என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

காவிரித்தாயின் கண்டனம்

 
கர்நாடகாவுக்கு காவிரித் தாயின் 
                கண்டனக்  குரல் 

              பஞ்சத்தைப் போக்குகின்ற பயிர்கள் எல்லாம் 
                  பசுமைதான் இழந்திருக்கும் காட்சி பாரீர்!
              நெஞ்சத்தை  கல்லாக்கி நேர்மை மறந்தீர்
                  நடுவர்கள் சொல்லி வைத்த தீர்ப்பை மறுத்தீர்!
              கொஞ்சம் தண்ணீர் கொடு என்று கேட்டபோதும் 
                  கோரிக்கை கேளாமல் செவிடாய் நின்றீர்
              அஞ்சாத தமிழர்கள் அகங்களில் எல்லாம் 
                  ஆத்திரத்தை மூட்டிவிட்ட செயலைச் செய்தீர்!

              தங்கத்தை விளைவித்த  ஊரில் இருந்தும்
                  தரங்கெட்ட செயல்களிலே இறங்கலாமா?
              பொங்கி வரும் என்னைநீர் தடுத்து வைத்து 
                  போராட்டம் செய்திடுதல் முறையே தானா?
              எங்கெங்கும் பாய்ந்திடவே எனக்குரிமை உண்டு 
                  என்பதனை அறிந்திடுவீர் கொஞ்சம் இன்றே!
              தங்குதடை உடைத்திட நான் நினைத்துவிட்டால் 
                  தடைபோட்டுப் பயனில்லை அறிவாய் நன்றே!

              காவிரித்தாய்  கன்னடர்க்கே சொந்தம் என்று 
                   கச்சிதமாய்  ஒன்றுகூடி தயக்கம் இன்றி 
              கைவிரித்து  நீரில்லை என்றே  சொன்னீர்!
                   போதவில்லை எங்களுக்கு; பொய்யும் சொன்னீர்.
              பைவிரித்து பணம் தேட  பண்பா டிழந்து 
                   பைந்தமிழர் வாழ்வினையே பதற  வைத்தீர் 
              கைவிட்டுப்  போன தந்த  உரிமைபெறவே
                   நதிநீரை தேசியமாய் என்று செய்வீர்?

              ஒருபிள்ளை தாகத்தில் தவித்து நிற்க 
                   தண்ணீரை மறைத்து வைத்து  தரமறுத்து
              மறு பிள்ளை விளையாடும் ஆட்டம் ரசித்து 
                  மகிழ்வோடு வாழ்வேன் நான் என்றா நினைத்தீர்?   
              சிறுபிள்ளை விளையாட்டாய் எண்ணி விடாதீர் !
                  சிறுபுத்தி கண்டிக்க மறந்தேன்; அதனால் 
              மறுப்பில்லை  தாய்க்கென்று  நினைந்து விடாதீர்?
                  மவுனமாய் அழுகின்றேன் மறந்துவிடாதீர்.



*********************************************************************

23 கருத்துகள்:

  1. காவிரித்தாயின் கண்டனம் உரியவர்கள் காதில் விழுகிறதா என்று பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  2. 'ஒருபிள்ளை...மறுபிள்ளை...சிறுபிள்ளை' எதுகை மோனை விளையாட, ஒரு பெரும் பிரச்சினையைக் காவிரித்தாயே சொல்வதான கற்பனையில் மிக அருமையான எண்சீர் விருத்தப் பாக்களில் சொல்லிவிட்டீர்கள் முரளி! வெறும் உணர்ச்சிவசப்படுத்தும் எழுத்துகளின் இடையே மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு, உண்மையான தேவையான வேண்டுகோள்! த.ம.1 பாராட்டுகள்! (லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவம்ல ன்னு சொல்லாம சொல்லிட்டீங்க..இனிமே நாங்க இத மீறி என்னத்த எழுத?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை மீறி எழுத முடியாததால், உங்களை வழிமொழிந்து நன்றியுடன் உங்களையும் சொல்லி எழுதியிருக்கிறேன் - பார்க்க -http://valarumkavithai.blogspot.com/2016/09/blog-post_14.html

      நீக்கு
    2. எவ்வளவு சாதித்தாலும் அடக்கம் உங்கள் உயர் குணமாய் உள்ளது. நல்லதையும்உள்ளம் கவர்ந்ததையும் உடனே மற்றவரும் அறியும் வண்ணம் எடுத்துரைப்பதும உங்களிடம் இருந்து கற்றுக்க் கொள்ளவேண்டியது அவசியம் . தங்கள் அறிமுகமும் நட்பும் கிடைத்ததை வரமாக நினைக்கிறேன். மிகக் நன்றி ஐயா

      நீக்கு
  3. காவிரித் தாயின் மௌன அழுகையை புறக்கணித்தால் கர்நாடகம் பெரும்தீங்கை சந்திக்க நேரிடும் !

    பதிலளிநீக்கு
  4. நாடுகளுக்கிடையேயே நதிநீர் ஒப்பந்தங்கள் ஏற்படும்போது மாநிலங்களுக்கிடையே நல்லெண்ணம் இல்லாதது வேதனைநீர்ப்பிரச்சனை என்று வரும்போது அது வன்முறையாக தமிழர் மீது திருப்பி விடுவது அதனினும் வேத்னை.

    பதிலளிநீக்கு
  5. வேதனையான விடயம் நடப்பதினை பார்க்கும் போது.கவிதை வரிகள் அருமை .

    பதிலளிநீக்கு
  6. கீழ்த்தரமான ஓட்டு அரசியலின் விளைவே இத்தனை அவலங்களும் ! கர்நாடகமாகட்டும், தமிழகமாகட்டும் இதுபோன்ற பிரச்சனைகளின் போதெல்லாம் பாதிக்கப்படுவது அன்றாடங்காய்ச்சிகளும் ஏழை பாழைகளும்தான் ! இந்நேரம் இங்கிருக்கும் " வி ஐ பி " களும் அங்கிருக்கும் " வி ஐ பி " களும் அந்தந்த மாநிலங்களிருக்கும் தங்களின் சொத்துகளுக்கு பாதுகாப்பு போட்டிருப்பார்கள்... அவர்கள் ஒற்றுமையாகத்தான் செயல்படுகிறார்கள் !!!

    நன்றி
    சாமானியன்

    எனது பயணப்பதிவின் இரண்டாம் பாகம்... தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    http://saamaaniyan.blogspot.fr/2016/05/2.html

    பதிலளிநீக்கு
  7. வருத்தமான விஷயம். பச்சை நிற பாரா மனதை மிகவும் கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
  8. காவிரித்தாயின் வாக்காகவே
    அறம் கூறிப் போகும் கவிதை
    மனம் கவர்ந்தது
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  9. அரசியல் ஓட்டுப் பொறுக்கிகள்
    விஜயன்

    பதிலளிநீக்கு
  10. இறுதியில் நீலக் கலரில் எழுதிய வரிகள் அனைத்தும் மிக அருமை இதைவிட வேறு எப்படி வேதனையை சொல்ல முடியும்

    பதிலளிநீக்கு
  11. சிறுபிள்ளை விளையாட்டாய் எண்ணி விடாதீர் !
    சிறுபுத்தி கண்டிக்க மறந்தேன்; அதனால்
    மறுப்பில்லை தாய்க்கென்று நினைந்து விடாதீர்?

    வேதனையுடனான எச்சரிக்கை . விளையாட்டாக வினையைத் தேடுவதோ?
    Read more: http://www.tnmurali.com/2016/09/blog-post_13.html#ixzz4KFNjuDRY

    பதிலளிநீக்கு
  12. மிகவும் சிறப்பான கவிதை! காவிரித்தாய் பொங்கி எழுந்தால் வேகமாய் திறந்து விட்டுத்தானே ஆகவேண்டும் வருண பகவான் மனம் வைத்தால் கேட்காமலே திறந்துவிடுவார்கள்!

    பதிலளிநீக்கு
  13. காவிரித்தாயின் கண்ணீரை கவிதையாய் சொல்லிவிட்டீர்கள்.தாயின் கண்ணீருக்கு காரணமான தறுதலைப் பிள்ளைகள் திருந்தமாட்டார்கள்

    பதிலளிநீக்கு
  14. காவிரித்தாயின் கண்ணீரை கவிதையாய் சொல்லிவிட்டீர்கள்.தாயின் கண்ணீருக்கு காரணமான தறுதலைப் பிள்ளைகள் திருந்தமாட்டார்கள்

    பதிலளிநீக்கு
  15. காவிரித்தாயின் கண்ணீரை கவிதையாய் சொல்லிவிட்டீர்கள்.தாயின் கண்ணீருக்கு காரணமான தறுதலைப் பிள்ளைகள் திருந்தமாட்டார்கள்

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895