தமிழ்மண தரவரிசைப் பட்டியலில் முன்னிலைப் பதிவர்களில் ஒருவரான வெங்கட் நாகராஜ் 'கவிதை எழுதுங்க' என்று சொல்லி ஒரு அழகான ஓவியத்தை வெளியிட்டார். அந்த ஓவியத்திற்கு பொருத்தமான கவிதை எழுதும்படி கூறி இருந்தார். சும்மா எழுதிப் பார்க்கலாமே என்று நானும் முயற்சி செய்தேன். படம் ஒவியம் சரித்திரப் பின்னணியில் இருப்பதால் வெண்பா வடிவத்தை முயன்றிருக்கிறேன்.
(புலவர் இராமானுசம் ஐயா!,, கவிஞர் கி.பாரதிதாசன் ஐயா,கவியாழி கண்ணதாசன் ஐயா!,அருணா செல்வம், உள்ளிட்ட மரபுக் கவிஞர்கள் பலரும் மன்னிப்பார்களாக!)
சேற்றில் முளைத்திட்ட செந்நிறத் தாமரை
ஆற்றில் முளைத்ததே ஆச்சர்யம்! - ஆங்கிருந்த
மீனிரண்டை காணவில்லை தேடினேன் -உன்முகத்தில்
நானிரண்டை கண்டேனே பார்!
தூரெடுத்த கேணியிலே ஊறுநீர்போல் செந்தமிழ்
சாறூறும் என்நெஞ்சில்; சந்தக் கவிசொல்வேன்
நீர்வீசி தூய்மைதான் செய்வாயா? ஆமென்றால்
சேறுபூசிக் கொள்வேன் இனி
ஆடும் மயிலழகு அற்பம்தான் உன்முன்னே
பாடும் கவிஞன்நான் பகர்கின்றேன்-தீண்டாதே
ஓடும் நீருறைந்து போகும்; அதனாலே
வாடும் பயிர்கள் அறி.
**************************************************************************************