என்னை கவனிப்பவர்கள்

சனி, 18 ஏப்ரல், 2015

பாலியல் தொல்லைகள்-குழந்தைகளை எச்சரிப்பீர்.

   மூன்று வயதுக் குழந்தையாக இருந்தாலும் சரி  60 வயதைத் தாண்டிய கிழவியாக இருந்தாலும் சரி பாலியல் வன்முறையில் இருந்து தப்ப முடியவில்லை  என்பது கசப்பான உண்மை. பள்ளிச் சிறுவனும் பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறான் பல் போன தாத்தாக்கள்  சிலரும் இந்தப் பாதகத்தை செய்கின்றனர். 
      பள்ளிகளில்  வீடுகளில் அலுவலகங்களில், பேருந்துகளில் என்று பல இடங்களிலும் தெரிந்தும் தெரியாமலும் பாலியல் தொந்தரவுகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அதுவும்    குழந்தைகள் மீதான பாலியல் தொல்லைகள் வன்முறைகள் பற்றி நாளிதழ்களில் செய்திகள் வராத நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். குறிப்பாக பள்ளி மாணவியிடம் ஆசிரியர் அத்துமீறல், வேன் டிரைவர் சில்மிஷம்  என்பன போன்ற செய்திகளை படிக்கும்போதெல்லாம் மனம் பதைக்கத்தான் செய்கிறது.  நாளுக்கு நாள் இவை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது,  பல காலமாக இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்றாலும் சமீப காலங்களில்தான் அதிகமாக வெளியே தெரியவருகிறது. இன்னும் பல சம்பவங்கள் வெளியில் சொல்லாமல்  மறைத்து வைக்கப்படுகின்றன. பல சமயங்களில்  குழந்தைகள் இது போன்ற தொல்லைகளுக்கு ஆட்படும்போது  வெளியில் சொல்வதில்லை. காரணம் இதை செய்பவர்கள் மிகவும் தெரிந்தவர்கள் குடும்ப  நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள், ஆசிரியர்கள், வடிவங்களில் இருப்பதுதான். சில நேரங்களில்  அதிக நம்பிக்கை வைத்து அடுப்படி வரை அனுமதிக்கும் நபர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கேள்விப் பட்டிருப்போம். 

  பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் குழந்தைகளை தனியே விட்டு செல்ல நேரிடுகிறது. பள்ளியில் இருந்து திரும்பும் குழந்தைகள் நெடு நேரம் தனியாக  வீட்டிலோ அல்லது அக்கம் பக்கத்து வீடுகளிலோ இருக்க வேண்டி இருக்கிறது. அப்போது இது போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது.
   எங்கேயோ  எப்போதோ நடக்கிறது. நமக்கு அப்படியெல்லாம் நடக்காது  என்று அலட்சியத்துடன் இருந்துவிட முடியாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எச்சரிக்கையுடன் கவனிப்பது மட்டுமல்லாமல்   குழந்தைகளுடன் விளையாட்டாகப் பேசி பள்ளியில், பள்ளிக்கு செல்லும் வழியில், வீட்டில் குழந்தை தனித்திருக்கும் சந்தர்ப்பங்களில் என்ன நடந்தது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். குழந்தைகளுடைய அன்றாட நடவடிக்கைகளில் திடீர் மாற்றம் ஏதேனும் தென்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
     ஒருவரை ஒருவர் தொட்டுப் பேசுவது இயல்புதான். என்றாலும்  பெண்குழந்தைகளை சாதாரணமாக தொட்டுப் பேசுவதற்கும் தகாத  எண்ணங்களோடு தொடுவதற்கும் வேறுபாடுகள் உள்ளன.  அம்மா அல்லது பாட்டி போன்ற பெரியவர்கள்தான் குழந்தைகளுக்கு இவற்றை சொல்லிக் கொடுக்க வேண்டும்.  தொடுகையின் நோக்கம் குழந்தைகளுக்கு தெரியாது. ஆனால் தொடுதலின் வித்தியாசத்தை உணரமுடியும். Good Touch எது  Bad Touch எது என்பதை குழந்தைகள் உணர கற்றுக் கொடுக்கவேண்டும் . குழந்தைகள் அதை உணர்ந்து எச்சரிக்கையுடன் நடந்து கொண்டால் பல அசம்பாவிதங்களில் இருந்து தப்பிக்க முடியும். அதை உணர்த்த வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கடமையாகும். கீழ்க்கண்ட தகவல்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

தொடுதலின் வகைகள்:
  1. பாதுகாப்பான தொடுதல்: இந்த வகை தொடுதலில் குழந்தைகள் பாதுகாப்பாக  உணர்வார்கள், தாயின் அணைப்பு, தந்தையின் அரவணைப்பு, தாத்தா பாட்டியின் அன்பான தொடுதல்,தட்டிக் கொடுத்தல், போன்றவை.
  2. பாதுகாப்பற்ற தொடுதல்: தள்ளி விடுதல், எட்டி உதைத்தல், கிள்ளுதல், அடித்தல் , பெரும்பாலும் சக நண்பர்கள், தோழிகளாலும், விளையாட்டின் போதும் நிகழ்வது. இவ்வகைத் தொடுதல் வலியையும் காயத்தையும் ஏற்படுத்தக் கூடியவை, இவையும் தவிர்க்கப் பட வேண்டியவையே!
  3. தேவையற்ற தொடுதல்: இதுதான் ஆபத்தானது. இது பாதுகாப்பானது என்றே குழந்தைகள் நினைக்கக் கூடும். நன்கு தெரிந்த நபராக இருந்தாலும் குழந்தைகளின் உடலில் கண்ட இடங்களை தொடுவது சரியல்ல என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.
குழந்தைகளுக்கு  சொல்ல வேண்டியது என்னென்ன? இதோ இந்தப் படங்களைப் பாருங்கள் 

                                                             தொடுதல் விதி 
எந்த உறுப்புகள் உன் உள்ளாடைகளால் மறைக்கப் பட்டுள்ளதோ அவைதான் உன் தனிப்பட்ட உறுப்புகள்.உன் உடல் ஆரோக்கியத்திர்காகத் தவிர வேறு காரணங்களுக்காக அவற்றை வேறு காரணங்களுக்காக மற்றவர்கள் தொடுவதோ பார்ப்பதோ அதைப் பற்றிப் பேசுவதோ சரி இல்லை.

             கட்டியணைப்பது

உன் மனசுக்கு பிடிச்சவங்க உன்னை  கட்டி பிடிச்சிகிட்டாலோ, முத்தம் குடுத்தாலோ உனக்கு சந்தோஷமாகூட இருக்கும்.அப்படி செஞ்சவங்க அதை ரகசியமா வச்சிருக்கச் சொன்னா உடனே அம்மா கிட்டயோ அல்லது நம்பிக்கையான பெரியவங்ககிட்டயோ சொல்லிடனும் 

                                                                          பரிசு 
சிலபேர் சில சமயங்களில் பரிசு காசு இனிப்பு கொடுத்து ஏமாத்தி அவங்கள் சொல்றபடி நடக்க வைப்பாங்க. அப்போது சங்கடமாவும் குழப்பமாவும் இருந்தா அவங்க கொடுக்கறதை வாங்காத. அவங்க சொல்றதையும் செய்யாதே.

 
                     ரகசியம் 
தொடுதல் பற்றிய ரகசியம் நல்லதல்ல. தொடுதல் விதிகளை மீற முயற்சி செய்தாலோ அல்லது உன்ன ரகசியமா வச்சுக்க சொன்னா அதை உடனே நீ நம்பற பெரியவங்க கிட்ட சொல்லணும் 


வேண்டாம்னு சொல்லணும்: தொடுதல் விதியை யாராவது மீறினால் "வேண்டாம்"னு சொல்லக் கத்துக்கறது ரொம்ப அவசியம். இதை ரொம்ப சத்தம் போட்டு சொல்லணும் 



சொல்லிவிடு
 உன்னை யாராவது தொடும் முறை கவலையோ குழப்பமோ பயமோ ஏற்படுத்தினால் உடனே நீ நம்பற பெரியவங்க கிட்ட அதைப் பத்தி சொல்லிவிடு. உதாரணமா உன்னுடைய அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, டீச்சர் இப்படி யாராவது. நீ முதலில் சொல்றவங்க உதவி செய்யலைன்னா வேற ஒருத்தர்கிட்ட சொல்லு. உனக்கு உதவி கிடைக்கும் வரை சொல்லிக்கிட்டே இரு
                                                               
  உன்மீது தவறு இல்லை
தொடுதல்  விதி மீறி சிலர்உன்னை காயப் படுத்தினால் அது உன் தவறு இல்லை.சில சமயங்களில் உன்னால் "வேண்டாம்"என்று சொல்ல முடியவில்லை என்றாலோ  அல்லது அந்த இடத்தில் இருந்து விலகிச் செல்ல முடியவில்லை என்றாலோ அல்லது மிகவும் பயமாக இருந்தாலோ  ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள். காயப்படவேண்டும் என்று நீ விரும்பவில்லை.அதற்கு நீ காரணமும் இல்லை.உன்னால் எப்போது மற்றவரிடம் சொல்ல முடியுமோ அப்போது  சொல்லலாம்.
    மேற்கூறிய அனைத்தையும்  குழந்தைகளுக்கு தயங்காமல் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவை பெண் குழந்தைகள் மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் தெரிவிக்கவேண்டிய அவசியம் உள்ளது.

   அரசு பள்ளிகளில்  படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை பற்றிய விழிப்புணர்வுப் பயிற்சிகூட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் அளிக்கப் பட்டது . இந்தப் பிரச்சனை அடித்தட்டு மக்கள், நடுத்தர மக்கள், வசதி படைத்தோர் அனைவருக்கும் பொதுவானதே! 

    இந்த  தகவல்கள் பயனளிக்கும் என்று நம்புகிறேன். இவற்றை குழந்தைகளின் கவனத்திற்கு உரிய வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்.

இது போன்ற தகாத செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப் பட்டு கடுமையான தண்டனை கிடைக்க செய்யவேண்டும் என்பதே பெரும்பாலோர் விருப்பம் 

இக்குற்றங்களுக்கு அதிக பட்ச தண்டனை என்ன? இதை தடுக்கும் வழிகள் உண்டா? பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாக்கப்பட  சட்டம் என்ன சொல்கிறது என்று  பார்ப்போம்.

(தொடரும்) 
  .
******************************************************************************

30 கருத்துகள்:

  1. சமூக நலனுக்கு வேண்டிய நல்லதொரு பதிவு நண்பரே அதற்காக ஒரு சபாஷ்.

    அம்மா பாட்டி சொல்லிக் கொடுக்கவேண்டும் 80தை படித்த்தும் சிரிப்புதான் வந்தது என்று கூட்டுக்குடும்பம் ஒழிந்து தனிக்குடித்தன வாழ்க்கை தொடங்கியதோ அன்று தொடக்கமாகியது இந்த வினைகள் அதன் பலனை இன்று இந்த சமூகம் அனுபவிக்கத்தொடங்கி விட்டது

    தொடர்கிறேன் நன்றி
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. ஆயிரக்கணக்கான வருடங்களாக நடந்து வருவது ஒரு நூற்றாண்டில் மாறிவிடாது என்பதை உணர்ந்து, விடாது முயற்சிக்க வேண்டிய ஒரு திருத்தம் பாலியல் தொல்லை. எளிமையாக எழுதியிருக்கிறீர்கள். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  3. 'மகாபாரதக் குந்திக்கு முதல் மகன் பிறந்தது பாலியல் தொல்லையினா' என்ற சிந்தனை ஓட்டத்தில் காஸ்யபன் அவர்கள் எழுதிய திடுக்கிட வைக்கும் அற்புதமான சிறுகதையைப் படித்திருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  4. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய பதிவு.
    மிக அருமை அய்யா.
    த ம 2
    நன்றி

    பதிலளிநீக்கு
  5. விளக்கமான பகிர்வு. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  6. இந்தக் குறிப்புகளை பெண்கள் (மட்டும்) படிக்கும் பள்ளிகளில் நோட்டிஸ் போர்டிலேயே ஒட்டி விடலாம். இருபாலாருக்கும் ஆன பள்ளி என்றால் துண்டுப் பிரசுரம் போல அவ்வப்போது மாணவிகளிடம் விநியோகிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  7. Pedophile is the term they are given. இது ஒரு வியாதி என்கிறார்கள். இவர்கள் யாரு? காட்டில் வாழ்றவங்களா? இல்லை நம்முடன் வாழ்றவங்கதான். தமிழர்களிலும் பெடொஃபைல் இருக்காங்க. இந்தப்பதிவைக்கூட இவர்கள் வாசித்துக்கொண்டு இருப்பார்கள். இதில் ஆண்களே அதிகம் என்கிறார்கள். அமெரிக்காவில் இதைப் பற்றி ஆராய்ச்சி பண்ணுவது கடினம் என்கிறார்கள். ஏன் என்றால் இது ஒரு பெரிய கிரிமினல் அஃபெண்ஸ். இவர்கள் விசாரித்த/படித்த கேஸ்கள்னு பார்த்தால் குற்றவாளிகளாக மாட்டியவர்கள், ஜெயில் கைதிகள் என்கிறார்கள். ஆனால் இது 5%தான் என்கிறார். மீதி 95% எங்க போனாங்க? நம்மோடு வாழ்ந்துகொண்டு இருக்காங்க. நம் நண்பராக இருக்கலாம், நம் சொந்தக்காரராக இருக்கலாம், உங்க க்லோஸ் ரிலேடிவாகக் கூட இருக்கலாம். அவர்கள் இதுபோல் உள்ள வியாதியை வெளியே சொல்வதில்லை..அதனால் இந்த வியாதி இவர்களிடமே ரகசியமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறது. Let me repeat again, these guys are just living with us, around us. We are just ignorant about them.

    Now, what do we have to do to save our children??

    We cant go find these guys and kill them. We can not eradicate them like how we got ride of small pox virus. அதேபோல் பார்க்கிரவனை எல்லாம் இவன் பெடொஃபைல்லா இருப்பானா?னு சந்தேகப்பட முடியாது. நம்மள மெண்டல்னு சொல்லிடுவானுக. சரியா?

    உங்களை மெண்டல்னு சொன்னா ஒண்ணுமில்லை. உங்க குழந்தை நலம், மனநலம்தான் முக்கியம். அதுக்காக நீங்க மெண்டலானா ஒண்னுமில்லை. ஒரு 14 வயதாகும் வரை உங்க குழந்தைகளை நீங்க கண்ணும் கருத்துமாக கவனமாகப் பார்த்துக் கொள்ளணும். கவனமானா? எந்த ஆம்பளையையும் நம்பக்கூடாது! உங்க குழந்தையை அவர்கள் கொஞ்சவோ, அவர்கள் குழந்தைகளோட விளையாட அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு நீங்க ஜாலியா ஷாப்பிங், சினிமானு சுத்தக் கூடாது. Trust NOBODY if you are a responsible dad or mom. I mean nobody but mom and dad!

    இப்போ இன்றைய சூழலில், இது பாசிபிளா? நீங்க ரெண்டு பேரும்வேலைக்குப் போறீங்க. உங்க வாழக்கையைப் பார்க்கணும். 24 மணி நேரமும் என் குழந்தையைப் பார்த்துக்க முடியாது.

    சரி, அப்போ குழந்தை பெத்துக்காதே! என்ன மயிறுக்கு உனக்கு குழந்தை. பார்ட்டி ஃபங்சன்னு சுத்து, குடி, கும்மாளம் போடு, உன் குழந்தையைப் பார்த்துக்க உனக்கு நேரமில்லைனா உனக்கு குழந்தை எதுக்கு முண்டம்?

    People send their children for "sleep over" to another house. Now, your children friends dad or mom can be a pedophile. Yeah, now you TRUST THEM அவங்களை எப்படி சந்தேகப் படுகிறது? சே சே யாரைனாலும் சந்தேகப்படலாமா? Let me repeat, YOU CAN NOT TRUST ANYONE!

    That's impossible for you? அப்போ உங்க குழந்தையை எல்லா பெடொஃபைல்ட்ட இருந்தும் காப்பது கஷ்டம். அதை ஏற்றுக்கொள்ளுங்கள். You can not have both ways!

    Read this following link too!

    http://www.thedailybeast.com/articles/2011/12/06/what-science-reveals-about-pedophilia.html


    பதிலளிநீக்கு
  8. அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். குறிப்பாக பெற்றோர்கள் குழந்தைகளைக் கண்காணித்துக்கொண்டே இருக்கவேண்டும். அவர்களுடன் மனம் விட்டுப் பேசவேண்டும். பெற்றோர் குழந்தைகளுக்கிடையேயான இடைவெளி அதிகப்படும்போது இவ்வாறான சூழல்கள் விவாதிக்கமுடியாதவையாகி விடுகின்றன. குழந்தைகள் மிகவும் கவனமாக நடந்துகொள்ளும் அளவு பயிற்றுவிக்கப்படவேண்டும். நல்ல சமூகப் பிரக்ஞையுள்ள பதிவு.

    பதிலளிநீக்கு
  9. அவசியம் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய விசயங்கள் விளக்கமாக... நன்றி...

    பதிலளிநீக்கு
  10. இக்காலத்திற்கு ஏற்ற பயனுள்ள பதிவு ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  11. இந்த பதிவு அவசியமான பதிவு
    தம +

    பதிலளிநீக்கு
  12. எந்நேரமும் சோசியல் மீடியாவில் இருக்கும் குழந்தைகளுக்கு ,உங்களைப் போன்றோரின் பதிவுகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது .வசதி இல்லாத குழந்தைகளுக்கு இந்த தகவல் போய் சேர்ந்தால் நல்லது !

    பதிலளிநீக்கு
  13. மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். யாரைவிடவும் ஒரு தாயே குழந்தைகளுக்கு கலவரப்படுத்தாமல் புரிய வைக்கமுடியும். ஆங்காங்கே அம்மாக்களுக்கு அரைநாள் முகாம் நடத்தி குழந்தைகளைத் தயார்படுத்தும் அணுகுமுறைகள சொல்லித்தர வேண்டும். அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும் இதை முன்னெடுக்கவேண்டும்.

    முரளி.. உங்கள் தளத்தில் கருத்திடுவது எளிதாக இல்லை.. எனக்குமட்டும் தானா தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  14. முரளி தொடப்பட்ட புள்ளி அருமை...
    நர்சரியில் டாக்டர் விளையாட்டு என்று ஊசிபோடுவது
    டாக்டர் திரையை மூடி பரிசோதிப்பது நடக்கும்.
    இதில் அம்மா அப்பவை அரை குறையில் பார்த்ததும்
    நடக்கும. எங்கும் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.
    நன்றி முரளி.

    பதிலளிநீக்கு
  15. கூட்டுக் குடும்பமாக இருந்த காலத்தில் பாட்டி, அத்தை போன்ற பெரியவர்கள் சிறுமிகளுக்கு இதைப் பற்றி கூறினார்கள். அம்மாக்கள் எப்போதுமே மகள்களிடம் இந்த விஷயங்களை பேசத் தயங்குபவர்கலாகத்தான் இருக்கிறார்கள்.

    சமீப காலங்களில் அரசு பெண்கள் பள்ளிகள் இதில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. மாதத்திற்கு இரண்டு முறை வெளியில் இருந்து சமூகம் சார்ந்த, உளவியல் சார்ந்த ஆலோசகர்களை அழைத்து மாணவிகள் மத்தியில் பேசுகிறார்கள். தொடுதல் பற்றி சொல்லித்தருகிறார்கள்.

    ஆண்களை வில்லனாக சித்தரிக்காமல் தோழமையோடு நடந்து கொள்ளும் வழிமுறைகளை கற்று தருகிறார்கள். தனியார் பள்ளிகள் இதிலெல்லாம் அக்கறை காட்டுவதில்லை. அரசு பள்ளி மாணவிகளைவிட தனியார் பள்ளி மாணவிகள்தான் ஆண்களிடம் அதிகம் ஏமாறுகிறார்கள் என்பது உண்மை.

    2004-ம் ஆண்டு டீனேஜில் கர்ப்பமுற்ற 7 மாணவிகளை பத்திரிகை கட்டுரைக்காக பேட்டி எடுத்தேன். அவர்கள் பேட்டி நாம் இப்போது சரியென்று நினைத்துக் கொண்டிருக்கும் அனைத்தும் மாயை என்று எண்ண வைக்கிறது. நேரம் கிடைக்கும் போது அந்த கட்டுரையை எனது வலைப்பக்கத்தில் பதிவிடுகிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  16. மிகத் தேவையான பதிவு..பிள்ளைகளுக்கு ஒரு முறைச் சொல்லிக்கொடுப்பதோடு விட்டுவிடாமல் ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். சிறு பிள்ளைகள் மறந்து விடுவர்.
    நீங்கள் சொல்லியிருப்பதோடு உதடுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
    பகிர்விற்கு நன்றி. த.ம.11

    பதிலளிநீக்கு
  17. அவசியமான பதிவு. தொடருங்கள். பெற்றோர்களுக்கு இன்னும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. குறிப்பாக வாழ்க்கையின் கீழ்மட்டத்தில் இருப்பவர்களே இத்தகைய தொல்லைகளுக்குப் பெரும்பாலும் ஆளாகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  18. அவசியமான பதிவு அனைத்துப் பெற்றோரும் விழிப்புடன் இருப்பதற்கு. தங்களைப் போன்று அனைவரும் நல்லவர்கள் என்று வெகுளியாக இருக்கும் பெற்றோரும் இருப்பார்கள். பிள்ளைகளை கைக்குள்ளேயே வைத்து வளர்க்க வேண்டும் யாரையும் நம்பக்கூடாது என்று உறுதியாக இருக்க வேண்டும் பெற்றோரும் பாதுகாவலரும் பிள்ளைகளுக்கும் அவ்வப்போது தெளிவு படுத்திய வண்ணம் இருத்தலும் அவசியமே. மிக நல்ல பதிவு நன்றி ! தொடருங்கள் ...!

    பதிலளிநீக்கு
  19. தெளிவான மற்றும் விளக்கமான படங்களுடன் காலத்துக்கேற்ற கருத்தினை சொன்ன சரியான பதிவு

    பதிலளிநீக்கு
  20. பெற்றோர்களுக்கு அவசியமான பகிர்வு. இன்றைய கால கட்டத்தில் அதிமுக்கியமான விழிப்புணர்வு பெற்றோர்களுக்கும் அவர்கள் மூலம் பிள்ளைகளுக்கும் வேண்டம் என்பதை உணர்த்திய பகிர்வுக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  21. பாதுகாப்பற்ற ஏழை எளிய மக்கள் எளிதில் குறி வைக்கப் படுகிறார்கள்பௌடர் ஸ்ப்ரே போன்றவற்றின் உபயோகம் பற்றித் தெரிவிக்க வேண்டும் பெண் என்பவள் ஒரு வீக்கர் செக்ஸ் என்னும் நினைப்பு போகவேண்டும். நல்ல பதிவு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  22. அருமையான விழிப்புணர்வு பதிவு! பெற்றோர்கள் அனைவரும் அறிந்துகொண்டு தம் பிள்ளைகளுக்கு கற்றுத்தரவேண்டிய ஒன்று! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  23. வணக்கம்
    முரளி அண்ணா

    ஒரு விழிப்புணர்வுப்பதிவு மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அறிய வேண்டிய விடயத்தை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 14
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  24. அருமையான விழிப்புணர்வு பதிவு. ஒவ்வொரு குழந்தைக்கும் இதைப் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  25. “Good Touch எது Bad Touch எது என்பதை குழந்தைகள் உணர கற்றுக் கொடுக்கவேண்டும்“ சரியாகச் சொன்னீர்கள்... இதை, நமது பள்ளிகளிலேயே சொல்லித்தர ஆசிரியைகளுக்கும் பயிற்சி தர வேண்டும். சிறந்த பதிவு முரளி. தம+1

    பதிலளிநீக்கு
  26. நல்ல அறிவுரை படங்களுடன் விளக்கமும் நன்று

    பதிலளிநீக்கு
  27. மிகச் சிறந்த கட்டுரை படங்களும் விளக்கங்களும் உட்பட....இப்போது சிறு பெண்கள் பெப்பர் ஸ்ப்ரே வைத்திருக்கின்றார்கள்....இவற்றை எல்லாம்ப் பள்ளிகளிலேயே சொல்லித் தரலாமே!

    பதிலளிநீக்கு
  28. பாலியல் தொல்லைகள்-குழந்தைகளை எச்சரிப்பீர். = டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று - எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி திரு
    Murali Dharan

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895