என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 27 ஜூலை, 2015

சர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா?சசிதரூர் அதிரடி பேச்சு


     தற்போதைய இணைய உலகின் பரபரப்பு  காங்கிரஸ் எம்.பி  சசி தரூரின் பிரிட்டனை  அதிர வைத்த ஆக்ரோஷமான பேச்சு.    இங்கலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு யூனியன் என்ற அமைப்பு அவ்வப்போது முக்கியமான தலைப்புகளில் விவாதம் நடத்தும். கடந்த மே மாதம் 28 ம் தேதி 200 ஆண்டுகளாக காலனி ஆதிக்கம்  செலுத்திய நாடுகளுக்கு கடன்/கடமைப் பட்டிருக்கிறதா .என்ற தலைப்பில் விவாதம் நடத்தியது .
       இங்கிலாந்து கடன் பட்டிருக்கிறது என்ற தரப்பில் ஜமைக்கா தூதரக அதிகாரி அலௌன் தொம்பே அசம்பா  ,கானாவை சேர்ந்த ஜியார்ஜே  அயிட்டே , இந்தியாவை சேர்ந்த எம்.பி சசி தரூர்  ஆகியோரும்  இத் தரப்புக்கு எதிராக  சர் ரிச்சர் ஆட்டாவே என்ற பிரிட்டிஷ் அரசியல் வாதியும் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க வரலாற்று அறிஞர்கள் ஜான் மெக்கன்சி ,வில்லியம் ரோஜர் லூயிஸ் ஆகியோரும் இன்னும் சிலரும் பங்கேற்றனர்.
   இங்கிலாந்து தனது காலனி நாடுகளுக்கு பல நன்மைகளை செய்துள்ளது அதனால் இழப்பீடு ஏதும் வழங்கத் தேவை இல்லை என்றுஅவர்கள் வாதாடினர். இந்த விவாதத்தில் பங்கேற்றார் காங்கிரஸ் கட்சி எம்.பி. சசி தரூர். இந்தியாவில் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருந்தாலும்  சசி தரூருக்கு இந்த விவாதப் பேச்சு பலரின் பாராட்டையும் பெற்றுத் தந்திருக்கிறது  மோடி கூட அவரது பேச்சை பாராட்ட, சோனியாவிடம் தரூர்  வாங்கிக் கட்டிக் கொண்டதாக கேள்வி
  ஆக்ஸ்போர்டு விவாத மன்றத்தில் ஆணித் தரமாக தனது கருத்துகளை எடுத்துரைத்ததோடு நகைச்சுவையாகவும் பேசி  15 நிமிடத்திற்குள் பல முறை  கைதட்டல்களை அள்ளிச் சென்றார் சசி தரூர் 
    கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே இந்த விவாதம் நடந்திருந்தாலும் சசி தரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு  வீடியோ இணைப்பு கொடுக்க www.bbc.com முக்கியத்துவம் கொடுத்து வெளியிட வைரஸாக  பரபரவென பரவியது. இதை யூ ட்யூப்பில்   பார்த்தவர்களின் எண்ணிக்கை 24இலட்சத்தை ஐ தாண்டிவிட்டது . ஏராளமானோர் சசி தரூரின் பேச்சை புகழ்ந்தாலும் எதிர் கருத்துகளையும் காண முடிந்தது.

       சசி தரூர் பேசிய உரையின் சாராம்சம்  தருண் தேஜ் பால் சென்னையில் சாருவின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த போது பேசிய பேச்சை ஒத்திருந்தது    
     உண்மையில் இந்தியா, பிரிட்டிஷ் காரர்களின் கறவை மாடாக திகழ்ந்தது. பிரிட்டிஷார் போதுமான அளவுக்கு இந்தியாவை  சுரண்டிய பின்னரே வெளியேறினர் என்று அழுத்தம் திருத்தமாக வாதிட்டார். உலகப் பொருளாதாரத்தில் ஆங்கிலேயர் வருமுன் 23% சதவீமாக இருந்த இந்தியாவின் பங்கு அவர்களின் வருகைக்குப் பின்  4% ஆக குறைந்தது என்று குறிப்பிட்டார்..இங்கிலாந்தின் தொழில் வளர்ச்சி இந்தியாவின் தொழில் வளர்ச்சியை அழித்ததானால்தான் அமைந்தது  என உறுதிபட உரைத்தார் . இராபர்ட் கிளைவ் கடுமையாக தாக்கிய தரூர். லூட்  என்ற ஹிந்தி சொல்லை ஆங்கிலத்துக்கு தந்தவர் அவர்தான் என்றார் கிண்டலாக. ஆனால் இந்தியாவில் கொள்ளைக் காரனாக திகழ்ந்த  அவரைக் கொண்டாடியது பிரிட்டிஷ் அரசு என்று சாடினார் 
   இந்தியாவில் போக்கு வரத்து வசதிகளை ஏற்படுத்தியது குறிப்பாக ரயில்வே வசதிகள் எல்லாம் ஏற்படுத்தியது  இந்திய  வளங்களை கொள்ளையடித்து செல்லத்தானே தவிர இந்தியர்களின் நலன்களுக்காக  அல்ல என்று அழுத்தம் திருத்தமாக உரைத்தார் .
    இந்தியாவில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டபோது லட்சக் கணக்கானோர் உணவுப் பற்றக் குறை காரணமாக உயரிழந்தனர்.ஆனால் சிறிதும் கருணையின்றி உணவுப் பொருள்களை இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் போர் வீரர்களுக்கு அனுப்ப உத்தரவிட்டார் சர்ச்சில். மக்கள் பஞ்சத்தால் வாடுவதை இங்கிருந்த அதிகார்கள்  சர்ச்சிலுக்கு கடிதம் மூலம் தெரிவித்தனர்.
   அதற்கு சர்ச்சில் அளித்த பதில் என்ன தெரியுமா?"அப்படியா! ஏன் காந்தி இன்னும் இறக்கவில்லை "
அப்ப்ப்பாஎந்த அளவுக்கு வெறுப்பும் துவேஷமும் உள்ள வார்த்தைகள் 



     இரண்டாம் உலகப்   போரில்   பிரிட்டன் படையில் ஆறில் ஒரு பங்கு இந்திய வீரர்கள் . வேறு எந்த நாட்டின் பங்களிப்பையும் விட இது பல மடங்கு அதிகம். இப்போரில் 54000  பேர்களுக்கு மேல் உயரிழந்தனர். 4000 பேர்களுக்குமேல் காணவில்லை

  வீட்டை கொள்ளையடித்தவரும் தனது பொருட்களை இழந்த வீட்டுக்காரரும் சம தியாகங்கள் செய்தார் என்று கூறுவது சரிதானா என்ற கேள்வி எழுப்ப அரங்கம் கை தட்டலால் அதிர்ந்தது.

      இந்தியாவுக்கு பிரிட்டன் நிதி உதவி செய்தது கூறுகிறது. அந்த உதவி இந்தியாவின் உற்பத்தியில் 0.4% .இதைவிட நாங்கள் உரங்களுக்கு கொடுக்கும் மானியம்கூட பல மடங்கு அதிகம் என உரைக்க மீண்டும் கைதட்டல் ஒலித்தது
       200ஆண்டுகளுக்குமேல்  இழைக்கப் பட்ட அநீதி ஒரு குறிப்பிட்ட தொகை இழப்பீடு வழங்குவதன் மூலம் ஈடு செய்து விட முடியாது. வேண்டுமானால் தவறென்று ஒப்புக்கொண்டு  மன்னிப்பு கேட்டு அதன் அடையாளமாக ஆண்டுக்கு 1 பவுண்டு வீதம் 200 ஆண்டுகளுக்கு  செலுத்தவேண்டும்  என்று சொல்லி முடிக்க பலத்த கர ஒலிகள் மூலம் பாராட்டுப் பெற்றார் . 

    இங்கிலாந்துக்கே சென்று அவர்கள் மீதே துணிச்சலாக குற்றம் சாட்டி வாதம் செய்து வென்றது பலரையும் கவர்ந்துள்ளது என்பது உண்மை.
சசிதரூர் தரப்புக்கு 185 வாக்குகள் பெற்று வாதத்தில் வென்றது.எதிர் தரப்புக்கு 56 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. பிரிட்டன் தனது காலனி நாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஆக்ஸ்போர்டு யூனியன் கருதுவதாக முடிவாகியது

   இந்தியாவில் சசி தரூர் மீது நிலவி வரும்  சர்ச்சைகள் சிறிதுகாலம் பொது மக்கள் மத்தியில் வலுவிழக்க இந்த அட்டகாசமான உரை உதவக் கூடும் . ஏதோ ஒரு குற்ற உணர்வு இருப்பதால்தான் இந்த விவாதங்களை பிரிட்டன் அனுமதிப்பதாக  தோன்றுகிறது. 
       இந்தியாவில் சொந்த நாட்டையே சுரண்டிய /சுரண்டும் பலரும் குற்ற உணர்வில் வாடும் வகையில் உணர்வு பூர்வமான  பேச்சை யாரேனும் தருவார்களா?

இதோ சசி தரூர் ஆற்றிய உரையின் காணொளி. ஆங்கில சப் டைட்டில்களுடன் உள்ளது . விரும்புவோர் காணலாம்



************************************************************




17 கருத்துகள்:

  1. சசிதரூர் என்றாலே சுனந்தா புஸ்கர் மரணம் நினைவுக்கு வருதே :)

    பதிலளிநீக்கு
  2. சசிதரூரின் திறமை இன்னும் மின்னட்டும்.

    பதிலளிநீக்கு
  3. சசி தரூரின் துணிச்சல் பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
  4. தங்களின் பதிவின் இறுதியில் உள்ள கேள்விகளுக்கு வருகிறேன். அவர்கள் வணிகம் செய்ய வந்த வெள்ளையர்கள். குற்ற உணர்வு இருக்கும் ஆனால்
    இவர்களோ பணம் போட்டு பணம் அறுவடை செய்ய வந்த கொள்ளையர்.
    குற்ற உணர்வாவது ! பெரியார் சொன்ன --- காயமாவது.

    பதிலளிநீக்கு
  5. சசிதரூரின் பேச்சுக்கள் சில சமயங்களில் மிக அருமையாக இருப்பதைப் படித்ததுண்டு. அவ்வாறான நிகழ்வுகளில் அவரது உறுதியும் திண்மையும் நன்கு புலப்படும். இதனை தெளிவாக தங்களது பதிவில் உணர்த்தியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. இந்தியாவில் சொந்த நாட்டையே சுரண்டிய /சுரண்டும் பலரும் குற்ற உணர்வில் வாடும் வகையில் உணர்வு பூர்வமான பேச்சை யாரேனும் தருவார்களா?//

    சசிதரூரின் பேச்சு பாராட்டிற்குரியதே! சரிதான்! இது அவரைத் தக்க வைத்துக் கொள்ள உதவும் தான்..

    நீங்கள் கேட்டுள்ள இறுதிக் கேள்வி அதைவிட மிக முக்கியம் என்பது எங்கள் கருத்து. வெள்ளையன் வந்து இங்க சுரண்டினான் சரி...ஆனால் அவன் போட்ட பாலங்கள்தான் இன்றும் நமக்கு உதவுகின்றது...நம்ம தலைவர்கள், தன் குடிமக்களை தன் மக்களாக நினைத்து நம்மை வழி நடத்த வேண்டிய தலைவர்கள்,தன் மக்களிடமே சுரண்டி தங்களை தங்களை மட்டும் வளர்த்துக் கொள்கின்றார்களே இதை அவரால் வெளியில் சென்று ஆணித்தரமாகச் சொல்ல முடியுமா? நாம் பொதுமக்கள் அண்டை நாட்டவரிடம் ஏமாந்தாலும் நமது சுதந்திரத்தை வாங்க முடிந்தது. ஆனால் இதோ நமம்வரிடமே நாம் ஏமாந்து கொண்டிருக்கின்றோமே இதை எங்கு போய் சொல்லுவது?!!!! நண்பரே!

    பதிலளிநீக்கு
  7. நம்ம தலைவர்கள் போடும் பாலங்கள் எத்தனை மக்களின் உழைப்பில் கட்டப்படுகின்றது அவர்கள் வாட.... கொள்ளையடிப்பது யார்? அந்தப் பாலங்கள் ஏன் ஒரு சில தினங்களிலேயே விரிசல் விழுகின்றன? இந்தியா எழை நாடே அல்ல....பார்க்கப் போனால் எல்லாவற்றிலும் பணக்கார நாடு...கொள்ளைதான் நம்மை வளரும் நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளது...அந்தக் கொள்ளை கல்வி உட்பட...

    பதிலளிநீக்கு
  8. நண்பரே,

    சசிதரூர் ஒரு சந்தர்ப்பவாதி. மர்மமான மனிதர். இந்த வேகம் விவேகம் எல்லாமே நாட்டுக்கு எப்படி பயன்படுகிறது என்பதே கேள்வி. அவர் கேட்டிருக்கும் கேள்விகள் படித்த இந்தியர்கள் சாதாரணமாக விவாதிப்பவைதான்.

    -----கிளைவ் லாய்டை கடுமையாக தாக்கிய தரூர். லூட் என்ற ஹிந்தி சொல்லை ஆங்கிலத்துக்கு தந்தவர் அவர்தான் என்றார் கிண்டலாக.---

    கிளைவ் லாயிட் ஒரு மேற்கிந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர். நீங்கள் சொல்ல வந்தது ராபர்ட் கிளைவ் என்று நினைக்கிறேன். இந்தியாவில் ஆங்கில ஆட்சியை பலமாக நிறுவியவர் என்று பொதுவாக கருத்தபடுபவர் இந்த கிளைவ். இறுதியில் கத்தியால் தன்னை குத்திக்கொண்டு இறந்ததாக ஒரு தகவல் உண்டு. கிளைவ் இல்லாவிட்டால் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இத்தனை ஆழமாக காலூன்றியிருக்க முடியாது என்ற கருத்தும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும் நீங்கள் சொல்வது சரிதான் இராபர்ட் கிளைவை தான் தவறுதலாக லாயிட் என்று குறிப்பிட்டு விட்டேன் . மாற்றம் செய்து விட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. இனி பெயர் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவேன்.
      மேற்கு இந்தியத் தீவின் வெற்றிகரமான கிரிக்கட் கேப்டனான லாய்ட் இங்கு எப்படி என் மனதில் புகுந்தார் என்று தெரியவில்லை
      ராபர்ட் கிளைவின் அதிரடியே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடிகோலியது எனலாம்

      நீக்கு
  9. சசி தரூர் அவர்களுக்கு பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
  10. இந்தக் காணொளி என் மகன் அனுப்பி நான் ஏற்கனவே பார்த்தது. சசி தரூர் ஒரு அன்ப்ரெடிக்டபிள் மனிதர், எப்போது என்ன எப்படிப்பேசுவார் என்பது அவருக்கே தெரியாது என்று தோன்றும்

    பதிலளிநீக்கு
  11. சர்ச்சை மனிதர் என்றாலும் சசிதரூர் இந்த வாதத்தில் வென்று பலரின் மனங்களை கவர்ந்துவிட்டதென்னவோ உண்மை!

    பதிலளிநீக்கு
  12. சர்ச்சை உரிய மனிதர் சசிதரூர்!

    பதிலளிநீக்கு
  13. சசி அவர்கள் கூறிய கருத்துகள் ஏற்றுக்கொள்ளக் கூடியவைதான்...

    பதிலளிநீக்கு
  14. நான் சொல்லவந்ததை தான் சுரேஷ் சார் சொல்லியிருக்கிறார்! தரூர் என்றவுடன், cattle கிளாஸ், சுதந்தா புஸ்கர் என்றெல்லாம் வரிசைகட்டி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை அண்ணா! அவர் வாய்மொழி என்றாலும் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மையை அவர் சொல்லும்போது அதை தட்டிக்கழிக்க முடியாதே!

    பதிலளிநீக்கு
  15. ஒன்று ஒத்துக் கொள்ள வேண்டும். தரூர் நன்றாக பேசுகிறார். இந்த காணொளி எங்கு கிடைக்கும் என திரிந்த எனக்கு உங்கள் பதிவு மூலம் கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  16. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895