என்னை கவனிப்பவர்கள்

புதன், 7 ஏப்ரல், 2021

மறக்கமுடியாத பத்திரிகையாளர் கோசல்ராம்

  ர

 பத்திரிகையாளர் திரு கோசல்ராம் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி யுற்றேன். அவரை நான் பார்த்தது கூட இல்லை ஒரு பத்திரிகையாளர் செய்திகேட்டு  நான் ஏன் அதிர்ச்சி அடைய வேண்டும். அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு?

     நான் 2011 இன் இறுதியில் வலைப்பூக்களில்  எழுதத் தொடங்கினேன். வலைப்பூக்கள் உச்சத்தைத் தொட்டு கொஞ்சம் மங்கத் தொடங்கிய காலம். ஆனாலும் அதற்கென்று தனி இடம் இருந்தது. ஓரளவுக்கு வலைப்பதிவர்களுக்கு அறிமுகமானவனாக இருந்தேன். 

கதைகள், கவிதகள், கட்டுரைகள் என்று மனதில் தோன்றியவற்றையெல்லாம் எழுதிக் கொண்டிருந்தேன். ஒரு பழைய பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் சற்று வித்தியாசமான சிறு கதை ஒன்றை எழுதி பதிவிட்டுவிட்டு அலுவலகத்துக்கு புறப்பட்டுவிட்டேன். திடீரென்று ஒரு ஃபோன் கால். ,”நான் பிரியா கல்யாண ராமன். பேசுகிறேன். என்னைத் தெரியுமா? என்றார் 
”குமுதம் ஆசிரியரும் எழுத்தாளருமான உங்களைத் தெரியாதவர்கள் யார் சார் இருக்க முடியும்”  என்றேன்.

”உங்கள் வலைப்பதிவில் வெளியிட்டுள்ள கதையைப் படித்தேன். நன்றாக இருக்கிறது. அது நீங்கள் எழுதியதுதானா? ”என்று கேட்டார்.

”ஆம்” என்றேன்.

குமுதத்தில் வெளியிட சம்மதமா என்று கேட்க 

கரும்பு தின்னக் கூலிவேண்டுமா என்ன?  மகிழ்ச்சியுடன் சம்மதம் சொன்னேன்/

உங்கள் பக்கத்தில் இருந்து அதனை இப்போது நீக்கி விட்டு எனக்கு அனுப்புங்கள் என்றார். 

நான் உடனடியாக அதனை நீக்கி விட்டு குமுதத்திற்கு அனுப்பினேன். 3 வாரங்களில் என் சிறுகதை வெளியாகிவிட்டது. முதன்முதல் எனது கதை குமுதத்தில் வெளியானது கண்டு அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். அதன் பின்னர்  அவ்வப்போது குமுதத்தில் எனது கதைகள் பிரசுரமாகின்றன 

    வலைப்பூக்களை பத்திரிகைகள் கவனித்து வருகின்றன என்பதை அப்போதுதான் நான் அறிந்து  கொண்டேன். அப்போதுஅவர் தெரிவித்த இன்னொரு  செய்தி எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.  அப்போது குமுதத்தில் திரு கோசல்ராம் பாணியாற்றி வந்தார்.
     வலைப்பூவில் நான் புதிர்ப் பதிவுகள் எழுதுவேன். புதிர்களை அப்படியே கூறாமல் வடிவேலுவை பாத்திரமாகக் கொண்டு நகைச்சுவைக் கதைகளாக எழுதிவந்தேன். அக்கதைகள் அனைத்தும்   கோசல்ராம் அவர்கள் விரும்பிப் படித்துப் பாராட்டுகிறார் என்று பிரியா கல்யாணராமன் தெரிவித்தார்.
     அவரிடம் தொடர்புகொண்டு புதிர்களை அடிப்படையாக வைத்து இதே போல நகைச்சுவை தொடர் எழுத டிஸ்கஸ் செய்யுங்கள் என்றார்.  அப்போது வடிவேலுவின் ஆதிக்கம் குறைந்து சந்தானம் பிரபலமாகத் தொடங்கினார். அதனால் சந்தானத்தை பாத்திரமாகக் கொண்டு எழுதுங்கள் என்றார்.

    அப்போதைய சூழலில்  எதிர்பாரா அலுவலக பிரச்சனைகள் காரணமாக என்னால் அதில் கவனம் செலுத்த இயலவில்லை.

    பின்னர் கோசல்ராம் அவர்கள் ஒரு நாள் ஃபோன் செய்தார்.தான் தற்போது குமுதத்தில் இல்லை என்றும்.’ ”நமது அடையாளம்” என்ற பத்திரிகையை தொடங்கி இருப்பதாகவும். அதில் முன்பு  நகைச்சுவைத் தொடர் எழுதும்படி கூறினார். .  

 அப்புசாமி சீதாப்பாட்டிபோன்ற கேரக்டர்களை உருவாக்கி வேறு பாணியில் எழுதி அனுப்புங்கள் என்றார். சரி என்றேன்

”நமது அடையாளம்” அரசியல் புலனாய்வுப் பத்திரிகை என்பதை அறிந்தேன். அரசு பணியில் இருப்பவர்கள் அதில் எழுதலாமா என்ற ஐயம் ஏற்பட யோசித்துக் கொண்டிருந்தேன். பத்திரிக்கையும்  ஏதோ காரணத்தால்  நின்று போனது. பின்னர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தேன்.

       இன்று பத்திரிகையில் அவரைப் பற்றி படிக்கும்போதுதான் தெரிந்து கொண்டேன் ஸ்டாலின் அவர்கள், தமிழிசை சவுந்தரராஜன் போன்ற பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.அவரது சிறப்புகளை.  பலரும்  புகழ்ந்துள்ளனர். அவரா என்னிடம் சர்வ சாதரணமாக பேசினார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

பத்திரிகையாளர்களில் சிலர் மட்டுமே சாதாரணர்களையும் கவனித்து அவர்களின் திறமையை அங்கீகரிப்பவர்கள் பிரியா கல்யாணராமன், கோசல்ராம் போன்ற சிலரே.  என்னையும் மதித்து அங்கீகாரம் தந்த கோசல்ராம் அவர்களை நான் நேரில் பார்த்தது இல்லை.  அவருக்கு வயதும்  ஒன்றும் அதிகமில்லை 49 தான். இந்த மரணம் எதிர்பாராத ஒன்று. அன்னாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-----------------------------------------------------------------------------------------------


5 கருத்துகள்:

  1. எளிய மனிதருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

    பதிலளிநீக்கு
  2. வருத்தமான நிகழ்வு.  இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
  3. இரங்கல்கள். அவரது குடும்பத்தினர் இந்த வருத்தத்திலிருந்து மீள பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  4. வலைப்பூவில் பதிந்த உங்கள் பதிவினை கேட்டு வாங்கிப் போட்டது, உங்களின் எழுத்துமீதான அவருடைய ஈர்ப்பினை வெளிப்படுத்தியது. அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895