என்னை கவனிப்பவர்கள்

சனி, 11 ஜூலை, 2020

காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 2


காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு பகுதி-1

காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 2


  நாம் சில இடங்களுக்கு அடிக்கடி  செல்வோம் ஆனால் அந்த இடத்தின் சிறப்பு தெரியாது. அங்கே சில குறிப்புகள் அவற்றை உணர்த்தும். தடம் பதித்தவர்களின் தடயங்கள் இருக்கும். அவற்றை கவனியாமல் சர்வசாதரணமாகக் கடந்து போயிருப்போம். சென்னையில் ஒவ்வொரு பழைய கட்டடத்திலும் ஏதோ ஒரு வரலாறு ஒளிந்துள்ளது. சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தின் அருகில் ஒரு சென்னை பள்ளியைக் காணலாம்  (கார்ப்பபேரஷன் பள்ளிகள்  சென்னைப் பள்ளிகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கார்ப்பரேஷன் பள்ளி என்று கூறுவது தாழ்வாகக் கருதப்படுவதால் இந்த மாற்றம்.) இதில் ஒரு  கல்வி அலுவலகம் உள்ளது. உண்மையில் அது ஒரு பழைய உருது பெண்கள்  தொடக்கப் பள்ளி. இப்போது அந்தப் பள்ளியில் மாணவர்கள் இல்லை. இன்னொரு  தொடக்கப் பள்ளியும் இங்கே இருக்கிறது.
         அந்தக் கட்டிடத்தில் பள்ளி திறக்கப்பட்டபோது  பதிக்கப்பட்ட கல்வெட்டைத்தான் கீழே படத்தில் பார்க்கிறீர்கள்.


    
நான் முதன் முதலில் அங்கு சென்ற போது கவனித்தது   அந்தக் கல்வெட்டைத்தான். 1949 இன் இறுதியில் திறக்கப் பட்டிருந்த அந்த பள்ளியில் கல்வெட்டில் இருந்த இரண்டு பெயர்கள் என்னைக் கவர்ந்தன. அதில் ஒருவருக்கு அப்போது  தெரிந்திருக்காது தனக்கு ஒரு பெருந்தலைவரின் கடமையை- கனவை நிறைவேற்றும் வாய்ப்பு இன்னும் சில ஆண்டுகளில் கிடைக்கப் போகிறது என்று. (இன்னொருவர் பற்றிய தகவல் பதிவின் இறுதியில்)
       இங்கு ஆசிரியர்கள் அடிக்கடி வருவார்கள். அவர்களிடம் நான் கேட்பதுண்டு. இந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள பெயர்களில் யாரைப் பற்றியாவது  நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா என்று.  குறிப்பாக வட்டமிடப் பட்டுள்ளவரின் பெயரைக் காட்டி, படியுங்கள் என்பேன். எந்தவித சலனமும் இன்றி N.D.SUNDARAVADIVELU என்று படிப்பார்கள். ”இவரைப் பற்றி ஏதாவது தெரியுமா”
அப்போ இருந்த  .  ன்னுபோல இருக்கு சார். “ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார்கள்.
          பல ஆண்டுகள் கார்ப்பரேஷன் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களுக்குக் கூட கர்மவீரர் காமராஜரின்  மாபெரும் திட்டத்திற்கு  உறுதுணையாக நின்ற அலுவலரைப் பற்றித் தெரியவில்லை.   தெரிந்து கொள்ளவும் ஆர்வம் இல்லை. இத்தனைக்கும் இவரது கட்டுரைகள் தமிழ்ப்பாடத்தில்கூட இடம் பெற்றிருந்தன.
       இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் நெ.து.சு என்று அன்புடன் அழைக்கப் படும் நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள்தான் காமராசரின் கனவை நனவாக்க பாடுபட்ட அலுவலர் என்று
  கல்வித் துறையில் எத்தனையோ அதிகாரிகள் பணியாற்றி இருந்தாலும் இவரைப் போல தடம் பதித்தவர்கள் அரிது.     அதிகாரிகள் மனம் வைத்தால் ஒரு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தவும் முடியும். இக்காலத்தைப் போல் அல்லாமல் பெரும்பாலான உயர் அதிகாரிகள் சிலர் முழுக்க முழுக்க  அரசின் கைப்பாவையாக செயல்படாமல் குற்றங்குறைகளை துணிச்சலாக எடுத்துக் கூறுபவர்களாகவும் இருந்தனர்.  அரசின் விருப்பப்படி செயல் பட்டாலும் தங்களின் கருத்தையும் பார்வையையும் வெளிப்படுத்தத் தயங்கியதில்லை.  
        ஆனால் அரசனுக்கு கத்கரிக்காய் பிடிக்கும்போது,அது எவ்வளவு அழகு.என்ன சுவை! காய்களில் கத்தரிதான் ராஜா! ஆஹா! அதன் காம்பும் கிரீடம் போல அல்லவா இருக்கிறது என்றும் அரசனுக்கு கத்தரிக்காய் பிடிக்காத போதுசீ!சீ! இது என்ன கத்தரிக்காய் இப்படி இருக்கிறது.  கோமாளிக்கு கொம்பு முளைத்தது போலவே இருக்கிறதே அதன் காம்பு. காரல் சுவை சகிக்க வில்லைஎன்று சொல்லும் அதிகாரிகள் அக்காலத்திலும் இருந்திருக்கிறார்கள்.
      நெ.து.சு  முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். இவர்களில் பலர் சாதிப்பற்று உள்ளவர்களாக இருந்தனர். ஆனால் நெ.து சு சாதி மறுப்பாளராக இருந்தார். இவர் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.  இசைவேளாளர் மரபைச் சேர்ந்த நன்கு படித்த காந்தம்மாள் என்பவரை குடும்பத்தினரின் எதிர்ப்புக் கிடையில் திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்தை தந்தை பெரியார் தலைமை தாங்கி நடத்தினார்.
            பி.டி.ஓ வாக பணியில் சேர்ந்த நெ.துசு. அப்பணியை விட சம்பளம் குறைவான கல்வித் துறைப் பணியையே விரும்பினார்.  தற்போதைய ஆந்திர மாவட்டத்தின் ஒரு பகுதியில் மாவட்டக் கல்வி அலுவலராகக் கல்விப் பணியைத் தொடங்கி (அப்போது அதுவும் சென்னை மாகாணம்)  பின்னர் பல்வேறு இடங்களில் பணியாற்றி சென்னை  மாநகராட்சியில் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். அக்காலக் கட்டத்தில் திறக்கப்பட்ட பள்ளியின் கல்வெட்டுதான்  படத்தில் நீங்கள் பார்த்தது, காமராஜரைப் பற்றி எழுதுவதை விட்டு இவரைப் பற்றி ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கலாம்.
      மதிய உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுதும் விஸ்தரிப்பதற்கு  முன்பே சென்னையில் சில மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவு  வழங்கப் பட்டுக் கொண்டிருந்தது . அதை வெற்றிகரமாக செயல்படுத்தியதில் நெ.து.சுவுக்கு முக்கியப் பங்கு உண்டு. பதவியில் இல்லாத போதுகூட இதை காமராஜர் கவனித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
         விரைவில் கல்வித் துறை துணை இயக்குநர் பதவி அவரை அடைந்தது. அரசியல் சூழ்நிலைகள் காங்கிரசுக்குள் இரண்டு பிரிவு ஏற்படுத்தியது.  ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டது.காமராசர் முதல்  அமைச்சரானார்.
   கொஞ்ச நாட்களில் காமராசர் கல்வித்துறை இயக்குநர் கோவிந்தராஜுலுவை தொலைபேசியில் அழைத்து நெ.து.சுவை  தன்னை சந்திக்கும்படி கூறினார். தானே வருவதாகக் கூறியும் நீங்கள் வேண்டாம் துணை இயக்குநரையே அனுப்புங்கள் என்றார். இயக்குநர் நெ..துசுவிடம் தகவலைத் தெரிவித்து உங்கள் மேல் முதல்வருக்கு கோபம் இருக்கலாம் என்று எச்சரித்து அனுப்பினார்.  இயக்குநரைத் தவிர்த்து முதல்வர் தன்னை ஏன் அழைத்ததன் காரணம் தெரியாமல் தவித்தார். தர்மசங்கடமாகவும்  உணர்ந்தார். அவரது தயக்கத்திற்கு  ஒரு முக்கியக் காரணம் இருந்தது

அது என்ன நாளை பார்க்கலாம்?


---------------------------------------------------------------------------------------------

கொசுறு: கல்வெட்டில் நீங்கள் பார்த்த இன்னொரு முக்கியப் பிரமுகர் ’சர் முகம்மது உஸ்மான்’ சென்னை தி.நகரில் உள்ள புகழ்பெற்ற  உஸ்மான் ரோடு பெயரில் உள்ள உஸ்மான் இவர்தான். சென்னை மாநகராட்சி தலைவராக விளங்கினார். அப்போது மேயர் பதவி இல்லை
------------------------------------------------------------------------------------------------------------

காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு பகுதி-1


6 கருத்துகள்:

  1. நெ து சு அவர்கள் பற்றியே தனியாக எழுதலாம் போல..

    பதிலளிநீக்கு
  2. தெரிந்து கொள்ளவும் ஆர்வம் இல்லை. இத்தனைக்கும் இவரது கட்டுரைகள் தமிழ்ப்பாடத்தில்கூட இடம் பெற்றிருந்தன.......இதுபோன்ற பல நபர்களை நான் பார்த்துள்ளேன். என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
  3. பல ஆண்டுகள் கார்ப்பரேஷன் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களுக்குக் கூட கர்மவீரர் காமராஜரின் மாபெரும் திட்டத்திற்கு உறுதுணையாக நின்ற அலுவலரைப் பற்றித் தெரியவில்லை. தெரிந்து கொள்ளவும் ஆர்வம் இல்லை

    வேதனை
    இன்றைய நிலை இதுதான்

    பதிலளிநீக்கு
  4. நன்று அடுத்த பகுதி செல்கிறேன்.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895