமாய் கொண்டுவரலாம். சுதந்திர நாட்டில் கடவுளை நம்பிக்கொண்டு மறுக்க வேண்டிய அவசியம் இல்லை, பலரும் கடவுளை ஐயம் கொண்டும் வெளியில் நம்புவதை போல நடிப்பவர்கள் உண்டு, குடும்பத்துக்காக! சமூகத்துக்காக..

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895