என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 12 ஜூலை, 2020

காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 3


பகுதி 3     

       நெது.சு. காமாரஜரைக் காணத் தயங்கியதற்கு காரணமும் இருந்தது. காமராசருக்கு முன் இராஜாஜி முதல் அமைச்சராக இருந்தார். தொடக்கக் கல்வித் திட்டத்தில் மாணவர்களை அதிக அளவில் பள்ளிக்கு வரவழைக்க வேண்டும் என்பது இராஜாஜியின் நோக்கமாக இருந்தது. மாணவர்கள் வருகை குறைவாக இருப்பதற்குக் காரணம் ”முழுநேரமும் பள்ளிக்கு வருவதால் வீட்டு வேலைக்கு பிள்ளைகள் உதவமாட்டார்கள் என்று பெற்றோர் நினைப்பதுதான். அதனால்தான் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் விரும்புவதில்லை என்று ராஜாஜி கருதினார். அதற்காக பள்ளிகளில் அரைநாள் பள்ளியில் படிப்பு, அரைநாள் பெற்றோருடன் வேலை என்று வைத்தால் இச்சிக்கல் தீரும் என்று நம்பினார். ஒரு பாதி மாணவர்கள் காலையிலும் இன்னொரு பாதி மாலையிலும் வரவேண்டும். வரைவுத் திட்டத்தை கொண்டுவாருங்கள் என்று ஆணையிட்டு விட்டார்.
  அப்பணியை நெ.து.சுவிடம் ஒப்படைத்தார் இயக்குநர். நெ.துசு, இத்திட்டம் சரியல்ல குலக்கல்வி பயில மறைமுகமாக ஊக்குவிப்பது போலாகும் எனவும் இதனால் மாணவர் வருகை அதிகரிக்காது எனவும் குறிப்பு அனுப்பினார்.
  இராஜாஜி நெ.து.சுவை அழைத்து இந்தத் திட்டத்தை ஏற்பதில் உங்களுக்கு தயக்கம் இருக்கும் போல் தெரிகிறது அதனால் நான் வேறு தனி அலுவலரை நியமித்துக் கொள்ளட்டுமா?. அவர் திட்டத்தைப் பற்றி ஊர் ஊராகச் சென்று பேசி திட்டத்திற்கு ஆதரவு திரட்டுவார் என்று கூறினார்.
   தான் சொல்லும் பணியை ஒரு அலுவலர் செய்யத் தயங்கினால் கடுமையாக கடிந்து கொள்வதோடு உடனே அவரை மாற்றி விட்டு சொல்வதைக் கேட்கும் ஒருவரை நியமிப்பது அரசியலில் சகஜம். இராஜாஜி அவரையே அழைத்து கண்டிப்போ கடிசொல்லோ கூறாமல் அவரிடமே கருத்து கேட்டார்.

  “வேண்டாம். அரசு திட்டத்தில் உறுதியாக இருப்பின் அதனை நானே செய்கிறேன்” என்று ஒப்புக் கொண்டார். திட்டம் ரகசியமாக தயாரிக்கப்பட்டு அவசரம் அவசரமாக சுற்றறிக்கை வெளியிடப் பட்டது. பலத்த எதிர்ப்பு கிளம்பிய போதும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. காங்கிரசில் இருந்தாலும் காமராசரும் குலக் கல்வியை ஊக்குவிக்கும் இத் திட்டத்தை கடுமையாக எதிர்த்தார். ”இந்தப் பைத்தியக்காரத் திட்டத்தை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை” என்று முழங்கினார் காமராசர்.
    ஆனால் நெ.து.சு வை கூட்டங்களில் பேசி ஆதரவு திரட்டும்படி கேட்டுக் கொண்டார். இராஜாஜி. இதனுடைய சாதகமான அம்சங்களை மட்டும் பேசி சமாளித்தார் நெ.து.சு. இவற்றை காமராஜர் அறிந்திருந்தார்
   எதிர்ப்பு அதிகரித்து பதவி விலக வேண்டிய சூழ்நிலை ராஜாஜிக்கு உருவானது. காமராசர் முதலமைச்சர் ஆனதும் இத்திட்டத்தை கைவிட்டதாக அறிவித்தார். நிம்மதிப் பெருமுச்சு விட்டார் நெ.து.சு.
   தன்னை எதிர்த்து யாரை வேட்பாளராக நிறுத்தினாரோ அவருக்கே அமைச்சர் பதவி அளித்து அழகுபார்த்தார் காமராசர். ஆம்! சி.சுப்ரமணியம் கல்வி அமைச்சரானார். 

   இப்படிப் பலவாறாக சிந்தித்துக்கொண்டு காமராசரை சந்தித்தார் நெ.துசு. "குலக் கல்விமுறைக்கு நீ எப்படி ஒப்புக் கொண்டாய்?. ஏன் பிரச்சாரம் செய்தாய்" என்று கேட்கப் போகிறார் என்று நினைத்தார். ஆனால் அதைப் பற்றி எதுவும் கேட்கவில்லை காமராசர்
   அவர் கேட்டது பள்ளி தொடங்குவதற்கான விதிமுறைகள் பற்றி.. வட சென்னையில் விருதுநகர் நாடார் உறவின் முறையினர் தொடக்கப்பள்ளி நடத்தி வந்தனர். உயர்நிலைப் பள்ளி தொடங்குவதற்காக அனுமதி கோரி காமராஜரை தனிப்பட்ட முறையில் அணுகியுள்ளனர்.
    உயர்நிலைப் பள்ளிகள் தொடங்குவதற்கு கட்டிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருந்தால் 11 ம் வகுப்பு வரை நேரடியாக அனுமதி அளிக்கப் படும். இல்லையெனில் 6,7,8 வகுப்புகளுக்கு மட்டும்
( அப்போதெல்லாம் 6, 7. 8 வகுப்புகள் ஃபர்ஸ்ட் ஃபார்ம், செகண்ட் ஃபார்ம், , தேர்ட் ஃபார்ம் …… என்று அழைக்கப்பட்டது)
”இந்தப் பள்ளிக்கு எப்படி அனுமதி வழங்கப் போகிறீர்கள்?” கேட்டார் காமராசர்.
விதிகளின்படி கட்டிடம் கட்டும் வரை தற்காலிகமாக மூன்று படிவங்கள் மட்டுமே அனுமதி வழங்கமுடியும் தாங்கள் விரும்பினால் அவர்கள் கோரியுள்ள படி 4 படிவங்களுக்கும் அனுமதி வழங்குவதாக இயக்குநர் தெரிவிக்கச் சொன்னார் என்றார் நெ.து.சு.
“அவர்கள் எனக்கு வேண்டியவர்கள்தான். ஆனால் விதிகள் பொதுவானவை. அவர்கள் கட்டுப்பட்டால்தான் மற்றவர்களை கட்டுப்படுத்த முடியும். சரி மூன்று படிவங்களுக்கு மட்டும் அனுமதி அளித்தால் போதும். இயக்குநருக்கு சொல்லி விடுங்கள்” என்று அனுப்பி விட்டார்
   தகவலைக் கேட்ட இயக்குநர், ” விதிமுறைகளை எல்லாம் ஏன் ஒப்பித்தாய். கேட்டபடி அனுமதி கொடுக்கிறோம் என்று சொல்ல வேண்டியதுதானே! என்று நெ.து.சுவைக் கோபித்துக் கொண்டார்

எதிர்பாராவிதமாக மறுநாளே அப்பள்ளியின் செயலாளர் மூன்று படிவங்கள்(6,7,8) வகுப்புகள் மட்டும் கொடுங்கள் என்று கடிதம் கொடுத்தார். அவ்வாறே அனுமதி வழங்கப் பட்டது.

காமராசர்தான் பள்ளிச் செயலாளரிடம் இதுபோல கடிதத்தைக் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். தொலைபேசியில் ஒரு வார்த்தை சொன்னாலே அனுமதி வழங்கத் தயாராக இருந்த போதும் உண்மையை நிலையை அறிந்து விதிகளுக்கு மதிப்பளித்த பெருந்தலைவரின் மாண்பை என்னென்பது!

பி.ஏ.கே பழனிச்சாமி மேல்நிலைப்பள்ளி என்ற பெயரில் தொடக்கப் பள்ளியுடன் இணைந்து இன்றும் வட சென்னையில் சிறப்பாக இயங்கி வருகிறது இப்பள்ளி.

இந்த நேரத்தில் இயக்குநர் பதவி காலியாகும் சூழ்நிலை ஏற்பட்டது, துணை இயக்குநர்கள் எம்.டி.பால் மற்றும் நெ.து.சு இருவரின் பெயரும் பரிசீலனையில் இருந்தது.

பெரியார் உள்ளிட்ட பலர் நெ.து.சு வரவேண்டும் என்று விழைந்தனர். டாக்டர் எம்.டி.பால் அவர்களுக்கும் பலமான பரிந்துரை இருந்தது.

அவர்கள் காமராஜரிடம் சொன்னது இதுதான் ” நெ.து.சு ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை நிறைவேற்ற முயன்றார். அத்திட்டத்தை கூட்டங்களில் ஆதரித்துப் பேசினார். ஆனால் பால் எந்தக் கூட்டத்திலும் பேசியதில்லை எனவே அவரை இயக்குநராக நியமிப்பது நல்லது”
”சரி யோசிப்போம்” என்றார் காமராசர்

காமராசரின் முடிவு என்ன?
யார் வென்றார்கள்?

-----------------------------------------------------------------------------

6 கருத்துகள்:

  1. யாரை நியமித்தால் பணி சிறக்கும், நாடு செழிக்கும் என்று அறிந்து, தன்னலமற்றுப் பணியாற்றியக் காமராசரைப் போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
  2. எவ்வளவு நேர்மையான சிந்தனை...  தீர்க்கமான பார்வை..

    பதிலளிநீக்கு
  3. அருமையான தகவல்களைக் கொண்ட தொடராக அமைந்துள்ளதறிந்து மகிழ்ச்சி.
    எடுக்கப்பட்ட முடிவை அறியக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. பெருந்தலைவரின் திட்டமிடல் ஒளிர்கிறது...

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. தகவல்கள் அறிந்தேன் நன்று

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895