என்னை கவனிப்பவர்கள்

எம்.எஸ்.வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எம்.எஸ்.வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 ஜூலை, 2015

இசைப்பறவை எம்.எஸ்.வி -அவருடைய பாடல்களை இப்படிக் கண்டுபிடிப்பேன்.


    உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்த எம் எம்ஸ்.வி யை மருத்துவமனையில் சந்தித்து தன் வீட்டில் இருந்து கொண்டு சென்ற உணவை ஊட்டினார் என்ற செய்தியைப் எனது பெட்டிக் கடைப் பதிவில் பகிர்ந்திருந்தேன். அதற்குள்  எம்.எஸ். வியின் மரணச் செய்தி  வரும் என்று எதிர்  பார்க்கவில்லை.

"ஆளுக்கொரு தேதி வச்சு ஆண்டவன் அழைப்பான்
அப்போ யார் அழுதா அவனுக்கென்ன காரியம் முடிப்பான்"

என்று எம். எஸ். வி யின் பாடல் உண்டு. ஆம் காலதேவன் கணக்கை முடித்தான்.

   எம்.ஜி.ஆர்.  என்.டி.ஆர், .  டி.எம்.எஸ்,எஸ்.பி.பி என்று மூன்று எழுத்து சுருக்கம் வைத்திருப்பவர்களுக்கு   சிறப்புகள் பல உண்டு. இவர்களெல்லாம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள். அந்த வரிசையில் எம்.எஸ்.வி யையும் சொல்லலாம்.
   எம். எ.ஸ். வி பற்றி எழுதும் அளவுக்கு இசை அறிவு பெறாதவன் நான். ஆனால் ஒன்று மட்டும் சொல்ள முடியும். எந்த இசை   சாதாரண மக்களையும்  ஈர்க்கிறதோ அந்த இசையே சிறந்த இசை. எம். எஸ். வியின் இசை அப்படிப் பட்டது. ஆனால் அவரது இசை   பாமரர்களை  மட்டுமல்ல மேதைகளையும் ஆச்சர்யப் படவைத்தது.
     பழைய பாடல்கள் என்றாலே எம்.எஸ். வி இசை யாகத் தான் இருக்கும் என்று நம்புவன் நான்.இந்த மேதையின் ஹார்மோனியத்தில் பிறந்த மெட்டுக்கள் இன்னமும் நம் காதோரம் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இவரது கைவிரலில் இருந்து விளைந்து கவிதை ஆடை அணிந்து நம் மனதை கொள்ளை கொண்ட பாடல்கள் ஆயிரம் ஆயிரம். பொதுவாக பெரும்பாலான  இசை அமைப்பாளர்களின் குரல்வளம் கொண்டவர்களாக இருப்பதில்லை. இவரது குரலும் அதற்கு விதி விலக்காக அமையவில்லை  என்றாலும் அவரது குரலில் ஒருகவர்ச்சி உண்டு. ஆனால் அவர் பாடிய  பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்றைப் பெற்றிருக்கின்றன.

 பல்வேறு தரப்பினர் எம்.எஸ்.வி க்கு இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர் . இளையராஜா தனது இரங்கல் செய்தியில்

 "எம்.எஸ்.வி அண்ணாவின் இசைப் புலமையை பற்றி நன்றாக அறிந்தவர்கள் இங்கு யாருமே இல்லை என்பது என்னுடைய திட்டவட்டமான கருத்து. அவர் தன்னுடைய இசையமைப்பில் மிகவும் உயர்தரமான இசை நுணுக்கங்களை யெல்லாம் கொண்டுவந்தார். அதை ஊன்றி கவனித்ததால்தான் நான் ஒரு இசையமைப்பாளராகவே ஆனேன் என்பதை சத்தியமாக சொல்லுகிறேன்" 
என்று குறிப்பிட்டிருந்தார் .


 அவர் கூறியுள்ளது நூற்றுக்கு நூறு உண்மை .மெல்லிசையைப் பொறுத்தவரை எம்.எஸ்.வி.வி யின் தாக்கம் இல்லாமல் இசை அமைப்பது கடினம் என்று பல இசை அமைப்பாளர்களும் கூறி இருப்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தன் இசை  பாடல் வரிகளுக்கும் கதைக்கும் துணைபுரியும் விதத்தில்தான் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தனது மேதைமை வெளிப்படவேண்டும் என்று அவர் விரும்பியதில்லை
     எம்.எஸ். வி. யின் காலத்தில் பெரும்பாலும் இது எம்.ஜிஆர் பாடல்; இது சிவாஜி பாடல்; இது கண்ணதாசன் பாடல் , இது டி.எம்.எஸ்  என்று பாடல்கள் அடையாளம் காணப்படும். ஆனால்  இவர்களுடையை பெரும்பாலான பாடல்களுக்கு இசை அமைத்தவர் எம்  எஸ்.வியாகத்தான் இருப்பார். இவர் இசை அமைத்த பாடல்களின் பெருமை நடிகர்,பாடகர், பாடலாசிரியர் எல்லோருக்கும் பரவலாக போய்ச்  சேர்ந்தது. ஆனால் எம். எஸ்.வி அதை பொருட்படுத்தியதும் இல்லை;  வெளிப்படுத்தியதும் இல்லை. தற்போது  பெரும்பாலும் பாடல்களுக்குரிய பெருமை அனைத்தும் இசை அமைப்பாளர்களுக்கே கிடைத்து வருவது குறிப்பிடத் தக்கது .

 இப்போதைய இசை அமைப்பாளர்களைப் போல  பாடகர்களை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்  எம்.எஸ்.விக்கு குறைவாகத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கறேன். கதைக்கும் பாடல் வரிகளுக்கும் நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தாரே தவிர  தனது இசையை முன்னிலைப் படுத்திக் கொள்ள விரும்பியதில்லை. இத்தனை கட்டுப்பாடுகளுக்குள்ளும் அற்புதமான இசையை தர எம். எஸ்.வி யைத் தவிர வேறு யாருக்கு சாத்தியமாகும்?
  இந்த சாதனையாளருக்கு ஒரு முறை கூட தேசிய விருது வழங்கப்படாதது அந்த விருதுக்குத் தான் அவமானமே தவிர வேறில்லை. அள்ளித் தெளிக்கப்படும் பத்ம விருதுகள் கூட இவருக்கு வழங்கப் படாதது வருத்தத்திற்குரியது,

     வைரமுத்து இரங்கல் செய்தியில் சொன்னார், "இனிமேல் இவருக்கு பத்ம விருது ஏதும் வழங்கி அவரை இழிவு படுத்தாதீர்கள். முடிந்தால் பாரத ரத்னா விருது வழங்குங்கள் என்றார்" 
   இந்நாள் முதல்வர் முதல் முன்னாள் முதல்வர்கள் வரை பலரிடம் பணியாற்றி இருந்தும் அதனை இவர் பயன்படுத்திக் கொள்ள விரும்பியதில்லை . யாரும் இவருக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தர முனையவில்லை. டி.எம்.எஸ்.கூட தன்னுடைய பாடல்களால்  எம்.ஜிஆர், சிவாஜி  பெருமை பெற்றார்கள். ஆனால் யாரும் எனக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தரவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய செய்தியை படித்திருக்கிறேன். ஆனால் எம். எஸ். வி ஒரு போதும் அப்படி சொன்னதாகத் தெரியவில்லை.

    எம்.எஸ். வி யின் இசையமைத்த படங்களில் அவரது பெயர் டைட்டிலில் காட்டப்படும்போது தொடர்ந்து  இசை   உதவி ஜோசப் கிருஷ்ணா என்ற பெயர் காட்டப் படுவதைப் பார்த்திருக்கலாம் . அதிக  தொழில் நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில்  தரமான பாடல்களை பதிவாக்கித் தந்தவர் எம்.எஸ்.வி.  மெட்டு என்பது இசை அமைப்பாரால் உருவாக்கப்பாட்டலும் அது பாடலாக்குவதற்கு கூட்டு முயற்சி தேவை. இசைக் கோர்வைகளை பொருத்தமாக அமைத்து  தனித்தனியாக  பாடப்படும் பல்லவி சரணங்களை தாள லயம் கெடாமல்  இணைப்பது அப்போதைய தொழில் நுட்பத்துக்கு சவாலான செயல். இவற்றில் துணை புரிந்த தனது இசைக் குழுவில் உள்ளவரின் பெயரையும் கூட போடுமாறு   பணித்த பெருந்தன்மை எம்.எஸ்.விக்கே உரித்தானது.
  பொதுவாக வயதான கலைஞர்கள் தற்போதைய நிலையை குறை கூறுவது வழக்கம். இப்போதெல்லாம் என்ன இசை அமைக்கிறார்கள். ஒரே  சத்தம் பாடல் வரிகள் புரியவில்லை.  என்றெல்லாம் கூறுவார்கள் ஆனால் எம். எஸ். வி  தன் காலத்தக்கு  பிந்தைய இசை அமைப்பாளர்களையும் மனமார பாராட்டவே செய்தார்  மற்ற இசை அமைப்பாளர்களையும்  மதித்தார்

     இப்படி எல்லோர் மனத்திலும் இடம் பிடித்த எம்.எஸ். வி என்ற இசைப் பறவை நம்மை விட்டு பிரிந்து பறந்து சென்றுவிட்டது. ஆனால் அது விட்டு சென்ற இசை பேச்சிலும்  மூச்சிலும் எப்போதும் கலந்திருக்கும் . எக்காலத்தும் நிலைத்திருக்கும்

**************************
கொசுறு 
நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? 
ஒரு பாடல் எம்.எஸ்.வி இசை அமைத்த பாடல்தானா என்பதை அறிந்து கொள்ள நான் சில அம்சங்களை கவனிப்பேன்.நிறையப் பாடல்களில் சரணத்தின் கடைசி வரி இரண்டு  தடவை பாடப்படுவதைக் காணலாம்'. இரண்டாவது முறை சற்று மெதுவாக பாடப்படும் வரிகள் சரணத்தின் கருத்தை இன்னொரு தடவை மனதில் பதிய வைத்து நம் மனதை அள்ளிச் செல்லும். இந்த உத்தி எனக்கு மிகவும் பிடிக்கும்.

உதாரணமாக
தரை மேல் பிறக்க வைத்தான், அதிசய ராகம்,  போன்ற பாடல்கள்   புல்லங்குழல் கொடுத்த மூங்கில்களே உள்ளிட்ட  தனிப்பாடல்களின் சரணங்களிலும்  இந்த முத்திரையைக் காணலாம்.ஆனால் அது எந்தப் பாடலுக்கு பொருத்தமாக இருக்கிறதோ அங்குதான்  இதனைப் பயன்படுத்தி  இருப்பார்.

பாடகர்களாக விரும்புவர்களுக்கும் இசை அமைப்பாளராக விரும்புவர்களுக்கும் இவரது  இசை ஒரு பாடம்.  


                                    ***********************************


வியாழன், 24 நவம்பர், 2011

ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, எம்.எஸ்.வி :நிறைகள்- குறைகள்

       (திரை இசை மும்மூர்த்திகள் )

     
     ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, எம்.எஸ்.வி , மூவருமே  தமிழ்த் திரையிசையின் trend Setter களாகத்   திகழ்ந்தவர்கள் கர்நாடக இசையில் சியாமா சாஸ்திரி,  தியாகராஜர் , முத்துஸ்வாமி தீட்சிதர் மூவரும் சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப் படுகிறார்கள். அது போல  திரை இசை மும்மூர்த்திகள்  என்று எம்.எஸ்.வி , இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் மூவரையும் கூறலாம். 

   இவர்களைப் பற்றிய ஒரு சிறு அலசல்
  
  ஏ.ஆர்.ரஹ்மான்(A.R.Rehman)
பலங்கள்:

  1. பெரிய இயக்குனரின் படத்தில் அறிமுகமாகியது.
  2. புதுமையான ஒலிக்கோர்வைகள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
  3. குறுகிய காலத்தில் இந்தித் திரை  உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 
  4. இன்றுவரை இந்தியத் திரை இசை உலகில் முதல் இடத்தில் இருப்பது
  5. திரை இசை மட்டுமல்லாது ஆல்பங்களின் மூலமும் புகழ் பெற்றது.
  6. ஒரு பாடலை உருவாக்க பல நாட்கள் உழைப்பது
  7. குறைவான படங்களுக்கு மட்டுமே இசை அமைக்க ஒப்புக் கொள்வது
  8. பெரிய இயக்குனர்கள் தயாரிப்பாளர்களின் படங்களுக்கு மட்டுமே பணி புரிவது.
  9. அனைத்து வகையான புதிய தொழில் நுட்பங்களையும் பயன் படுத்தும் ஆற்றல் பெற்றிருப்பது
  10. உலகின் பல்வேறு இசை வடிவங்களை, இசைக் கருவிகளை fusion களை  திரையிசையில் பரிசோதனை செய்வது.
  11. தனது இசையை நேர்த்தியான  முறையில் மார்கெட்டிங் செய்யும் திறன் பெற்றிருப்பது
  12.  ஹாலிவுட் படங்களுக்கும் இசை அமைக்கும் தகுதி பெற்று ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படக் கூடிய ஆஸ்கார் விருது பெற்றதோடு பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்தது
  13.  மிகக் குறைவான படங்களுக்கே இசை அமைத்திருந்தாலும் மற்ற இந்திய இசை அமைப்பாளர்களைவிட அதிக பணமும் அளவிலாத புகழும் சம்பாதித்தது.
  14.  இளமையான ஆக்ரோஷமான ரசிகர் கூட்டத்தை கொண்டிருப்பது
  15.  அதிகம் பேசாமல் இருப்பது
  16.  மேற்கத்திய  பாணியில் இசை அமைப்பது
  17.  பல புதுபுது பாடகர்களை அறிமுகப்படுத்தியது

 பலவீனங்கள் குறைகள்
1. பெரிய இயக்குநர் தயாரிப்பாளர் படங்களுக்கு மட்டுமே இசை அமைப்பது
2.    ஒரு படம் இசை அமைப்பதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்வது
3.    பாடல் வரிகள் புரிய வண்ணம் இசை அமைப்பது
4.    பாடலையும் தானே எழுதுவது
5.    இளையராஜா போலவே அனைத்துப் படங்களிலும் பாடுவது
6.    மொழி தெரியாப் பாடகர்களையே அதிகமாகப் பயன் படுத்துவது
7.   சாதாரண இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் எளிதில் அணுக முடியாத  நிலையில் இருப்பது
8.     இசையில் அதிக இரைச்சல் இருப்பது
9.  நமது நாட்டுப்புறப் பாடல்களையும் மேற்கத்திய பாணியிலேயே இசை அமைப்பது
10.அதிகப் பாடகர்களை பயன்படுத்துவதால் பாடகர்கள் யாவரும் நிலைத்த புகழைப் பெறாமல் இருப்பது
11. மிகக் குறைவான பாடல்களுக்கு இசை அமைப்பது
12. மூத்த இசை அமைப்பாளர்கள் யாரையும் புகழ்ந்து ஒரு வார்த்தை கூட சொல்லாதது
*******************************************************************************************************
இளையராஜா (Ilayaraja)


பலங்கள்
  1. தமிழ்த் திரை இசைக்கு ஒரு புதிய பரிமாணம் தந்தது .
  2. காட்சிக்கான பின்னணி இசையில் முத்திரை பதித்தது.
  3. திரைப் படத்தின் விளம்பர பேனர்களில் இடம் பெற்ற முதல் இசை அமைப்பாளராகத் திகழ்ந்தது.
  4. இன்றளவும்  தீவிர பக்தர்களைப் போன்ற பெருத்த ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருப்பது.
  5. ஹிந்தி பாடல்களின் தாக்கத்தை தடுத்து நிறுத்தியது.
  6. ஒரு படத்தின் வெற்றிக்கு இசைஅமைப்பாளரின்  பங்கு முக்கியம் என்பதை முதன்முதலில் உணரச் செய்தது .
  7. தனது இசையின் மூலம் சாதாரணப் படங்களையும் வெற்றி படங்களாக்கியது.
  8. முரளி,மோகன்,ராமராஜன் போன்றவர்களையும்  வெற்றி நாயகர்களாய் ஆக்கியது.
  9. இசை அமைப்பாளராக  மட்டுமல்லாது பாடகராகவும் வெற்றிபெற்றது.
  10. அசுர வேகத்தில் இசையமைத்தாலும்  தரமான இசையை வழங்கியது.
  11. நான்கு முறை தேசிய விருது பெற்றது.
  12. புகழ் பெற்ற இயக்குனராக இருந்தாலும் சாதாரண இயக்குனராக இருந்தாலும் குறைவில்லாத தரத்துடன் இசை அமைத்தது.
  13. கிராமியப் பாடல்களுக்கும் அங்கீகாரம் பெற்றுத் தந்தது.
  14. கர்நாடக இசையை சரியான கலவையில் திரை இசையில் பயன் படுத்தியது.
  15. முதன் முதலில் இந்திய அளவிலும் உலக அளவிலும் தமிழ் இசைக்கு  கௌரவம் பெற்றுத் தந்தது.
  16. பணமும் புகழும் சம்பாதித்தது
  17. தமிழ்த் திரை உலகில் முதன்முறையாக தயாரிப்பாளர்கள் இவரது வீட்டு வாசலில் காத்திருந்ததோடு Tittle பாடலை அவரே பாட வேண்டும்  என்று வற்புறுத்தியது.
  18. 900 படங்களுக்கு மேல் இசை அமைத்து சாதனை புரிந்து இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பது
  19. நீண்ட காலம் போட்டியின்றி முதல் இடத்தில் இருந்து இசை ராஜாங்கம் நடத்தியது

பலவீனங்கள், குறைகள்

  1. புகழ் பெற்ற இயக்குனர்களையும் சாதரணமாக நடத்தியது.
  2. அதிகப் பாடல்களை தானே பாடுவது.
  3. அதிக வேகத்தில் இசை அமைப்பது.
  4. ஆணவம் பிடித்தவர் என்ற பெயர் எடுத்தது.
  5. வைரமுத்துவை விட்டுப் பிரிந்தது.
  6. தற்போது அதிகமாகப் பேசுவது.
  7. பாரதிராஜா உள்ளிட்ட நெருங்கியவர்களிடமும் கருத்து  வேறுபாடு கொள்வது.
  8. உலகத் தரத்தில் இசை அமைக்கும் தகுதி இருந்தும் அணுகுமுறை காரணமாக உலக அளவில் போதிய அங்கீகாரம் பெறாதது.
  9. சுமுகமற்ற சூழ்நிலை காரணமாக பலமுறை தேசிய விருதுகளை இழந்தது
  10. ஒரு முறை மட்டுமே தமிழில்  தேசிய விருது பெற்றது 
**********************************************************************************************
எம்.எஸ்.வி.
  1. கர்நாடக இசையின் தாக்கத்தில் இருந்த திரை இசையை பாமரரும் விரும்பும் மெல்லிசையாக மாற்றியது,
  2. எம்.ஜி.ஆர். சிவாஜி,போன்ற சாதனையாளர்களின் பெரும்பாலான படங்களுக்கு இசை அமைத்தது.
  3. கண்ணதாசன் என்ற மாபெரும் கவிஞனோடு  இணைந்து காலத்தால் அழிக்க முடியாத பாடல்களைத் தந்தது.
  4. நீண்ட காலம் இசை அமைப்பாளராக பணி ஆற்றியது.
  5. பாடல் வரிகள் தெளிவாகப் புரியும் வண்ணம் இசை அமைத்தது.

பலவீனங்கள் குறைகள்
  1. நீண்ட காலம் இசை அமைத்தும் தேசிய விருது பெறாதது.
  2. எம்.ஜி.ஆர், சிவாஜி, கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்தும் அதை சரியாகப் பயன்படுத்தாதது .
  3. திறமை இருக்கும் அளவிற்கு அங்கீகாரம் கிடைக்காதது.
  4. பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுக்காதது.
  5. டி.எம்.எஸ், பி.சுசிலா போன்றவர்களை மட்டும் அதிகமாகப் பயன் படுத்தியது      
************************************************************************************************************
பார்க்க:
செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம்பரபரப்பு!பகுதி3