என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 7 ஜூலை, 2015

நடிகர் சிவகுமாரைப் பதம் பார்த்த முகநூல்


"என்றுமே என்னை மனிதப் புனிதன் என்றோ - வழிகாட்டும் தலைவன்
என்றோ - வாரி வழங்கும் வள்ளல் என்றோ - பேரறிவாளன் என்றோ -
நடிப்புக் கலை - ஓவியக்கலையில் கரை கண்டவன் என்றோ - பெரிய சாதனையாளன் என்றோ நினைத்துக் கொண்டு நான் முகநூலில் பதிவிடவில்லை. 70 வயது தாண்டி , முடிந்தவரை நேர்மையாக, இந்த மண்ணில் வாழ்ந்து பெற்ற அனுபவங்களை, தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ளவே எழுதி வந்தேன்.
       இது சிலருக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் வன்மத்தை - சாதி வெறியை - வளர்த்துக்கொள்ள காரணமாக இருக்கிறது என்று அறிந்து வருந்துகிறேன் .தனிப்பட்ட முறையில் என்னைத் தாக்கவும், குடும்பத்தினரைக் குறை கூறவும் , நானே களம் அமைத்துக் கொடுத்ததாக உணர்கிறேன்.
என் உலகம் சிறியது, அதில்என் வாழ்க்கை மிகவும் எளிமையானது
இது உங்கள் உலகம் !
உங்கள் சுதந்திரம் !!
நீங்கள் நினைத்தபடி வாழுங்கள் !!!
எல்லோரும் இன்புற்றிருக்கவே இத்துடன் என் முகநூல் பதிவுகளை நிறைவு செய்கிறேன் ..." என்று உருக்கத்துடன் தனது முகநூல் கணக்கை முடித்துக் கொள்வதாக அறிவித்திருந்தார் நடிகர் சிவகுமார்.  பின்னர் பலரும் விடுத்த வேண்டுகோளை ஏற்று தனது முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் எழுதத்  தொடங்கி இருக்கிறார்.
அவரது முக நூல்முகவரி https://www.facebook.com/ActorSivakumar

    சிவகுமார் நல்ல நடிகர் நல்ல மனிதர், சிறந்த பண்பாளர், ஒழுக்கம் மிக்கவர் நல்ல ஓவியர் .அனுபவம் மிக்கவர். இலக்கியங்களில் ஆர்வமுள்ளவர். சிவகுமார் அவர்களோடு நெடுங்காலம் நெருங்கிப் பழகிய அமுதவன் அவர்கள் சிவகுமார் அவர்களைப் பற்றி தனது வலைப் பதிவில் எழுதிய  கட்டுரையைப் (நடிகர் சிவகுமாரின் மறுபக்கம்! – ஒரு எக்ஸ்ரே பார்வை!!படித்த போது சிவகுமார் அவர்களின் நற்பண்புகளை இன்னமும் விரிவாக அறிய முடிந்தது. 
சிவகுமார் நல்ல நடிகர் ஓவியர்,பேச்சளார் என்பதையெல்லாம் விட ஒரு திரை உலகின் மிக ஒழுக்கமான மனிதர் என்ற பெயர் அவரது புகழுக்கு கூடுதல் பலம் சேர்த்தது என்று சொல்லலாம் .

      அப்படிப் பட்டவரை மனம் நோக செய்துவிட்டனர் முகநூல் நண்பர்கள். முகநூல் கணக்கு இல்லாத பிரபலங்கள் இல்லை எனலாம். சிலர் பெயருக்கு கணக்கு வைத்திருப்பார்களே தவிர அதில் சில வாழ்த்து செய்திகள் அறிவிப்புகள் தவிர வேறு எதையும் பகிர்வது இல்லை. . ஒரு சிலர் ஆர்வக்கோளாறில் எதையாவது சொல்லி சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள். சாதாரணர்கள்  எது சொன்னாலும்  யாரும் அவ்வளவாக கண்டு கொள்ள மாட்டார்கள் , ஆனால் பிரபலங்கள் வாய் தவறி ஏதாவது சொல்லி விட்டால்போதும் உண்டு இல்லை ஆக்கிவிடுவார்கள்.அப்படி மாட்டிக் கொண்ட பாடகி சின்மயி விவகாரம் அனைவரும் அறிந்ததே. ஆனால் சிவகுமார் அப்படிப் பட்டவர் அல்ல தான் கற்ற கேட்ட படித்த அனுபவித்த  விஷயங்களை சுவையாக சொல்வதில் வல்லவர் என்பதை அவரது பதிவுகள் சொல்கின்றன. 
    கம்பராமாயண சொற்பொழிவு மூலம் இலக்கியத்திலும் தனக்கு இருந்த ஆற்றலை வெளிப்படுத்திய அவரது எழுத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. திரையுலகில் பன்முகத் திறன் கொண்டவர்கள் மிகக் குறைவே. அவர்களில் ஒருவராக சிவகுமார் விளங்குகிறார் 

   திரைஉலக பிரபலங்களுக்கு  சில  வசதிகள் உண்டு. அவர்கள் என்ன எழுதினாலும் லைக்குகள் குவிந்து விடும்.சிவகுமார் முகநூலில் ஒவ்வொரு பதிவுக்கும் 10000 அளவுக்கு லைக்குகள் கிடைத்திருப்பதை காண முடிந்தது

  அவரது  ஒவ்வொரு பதிவையும் ஏராளமானோர் விரும்பியுள்ளதோடு பகிர்வும் செய்து வந்துள்ளனர். கலைத்துறை அனுபவங்கள், சொந்த அனுபவங்கள்,வரலாறு இலக்கியம் என ஓராண்டுக்கும் மேலாக எழுதி வந்துள்ளார்.  கருத்துகளில் அவரை பலர் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்.  அவர் காந்தி பற்றிய எழுதியதில் மட்டும் ஏராளமான மாற்றுக் கருத்துகள் பதிவாகி இருந்தபோதும் யாரும் வரம்பு மீறவில்லை. நாகரிகமாகவே தங்கள்  கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

  இதற்குமுன்  சிவகுமாரின் முகநூல் பக்கத்திற்கு சென்றதில்லை சிவகுமார் முகநூலில் இருந்து விடுபட முடிவு செய்துள்ள செய்தியை அறிந்ததும்தான் அவரது முகநூல் பக்கத்திற்கு சென்றேன்.

சர்ச்சைக்குள்ளான அவரது பதிவில்  கருத்திட்ட சிலரின் முகநூல் அடையாளத்தை பாருங்கள்
arish Vanniyar Singam ,கொங்கு கவுண்டர் Nmurali Naicker, Ponnuvel Deeran Kongu
 முகநூலில் சாதிப்பற்றுடன் பலர் உலவி வருவதை இது காட்டியது. சாதி வெறியுடனும் இவ்வளவு பேர் இருக்கிறார்களா என்பதை அறிந்தபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. தனது இனமே உயரந்தது என்று சொல்ல முற்படுவதும் மாற்று இனத்தை தரக்குறைவாக விமர்சிக்கும் போக்கும் சகஜமாக  காணப்படுகிறது 

     சமீபத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள்  குறித்து எழுதி இருந்தார் சிவகுமார் 

      அதில் முன்னதாக வேலு நாச்சியார் பற்றி எழுதினார் .நல்ல எழுத்து நடையும் சுவாரசியமாக சொல்லும் திறனும் அவரது பலமாக அமைந்து  அப்பதிவு பலரையும் கவர்ந்தது 

          அதன் பிறகு தீரன் சின்னமலை பற்றி எழுதிய பதிவும் அதற்கு கிடைத்த சில கடுமையான எதிர்ப்புக் கருத்துகள் அவரை முகநூல் விட்டே விலகும் அளவுக்கு விரக்தியின் எல்லைக்கே கொண்டு சென்றது. தீரன் சின்னமலை பற்றி உணர்வு பொங்க கூறியதை அவர் தனது சாதிப் பெருமையைக் கூறுவதாக குற்றம் சாட்டினர் சிலர் 
   'தீரன் சின்னமலையின் பெருமையைக் கூறி நம் இனத்தை பெருமைப் படுத்திவிட்டீர்கள்' என்று அவரை ஒரு சின்ன வட்டத்துக்குள் அடைத்தார் ஒருவர்.'தீரன் சின்னமலை என்று ஒருவர் இருந்ததே இல்லை. அவரைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை' என்கிறார்  இன்னொருவர் 
'தீரன் சின்னமலை பற்றி  எழுதி சாதி பாசத்தைக் காட்டிய நீங்கள் சாமி நாக படையாச்சிஅஞ்சலையம்மாள் போன்றோர் பற்றி  எழுதி உங்கள் தமிழ் பாசத்தைக் காட்டுங்கள்'  என்று சிவகுமாரின் பாரபட்சமின்மைக்கு பரீட்சை வைத்தார் ஒருவர் .

"ஆட்சேபத்துக்குரிய வசனங்களும், வன்னியர்களை மறைமுகமாக தாக்கும் விதமான காட்சிகளையும் துணிச்சலுடன் நடித்த உங்கள் மகனின் திடத்தை நான் பாராட்டுகிறேன்... 
ஆனால் வரும் காலங்களில் இதே சகிப்புத் தன்மையை எங்கள் சமுதாயம் தொடர்ந்து கடைபிடிக்குமா என்பது சந்தேகமே..." என்றும் 
கார்த்தி நடித்த மெட்ராஸ் வான்னியருக்கு பதிலாக கொங்கு வேளாளர்களை இழிவ படுத்தி இருந்தால் நடித்து இருப்பாரா ? என்றும் கேள்வி மேல் கேள்வி கேட்டு வேதனைப் படுத்தியுள்ளனர்.
 இவற்றையெல்லாம் பார்க்கும்போது  சமூக வலைத்தளம் எதற்கு பயன்படவேண்டுமோ அதற்கு எதிராக பயன்படுவது கண்டு மனதில் அச்சம் எழத்தான் செய்தது. எத்தகையவராக  இருந்தாலும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.ஆனால் விமர்சனத்தில் காழ்ப்புணர்ச்சியும் வன்மும் இருப்பது கண்டிக்கப் படவேண்டியது.  அல்லவா? ஆரோக்கியமான விவாதங்கள் வரவேற்கப்படக் கூடியதே 

    தீரன் சின்னமலை பற்றி  எழுதிய பதிவில்  ஒருவரைக் குறிப்பிடப் பயன்படுத்திய கையாள் என்ற வார்த்தை தவறானது என்று சிலர் தெரிவிக்க,அதைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டதோடு தான் இன்னும் வரலாறை படிக்கவேண்டும் என்றும் பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டு தன்பண்பை நிருபித்தார். ஆனாலும் கல்லூரிகளில் பேச அழைத்தால் மறுப்பவர் தனது இனத்தை சேர்ந்தவர்களின் கல்லூரிகளில் மட்டும் சொற்பொழிவாற்ற வருகிறார். என்று  அவர்மீது பழிசொற்களை வீசிக் கொண்டுதான் இருந்தனர். 


    இது போன்ற கருத்துரைகளால் மனம் வருந்தியதன் விளைவே முகநூல் வெளியேற்றம் என்ற முடிவு. அக்கருத்துகளை ஒதுக்கித் தள்ளி இருக்கலாம்.அல்லது அப்படி முடிவு செய்தவர் சிறிது காலத்திற்கு அதனை பின்பற்றி இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.  தனது களத்தை மாற்றிக் கொண்டிருக்கலாம். இணையத்தில் எழுத வலைத்தள வசதி விரிந்து கிடக்க  ஏன் முகநூலில் மட்டுமே மூழ்கிக்கிடக்க வேண்டும். அவரது வலைத்தளம் www.actorsivakumar.com என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது செயல்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை  

  சிவகுமார் சார்! நீங்கள் லைக்குகளுக்கும் புகழ்பாடும் பின்னூட்டங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்காதவர் என்கிற படசத்தில்  முகநூலில் எழுதுவதை விட வலைப்பூவில் எழுதினால் சிறப்பாக   இருக்கும் என்று நம்புகிறேன்.  விரிவாகவும் எழுத முடியும் . வாசகர் எண்ணிக்கையும் முகநூலுக்கு குறைவில்லாமல் இருக்கும் என்பதில் ஐயமில்லை   விரும்பினால் கருத்திடும் வசதி வைத்துக் கொள்ளல்லாம்,அல்லது கருத்துகளை கட்டுப் படுத்தி வைக்கமுடியும்  பிரபல எழுத்தாளர்கள் யாரும் படிப்பவர் யாவருக்கும்  கருத்தளிக்கும் வசதியை அளிப்பதில்லை.

  சிவகுமார்  அவர்களுடைய நீண்ட கால நண்பரும் அவரை நன்கு அறிந்தவருமான திரு அமுதவன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
முடிந்தால்அவரை  தனி வலை தளத்தில் எழுதும்படி கேட்டுக் கொள்ளவேண்டும்.என்ன லைக்குகள் வசதி இல்லையே தவிர நிறையப் பேர் பார்ப்பார்கள் படிப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அவரது அற்புதமான பதிவுகள் எப்போதும் யாராலும் எளிதில் படிக்க வாய்ப்பு கிடைக்கும் .

************************************************************************
இதைப் படித்து விட்டீர்களா?

19 கருத்துகள்:

  1. ஒழுக்கமான மனிதர் என்பதை திரு அமுதவன் ஐயாவின் கட்டுரை மூலம் அறிந்து கொள்ளலாம்... சிறந்த பேச்சாளர் இந்த முகநூல் பதில்களுக்கெல்லாம் அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால் நல்லது... இவைகள் அவருக்கு ஒரு பாடமாகவும் இருக்கும்... வலைத்தளம் தொடர்ந்தால் நல்லது...

    பதிலளிநீக்கு
  2. நீங்க சொல்றது உண்மைதான். ப்ளாகர்ல எளிதாகப் அநாகரிகப் பின்னூட்டங்களை தடை செய்யலாம், வடிகட்டலாம். நமது ஃப்ளோ தடைப்படும் பின்னூட்டமே வேண்டாம்னு நம் கருத்தைத் தொடர்ந்து எந்தத் தடையும் இல்லாமல் சொல்லலாம். அந்த வசதி முக நூலில் இல்லைனுதான் நினைக்கிறேன். என்னைப் பொருத்தவரையில் முகநூல் பர்சனல், மற்றும் ஃபேமிலி வட்டத்திற்கு வைத்துக் கொண்டு ப்லாகரில் சமூகக் கருத்துக்களைப் பகிர்வது புத்திசாலித்தனம். ப்ளாகர் பரிச்சயம் இல்லாதவங்களுக்கு (சிவக்குமாரும் அந்த வகையாக இருக்கலாம்) ட்விட்டர் மற்றும் முகநூல்தான் வசதியாகத் தோனுது. இப்படிப்போயி சாதி வெறியர்களிடம் மாட்டிக்கிறாங்க.. , நம் வட்டங்களில் நல்லவர்களைவிட அயோக்கியர்கள்தான் அதிகம். இந்த சாதாரண உண்மை தெரியாதா என்ன சிவக்குமாருக்கு??

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்,
    நல்லதை பகிர்ந்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. தங்கள் கருத்தை அவரிடம் சொல்கிறேன் முரளிதரன்

    பதிலளிநீக்கு
  5. நல்ல ஆலோசனை ,ஆனால் வாசகர் வட்டம் அந்த அளவிற்கு வலைத் தளத்துக்கு இல்லையே!

    பதிலளிநீக்கு
  6. எல்லாருமே லைக்குகளை மட்டுமே விரும்பி முகநூலுக்குள் சிக்கிக் கொள்கிறார்கள் ஐயா... நானும் திரு. சிவக்குமார் அவர்களின் சர்ச்சையான கட்டுரை பார்த்தேன். அவர் எழுதியதில் தவறில்லை... ஆனால் வந்திருந்த கருத்துக்களில் சாதி தலைவிரித்து ஆடியது. வெளியேறியவர் உடனே மாற்றிக் கொண்டது வந்ததில் எனக்கும் மாற்றுக் கருத்து உண்டு. தாங்கள் சொல்லியது போல் சிறிது காலம் விலகி இருந்து வேறோரு தளத்தில் எழுதியிருக்கலாம். சரக்கு இருக்கும் மனிதருக்கு எங்கு போனாலும் வரவேற்ப்பு இருக்கும்தானே...

    பதிலளிநீக்கு
  7. வணக்ம்

    முரளி அண்ணா.

    நல்ல மனிதர்களை கலங்கப்படுத்த இப்படியான சக்திகள்உள்ளது... எங்கும் த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. ஊடகங்களின் வளர்ச்சி, விஞ்ஞான முன்னேற்றம் ஆகியவற்றின் பயன்பாட்டால் எல்லோராலும் எளிதாக எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது. உடனே அங்கு பதில் சொல்லும் வசதியும், தூரமாக இருக்கும் அடையாளம் தெரியாத் தன்மையும் எதை வேண்டுமானாலும் பதிலாக எழுதத் தூண்டுகிறது.. முன் காலத்தை விட சஹிப்புத் தன்மை குறைந்து வருகிறது.

    பதிலளிநீக்கு
  9. மனித நேயப் பண்பாளர் திருமிகு சிவகுமார் அவர்களை வலைப் பூவிற்கு அழைப்போம்நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  10. வேதனையாக உள்ளது. பண்பான ஒரு மனிதரைப் போற்றாமல் தான் விட்டாலும் களங்கப் படுத்தாமல் ஆவது இருக்கலாமே. நன்றி பதிவுக்கு!

    பதிலளிநீக்கு
  11. உண்மைதான் முரளி.இந்த வேண்டத்தகாத போக்கு அதிக்மாகவே இருக்கிறது.என்னைப் பொறுத்தவரை எனக்கு வலைப்பதிவே முகநூலை விட வசதியாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  12. சிவக்குமார் அவர்களை முக நூலில் தொடர்கின்றேன்! ஆனால் இந்த பதிவுகளை படிக்கவில்லை! நல்ல மனிதர். நீங்கள் சொல்வது போல வலைப்பூவில் எழுதலாம்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  13. நாங்களும் திரு சிவக்குமார் அவர்களின் கட்டுரைகளை வாசிப்பதுண்டு. அவர் எழுதியிருந்த அந்த சர்ச்சையைக் கிளப்பிய கட்டுரையில் எந்தத் தவறும் இருக்கவில்லை. முகநூலிலும் கூட சாதிகளா? என்பது வியப்பாகத்தான் இருக்கிறது...கருத்துகள் மிகவும் தரக் குறைவாக இருந்தன...மட்டுமல்ல சாதி....இப்படியுமா என்று தோன்றியது...

    னீங்கள் சொல்லியிருப்பது போதான். அவர் கருத்துக்களைப் புறம் தள்ளி மீண்டும் எழுதியிருக்கலாம். இல்லை என்றால் இன்னும் சில காலம் அமைதியாக இருந்துவிட்டு எழுதியிருக்கலாம்..
    னீங்கள் சொல்வது போல வலையில் எழுதலாம் அவர். நிச்சயமாக அவரது தளம் எல்லோராலும் வாசிக்கப்படும்....வருவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்...

    பதிலளிநீக்கு
  14. வரலாறு வரலாற்றறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் எழுத வேண்டும். பொழுது போக்க முகநூல் எழுதுபவர்கள், அரசியல்வாதிகள் (மக்களளிடம் சாதிநாயகர்களை நாட்டு வீர்ர்களாகக்காட்டி சிலையெடுத்து விழாக்கொண்டாடி ஓட்டுப்பொறுக்குபவர்கள்), எழுதக்கூடாது.

    தமிழக மக்கள் அனைவரினால்தான் த‌மக்கு வாழ்க்கையே கிடைத்தது என்ற நிலையில் இருக்கும் சினிமா நடிகர்கள் இந்த‌ வீர வரலாறுகளை எழுதவரக்கூடாது.

    அப்படியே வந்தாலும், ஒரேயடியாகக்குதித்துவிட வேண்டும். ஆதாரங்களை முன் வைத்து எழுதவேண்டும். வரலாற்றாராய்ச்சியாளன் தன் உணர்ச்சிகளைக்கொட்டி எழுதுவதில்லை. கொட்டினால் அவன் எழுத்துக்கள் ஐயத்துடன் நோக்கப்படும்.

    சிவக்குமார் செய்த தவறுகள்:

    எந்த ஆதாரத்தையும் எடுத்துகாட்டாமல் எழுதியிருப்பது
    உணர்ச்சிகளைக்கொட்டி தீரன்சின்னமலைக்கு விளம்பரத்தைத் தேடுவது போல எழுதியது.

    பின்னூட்டம் போடுபவர்கள் பின்னால்தான் வந்தார்கள். முகநூலில் எழுதியதுதான் முன்னால் வந்தது. தீரன் சின்னமலை, கட்டபொம்மு, ஒண்டிவீரன், இம்மானுவேல் சேகரன், முத்துராமலிங்கம் போன்ற பலரின் வரலாறுகள் இன்று ஜோடிக்கப்பட்டவை. அவற்றை எழுத இன்று முன்வருபவர்கள் சாதிக்காரகள் மட்டுமே.

    சிவக்குமார் என்று தன்னைப்பற்றிச்சொல்லத் தொடங்கினாரோ அன்றே அவர் தன்னைக் கொங்குவேளாளக்கவுண்டர் என்று அறிமுகப்படுத்திதான் எழுதினார். அவரைப்பற்றி நிறைய இங்கு சொல்லப்பட்டாலும், தன் ஜாதியைச்சொன்ன நடிகன் என்ற பட்டம் அவருக்குத்தான்.

    பொது வாழ்வில் உள்ள சிவக்குமார், பொதுவாழ்வின் தன் குடும்ப உறுப்பினர்களை அனுப்பிய சிவக்குமார், தான் பொதுவாக தமிழருக்கான ஒரு தமிழன் என்ற உணர்விருந்தால் இப்படிப்பட்ட ஜாதிநாயகர்களாக எடுக்கப்படும் ஆட்களைப்பற்றி எழுதவேண்டாமென்பதே சரியான பாதையாகும்.

    பதிலளிநீக்கு
  15. சிவக்குமாருக்கு நீங்கள், வலைப்பூவில் எழுத அழைப்பு விடுத்தமை சரியான யோசனை.

    பதிலளிநீக்கு
  16. அவர் தொடர்ந்து எழுதுவதாக சொல்லியுள்ளார்.

    பதிலளிநீக்கு
  17. உண்மைதான்! முகநூலைவிட வலை சிறந்தது ஆனால் எங்கும் விதண்டாவாதம் நிறைந்தே இருக்கு!

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895