ஏற்கனவே பிரபல எழுத்தாளர்களாக இருந்து பதிவுலகத்திற்கு வருபவர்கள் உண்டு. பதிவுலகத்தில் இருந்து தொடங்கி எழுத்தாளர்களாக மிளிர்பவர்கள் உண்டு. அந்தப் பட்டியலில் இரண்டாவது வகையில் பாலகணேஷும் இடம் பிடித்திருக்கிறார்.
அன்று (12.10.2014)இரண்டு நிகழ்ச்சிகள் . ஒன்று இலக்கியவீதி இனியவன் அவர்களின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா காலையில்; மாலையில் மின்னல் வரிகள் பாலகணேஷ் எழுதிய சரிதாயணம் 2 வெளியீட்டு விழா. இரண்டிலும் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் எதிர்பாரா விதமாக முதல் நிகழ்ச்சிக்கு செல்ல முடியவில்லை. அப்போதுதான் வீட்டுக்கு வந்த நான் உடனே டிஸ்கவரி பேலசுக்கு புறப்பட்டேன்.
சரிதா நாயகன் சிரித்த முகத்துடன் வரவேற்க ஏற்கனவே சீனு ஸ்கூல் பையன் மெட்ராஸ் பவன் சிவகுமார் , கே.ஆர்.பி செந்தில், சமீரா,கோவை ஆவி, பட்டிக்காட்டான் கீதா ஆகியோர் முன்னதாக ஆஜர் ஆகி இருந்தனர். கேபிள் சங்கர் தமிழக மின்சாரம் போல வந்தது தெரியாமல் புறப்பட்டார். சிறப்பு விருந்தினர் ஆதிரா முல்லை, பேராசிரியர் கமலம் செல்வம் எழுத்தாளர் முகில் இவர்களை முதல் முறையாக சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது .தொகுப்பாளராக அவதாரம் எடுத்த சீனு, வரவேற்புரை ஆற்ற ஆவியை அழைக்க ஆவி சுருக்கமாக வரவேற்பு நல்கினர்.
சீனு கொஞ்சம் தயக்கத்துடன் தொகுப்புரைக்கத் தொடங்கினாலும் போகப் போக அனைவரையும் கவர்ந்து விட்டார்.
சேட்டைக்காரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தும் பொன்னான வாய்ப்பை எனக்களித்தார் கணேஷ்.
கீதா அவர்கள் ஒவ்வொரு நிகழ்வையும் உற்சாகத்துடன் புகைப்படம் எடுத்தார்.
கீதா அவர்கள் ஒவ்வொரு நிகழ்வையும் உற்சாகத்துடன் புகைப்படம் எடுத்தார்.
பாலகணேஷின் குருநாதரான சேட்டைக்காரன் அவர்கள் நூலை வெளியிட எழுத்தாளர் முகில் பெற்றுக் கொண்டார், சிறப்பு விருந்தினர்கள் முகில், ஆதிரா முல்லை,கமலம் சங்கர் ஆகியோர் கணேசனின் திறமைகளை வெகுவாகப் புகழ்ந்தனர் . சேட்டைக்காரன் நகைச்சுவை ததும்ப பேசினார். பெண்களை கேலி செய்யும் விதமாக நகைச்சுவைக் கதைகள் அமைப்பதன் காரணத்தை சொன்னார். சேட்டைக்காரன். எல்லா வயதினரையும் கவரக்கூடிய திறமை பெற்றவர் என்பதை பலருடைய பேச்சுக்களில் இருந்து உணர முடிந்தது.
ஆதிரா முல்லை அவருடன் போட்டி போட்டுக் கொண்டு எழுதியதைக் குறிப்பிட்டார்.கணேஷைப் பலவாறாகப் புகழ்ந்தாலும் "கண்டனன் கற்பினுக்கணியை கண்களால்" என்ற கம்பராமாயணப் பாடல்வரிகளுக்கு கணேஷ் அளித்த விளக்கத்தை கண்டு தான் வியந்து நின்றதை விவரித்தார்.
"அகம் புறம்;அந்தப் புறம்" என்ற தொடரை குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிப் புகழ்பெற்ற முகில் தனது எழுத்தின் வெற்றிக்காண காரணங்களில் ஒன்று அதை லேசான நகைச்சுவையுடன் சொன்னதுதான் என்றார்
பாலகணேஷின் சித்தியும் பேராசிரியையுமான கமலம் சங்கர் பாலகணேஷின் பால பருவத்தை நினைவு கூர்ந்து மின்னல் வரிகளை ஸ்லாகித்தார். நகைச்சுவை மட்டுமல்லாது மற்ற வகைக் கதைகளையும் எழுதவேண்டும் என்று தன் விருப்பத்தை தெரிவித்தார். இந்தப் புகழ் எல்லாம் இன்னும் சற்று முன்னதாக வந்திருக்கலாம் என்று ஆதங்கப் பட்டார். ஆவர் ஆதங்கப் பட்டார். நான் ஆச்சர்யப் பட்டேன். இவ்வளவு திறமை உடைய கணேஷ் இவ்வளவு நாள் நாள் எப்படி பிரபலமடையானால் போனார் என்று
சிரிப்பானந்தாவின் சிரிப்பரங்கம் நிகழ்ச்சியை கேள்விப் பட்டிருந்தாலும் இதுவரை அவரை பார்த்ததில்லை. அவரைப் பற்றி பாலகணேஷ் சொன்னது நறுக். நாமெல்லாம் ஜோக் சொன்னால் சிரிப்போம். அவரோ ஜோக் என்று சொன்னாலே சிரிப்பார். அன்றைய சிரிப்பரங்கம் நிகச்சி முடிந்தபின் வந்ததால் தாமதமாக வந்தாலும் தன பேச்சால் அனைவரையும் சிரிக்க வைத்ததார் சிரிப்பானந்தா . எல்லா வகைக் கதைகளும் எழுத வேண்டும் என்ற மற்றவர்களின் விருப்பத்திற்கு மாறாக, அவர் நகைச்சுவைக் கதைகளையே அதிகம் எழுத வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் சிரிப்பானந்தா. 'கல்யாண சமையல் சாதம்' என்ற பாடலைப் பாடி சிரித்து ஆடிக் காட்டி அங்கிருந்தவர்களையும் கூடவே பாடி ஆடி சிரிக்கச் செய்தார். அவரது நிகழ்ச்சிக்கு ஒரு முறையாவது செல்லவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டார்
சிறப்பு விருந்தினர்களைத் தவிர கலந்து கொண்ட பலருக்கும் பாலகணேஷ் அவர்களைப் பற்றி பேச வாய்ப்பு கிடைத்தது. அடியேனும் இரண்டொரு வார்த்தைகள் பேசினேன். பதிவர் ஸ்கூல் பையன் வயது வித்தியாசமின்றியும் புதியவர் பழையவர் வேறுபாடு இன்றியும் பழகும் தனது குருநாதரின் குணத்தை போற்றினார். அவருடன் தனது குடும்பத்தினரின் நெருக்கத்தை உணர்வு பூர்வமாக உரைத்தார்.
பிரபல பதிவர் கே.ஆர்.பி செந்தில் 'நான் இருக்கிறேன் அம்மா' கதையுடன் தனது சொந்த வாழ்க்கையின் நிகழ்ச்சியை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். சரிதாயணக் கதைகளை விட இந்த ஒரு கதையின் மூலம் படித்த அனைவரின் மனதிலும் இடம் பெற்றிருந்தார்.
கண்ணதாசன் புகழ் பரப்புவதையே தன தவமாகக் கொண்டிருக்கும் கணேஷின் நண்பர் கவிரிமைந்தன் அவர்கள் கணேஷை மனமார வாழ்த்தினார் . சில சுவையான சம்பவங்களையும் குறிப்பிட்டார்.
விழாவின் நிறைவுப் பகுதியில் மெட்ராஸ்பவன் சிவகுமாரை வலுக்கட்டாயமாக பேச அழைக்க , இயல்பான பேச்சால் சேட்டைக்காரன் , பாலகணேஷ் இவர்களைப் பாராட்டியதோடு தான் "பன்னிக்குட்டி ராமசாமி" யின் ரசிகன் என்பதை குறிப்பிடத் தவறவில்லை.
நிறைவாகதானாக முன்வவந்து பேசினார் சமீரா , இளம் பதிவர்.எத்தனை முறை படித்தாலும் சுவை குன்றாத எழுத்து சேட்டைக்காரனுடையது என்றார் சமீரா. தான் மின்னல் வரிகளின் தீவிர வாசகர் என்றும் மகள் போல பாசம் காட்டுபவர் கணேஷ் என்றும் குறிப்பிட்டார் .
நிறைவாக பாலகணேஷ் அனைவருக்கும் நன்றி கூற நூல் வெளியீடு சிறப்பாக நிறைவடைந்தது .
சரிதாயணம் 2 வெளியாவதை நான் ஆவலுடன் எதிர்பார்த்தேன். காரணம் எனக்கும் சரிதாயணத்துக்கும் ஒரு தொடர்பு இருந்ததது. எம்.பி ஆகிறாள் சரிதா என்ற கதையை அதில் சேர்ப்பதாக கணேஷ் அளித்திருந்த உறுதிமொழிதான். அந்தக் கதையை பாலகணேஷ் பாணியில் நான் முயற்சி செய்து அவருக்கு அனுப்ப அதை செப்பனிட்டு பெருந்தன்மையுடன் தனது வலைப் பதிவில் வெளியிட்டு பெருமைப் படுத்தினார். தான் அளித்த உறுதிமொழியின்படி இப்போது இந்த நூலிலும் இணைத்துள்ளார் எபதை அறிந்த போது மகிழ்ச்சி அடைந்தேன். இதே போல் அவரது மானசீக சிஷ்யன் சீனு எழுதிய சரிதாயணக் கதையும் இதில் இடப் பெற்றுள்ளதாகஅறிகிறேன்.
இந்தப் புத்தகத்தை வித்தியாசமான முறையில் வடிவமைத்திருகிறார் பாலகணேஷ் . புத்தகத்தின் இரண்டு அட்டையுமே முகப்பு பக்கமாய்க் கொள்ள முடியும் . ஒரு புறம் நகைச்சுவை மறுபுறம் வேறு வகைக் கதைகள். எதை விரும்புகிறோமோ அதை அதை படிக்கலாம். இதில் உள்ள சரிதாயணக் கதைகளை ஏற்கனவே படித்திருந்தாலும் சீரியஸ் கதைகளில் "நான் இருக்கிறேன் அம்மா" சிறப்பு விருந்தினர் மட்டுமல்ல படித்த அனைவரும் பாராட்டிய கதையாக அமைந்தது என்பதில் கணேஷ் காலர் தூக்கிவிட்டுக் கொள்ளலாம் .
பாலகணேஷ் அவர்களின் தாயார் நிகழ்ச்சிக்கு வந்திருந்தது சிறப்பு. அத்தனை பேரும் தன் மகனைப் புகழ்ந்ததை கண்ணாரக் கண்டு காதாரக் கேட்ட அந்த தாய்க்கு
இதை விட வேறெதுவும் எனக்கு சொல்லத் தெரியவில்லை
*****************************************************************************
படித்து விட்டீர்களா
பாவம் செய்தவர்கள்
படித்து விட்டீர்களா
பாவம் செய்தவர்கள்