என்னை கவனிப்பவர்கள்

நூல் வெளியீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூல் வெளியீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 23 அக்டோபர், 2014

பாலகணேஷ் -சரிதாயணம் 2-நூல் வெளியீடு



   ஏற்கனவே பிரபல எழுத்தாளர்களாக இருந்து பதிவுலகத்திற்கு வருபவர்கள் உண்டு. பதிவுலகத்தில் இருந்து தொடங்கி எழுத்தாளர்களாக மிளிர்பவர்கள் உண்டு. அந்தப் பட்டியலில் இரண்டாவது வகையில் பாலகணேஷும் இடம் பிடித்திருக்கிறார்.  

   அன்று (12.10.2014)இரண்டு நிகழ்ச்சிகள் . ஒன்று இலக்கியவீதி இனியவன் அவர்களின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா காலையில்; மாலையில் மின்னல் வரிகள் பாலகணேஷ் எழுதிய சரிதாயணம் 2 வெளியீட்டு விழா. இரண்டிலும் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் எதிர்பாரா விதமாக முதல் நிகழ்ச்சிக்கு செல்ல முடியவில்லை. அப்போதுதான் வீட்டுக்கு வந்த நான் உடனே டிஸ்கவரி பேலசுக்கு புறப்பட்டேன்.

     சரிதா நாயகன் சிரித்த முகத்துடன் வரவேற்க ஏற்கனவே சீனு ஸ்கூல் பையன் மெட்ராஸ் பவன் சிவகுமார் , கே.ஆர்.பி செந்தில், சமீரா,கோவை ஆவி, பட்டிக்காட்டான் கீதா  ஆகியோர் முன்னதாக ஆஜர் ஆகி இருந்தனர். கேபிள் சங்கர் தமிழக மின்சாரம் போல வந்தது தெரியாமல் புறப்பட்டார். சிறப்பு விருந்தினர் ஆதிரா முல்லை, பேராசிரியர் கமலம் செல்வம் எழுத்தாளர் முகில் இவர்களை முதல் முறையாக சந்திக்கும்  சந்தர்ப்பம் கிடைத்தது .தொகுப்பாளராக அவதாரம் எடுத்த சீனு, வரவேற்புரை ஆற்ற  ஆவியை அழைக்க ஆவி சுருக்கமாக வரவேற்பு நல்கினர்.
சீனு கொஞ்சம் தயக்கத்துடன் தொகுப்புரைக்கத் தொடங்கினாலும் போகப் போக அனைவரையும் கவர்ந்து விட்டார். 
    சேட்டைக்காரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தும் பொன்னான வாய்ப்பை எனக்களித்தார் கணேஷ்.
கீதா அவர்கள் ஒவ்வொரு நிகழ்வையும் உற்சாகத்துடன்  புகைப்படம் எடுத்தார்.

  பாலகணேஷின் குருநாதரான சேட்டைக்காரன் அவர்கள் நூலை வெளியிட எழுத்தாளர் முகில் பெற்றுக் கொண்டார், சிறப்பு விருந்தினர்கள் முகில், ஆதிரா முல்லை,கமலம் சங்கர் ஆகியோர்  கணேசனின் திறமைகளை வெகுவாகப் புகழ்ந்தனர் . சேட்டைக்காரன் நகைச்சுவை ததும்ப பேசினார். பெண்களை கேலி செய்யும் விதமாக நகைச்சுவைக் கதைகள் அமைப்பதன் காரணத்தை சொன்னார். சேட்டைக்காரன். எல்லா வயதினரையும் கவரக்கூடிய திறமை பெற்றவர் என்பதை பலருடைய பேச்சுக்களில் இருந்து உணர முடிந்தது.

ஆதிரா முல்லை அவருடன் போட்டி போட்டுக் கொண்டு எழுதியதைக் குறிப்பிட்டார்.கணேஷைப் பலவாறாகப் புகழ்ந்தாலும் "கண்டனன் கற்பினுக்கணியை கண்களால்" என்ற கம்பராமாயணப் பாடல்வரிகளுக்கு கணேஷ் அளித்த விளக்கத்தை கண்டு தான் வியந்து நின்றதை விவரித்தார்.

   "அகம் புறம்;அந்தப் புறம்" என்ற தொடரை குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிப் புகழ்பெற்ற  முகில் தனது எழுத்தின் வெற்றிக்காண காரணங்களில் ஒன்று அதை லேசான நகைச்சுவையுடன் சொன்னதுதான்  என்றார்

   பாலகணேஷின் சித்தியும் பேராசிரியையுமான  கமலம் சங்கர் பாலகணேஷின்  பால பருவத்தை நினைவு கூர்ந்து மின்னல் வரிகளை ஸ்லாகித்தார். நகைச்சுவை மட்டுமல்லாது மற்ற வகைக் கதைகளையும் எழுதவேண்டும் என்று தன் விருப்பத்தை தெரிவித்தார். இந்தப் புகழ் எல்லாம் இன்னும் சற்று முன்னதாக வந்திருக்கலாம் என்று ஆதங்கப் பட்டார். ஆவர் ஆதங்கப் பட்டார். நான் ஆச்சர்யப் பட்டேன். இவ்வளவு திறமை உடைய கணேஷ் இவ்வளவு நாள்  நாள் எப்படி பிரபலமடையானால் போனார் என்று

     சிரிப்பானந்தாவின் சிரிப்பரங்கம் நிகழ்ச்சியை கேள்விப் பட்டிருந்தாலும் இதுவரை அவரை பார்த்ததில்லை. அவரைப் பற்றி பாலகணேஷ் சொன்னது நறுக். நாமெல்லாம் ஜோக் சொன்னால் சிரிப்போம். அவரோ ஜோக் என்று சொன்னாலே சிரிப்பார். அன்றைய சிரிப்பரங்கம் நிகச்சி முடிந்தபின் வந்ததால் தாமதமாக வந்தாலும் தன பேச்சால் அனைவரையும் சிரிக்க வைத்ததார் சிரிப்பானந்தா . எல்லா வகைக் கதைகளும் எழுத வேண்டும் என்ற மற்றவர்களின் விருப்பத்திற்கு மாறாக, அவர் நகைச்சுவைக் கதைகளையே அதிகம் எழுத வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் சிரிப்பானந்தா.  'கல்யாண சமையல் சாதம்' என்ற  பாடலைப் பாடி சிரித்து ஆடிக் காட்டி அங்கிருந்தவர்களையும்  கூடவே  பாடி ஆடி  சிரிக்கச் செய்தார். அவரது நிகழ்ச்சிக்கு ஒரு முறையாவது செல்லவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டார்

    சிறப்பு விருந்தினர்களைத் தவிர கலந்து கொண்ட பலருக்கும் பாலகணேஷ் அவர்களைப் பற்றி பேச வாய்ப்பு கிடைத்தது. அடியேனும் இரண்டொரு வார்த்தைகள் பேசினேன். பதிவர் ஸ்கூல் பையன் வயது வித்தியாசமின்றியும் புதியவர் பழையவர் வேறுபாடு இன்றியும் பழகும் தனது குருநாதரின் குணத்தை போற்றினார். அவருடன் தனது  குடும்பத்தினரின் நெருக்கத்தை உணர்வு பூர்வமாக உரைத்தார்.

     பிரபல பதிவர் கே.ஆர்.பி செந்தில் 'நான் இருக்கிறேன் அம்மா' கதையுடன் தனது சொந்த வாழ்க்கையின் நிகழ்ச்சியை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். சரிதாயணக் கதைகளை விட இந்த ஒரு கதையின் மூலம்  படித்த அனைவரின் மனதிலும் இடம் பெற்றிருந்தார்.

    கண்ணதாசன் புகழ் பரப்புவதையே தன தவமாகக் கொண்டிருக்கும் கணேஷின் நண்பர் கவிரிமைந்தன் அவர்கள் கணேஷை மனமார வாழ்த்தினார் . சில சுவையான சம்பவங்களையும் குறிப்பிட்டார்.

  விழாவின் நிறைவுப் பகுதியில் மெட்ராஸ்பவன் சிவகுமாரை வலுக்கட்டாயமாக பேச அழைக்க , இயல்பான பேச்சால் சேட்டைக்காரன் , பாலகணேஷ் இவர்களைப் பாராட்டியதோடு  தான் "பன்னிக்குட்டி ராமசாமி" யின் ரசிகன் என்பதை குறிப்பிடத் தவறவில்லை.
நிறைவாகதானாக முன்வவந்து பேசினார் சமீரா , இளம் பதிவர்.எத்தனை முறை படித்தாலும் சுவை குன்றாத எழுத்து சேட்டைக்காரனுடையது என்றார்  சமீரா. தான் மின்னல் வரிகளின் தீவிர வாசகர் என்றும் மகள் போல பாசம் காட்டுபவர் கணேஷ் என்றும் குறிப்பிட்டார் .
நிறைவாக பாலகணேஷ் அனைவருக்கும் நன்றி கூற நூல் வெளியீடு சிறப்பாக நிறைவடைந்தது .

   சரிதாயணம் 2 வெளியாவதை நான் ஆவலுடன் எதிர்பார்த்தேன். காரணம் எனக்கும் சரிதாயணத்துக்கும் ஒரு தொடர்பு இருந்ததது.  எம்.பி ஆகிறாள் சரிதா என்ற கதையை அதில் சேர்ப்பதாக கணேஷ் அளித்திருந்த உறுதிமொழிதான். அந்தக் கதையை பாலகணேஷ் பாணியில் நான் முயற்சி செய்து அவருக்கு அனுப்ப அதை செப்பனிட்டு பெருந்தன்மையுடன் தனது வலைப்  பதிவில் வெளியிட்டு  பெருமைப் படுத்தினார். தான் அளித்த உறுதிமொழியின்படி இப்போது இந்த நூலிலும் இணைத்துள்ளார் எபதை அறிந்த போது மகிழ்ச்சி அடைந்தேன். இதே போல் அவரது மானசீக சிஷ்யன் சீனு எழுதிய சரிதாயணக் கதையும் இதில் இடப் பெற்றுள்ளதாகஅறிகிறேன்.

  இந்தப் புத்தகத்தை வித்தியாசமான முறையில் வடிவமைத்திருகிறார்  பாலகணேஷ் . புத்தகத்தின் இரண்டு அட்டையுமே முகப்பு பக்கமாய்க் கொள்ள முடியும் . ஒரு புறம் நகைச்சுவை மறுபுறம் வேறு வகைக் கதைகள். எதை விரும்புகிறோமோ அதை அதை படிக்கலாம். இதில் உள்ள சரிதாயணக் கதைகளை ஏற்கனவே படித்திருந்தாலும்  சீரியஸ் கதைகளில் "நான் இருக்கிறேன் அம்மா" சிறப்பு விருந்தினர் மட்டுமல்ல படித்த  அனைவரும் பாராட்டிய கதையாக  அமைந்தது என்பதில் கணேஷ் காலர் தூக்கிவிட்டுக் கொள்ளலாம் .

  பாலகணேஷ் அவர்களின் தாயார் நிகழ்ச்சிக்கு வந்திருந்தது சிறப்பு. அத்தனை பேரும்  தன் மகனைப் புகழ்ந்ததை கண்ணாரக் கண்டு காதாரக் கேட்ட அந்த தாய்க்கு
 இதை விட வேறெதுவும் எனக்கு சொல்லத் தெரியவில்லை

"அம்மா ! நீங்கள்,  ஈன்ற பொழிதினும் பெரிதுவக்கலாம்"


***************************************************************************** 
படித்து விட்டீர்களா 

பாவம் செய்தவர்கள்



திங்கள், 21 ஜனவரி, 2013

பட்டிக்காட்டாரிடம் பதிவர்கள் கோரிக்கை.

  சைதப்பேட்டையில அலுவலக மீட்டிங் ஒண்ணு அட்டென் பண்ணிட்டு  அப்படியே பதிவர்கள் வராங்கன்னு கேள்விப்பட்டு புத்த கண்காட்சிக்கு விசிட் பண்ணேன்.

நூல் வெளியிட்ட பதிவர்களை
”அஞ்சிநடுங்கிட அரண்டு புரண்டிட
வாய் விட்டலறி மதிகெட்டோட”
     வைக்கணும்னு சதி திட்டத்தோட வந்திருந்த மெட்ராஸ் பவன் சிவகுமார் முதல்ல கண்ணுல பட்டார். தூரமா இருந்தாலும்  போன் பண்ணி கலாய்க்கறாங்களேன்னு இந்த முறை கூடவே இருந்தா தப்பிச்சிடலாம்னு  ஆரூர் மூணாவையும் பாதுகாப்புக்கு வச்சுக்கிட்டு பட்டிக்காட்டாரும் பக்கத்திலேயே இருக்க டிஸ்கவரி வாசல்ல நிறைய பதிவர்கள் ஒண்ணு கூடிட்டாங்க. புலவர் ஐயாவும் வந்திருந்தாரு.

   பெண் பதிவர்கள் பத்மா,தமிழரசி,சமீரா,தென்றல் சசிகலா,வெண்ணிலா வந்திருந்தாங்க இதுல  சசிகலாவையும், சமீரவையும் தவிர மற்றவங்களை முதன் முறையா பாக்கறேன். யார் பின்னாடியோ நின்னு தலைய மட்டும் நீட்டி எட்டிப் பாத்துக்கிட்டுருந்தவரை இவருதான்  "அஞ்சா சிங்கம்" ன்று அறிமுகம் செஞ்சார் ஜெய். இப்படி ஒளிஞ்சிக்கிட்டு இருக்கறதைப் பாத்தாலே தெரியுதே  அஞ்சா சிங்கம்னு யாரோ சொல்றது கேட்டது. தம்பி ஃபிலாசபி கருப்பு சட்டை வெள்ளை வேட்டி, நீளமான முடியோட கையைக் கட்டிக்கிட்டு போஸ் கொடுத்துகிட்டிருந்தாரு. 

    ஸ்ட்ரிக்டான ஆபீசர் மாதிரி  ப்ளாக்ல காட்சி அளித்த  கவியாழி கண்ணதாசன் நேர்ல பாத்தா சிரிச்ச முகத்தோட எளிமையா பல நாள் பழகின மாதிரி பேசினார். அவரோட ஆட்டோக்ராப் போட்ட  'அம்மா நீ வருவாயா? அன்பை மீண்டும் தருவாயா?" புத்தகத்தை ஆளுக்கு ஒண்ணு விலையில்லாம (ஓசிக்கு கௌரவமான பேரு) கொடுத்து அதிர்ச்சி(இன்ப அதிர்ச்சிதான்) குடுத்தார். குறிப்பா கவிதைன்னாலே காத தூரம் ஓடற சிவகுமார் கிட்ட குடுத்து இதை படிச்சி விமர்சனம் எழுதனும்னு அன்பு கட்டளை போட்டார். சிவகுமார்  மெட்ராஸ் பவன்ல பொங்கல் சாப்பிடும்போது  இஞ்சித் துண்டை கடிச்ச  கு.. (இருங்க! இருங்க! அவசரப்படாதீங்க)  குழந்தைமாதிரி  முழிச்சார் 

   சரிதாயணம்  எழுதின பாலகணேஷ் டிஸ்கவரிக்குள்ள அலவளவளவளாவிக் கொண்டிருந்தார். கண்ணதாசன் மாதிரி உங்க ஆட்டோக்ராப் போட்டு ஒரு புத்தகம் குடுங்கன்னு கேட்டதை காதுல வாங்காம, நீங்க ஒரு பாக்கியம் ராமசாமின்னு புகழ்ந்ததுக்கும் மயங்காம  காரியத்தில கண்ணா இருந்து ஸ்டாக் இல்லே இப்ப போய் எடுத்துட்டு வரப்போறேங்கராரு.( ஒசில குடுத்தா விமர்சனம் ஒழுங்கா இருக்கும். காசு குடுத்து வாங்கினா கராறா இருக்கும்.ஆமாம் சொல்லிட்டேன் )

   பதிவர் சத்ரியனோட கண் கொத்திப் பறவை நூல் அறிமுகத்திற்காக கேபிள் சங்கருக்கு காத்திருந்தாங்க!  சீக்கிரம் உள்ளே போனா சீப்பா நினைச்சுடு வாங்களோன்னு  கேட்லயே அரைமணி நேரம் நின்னுக்கிட்டு இருந்தாருன்னு நம்ப முடியாத வட்டாரத்தில இருந்து நம்பத் தகுந்த தகவல் வந்ததா சொன்னாங்க!

    போட்டோவுக்கு  போஸ் கொடுத்து நூல் வெளியிடும்போது சத்ரியன் பேசினார். மைக் இல்லாததால புத்தகைத்த சுருட்டி மைக் மாதிரி பிடிச்சிக்கிட்டிருந்தார் ஜெய். மைக்க பாத்ததுமே குஷியான பாலச்சந்தரின்(விவரத்திற்கு;கண்டேன் கே.பாலச்சந்தரை)  அறிமுகமான சிவா, "முன்னால போய் மைக்ல பேசுங்க" "முன்னால போய் மைக்ல பேசுங்க" ன்னு குரல் குடுக்க ஆரம்பிச்சிட்டாரு. இந்த சீனை ஒராயிரம் டேக் எடுத்ததால அந்த வசனத்தை மறக்க முடியலையாம். அவங்க அம்மா கிட்ட பேசும்போது கூட முன்னால போய் மைக்ல பேசுங்கன்னு சொல்றாருன்னா பாத்துக்குக்கோங்களேன்.

   சிவமைந்தனோட  திருவிளையாடல் அதோட முடியல நூல்  அறிமுகம் முடிஞ்சதும் அப்படியே கிளம்பிடலாம்னு நினச்சவங்களை புத்தகம் வெளியிட்டவங்க ட்ரீட் கொடுக்க தள்ளிட்டுப்  போய்ட்டார்.முதல் ரவுண்டு சத்ரியன் வேற வழியில்லாம எல்லோருக்கும் ஜூஸ் வாங்கிக் கொடுக்க அடுத்த ரவுண்டு கவியாழியும் மாட்டிகிட்டார். அதுலயும் திருப்தி அடையாம என் கிட்ட " சார்! நீங்க  புக் போட்டிருக்கீங்களா"ன்னு கேக்க அக்கறையா கேக்கறதா நினச்சி இல்லன்னு சொல்ல அடுத்த வருஷம் போடப் போறீங்களான்னு   திருப்பியும் கேட்க அடுத்த ரவுண்டு ஜூசுக்கு அடி போடறதை புரிஞ்சிக்கிட்டு இல்லேன்னு சொல்லி எஸ்கேப்.ஆயிட்டேன்

புக் வெளியிடுறதவிட ஜூஸ் செலவு அதிகாமாகும் போல இருக்கேன்னு நினைக்க வச்சு பதிவர்களை நூல் வெளியிடக் கூடாதுன்னு சதித்திட்டம் தீட்டிய சிவா பேச்சலராத் திரியறதாலதனா இந்த ஆட்டம் ஆடறார். அவர பேச்சு இலர் ஆக்கி கையது கொண்டு மெய்யது பொத்தி ஷாப்பர் பேக் தூக்க வைக்கனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு  நாலஞ்சு பேரு ரகசியமா கூடிப் பேசினங்கன்னு  ஒரு தகவல் சொல்லுது

  சும்மாவே  கைப்பேசி வாங்கி போன் போட்டு,  நடுவில கொஞ்சம் பையனைக் காணோம்னு தேடவச்சி டென்ஷன் ஆக்கி, அதைப் பதிவா போட்டு பட்டிக்காட்டாரை துப்பாக்கி  தூக்கி விஸ்வரூபம் எடுக்கற அளவுக்கு  அளவுக்கு செஞ்ச சிவாவுக்கு ,  பாடம் கத்துக் கொடுக்கிற ஒரே ஆள் பட்டிக்காட்டார்தான்னு முடிவு  பண்ணி அவரை அப்ரோச் பண்ணி இருக்காங்களாம்.

   அவரும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சிவா  வீட்டுக்குப் போய் அவங்க அம்மாகிட்ட இருக்கறதையும் இல்லாததையும் சொல்லி ஒரு கால் கட்டு போட்டு அவரோட கொட்டத்தை அடுத்த புக் ஃபேருக்குள்ள அடக்கறதா ஒத்துக்கிட்டார்.
  இதுக்கு ஃபிலாசபியும், அஞ்சாசிங்கமும் ரகசிய ஆதரவு தெரிவிச்சி இருக்காங்களாம். இது சக்சஸ் ஆனா இன்னும் நிறையப் பதிவர்கள் நிறைய நூல் வெளியிடுவாங்கன்னு ஒரு கருத்துக் கணிப்பு சொல்லுது

*******************************************************************************************