2015 புத்தகக் கண்காட்சி தொடங்கிவிட்டது. எப்போது போகலாம் என்று முடிவு செய்யவில்லை. கவிஞர் முத்துநிலவன் அவர்கள் 13 ந்தேதி வருவதாக தெரிவித்திருந்தார். அதனால் அன்றே போகலாம் என்று முடிவு செய்தேன். முதலில் ஒரு சுற்று சுற்றி வந்து புத்தகங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டு இன்னொரு நாள் வரும்போது வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். தினந்தோறும் புத்தகக் கண்காட்சிக்கு தவறாமல் குடும்பத்துடன் செல்லும் நண்பர் கணேசன் அன்று காய்ச்சல் காரணமாக வர இயலாது என்று தெரிவித்திருந்தார். ஆனாலும் புத்தகக் கண்காட்சியை அடைவதற்குள் அங்கு வந்து விட்டிருந்தார். அவரது ஆர்வம் அசாதரணமானது. வாயிலில் இருந்து கண்காட்சி நடக்கும் இருக்கும் இடத்திற்கு செல்ல போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டிருந்தது.
நுழைவுக் கட்டணம் 10 ரூபாய். எல்லா நாட்களுக்கும் சேர்த்து 50 ரூபாய் சீசன் டிக்கட்டாம் வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தேன்.
கவிஞர் முத்து நிலவன்அவர்களை அன்னம் பதிப்பக ஸ்டாலில் சந்தித்தேன். அவரது தற்கால கல்வி நிலையை அழுத்தமாக ஆய்வு செய்யும் அருமையான கட்டுரைகள் அடங்கிய "முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!" நூலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக சொன்னார் . பதிவர்கள் மு.கீதா , மஹா சுந்தர் ஆகியோரிடமும் பேச முடிந்தது மகிழ்ச்சி.
நானும் ஒரு ரவுண்டு வந்து விட்டு ஒரு சில புத்தககங்களை வாங்கிக் கொண்டு சீக்கிரம் வீட்டுக் போய் விடலாம் என்று வெளியே வந்தேன்
வெளியே அரங்கில் பேசிக்கொண்டிருந்தார் பழ கருப்பையா.அவர் பேச்சை கேட்கும் நோக்கம் இல்லை . சுற்றி வந்த களைப்பு போக சற்று நேரம் உட்கார்ந்து விட்டுப் புறப்படலாம் என்று காலியாக இருந்த நாற்காலியை என் பக்கம் நகர்த்தினேன்.
ஆர்வமின்றி இருந்த எனது கவனத்தை ஈர்த்தது பழகருப்பையாவின் பேச்சு. அவர் இப்படிப் பேசுவார் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஒரு கலக்கு கலக்கினார் என்றுதான் சொல்லவேண்டும். (இதற்கு முன்னர் இதே போல ஜகத் ரட்சகனைப் பற்றி அபிப்ராயம் கொண்டிருந்தேன். ஒரு முறை அவரது பேச்சை கேட்க நேர்ந்தது.அவரது பேச்சாற்றல் கண்டும் அசந்து போனேன்.) ஏராளமான நூல்களைப் படித்திருக்கிறார் என்பதை அவர் பேச்சு எடுத்துக் காட்டியது. கேட்டுக் கொண்டிருந்த அத்தனை பேரையும் தன பேச்சால் கட்டிப் போட்டார். நான் அறிந்தவரை அவர் பேச்சை முடிக்கும் வரை யாரும் எழுந்து போகவிலை. நானும் பேச்சு நிறைவடைந்த பிறகே எழுந்தேன். . அருமையான எளிய தமிழில் கோர்வையாக நகைச்சுவையுடன் பேசி அவ்வப்போது கைத்தட்டல்கள் பெற்றுக் கொண்டார்
பழ கருப்பையா ஒரு எம். எல்.ஏ. அதிமுகவை சேர்ந்தவர் . ஏதோ ஒரு திரைப்படத்தில் பார்த்ததாக நினைவு . அவ்வளவே அவரைப் பற்றி நான் அறிந்தது .பொதுவாக அ.தி.மு.க வில் தமிழறிவும் இலக்கிய நயமும் கொண்ட பேச்சாளர்கள் இல்லை என்றுதான் கருதி வந்தேன். அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளவேண்டி இருந்தது.பைபிள் குர்ரான் மகாபாரதம் என்று சகலத்திலும் இருந்து உதரணங்களை காட்டிப் பேசினார் . கருப்பையா
கடவுளின் கட்டளையை மீறி அவரால் தடை செய்யப்பட நன்மை தீமை அறியும் மரத்தின் கனியை உண்டதால் ஈடன் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பைபிள் கதையை வித்தியாசமான கோணத்தில் விளக்கினார்.
இடையில் கலைஞரை தாக்கவும் தவறவில்லை. ஆனால் தனது தலைமையை துதி பாடாதது வியப்பை ஏற்படுத்தியது மட்டுமல்ல நம்பவும் முடியவிலை. பல அரசியல் கட்சிகள் பல்வேறு தீர்மானங்களை பொதுக் குழுவிலும் செயற்குழுவிலும் நிறைவேற்றுகின்றன. எல்லா தீர்மானங்களும் ஒருமனதாகவே தீர்மானிக்கப் படுகிறதே தவிர எந்த தீர்மானமாவது விவாதித்து தீர்மானிக்கப் பட்டிருக்கிறதா என்று ஒரு தாக்கு தாக்கினார். தலைமைக்கு விசுவாசமாக இருக்க, எதற்கும் தலை ஆட்டுதல் நமது மரபாக இருக்கிறது.எதிர்கருத்தும் மாற்றுக் கருத்தும் கூறுதல் இங்கு அனுமதிக்கப் படுவதில்லை இது முன்னேற்றத்திற்கு ஆரோக்கியமானதல்ல என்று அழுத்தமாகக் கூறியது ஆச்சர்யத்தை அளித்தது
ஒரு கவிஞர் தனது தலைவரின் பிறந்த நாளுக்கும் சென்று சால்வை அணிவித்து ஆசி பெறுவார் . தனது பிறந்த நாளுக்கும் அவரை சந்தித்து ஆசி பெறுவார். இது என்ன விசித்திரம் என்று வைரமுத்துவை ஒரு பிடி பிடித்தார்
கண்டதை படித்துப் பண்டிதன் ஆக முடியது. நேரம்தான் விரயமாகும். அதனால் கண்டதைப் படிக்காதீர்கள்..தேர்ந்தெடுத்துப் படியுங்கள். காந்தி அண்ணாதுரை அம்பேத்கார் போன்ற அறிஞர்கள் படித்த நூல்களை நானும் படித்தேன். ரஸ்கின் எழுதிய Unto this Last என்ற புத்தகம்தான் காந்தியின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவே அவரை மகாத்மாவாக மாற்றியது.
அவர் பகவத் கீதையை மட்டும் படிக்கவில்லை.உலகில் உள்ள சிறந்த நூல்களை படித்தார். டால்ஸ்டாயின் நூல்களை படித்தார். மற்றவர்களுக்கும் காந்திக்கும் என்ன வித்தியாசம் . அவர் என்ன சொன்னாரோ அதன்படி வாழ்ந்தார் என்பதை எடுத்துரைத்தார் பழ.கருப்பையா.
பழங்கால அரசர்கள் பல்வேறு பொருட்கள்,குதிரைகள்,மதுவகைகள் இறக்குமதி செய்தார்கள், யவனத்தில் இருந்து அழகிகள் மன்னனுக்கு தங்கக் கோப்பையில் மதுவை அளித்தனர் என்றெல்லாம் குறிப்புகள் காணப்படுகின்றன். ஆனால் அதே சமயத்தில் அந்த நாடுகளின் அறிவை இறக்குமதி செய்யத் தவறி விட்டனர் என்று குற்றம் சாட்டினார். அதனால் பல ஆண்டுகள் பின் தங்கி விட்டோம் ஆங்கிலேயர்கள் வந்து நமக்கு பாடம் சொல்லித் தர வேண்டியதாய் இருந்தது. அவர்களிடம் இருந்து எதைப் பெறவேண்டுமோ அதனைப் பெற்றிருந்தால் நமது நாட்டின் முன்னேற்றம் பல்லாண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்திருக்கும் என்றார்
நல்ல புத்தகங்களை, உலகை உலுக்கிய புத்தகங்களை தேடிப் பிடித்துப் படியுங்கள். அப்படி நிறையப் படிக்க முடியவில்லை என்றால் திருக்குறளாவது படியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்
டால்ஸ்டாயின் நீதிக் கதை ஒன்றை சொல்லி பேச்சை நிறைவு செய்தார் அந்தக் கதை எனக்கும் பிடித்திருந்தது. இன்னொரு சமயத்தில் பகிர்கிறேன்.
ஒவ்வொரு நாளும் பல பிரபலங்கள் பல்வேறு தலைப்புகளில் பேச பபாசி (BAPASI)ஏற்பாடு செய்வது வழக்கம்தான் என்றாலும் ஒரு முறை கூட இருந்து கேட்டதில்லை . நூலறிவும் அனுபவமும் நிரம்பப் பெற்றவர்களின் பேச்சைக் கேட்பது கற்றுத் தெரிந்துகொள்வதைவிட பயன் தரக் கூடியது. சில நூல்களை படித்திருப்போம். அதன் சிறப்பு என்னவென்று தெரியாமலே போய்விடுவது உண்டு.அதை அறிந்தார் எடுத்துரைக்கும் போது நாம் இதை கவனிக்காமல் போனாமே என்ற எண்ணம் ஏற்படுவதுண்டு. கற்றலின் கேட்டல் இனிது என்று வள்ளுவன் சும்மாவா சொன்னான்?. இனி கற்றலோடு கொஞ்சம் கேட்டும் வைக்கவேண்டும்
********************************************************************************
கொசுறு: 1. புத்தகக் கண்காட்சி வலை தளத்தில் சென்னை புத்தகக் காட்சி,2015-அரங்கு பட்டியல்/Stall List பட்டியலை பார்த்தீர்களா? புரிந்தவர்கள் சொல்லவும் . Lay Out map ஒன்றும் உள்ளது. இரண்டுக்கும் என்ன சம்பந்தம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டேன். ஒன்றும் புரியவில்லை கீழுள்ள இணைப்பை பார்த்துவிட்டு சொல்லுங்கள்
2. பிரபல பதிவர் ரஞ்சனி நாராயணன் அவர்களின் மலாலா "ஆய்த எழுத்து" கிழக்கு பதிப்பகத்தின் top 10 விற்பனையில் இடம் பெற்றுள்ளதாக முகநூல் தகவல் தெரிவிக்கிறது . வாழ்த்துக்கள் ரஞ்சனி மேடம்
3. உயிர்மை பதிப்பகத்தில் எஸ்.ராமகிருஷ்ணனும் மனுஷ்யபுத்திரனும் கேட்பவர்களுக்கு நூல்களில் கையெழுத்திட்டு தந்து விற்பனையை அதிகரித்துக் கொண்டிருந்தனர் .
4. உள்ளே 10 ரூபாய் விற்ற டீ அடுத்த நாள் 12 ரூபாயாக உயர்ந்துவிட்டது.
5. ஜீ டிவியினர் நீங்கள் படித்துக் கிழிக்காவிட்டாலும் பரவாயில்லை. இந்த தினசரி காலண்டரை யாவது கிழியுங்கள் என்று எல்லோருக்கும் இலவசமாக தினசரி காலண்டரை வழங்கிக் கொண்டிருந்தனர்.
6.புத்தகக் காட்சி நடக்கும் தினங்களில் என்றைக்கு சென்றாலும் சென்னை பதிவர்கள் பாலகணேஷ், சிவகுமார், சீனு,கண்ணதாசன்,,புலவர் ராமானுசம் ஐயா, கவியாழி கண்ணதாசன், ஆரூர் மூனா,இவர்களில் ஒருவரையாவது காணமுடியும். இம்முறை ஏனோ சந்திக்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை
****************************************************************************