என்னை கவனிப்பவர்கள்

காலனிஆதிக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காலனிஆதிக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 ஜூலை, 2015

சர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா?சசிதரூர் அதிரடி பேச்சு


     தற்போதைய இணைய உலகின் பரபரப்பு  காங்கிரஸ் எம்.பி  சசி தரூரின் பிரிட்டனை  அதிர வைத்த ஆக்ரோஷமான பேச்சு.    இங்கலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு யூனியன் என்ற அமைப்பு அவ்வப்போது முக்கியமான தலைப்புகளில் விவாதம் நடத்தும். கடந்த மே மாதம் 28 ம் தேதி 200 ஆண்டுகளாக காலனி ஆதிக்கம்  செலுத்திய நாடுகளுக்கு கடன்/கடமைப் பட்டிருக்கிறதா .என்ற தலைப்பில் விவாதம் நடத்தியது .
       இங்கிலாந்து கடன் பட்டிருக்கிறது என்ற தரப்பில் ஜமைக்கா தூதரக அதிகாரி அலௌன் தொம்பே அசம்பா  ,கானாவை சேர்ந்த ஜியார்ஜே  அயிட்டே , இந்தியாவை சேர்ந்த எம்.பி சசி தரூர்  ஆகியோரும்  இத் தரப்புக்கு எதிராக  சர் ரிச்சர் ஆட்டாவே என்ற பிரிட்டிஷ் அரசியல் வாதியும் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க வரலாற்று அறிஞர்கள் ஜான் மெக்கன்சி ,வில்லியம் ரோஜர் லூயிஸ் ஆகியோரும் இன்னும் சிலரும் பங்கேற்றனர்.
   இங்கிலாந்து தனது காலனி நாடுகளுக்கு பல நன்மைகளை செய்துள்ளது அதனால் இழப்பீடு ஏதும் வழங்கத் தேவை இல்லை என்றுஅவர்கள் வாதாடினர். இந்த விவாதத்தில் பங்கேற்றார் காங்கிரஸ் கட்சி எம்.பி. சசி தரூர். இந்தியாவில் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருந்தாலும்  சசி தரூருக்கு இந்த விவாதப் பேச்சு பலரின் பாராட்டையும் பெற்றுத் தந்திருக்கிறது  மோடி கூட அவரது பேச்சை பாராட்ட, சோனியாவிடம் தரூர்  வாங்கிக் கட்டிக் கொண்டதாக கேள்வி
  ஆக்ஸ்போர்டு விவாத மன்றத்தில் ஆணித் தரமாக தனது கருத்துகளை எடுத்துரைத்ததோடு நகைச்சுவையாகவும் பேசி  15 நிமிடத்திற்குள் பல முறை  கைதட்டல்களை அள்ளிச் சென்றார் சசி தரூர் 
    கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே இந்த விவாதம் நடந்திருந்தாலும் சசி தரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு  வீடியோ இணைப்பு கொடுக்க www.bbc.com முக்கியத்துவம் கொடுத்து வெளியிட வைரஸாக  பரபரவென பரவியது. இதை யூ ட்யூப்பில்   பார்த்தவர்களின் எண்ணிக்கை 24இலட்சத்தை ஐ தாண்டிவிட்டது . ஏராளமானோர் சசி தரூரின் பேச்சை புகழ்ந்தாலும் எதிர் கருத்துகளையும் காண முடிந்தது.

       சசி தரூர் பேசிய உரையின் சாராம்சம்  தருண் தேஜ் பால் சென்னையில் சாருவின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த போது பேசிய பேச்சை ஒத்திருந்தது    
     உண்மையில் இந்தியா, பிரிட்டிஷ் காரர்களின் கறவை மாடாக திகழ்ந்தது. பிரிட்டிஷார் போதுமான அளவுக்கு இந்தியாவை  சுரண்டிய பின்னரே வெளியேறினர் என்று அழுத்தம் திருத்தமாக வாதிட்டார். உலகப் பொருளாதாரத்தில் ஆங்கிலேயர் வருமுன் 23% சதவீமாக இருந்த இந்தியாவின் பங்கு அவர்களின் வருகைக்குப் பின்  4% ஆக குறைந்தது என்று குறிப்பிட்டார்..இங்கிலாந்தின் தொழில் வளர்ச்சி இந்தியாவின் தொழில் வளர்ச்சியை அழித்ததானால்தான் அமைந்தது  என உறுதிபட உரைத்தார் . இராபர்ட் கிளைவ் கடுமையாக தாக்கிய தரூர். லூட்  என்ற ஹிந்தி சொல்லை ஆங்கிலத்துக்கு தந்தவர் அவர்தான் என்றார் கிண்டலாக. ஆனால் இந்தியாவில் கொள்ளைக் காரனாக திகழ்ந்த  அவரைக் கொண்டாடியது பிரிட்டிஷ் அரசு என்று சாடினார் 
   இந்தியாவில் போக்கு வரத்து வசதிகளை ஏற்படுத்தியது குறிப்பாக ரயில்வே வசதிகள் எல்லாம் ஏற்படுத்தியது  இந்திய  வளங்களை கொள்ளையடித்து செல்லத்தானே தவிர இந்தியர்களின் நலன்களுக்காக  அல்ல என்று அழுத்தம் திருத்தமாக உரைத்தார் .
    இந்தியாவில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டபோது லட்சக் கணக்கானோர் உணவுப் பற்றக் குறை காரணமாக உயரிழந்தனர்.ஆனால் சிறிதும் கருணையின்றி உணவுப் பொருள்களை இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் போர் வீரர்களுக்கு அனுப்ப உத்தரவிட்டார் சர்ச்சில். மக்கள் பஞ்சத்தால் வாடுவதை இங்கிருந்த அதிகார்கள்  சர்ச்சிலுக்கு கடிதம் மூலம் தெரிவித்தனர்.
   அதற்கு சர்ச்சில் அளித்த பதில் என்ன தெரியுமா?"அப்படியா! ஏன் காந்தி இன்னும் இறக்கவில்லை "
அப்ப்ப்பாஎந்த அளவுக்கு வெறுப்பும் துவேஷமும் உள்ள வார்த்தைகள் 



     இரண்டாம் உலகப்   போரில்   பிரிட்டன் படையில் ஆறில் ஒரு பங்கு இந்திய வீரர்கள் . வேறு எந்த நாட்டின் பங்களிப்பையும் விட இது பல மடங்கு அதிகம். இப்போரில் 54000  பேர்களுக்கு மேல் உயரிழந்தனர். 4000 பேர்களுக்குமேல் காணவில்லை

  வீட்டை கொள்ளையடித்தவரும் தனது பொருட்களை இழந்த வீட்டுக்காரரும் சம தியாகங்கள் செய்தார் என்று கூறுவது சரிதானா என்ற கேள்வி எழுப்ப அரங்கம் கை தட்டலால் அதிர்ந்தது.

      இந்தியாவுக்கு பிரிட்டன் நிதி உதவி செய்தது கூறுகிறது. அந்த உதவி இந்தியாவின் உற்பத்தியில் 0.4% .இதைவிட நாங்கள் உரங்களுக்கு கொடுக்கும் மானியம்கூட பல மடங்கு அதிகம் என உரைக்க மீண்டும் கைதட்டல் ஒலித்தது
       200ஆண்டுகளுக்குமேல்  இழைக்கப் பட்ட அநீதி ஒரு குறிப்பிட்ட தொகை இழப்பீடு வழங்குவதன் மூலம் ஈடு செய்து விட முடியாது. வேண்டுமானால் தவறென்று ஒப்புக்கொண்டு  மன்னிப்பு கேட்டு அதன் அடையாளமாக ஆண்டுக்கு 1 பவுண்டு வீதம் 200 ஆண்டுகளுக்கு  செலுத்தவேண்டும்  என்று சொல்லி முடிக்க பலத்த கர ஒலிகள் மூலம் பாராட்டுப் பெற்றார் . 

    இங்கிலாந்துக்கே சென்று அவர்கள் மீதே துணிச்சலாக குற்றம் சாட்டி வாதம் செய்து வென்றது பலரையும் கவர்ந்துள்ளது என்பது உண்மை.
சசிதரூர் தரப்புக்கு 185 வாக்குகள் பெற்று வாதத்தில் வென்றது.எதிர் தரப்புக்கு 56 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. பிரிட்டன் தனது காலனி நாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஆக்ஸ்போர்டு யூனியன் கருதுவதாக முடிவாகியது

   இந்தியாவில் சசி தரூர் மீது நிலவி வரும்  சர்ச்சைகள் சிறிதுகாலம் பொது மக்கள் மத்தியில் வலுவிழக்க இந்த அட்டகாசமான உரை உதவக் கூடும் . ஏதோ ஒரு குற்ற உணர்வு இருப்பதால்தான் இந்த விவாதங்களை பிரிட்டன் அனுமதிப்பதாக  தோன்றுகிறது. 
       இந்தியாவில் சொந்த நாட்டையே சுரண்டிய /சுரண்டும் பலரும் குற்ற உணர்வில் வாடும் வகையில் உணர்வு பூர்வமான  பேச்சை யாரேனும் தருவார்களா?

இதோ சசி தரூர் ஆற்றிய உரையின் காணொளி. ஆங்கில சப் டைட்டில்களுடன் உள்ளது . விரும்புவோர் காணலாம்



************************************************************